chella நாய்க்குட்டி
05 February, 2024
அமுதென்பதா? விஷமென்பதா?
அமுத விஷமென்பதா?
எதை? நம் அஞ்சரைப் பெட்டியை.
கொஞ்சம் நான் எண்ணுவதை சொல்கிறேன் கேளுங்கள். பின் சரியா தவறா என்பதை "நீங்கள் " சொல்லுங்கள் நான் கேட்டுக் கொள்கிறேன்.
என் தோழி ஒருவர் தினம் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் நாலு மிளகை வாயில் போட்டு மெல்லுவேன் என்று சொல்வார்கள். அது எதற்கு நல்லது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை பார்க்கிறேன்.
பல வெளி நாட்டினருக்கு இல்லாத, வெளி மாநிலத்தினருக்கு இல்லாத ஒரு அனுகூலம் நம் அஞ்சரைப் பெட்டி. கொரோனா வரும் வரை கிராம்பிலும் பட்டையிலும் உள்ள மருத்துவக் குணங்கள் வெளியே பலரும் அறியாத விஷயமாகத் தான் இருந்தது. பல புரதச் சத்துக்களும் தேவையான விட்டமின்களும் நிறைந்தது நம் உணவு. ஆனால் எது எவற்றுடன் எவ்வளவு சேர வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். அது மாறும் போது தான் அமுதம் விஷமாகிப் போகும்.
புளியைக் கெட்டியாக கரைத்து அதை நிகர் செய்ய உப்பை அள்ளிப் போட்டு, உரைப்பு தூக்கலாக தெரிய வற்றலையும் அதிகம் சேர்த்து இவை அத்தனையையும் சரி செய்ய எண்ணையையும் கோரி ஊற்றி நாம் ஒரு சமையல் செய்தால் அது அமுதமா? விஷமா?
நாக்குக்கு ருசிஆகவே இருந்தாலும் நாம ஒரு பிடி விஷத்தை கூடுதலாக உண்போமா? . வெறும் பச்சை மிளகாயையும் உப்பையும் அரைத்து தொட்டுக் கொண்டு ருசிக்காக உண்டவர்கள் காலப் போக்கில் கும்பியும் குடலும் புண்ணாகி உப்பு சப்பற்ற உணவை உண்டது எனக்குத் தெரியும். பொரியல் கூட்டு வகையறா எங்களுக்கு பிடிக்காது ஃப்ரை ஐட்டம் தான் செய்வோம் என்பவர்கள் நாளானால் எண்ணெயே இல்லாமல் சமைக்க நேருகிறது.
நாம் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும் . ஒரு குடும்பத்தின் அத்தனை பேரின் உடல் நலம் அந்த வீட்டின் சமையலறை யார் பொறுப்பில் இருக்கிறதோ அவர்கள் கையில் இருக்கிறது. பல வீடுகளில் வீட்டுப்பெண்களின் கையில் , சில வீடுகளில் வீட்டு ஆண்களின் கையில். இன்னும் சில வீடுகளில் சமையல்கார பெண்மணிகளின் கையில். அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டவர்களுக்கு அந்த வீட்டில் உள்ள அத்தனை பேர் உடல் நலமும் கவனத்தில் இருக்க வேண்டும்.
சமையல் வேலை செய்பவர்களுக்கு இருக்குமா? அதனால் தான் நான் வலியுறுத்தி சொல்வது சமையல் பொறுப்பை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் என்று. இதைச் சொல்ல எனக்கு முழுத் தகுதியும் இருக்கிறது. என் அம்மா வீட்டில் சேர்ந்திருந்த காலம் தவிர 44 ஆண்டுகளை நெருங்கும் என் திருமண வாழ்வில் நான் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டதே இல்லை.
இதனால் நான் சொல்ல வருவது, இத்தகைய அபூர்வ அமிர்த சுரபியாக இருக்கும் நம் அஞ்சரைப் பெட்டியை, சரியாகப் பயன்படுத்தி நம் உடல் நலம் காப்போம். இன்று அத்தியாவசிய தேவை உயிர் வாழ்பவர் அத்தனை பேருக்கும் பணமாக இருந்தாலும் அதை தொட்டு அடுத்து close range ல் வருவது ஆரோக்கியமும் தான்.
பின் குறிப்பு: என் வீட்டில் உள்ளவர்கள் நீ ரொம்ப health conscience ஆ ஆகிட்ட. எப்போ பார்த்தாலும் உடல் நலம் பற்றியே பேசிக்கிட்டு இருக்கிற என்கிறார்கள். நான் மட்டுமா நண்பர்களே!!
04 January, 2024
அண்ணன் சப்தரிஷி எழுதிய பதிவு இதை எழுதத் தூண்டியது. பல வருடங்களுக்கு முன் , எனது 30+ வயதில் நடந்த நிகழ்வு.
நாங்கள் அப்போ ஈரோடில் குடியிருந்தோம். இரவில் நானும் என் கணவரும் கடைக்குப் போய் விட்டு நடந்து வரும் போது ஒரு இருபது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் என்னை ஒட்டிய படி நடந்து வந்தாள். மெலிந்த உருவம். சோர்ந்த முகம். வழக்கமான முன்னெச்செரிக்கை உணர்வோடு என் கைப்பையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன்.
எங்க வீட்டுக்குப் பக்கம் வரும் போது தான் கவனித்தேன் எங்களுக்கு இணையாக தெருவின் அடுத்த பக்கத்தில் ஒரு இளைஞன் வருவதை. அந்த பெண்ணை நிறுத்தி "நீ யார்? எங்கு போகிறாய்?" என்று நான் கேட்பதை பார்த்தும் இளைஞன் வேகமாக நகர்ந்து விட்டான். அந்த பெண் ஒரு ஊரைக் குறிப்பிட்டு அங்கிருந்து ஒரு வீட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு அம்மா கூட்டி வந்தாங்க. ஈரோடு பஸ் ஸ்டான்டில் இந்தா வந்திடுறேன்னு சொல்லி "உன் பையை நான் பத்திரமா வச்சிருப்பேன்" னு சொல்லி வாங்கிட்டு போனாங்க. திரும்பி வரவே இல்லை.
காலையில இருந்து இந்த பையன் என்னை சுத்தி சுத்தி வர்ரான். தப்பான காரியத்துக்கு அழைக்கிறான். நான் மறுத்தாலும் என்னை விட்டு போகல. இப்போ நீங்க பேசினதைப் பார்த்து தான் போறான்" என்றாள். பணம் கொடுத்தால் ஊருக்கு போய் விடுவதாக சொன்னாள். நான் அப்போ இருந்தது. இரண்ட்டுக்கு மாடி வீடு.படத்தில் இருக்கும் வீடு தான். அப்போ சிறு நகரங்களில் அபார்ட்மென்ட் வராத காலத்திலேயே ஈரோடில் இது இருந்தது.
மொத்தம் 36 வீடுகள். நிறைய பேர் வந்து ஆள் ஆளாளுக்கு விசாரித்து மணி ஒன்பதாகி விட்டது. ஆளுக்கொரு யோசனை. 1) கொண்டு போலீஸ் ஸ்டேஷன்ல விட்டிடுங்க. 2) பணத்தைக் கொடுத்து ஊருக்குப் போக சொல்லுங்க. 3) இந்த காலத்தில யாரை நம்ப முடியுது. தேவையில்லாம பொறுப்பு எடுக்காதீங்க.
ஆனால் எனக்கு அழைத்து வந்து ஒரு மணி நேரம் விசாரிச்சிட்டு அப்படியே விட மனசில்லை. வீட்டுக்கு கூட்டிட்டு போவோம். நாளைக் காலையில யோசிச்சுக்குவோம் னு நினைச்சேன். என் கணவரும் சரி என்றார். ஆனால் மற்றவர்கள் பயமுறுத்தினார்கள். தேவையில்லாம பிரச்னையில மாட்டப் போறீங்க. ஏன் இந்த வேண்டாத வேலைன்னாங்க. ஆனால் நான் "எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்குது. அப்படி விட முடியாது" ன்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டோம்.
சாப்பிட சொன்னேன் . சாப்பிட்டாள் அந்நிய வீட்டில் இருக்கிற உணர்வே இல்லாமல் ஒரு ஓரமாக படுத்து உறங்கி விட்டாள். நானும் கணவரும் நிம்மதியாக உறங்க முடியாமல் மாறி மாறி விடியும் வரை விழித்திருந்தோம். மறு்நாள் அமைதியாக விடிந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் சென்று சொன்னதும் ஒரு கான்ஸ்டபிளுடன் அந்த பெண்ணை அனுப்பி பஸ் ஏத்தி விடச் சொன்னார். ஒரு பெண் குழந்தையை ஒரு இரவு பாதுகாத்த நிம்மதியோடு அன்றாடப் பணியை தொடங்கினேன்.
27 December, 2023
Amazon ல "கிடா" னு ஒரு படம் பார்த்தேன். இதன் இயக்குநர் ரா. வெங்கட். பூ ராம் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். காளி வெங்கட்டும், பேரனாக வரும் சிறுவனும் பாட்டியாக வருபவரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.
அதுவும் முக்கியமாக பேரன் விரும்பும் உடையை தன் பணத்தில் வாங்கி கடையை விட்டு வெளியே வரும் போது பாட்டி நடக்கும் கம்பீர நடை!! சான்சே இல்லை. கறி வெட்டுபவராக வந்து படம் முழுவதும் கலக்கி இருக்கிறார் காளி வெங்கட்.
முந்நூறு ரூபாய் குறைவாக இருந்தாலும் இருக்கும் பணத்துக்கே உடையை கொடுக்கும் கடைக்காரர், பாட்டி கேட்டு வரும் பணத்தை மறு கேள்வி கேட்காமல் எடுத்துக் கொடுக்கும் மனிதர், அதோடு தன் கை பணத்தையும் சேர்த்துக் கொடுக்கும் அவர் அம்மா, என்று பலரும் நல்லவர்களாக இருந்து நம் மனதை மயிலிறகால் வருடுகிறார்கள்.
நான் முந்தி "எறும்பு" னு ஒரு படம் பார்த்தேன். OTT ல் படம் பார்க்க விரும்பும் என் பெண் தோழிகளுக்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்திருக்கிறேன். அதில் எல்லோரும் அவரவர் விருப்ப படத்தை குறிப்பிடுவார்கள். அதில் ஒரு தோழி "எறும்பு" படத்தை பார்த்திட்டு "நீ சொல்லலைன்னா இந்த படம் பார்த்திருக்க மாட்டேன். பெயர் ஈர்க்கவில்லை" என்றாள். அது போல ஏழ்மையின் வலி சொல்லும் இந்த படமும் பெயர் பெரிதாய் ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால் மிகச் சிறப்பான படம்.
பெத்த பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாததே வலின்னா, பேரப் பிள்ளைகள், அதுவும் பெற்றோர் இல்லாத பேரப் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாதது பெரும் வலி. அதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள்.
படம் முழுக்க பெண்கள் எவ்வளவு அறிவுபூர்வமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வலிந்து சொல்லப் பட்டு இருக்கிறது. முக்கியமாக கிராமங்களில் ஏழ்மையில் வாழும் பெண்கள் குடும்பத்துக்கு எப்படி ஒரு தூணாய் விளங்குகிறார்கள் என்பதையும், அதை அவர்கள் கணவர்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
மனதை மிருதுவாக்கும் மிக நல்ல படம்.
23 December, 2023
அன்று Water water everywhere. Not a drop to drink. என்று எழுதியவர் இதே போல் ஒரு வெள்ளத்தை சந்தித்திருப்பாரோ?
சுற்றிலும் நீர் மலையாய் உயர்ந்து நிற்க , நீர் அருந்தி மூணு நாட்கள் ஆனதாக ஒருவர் சொல்கிறார். என்ன கொடுமை.
48 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்மசுக்கு புதுத் துணியெல்லாம் எடுத்த நிலையில் எங்க அப்பா தவறிப் போன நிகழ்வு இப்போ ஞாபகத்துக்கு வருது. அதே டிசம்பர் 18. வெள்ளப் பெருக்கு. எத்தனை குடும்பங்களில் மரணம் நிகழ்ந்து துயரத்துக்கு உள்ளாக்கி இருக்கிறதோ. எத்தனை ஏழைப்பட்ட குடும்பங்களில், குழந்தைகள் பண்டிகை கொண்டாட குதூகலமாய் வாங்கி வைத்த பொருட்கள் தண்ணீரோடு போனதோ.
சின்ன சின்ன வீடுகளில் கூட, குருவி போல் சேர்த்து , வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வைத்திருக்க , அத்தனையும் தண்ணீருக்குள் நீச்சல் பயின்று கொண்டிருந்த கொடுமை.
மதம் தாண்டி மனிதம் விஸ்வரூபமெடுத்து உதவிக் கொண்டு இருக்கிறது. பலருக்கு ஆரம்பத்தில் இருந்து வாழ்க்கையை தொடங்க வேண்டிய அவலம். இந்த நேரத்தில் அரசியல் கலக்க கூடாது.
நாம் கவனமாய் இருக்க வேண்டிய
கால கட்டம் மிக அருகில் வந்து விட்டது. ஒரு வரலாற்றுப் பேரழிவு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த செய்தியை செய்தித் தாளில் நினைவூட்டியது. அதனால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் எனத் தைர்யமாக இருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். . அந்த, கால இடைவெளி சுருங்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
பல காலமாக குளோபல் வார்மிங் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அதை பெரிதாகவே எடுக்கவில்லை. இத்தகைய இயற்கை அழிவுகளில் க்ளோபல் வார்மிங்கின் பங்கும் ஓரளவு உண்டு என்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதும், குறை சொல்வதும் கதைக்கு உதவாது. நம்மைச் சுற்றி உள்ள இடத்தை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு பாதகமான காரியங்கள் நடக்கும் போது, யாரோ கேட்பார்கள் என்று இருக்காமல் தடுக்க வேண்டும்.
இன்றைய தலைமுறை அன்றாட பாடுகளை மட்டும் பார்த்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கிறார்கள். அது தவறு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் யோசிக்க வேண்டும் என்று தெளிவுக்கு வந்திருப்பார்களா?
மனம் மழை தவிர வேற எதையும் யோசிக்காததாய் இருக்கிறது. ஆனால் நாம் எந்த துயரத்திலும் தேங்கி நிற்பவர்கள் இல்லை. மீண்டு விடுவோம். இப்போதும்
21 December, 2023
ஊறும் காய். ஊறிய காய் ஊறுகாய்
ஊறுகாய்
எனக்கு திடீரென்று அந்த நாளில் ஊறுகாய் போட்டது ஞாபகம் வந்தது. நல்ல பெரிய பெரிய எலுமிச்சம் பழமாய் மார்க்கெட்டில் பொறுக்கி எடுத்து வந்து அதை மேல் பக்கமிருந்து நாலாய் கீறி கீழே பிளந்து விடாமல் பக்குவமாய் பிடித்து கல் உப்பை அது கொள்ளுமளவு அடைத்து பெரிய பீங்கான் ஜாடியில் அதை அடுக்கி வைப்போம். இரண்டு நாள் வைத்தால் கல் உப்பு இளகி நீராய் இறங்கி இருக்கும்.
அதன் பின் தினம் இரு முறை அந்த பீங்கான் ஜாடியை குலுக்கி விடணும்.
எலுமிச்சம் பழம் நன்கு ஊறிய பிறகு எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து வற்றல் தூள் பெருங்காயத் தூள் வறுத்த வெந்தயத் தூள் எல்லாம் போட்டு அதில் எலுமிச்சம் பழங்களை துண்டுகளாக நறுக்கிப் போட்டு கிளறி எடுத்து வைக்கணும். ஜாடிக்கு மேல் ஒரு துணியைப் போட்டு கட்டி மூடி வைப்போம். கை படாமல் எடுப்போம். நல்லா ஈரம் இல்லாமல் துடைத்த கரண்டி போட்டு எடுக்கணும். எவ்வளவு பக்குவம்?
ஆமா இப்ப எதுக்கு இந்த ஊறுகாய் கதைங்கிறீங்களா? காரணம் இருக்கு சார் இருக்கு. நான் என் கணவரிடம் கேட்டேன் "நாம அந்த காலத்தில தினம் ஊறுகாய் சாப்பிட்டிருக்கோம். ஒன்றும் பண்ணதில்லை. ஆனா இப்போ ஆ ஊ ன்னு உப்பைக் குறை பிபி ஏறும் எண்ணையைக் குறை கொலஸ்டிரால் கூடும்னு கண்டிஷன் போடுறாங்களே! அந்த காலத்தில ஊறுகாய்ல சேர்த்த உப்புக்கும் எண்ணைக்கும் ஏன் எதுவுமே செய்யல."
அவர் சொன்னார் ' அன்றைய உடல் உழைப்பு இன்று இல்லை" உண்மை தான் இன்றைய குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப நாம் படும் பாடு என்னவென்று நமக்குத் தான் தெரியும். காம்பாக்ட்டா டீவிக்கு முன்னால செட்டில் ஆகிடுறாங்க. அசைக்க முடியல.
இளைஞர்களும் நண்பர்களுடன் ஊரெல்லாம் சுற்றி படுக்கத் தான் வீட்டுக்கு வந்தார்கள் முன்பு. இப்போ அவர்களும் டீவியின் முன்னமர்ந்து பார்ப்பது மட்டுமல்லாமல் ஸ்நாக்ஸ் இடைவிடாத கொரிப்பு.
பெரியவர்களுக்கும் நாளெல்லாம் இருந்த சமையல் வேலை ஒரு மணி நேரத்துக்குள் முடிந்து விடுகிறது. அதன் பின் அவர்களும் டீவியின் முன் தஞ்சம்.
இப்படி நம் வாழ்க்கை முறை மாறியதால் தான் நோய் அதிகமாகி விட்டதோ என்று யோசித்தால் இன்னொன்றும் தோன்றுகிறது. முன்பு பிபி பணக்காரர்களின் நோயாக கருதப்பட்டது. கையில் நாய் ஒன்றை பிடித்தபடி வாக்கிங் போவது பணக்கார தோரணை. ஆனால் இன்று நகரில் கேடிசி நகர் ரஹ்மத் நகர் என்று நகர் தோறும் ஒரு பார்க். அங்கே அத்தனை மனிதர்கள் ஒரு கடமையைச் செய்வது போல் நடக்கிறார்கள். அன்று முற்றிய பின் தான் நோய் வெளியே தெரியும். அதனால் இந்த பிபி சுகர் கச்சடா எல்லாம் இருக்குனு தெரியாமலே எத்தனை பேர் இறந்து போனார்களோ?
அதனால் இன்றுமே உப்பில் ஊறிய ஊறுகாய் போன்றதை தவிர்ப்பதே நல்லது. முடியவில்லை என்றால் அளவையாவது குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம் துரதிர்ஷ்டம் அன்றைய கால கட்டத்தில் கிடைத்த மாசு மருவில்லாத சத்துக்கள் இப்போ கிடைக்கிறதில்லை.
நன்கு கவனித்துப் பார்த்தால் நம் உடம்பு நம்மிடம் பேசும். ஏன் இதைக் கொடுத்து என்னைக் கஷ்டப்படுத்துறன்னு கேட்கும். அப்படிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்திட்டாலே போதும். நலமாய் வாழலாம். காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்.
Subscribe to:
Posts (Atom)