Bio Data !!

09 February, 2021

 #வாழ்க்கை பயணம்

ஒரு தோழி எழுதிய டிரெயின் அனுபவம் இந்த பதிவை எழுதத் தூண்டியது.


1984இல் நான் என் இரண்டாவது மகளைக் கருவில் தாங்கினேன். அப்பொழுது என் கணவர் கேரளாவிலுள்ள காசர்கோடில் பணி புரிந்தார். அந்த சமயம் எழுத்தாளர் ஜெயமோகன் அங்கே ஆப்பரேட்டராக பணி புரிந்தார் என நினைக்கிறேன். 

நான்  மூத்த மகளுடனும் வயிற்றில் சிசுவோடும் தனியாக இருக்க முடியாது என்பதால் எங்கள் வீட்டை நாகர்கோவிலிலிருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றினோம். அப்போ அம்மா என்னை ஏற்றுக் கொண்டிருந்தார்களே ஒழிய என் கணவரை ஏற்கவில்லை. அதனால் அம்மா வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீடு. என் கணவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவார். வரும் போது மட்டும் அந்த வீடு. மற்ற நேரங்களில் அம்மா வீட்டில் அவர்களோடு சேர்ந்து இருப்போம்.


 பாளையில் வீட்டிலிருந்து மார்க்கெட்டுக்கு நடந்து பஸ் பிடித்து ஜங்ஷன் போய் அங்கிருந்து சீசன் டிக்கெட்டில் டிரெயினில் தினம் நாகர்கோயில் போய் பணி புரிந்து வந்தேன். நாகர்கோயிலில் ஸ்டேஷனிலிருந்து ஆஃபீஸ் இருக்கிற இடம் அரை மணி நேரம் நடக்கணும். அப்போ அதற்கு டவுன் பஸ் இல்லை. நாள் ஒன்றுக்கு மூன்று மூன்று ஆறு மணி நேரப் பயணம் வயிற்றில் குழந்தையுடன். 


அக்டோபர் 31, 1984  அன்னை இந்திராவை சுட்டு கொன்றார்கள் என்ற தகவல் மதியம் கிடைத்தது. நாங்கள் பல துறைகளிலும் பணி புரிபவர்கள் ஒரு குரூப்பாகத் தான் வருவோம். அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொண்டார்கள். மாலை ஒரு வேளை டிரெயின் நிறுத்தப்படலாம் அதனால் மதிய டிரெயினிலேயே எல்லோரும் போய் விடுவோம் என. அப்பொழுது எனக்கு ஏழு மாதம். ஆட்டோவில் ஸ்டேஷன் நோக்கி விரைகிறேன். கலவரம் தொடங்கி விட்டது. வழி மறிக்கிறார்கள். ஆட்டோகாரர் " புள்ளைத்தாச்சியை கூட்டிட்டு போறேன். வழி விடுங்கப்பான்னு"கெஞ்சுறார். நான் கோழிக்குஞ்சைப் போல் நடுங்கி ஒடுங்கி இருக்கிறேன். ஒருவன் தலையை ஆட்டோவில் நுழைத்து பார்க்கிறான். " ஆமா புள்ளதாச்சி தாம்ப்பா" என போக சம்மதிக்கிறான். 


ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோ டிரைவரை கை எடுத்து கும்பிட்டபடி டிரெயினை நோக்கி ஓடுகிறேன். நவம்பர் 1 நெல்லை நாகர்கோவிலுக்கு  டிரெயின் விட்டு முதலாண்டு நிறைவு  நாள். அதனால் அதை டிரெயின் டே எனக் கொண்டாட தோவாளையில் நிறைய பூக்கள் ஆர்டர் செய்திருந்தோம். நாங்கள் இருந்த கம்ப்பார்ட்மென்ட்டில் ஏற்றி விட்டார்கள். வழக்கமாக கலகலப்பும் குதூகலமுமாக பயணிப்போம். அன்று அத்தனை பேர் முகங்களிலும் சோகம். ஒரு பெரிய ஆளுமையை இழந்த வருத்தம். நெல்லையில் போய் இறங்கும் போது அங்கே பஸ்ஸை நிறுத்தி விட்டார்கள். பஸ் ஸ்டான்ட் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஒரு கூடை நிறைய பூக்கள். வேறு வழியில்லாமல் பஸ் ஸ்டான்டிலேயே ஒரு இடத்தில் அந்த கூடையை வைத்தோம். ஆளுக்கு ஒரு பக்கமாக போக வேண்டும்.


 முத்து என்பவர் ஒரு பாங்க் ஊழியர். திருமணமாகாத இளைஞன். அவரிடம் என்னை ஒப்படைத்தார்கள். எங்கள் வீட்டில் கொண்டு விட்டு விடும்படி. ஜங்ஷனிலிருந்து பாளை கிட்டத்தட்ட 5கிமீ இருக்கும். நடந்தேன் வயிற்றில் பிள்ளையை சுமந்தபடி. (இப்போ எங்கே போனது அந்த மன உறுதியும் தைரியமும்??? அப்போ வயது 25. )  எங்கள் வீட்டில் கொண்டு என்னை ஒப்படைத்த பின் தான் நண்பர் முத்து நிம்மதியாக மூச்சு விட்டிருப்பார். இன்று அந்த நண்பர் எங்கிருக்கிறார். தெரியவில்லை. ஆனால் என் நினைவில் மனதில் அழியாமல் இருக்கிறார். 


இவள் தான் அன்று என் வயிற்றில் இருந்த மகள். இன்று இரு பிள்ளைகளின் தான். காலம் தான் ரெக்கை கட்டிக் கொண்டு எவ்வளவு வேகமாக பறக்கிறது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!