Bio Data !!

10 March, 2021

 ஜெயமோகனின் "கொதி" என்னும் சிறுகதையைப் படித்ததும் எனக்கு என் வாழ்வின் ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. 

அப்போ நான் நாகர்கோயிலில் பணி புரிந்து கொண்டிருந்தேன். பெரிய அலுவலகமாக இல்லாமல் இரண்டு மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்து செக்‌ஷன்களை பிரித்து பிரித்து வைத்திருந்தார்கள். நான் பில்லிங் செக்‌ஷனில் இருந்தேன். அப்போ வெளியூர்கள் வெளிநாடுகள் போன் பேச வேண்டுமென்றால் STD ISD போட்டுத் தான் பேச வேண்டும். எந்த இடம் எவ்வளவு நேரம் என்ன வகையான கால்கள் என்பதெல்லாம் எழுதப்பட்ட டிக்கெட்டுகள் கட்டு கட்டாக எங்கள் செக்‌ஷனுக்கு வரும். 

அதை இரண்டு விதமாக தகவல் சேகரிப்பார்கள். இரண்டு பேர் வெறும் தொகைகளை மட்டுமாய் அடித்து ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் மொத்தமாய் எவ்வளவு தொகை என்று கணக்கெடுப்பார்கள். வேறு இரண்டு பேர் முழு விவரணைகளோடு கணக்கெடுப்பார்கள். இரண்டையும் டேலி செய்து அடித்த தொகையை சரி பார்ப்பார்கள். மூன்றாவது இடம் பிராட்மா. பிரம்மா இல்லைங்க பிராட்மா . 

ஆரம்ப கால கம்ப்யூட்டர் ஒரு அறையை முழுவதும் அடைத்து இருந்ததாமே அது  போல் இந்த பிராட்மா மெஷின் ஒரு அறை முழுவதும் அடைத்து இருக்கும். ஒரு பெரிய யானையை அங்குசம் கொண்டு அடக்குவது போல் ஒருவர் அந்த மெஷினை ஆண்டு கொண்டிருப்பார். அவர் ஏற்கனவே பெரிய உருவம். பெயர் செல்வராஜ். அந்த அறையின் புழுக்கம் தாங்காமல் தன் ஷர்ட்டைக் கழட்டிப் போட்டு பேன்ட்டும் பனியனோடும் இருந்து பணி புரிவார். அவருக்கு மட்டும் அந்த சலுகை உண்டு. 

வீடு தான் அலுவலகம் என்பதால் சாப்பிடுவதற்கு தனி அறை கிடையாது. அவரவர் இடத்திலேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். நானும் என் தோழியான காசி மாரியம்மாளும் வீட்டின் முன் பகுதியில் போர்ட்டிகோவில் அமர்ந்து மதிய உணவு எடுத்துக் கொள்வோம். நாங்கள் சாப்பிடும் போது ஒரு நாய் வந்து எங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கும். அதற்கு உணவு அளித்திருப்பேனா என்று உறுதியாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் சின்ன வட்ட டிபன் பாக்சில் கொண்டு செல்லும் சாப்பாடு எங்களுக்கே பத்தியும் பத்தாமல் தான் இருக்கும். ஒரு வேளை போட்டும் இருக்கலாம். ஏனென்றால் போட்டதால் தான் பல நாட்கள் அந்த நாய் வந்திருக்கும். அந்த நாய் தினமும் நாங்கள்  சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே இருந்ததில் எனக்கு கொதி விழுந்து விட்டது. உணவைக் கண்டாலே வெறுப்பு. கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ் உணவில் கொஞ்சம் சாப்பிட்டதும் அதற்கு மேல் சாப்பிடவே முடியாது. மொத்த உணவையும் நாய்க்கு போட்டு விடுவேன். உடல் மெலியத் தொடங்கி விட்டது. அப்பொழுது கதையில் வந்தது போல் கொதி எடுத்த ஞாபகம் லேசாக இருக்கிறது. சரியாக ஞாபகம் இல்லை. 

இன்று நவீன மயமான  உலகில் அந்த கொதி விழுவதும் எடுப்பதும் கூட குறைந்து விட்டது. பார்க்க வைத்து சாப்பிடாதே. பகிர்ந்து சாப்பிடுன்னு சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பகிர்ந்துண்ணுதல் பழக்குதல் நலம். 

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்தது. பழ ஜூஸ் என்று பல பழங்களையும் வெட்டி போட்டு ஒரு பெரிய எவர்சில்வர் அண்டாவில் கலந்து ஐஸ் போட்டு  ஜூஸ் பழக்கடைகளில் வைத்திருப்பார்கள். அது எனக்கு ரொம்ப favourite. என் கணவர் திட்டினாலும் எனது சாய்ஸ் அதுவாகத் தான் இருக்கும். என் கணவர் அது விற்க முடியாமல் கொஞ்சம் சிதைந்து போன பழங்களால் பண்றது சாப்பிடாதே என்று சொல்வார்.நாமளா கேட்போம்!

அப்படி ஒரு வேலை முடிந்து நான் கடையில் நின்று குடித்துக் கொண்டிருந்த போது ஒரு வயதான பெண்மணி என்னைப் பார்த்து கொண்டே வந்தார். எனக்கு கொரோனா பல உழைக்கும் நடுத்தர மக்களை உழைப்பில்லாமல் ஆக்கி இரந்து பிழைக்க வைத்திருந்தது ஞாபகம் வந்தது. "குடிக்கிறீங்களாம்மா" ன்னு கேட்டேன். சரி என்பது சரியாகத் தெரிந்து விடாமல் தலையை அசைத்தார்கள். அவர்களுக்கும் ஒரு தம்ளர் வாங்கிக் கொடுத்து நகர்ந்தேன். சில நேரங்களில் சில நல்ல விஷயங்கள் திடீரென மனதில் உதிக்கும். இனி ஹோட்டல்களிலோ பழக் கடைகளிலோ வெளி இடங்களில் உணவு உண்ண நேர்ந்தால் அருகில் இருக்கும் ஒரு இல்லாதவருக்கும் உடனே உணவு வாங்கி அளித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். 

ஒரு சிறுகதை நம்முள் எத்தனை எண்ணங்களை கிளறி விடுகிறது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!