Bio Data !!

10 March, 2021

 MRI scan

(கொஞ்சம் நீளமான பதிவு தான். கடந்து போகாமல் வாசியுங்கள். )


பிள்ளைகளை,  பெற்றவர்களாகிய  நாம் அன்பைக் கொட்டித் தான் வளர்க்கிறோம். பிரதி அன்பை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்கள் அன்பைக் காட்டும் போது நாம் மகிழ்ந்து போகிறோம். அது தான் அவர்களுக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாய் அமையும். 


ஐந்து மாதங்களுக்கு முன் நான் திடீரென்று சுகமில்லாமல் ஆன போது அவசரத்துக்கு CT Scan எடுத்து மருந்து கொடுத்தார்கள். அதில் ஒன்று blood thinner க்காக உள்ளது. அதை ராஜஸ்தானில் இருக்கும் வரை தொடர்ந்து எடுக்க சொன்னார்கள். 

இப்போது ஒரு MRI scan எடுத்த பிறகு மருந்து தொடர்ந்து எடுக்க வேண்டுமா என்பதை பார்க்கலாம் என்று மருத்துவர்  ஆலோசித்ததால் ஒரு MRI அனுபவம்.


MRI எடுப்பதற்கு முன் எந்த உலோகமும் உடம்பில் இல்லாதவாறு எடுத்து விடச் சொல்கிறார்கள். புடவையில் குத்தும் சேஃப்டி பின் (பற்களை நேர் செய்வதற்காக போடப்படும் கிளிப் இருக்கிறதா என உறுதி செய்து கொள்கிறார்கள்) முதற் கொண்டு ஆபரணங்கள் அனைத்தையும் கழட்டி விடச் சொல்கிறார்கள். அதனால் உடன் ஒருவரை அழைத்துச் செல்லுதல் நலம். 


அப்படி இல்லாமல் தனியாகச் செல்ல நேர்ந்தாலும் ஒரு லாக்கர் கொடுக்கிறார்கள் அதில் வைத்துக் கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் அம்மாவை MRI scan எடுக்க அழைத்துச் சென்ற நினைவு வந்தது. மிகப் பெரிய அந்த மெஷினில் படுக்கச் சொன்னதும் பயந்து போய் என் கை விரல்களை இறுகப் பற்றிக் கொண்டதன் ஈரப் பளபளப்பை இப்போது உணர்ந்தேன். என்னை வெளியேறச் சொன்னதும் கையை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டார்கள். 


இப்போது நான் அவர்கள் சொன்னது போல் தயாராகி அந்த பெரிய மிஷினில் ஏறிப் படுத்தேன். 

இரு பஞ்சு உருண்டைகளை கொடுத்து காதுகளில் அடைத்துக் கொள்ளச் சொன்னார்கள். மெஷின் பெரிய சத்தத்துடன் இயங்கும் என நினைக்கிறேன். தலை அசைந்து விடாமல் அணைவாக வைக்கிறார்கள். கையில் பந்து போன்ற ஒன்றைக் கொடுத்து ஏதும் எமர்ஜென்சின்னா இதை அழுத்துங்கள் என்றார்கள். அப்போது ஒரு "தடக்" எமர்ஜென்சின்னா என்ன செய்யும் எனக் கேட்டேன். எது எமர்ஜென்சி என்று தெரியாமல் இருந்து விடக் கூடாதல்லவா. ஏதேனும் discomfort இருந்தா இந்த பந்தை அழுத்தினா நாங்க வந்து விடுவோம் என்றார்கள். அப்பொழுது தான் அந்த மெஷினோடு நம்மை தனியே விட்டு அவர்கள் விலகப் போகிறார்கள் என்பது புரிந்தது. ஒரு பதினைந்து நிமிடத்தில் முடிந்து விடும் என்று சொல்லி சென்றார்கள். மெஷின் ஆன் ஆனது. தடதடத்தது. நாம் காதுகளையும் அடைத்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டதால் அதன் அதிர்வின் ஆக்சுவல் டெசிபல் தெரியவில்லை. கண்களை மூடிக் கொண்டிருப்பதால் உறங்கி விடக் கூடாது என்கிறார்கள். 


நான் அந்த பதினைந்து நிமிடத்தை கடக்க இப்படி யோசித்தேன். மனதில் பயமும் எழுந்து விடக் கூடாது. உறங்கியும் விடக் கூடாது. கடவுளை நம்புபவர்களின் ஆயுதமான பிரார்த்தனையை கையில் எடுத்தேன். நாங்கள் கிறிஸ்தவர்கள்,  சொல்லும் ஜெபமாலையை சொல்லத் தொடங்கினேன். சொல்லத் தொடங்கும் முன் இந்த டெஸ்ட் எடுக்கும் போது நான் பயப்படக் கூடாது என்றும் இதன் ரிசல்ட்டில் எனக்கு தொந்தரவான எந்த செய்தியும் வரக் கூடாதென்றும் வேண்டிக் கொண்டேன். பதினைந்து நிமிடங்கள் பதினைந்து நொடிகளாக கடந்து போனது. இடையிடையே சின்ன சின்ன அதிர்வு. ஒரு சின்ன அசைவில் நம் உடல் முன்னேறுவது தெரிகிறது. டைப் அடிப்பதைப் போலவோ மரங் கொத்திப் பறவை ஏற்படுத்தும் சத்தம் போல டொக் டொக் என்றோ கேட்டுக் கொண்டே இருக்கிறது. வழக்கம் போலவே அறிவியல் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. 


அங்கே முடிந்த பிறகு கடலில் இறங்கி குளித்த பின் நல்ல தண்ணியில் குளிப்பது போல ஏற்கனவே எடுத்த மெஷினுக்கு தங்கை போல இருந்த இன்னொரு மெஷினில் மறுபடியும் டெஸ்ட் செய்தார்கள். வெளியே வந்ததும்  ரிபோர்ட் தயார் ஆனதும் நம் செல்லுக்கு மெசேஜ் வரும் என்றார்கள். தலை லேசாக வலிப்பது போல் இருந்தது. அது என் கற்பனையாக கூட இருக்கலாம். காரை நானே ஓட்டி வந்திருந்ததால் மறுபடியும் ஓட்டிச் செல்லலாமா என்ற என் ஐயத்தை தெளிவுபடுத்திக் கொண்டேன். செல்லலாம் என்று சொல்லி விட்டார்கள். ஒரு வியாதி தாக்கிய நேரத்தில்  இதே ஸ்கான் எடுக்கச் சென்றிருந்தால் இவ்வளவு நிதானமாக இருந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். என் டார்லிங் வேகன் R ஐ கிளப்பி ஜாலியாக ஓட்டத் தொடங்கினேன். மறுநாள்  ரிப்போர்ட் ரெடி ஆனதும் நம் போனுக்கு தகவல் வரும் என்று சொன்னார்கள். ஆனால் சில மணி நேரங்களிலேயே தகவல் வந்து விட்டது. 


நாங்கள் மறு நாள் போய் ரிபோர்ட் வாங்கி மருத்துவரையும் பார்த்தோம். பயப்படும்படி ஏதும் இல்லை என்றும் பிரச்னை சிறிய அளவில் இருப்பதால் மருந்து எடுத்துக் கொள்ளும் படியும் சொன்னார்கள். மூளை என்பது நம் உடலின் very delicate darling. அதை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


என் பிள்ளையை நான் ஆசீர்வதித்த சமயம் இது தான்.  தன் பிசி schedule யிலும் தலைக்கு மேல் அவள் பணிகள் மிதந்து கொண்டிருந்த போதும் இந்த டெஸ்ட்டை எடுத்து விட வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து சென்ற அந்த பொழுது,  என்னை நான் பெற்ற மகளை வாழ்த்தச் சொன்னது. 


என்ன தான் தைரியமாக இருந்தாலும் என் மிரட்சி கண்களிலே தெரிந்ததால் அதை படத்தோடு பதிய வேணும் என்று அந்த நேரத்திலும் செல்ஃபி எடுத்த கூத்தை எங்கே போய் சொல்ல 😀

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!