Bio Data !!

07 April, 2021

 புத்தகத்தின் பெயர் : யாமம்

ஆசிரியர். : எஸ். ராமகிருஷ்ணன்.
பதிப்பகம். : தேசாந்திரி
இரண்டாம் பதிப்பு. : பெப்ரவரி 2019
யாமம்

யாமம் கதை படிக்கும் போது எனக்கு சிறு வயதில் என் அம்மா பின்னி விட்ட ஆயிரம் கால் ஜடை ஞாபகம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் முடி எடுத்து சின்ன சின்ன பின்னலாய் போட்டு அத்தனை பின்னலையும் ஒன்றாய் சேர்த்து மடக்கி கட்டி விடுவார்கள். கட்டி விடுவது அம்மாவின் வேலை. மறு நாள் அதை ஒன்றொன்றாய் பிரிப்பது நம் வேலை. கவனமாய் பிரிக்கலைன்னா சிக்காகி விடும். 

சரி அது ஏன் யாமம் படிக்கும் போது ஆயிரங் கால் ஜடை ஞாபகம் வந்தது. ஆரம்பத்தில் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒரு புது காரெக்டர் அறிமுகமாகிறது. நாலைந்து அதிகாரங்களுக்குப் பின் அந்த காரெக்டர் மறுபடி வரும் போது நாம் சரியாக அங்கே போய் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் கதையை ரசிக்க முடியும். 

பத்ரகிரி என்னும் ஒரு கதாபாத்திரம். அன்பான கணவன். அப்பாவின் கொடுமையில் அம்மா நோயாளி ஆகி இறந்தும் போனதும் சித்தி பத்ரகிரியையும் அவன் தம்பி திருச்சிற்றம்பலத்தையும் எடுத்து வளர்க்கிறாள். தானே வளர்த்து திருமணம் செய்து கொடுத்த தம்பியின் மனைவியோடு சந்தர்ப்பவசத்தால் தவறிப் போக நேர்ந்து விடுகிறது. தம்பிக்கு வெளி நாட்டில் பணி. நம்பிக்கைத் துரோகமாக நமக்குத் தெரியும் ஒரு விஷயத்தை தம்பி மனைவி வெகு இயல்பாக எடுத்துக் கொள்கிறாள். நாம் பொதுவாக நினைப்பது வெளி நாட்டில் தவறுவது சகஜமென. ஆனால் திருச்சிற்றம்பலம் வெளி நாட்டிலிருந்து அப்பழுக்கில்லாமல் வருகிறான்.

காசிம் என்னும் ஒரு அத்தர் வியாபாரி. அந்த அத்தரின் பெயர் தான் யாமம். அடுத்தடுத்து மூன்று பெண்களைத் திருமணம் செய்த அவர் ஒரு தகாத நட்பால் குதிரைப் பந்தயம் பழகி தன் அத்தனை சொத்தும் இழந்து தன் மூன்று மனைவிகளையும் ஒரு பெண் குழந்தையையும் அனாதரவாய் விட்டு தலை மறைவாகிறார்.

நாவலில் நான் ரசித்த சிலவரிகள் கீழே
"இரவின் நீளமும் ஆழமும் எவ்வளவு பெரியது காசிம்.
மனதிலிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு ஆழத்தில் கிடக்கிறதோ அவ்வளவு ஆழமுடையதும் சொல்லப்பட்டு விட்ட வார்த்தைகள் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு நீளமிருக்குமோ அத்தனை நீளமானது"

"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாம ஒரு திரவம். அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. " என்றார்.

"இந்த அத்தரின் பெயர் யாமம். இரவைப் போல பரிசுத்தமானதும் ஆழங்காண முடியாததுமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் என்றும் பரிமளம் மாறாததும் தினமும் புதுப்புது வாசனையோடு தோன்றக்கூடியதுமாக இருப்பது இரவு மட்டும் தான்."

"மண்புழு கூட தன் இருப்பிடத்திலேயே இருக்கிறதில்லை. ஈரம் கண்ட இடத்துக்கு ஊர்ந்துகிட்டு தான் இருக்கு. மனுசன் மட்டும் தான் நட்டகல்லு மாதிரி இருப்பிடம் விட்டு அசையாம இருக்கப் பார்க்கிறான்"

"ஆம்பளையோ பொம்பளையோ இஷ்டமா இருந்தாத் தானே மனசு ஒட்டும். வலிய ஒட்டு ஒட்டுனா சேர்ந்திருமா? நம்ம குழந்தைகள் நம்ம நம்பி நம்ம வித்தா வந்து பிறந்திருக்குடா. என்ன கஷ்டம் வந்தாலும் குழந்தைகளை விட்டுக் கொடுக்க கூடாதுடா"

நான் ரசித்த பத்ரகிரி திருச்சிற்றம்பலம் வைத்தே கதை முடிவு பெறுகிறது. நான் மிகவும் ரசித்த ஒரு நாவல்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!