விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு முகம் எடுக்கிறார்.
இதில் அப்பாவி, மன வளர்ச்சி குன்றியவர் முகம்.
பெயர் போடும் போது வலைப்பதிவர் அஜயன் பாலாவுக்கு நன்றி போடுகிறார்கள் அவர் பங்கு இதில் என்ன என்று கேட்க வேண்டும்
முதல் சீனில் ஓடி வரும் விக்ரம் அடி பட்டு கீழே விழுவதும், அவரைத்தாண்டி, 'மன நலம் மிகுந்தவர்கள்' சட்டை செய்யாமல் செல்வதும்,
சிறிது நலமாகி எழுந்து செல்லும் விக்ரம் அடிபட்டு கீழே கிடக்கும்
மற்றவனுக்கு உதவி செய்வதும், வீணாகச் செல்லும் தண்ணீர் குழாயை அடைப்பதும் , ஒரு ஆள் கூட இல்லாத சிக்னலில் பச்சை விளக்கு எரியும் வரை
நின்று செல்வதும், மன நலம் குன்றியது விக்ரமா அவரைச் சுற்றியுள்ளவர்களா என யோசிக்க வைக்கிறது
அங்கேயே டாப் கியரில் தொடங்கும் டைரக்டர் விஜய் இறுதி வரை அந்த வேகம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் .
இரண்டு பாடல்கள் விக்ரம் தன் சொந்த குரலில் பாடி இருந்தாலும் "ப பா ப பா வருதே எனக்கு பாப்பா" பாடலில் நல்ல உணர்வு கொண்டு வந்திருக்கிறார்.
அடுத்து சின்ன பொண்ணு சாரா. பேபி அஞ்சு, பேபி ஷாலினி போன்ற சில செல்லக்
குழந்தைகள் திகட்ட திகட்ட அத்தனை பேரையும் பேச வைத்திருக்கும் அந்த
வரிசையில் சாராவும் வருவார். துல்லியமான உணர்வுகளை புரிந்து வெளிக்
கொணர்ந்திருக்கிறார். அவள் தந்தையிடம் காட்டும் பாசம் எந்தத் தந்தைக்கும் தனக்கு அப்படி ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையை துளிர்க்க
வைக்கும். கோர்ட்டில் நாசர் வாதாடிக் கொண்டிருக்க கூண்டுக்குள் இருந்து தந்தையும்,
தூரத்தில் இருந்து மகளுமாக சைகை மூலம் சமாதானம் ஆகிக் கொள்வது ரசிக்க
வைக்கிறது.
அனுஷ்கா எனக்கு மிகவும் பிடித்த நடிகை. பெரிய பொட்டும், நீள கூந்தலுமாக
அருந்ததி அளவு வேறு எந்த படத்திலும் மிரட்டவில்லை என்றாலும் கோர்ட்டில்
வாதாடும் போது மறைந்த சுஜாதாவின் 'விதி' யை நினைவூட்டுகிறார். படத்தின்
ஆரம்பத்தில் விக்ரமிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் போதும், அதே நேரம்
சந்தானத்தை கோபப்பார்வை பார்க்கும் போதும் அவர் முகத்தில் பல வித பாவனைகள்
நர்த்தனம் ஆடுகின்றன. கிடைத்த பாலை சிக்ஸர் அடிக்காம விடுவதில்லை. ஊரின்
மிகப் பெரிய ஒரு வக்கீலை கதாநாயகி என்ற காரணத்தாலேயே வென்று விடுவதாக
காட்டாமல் அந்தக் கூட்டத்தின் ஒரு 'வெள்ளை ஆடு' வெற்றிக்கு உதவுவதாக
காட்டுவதில் இயக்குனர் யதார்த்தத்துக்கு முயற்சி செய்வது தெரிகிறது.
இருந்தாலும் இடி க்கு பயந்து
அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் காதல்
தோன்றி கனவுப் பாட்டு போட்டு அதை சரி செய்து விடுவது தான் உறுத்தல்.
கேமரா உறுத்தல் இல்லாமல் கதையோடு ஒன்றிச் செல்கிறது.
'மேலே சொல்லு' னு சொல்றீங்களா,
இன்னும் படம் பார்க்கலைனா உடனே கண்டிப்பா 'தியேட்டரில் ' சென்று பாருங்கள்.
பார்த்தாச்சுன்னா இன்னும் ஒரு ஒருமுறை பாருங்கள், நாம் கவனிக்காத விஷயங்கள் கண்ணில் படும், நல்ல முயற்சிகளுக்கு நாம் செய்யும் பதில் மரியாதை இது தானே ?