Bio Data !!

20 April, 2021

 "டைட்டஸ் ஆன்ட்ரானிக்கஸ்"

வில்லியம் ஷேக்‌ஸ்பியர் எழுதிய நாவலின் தமிழ் வடிவம் ஜே. கே ராஜசேகரன்.

பதிப்பகம் : அவர் பதிப்பகம்

 

இது ஷேக்‌ஷ்பியர் எழுதியதுதானா இல்லை வேறு ஒருவர் எழுதியதை பட்டி டிங்கரிங் பார்த்து அவர் தன் பெயரில் போட்டுக் கொண்டதா என்ற வாக்குவாதம் பல வருடங்கள் நடந்து பின் அவர் எழுதியது தான் என்று ஒத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.

பாமர ரசிகனை ஈர்க்கக்கூடிய கொஞ்சம் பாலியல் சங்கதிகள் மெல்லிய நகைச்சுவை போன்றவை இதிலும் உண்டு.

எனக்கு பொதுவாகவே புத்தகங்களை பற்றி எழுதுவது ரொம்ப பிடிக்கும்.  இந்த புத்தகத்தை பற்றி எழுதுவதில் எனக்கு கூடுதல் சந்தோஷம். காரணம் தமிழில் மொழி பெயர்த்திருப்பது என் கொழுந்தன் என்பதால். என் கணவருக்கும் எனக்கும் இந்த புத்தகத்தை டெடிகேட் செய்திருப்பதால். 

ஷேக்ஸ்பியர் மேல் இவ்வளவு காதல் கொண்டு அவருடைய 37 நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி விட்டார். "அவர் " பதிப்பகம் என்ற ஒன்றும் தொடங்கி இருக்கிறார். 

ஷேக்ஸ்பியரின் முக்கியமான நாடகங்களை பலர் தமிழில் மொழி பெயர்த்திருந்தாலும் அத்தனை நாடகங்களையும் எத்தனை பேர் மொழி பெயர்த்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 

ஆரம்பத்தில் இவர் தன் ஆர்வத்தை சொன்ன போது எத்தனை பேர் ஆர்வமாக வாசித்து விடுவார்கள் என்று நினைத்தேன். 

ஆனால் ஒவ்வொரு புத்தகம் வெளியிடும் போது அவரது முக நூல் பக்கத்தில் அவரது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது. அவரது எண்ணம் போல் அத்தனை நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்க்கும் ஆசை நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

புத்தகத்தை பொறுத்த வரை வெளி நாட்டு பெயர்களுடைய கதா பாத்திரங்கள் நிறைய வருவதால் கதையோடு ஒன்ற ஆரம்பத்தில் சிரமமிருந்தது. ஆனால் நான் வாசிக்கும் இடத்தை மாற்றி அமைதியான ஒரு பூங்காவில் இள மாலை வெயில் புத்தகத்துக்கு கதகதப்பு ஊட்ட வாசிக்கும் போது அனுபவிக்க முடிந்தது. 

இன்று ஆசிரியர் ஒரு அறிமுகம். நாளை புத்தகம் பற்றி எழுதுகிறேன்

 படத்தின் பெயர் : மழையத்து

அமேசானில்

டைரக்டர் : சுவீரன்

ஹீரோ.  : நிகேஷ் ராம்

ஹீரோயின் :அபர்ணா கோபிநாத்

குழந்தை நட்சத்திரம்: நந்தனா வர்மா.

கொஞ்சம் பலவீனமான மனம் படைத்தவர்கள் பார்க்காமல் தவிர்த்து விடலாம். 

இந்த கொரோனா காலத்தில் சிலர் வலிக்கும் விஷயங்களைக் கூட தவிர்த்து விடுகிறார்கள். அவர்களும் விலகிச் செல்லலாம்.

ஒரு பதின் பருவத்து பெண் குழந்தையும் அதன் பெற்றோரும் கடந்து வரும் கடினமான பாதை தான் கதை.

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான உறவு மிக அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. 

எனக்கும் என் தந்தைக்கும் இடையே இருந்த அந்த குறுகிய கால நட்பு. கண்டிப்பும் கனிவும் கலந்தது. அதன்  நினைவுச் சுகந்தமானது. 

பதின் பருவத்தில் பிள்ளைகள் மனத்தால் குழந்தைகளாகவும் உடலால் வளர்ந்தும் இருப்பார்கள். அது வரை இருந்தது போல் அல்லாமல் அப்பா அண்ணன் தம்பி ஆண் நண்பர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கச் சொல்லித் தரும் தாய் மகளுக்கு எதிரியாகிப் போவது அந்த நேரம் தான். 

சுற்றி மலையும் மரங்களும் சூழ்ந்திருக்க கூடுதலாய் சின்ன சின்ன தொட்டிச் செடிகளுமிருக்க அந்த வீடே ஒரு கவிதை. 

பள்ளியின் தலைமை ஆசிரியையாக வருபவர் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமான சாந்தி கிருஷ்ணா. 

படம் பார்த்து முடித்ததும் என் மனம் உச்சரித்தது " பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் பத்தாது பத்திரமா பார்த்துங்கங்க"

 நாவல் : குற்ற பரம்பரை

ஆசிரியர்: வேல ராமமூர்த்தி

பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்

விலை : ₹ 400

 இந்த கதைக்கு முன்னுரை எழுதிய செம்மலர் ஆசிரியர் எஸ். ஏ. பெருமாள் இதை "பூர்விக ரத்த தடயங்கள்" என்கிறார். கொம்பூதி என்னும் கிராமத்துக் கள்ளர் இனத்தவரின்  வாழ்க்கை தான் இந்நாவலின் கரு. 

தென் மாவட்டங்களில் இன்று முரண்பட்டுக் கிடக்கும் இரு இன மக்களும் கடந்த காலத்தில் எவ்வளவு ஒற்றுமையாய் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாவல் தெளிவாக்குகிறது. பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு எனவும் இந்த இரு சாதிப் பிரிவினர் மோதினால் சாதிக் கலவரம் எனவும் அக்னி வளர்த்தார்கள் என்கிறார் ஆசிரியர்.

திருடுவதற்கு ஒரு வீட்டைத் தேர்த்தெடுத்து ஒருவரை அனுப்புகிறார்கள். அவர்கள் சொல்லும் 'லெக்கை' வைத்து பணம் இருக்கும் அறையில் கன்னமிடுகிறார்கள்.பின் ஆட்காட்டிக் குருவியை ஒரு நூலைக் கட்டி பொந்துக்குள் விடுகிறார்கள்.  உள்ளே சென்ற குருவி சத்தமிடவில்லை என்றால் கன்னம் போட்ட அறையில்  ஆள் இல்லை என்று அர்த்தம். சத்தம் வெளியே கேட்காமல் குத்துக் கம்பியால் சுவரில் இடித்து ஒவ்வொரு கல்லாய் உருவுகிறார்கள். ஒரு ஆள் நுழையுமளவு பொந்து போட்டதும் ஒருவன் பொந்துக்கு நேராக நெடுஞ்சாண்கிடையாக படுத்து மெல்ல ஊர்ந்து ஊர்ந்து உள்ளே போய் கொண்டு வர வேண்டிய பொருளை பொந்து வழியாக மெல்ல நகர்த்த வெளியே இருப்பவன் அணைவாய் பற்றி வெளியேற்றுகிறான். எவ்வளவு தொழில் சுத்தம்!!!

கூழானிக் கிழவி மூலம் காளத்தி கதையைச் சொல்லுகிறார் ஆசிரியர். காளத்தி கதையை கன்னிப் பொண்ணுக கேட்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லியே அன்னமயிலுக்கு கதை சொல்கிறாள் கிழவி. ஆறு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த காளத்தியை கொண்டாடுகிறார்கள் தந்தையும் அண்ணன்களும். அது பொறுக்காத மதினிமார் செய்யும் சூழ்ச்சி தான் கதை.நம்மை பதற வைக்கும் கதை. காளத்தியின் மகன் தான் வையத்துரை. வையத்துரை பிறந்த நாளும் அவன் பெற்றோர் இறந்த நாளும் ஒன்றே! 

"ஆம்பளைக எல்லாம் தொழிலுக்கு போயிருக்காகளாம். களவுக்குப் போறது தான் அவுகளுக்கு தொழிலு. களவு பண்றது தப்புன்னு கூட தெரியல" இந்த ஒரு வரியிலேயே அந்த காலத்தில் அவர்கள் தவறென்றே அறியாமல் செய்த காரியத்தை விளக்கி விடுகிறார்.

"எறும்பு புத்திலே துருவனைக் கட்டிப் போட்ட மாதிரி கொடுமை எல்லாம் இன்னிக்கு நேத்தா நடக்குது. தொன்று தொட்டு நடக்குது. அதை எதிர்க்கிறதா? ஏத்துக்கிறதான்னு விளங்கலே. ஏத்துக்கிட்டால் அவமானம். எதிர்த்தால் பட்டினி." இந்த வரிகள் சட்டத்தை அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டதால் வரும் ரெண்டுங்கெட்டான் சிக்கலை சொல்கிறது.

"நம்பியவர்களுக்கு உயிரைக் கொடுக்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளைக் கொலை செய்கிறார்கள். வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இவர்கள்"  கொம்பூதிக்காரர்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார் ஆசிரியர். ஒரு காட்சியை விவரிக்கிறார் ஆசிரியர்.  "வடக்கே இருந்து வில்லாயுதம் தலைமையில் திருடிய நகைப் பெட்டியும் கிழக்கே இருந்து பெரு நாழிக்காரர்கள் போலீஸ் உடன் வர முதல் கரை தங்கச்சாமி  தலைமையில் தாம்பூலத்தட்டோடும் கோயிலை நெருங்கி வந்து கொண்டு இருந்தனர்"  எப்படி செம த்ரில்லிங்ல?

கொம்பூதிக்காரர் ஒருவரையே போலீஸ் அதிகாரியாக்கி அவரை வைத்தே அந்த கிராமத்தை திருட்டுத் தொழிலில் இருந்து மீட்பதும் இருந்தாலும் சில புல்லுறுவிகள் செய்த செயலால் கதை துன்ப முடிவே கொண்டிருக்கிறது. 

தீர்ப்பிடாமல் பிற மனங்களை புரிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம். கண்டிப்பாக வாசியுங்கள்.

 என் முக நூல் நண்பர் ஒருவரின் பதிவு பார்த்தேன். 

பழைய ஞாபகம். 

சின்ன பிள்ளையா இருக்கிறப்போ எங்க வீட்டில வீட்டு உபயோகத்துக்கு மொத்தமா புளி வாங்கி  உடைப்போம். தோடோட புளி வாங்கி வருவாங்க. சின்ன கண்ணனுக்கு இடுப்பில் கயிறு கட்ட சுற்றி ஓட இடம் விட்டு கல்லுரலில் கட்டுவது போல அந்த ஓட்டுக்குள் அந்த புளியம்பழம் அங்கும் இங்கும் போய் வர இடம் தாராளமாய் இருக்கும். 

அதை உடைத்து ஓடை நீக்கி அதனுள் இருக்கும் கொட்டையை பிரித்து எடுத்து புளியை ஒரு பாத்திரத்தில் போடணும். அப்பா அம்மா பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து அந்த வேலையை செய்வோம். 

அந்த காலத்தில் விடுமுறையை உபயோகமா கழிக்க என்னல்லாம் யோசிச்சிருக்காங்க.

பெரியவர்களுக்கு தெரியாமல் கொஞ்சம் புளியை வாய்க்குள் அதக்குவோம். அவர்களும் அதைப் பார்க்காதது போலவே விட்டு விடுவார்கள். வாயை மூடிய படியே அந்த புளிப்புச் சுவையை நாக்கில் ருசிப்பது அமிர்தம். 

சில நேரம் அந்த புளிக்குள் இருக்கிற கொட்டையை அறியாமல் முழுங்கி விடுவோம். திரு திருன்னு முழிக்கிறதப் பார்த்து அப்பா சொல்வார் " போச்சா! மறைச்சு மறைச்சு வாயில போட்டு கொட்டையை முழுங்கியாச்சா? ( அப்ப தான் நமக்கு உரைக்கும். அவங்க பார்க்கலன்னு நாம நினைச்சது பெருந்தப்புன்னு) நான் மெதுவா கேட்பேன் " அப்பா கொட்டை உள்ளே போய் ஒண்ணும் செய்யாதில்ல?" 

"அதெப்படி? மண்ணுக்குள்ள விதையை பொதச்சு வச்சா என்ன நடக்கும்னு படிச்சிருக்கிற"

" முளைக்கும். சயன்ஸ்ல படம்லாம் வரைஞ்சிருக்கோமே!"

"அதே தான் நடக்கும். முளைக்கும்"

"எப்படி வெளியே வரும்?"

"உன் வாய் வழியா தான்" 

ஆத்தீ எத்தனை நாள் தனியா இருக்கும் போது கண்ணாடியில குருவி போல  வாயைத் திறந்து திறந்து பார்த்து தொண்டையில புளிய இலை தெரியுதான்னு பார்த்திருக்கோம். இந்த அனுபவம் உங்கள்ல யாருக்கெல்லாம் இருக்கு?

இப்படிக் கொஞ்ச நஞ்சமா ஙே ன்னு முழிச்சிருக்கோம்.

 THE ILLEGAL

Ameson இல் The Illegal என்றொரு ஹிந்தி படம் பார்த்தேன். படம் முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப் பட்டிருக்கிறது. அதனால் பாதிக்குப் பாதி வசனங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. 

ஒரு இளைஞன் வெளி நாட்டில்   சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க போகிறான். அங்கு இவன் தங்கி படிக்கலாம் என்று நம்பிப் போன இடத்தில் இடப் பற்றாக் குறை காரணமாக மறுக்கிறார்கள். ஒரு ஹோட்டலில் பகுதி நேர பணியாளராகப் பணி புரிந்து படிக்கிறான். ஹோட்டல் உரிமையாளர் உனக்கு கிடைக்கும் டிப்ஸ்ஸை என்னிடம் கொடுத்து விட வேண்டும். நான் உன் செலவுகளை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். 

படிக்குமிடத்தில் இவன் படும் சிரமங்கள், ஒரு வெளி நாட்டுப் பெண் இவன் மேல் கொள்ளும் மெல்லிய காதல் பணி புரியும் இடத்தில் ஒரு பெரியவருடன் இவனுக்கு உண்டாகும் பாசம் பணி புரியும் இடத்திலுள்ள போட்டி பொறாமை என கதை மெல்ல நகர்கிறது. 

திடீரென ஊரில் இவனுடைய தந்தை நோய்வாய்பட ஆப்பரேஷனுக்கு ஒரு பெரிம் தொகை தேவைப்படும் போது ஹோட்டல் உரிமையாளர் அந்த தொகையை கடனாகக் கொடுக்கிறார். அதை அடைக்க அவன் பகுதி நேர ஊழியராய் இருந்தவன் முழு நேர ஊழியராகிறான். படிப்பு தொலைகிறது. படிப்பு போயும் அவன் கடன் அடையாததால் பாஸ்போர்ட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ள ஒரு நாட்டுக்கு legal ஆக உள்ளே நுழைந்தவன் Illegal ஆக தங்கிப் போகிறான். ஐந்து வருடங்களில் அப்பா நலமாகிறார். தங்கை திருமணம் நடக்கிறது. அவன் இன்னும் கடனை அடைத்துக் கொண்டே இருக்கிறான்.

படம் முடியும் போது அவன் வயதுடைய மற்றொரு இளைஞன் அதே இடத்தில் பணிக்குச் சேருகிறான். உரிமையாளர் இவனிடம் சொன்ன அதே கண்டிஷன்களை அவனிடமும் சொல்கிறார். அவன் ஹீரோவை விட புத்திசாலி. தனக்கு கிடைக்கும் டிப்ஸ்சில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டே உரிமையாளரிடம் கொடுக்கிறான். 

படம் எனக்கு ரொம்ப பிடித்ததற்கு முக்கிய காரணம் 

படிக்கும் காலத்திலேயே US போய் அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்ட என் தம்பியை (சித்தி மகன்) ஹீரோ ஒத்திருந்ததால். 

குடும்பத்துக்காக வெளி நாடுகளில் மெழுகாய் உருகும் எத்தனையோ ஆண்களை படம் பிரதிபலிப்பதால்.

பார்க்க வேண்டிய படம்.

07 April, 2021

 புத்தகத்தின் பெயர் : யாமம்

ஆசிரியர். : எஸ். ராமகிருஷ்ணன்.
பதிப்பகம். : தேசாந்திரி
இரண்டாம் பதிப்பு. : பெப்ரவரி 2019
யாமம்

யாமம் கதை படிக்கும் போது எனக்கு சிறு வயதில் என் அம்மா பின்னி விட்ட ஆயிரம் கால் ஜடை ஞாபகம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் முடி எடுத்து சின்ன சின்ன பின்னலாய் போட்டு அத்தனை பின்னலையும் ஒன்றாய் சேர்த்து மடக்கி கட்டி விடுவார்கள். கட்டி விடுவது அம்மாவின் வேலை. மறு நாள் அதை ஒன்றொன்றாய் பிரிப்பது நம் வேலை. கவனமாய் பிரிக்கலைன்னா சிக்காகி விடும். 

சரி அது ஏன் யாமம் படிக்கும் போது ஆயிரங் கால் ஜடை ஞாபகம் வந்தது. ஆரம்பத்தில் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒரு புது காரெக்டர் அறிமுகமாகிறது. நாலைந்து அதிகாரங்களுக்குப் பின் அந்த காரெக்டர் மறுபடி வரும் போது நாம் சரியாக அங்கே போய் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் கதையை ரசிக்க முடியும். 

பத்ரகிரி என்னும் ஒரு கதாபாத்திரம். அன்பான கணவன். அப்பாவின் கொடுமையில் அம்மா நோயாளி ஆகி இறந்தும் போனதும் சித்தி பத்ரகிரியையும் அவன் தம்பி திருச்சிற்றம்பலத்தையும் எடுத்து வளர்க்கிறாள். தானே வளர்த்து திருமணம் செய்து கொடுத்த தம்பியின் மனைவியோடு சந்தர்ப்பவசத்தால் தவறிப் போக நேர்ந்து விடுகிறது. தம்பிக்கு வெளி நாட்டில் பணி. நம்பிக்கைத் துரோகமாக நமக்குத் தெரியும் ஒரு விஷயத்தை தம்பி மனைவி வெகு இயல்பாக எடுத்துக் கொள்கிறாள். நாம் பொதுவாக நினைப்பது வெளி நாட்டில் தவறுவது சகஜமென. ஆனால் திருச்சிற்றம்பலம் வெளி நாட்டிலிருந்து அப்பழுக்கில்லாமல் வருகிறான்.

காசிம் என்னும் ஒரு அத்தர் வியாபாரி. அந்த அத்தரின் பெயர் தான் யாமம். அடுத்தடுத்து மூன்று பெண்களைத் திருமணம் செய்த அவர் ஒரு தகாத நட்பால் குதிரைப் பந்தயம் பழகி தன் அத்தனை சொத்தும் இழந்து தன் மூன்று மனைவிகளையும் ஒரு பெண் குழந்தையையும் அனாதரவாய் விட்டு தலை மறைவாகிறார்.

நாவலில் நான் ரசித்த சிலவரிகள் கீழே
"இரவின் நீளமும் ஆழமும் எவ்வளவு பெரியது காசிம்.
மனதிலிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு ஆழத்தில் கிடக்கிறதோ அவ்வளவு ஆழமுடையதும் சொல்லப்பட்டு விட்ட வார்த்தைகள் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு நீளமிருக்குமோ அத்தனை நீளமானது"

"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாம ஒரு திரவம். அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. " என்றார்.

"இந்த அத்தரின் பெயர் யாமம். இரவைப் போல பரிசுத்தமானதும் ஆழங்காண முடியாததுமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் என்றும் பரிமளம் மாறாததும் தினமும் புதுப்புது வாசனையோடு தோன்றக்கூடியதுமாக இருப்பது இரவு மட்டும் தான்."

"மண்புழு கூட தன் இருப்பிடத்திலேயே இருக்கிறதில்லை. ஈரம் கண்ட இடத்துக்கு ஊர்ந்துகிட்டு தான் இருக்கு. மனுசன் மட்டும் தான் நட்டகல்லு மாதிரி இருப்பிடம் விட்டு அசையாம இருக்கப் பார்க்கிறான்"

"ஆம்பளையோ பொம்பளையோ இஷ்டமா இருந்தாத் தானே மனசு ஒட்டும். வலிய ஒட்டு ஒட்டுனா சேர்ந்திருமா? நம்ம குழந்தைகள் நம்ம நம்பி நம்ம வித்தா வந்து பிறந்திருக்குடா. என்ன கஷ்டம் வந்தாலும் குழந்தைகளை விட்டுக் கொடுக்க கூடாதுடா"

நான் ரசித்த பத்ரகிரி திருச்சிற்றம்பலம் வைத்தே கதை முடிவு பெறுகிறது. நான் மிகவும் ரசித்த ஒரு நாவல்.