(பாகம் ஒன்றிலிருந்து கொஞ்சம் ......
மறு நாள் மாலை பள்ளி ஆண்டு விழாவுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.
எண்ணி விடலாம் சேர்ந்து இருந்த நாட்களை. அப்படிப் பட்ட அற்புதமான நாட்களில் உருவானது தான் இரண்டு முத்துக்கள்.
மற்ற
சந்தர்ப்பங்களில் அவளை ஒரு மனுஷியாக மதித்து அவளது ஆசா பாசங்களுக்கு
முக்கியத்துவமே தரத் தோன்றியதில்லை. இயல்பிலிருந்து தான் விலகி இருப்பதாகவே
தோன்றியது. சிந்தித்த படியே கண் அயர்ந்து விட்டார். "ஐயா, வீட்டுக்கு
போகலிங்களா ஐயா ?" என்று பள்ளி யின் பணியாள் வந்து குரல் கொடுத்ததும் தான்
விழித்தார்.
மறு நாளில் இருந்து தனது வாழ்க்கையில் இடி மின்னல் புயல் வரப் போவதை உணராமல் வீட்டுக்கு கிளம்பினார்.)
இனி தொடருங்கள் ....
மறு நாள் மாலை பள்ளி ஆண்டு விழாவுக்கு புறப்பட்டுக் கொண்டு இருந்தார்கள்.
"சியாமா! சீக்கிரம் மா . விழா தொடங்கிடும். "
"இதோ "
என்றபடி
மெல்லிய ரோஜா வண்ண புடவையில், எடுப்பாக தெரியும் படி கருக மணி மாலையை தவழ
விட்டு தலையில் வைத்த பூவை சரி செய்த படியே வந்தாள். அவளது நீள முடிக்கு
நீளமாக பூ வைத்தால் தான் அழகு. என்னமோ வைப்பதில்லை. ஆனால் இன்று எல்லாமே
ஸ்பெஷல் தான்.
ஒரு
நிமிடம் அவளைப் பார்த்ததும் சிவசு ஐயாவுக்கு கட்டி அணைத்து கன்னத்தில்
முத்தமிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதெல்லாம் செய்ய வேண்டிய வயதில்
செய்ததில்லை. இன்று செய்ய வேண்டும் போல் இருக்கிறது. வெட்கம் தடுக்கிறது.
"என்ன
மனுஷன்! ஒரு பாராட்டு வாய் வார்த்தையாய். இல்ல சின்ன ஒரு இமை உயர்த்தல்.
மரக்கட்டை போல வாழும் இந்த மனிதரிடம் இதை எல்லாம் எதிர்பார்ப்பது என்
தவறு." என்று எண்ணியபடி சியாமா தன் விரல் நுனிகளால் தலையில் லேசாக
தலையில் தட்டிக் கொண்டாள்.
அதைக் கவனித்து விட்ட ஆசிரியர் " என்னம்மா எதையாவது மறந்திட்டியா? " என்றார்.
" ஆமா ... எல்லாமே மறந்து போச்சு" என்று முணுமுணுத்த படி " வாங்க போகலாம்" என்றாள்.
பள்ளி
பக்கத்தில் தான் என்பதால் நடந்தே போய் விடுவார். ஸ்கூட்டர் ஒன்று வைத்து
இருக்கிறார். அந்த காலத்திய வெஸ்பா. எப்போவாவது எடுப்பதுண்டு. எப்பொழுதும்
துடைத்து துடைத்து அழகு பார்ப்பது தான் . இப்படித்தான் சிலர், உபயோகித்தால்
வீணாகி விடும் என்று ஒரு பொருள் உருவானதன் பயனையே வீணாக்கி விடுகிறார்கள்.
இன்று
இவ்வளவு அலங்காரத்துடன் அவருடன் நடந்து செல்ல கூச்சமாக இருந்தது. இன்றாவது
வண்டியை எடுப்பாரானு எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். "பக்கத்தில தான
எட்டி நடை போட்டா பத்து நிமிஷம் தான் " என்ற படி வேகமாக நடக்கத் தொடங்கி
விட்டார். இவ்வளவு அலங்காரத்தோட அவரை பிடிக்க ஓட்டமும் நடையுமாக செல்வது
அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.
ஆனாலும்
இந்த அலங்காரத்திற்கு காரணம் உண்டு. ஆண்டு விழாவுக்கு தலைமை ஏற்க வருவது
ஒரு பெரிய மில் அதிபர் சந்திரசேகரன் என்று சொல்லி இருந்தார். அது தன்னை
கல்லூரி நாட்களில் விழுந்து விழுந்து காதலித்த சந்துரு வாக இருக்குமோ என்ற
நப்பாசை தான் காரணம். அவனோட அப்பாவும் மில் தானே வைத்து இருந்தார். ஆனாலும்
அவனோட மாமரத்து நிழலில பேசிக்கிட்டு இருக்கும் போது அவனோட அப்பா
புல்லேட்ல வந்து இருவரையும் மிரட்டி அவனை இழுத்து வண்டியில போட்டுக்கிட்டு
போன பிறகு அவனைப் பற்றிய தகவலே யாரும் சொல்லவில்லை. சியாமாவும் ஒரு
காலத்துக்கு அப்பறம் கல்யாணத்தை தள்ளிப்போட முடியாம இந்த சிவசு
வாத்தியாருக்கு கழுத்தை நீட்டி காலமும் ஓடி போச்சு.
பள்ளிக்கு
போனதும் சியாமளாவை ஒரு இடம் பார்த்து அமர வைத்து விட்டு வாத்தியார் தன்
வேலைகளைப் பார்க்க போய் விட்டார். சியாமளாவுக்கு படபடப் பாக இருந்தது.
கார்கள் விரையும் சத்தம் கேட்டதும். காரிலிருந்து இறங்கியது அவனே தான்.
வருடங்கள் ஓடியதால் கொஞ்சம் பூசினார் போல் இருந்தான். நிறம் கொஞ்சம் கூடி
இருந்தது, சியாமளாவைப் பார்த்ததும் கண்கள் விரிய புன்னகைத்தான். அதைப்
பார்த்த தலைமை ஆசிரியர் " எங்கள் பள்ளி சிவசு ஐயாவோட மனைவி. " என்றார்.
அவன்
இரு கரம் கூப்பி வேகமாக நடந்தான். கொஞ்ச தூரம் போனதும் பின்னால்
இருப்பவரிடம் எதோ கேட்கப் போவது போல் திரும்பி அவளைப் பார்த்தான். அவள்
தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும் ஒரு திருப்தியோடு மேடை
ஏறினான்.
இந்த
நாடகத்தை சிவசு வாத்தியார் தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு
இருந்தார். அவள் அதிகப் படியான அலங்காரமும், படபடப்பும் சந்திர சேகரனின்
நடையில் இருந்த கர்வமும் ஏதோ சொல்வது போலவும் இருந்தது.தனது எண்ணம்
தவறாகவும் இருக்கலாம். பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது. இடை இடையே
அவர் சந்துருவையும் சியாமா வையும் பார்க்கும் போது இருவரது பார்வையும்
நேர்கோட்டில் இருப்பது போலவே பட்டது. சந்துரு பேச எழுந்தவன் "உங்கள்
எல்லோரையும் பார்த்ததில் நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் . இந்த
பள்ளியின் ஆண்டு விழாவுக்கு தலைமை ஏற்பதை என் பாக்கியமாக கருதுகிறேன்.
ஒரு பொருளை தொலைத்த இடத்தில தான் தேட வேண்டும் என்பார்கள் ஆனால் நானோ
எங்கள் ஊரில் தொலைத்த என் சந்தோஷத்தை உங்கள் பள்ளியில் கண்டு எடுத்து
இருக்கிறேன். பள்ளியில் ஒரு கட்டடம் கட்ட டொனேஷன் வேண்டும் என்று உங்கள்
தலைமை ஆசிரியர் கேட்டு இருந்தார். அந்த கட்டடத்தின் மொத்த செலவையும் நான்
ஏற்றுக் கொள்கிறேன்...."
அரங்கம் கை தட்டலால் அதிர்ந்து கொண்டு இருந்தது.
சிவசு
ஐயா சியாமளாவை பார்த்தார். அவள் கற் சிலை போல் நின்றிருந்தாள். பயமும்
பதற்றமும் அவருக்குள் ஊறியது. தேவை இல்லாத கற்பனை என்று ஒதுக்க முயன்றாலும்
நடப்பவை எல்லாம் அவர் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்துவதாகவே இருந்தது.
நிகழ்ச்சி முடிந்து ஆசிரியருக்கும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும்
இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருக்கு அதில் கலந்த கொள்ள
விருப்பம் இல்லை. அவளை கூட்டி கொண்டு அந்த இடத்தை விட்டு போய் விட வேண்டும்
போல் இருந்தது. ஏன் அந்த ஊரை விட்டே எங்காவது போய் விட்டால் தேவலை போல்
இருந்தது.
"என்ன ஐயா கிளம்பிட்டீங்களா? " சந்துருவிடம் இருந்து கிளம்பிய கேள்வி சிவசு ஐயாவிடமும், பார்வை அவர் மனைவி இடமும் இருந்தது.
" ஆமாங்க, கொஞ்சம் அவசர வேலை."
"எப்படி போவீங்க?"
"இந்தா இங்க பக்கத்தில தான். நடந்தே போய்டுவோம்."
"நோ நோ, என் கார் ல டிராப் பண்ண சொல்றேன் "
அவர் மறுக்க மறுக்க காரில் அவர்களை அனுப்பி வைத்தான். அதில் அவர்கள் வீட்டை தெரிந்து கொள்ளும் கள்ளத் தனமான ஆவலும் அடங்கி இருந்தது.
வழி முழுவதும் ஒன்றுமே பேசாமல் வந்தார். வீட்டிற்க்குள் சென்றதும் கதவை சாத்தி " உனக்கு அவரை முன்னமே தெரியுமா? " என்றார்.
"யாரை?"
"மிஸ்டர். சந்திர சேகர்"
இத்தனை
ஆண்டுகளாக தன்னை ஒரு ஜடப் பொருளாக நடத்திய ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக
இதற்க்கு மட்டும் எங்கிருந்து வந்தது உரிமை என்று கோபப் பட்டவளாக முகத்தை
நேருக்கு நேர் பார்த்த படி சொன்னாள்" நானும் அவரும் காதலித்தோம். அவரை
மணந்திருந்தால் அந்த மேடையில் இருக்க வேண்டியவள் தான் உங்களை மணந்து இப்படி
அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். ஒரு பிச்சை எடுப்பவளுக்கு கிடைக்கும்
சந்தோஷம் கூட இல்லாமல் அவளை விட கேவலமானவளாக இருந்து கொண்டு இருக்கிறேன்.
..." இன்னும் என்னன்னவோ பொரிந்து தள்ளினாள். கண்களில் தண்ணீர் நிற்காமல்
ஓடிக் கொண்டு இருந்தது.
இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
(இன்னும் வரும் )
சகோ பகிர்வுக்கு நன்றி!
ReplyDeletenice. :-)
ReplyDeleteகதையினைத் தொய்வின்றி நகர்த்திச் செல்லுறீங்க.
ReplyDeleteஎழுத்து நடை அருமே..
மனித மனங்களுக்கு மறைக்கின்ற விடயங்கள், ரகசியம் பேணுகின்ற சில செய்திகள் தெரிய வரும் போது ஏற்படும் உணர்வுதனை அருமையாக விளக்கி கதை அடுத்த பாகத்தினை நோக்கி நகர்கிறது.
ரூஃபினா,
ReplyDeleteமுதல் பாகம் எங்கே?
சுட்டி கொடுங்கள்.