Bio Data !!

30 July, 2021


#இது ஒரு நீண்ட பதிவு. கண்டிப்பா வாசிங்க. ஒரு மன நிறைவும் தைரியமும் கிடைக்கும். நான் Guarantee.

 *********

நான் எனக்கு அறிமுகமாகும் அருமையான மனிதர்களை உங்களுக்கும் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறேன். படத்தில் இருப்பவர் எனது தோழி. கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் Hello FM "நிலா முற்றம் "என்னும் நிகழ்ச்சி நடத்தியது. அதில் நானும் பேசினேன். இவர்களும் பேசினார்கள். நான் பேசிய விதம் பிடித்து Hello FM யிடம்  என் தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்பு கொண்டார்கள். ஒரே அலை வரிசையில் இருந்ததால் நட்பு பலப்பட்டது.  


கொஞ்ச நாட்களுக்கு பிறகே தெரிந்தது இவர்கள் கண் பார்வையை நடு வழியில் தொலைத்தவர்கள்  என்பது. அது வரை தானாக சொல்லவுமில்லை. நான் கண்டு பிடிக்கும் படி பேசியதுமில்லை. இரண்டு பையன்கள் பிறக்கும் வரை நல்ல பார்வையோடு என்னைப் போலவே வாசிப்பில் அதிக ஈடுபாடு கொண்ட சுபாஷினி பார்வை இழந்த போது பெரிதும் வருந்தியது தான் இனி புத்தகங்கள் வாசிக்க முடியாதே என்பதற்கு தான். தன் பார்வை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிய போது ஒரு பதற்றம் வந்தாலும்  மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் சரியாகத் தான் இருக்கிறேன் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 


எவ்வளவோ மருத்துவர்களைப் பார்த்து இருக்கும்  பார்வையையாவது தக்க வைத்துக் கொள்ள போராடி இருக்கிறார்கள். இனி பார்வை திரும்ப வழியில்லை என்ற பதிலையே பெற்றிருக்கிறார்கள். ஒரு நாளில் பார்வை முழுமையாக பறி போனது.   ஆனால் தன்னம்பிக்கை இழக்கவில்லை இந்த பெண்மணி. தன்  காரியங்களை தானே பார்த்துக் கொள்வதோடு அவர்கள் கணவன் நடத்தும் ஹோட்டலுக்கு தேவையான  பொடி வகைகளையும்   வீட்டிலிருந்தே பணியாட்கள் துணையோடு தயாரித்து அனுப்புகிறார்கள் இதற்கு நல்ல வரவேற்பு. அழகாக உடை உடுத்துவார்கள். 


சுய சார்பு உள்ளவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். புடவையின் நல்ல பக்கம் கெட்ட பக்கம் தெரிந்து கொள்ள இடுப்பில் சொருக வேண்டிய இடத்தில் டெய்லரிடம் லேசாக மடித்து தைத்து வாங்கிக் கொள்கிறார்கள்.(அவர்களின் சுய சார்பு பற்றி தனியாகவே ஒரு பதிவு போடும் அளவுக்கு விஷயங்கள் சொன்னார்கள்) தான் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வை தானே சிந்தித்து அதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். 


ஒரு வித தயக்கத்தில் பார்வை போன பிறகு வீட்டை விட்டு எங்கேயும் போகாமல் இருந்தார்கள். நான் பழகத் தொடங்கிய பின் அவர்களை ரொம்ப தைர்யப்படுத்தி அவர்கள்  கணவரிடம் அழைத்து வரச் சொன்னேன். ஒரு தோழியின் வீட்டு நிகழ்ச்சிக்கு போனோம். நிகழ்ச்சி முழுவதும் உடன் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டேன்.  அதன் பின் தைர்யம் பெற்று இன்று பல இடங்களுக்கு தன் கணவன் மகன்கள் உதவியோடு போய் வருகிறார்கள். ஒரு முறை உறவினர்களோடு குற்றாலம் போய் வந்தேன் என்று சொன்ன போது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்.  


இவர்களின் கூடுதல் திறமை கவிதை எழுதுவது. கவிதையின்  வார்த்தைகளை மனதிலேயே சேர்த்து கோர்த்து  ஒரு கவிதை வடிவத்துக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். பின்  கணவன் அல்லது மகன்களிடம்  இந்த கவிதை இவர்கள் சொல்ல சொல்ல எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். 


பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நான் ஏதோ ஒரு விஷயம் சொல்வதற்காக எழுத்தாளர் வண்ணதாசனை அவர்களை  போனில் அழைக்க அவர் அம்பைக்கு ஒரு உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறேன். என்றார். அன்று சுபாவிற்கு பிறந்த நாள். "அவர்கள் கண் பார்வை இழந்தவர்கள். கவிதையில் ஈடுபாடு உடையவர்கள் அவர்களை நேரில் வந்து உங்களை சந்திக்கச் சொல்லலாமா?  அது அவர்களுக்கு நான் கொடுக்கும் பிறந்த நாள் பரிசாக இருக்கும் "எனக் கேட்க உணர்ச்சி வயப்பட்ட வண்ணதாசன் அவர்கள் தானே சென்று சந்தித்தார். உற்சாகமாக அவர்கள் கொடுத்த நோட்டில் சுபா "எழுதி" இருந்த கவிதைகளை வாசித்து பாராட்டி இருக்கிறார். இதை விட சிறந்த ஒரு பிறந்த நாள் பரிசை நான் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. 


இன்று வரை எதிர் நீச்சல் போட்டு உற்சாகமாக தன்னை வைத்துக் கொண்டிருக்கும் அற்புத மனுஷி எழுதிய கவிதைகள் இரண்டு இங்கே. 

சருகுகள் உதிர்கின்றன

தளிரும் முற்றா இலைகளும் உதிர்கின்றன.

உயிரின் அருமை தெரியவா?

வெட்டியானின் வறுமை போக்கவா?

இறைவனின் சாபமா?

இயற்கையின் கோபமா?

விடை தெரியாமல்

காத்திருக்கின்றோம்

நம்பிக்கையுடன்

                  *******

வாழ்க்கை தேவைக்காகவே வாழ்ந்தால் அலுப்பாகும்

ஆசைக்காகவும் வாழ்ந்தால்

அழகாகும்.

பிறருக்காகவே வாழ்ந்தால்

சலிப்பாகும்

நமக்காகவும் வாழ்ந்தால் 

சுவாரஸ்யமாகும்.

கடந்த காலத்தை 

எண்ணாமல்

வருங்காலத்துக்காக

கலங்காமல்

இந்நொடி வாழ்வோம்.

வாழ்வதற்கே வாழ்க்கை.

                      ******

இன்றும் இவர்கள் கணவனும் மகன்களும் இவர்களை குறைவு பட்டவர்களாகவே எண்ணாமல் நடத்துவதால் இவர்களும் இயல்பான ஒரு பெண்ணின் வாழ்க்கையை நடத்த முடிகிறது என்று மகிழ்வோடு  சொன்னார்கள்.

02 July, 2021

 Bynge இல் லாசரா அவர்கள் எழுதிய "உத்ராயணம்" என்னும் சிறுகதை வாசித்தேன். உடனே ஒரு உத்வேகம் எழுந்தது. அவருடைய எல்லா கதைகளையும் வாசித்து அத்தனை சொற்களையும் பொக்கிஷமாய் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 எனக்கு ஒரு பாக்கியம் இருக்கிறது. வாசித்தவுடன் அவருடைய அருமை மகனுடன் ஒரு conversation வைத்துக் கொள்வேன். இதோ அண்ணன் சப்தரிஷியும் நானும் பேசிக் கொண்டது. 

நான்: அண்ணன் இன்று லாசரா எழுதிய உத்ராயணம் வாசித்தேன். அதில் கண்ணன் னு குறிப்பிடுவது உங்களைத் தானா?

அண்ணன்: ஆமா. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் தரேன். அதுவும் லாசராவின் கதைகளைச் சொல்லும் ரம்யா கண்டுபிடித்த சொன்ன விஷயம். அவர் எழுதும் கதைகளில் பாசிட்டிவ் காரெக்டர்களுக்கு அதிகம் தன் பிள்ளைகளின் பெயரையே பயன்படுத்தி இருக்கிறார். நெகடிவ் காரெக்டர்களுக்கு பெயர் இல்லாமல் அவன் அவள் என்றே எழுதி இருக்கிறார். 

நான்: இதை இனி கவனத்தில் இருத்தி வாசிக்கிறேன் அண்ணன்.

அண்ணன்: உங்களுக்கு இந்து தத்துவங்களில் ஆர்வமிருப்பதால் இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். எங்க அப்பா புருவம் திக்கா நீண்டு வளர்ந்து இருக்கும். அது போல் பீஷ்மரின் புருவமும் இரண்டு பக்கமும் நீண்டு வளர்ந்து தொங்கி போர் புரியும் போது தொந்தரவாய் இருக்குமாம். அதனால் இரு போர் வீரர்கள் இரண்டு புறமும் அம்பினால் புருவத்தை தூக்கிப் பிடித்து அவர் போர் செய்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்களாம். 

நான்: interesting ஆன விஷயம் அண்ணன்.

இப்போ ஏன் இந்த விஷயத்தை அண்ணன் சொல்றார் உத்ராயணம் வாசிச்சு பாருங்க புரியும்.

இப்போ உத்ராயணம் கதையில் நான் ரசித்த வரிகள்:

"இது வரை ரெண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக் கொண்டாச்சு. காஞ்சாச்சு. ஆனால் உடல் வாணலியாய் பொரிகிறது. இனி மேல் ஈரம் பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசு தான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா?"( மார்பில் சளி நிறைந்து இருமும் போது ஏற்படும் சத்தத்தை மார்பில் கொலுசு என்கிறார்) 

" இது குறைக்கிற நாயுமல்ல. கடிக்கிற நாயுமல்ல. நாய்களில் ஊமை உண்டோ?" (அட ஆமால்ல! நாய்களின் முக்கிய அடையாளமே குறைப்பு தானே! வாய் பேச முடியாத குறைக்க முடியாத நாய்கள் உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?)

"நாங்கள் எங்கே பேசிக்கிறோம். எங்களைப் பிணைக்கும் மௌனச் சரடே எங்கள் பேச்சென்றால் நாங்கள் நிறையப் பேசுகிறோம்"

"இரவு வேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கையில் விட்டுச் செல்லும் நுறைத் துளிகள்.பொரியும் முத்துக் கொதிகள்"

கல்வித் தெய்வம் அவரோடு கை கோர்த்துக் கொண்டு வார்த்தைகளை வாரிக் கொட்டி இருக்கிறது. முத்துக்களாய் அவை கதைகள் எங்கும் ஜொலிக்கின்றன.