நானும் பார்த்தேன் ராஜ பாட்டை.
பண்டிகைக்கு எல்லோரும் சேர்ந்ததனால் நல்ல ஒரு படம் பார்ப்போம்(!) என்ற ஆசையில், தெய்வத் திருமகள் தந்த மயக்கம் இன்னும் முழுவதுமாக போகாத நிலையில் "ராஜ பாட்டை"யை தேர்ந்தெடுத்தோம்.
ஆக மோசமான ஒரு முடிவு.
இதுவே போதும் என நினைக்கிறேன் படத்தை விமர்சனம் செய்வதற்கு.
படம் ரிலீஸ் ஆன வெள்ளிக்கிழமை அன்றைக்கே படத்தின் டிக்கெட் ரேட் பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.
இயக்குனர் :சுசீந்திரன்
நடிகர் : விக்ரம்
நடிகைகள்: ஸ்ரேயா, ரீமாசென்
என எதிர்பார்ப்புகள் கூடி இருந்தது.
படம் முடிந்து வணக்கம் போட்டுட்டாங்க இன்னும் ஸ்ரேயா, ரீமாசென்னை காணோமேனு பார்த்தா ஒரு சைட்ல பெயர்கள் ஓடுது அடுத்த சைட்ல பிகர்கள் (ச்சே !சிபி பதிவுகள் வாசிப்பதன் பாதிப்பு) ஆடுது. அவ்வளவு தாங்க அவர்கள் இருவரின் பங்கு.
விக்ரம் "தெய்வத் திருமகள்"க்காக உடம்பை வருத்தியதன் பாதிப்பு இதில் அதிகம் தெரிகிறது. முகத்தில் கவர்ச்சி குறைந்து இருக்கிறது. நடிப்பில் கவர்ச்சி குறைந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே பாடலில் பதினெட்டு விதமான கெட் அப்பில் வருகிறார். ஆனாலும் பிரயோஜனமில்லை பல கெட் அப்புகளில் அவர் தான் விக்ரம் என்று கண்டுபிடிப்பதற்குள் காணாமல் போய்
விடுகிறார். ஒரே அடி தடி ரகளை. எதற்காக இப்படி ஒரு கதைக்கு விக்ரமை தேர்ந்தெடுத்தார் இயக்குனர்? விடை தெரியாத கேள்வி.
"வெண்ணிலா கபடிக் குழு" "அழகர்சாமியின் குதிரை" போன்ற அருமையான படங்களை எடுத்த இயக்குனர் சுசீந்திரனின் படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்ட விக்ரமைப் போலவே நாமும் ஏமாந்தோம். எடுக்கப் பட்ட கதைக் கரு அருமையான ஒன்று. நில அபகரிப்பு ! புகுந்து விளையாடக் கூடிய கதைக் களம். வில்லியாக வரக் கூடிய அரசியல்வாதி "அக்கா" அருமையான தேர்வு. ஒரு முக்கியமான பாத்திரத்தில் கே. விஸ்வநாத். இவ்வளவு இருந்தும் .......
கே. விஸ்வநாத் தனக்கு நகைச்சுவையிலும் கலக்கத் தெரியும் என நிரூபித்திருக்கிறார். ஹீரோயினை வசப்படுத்த ஹீரோவுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு திட்டங்களும் சிரிக்க வைக்கின்றன. இதற்காகவே இளைஞர்கள் ஒரு வேளை பார்க்கலாம். திரைப்படங்களில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதாக தெரியவில்லை. இயக்குனராக வரும் தம்பித்துரை தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். முதியவர் என்று மதிக்காமல் நடத்துவதும், அதற்காக விக்ரம் அவருக்கு 300 கோடி சொத்து வரப் போவதாக பொய் சொன்னதும் , அதன் பின் குழைய ஆரம்பிப்பதுமாக நன்றாக நடித்திருக்கிறார்.
ஹீரோயின் தீக்க்ஷா சேத். இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்று தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல் தெரிகிறது. உணர்வுகள் முகத்தில் கொஞ்சம் கூட தெரிந்து விடக் கூடாதென்பதில் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் இயக்குனருக்கு பிடித்த(!?!), வித்தியாசமான நீல நிறத்தில் உடை உடுத்தும் போது சிறப்பாக தெரிகிறார். இதற்காகவே இவரை தேர்ந்தெடுத்திருப்பாரோ இயக்குனர் தெரியவில்லை.
இசை யுவன் சங்கர் ராஜாவாம்!!
அடிதடி படங்களுக்கு என ஒரு கூட்டம் அடியாட்களை ( அவர்களுக்கு எண்ணை செலவும் இல்லை மேக் அப் செலவும் இல்லை ) விடும் பழக்கத்துக்கு யாராவது போர்க்கொடி உயர்த்தினால் தேவலை.
கொஞ்ச நேரம் நகைச்சுவையை ரசிக்க மட்டுமே நினைத்தால் படத்துக்கு போகலாம் .