சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக "நீயா நானா?" வில் நமது பதிவாளர்களின் பங்கேற்றம். திரு ஜாக்கி சேகர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி தான் நினைத்ததை தெளிவாக சொன்னார். வாழ்த்துக்கள்!! தேனம்மை, தமிழரசி பேசினார்கள். அதிக வாய்ப்பு கொடுக்கவில்லையா, இல்லை கொடுத்ததையும் எடிட்டி விட்டார்களா தெரியவில்லை.
திரு ஜோ அருண் சொன்ன ஒரு கருத்து 'இன்றைய தகவலாக' இருந்தது.
"கால மாற்றங்களுக்கு ஏற்ப நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை,பழக்க வழக்கங்களில் மாற்றம் வேண்டும். அதை நமக்கு உணர்த்தும் விதமாக கோடை தொடங்குகிறது என்பதை சுட்டும் விதமாக சித்திரை திருநாளை கொண்டாடுகிறோம்." என்றார். அது சரி தான்,ஆனால் இன்று கால நிலைகள் எதற்கும் கட்டுப்படாத குழந்தையைப் போல் அல்லவா கடந்து செல்கின்றன.
ஒரு செய்தி, நொய்டா வில் இரு பெண்கள், நாற்பதைக் கடந்தவர்கள், திருமணம் ஆகாதவர்கள் ,நன்கு படித்தவர்கள், தன் தந்தை இறந்து, தன் தம்பியும் சண்டை இட்டு பிரிந்ததும் ஆறு மாதங்களாக ஒரு வீட்டினுள் அடைந்து, உண்ணாமல், நீர் கூட அருந்தாமல் நொந்து போன நிலையில் இருந்த தகவல் அறிந்து, போய் கதவை உடைத்து மீட்டிருக்கிறார்கள். அதில் ஒரு பெண் மீட்ட ஒரு நாளிலேயே அட்டாக் வந்து இறந்து விட்டாள். அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்கள் ஆறு மாதங்கள் இப்படி அடைபட்டு இருப்பதை அறியாமல் இருப்பதை காவல் அதிகாரி கண்டித்திருக்கிறார். சமுதாயம் சீர் கெட்டு சுயநல சமுதாயமாகி விட்டது என்பது எல்லாம் சரி தான். தான் படித்த படிப்பு வாழ்க்கையின் மேடு பள்ளங்களில், அலை மேல் படகாய், சுமுகமாய் செல்ல உதவ வில்லை என்றால் நாம் படித்த படிப்பால் என்ன பயன்?
இது வரை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் இந்த முறை தான் அதிக சதவிகிதமாம் 77 .4 % இத்தனை பேரை வாக்களிக்க வைத்ததில் மீடியாவின் பங்கு மிக அதிகம். பாராட்டுக்கள் !! ஆனால் இவ்வளவு வளர்ச்சி அடைந்த நாளில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத அவகாசம் ஏன் என்றால் மேற்கு வங்காளத்தில் , பல கட்டங்களாக நடக்கும் தேர்தல் முடிந்ததும் தான் எண்ண வேண்டுமாம். ஒரு பாமரனாகிய எனக்கு ஒரு சந்தேகம். அப்போ மற்ற மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்தில் முடியும் நாளை ஒட்டி தேர்தல் நடத்தலாமே? ஒரு மாத காலம் இந்த வாக்குகளை பாதுகாக்க ஆகும் செலவு வீண் தானே? இதன் தத்துவார்த்த நியாயத்தை யாராவது விளக்குங்கப்பா!
சின்னக் குயில் சித்ராவின் மகளின் மரணம் மனதைப் பிசைந்தது. அந்தப் பெண்மணியின் சிரிப்பை இறைவன் தான் மீட்டுத் தர வேண்டும். buzz ல ஆட்டிசம் உள்ள குழந்தையை பற்றி ஒரு ஐந்து நிமிட படம் பார்த்தேன்.
இந்தக் குழந்தைகள் சிறப்பாக நேசிக்கப் பட வேண்டியவர்கள்.