Bio Data !!

21 December, 2013

தாயார் சன்னதி - சுகா

பதிவு எழுதுவது என்பதே மிக சிரமமான ஒரு காரியம் ஆகி  விட்டது.பல காரணங்கள். புத்தகங்கள் படித்ததையாவது எழுதி விடுவோம் என்று நினைத்து தான் இந்த பதிவு.  எனக்கு பிடித்து இருந்தது. உங்களுக்கும் பிடிக்கிறதா என்று பாருங்கள்.

சுகா எங்கள் ஊர்க்காரர் - நெல்லை. அவருடைய தந்தை திரு நெல்லை கண்ணன் அவர்கள் தான் எனக்கு நல்ல பழக்கம். இவருடன் பரிச்சயமில்லை. இந்த புத்தகம் அவருடன் பரிச்சயம் உண்டாக்கியது. 

இது அனுபவங்களின் தொகுப்பு. ஆனாலும் இனிமையான அனுபவங்களின் தொகுப்பு. அதுவும் நெல்லை தமிழின் பிரயோகம் தித்திக்கும் திகட்டாத பால் கொழுக்கட்டை. 

நகைச்சுவை இழையோடும் கதாபாத்திரங்கள். சாமியாடிக் கொண்டிருக்கும் பரமசிவன் பிள்ளையின் கழுத்தில் முறுக்கு மலையை அவர் வைப்பாட்டி போடுவதும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அந்த முறுக்கை அவர் கடித்து தின்பதாக வருவதை நகைச்சுவை யோடு எழுதி இருக்கிறார் .

"துப்பு" சொல்லும் வீரையன் தாத்தா.  பயந்த சுபாவம் மிகுந்த பிள்ளைமார் இனத்தில் "வீரையன்" பெயரே வித்தியாசமானது. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் கல்யாணி ஆச்சி. 

கதைத் தலைப்பான  " தாயார் சன்னதியில்" தன்  தாயார் கான்செர் வியாதியால் இறந்த துக்கத்தை பகிர்ந்திருப்பது நல்ல irony . "அந்த பொண்ணுக்கு ஏதோ  சோகம் இருக்கும்மா" என்பதும் "எல்லா ஆம்பிள  பயல்களும் பொம்பள பிள்ளையை பார்த்து சொல்றது தான் இது. உளறாதே " என்பதும் தாய் மகன் உறவை அழகாகக் காட்டும் இடம். 

சுகாவின் தந்தை இணைய இணைப்பை நான் சரி செய்து கொடுத்த வகையில் தான் எனக்கு முதன் முதலில் அறிமுகம் ஆனார். மிகவும் நகைச்சுவையாகவும் பாசமாகவும் பேசக் கூடியவர். ஒரு மூத்த அண்ணன் , கடைக்குட்டி தம்பி, தன மனைவி இத்தனை பேரின்  இழப்பை சந்தித்திருக்கிறார் என்று வாசித்ததும் நாளை கண்டிப்பாக அவருக்கு ஒரு 'கால்" பண்ண வேண்டும் என்று தோன்றியது. "மீதமொரு முலை எரி ' என்ற அவர் கவிதைத் தொகுப்பை வாசித்ததும் அவரை முதன் முதலாக தொடர்பு கொண்டதும்  சில புத்தகங்களை எனக்கு அன்பாக தந்த அவரது முதல் சந்திப்பும், இன்றும் அவரது எண்ணில்  கேட்கும் காலர் tune  "சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா " ஆசையாக எனது எண்ணில்  இருந்து அவர் கேட்டுப் பெற்றதும், இன்றும் ஏதேனும் விஷயமாக அழைத்தால் "வணக்கம்மா! சொல்லுங்கம்மா . நல்லா இருக்கீங்களா? " என்று அன்போடு  விசாரிப்பதும்  இனிமையாக நினைவுக்கு வருகிறது.

வண்ணதாசன் அவர்கள் அழகான முன்னுரை வழங்கி இருக்கிறார். அவர் சொல்லியது போல சுகா அவர்களுக்கு தமிழ் எழுத்து அக்கன்னா வில் இருந்து தான் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ ஒவ்வொரு பகுதியும் முடிக்கும் போது  ஒரு பன்ச் . 

"க்ளோ " நான் கூட இனி போனை எடுத்ததும் இப்படி சொல்லலாம் என்று இருக்கிறேன்.  எதிர் முனை என்ன சொல்கிறாள் என்றும் யோசிக்கும் நேரத்தில் நாம் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளலாம் . நகைச்சுவை முந்திரியை அங்கங்கே  தெளித்திருக்கிறார் . 

"அங்கு கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் யாரும் இல்லை என்பது "எனக்கே" தெரியும். "  சாதரணமாக சொல்லப்பட்டதாக இந்த வரி தெரிந்தாலும் தன்னை தானே நையாண்டி செய்து கொள்ளும் இந்த பகுதி இளங் காலை நேரத்தில் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது சுகா. 

"பாம்பு என்ற பூச்சி" மிகவும் நகைச்சுவை நிறைந்த பகுதி.  இவர் நண்பர் குஞ்சு " நீ கவனிக்கல நம்ம வளையல் கடை ராமையா மகா அவ வீட்டு வாசல்ல இருந்து என்னையே பார்த்துக் கிட்டிருந்தா " என்று சொல்கிறார்.   " ஊஞ்சல் வளையத்தில்  இவன் தொங்கிக் கொண்டிருந்ததை அவள் பார்க்க வில்லையே என்று நினைத்துக் கொண்டேன் " என்று சுகா சொல்வதும் Why  this kolaiveri  suga? 

மிகவும் இயல்பாக தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றியும் தன்  சொந்த மண்ணின் சிறப்புகளையும் நாம் ரசிக்கும் வண்ணம் கூறியதில் சுகா வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம். இன்னும் இது போல் பல எழுதுங்கள். நகைச்சுவையாக எழுது வது மிகவும் கடினமான ஒன்று. அது உங்களுக்கு ரொம்ப இயல்பாக வருகிறது. தந்தை வழி சொத்தாக இருக்கலாம். வாழ்த்துக்கள் !!

சாகித்திய அகடமி விருது பெற்ற திரு ஜோ -டி -க்ருஸ்  அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது விருது பெற்ற கொற்கை நாவல் பற்றி தெரிந்து கொள்ள எனது இந்த கொற்கை பகுதியை பாருங்கள்.