***இன்று என் அம்மா எழுபத்தைந்து ஆண்டுகளை முடித்து வெற்றிகரமான எழுபத்தியாராம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். உங்கள் சார்பாக எனது வாழ்த்துக்களை கூறி விட்டேன்.பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பேத்தியின் மகன் என்று குடும்ப மரம் விழுது பரப்பி இருப்பதில் ஆக சந்தோஷத்தில் இருக்கிறார்கள், முப்பத்தி எட்டாம் வயதில் விதவையான என் தாய். அவர்களை அதே சந்தோஷத்தோடு நூறு வயது வரை கொண்டு செல்ல அந்த இறைவன் உதவ வேண்டும். கடந்த வருடம் எங்கள் அம்மாவை ஒரு பேட்டி கண்டு பதிவு போட்டேன். அதை பார்க்க
***இப்போ இருக்கிற கிளைமேட்டில், ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து அம்மாவுக்கு ஒரு பரிசுப் பொருளாக ஒரு சேலையையும் எடுத்துக் கொண்டு (வழக்கமான முறைப்படி எல்லோரும் பணியில் இருக்கும் காரணத்தால் விழா தனியாக விடுமுறை தினத்தன்று) காரை ஓட்டிக் கொண்டு சர்ச்சுக்கு செல்லும் போது உலகமே சொர்க்கமாய் இருந்தது. அந்த நேரத்தில் வேக வேகமாய் நடை பயில்பவர்களில் அதிகம் பேர் வயதானவர்கள் தான். அதிலும் ஒருவர் இரு கைகளையும் வேக வேகமாக வீசி நடந்து கொண்டிருந்தார். காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவருடன் கொஞ்ச தூரம் அப்படியே நடக்க ஆசையாக இருந்தது.
***இப்பொழுது எங்கள் ஊரில் சவேரியார் கோவிலில் திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. சவேரியாரை பற்றி ஒரு கூடுதல் தகவல் தெரிந்து கொண்டேன். அது உங்களுக்காக. சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கப்பலில் செல்கிறார் சவேரியார். அவருடன் செல்கிறார் அன்டோனியோ. செல்லும் வழியிலேயே உடல் நலம் குன்றி இறந்து போகிறார். அருகில் உள்ள நாட்டில் அவரை புதைத்து விட்டு தொடர்ந்து செல்கிறார்கள். கிட்டத்தட்ட எண்பது நாட்களுக்குப் பின் திரும்பி அதே இடம் வரும் போது என்ன தோன்றியதோ அன்டோனியோ இறங்கி சென்று புதைத்த இடத்தின் கல்லை அகற்றி பார்க்கிறார்.
இறந்த சவேரியாரின் உடல் அப்படியே இருக்கிறது. கப்பலின் கேப்டனிடம் காட்டுவதற்காக சிறிது சதைப் பகுதியை அறுத்து எடுக்கிறார். ரத்தம் வழியத் தொடங்குகிறது. அதை கொண்டு காட்டியதும் பிரமித்த கேப்டன் அவர் உடலை கப்பலில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கிறார். புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்த பிறகு அவரது உடல் கோவாவுக்கு கொண்டு செல்லப் படுகிறது. அங்கே அவரது அழியாத உடல் இன்னும் இருக்கிறது கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக.
***"பாலை" என்னும் படத்தை எடுத்து ஒரு இயக்குனர் பட்டுக் கொண்டிருக்கும் பாடுகளை கண்களில் நீர் வர அவர் சொல்லும் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. கடும் முயற்சி எடுத்து எடுக்கப் பட்ட படமாகத் தெரிகிறது. சில திரை அரங்குகளில் வெளியிடப் பட்ட இரண்டே நாட்களில் அதுவும் கூட்டம் அதிகமாக வரக் கூடிய ஞாயிறு அன்று படத்தை தூக்கி விட்ட கொடுமையை கண்களில் நீர் வர விவரிக்கிறார். வேதனையாக இருந்தது. ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு பெண் ஆவேசமாக "TODAY THE GOVERNMENT IS RULED BY RICH BUSINESS PEOPLE" என்று கூறியது நினைவுக்கு வந்தது. இன்று நம்மை ஆள்வது பணக்காரர்கள் தானா?
***இன்று ஒரு அதிசயம் நடந்தது. எனது அலைபேசியில் ஒரு கால் சென்னையில் இருந்து. " ஹலோ ! RUFI நான் மாலதி பேசுறேன்."
எனக்கு உடனே நினைவுக்கு வந்தது இடுப்பு வரை மடித்துக் கட்டிய தலைப் பின்னலுடன், சராசரிக்கும் குறைவான உயரத்தில் சாந்தமாக, என்னுடன் பள்ளியில் படித்த தோழி , அவள் எங்கே அழைக்கப் போகிறாள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது தொடர்பு விட்டு போய். "எந்த மாலதி"
"ஹேய் ! நான் தான்ப்பா உன்கூட ஸ்கூல் ல சேர்ந்து படிச்சேனே"
அட! அதே மாலதி! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனேன்.
சென்னையில் தரமணியில் எங்கள் அலுவலகம் ஒன்றிற்கு சென்டிருக்கிறாள். எதற்கும் கேட்டுப் பார்ப்போமே என்று என்னைப் பற்றி ஒருவரிடம் விசாரித்திருக்கிறாள். அவர் தனக்கு தெரியாது என்று சொல்லி அங்கே நெல்லையில் இருந்து மாற்றம் வாங்கிக் கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் கேட்கச் சொல்லி இருக்கிறார். ஊப்ஸ்!! அந்த பெண்ணுக்கு என் தொலை பேசி எண் தெரியும் என்பதால் உடனே தொடர்பு கிடைத்து விட்டது. என்ன ஒரு COMMUNICATION DEPARTMENT ! பள்ளி நண்பர்கள் என்றாலே தனி அன்பு தான். அவள் பல ஆண்டுகள் டென்டிஸ்ட் ஆக பணி புரிந்து இன்று பணி விடுத்து அழகான இல்லத் தலைவியாக இருக்கிறாளாம். என் தங்கைகள் இருவரையும் பெயர் சொல்லி விசாரித்தாள். ஆச்சரியப்பட்டேன். இன்று உண்மையிலேயே மிகச் சிறந்த நாள் தான்.
I AM HAPPY TO THE EXTREME MALATHI !!
இன்னும் இதே போல் எங்கள் நட்பு வட்டத்துக்குள் வர வேண்டிய தோழி ஒருத்தி இருக்கிறாள். பெயர் செந்தமிழ்செல்வி (அழகான பெயர் ) அந்தப் பெயருக்காகவே அவளை ரொம்ப பிடிக்கும். அவள் கவிதையும் நான் கவிதை என்ற பெயரில் எதையோவும் எழுதுவோம். கல்லூரி கடைசி தினத்தன்று அவளும் நானும் சேர்ந்து கவிதை எழுதி மாற்றி மாற்றி வாசித்தோம். கண்ணதாசனும் எதோ ஒரு கடை நிலை மனிதனும் மாறி மாறி எழுதியதைப் போன்று இருந்தது. எங்கே இருக்கிறாய் செல்வி?