Bio Data !!

25 November, 2012

"தே............வதை"



முதன் முறையாய்
தொண்டை நரம்புகள் புடைக்க
என்னைப் பார்த்து நீ
"தே .................!" என்று கத்திய போது
பதறிப் போனேன் .
நான் "தேவதை" என்று
நிரூபிக்கத் துடித்தேன்.

தவறி மலக் கிடங்கினுள்
முழுமையாய் விழுந்து
எழுந்ததைப் போல
குன்றிப்   போனேன்.

என்னைப் பெற்றவர்கள் வளர்ப்பின்
எச்சத்தின் மிச்சங்களால்
உறக்கத்தில் கூட
உதறி எழுந்தேன்.

காலச் சக்கரம்
சுழன்று ஓடியது.

இன்றும் கோபம் கொப்பளிக்க
குரல் தடிக்க அழைக்கிறாய்
"தே ....................!"
என்னைப் பெயர் சொல்லி
அழைத்தது போல்
இயல்பாய் திரும்புகிறேன்.

17 November, 2012

செல்லம்







நீ இருக்கும் போது

உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்

அருகில் நீ இல்லாத போது

உன் நினைவுகளுடன்.

அண்டை நாடுகளை மிஞ்சி விடுகிறது

என் மீதான உன் ஆக்கிரமிப்பு


 உன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத படி இம்மாம் தொலைவு போய் இருக்கியேடா செல்லம்

14 November, 2012

உழைப்பின் சின்னம்

அன்றொரு நாள் , நான் சாலையில் கண்ட வயதானவர் தான் இந்த கவிதையின் கருவானவர். நல்லா வந்த மாதிரி இருக்குதேன்னு பத்த்ரிகைகளுக்கு அனுப்பினேன், மெயிலில் தான், ஹார்ட் காப்பி அனுப்புவதில் படு சோம்பேறியான நான் , ஆனால் வந்த பாடாய் இல்லை சரி இருக்கவே இருக்குது வலைப்பூன்னு நினைச்சு போட்டு விட்டேன் . நல்லா இருக்குதா சொல்லுங்க.
                                                                                .........
ஒடுங்கிய தேகம்,
இடுங்கிய கண்கள்,
ஒட்டிய கன்னம்,
கையில் குறுந்தடி,
அரையில் அழுக்கு வேஷ்டி,
கீழே
இரு சிறு துணிப் பொதி,
வயது எண்பதிருக்கலாம் ,
அதற்கு மேலேயும் இருக்கலாம்,

உள்ளிருந்து ஏனத்துடன்
வரும் பெண்ணை
பார்த்திருந்த கிழவரை
என் பரிதாபப் பார்வை
ஊடுருவ
சுற்றுமுற்றும்  பார்த்து
குரல் கொடுத்தார்,
"கோலப் பொடிய்ய்ய்ய்ய்ய்........"

உழைப்பின் சின்னமாய்
இருந்த அவரை
கூசிக் குறுகி பார்த்த நான்
மெல்லச் சொன்னேன் ,
"இங்கிருந்து மூணாவது ,
தெக்கப் பார்த்த வீடு,
வாங்க, வாங்கணும் "
உள்ளுக்குள் சொல்லக் கொண்டேன்
"நாளையிலிருந்து கோலம் போட
பழகணும்"

01 October, 2012

புறப்படு பெண்ணே புவியசைக்க !!

புறப்படு  பெண்ணே புவியசைக்க
புரிந்தவன் கணவனானால்
காத்திரு கண்ணசைக்க.
இல்லையெனினும்  செயல்படு!
இன்னும் சிறிது காலமாகலாம்
புரிதல் தொடங்க.

"அனைவரின் " அங்கீகரிப்பும்
அன்பும் அரவணைப்பும்
எதிர் நோக்காதே !
சிறு எதிர்ப்பின்
எதிர்வினை கூட
உன்னை சுருங்கச் செய்யலாம் .

அளவிலா அன்பின்
அடிநாதம் ஆராயாதே!
எதிர்ப்பும் ஏன்  வந்ததென
ஏங்கிப் போகாதே .
இரண்டும் ஆகிப் போகும்
உன் குறை வளர்ச்சியின் காரணமாய் .

குருவியின் தலையோன்றே
குறிக்கோளாய்
உன் வலிமைகளனைத்தும்
குவிந்தால் தான்
பற்றியெரியும் தீக்காடாய்
பாலியல் துன்பம் பதற்பதறாய்.

புறப்படு பெண்ணே புவியசைக்க!
பிறப்பதல்ல பூப்பது தான்
உன் திறமை.
நிலம் கீறி வெளியேறி
நின்று நெடுக உயிர் தாங்கி
வெம்பி விடாமல் வந்தால் தான்
பூப்பூக்கும் உன் வலிமை
புவியசைக்கும் புறப்படு....
 

21 September, 2012

அருணா பாஸ்கரன் ....

அருணா பாஸ்கரன் யார் என்று சொல்கிறேன் என்று முந்திய பதிவில் சொல்லி இருந்தேன்.

சுதந்திர போராட்ட வீரர் எஸ். டி ஆதித்தன் தான் இவரது தந்தை. அவரது கனவில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வர் வந்து " உனக்கு குழந்தை வடக்கே உள்ளது " என சொல்லி இருக்கிறார். தினத்தந்தி அதிபர் ஆதித்தனார் இவரது சித்தப்பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் மற்றுமொரு சித்தப்பா. அருணாச்சலேஷ்வர் நினைவாகத் தான் தனக்கு வடக்கே இருந்து பெண் குழந்தை கிடைத்ததும் அருணா என்று பெயர் வைத்திருக்கிறார்.

இவர் சுதந்திரத்திற்கு பின் நடந்த முதல் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நின்று முதல் எம். பி ஆனார். ஒரு முறை டெல்லி செல்லும் பொது முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பிரேம்நாத் ஷர்மா என்பவர் இவரிடம் " எத்தனை குழந்தைகள்? " என்று கேட்க கலங்கியபடி தனக்கு குழந்தைகள் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஷர்மா மூன்றாவதாக குழந்தை உண்டாகி இருக்கும் தன்  மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தால் தத்து கொடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். அதே போல் பெண் குழந்தை பிறந்து எஸ். டி  ஆதித்தன் அவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் தான் அருணா.

நடிகர் சரத்குமார் இவரது அத்தை மகன். எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி இவரது சம்பந்தார். அருணா அவர்களது எழுத்துக்கள் நடக்கும் நிகழ்வை கண் முன் கொண்டு நிறுத்துவதால் " மேடம் , நீங்க கதை எழுதலாமே ?" என்றேன். எங்க  வீட்டில "அருணா, எழுதுறதை இத்தோட நிறுத்திக்கோ, இதுக்கு மேல நீ எழுதினா கதை விடுறேன்னு சொல்லிடுவாங்க " னு சொல்றாங்கன்னு சொல்ல "நானும் உங்களை கதை விடத்தான் மேடம் சொல்றேன் " என்றேன். சிரித்தபடியே பேச்சை முடித்துக் கொண்டோம் .

17 September, 2012

தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும்

நாட்டில தலை போகுற காரியங்கள் பல நடக்கும் போது நாம புத்தகத்தை வாசித்துக் கிட்டு அதை விமர்சனமும் செய்து கொண்டு இருக்கிறோமேனு  தோணினாலும் நிறைய விஷயங்களில் நமது மனதுக்கு சரி என்று படுவதை சொல்ல முடியாத காரணத்தால் பிரச்னை இல்லாத இந்த பகுதியை தொடருகிறேன்.

சில வருடங்கள் முன்னால விஜய்  டி வீ யில் பூர்வ ஜென்மத்தில் தான் அக்பரின் மனைவி என்று சொல்லி ஒரு நிகழ்ச்சி நடந்தது. நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அப்போவே எங்க அம்மா இந்த பொண்ணு எங்க பள்ளி மாணவி என்று சொன்னார்கள். அவர்கள் எழுதிய "தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும் "  என்ற புத்தகம் படிக்கக் கிடைத்தது. ஆசிரியர் அருணா பாஸ்கரன். ஆடலில் சிறந்த மாணவி, விளையாட்டில் ஸ்டேட் லெவல் மாணவி என்று பல விஷயங்கள் இருந்ததால் பல ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த மாணவியை என் தாய் நினைவில் நிறுத்தி வைத்திருந்தார்கள். 

ஆசிரியரின் தொலைபேசி எண் கிடைத்ததால் தொடர்பு கொண்டு என் தாயை நினைவு இருக்கிறதா எனக் கேட்டேன். "டீச்சரிடம் நான் ஏகப்பட்ட வசவு வாங்கிக் கட்டி இருக்கிறேன். அது எப்படி மறக்கும் " என்றார்கள். விஜய்  டி வீ நிகழ்ச்சியை பற்றிக் கேட்டப் போது  அமானுஷ்ய அனுபவம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என ஒரு நிகழ்சிக்காக கேட்டு இருக்கிறார்கள். உடன அருணா அவர்கள் தொடர்பு கொண்டு "அமானுஷ்ய அனுபவம் " என்றால் என்ன என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்கள் "சிலர் பேயை சந்தித்து இருப்பார்கள், சிலர் இறை சக்தியை. சிலருக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் கூட வந்து இருக்கலாம் " என்று சொல்லி இருக்கிறார்கள். அப்பொழுது தான் தான் பூர்வ ஜென்மத்தில் ஜ்யோதாபாய் அக்பராக இருந்ததாக தனக்கு அடிக்கடி தோன்றுவதாக கூறியதும் அந்த நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது. 

இறை பக்தி மிகுந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் அதனாலேயே பல முறை கடவுள்களையும் சித்தர்களையும் கனவில் கண்ட அனுபவங்களை இந்த புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள். நாம் பல விதமான கனவுகள் காண்கிறோம். ஆனால் கடவுளர்கள் கனவில் வருவது ரொம்ப அபூர்வமாகத் தான் இருக்கிறது. அண்மையில் கூட பாடகி சுதா ரகுநாதன் தனது கனவில் ஒரு தடவை கூட பிள்ளையார் வந்ததே இல்லை என்ற தன் ஏக்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் அருணா அவர்களுக்கு சித்தர்கள் கனவில் வருவது   வருடத்திற்கு இரு முறை நடப்பதாக இருந்திருக்கிறது. 

'பூர்வ ஜென்ம நினைவு என்பது சந்தோஷமாக அனுபவிக்கக் கூடிய ஒரு  இனிமையான உணர்வு அல்ல " என்கிறார் அருணா. தொண்டையில் எதுவோ சிக்கி துப்பவும் முடியாத விழுங்கவும் முடியாத துயரம் தான் அது" என்கிறார். 

தன் ஆசையாக ஒன்றை சொல்கிறார். கார் நிறைய போர்வைகளை அள்ளிச் சென்று டெல்லியில் குளிரில் உறங்கும் ஏழைகளுக்கு அவர்கள் அறியாமல் போர்த்தி விட வேண்டும் என்கிறார். அங்கே அவரது அழகான மனம் தெரிகிறது. இவரது கணவர் ரோட்டரி கவர்னராக இருந்த காலத்தில் கிடைத்த ஷால்களை சென்னையில் சிக்னலில் கார் நிற்கும் போது கையேந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கும் வழக்கம் இவருக்கு இருந்திருக்கிறது. 

இவரது பிள்ளைகள் இவரது அனுபவங்களை நம்பாமல் இருந்தாலும் , இவரது கணவர் ஆரம்பத்தில் கோபப்பட்டாலும் போகப் போக முழுமையாக நம்பி இருக்கிறார்கள். புத்தகத்தின் முன்னுரையாக  திரு பாஸ்கரன் "இந்த புத்தகத்தில் அவள் எழுதி இருக்கும் ஒவ்வொரு சம்பவமும் நிகழ்ச்சியும் உண்மையாக நடந்தவை. அவளின் ஒவ்வொரு நினைவுகளும் , உணர்வுகளும் அவள் உண்மையாக அனுபவித்தவை " என்று எழுதி இருப்பதே அதை உறுதி செய்கிறது. வித்தியாசமான் வாசிப்பு . 

அருணா அவர்கள் ஒரு பிரபலமான குடும்பத்தின் அங்கத்தினர். அவர் யார் என்பதை விரைவில் பகிர்கிறேன் 


09 September, 2012

குரல்களின் ஆகர்ஷம்

எனக்கு எப்போதுமே குரல்களின் இனிமையில் ஒரு ஈர்ப்பு உண்டு. கல்லூரி நாட்களின் ஒரே பொழுது போக்கு சாதனமாக இருந்த ரேடியோவில் இலங்கையின் வானொலி நிகழ்ச்சிகள்  கேட்டால், எல்லாம் பெற்ற ஒரு நிறைவு இருந்தது.  தமிழ் பாடல்களில் இடையே S.P.B சிரிக்கும் ஒரு சிரிப்புக்காக வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும் வானொலியின் அருகே ஓடி வந்த காலம் அது. பொற்காலம் !!


  படிப்பு முடிந்து வேலை வேட்டையை தொடங்கிய போது முதல் விண்ணப்பம் அனுப்பியது தொலை தொடர்பு துறைக்குத் தான். இரண்டு விதமான பணிகளுக்கு விண்ணப்பித்தேன். ஒன்று "ஆப்பரேட்டர் " பணி , மற்றொன்று எழுத்தர் பணி. மனதுக்குள் நான் விரும்பியது "ஆப்பரேட்டர் " பணி தான். அந்த வேலைக்கு காலையில் எழுத்துத் தேர்வு, மதியம் interview . ஒரு அறையில் அதிகாரி இருப்பார். மற்றொரு அறையில் இருந்து அவரது போன் காலை நாம் எடுத்து பேச வேண்டும். தொலைபேசியை பார்த்திருப்பதே அரிதான காலம் அது.  நான் பேசிய விதத்தையும் குரலையும் வைத்து உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் காலையில் ஒரு எழுத்துத் தேர்வு இருந்ததே. அதில் ஊத்திக் கொண்டு விட்டது. நாங்கள் வீட்டில் பெண்களாக இருந்த காலம். பொது அறிவில் பூஜ்யம். அதனால் மற்றொரு வேலையான  எழுத்தர் பணி கிடைத்தது. அதில் இருந்து முயற்சி செய்து தற்போது இருக்கும்  இடம் .

முகம் அறிமுகம் இல்லாமல் தொலைபேசியில் மட்டுமே பேசும் போது அவர்களுக்கு அவர்களின் குரல்களை வைத்து ஒரு உருவம் சமைத்திருப்போம். அநேகமாக நேரில் பார்க்கும் போது  இரண்டிற்கும் பெரும் இடைவெளி இருக்கும். ஆனால் அதன் தாக்கம் பெரிதாக இருக்காது. ஏற்கனவே குரல்களின் நாண்களால் கட்டப்பட்டிருப்பதால் உருவ ஏமாற்றம் நட்பில்  தொய்வு ஏற்படுத்தாது.காதலிலும் கூட. தொலைபேசியில் மட்டுமே பேசிப் பழகி திருமணம் முடித்தவர்கள் அன்று எங்கள் துறையில் இருந்தார்கள்.

வீட்டில் குழந்தை இருந்ததால் தூங்கும் நேரம் கண்டபடி மாறி இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாளில் இரவு பதினோரு மணிக்கு FM  வைத்தேன். அதில் கேட்ட ஒரு குரல் தான் இந்த பதிவு எழுதக் காரணம்.  "காற்று மண்டலத்தை கற்கண்டு மண்டலமாக மாற்றும் பாடல் தேர்வுடன் 'யாழ் ' சுதாகர் " ஆரம்பமே ஈர்த்தது. சிறப்பான பாடல் தேர்வு. நாம் மறந்து போன நல்ல நல்ல பாடல்களின் "தொகுப்புத் தோரணம் "(இதுவும் அவரது சொல்லாடல் தான்) "ராக கலா ஜோதி " இளையராஜா , ஏழிசை மன்னன் T .M . சௌந்தரராஜன் என ஒவ்வொருவருக்கும் ஒரு அடை  மொழியோடு அறிமுகம். பாடல்களின் ராகங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் உத்தி. இலங்கைத் தமிழ் கொஞ்சு தமிழாய் கிளம்பியதும் அந்தக் கால கல்லூரி நாட்களுக்கு பயணப்பட்டேன்.

"மலரும் நினைவுகளுக்கு மரியாதை தரும் விதமாக அந்த நாள் ஞாபகம் "
கே.எஸ் ராஜாவின் குரலுக்காக தவமிருந்த கல்லூரிக் காலம். குரல்களைக் காதலித்து, குரல்களில் உருகி குரல்களுக்காகவே வாழ்ந்த காலம். பல பத்தாண்டுகளுக்குப்பின்னும், டெக்னாலஜி பெரிதாக வளர்ந்த பின்னும் , அதே போல குரல்களில் மயங்கும் தன்மை மாறாமல் இருப்பது தான் வானொலியின் சிறப்பு.

எனக்குள் ஒரு மெல்லிய சோக நீரோட்டம். கொஞ்சம் கொஞ்சமாக இலங்கை இனிமை மாறி , இன்னும் கொஞ்ச நாளில் "யாழ்" சுதாகர் "நெல்லை"த்தமிழ் ஜோதியில் கலந்து விடுவாரோ?  கலந்து விடாமல் தன் குரலின் தனித்தன்மையை காத்துக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்.!!

31 August, 2012

என் செல்லமே !! என் செல்லமே !!

ஒரு நீண்ட நெடும் இடைவெளி.
செய்யும் தொழிலை திருத்தமாக செய்வோமே என கொஞ்சம் விலகி இருந்தேன்.
இதோ ஒரு சின்ன கவிதையோடு மறு விஜயம்.
தாய்க் கூடு தேடி என்னை வெறுமையில் விட்டுச் சென்ற பேரனின் தாக்கம் தான் கவிதையின் கருப் பொருள்.
                                                       
                                                           
இனி கவிதை(!?!)

எரிய மறந்த இரவு விளக்கும் ,
ஈரம் உலர்ந்த பக்கத்து படுக்கையும்,
                            ஆடாது அசையாமல் நின்ற
                                         தொட்டில் கயிறும்,
முகம் சுழித்து  எழும் உன்
விம்மல் கரைந்த காற்றும்,
                             விரல்களின் நிமிண்டலில்
                             கலகலத்து எழும் உன் சிரிப்பொலியும்,
உதடுகளின் முணுமுணுப்பில்
உறைந்த என் தாலாட்டுப் பாட்டும்,
                              என்னைப் போலவே
                             ஊமையாகி நின்றன .
என் செல்லமே !!
 என் செல்லமே !! 
                              உன் தாய் வீடு செல்ல நீ
                              தயாரான போது .

                                    சிறு குழந்தைகளின் வளர்ப்பு பற்றி கேட்டு அறிந்த சிறு குறிப்பு உங்கள் உதவிக்கு.
                                    காலையில் ஐந்து நிமிடம் குழந்தையின் இரு புருவங்களுக்கு மத்தியில் நாம் பொட்டு  வைக்கும் இடத்தை நமது ஆள் காட்டி விரல் கொண்டு மெல்ல அழுத்தி விட வேண்டும். மூளையின் ஆரோக்கிய வளர்ச்சியை அதிகரிக்கும்.
                                    பத்து விரல்களின் நுனியையும்  கொஞ்ச நேரம் மெல்ல அழுத்தி விட வேண்டும். சிறு நீர், மலம் போன்ற கழிவுகள் நன்கு வெளியேற உதவும்.
                                    அதைப் போலவே கால்களின் பத்து விரல் நுனிகளையும் பிடித்து விட வேண்டும். காது மடல்களின் ஓரங்களில் மெல்ல பிடித்து விட வேண்டும் . வந்தால் குழந்தையின்  ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும் .
                                  நன்றி மீண்டும் சிந்திப்போம்!!

09 July, 2012

"மறு பக்கம் " புத்தக விமர்சனம்

"மறு பக்கம் " ஆசிரியர் பொன்னீலன் சாஹித்ய  அகடமி விருது பெற்றவர்.

ஆசிரியர் பற்றி சில வரிகள் :
"அண்ணாச்சி" எனக்கு 1980 இல் அறிமுகமானவர்.. அழகிய முகத்தில் "மீசை " என்னும் கிரீடம் அணிந்திருப்பவர். அந்த பெரிய முறுக்கு மீசைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் குழந்தைத்தனம் தவழும் முகம்.. கலை இலக்கிய பெரு மன்றம் நடத்திய ஒரு பயிற்சி முகாமில் தான் அறிமுகம்.. உலகில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று .சொல்வார்கள். அப்படிப்பட்ட எழுவரில் என்னை போல் இருக்கும் மற்றொருவர் அண்ணாச்சியின் மூத்த மகள் அமுதா.. அதுவே அவருடன் என்னை இன்னும் இறுக்கி இணைத்தது.. 1972 இல் மறு பக்கம் நாவலுக்கான தகவல்களை தேடத் தொடங்கி .இருக்கிறார். இடையில் வேறு சில பணிகள் . கடந்த ஆண்டு புத்தகம் வெளியானது..

இனி நாவலை பற்றி :
18 , 19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த "தோள் சீலை " போராட்டத்தை பற்றி அறிந்த பொன்னீலன் அவர்கள் அதை பற்றிய தகவல்களை 1972 முதல் சேகரிக்க .தொடங்குகிறார் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி நூலகம்,, சென்னை கன்னிமரா நூலகம் இவருக்கு பேருதவி செய்கின்றன. அதையும் 20 ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்ட உருவாக்கப் போராட்டத்தையும் இணைத்து "மறு பக்கம் " என்ற இந்த நாவலை எழுதி  வெளியிட்டுள்ளார்

1982 இல் நடந்த மண்டைக்காடு மதக் கலவரத்தை தனியாக பார்க்காமல் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக பார்க்கிறார்.. இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன் உள்ள காலத்திற்கும்  பிந்திய கால கட்ட நிகழ்சிகளுக்கும் இடையேயான ஊடாட்டம் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் குழப்பமாக .இருந்தது அந்தந்த கால கட்டங்களின் கதா பாத்திரங்களின் பெயர்களை அழுத்தமாக பதித்துக் கொண்டதால் அவருடனேயே பயணிக்க முடிந்தது..

மண்டைக்காடு கலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ள வரும் சேது  தன் தாயை பற்றியும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறான். பள்ளி வாத்தியாரான தன் தந்தை பள்ளி மாணவியான தன் தாயை மணந்து கொண்டதால் அதைப்பற்றி வெளிப்படையாக யாரிடமும் விசாரிக்க முடியாமல் திணறுகிறான். தன் தாயைப் போன்ற ஜாடையுடைய ஒரு பெண்ணை பின் தொடர்ந்து விசாரிக்கும் போது  அவர் தான் தன்  சித்தி என்பதை யாருடைய உதவியும் இல்லாமல் கண்டு பிடிக்கும் இடம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.

கலவரத்துக்கு பயந்து மக்கள் கடலுக்குள் சாடும் பொது கிறிஸ்துவத்தில் மோயீசன் செங்கடலை பிளந்து ஜனங்களை காப்பாற்றியதை குறிப்பிட்டு அரபிக்கடல் ஒரு வேளை அடி பணிய மறுத்து விட்டதோ என்கிறார். இப்படி சில இடங்களில் ஆசிரியர் தன் கடவுள் நம்பிக்கையின்மையை தொட்டுச் செல்கிறார்.

மீனவர்களுக்கும் நாடார்களுக்குமான இனக் கலவரம் அப்படியே திசை திருப்பப்பட்டு இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான மதக் கலவரமாக மாற்றப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார். "கடலில்  தாழ்த்த " அழைத்து வருபவனை புத்திசாலித்தனமாக காப்பாற்றும் இடத்தில்  இரண்டு இனத்திலும் இளைஞர்கள் வேகத்துடனும் பெரியவர்கள் விவேகத்துடனும் வளைய வருவதை பார்க்க முடிகிறது.

வரலாற்று நிகழ்வுகளை  அழுத்தமாக பதிய வைத்த ஒரு நாவல் திடும்மென முடிந்தது போல் இருந்தது. இன மதக் கலவரத்துக்கு முடிவு ஏது அது தொடர்கதை தான் என்பதனால் இருக்கலாம். கொஞ்சம் பெரிய புத்தகம் தான் மிரண்டு விடாதீர்கள். வாசிக்க தொடங்கியதும் ஆசிரியரை அலைபேசியில் அழைத்தேன். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இருப்பதாகவும் நாவலை  முடித்து விட்டு பேசும் படியும் கூறினார். விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன். பிரார்த்தனையில் ஆசிரியருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் . எனக்கு இருக்கிறதே!!

18 June, 2012

பிரசவமான தாய்க்கான ஸ்பெஷல் உணவு.



ஏற்கனவே எழுதிய இரண்டு பதிவுகளின் தொடர்ச்சி தான் இது .
குழந்தைக்கு பாலூட்ட இந்த நாட்களில் தாய்க்கு அதிகப்படியான கவனம் எடுத்து உணவு அளிக்க வேண்டும்.

குறிப்பாக சில உணவு வகைகள் தாய்ப்பால் அதிகரிக்க ஏற்றவற்றை கீழே தருகிறேன். இவை தொடர்ந்து சாப்பிடா விட்டாலும் முதல் நாலைந்து மாதங்கள் சாப்பிட்டால் அதன் பின் நாம் எடுத்துக் கொள்ளும் தினசரி உணவே போதுமானது.

காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட வேண்டும்.
முக்கால் தம்ளர் பாலில் பத்து பெரிய  வட பூண்டுகளை மெல்லியதாக நறுக்கி போட்டு வேக வைக்க வேண்டும். பால் கால் பாகம் ஆகும் போது ரெண்டு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரைத்தூள் போட்டு இறுகி வரும் போது  இறக்கி வைக்கவும். சூப்பரா பால் கோவா போல இருக்கும். என்ன ஒண்ணு   பூண்டு மெல்லும் போது கொஞ்சம் கஷ்டம். பாப்பாவுக்காக இது கூட செய்யலைனா எப்படி?

காலை உணவு :
காலையில் ரஸ்க் அல்லது ப்ரெட் (இரண்டில் ரஸ்க் தான் சிறந்தது) ஒரு பெரிய டம்ளர் பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் பால் கொடுக்கிறோமோ அப்பொழுது எல்லாம் மதர்ஸ் ஸ்பெஷல் ஹார்லிக்ஸ் ஒரு   கரண்டி சேர்த்துக் கொடுப்பது நல்லது.

இந்த உணவு மலம் கட்டும் தன்மையுள்ளதால் நார்ச்சத்து மிகுந்த பழங்களை முக்கியமாக ஆரஞ்சு தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதிய உணவு:
மதிய உணவுக்கு சைவ வகையில் பாசிப்பருப்பு, பூண்டு, சுண்ட வத்தல், அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
                           சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு செய்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
                           சுண்ட வற்றல் குழம்பு வைத்துக் கொடுக்கலாம்
                           முட்டை சாப்பிடுபவர்கள் வழக்கமாக முட்டை குழம்பு செய்வது போல் செய்து தேங்காய் அரைக்கும் பொது அதனுடன் வறுத்த சுண்ட வற்றல் ஏழு (அ ) எட்டு வறுத்துப் போட்டு அரைக்கலாம்.
                           அசைவ உணவுக்காரர்கள் மீன் குழம்பு சேர்க்கலாம். அதிலும் "பிள்ளை சுறா " மீன் மிகவும் சிறந்தது. பிள்ளை சுறா மீன் பாலூட்டும் தாய் மார்கள் மட்டும் அல்லாமல் பெண்களுக்கு குறுக்கு வலி போன்ற வற்றிக்கும் நல்லது என்கிறார்கள் .
                          பிள்ளை சுறா "மீன்" மட்டும் அல்லாமல் கருவாடும் கொடுக்கலாம். கருவாட்டை, மிளகு சீரகம் அரைத்து குழம்பாகவோ, வெங்காயம் தக்காளி சேர்த்து வறுத்தோ கொடுக்கலாம்.
                          பொதுவாகவே குழந்தை பெற்ற தாய்க்கு புண் ஆற வற்றலைக் குறைத்து மிளகு அதிகம் சேர்க்க வேண்டும். சமையலில் நாம் சேர்க்கும் மஞ்சளும் நெய்யும் கூட புண்ணை  விரைவில் ஆற்றும்.
                         ஆட்டின் ஈரலை குழம்பு வைத்துக் கொடுக்கலாம். ரத்தம் ஊறும் . ஈரல் குழம்பு வைக்கும் போது  கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், சரியான நேரத்தில் இறக்கி விட வேண்டும். இல்லையென்றால் அது ஈரல் ரப்பர் ஆகி விடும்.

மாலை உணவு:
                        மாலையில் ஒரு உணவு கொஞ்சம் அதிகப்படியோ என்று நினைக்காதீர்கள். பாலூட்டும் தாய்க்கு பகாசுரப் பசி தான். பட்டர் பன்னும் ஒரு பெரிய தம்ப்ளர் பாலும் தினசரி கொடுக்க வேண்டும்.

இரவு உணவு :
                       இரவில் சாதம் கொடுப்பது தான் நல்லது. மதியம் வைத்த குழம்பை ஊற்றி எதோ ஒரு காய் வைத்துக் கொடுக்கலாம்.
                       இரவு 11 மணிக்கு மறுபடியும் ஒரு தம்ளர் பால் குடிக்க வைக்க வேண்டும்.
                       பாலூட்டும் தாய் இரவில் அதிகம் சோர்வு அடைவாள் .அதிலும் ஆண் பிள்ளை என்றால் சோர்வு இன்னும் அதிகம். அதிகாலை 4 மணிக்கு ஹார்லிக்ஸ் வெந்நீரில் கலந்து கொடுக்கவும். அந்த நேரத்தில் தாய்க்கு அது அமுதமாய் இருக்கும்.

                                       எனக்கு தெரிந்த அளவில் சொல்லி இருக்கிறேன். தெரியாதவர்களுக்கு பயன்படலாம். தெரிந்தவர்கள் விட்டுப் போனவை ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இதற்கு சம்பந்தமான முந்திய இரண்டு பதிவுகளை காண இங்கே செல்லவும்:


25 May, 2012

சுகமான பயணம் -II


சுகப் பிரசவத்திற்கு அனைவருக்கும் ஆசை தான் 
குழந்தை பிறந்திருப்பதாக சொன்னதும் முதல் கேள்வி நார்மலா? சிசேரியனா ? இன்று சிசேரியனே நார்மலாகிப் போனது ஒரு பக்கம்.
ஆனால் அறிவியலின் வளர்ச்சியால் மூன்றாம் நாளே எழுந்து உட்கார சொல்லி விடுகிறார்கள். அங்கேயும் கட் அண்ட் பேஸ்ட் தான். முன்பு ஆப்பரேஷன் செய்து குழந்தை பெற்றதன் அடையாளமாய் வயிற்றில் ஒரு பெரிய புழுத் தையலை சுமக்க வேண்டும். இன்று அப்படி இல்லை அடி வயிற்றின் ஒரு பக்கமாய் ஒரு ஒட்டலின்  அடையாளம் அவ்வளவு தான். ஆனால் அந்த தையலில் நீர் வைத்து புண்ணாகி விட்டால் தொல்லை.அதை தவிர்க்க குளிப்பதற்கு முன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி விட்டால் நீர் அதிகம் ஒட்டாமல் ஓடி விடும். மருத்துவர் சொல்லும் மருந்தையும் தவறாது தடவி வந்தால் தப்பித்து விடலாம் கூடுதல் வேதனையிலிருந்து


ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுத்தால் மூன்று நாட்களுக்கு தாய்க்கு சலைன் தான் ஏறும். சிலருக்கு அந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பதில்லை. இருந்தாலும் குழந்தையை தாயிடம் விடுங்கள் . வேற எதுவும் கொடுக்க  வேண்டாம் என்கிறார்கள்.   அழுது கத்தித் தீர்க்கும் குழந்தையை காணச் சகியாமல் நர்சிடம் கேட்டு டின் பால் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சங்கில் புகட்டினோம் திடீரென டாக்டர் வந்து பார்த்திட்டால் வாங்கிக் 
கட்டுவோம். "குடிக்க குடிக்க தான் வரும் . இந்தப் பால் குடுக்கிறதுக்கு யார் சொன்னா?" என்று கோபப்படுவார்கள். நமக்கு உதவி செய்த நர்சை காட்டிக் கொடுக்காமல் "பால் வரும் வரை குழந்தை என்ன செய்யும் என்று நம்முள் எழுந்த கேள்வியை உள்ளேயே அமிழ்த்தி அமைதியாய் 
நிற்க வேண்டும்.   இளங்காலை சூரியக் குளியலுக்காக நிற்கும் போது பக்கத்தில் விசாரித்தால் அங்கேயும் அதே கதை தான் என்று தெரிந்ததும் கொஞ்சம் மனம் தைரியம் அடையும் 
தொடர்ந்து குழந்தை முயற்சி செய்ய தாய்க்கும் இயல்பான உணவு கொடுக்க ஆரம்பித்ததும் பால் சுரக்கத் தொடங்கும். அதற்குள் பாட்டிலை பழக்கி விடாதீர்கள் குழந்தை தாயிடம் குடிக்க முரண்டு பிடித்து விடும். சங்கில் கொடுப்பது சர்க்கஸ் வித்தை தான். ஆனாலும் அது தான் நல்லது. 

பிறந்த ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு நாலே வேலை தான். பால் குடிப்பது, தூங்குவது, கக்கா , உச்சா போவது. ஆனால் அவர்களின் தேவையை சொல்ல அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி அழுகை தான். நாம் தான் எந்த அழுகை எதற்கானது என்று புரிந்த நடக்க வேண்டும். நாம் பொதுவாக அழுதாலே பசி என்று தான் புரிந்து கொள்கிறோம் கொஞ்சம் அக்கறையோடு கவனித்தால் ஒவ்வொரு தேவைக்கும் அதன் உடல் மொழி நமக்கு புரிந்து விடும். கக்கா போக தவிக்கும் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டு ஆட்டு
என ஆட்டி விட்டு "என்ன ஆட்டினாலும் தூங்குதா பாரு " என குறைப்பட்டால் சரியாக இருக்குமா? அதன் உடல் மொழி புரிந்து விட்டால் குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி ஒரு சீட்டில் ப்ரீ ஆக படுக்க போட்டால் அதன் வேலை சுலபமாய் முடியும் குழந்தையை சுத்தம் செய்து தொட்டிலில் போடுங்கள் ஐந்தே நிமிடங்களில் உறங்கி விடும்.

பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வழக்கம் அநேகம் பேரிடம் இல்லை. கண்டிப்பாக இடையிடையே தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறந்த சில மாதங்களுக்கு அடிக்கடி கக்கா போகும் அதனால் உடம்பில் உள்ள நீர் சத்தை சமன் செய்து கொண்டே இருக்க வேண்டும். பாலூட்டும் தாய் தன் உணவில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தால் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும்.  சேராத உணவினை மன உறுதியோடு தவிர்த்திட வேண்டும். சேரும் உணவினை பிடிக்கவில்லை என்றாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

(பாலூட்டும் தாய் உண்ண வேண்டிய உணவினை அடுத்த பதிவில் சொல்கிறேன் )


23 May, 2012

சுகமான பயணம்




இன்னும் கொஞ்ச நாட்களுக்கு எங்க வீட்ல குட்டி பாப்பா இருக்கிறதால நான் எழுதுவதும் அது சம்பந்தமாவே தான் இருக்கும் 
தாய்மை என்பது வரம் அதை எக்காரணம் கொண்டும் தள்ளிப் போடக் கூடாது.  காதல் திருமணம் இன்னும் பிற காரணங்களால் குடும்பத்தை பகைத்து தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய தாய்மைக் காலத்தில் தனிமையில் துயருறும் அன்பு உள்ளங்களுக்கு என் இந்த பதிவு உதவலாம். மற்றவர்களுக்கு இது தெரிந்த விஷயமாக இருந்தால் ஸ்கிப் செய்து விடலாம்.

கர்ப்ப காலத்தில் நாம் சேகரிக்கும் சக்தி குழந்தை நல்ல எதிர்ப்பு சக்தியுடன் வளைய வர உதவும். எனவே அடிக்கடி கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏழாம் மாதம் தொட்டே Mothers special ஹா ர்லிக்ஸ் குடிக்கத் தொடங்கலாம்.  குழந்தைக்கு பாலூட்டும் போது அதன் பலன் தெரியும்.
பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் வித்தியாசம் தெரியாமல் பெரியவர்கள் உடன் இல்லாத போது  பயப்பட நேரிடும். சாதரணமாக இளம் பெண்கள் பிரசவ வலி என்பது வயிற்றில் ஏற்படும் என்று எதிர்பார்த்து
அடி முதுகில் (குறுக்கு) ஏற்படும் வலியை அலட்சியப் படுத்த நேரிடலாம். உண்மையில் பிரசவ வலி என்பது குறுக்கில் தான் தொடங்கும். அது பொய் வலியாய்  இருக்கும் பட்சத்தில் கீழே சொல்லிய கஷாயம் குடித்தால் சரியாகி விடும். 
சாரண வேர், குறுந்தட்டி வேர், தலா 10 கிராம் வாங்கி வீட்டில் வைத்திருக்கவும். ஒரு பெரிய தம்ளர் நீரில் கொஞ்சம் சாரண வேர், குறுந்தட்டி வேர், கொஞ்சமே கொஞ்சம் சுக்கு மூன்றும் மிக்சியில் லேசாக பொடித்து போட்டு கொதிக்க வைத்து கால் தம்ளர் அளவு சுண்ட வைக்கவும். அந்த கஷாயத்தை வடித்து குடித்தால் பொய் வலி போயே போகும். தொடர்ந்து வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நலம்.

இன்று எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்து விடுவதால் கர்ப்பிணி பெண்களுக்கு கடின வேலைகள் குறைந்து விட்டது. அதுவே சுகப் பிரசவத்திற்கு வழியை தடை செய்கிறது. 
.      மாலையில் முடிந்த அளவு நடப்பது, தேய்ந்த விளக்குமாற்றால் (புதிய விளக்குமாறு குனிய வைக்காது)பெருக்குவது , துவைத்த துணிகளை குனிந்து நிமிர்ந்து அலசுவது என சின்ன சின்ன வேலைகள் செய்யும் போது  வயிற்றின் தசைகள் அசைந்து வயிற்றினுள் இருக்கும் குழந்தை திரும்பி சுகப் பிரசவத்துக்கான பொசிஷனுக்கு வர உதவும். 

ஒரு துளி கரு குழந்தையாய் உருவாகும் அற்புதத்தை சிந்திப்பவர்கள் யாரும் கடவுளை நம்பாமல் இருக்க மாட்டார்கள். மிகுந்த இறை பக்தியோடு கர்ப்ப காலம் என்னும் இந்த நெடும் பயணத்தை சுகமாய் முடித்து வைக்க பிரார்த்தனை செய்வது  அவசியம். 
மனதை தைரியத்தோடும், மகிழ்ச்சியோடும் வைத்திருங்கள். 

(  மழலையை மலர்ச்சியோடு வளர்ப்பது பற்றி அடுத்து சொல்கிறேன் )

10 May, 2012

ஒரு மஞ்சள் நிலவு !!



நகருக்குள் முக்கியமான இடத்தில் அந்த மருத்துவமனை.
இளங்காலை நேரம் 
அதைக் கடந்து செல்லும் பஸ்ஸில் பயணிப்பவர்கள் தலை எல்லாம் குடியரசு தின பரேட் போல் வலது புறம் திரும்புகிறதே என பார்த்தால் 
அந்த மருத்துவமனை உள்வாசல் ஓரம் ஒவ்வொரு பெண்மணியும் கையில் ஒரு சிறு துண்டும் அந்த துண்டின் மேல் மலர்ந்த புஷ்பமாய் சிசுக்களும்
இளங் காலை வெயிலிலிருந்து  கிடைக்கும் வைட்டமின் 'D'  சத்துக்காக அங்கு அப்படி ஒரு ஏற்பாடு .

என் மகள் என்னைப் போலவே மாநிறம் தான். என் கணவர் அவளை செல்லமாக "கருப்பட்டி' என்று அழைப்பார். அவள் சோர்வும் புன்சிரிப்புமாய் அவள் தந்தையை பார்க்க அவர், "   ஏ!! கருப்பட்டி ! எப்படி இவ்வளவு வெள்ளையாய் பாப்பா வந்துச்சு " என்றார் 
உடனே அவள் கணவர் " இப்போ தான் எல்லா பிள்ளையும் வெள்ளையா தானே பிறக்குது " என்றார். அவர் யதார்த்தமாக சொன்னாலும் எனக்கு ஒரு விஷயம் நெருடியது.   அங்கு வந்த நர்சிடம் 
"காலையில் இளம் வெயிலுக்காக வைத்திருக்கும் எல்லா குழந்தைகளும் லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கிறார்களே" என்றேன். 
"ஆமாங்க , முந்தி எல்லாம் கர்ப்பிணி பெண்கள் சேலை கட்டி போவாங்க . சூரிய வெளிச்சம் வயிற்றில் பட்டு குழந்தைக்கு வேண்டிய சத்து கர்ப்பத்திலேயே கிடைத்து விடும். இப்போ தான் எல்லா பொண்ணுங்களும் சுடிதார்ல இருக்குது . சூரிய வெளிச்சம் எங்கே வயித்தில படுது. அதான் பிறந்த பிறகு தனியா கவனிக்க வேண்டி இருக்குது"
என்றார்கள். 
அது காரணமாக இருக்குமா ? அப்படி என்றால் வட இந்திய பெண்களின் பொதுவான உடையே சுடிதாராக தானே இருக்கிறது. இருந்தாலும் பிறக்குமபோது மஞ்சள் நிலவாக இருந்த குழந்தை நாளாக நாளாக இயல்பான நிறத்துக்கு வரும் போது அவர்கள் சொல்வதும் சரிதானோ என்ற ஐயம் வரத் தான் செய்கிறது.  

08 May, 2012

வன வாசம் !!

 
என் மகள் முகத்தில் மகிழ்ச்சியோடும்,வயிற்றில் குழந்தையோடும் எங்கள்வீடு வந்துஇறங்கினாள்.  இது வரை அவளை வளர்த்தது,படிக்க வைத்தது,மணமுடித்துக் கொடுத்தது     எல்லாம் பெரிய விஷயம் இல்லை இன்று தாயாய் வந்து இருக்கும் அவள் தன்  மடி சுமை  இறக்க என்னால் ஆன உதவி செய்ய வேண்டும்.  என்னை சுற்றி இருக்கும் என் விருப்பத்துக்குட்பட்ட விஷயங்களின் ஏற்ற தாழ்வுகள்  என் மகளை பாதிக்க கூடாதென நினைத்ததால் தான் இந்த நீண்ட விடுமுறை. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். எனது சந்தோஷ , துக்க உணர்வுகளை  பதிவுலகத்தோடு பகிர்ந்து கொள்ள முடியாமல் நீருக்குள் அமிழ்த்தப்பட்ட ஒரு வித மூச்சுத் திணறலோடு தான் இருந்தேன்.இப்பொழுது ஒரு ஆசுவாசம் . 
நான் தாய்மை உற்றகாலம் ஒரு சோதனைக் காலம்.அனுதினமும் கண்ணீரோடு தான்கழிந்தது. அதன் காரணங்கள் பலவாய் போனாலும் பிறந்த குழந்தைஅழுதுஅழுச்சாட்டியமசெய்தபோது ஒரு வயதான பெண்மணி சொன்னது என் மனதில்ஆழப்பதிந்திருந்தது."இதுக்காகத்தான் கர்ப்பிணி எந்நேரமும் சந்தோஷமாய் இருக்கணும்னு சொல்றது. நமது சந்தோசம் , கோபம் , துக்கம் எல்லாம் குழந்தையையும் தொற்றிக் கொள்ளும். "  . கூடிய வரை என் மகள் சந்தோஷமாகவே இருக்கும் படி பார்த்துக் கொண்டேன். 

ஒன்பது மாதங்கள் முடியும் தருவாயில் இறந்த குழந்தைகளின் நினைவுகள் அச்சுறுத்திக் கொண்டே இருந்ததால் அடிக்கடி குழந்தையின் துடிப்பை அவள் கவனிக்க வேண்டும் என்பதற்காக "என்ன,என் பேரன் என்ன சொல்றான்.முட்டுறானா?விக்குறானா?"என்று கேட்டுக் கொண்டே இருப்பேன்.அன்று அவள் "அம்மா! எனக்கு துடிப்பு வழக்கம் போல இல்லை. குறைவாய் இருப்பது போல் இருக்கிறது" என்று சொன்னதும் பதறிப் போய் மருத்துவமனை கூட்டிச் சென்றோம் . ஸ்கான் செய்த மருத்துவர் பயப்படத் தேவை இல்லை ஆனாலும் சுகப் பிரசவத்துக்கு வாய்ப்பு குறைவு தான் என்றார். மருத்துவமனையில் இருந்த அந்த இரண்டு நாட்களும் கேள்விப்பட்ட எதிர்மறையான நிகழ்வுகள் எல்லாம் மனதில் சுனாமியாய் அலையடித்துக்கொண்டிருக்க   முகத்தை மகிழ்வாய் வைத்துக் கொண்டே மகளுக்கு தைரியம் கொடுத்துக் கொண்டு இருந்தேன். "ஒரு நாளைக்கு உலகத்தில் எத்தனை குழந்தைகள் பிறக்கின்றன. இது அது போல்சாதாரணநிகழ்வு என்று எண்ணிக் கொள்ளம்மா தைரியம் பிறக்கும்" என்றேன்.     
 
உறவுகள் எல்லாம் லேபர் வார்ட் வாசலில் கூடி இருக்க நானும் என் தாயும் ஒரு புறம் அமர்ந்து பிரார்த்தனை செய்த படி இருக்க,  இரவு தரும் அமானுஷ்ய பயம் எல்லோரையும் ஒரு வித கலக்கத்தில் ஆழ்த்தி அச்சுறுத்திக் கொண்டு  இருக்க அந்த இரவைக் கிழிக்கும் மின்னலாய் குழந்தையின் அழு குரல். அனைவரும் ஒருவாறு ஆசுவாசப் பட என் மனம் மட்டும் "என் குழந்தை எப்படி இருக்கிறதோ " எனத் துடித்துக் கொண்டு இருந்தது. வெளியே வந்த மருத்துவர் என் மருமகனை அழைக்க கிடைத்த இடைவெளியில் எட்டிப் பார்த்தோம். டேபிளின் மேல் ரோஜாக் குவியலாய் எங்கள் செல்வம். வெளியே வந்த மருத்துவரிடம் "டாக்டர் ! என் பொண்ணு... " என "கவலைப்படாதீங்கம்மா. ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க " என்றார். நான் என் கணவனின் கையை அழுத்தமாக பற்றிக் கொண்டேன்.

பிறந்த சில நிமிஷங்கள் கழித்து  அழுத  காரணத்தால்குழந்தையை  நர்ஸ் ICU வுக்கு எடுத்து செல்ல , அங்கே தாய்க்கும் மகளுக்குமான வன வாசம் மெல்ல முடிவுக்கு வந்தது