Bio Data !!

18 June, 2012

பிரசவமான தாய்க்கான ஸ்பெஷல் உணவு.



ஏற்கனவே எழுதிய இரண்டு பதிவுகளின் தொடர்ச்சி தான் இது .
குழந்தைக்கு பாலூட்ட இந்த நாட்களில் தாய்க்கு அதிகப்படியான கவனம் எடுத்து உணவு அளிக்க வேண்டும்.

குறிப்பாக சில உணவு வகைகள் தாய்ப்பால் அதிகரிக்க ஏற்றவற்றை கீழே தருகிறேன். இவை தொடர்ந்து சாப்பிடா விட்டாலும் முதல் நாலைந்து மாதங்கள் சாப்பிட்டால் அதன் பின் நாம் எடுத்துக் கொள்ளும் தினசரி உணவே போதுமானது.

காலையில் வெறும் வயிற்றில் இதை சாப்பிட வேண்டும்.
முக்கால் தம்ளர் பாலில் பத்து பெரிய  வட பூண்டுகளை மெல்லியதாக நறுக்கி போட்டு வேக வைக்க வேண்டும். பால் கால் பாகம் ஆகும் போது ரெண்டு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரைத்தூள் போட்டு இறுகி வரும் போது  இறக்கி வைக்கவும். சூப்பரா பால் கோவா போல இருக்கும். என்ன ஒண்ணு   பூண்டு மெல்லும் போது கொஞ்சம் கஷ்டம். பாப்பாவுக்காக இது கூட செய்யலைனா எப்படி?

காலை உணவு :
காலையில் ரஸ்க் அல்லது ப்ரெட் (இரண்டில் ரஸ்க் தான் சிறந்தது) ஒரு பெரிய டம்ளர் பாலுடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதெல்லாம் பால் கொடுக்கிறோமோ அப்பொழுது எல்லாம் மதர்ஸ் ஸ்பெஷல் ஹார்லிக்ஸ் ஒரு   கரண்டி சேர்த்துக் கொடுப்பது நல்லது.

இந்த உணவு மலம் கட்டும் தன்மையுள்ளதால் நார்ச்சத்து மிகுந்த பழங்களை முக்கியமாக ஆரஞ்சு தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதிய உணவு:
மதிய உணவுக்கு சைவ வகையில் பாசிப்பருப்பு, பூண்டு, சுண்ட வத்தல், அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
                           சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு செய்து நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
                           சுண்ட வற்றல் குழம்பு வைத்துக் கொடுக்கலாம்
                           முட்டை சாப்பிடுபவர்கள் வழக்கமாக முட்டை குழம்பு செய்வது போல் செய்து தேங்காய் அரைக்கும் பொது அதனுடன் வறுத்த சுண்ட வற்றல் ஏழு (அ ) எட்டு வறுத்துப் போட்டு அரைக்கலாம்.
                           அசைவ உணவுக்காரர்கள் மீன் குழம்பு சேர்க்கலாம். அதிலும் "பிள்ளை சுறா " மீன் மிகவும் சிறந்தது. பிள்ளை சுறா மீன் பாலூட்டும் தாய் மார்கள் மட்டும் அல்லாமல் பெண்களுக்கு குறுக்கு வலி போன்ற வற்றிக்கும் நல்லது என்கிறார்கள் .
                          பிள்ளை சுறா "மீன்" மட்டும் அல்லாமல் கருவாடும் கொடுக்கலாம். கருவாட்டை, மிளகு சீரகம் அரைத்து குழம்பாகவோ, வெங்காயம் தக்காளி சேர்த்து வறுத்தோ கொடுக்கலாம்.
                          பொதுவாகவே குழந்தை பெற்ற தாய்க்கு புண் ஆற வற்றலைக் குறைத்து மிளகு அதிகம் சேர்க்க வேண்டும். சமையலில் நாம் சேர்க்கும் மஞ்சளும் நெய்யும் கூட புண்ணை  விரைவில் ஆற்றும்.
                         ஆட்டின் ஈரலை குழம்பு வைத்துக் கொடுக்கலாம். ரத்தம் ஊறும் . ஈரல் குழம்பு வைக்கும் போது  கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், சரியான நேரத்தில் இறக்கி விட வேண்டும். இல்லையென்றால் அது ஈரல் ரப்பர் ஆகி விடும்.

மாலை உணவு:
                        மாலையில் ஒரு உணவு கொஞ்சம் அதிகப்படியோ என்று நினைக்காதீர்கள். பாலூட்டும் தாய்க்கு பகாசுரப் பசி தான். பட்டர் பன்னும் ஒரு பெரிய தம்ப்ளர் பாலும் தினசரி கொடுக்க வேண்டும்.

இரவு உணவு :
                       இரவில் சாதம் கொடுப்பது தான் நல்லது. மதியம் வைத்த குழம்பை ஊற்றி எதோ ஒரு காய் வைத்துக் கொடுக்கலாம்.
                       இரவு 11 மணிக்கு மறுபடியும் ஒரு தம்ளர் பால் குடிக்க வைக்க வேண்டும்.
                       பாலூட்டும் தாய் இரவில் அதிகம் சோர்வு அடைவாள் .அதிலும் ஆண் பிள்ளை என்றால் சோர்வு இன்னும் அதிகம். அதிகாலை 4 மணிக்கு ஹார்லிக்ஸ் வெந்நீரில் கலந்து கொடுக்கவும். அந்த நேரத்தில் தாய்க்கு அது அமுதமாய் இருக்கும்.

                                       எனக்கு தெரிந்த அளவில் சொல்லி இருக்கிறேன். தெரியாதவர்களுக்கு பயன்படலாம். தெரிந்தவர்கள் விட்டுப் போனவை ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இதற்கு சம்பந்தமான முந்திய இரண்டு பதிவுகளை காண இங்கே செல்லவும்: