Bio Data !!

23 December, 2022

புத்தகத்தின் பெயர் : புஷ்பப் பல்லக்கு ஆசிரியர் : கல்கி வானதி பதிப்பகம் இது ஒரு சிறு கதை தொகுப்பு. அமரர் கல்கி அவர்களின் நூற்றாண்டை ஒட்டி அவரது நினைவு நாளில் சிறப்பு வெளியீடாக பிரசுரிக்கப் பட்டது. இதில் உள்ள கதைகள் இதற்கு முன் வேறு எந்த தொகுதியிலும் வெளி வராத கதைகள். அதை விட சிறப்பு கல்கி இதழ் தொடங்கப் படுவதற்கு முன்னாலேயே பிற பத்திரிகைகளில் வெளியாகி கல்கியில் மறு பிரசுரம் ஆனவை. அது மட்டுமல்லாமல் “சித்திரக் கொத்து “ என்னும் தலைப்பில் அமரர் கல்கி 1930 இல் எழுதிய நகைச்சுவை கட்டுரை ஒன்றும் சேர்க்கப் பட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு சிறு கதைகளும் ஒரு நகைச்சுவை கட்டுரையும் உள்ளன. முதல் கதை “அருணாச்சலத்தின் அலுவல்” ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது. “ இது ஒரு கதை என்ற செய்தியை ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இல்லை என்றால் சம்பவம் உண்மை என்று நம்பி நீங்கள் ஆசாமியை தேடி புறப்பட்டு விடலாம். அதை என் நண்பன் அருணாச்சலம் ஒரு வேளை விரும்ப மாட்டான்” இந்த கதை 1932 இல் எழுதப் பட்டு கலைமகளில் பிரசுரமாகி இருக்கிறது. சிறப்பு என்னவென்றால் அந்த காலத்திலேயே வீட்டுக் கணவர்களை[ House Husband} பற்றி கதை எழுதி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் வீட்டு வேலைகளையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் கணவனுக்கு மனைவி பணம் கொடுப்பதைப் போல தன் மனைவி வீட்டு வேலைகளை செய்வதற்கு பணம் கேட்டு விட்டால் என்ன செய்வது என்று கவலைப் படுகிறார். எனக்கு இங்கே கமலஹாசன் வீட்டில் வேலை செய்யும் மனைவிகளுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று பேசியது நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன் அதை சிந்தித்திருக்கிறார். எத்தகைய அறிவு!!! இரண்டாவது கதை “ புஷ்பப் பல்லக்கு” அது தான் புத்தகத்தின் தலைப்பும். இந்த கதையின் சிறப்பு கதை மாந்தர்களின் பெயர்கள். உதாரணத்துக்கு ஒரு சில பெயர்களை சொல்கிறேன். தீராத்துயரமய்யங்கார், விகாரம் பிள்ளை, லஞ்ச நாத சாஸ்திரி. பெயர்களே கதா பாத்திரங்களின் குணங்களை சொல்வது போல் இருக்கிறது. இந்த கதை 1934 இல் ஆனந்த விகடனில் வந்திருக்கிறது. மூன்றாவது கதை “ குலசேகரன் அதிர்ஷ்டம் “ கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு செல்லும் ஒரு அல்ட்டாப் பேர்வழி வழி நெடுக ரயிலில் செய்யும் அலப்பரைகளும் பட்டணத்தில் ஒரு நவ நாகரிக பெண்ணிடம் மயங்கி ஏமாறுவதும் ஒவ்வொரு கடையிலும் தன்னிடம் இருக்கும் நூறு ரூபாய்க்கு சில்லரை இருக்கிறதா எனக் கேட்பதும்,கடைசியில் ரயிலில் தன் பெட்டியை நூறு ரூபாயோடு பறி கொடுத்ததுமாக முடித்தாலும் இறுதியில் வாசகர் மகிழும் வண்ணம் மகன் ஏமாந்து விடுவான் என தாய் கிளம்பு முன்னமேயே பணத்தை எடுத்து விட்டதால் அது பத்திரமாக அரிசிப் பானையில் இருந்ததாக சொல்லி இருக்கிறார். இது 1935 இல் ஆனத்த விகடனில் வந்திருக்கிறது. சிறு கதை எழுத தொடங்குபவர்கள் இந்த தொகுப்பை வாசிக்கலாம். எப்படி எழுத வேண்டும் என்று ஒரு யோசனை கிடைக்கும். நான்காவது “ பரிசல் துறை” என்னும் ஒர் அருமையான காதல் கதை. இது 1937 இல் ஆனந்த விகடனில் பிரசுரமானது. கள்ளங் கபட மில்லாத காதலை எழுத்தில் பார்க்க அவ்வளவு அழ்காக இருக்கிறது. ஐந்தாவது கதை “ ஸூசீலா எம். ஏ “ எனக்கு இந்த கதை அவ்வளவு ரசிக்கவில்லை. கதாநாயகி சுசிலா திருநெல்வேலியைச் சேர்ந்தவள். பாக சாஸ்திரம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் செய்து பட்டம் பெறுகிறாள் . அதன் பின் உணவே எப்படி வெறுத்துப் போகிறது என்பது பற்றிய கதை. 1938 இல் ஆனந்த விகடனில் பிரசுரமாய் இருக்கிறது. ஆறாவது கதை “ பித்தளை ஒட்டியாணம்” இந்த கதையில் அவருடைய எழுத்தில் கண் சிமிட்டிய நகைச்சுவை ரசிக்க வைத்தது. “ அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் ஒரே வைரமாய் வைத்து இழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதற்குப் போதுமான வைரம் அவர்கள் மேல் இருந்தது.” { எப்படி இருக்கு கதை!} இந்த ஒரு வரி தான் நகைச்சுவை.சபலத்தில் பணக் கையாடல் செய்யும் கணவனும் அவனுடைய நேர்மையான மனைவியால் எப்படி காப்பாற்றப்படுகிறான் என்பதும் தான் கதை. இது 1940 இல் ஆனந்த விகடனில் பிரசுரிக்கப் பட்டது. இன்னும் இரண்டு கதைகள் “ மாஸ்டர் மெதுவடை’ “ கொள்ளிடத்து முதலை” மேலும் “ சித்திரக் கொத்து” என்னும் நகைச்சுவைக் கட்டுரை. நான் மிகவும் ரசித்து வாசித்த கதைத் தொகுப்பு. அந்த காலத்தில் எவ்வளவு நல்ல கருத்துகளை கதைகள் மூலம் சொல்லி இருக்கிறார்கள். ஒரு முப்பது வருடம் முன்னால் பிறந்திருக்கலாமோ?

19 December, 2022

புத்தகத்தின் பெயர் : தேரியாயணம். ஆசிரியர் : கண்ண குமார விஸ்வரூபன். பாவை பதிப்பகம். விலை : ரூ 270/- ஆசிரியரின் இயற்பெயர் ஆறுமுகப் பெருமாள். கண்ண குமார விஸ்வரூபன் என்ற அழகான புனை பெயரில் எழுதுகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத்தை சேர்ந்தவர். இந்த மண் ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதை சார்ந்து ஐவகை கலாசாரங்கள் உள்ளன. அந்தந்த மண் சார்ந்த ஐவகை இலக்கியங்களும் உள்ளன. இந்த ஐவகையும் சாராத ஒரு வித நில வகை தான் தேரி நிலம்” பாலையென்றும் சொல்ல முடியாத பசுஞ்சோலை என்றும் சொல்ல முடியாத புது வகை நிலப் பகுதி. தனியாக குறிப்பிடப்படாத இந்த வகை இலக்கியத்தை “தேரி இலக்கியம்” என்று பெயர் சூட்டியது மரியாதைக்குரிய பொது உடைமை போராளி தோழர் நல்ல கண்ணு என்கிறார் ஆசிரியர்.. மூன்று சிறு கதை தொகுப்புகளுக்குப் பின் நான்காவதாக இந்த நாவலை வெளியிட்டிருக்கிறார். முனைவர் நா. இராமசந்திரன் முன்னுரை எழுதி உள்ளார். நிகழ் காண்டம் என்று ஐந்து அத்தியாயங்கள். அதன் பின் பூர்வ காண்டம் என்று பத்து அத்தியாயங்கள். நிகழ் காண்டத்தின் ஆறாவது அத்தியாயம் அதைத் தொடர்கிறது. இரண்டு காண்டங்களின் அத்தியாயங்களில் வித்தியாசம் காட்ட நிகழ் காண்டத்தின் அத்தியாயங்களை எண்ணிலும் பூர்வ காண்டத்தின் அத்தியாயங்களை ரோமன் எண்ணிலும் குறிப்பிடுகிறார். சுப்பம்மாள் என்னும் வயதான பெண்ணை நமக்கு அறிமுகப்படுத்தும் போதே அந்த மண்ணின் வாழ்க்கை முறையையும் சொல்லி விடுகிறார். “ கறுத்த சேலை. தாலி அறுத்தவள் கட்டும் சேலை. மேலுடம்பில் ரவிக்கையில்லை. நுள்ளிப் பிடித்து அறுத்தெடுத்தாலும் அவளுடம்பில் அரைக்கிலோ கறியாவது தேறுமா என்ற ஐயமே” மண்ணின் வறுமைக்கு அவளொரு உதாரணமாய் இருக்கிறாள். அவள் கணவன் பலவேசம். எல்லா வித எதிர் மறை குணங்களும் உடையவன். அவள் வாசல் தேடி வந்த மகள் மாரி. அவள் பெற்றெடுத்த பிள்ளைகள் சடையன், கோசலை. தென் மேற்கு பருவக் காற்றால் இந்த மணல் பகுதிகள் மேடாவதும் பள்ளமாவதும் அடிக்கடி நிகழும். தேரிக்காட்டின் சில பகுதிகள் காற்றின் தன்மைக்கு ஏற்ப பெரிய மணல் மேடாகி இடம் மாறியது போல் தோற்றமளிக்கும். அதனாலேயே தனியாக ஒருவர் சென்றால் வழி தப்பி தொலைந்து போகக் கூடும் என்று எல்லோரும் சேர்ந்தாற் போல் தேரிக்காட்டுப் பகுதிக்கு செல்வதும் அங்குள்ள உடை மரங்களின் மெல்லிய பகுதிகளை வெட்டிச் சேர்த்து கட்டி ஒன்று போல வெளியேறுவதும் வந்து அந்த சுள்ளிகளை விற்று பணம் பெற்று அன்றாட செலவுகளை பார்ப்பதும் தான் வாழ்க்கை முறை. ஓலை இணுக்குகளை கொண்டு செருப்பு முனைந்து அதைப் போட்டுக் கொண்டு தான் காட்டுக்குள் உள்ள சுடு மணலில் நடப்பார்கள். சில நேரம் அந்த இணுக்குகளில் ஓட்டை விழுந்து கால் பொத்துப் போவதும் உண்டு. பூர்வ காண்டத்தில் சுப்பம்மாளின் திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்கள் தேரிக் காட்டின் மணலை விட சுடும் அவள் வாழ்க்கைப் பாதை வருகின்றன. ஒரு இடத்தில் “ மல்லாந்த நிலையில் கண் மூடிக் கிடந்த {இறந்து போய் கிடந்த} ஊமைப் பெண்ணின் மார் மீது தனது பிஞ்சுக் கையால் அடித்த படி குழந்தை அழுது கொண்டிருந்தது என்று எழுதி இருக்கிறார். எனக்கு இரா. பார்த்திபன் அவர்களின் “ இரவின் நிழல் “ படத்தில் இதை ஒத்த ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. படத்தின் அழுத்தமான காட்சிகளில் அதுவும் ஒன்று. அந்த ஊமைப் பெண்ணின் சடலத்துக்கு தமது வறுமை நிலையிலும் அந்த தேரிக்காட்டு மக்கள் எந்த ஒரு சடங்கையும் விட்டுக் கொடுத்து விடாமல் செய்யும் போது அங்கே மனிதம் மிளிர்ந்தது. அதை முன்னெடுத்துச் செல்லும் சுடலையாண்டி கிழவரும் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரம். ஒரு அதிமுக்கியமான வாழ்க்கை தத்துவத்தை கதையின் ஊடாக சொல்கிறார். பொஞ்சாதியால் மதிக்கப் படாவிட்டால் புருசனுக்கு நிம்மதியிருக்காது. நிம்மதியற்ற மனிதனால் வாழ்வில் எதிர் நீச்சல் போட்டுக் கெலிக்கவே முடியாது. என்கிறார். எனக்கு இன்றைய குழந்தைகளில் பலரின் வாழ்க்கை பெரும் தோல்வியாய் முடிவதற்கு இது ஒரு முக்கிய காரணமாய் தோன்றியது. தான் காதலிக்கும் ராஜ பாண்டி தன் தங்கைக்கு திருமணம் முடித்த பின் தான் தன்னை கை பிடிக்க முடியும் என்பது புரிந்து மாரி தன் தம்பிக்கும் தங்கைக்கும் திருமணம் முடிக்க ஊக்குவித்து அவர்கள் திருமணம் முடித்து பிள்ளைகளும் பெற்ற பின்னும் சந்தோஷமாக காத்திருக்கிறாள். மாரி ஒரு உயர்ந்த கதாபாத்திரம். ஒரு திருடனைப் போல அரசு அதிகாரிகளுக்கு பயந்து பயந்து விறகு வெட்டி விற்று தம் வயிற்றைக் கழுவி சுட்டுப் பொசுக்கும் வெயிலிலும் இளங் காதல் வளர்த்து மனிதம் காத்த மானம் காத்த மக்களின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக எனக்குத் தோன்றுகிறது. பல இடங்கள் என்னை கண் கலங்க வைத்தது உண்மை. அழகு தமிழில் இவர் எழுதி உள்ளதற்கு சில உதாரணங்கள்:  “ ஆனை கிடைத்த சேனை போல அனைவரும் தட தடவென எழுந்து தேரியுள் பெய்யும் மழை நீர் வெளியேறி வரும் ஓடையான அந்தத் தேரியோடையின் கரையோரமாய் தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்”  “ அவளுக்குள்ளிருந்த பொஞ்சாதி கொஞ்சங் கொஞ்சமாய் பொசுங்கிக் கொண்டிருந்தாள். அருந்தியாகத் தாயானவள் தலை நிமிர்வாய் பேரெழுச்சியாய் எழுந்து கொண்டிருந்தாள்.”  “ வயிறு நெறயச் சோறு கெடைக்கித நாளு நல்ல நாளு. வயிறு காஞ்சு பட்டினியோடப் படுக்கப் போற நாளு கெட்ட நாளுங்கி தத்தரித்திர நெலயில கலியாணத்துக்கு எங்க நல்ல நாளு பாக்க”

08 December, 2022

அவன் # கதை திறனாய்வு.

புத்தகத்தின் பெயர் : அவன் ஆசிரியர் : ரா.கி. ரங்கராஜன் பூம்பாவை பதிப்பகம். விலை : ரூ 260/- ரா.கி.ரங்கராஜன் கதையின் முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார். “ நான் கிருஷ்ண தேவராயன் “ என்று நான் எழுதிய சரித்திர கதையில் சக்கரவர்த்தி சொல்வதாக கதை நான் நான் நான் என்று வரும். அதிலிருந்து மாறுபட்டு எழுதுவதற்காக என்னை பற்றி எழுதிய கதையில் அவன் அவன் அவன் என்று எழுதி இருக்கிறேன். இது தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை கதை. இலக்கிய வரலாறு இல்லை"என்கிறார். . ஒரு முறை கடும் ஆஸ்துமா தொல்லையில் மாட்டிக் கொண்டு இவருக்கு பல்ஸ் கிடு கிடு வென்று விழுந்து கொண்டு இருந்திருக்கிறது. மருத்துவ மனைக்கு கொண்டு போயிருந்திருக்கிறார்கள். அப்போது இவருக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அன்று இவர் மாமனாரை ரொம்ப ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தரையில் கிடத்தி பதிவு செய்ய போகும் போது வந்து பார்த்த நர்ஸ் “ He is alreagy dead” என்கிறார்கள்..அசந்தர்ப்ப வசமாக அவருக்கு வந்த மரண நினைவு நம்மை ஒரு உலுக்கு உலுக்குகிறது. இவருக்கு ஒன்பது வயது இருக்கும் போது இவர் செய்த ஏதோ ஒரு சிறு தவறுக்காக கோமணத்தோடு வாசல் திண்ணையில் இவருடைய அப்பா அமர்த்தி வைத்ததாகவும் தெருவில் போவோரும் வருவோவும் பெருந்தன்மையாக பார்க்காமலே போனதாகவும் எழுதி இருக்கிறார். [இதை வாசிக்கும் போது எனக்கு அந்த கால தண்டனைகள் நினைவுக்கு வந்தன. கண்களில் மிளகாய் பொடி தூவுவது வீட்டு வாசலில் முழங்கால் போட்டு கைகளை விரித்து வைப்பது , பழைய சாமான்கள் இருக்கும் அறையில் தனியாக படுக்க வைப்பது { கால்களின் மேல் ஊறும் கரப்பான் பூச்சிகளை பார்த்து குழந்தகள் அலறும்{, புளியங் கம்பால் விளாறுவது இவை நான் கேள்விப்பட்ட, பார்த்த ,அனுபவித்த ,“சில” தண்டனைகள். நாகர்கோயிலில் நான் ஒரு பள்ளியை கடந்து பணிக்கு செல்வேன். அது ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி. மாணவர்களை அடிக்கும் அடிக்கு அவர்கள் கத்தும் சத்தம் காதை பிளக்கும். பெண் விடுதலைக்கு பெரியார், சட்ட நுணுக்கங்களுக்கு அம்பேத்கார். இந்த தகவல் நமக்கு தெரிந்தது. குழந்தைகளை அடிக்க கூடாது என்ற இன்றைய நிலைப்பாட்டை முன்னெடுத்தவர் யார்? அவருக்கு கோடி நமஸ்காரம்.] எஸ். ஜே என்ற புனை பெயரில் இவர் நண்பன் ஜானகிராமன் சுதேச மித்திரனுக்கு ஒரு கதை எழுதி அனுப்புகிறார். பிரசுரமாகிறது. சன்மானம் ஏழரை ரூபாய். ரசீது போல் அச்சடித்த சிறு காகிதத்தில் தொகையும் பெயரும் குறிப்பிட்டிருக்கும். அந்தக் காகிதத்தை உல்ளூர் சுதேச மித்திரன் விற்பனையாளரிடம் கொண்டு காட்டினால் ஏழரை ரூபாய் பணம் தருவார்களாம். எழுத்தாளராகி விடுவார் என்று எதிர்பார்த்த ஜானகிராமன் கணித ஆசிரியராகி கல்வித்துறை அதிகாரியாக, திருப்பி அனுப்பப் பட்ட கதைகளை எழுதிய ஆசிரியர் எழுத்தாளராகி விட்டார். “ இளம் தென்றல்” என்றொரு கையெழுத்து பத்திரிகை தயாரித்து அதற்கு ஒரு ஆண்டு மலரும் தயாரித்து அதில் கு.ப.ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி இருவரது வாழ்த்து செய்தியும் எம். வி வெங்கட்ராம் அவர்களின் ஒரு சிறுகதையும் வரச் செய்திருக்கிறார்கள். மூவருமே அந்நாளில் கும்பகோணத்தில் பிரபலமான எழுத்தாளர்கள். உலகத்தை சுவாரஸ்யமாக்குபவை உண்மைகளல்ல வதந்திகள் தான் என்கிறார். உண்மை வெறும் நிலம் வதந்தி அதில் முளைக்கும் ரோஜா. நிலம் நிலைத்து நிற்கும். ரோஜா ரெண்டு நாளில் வதங்கி விடும். இருந்தாலும் வெற்று நிலம் வெற்று நிலம் தான். ரோஜா ரோஜா தான் “ ஏன்கிறார் ஆசிரியர். { எனக்கு இதில் உடன்பாடில்லை. வதந்திகள் சில நேரம் உயிரையும் எடுத்து விடலாம்} சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த இன்னுமொரு முக்கிய நிகழ்ச்சியையும் குறிப்பிடுகிறார். காந்தியும் ராஜாஜியும் ரயிலில் தமிழ் நாட்டுக்கு வருகிறார்கள். இவர்களை பார்க்க ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம். டெல்லிக்கு போன காந்தி “ தமிழ் நாட்டில் வழி நெடுகிலும் பெரும் மக்கள் கூட்டம் ராஜாஜியைப் பார்க்கத் தான் வந்தார்கள். அவருக்கு எதிராக காங்கிரஸ் கமிட்டியில் ஒரு குழு வேலை செய்கிறதே” என்று “ ஹரிஜன் “ என்ற பத்திரிகையில் எழுதி விட்டார். அதன் பின் ராஜாஜி ஆதரவு கோஷ்டி எதிர்ப்பு கோஷ்டி என காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தது என ஆசிரியர் எழுதி இருக்கிறார். கடவுள் அவருக்கு பல விஷயங்களை கொடுக்கவில்லை என்றாலும் நல்ல சிநேகிதர்களின் நட்பை கொடுத்திருப்பதாக சொல்லி இருக்கிறார். அவரும் எதுவும் எதிர்பாராத அவரிடமிருந்தும் எதுவும் எதிர்பாராத நல்ல நட்பு அது என்கிறார். ஜா.ரா.சுந்தரேசன் வேலையிலிருந்து விலகுவதென்று முடிவெடுத்து குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி யிடம் சொன்னதும் அவர் ஏன் என்று கேட்க “ முப்பது வருஷம் உங்களுக்காக வாழ்ந்து விட்டேன். பத்து வருஷம் எனக்காக வாழலாம் என்று பார்க்கிறேன் என்று சொன்னாராம்.{ நாம் எல்லோருமே எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் இது] விகடனில் நடந்த ஒரு குறுக்கெழுத்துப் போட்டியைப் பற்றி சொல்கிறார். அதன் விடை சீலிட்ட கவரில் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. என்கிறார்.. பாமர மக்களுக்கு ஆசை காட்டுவது தப்பு என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி உட்படச் சிலர் எதிர்த்ததால் விகடன் நிறுத்திக் கொண்டதாம். [ இங்கு ஒரு கவரை எப்படி வங்கியில் டெபாசிட் செய்ய முடியும் என்ற என் சந்தேகத்துக்கு யாராவ்து விடை சொல்லுங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள்] ஆர். நாராயணன் என்பவரை பற்றி எழுதுகிறார். இவர் லயோலா கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார். ஒரு முறை மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது “ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்த சங்கத்தைக் கலைக்கிறேன்” என்று கூறி எழுந்து போனாராம். அவரைப் பின்னாளில் அழைத்து வந்து எஸ்.ஏ.பி குமுதத்தில் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டாராம். ஒரு முறை டி.வி.எஸ் பஸ்ஸில் திருநெல்வேலி லாட்ஜ் க்கு திரும்பிய பின் பார்க்கும் போது ஆசிரியரின் காமிராவின் வியூ பைன்டர் என்னும் விரல் நீளக் கருவியைக் காணவில்லை. மறு நாள் டி.வி.எஸ் பஸ் நிலையத்துக்கு சென்று மானேஜரைப் பார்த்துக் கேட்கிறார்கள். எத்தனை மணி பஸ் என்று விசாரித்து ஊழியரை அழைத்துக் கேட்கும் போது ஒரு கைக்குட்டை, ஒரு பென்சில், ஒரு கண்ணாடிப் புட்டி, மட்டுமே இருந்ததாக சொல்கிறார். பயணிகள் விட்டுச் செல்லும் பொருட்களை எடுத்து பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் அன்று இருந்திருக்கிறது. பின்னாளில் டி.வி.எஸ் சை அரசு எடுத்துக் கொண்டதாம், ஆசிரியர் “சக்தி” காரியாலயத்தில் பணி புரிந்த போது பக்கத்தில் ஒரு சிறிய தெருவில் திரு வி. க வின் “சாது அச்சுக்கூடம்” இருந்திருக்கிறது. அதனுள் போய் பார்த்து வந்த போது ஒரு தவ சிரேஷ்டரின் பர்ணசாலைக்குள் நுழைந்து விட்டு வந்தது மாதிரி இருந்தது என்கிறார். எந்தப் பத்திரிகையில் எந்தப் புதிய அம்சத்ததைப் பார்த்தாலும் அதன் மூலத்துக்கு மூலத்துக்கு மூலத்தை ஆராய்ந்தால் அது கல்கி செய்ததாகத் தான் இருக்கும் என்கிறார்.கல்கி அவர்களின் அமர ஊர்வலம் போகும் போதத கொஞ்ச தூரத்துக்கு ஒருவராக பல அபிமானிகள் மாற்றி மாற்றி தோள் கொடுத்து பெருமை பெற்றார்களாம். அந்த சில நிமிடப் பெருமிதம் இன்றைக்கும் என் மனசிலும் தோளிலும் தங்கி இருக்கிறது. எழுதுவதில் சோர்வோ அலுப்போ ஏற்படும் போது தோளைத் தொட்டுக் கொள்கிறேன் தாயத்துக் கட்டிக் கொண்ட மாதிரி ஒரு தெம்பு உற்பத்தியாகிறது என் கிறார் ஆசிரியர். எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் ஏன் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்ள விரும்புப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகமிது.

05 December, 2022

மெல்ல விலகும் பனித்திரை. # புத்தக விமர்சனம்.

புத்தகத்தின் பெயர் : மெல்ல விலகும் பனித்திரை. ஆசிரியர் : லிவிங் ஸ்மைல் வித்யா பதிப்பகம் : பாரதி புத்தகாலயம். விலை : ரூ 50/- பாலியல் சிறுபான்மையினர் பற்றிய பதிவுகள் வரலாற்றில் மிகக் குறைவு. அதனாலேயே அவர்கள் பற்றிய புரிதலும் குறைவு. தமிழ் சங்க இலக்கியம் பாலியல் சிறுபான்மையினருக்கு சாதகமாக இல்லை. ஆரம்பத்தில் அலி, ஒம்போது உஸ்ஸு என கிண்டலாக அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திரு நங்கை என கௌரவமான பெயர் கொடுத்தவர் கலைஞர். இவர்கள் உடலால் ஒரு பாலினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனதால் வேறு பாலினத்தை உணர்ந்து அதன் படியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள். நன்னூல் இவர்களை பெண் பேடு ஆண் பேடு எனக் குறிக்கிறது. ஆரம்ப காலங்களில் திரு நங்கைகள் பற்றி எழுதப்பட்ட கதைகளில் முக்கியமானவை கி. ரா வின் “ கோமதி” சு. சமுத்திரத்தின் “ வாடாமல்லி” போன்றவை. இந்த தொகுப்பு திரு நங்கைகள் குறித்த புரிதலை அடுத்த தளத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இதில் “ இப்படியும்” என்ற கதை எழுதிய சுதா என்பவர் மட்டும் ஒரு திரு நங்கை. கதை இப்படி செல்கிறது. கடந்த இரண்டு மாதமாக பாபு சரியாகவே வேலை செய்வதில்லை என்று திட்டினார் சைக்கிள் கடை ஓனர் கஜேந்திரன். அதற்கு காரணம் மளிகை கடை ஓனரும் பாபுவின் கனவுக் கண்ணனுமான கதிர். திடீரென்று ஒரு நாள் கதிர் பாபுவிடம் பேச படபடத்துப் போனான் பாபு. தனியாகப் பேசணும்னு பெசன்ட் நகர் பீச் வரச் சொல்கிறான் கதிர். “ பாபு நீ கல்யாணம் பண்ணிப்பியா?” “யாரை?” “ ஒரு பெண்ணை” “நானே ஒரு பெண்ணா வாழறேன். எனக்கு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணினா பாவம் சார்” கொஞ்ச நாளில் கதிர் வந்து தன் கல்யாண பத்திர்கை கொடுக்கிறான். மனம் முழுக்க வலியோடு ஒரு பரிசுப் பொருளும் வாங்கிக் கொண்டு திருமணத்துக்கு செல்கிறான் பாபு. அங்கே நாம் எதிர்பாராத திருப்பத்தோடு முடிகிறது கதை. அடுத்து கி. ரா வின் “ கோமதி” மிகவும் விரிவான கதை. ஒரு திரு நங்கையின் மன அவஸ்தையை மிகத் தெளிவாக சொல்லி இருப்பார். இரா. நடராசன் எழுதிய “ மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்த கதை.. பிறந்த அன்று அன்றலர்ந்த ரோஜா போல இருந்த மதி பின் இரண்டும் கெட்டானாய் வளர்ந்த பின் வீதி ஆட்கள் அத்துணை பேரையும் கேலி செய்யவும் வேலை வாங்கவும் அனுமதித்த அப்பா. பல தலைப்புகளில் ஆசிரியர் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் அலசி இருக்கிறார். கவின்மலர் எழுதிய நீளும் கனவு” இதில் நான் மிகவும் ரசித்த வரி “ பெண்கள் அழலாம். பெண்கள் அழுது தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பெண்ணே இல்லை.” இன்னுமொரு வரி “ செந்தில் இது நாள் வரை வெளியே தெரியாமல் பொத்திக் காப்பாற்றிய பெண்மை உள்ளுக்குள் உறங்கிப் போக உலகம் அவனைப் பார்த்த ஆண்மையும் மறைந்து போக ஜேம்ஸின் மனிதம் விழித்துக் கொண்டு செந்திலை அரவணைக்க பால் பேதமர்ற இரு உடல்கள் தழுவிக் கொண்டன.” இது போல் இன்னும் நாலு கதைகளும் உள்ளன. உணர்வுகள் பிறழ்ந்து போவது யார் செய்த தவறுமில்லை. புரிந்து கொள்வோம். இப்போதைய முன்னேற்றம் பெற்றவர்களில் ஒரு சிலர் விரட்டி அடிக்காமல் அரவணைப்பதால் படித்து மிக உயர்ந்த பதவிகளுக்கு கூட வருகிறார்கள் திரு நங்கைகள். சமுதாயம் புரிந்து கொண்டால் அவர்கள் விபச்சாரம் புரிவதும் தீய நடவடிக்கைகளில் இறங்குவதும் வெகுவாய் குறைந்து போகும் குறையணும். குறைப்போம். பிக் பாஸ் சீஸன் 6 இல் பங்கேற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஷிவின் மிகுந்த நம்பிக்கை தரும் ஒரு திரு நங்கையாக விளங்கி வருகிறார்.

01 December, 2022

புத்தகத்தின் பெயர் : அரிய நாச்சி ஆசிரியர் : வேல ராமமூர்த்தி பதிப்பகம் : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் விலை : ரூபாய் 150/- அரிய நாச்சி ஒரு ஆப்ப நாட்டு பெண் தெய்வம். அவள் வழி வந்தவர்கள் என்று நாம் சாதாரணமாக சொல்வதை அவர் “ இவளின் தொப்புள் கொடி பெருக்கம்” நானூத்தி சொச்சம் திசைகளில் வேர் பாய்ச்சி படர்ந்து கிடக்கிறது.” என்கிறார். இந்த அழகான சொல்லாடலை நான் மிகவும் ரசித்தேன். ஆசிரியர் சொல்கிறார் “ நான் ரத்தம் பற்றியே எழுதுகிறேன் என்பார்கள். என் கதைகளில் எழுத்துக்களாக வழிவது அரிய நாச்சியின் ரத்தமே.” என்று. அங்கே அரிய நாச்சி என்பது ஒரு கதாபாத்திரத்தின் பெயராக எனக்குத் தோன்றவில்லை. மற்றவர்கள் பஜார்களில் கையில் லெதர் பேக்குகளில் பணமோ பத்திரமோ இருக்கும் போது தன் இன மக்கள் இமை கொட்டாமல் இருக்கும் சூரிக் கத்திகளை சுமந்து செல்கிறார்களே என்ற அவர் ஆதங்கம் எழுத்துக்களில் தெரிக்கிறது. மனுசத்தனத்துக்கும் மிருகத்தனத்துக்கும் இடைப்பட்ட மூர்க்கத்தனத்தை பதிவு செய்கிறார். தன் இனம் சார்ந்த வெள்ளந்தி மனிதர்களையும் வெள்ளையத்தேவன் சர்க்கரைத் தேவனாக அடையாளம் காட்டுகிறார். கதை ஆரம்பமே ஜெயில் வாசலின் விவரணையுடன் தான் தொடங்குகிறது. கதையின் ஊடாகவே தன் இன மனிதர்களின் மனப் போக்கினை “ ஜெயில் கட்டினது யாருக்கு நமக்குத்தானே” “ நமக்கு எதிரா எவனும் சாட்சி சொல்ல மாட்டான் ங்கிற குருட்டுத் தைரியத்தில்” என்ற வரிகளின் மூலம் தொட்டுச் செல்கிறார். இந்த சூழலில் தான் கதை நாயகி அரிய நாச்சி நிறை சூலியாக அங்கே எண்ட்ரி கொடுக்கிறார். ஜெயிலில் இருக்கும் தன் தந்தை வெள்ளையத் தேவனைப் பார்ப்பதற்காக வந்த போது கடைசிக் கைதியாய் வந்து நிற்கிறார்.. வெள்ளையத் தேவனின் அந்தப் பொறுமையும் நிதானமும் சூழ்நிலை எந்த ஒரு மனிதனையும் கொலைகாரன் ஆக்கக் கூடியது என்பதை நிரூபித்தது. வெள்ளையத் தேவனின் தங்கை வள்ளி அத்தை. அவள் வாழ்வரசியும் இல்லை. விதவையும் இல்லை. நிச்சயம் செய்த கையோடு மாப்பிள்ளை இறந்து போக இருபத்து ஐந்து வருசமா கன்னி கழியாமல் காலம் கழித்தவள். அரிய நாச்சியின் தம்பி பாண்டி ‘ தம்பி மனைவி குமராயி. பாண்டியின் தங்கை மாயழகி. இவளை இளவட்டங்கள் “ பார்த்த பார்வையிலேயே போட்டுத் தள்ளும் கரு நாகம்” என்பார்கள். மாயழகியை தன் கணவனின் தம்பி சோலைக்கு மணமுடித்து தனக்கு உதவியாக வைத்துக் கொள்ளணும் என்பது அரிய நாச்சிக்கு ஆசை. மொத்த பெண் வழிச் சொத்தும் ஒரே குடும்பத்துக்குப் போய் விடக் கூடாது தன் தம்பி கருப்பையாவுக்கு மணமுடிக்க வேண்டும் என்பது குமராயி ஆசை. குமராயியின் தாய் செல்லம்மாவை “ மூச்சுக்கு முன்னூறு தரம் கோபப்படுறதும் நீ தான். குழையறதும் நீ தான். ஒரு குடியான குடும்பத்து பொம்பளைக்கு இந்த குணம் ஆகாதுடி. கொலைப் பழியில கொண்டு போய் விட்டிரும்” என்று சொல்ல வைத்து கதையின் போக்கை கோடிட்டு காட்டி விடுகிறார் ஆசிரியர். நன்னடத்தைக்காக வெள்ளையத் தேவன் உரிய காலத்துக்கு முன்னதாகவே விடுதலை பெற்று வரும் போது வீடு எப்படி இருந்தது. அது வரை என்னன்ன நடந்தது என்பது கண்டிப்பாக விரு விருப்பாக சொல்லிச் செல்லும் கதை. இதை படிக்கும் அத்தனை பேரும் அன்று ஒரு நாளாவது நம் கோபம் குறைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆரம்பத்தில் நின்று நிதானமாக ஒவ்வொரு கதாபாத்திரமாக சொல்லி வந்தவர் விறு விறுப்பு கூடக் கூட அரிய நாச்சியின் வீட்டில் இருக்கும் போதே சிறையில் கைதிகள் வெள்ளையத் தேவனிடம் காட்டும் அன்பைச் சொல்கிறார். திடீரென்று குமராயி பாண்டியை ஆட்டுவிப்பதாகச் சொல்கிறார். ஆசிரியரின் எழுத்து நடை வேகத்துக்கு நாம் பின் தொடர வேண்டும் இல்லையின்றால் வழி தப்பி விடுவோம். வாசிக்கும் அனைவருக்கு, இதே வேகம் சாத்தியமா என்று தோன்றியது. தவற விடக் கூடாத புத்தகம்.