Bio Data !!

31 March, 2010

சந்தேகக் கேடு - பாகம் 3

தனக்குத்தானே தைரியம் சொல்லி ரேடியோவை ஆன் செய்து பிரம்பு ஊஞ்சலில் சாய்ந்து மெல்ல ஆடிக் கொண்டே சிந்தனையிலிருந்து விலக முயற்சித்தாள்

எதோ கனவு வந்து திடுக்கிட்டு எழுந்து மணியைப் பார்த்தாள். ஆறைக் கடந்திருந்தது. தனது நீண்ட கூந்தலை சீவ ஒரு மணி நேரம் எடுப்பாள் திருமணத்துக்கு முன். அம்மா சொல்வா "உன்னை மாதிரி ஒவ்வொரு முடியா சீவ முடியாதுடி. நீ அக்கறையா பார்த்துக்கிறதால தான் அதுவும் கைக்கு அடங்காம வளருது."
தலை சீவி முகம் கழுவி பொட்டு வைத்தாள். உற்சாகமானாள்.
நம்ம கையில தான் இருக்கு, சரி செய்திடலாம

மாலையில் நவீனும் அதிக உற்சாகத்தோட வந்தான். வாங்கி வந்த பத்து முழம் மல்லிகைப் பூவையும் தானே வைத்து விட்டு அவளை அணைத்து " உன் வாசத்தோட பூ வாசமும் சேர்ந்து ம்ம்ம்ம் சும்மா கும்ம்னு இருக்குது." என்றான்.
சுடச் சுடக் கொண்டு வந்த காபியைக் குடித்தான். விசில் அடித்தவாறே டிவி முன் அமர்ந்தான். ரொம்ப உற்சாகமாக இருந்தான். கவி அந்த உற்சாகம் தன்னைச் சார்ந்ததாகவே நினைத்துக் கொண்டாள்.
இரவு படுக்கையில் பயந்து கொண்டே ' ஏங்க, வீட்டைப் பூட்டிட்டு போகாதீங்க, எனக்கு பயமா இருக்குது." என்றாள்.
அவளை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டபடி" நான் செய்தால் எதுவும் சரியாத்தான் இருக்கும்னு நம்பு. ஒரு பிரச்சினையும் இல்லை. சரி இப்போ தூங்கு." என்றான்.
அவளும் நம்பினாள். அப்படியே சில காலம் போனது.

அன்று மாலை ஜன்னலில் சாய்ந்தபடி சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நவீன் வர இன்னும் எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்.
வடைக்காரர் உளுந்த வடைக்கு ஓட்டைப் போட்ட படியே " எப்படி கண்ணு இருக்கிற? "
"நல்லா இருக்கேன் அண்ணே."
"தம்பி உன்னை நல்லா வைச்சிருக்குதா?"
"அதுக்கென்ன அண்ணே ராணி மாதிரி இருக்கேன்."
"தம்பிக்கு வேலை எங்கே தென்காசியா?"
"ம்ம்ம்"
" ஒண்ணு சொல்றேன் தப்பா எடுத்துக்காத கண்ணு. தம்பி வேலை பார்க்கிற காலேஜ் ல தான் எனக்குத் தெரிந்த பையன் படிக்கிறான். அங்கே படிக்கிற ஒரு பெண்ணிட்ட தம்பி ரொம்ப நெருக்கமா இருக்கிறதா சொல்றான். தகவல் தப்பாவும் இருக்கலாம்,..."
திடீரென்று பேச்சை நிறுத்தினார், "என்ன அண்ணே, வந்தோமா வடை போட்டோமான்னு இல்லாம பொம்பளப் பிள்ள கிட்ட பல்லப் பல்ல காட்டிகிட்டு என்ன பேச்சு?" நவீன் நின்று கொண்டு இருந்தான்.
"இல்ல தம்பி, பாப்பாவுக்கு வடை வேணுமான்னு கேட்டேன்"
நவீனின் கோபம் கதவைத் திறப்பதிலேயே தெரிந்தது. "பாவி அந்த பிள்ளைய என்ன பாடு படுத்தப் போறானோ தெரியலையே?" முணுமுணுத்துக் கொண்டார்.

வந்தவன் தன் கையில் இருந்த பையை விசிறி அடித்தான்.
கவி நடுங்கினாள்.
அவள் ஒற்றைக் கையை அழுத்திப் பிடித்தபடி அடுத்து இருந்த அறைக்கு இழுத்து வந்தான். " உன்னிட்ட எத்தன தடவ சொல்லி இருக்கேன். யாரிடமும் அதிகம் பேசாதேன்னு. என்ன கேட்டான் அந்த வடைக்காரன்?"

'எங்கே வேலைப் பார்கிறீங்கன்னு?'
வடைக்காரர் சொன்ன செய்தி தந்த குழப்பத்த மீறி தன்னை தவறுதலா புரிஞ்சிடக் கூடாதே என்ற பதற்றத்தில் குளறினாள்.

"என்னது, எங்கே வேலை பார்கிறேனா? என்னிட்ட வடை வேணுமான்னு கேட்டேன்னு சொன்னான். என்னடி நாடகம் போடுறீங்க ரெண்டு பெரும். நான் போனதும் ஜன்னல் வழியா நாடகம் நடத்துறியா? " இன்னும் பேசினான். பேசினான் என்று சொன்னால் அந்த வார்த்தை முறைத்துக் கொள்ளும். உளறினான். அவன் பேசியது அவளுக்கு விளங்கவில்லை. மொத்தத்தில் ஒரு தொழில் புரிபவளைப் போல கேவலப் படுத்தினான்.
'நீ சரிப்பட மாட்டே' அவளை ஒற்றைக் கையைப் பற்றி தர தர வென இழுத்து ஒரு சின்ன ventilator மட்டும் இருந்த அறைக்குள் தள்ளினான். அவள் புடவையை உருவி எடுத்தான். (என்றுமே அவளை nighty போடஅனுமதித்ததில்லை.)

'ரெண்டு நாள் பட்டினி கிடந்தா எல்லாம் சரி ஆகும்' னு உறுமிக் கொண்டே கதவை அறைந்து சாத்தி வெளியே பூட்டினான்.

அங்கே தான் கடவுள் வைத்தான் நவீனின் செயல்களுக்கு முற்றுப் புள்ளி.
அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் கவி . 'என்னைப் போலவே இன்னொரு பெண்ணும் நாசமாகப் போகிறதா? ஐயோ அடுத்த பெண்ணைப் பற்றிக் கவலைப் படுகிறேனே. என் வாழ்க்கையே நாசம் ஆயிடுச்சு போலிருக்கே. அவன் தன்னைப் பற்றிக் கூறிய வார்த்தைகள் அவள் மேல் மலத்தை அள்ளி கொட்டியது போலிருந்தது. என்ன செய்யப் போகிறேன். எப்படி இதிலிருந்து மீளப் போகிறேன்.'

அந்த அறை பழைய சாமான் போட்டிருந்த அறை. எழுந்து தடவித் தடவி அந்த அறையின் சுவிட்ச் ஐப் போட்டாள். 'வீலென்று அலறினாள்.'
அறை முழுவதும் கரப்பான் பூச்சிகள்.
வெளியே நவீனின் சிரிப்பு சத்தம். ' என்ன கரப்பான் பூச்சி கதை பேசுதா? அடடா சேலையை வேற உருவிட்டேனே? யோசிடி யோசி , நான் சொல்வதை மீறி நடந்தால் என்ன நடக்கும்னு நல்லா யோசி. '

(இன்னும்)

29 March, 2010

சந்தேகக் கேடு - பாகம் 2

அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. அம்மா மடியில் படுத்து சத்தம்வராமல் அழ வேண்டும். தன் உடல் அதிர்வை வைத்தே தன் அழுகையைக் கண்டுபிடித்து மெல்ல தட்டிக் கொடுப்பாள். அம்மாவை உடனே பார்க்கணும் போல்இருந்தது.

வெளியிலிருந்து வந்த நவீன் வேக வேகமாக தன் உடைகளை சூட்கேசில் அடைத்தான். "புறப்படு கவி, நாம ஊருக்குப் போறோம். எட்டு மணிக்கு பஸ். "

அவளுக்கு அப்பாடா னு இருந்துச்சு. வீட்டுக்கு போயாச்சுன்னா எல்லாம் சரி ஆயிடும். ஆனால் அங்கேயும் கவி தப்புக் கணக்குத்தான் போட்டாள்.

நவீனின் வீட்டை கண்காணித்துக் கொண்டிருந்த போலீஸ் அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டு வாசலில். அவர்களின் பின்னால் முகமும் கண்களும் வீங்கிப் போய் அவளின் அம்மா. கவிக்கு ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எப்படி இத்தனை நாளும் அம்மாவும் அப்பாவும் தவித்துப் போயிருப்பார்கள்னு தோணாம இருந்தது. அப்பா கையில் இப்போ நான் கிடைத்தால் நரசிம்மன் போல் ரெண்டாய்ப் பிளந்திடுவார் போல இருந்தது.

"ரெண்டு பேரும் ஸ்டேஷன் க்கு வாங்க, ஐயா வரச் சொன்னாங்க."காவல்காரர் காத்திருந்த சலிப்பில் சொன்னார். பெண்ணை அடையாளம் காட்டுவதற்க்காக பெற்றவர்களும் வந்திருந்தாங்க.

"இப்போ தான் வெளியூரில் இருந்து வரோம். கொஞ்சம் நேரமாகும்." என்றான் நவீன்.

"அடியே பாதகத்தி, எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி ஒரு காரியம் பண்ணி இருப்பே." கவியின் தோள் இரெண்டையும் பிடித்து உலுக்கியபடி கதறினாள் தாய்.

"அப்படியே அம்மாவோட ஓடிடலாமா? இவரோட காலம் முழுதும் கழிக்க முடியுமா?" சில நொடிச் சலனம் அம்மாவின் கதறலில் இறுகியது.
அலட்சியமாக கைகளை உதறினாள், "நாங்க ரெண்டு பேரும் மேஜர் தான். முறைப்படி திருமணம் முடித்து தான் வந்திருக்கிறோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" னு வந்த போலீசிடம் சொன்ன படி நவீனைப் பின் தொடர்ந்தாள்.

"ஐயோ, வாழ வந்த வீட்டுக்கு இடது காலை உள்ள வைச்சு போறாளே" பெற்ற மனம் பதறியது.

இன்ஸ்பெக்டர் அவர்கள் கொண்டு வந்த சான்றிதழ்களை சரி பார்த்து பெண்ணைப் பெற்றவர்களிடம் "சட்டம் அவர்களுக்கு சாதகமாகத்தான் சொல்லுது." அவர்கள் போகலாம் என்னும் படி தலை அசைத்து ரெத்தமும் சதையும் துடிக்க பெற்று வளர்த்த மகளை பேப்பரும் பென்னும் கொண்டு எழுதிய சட்டத்தால் பிரித்தார்.

படிக்க அனுப்பிய பெண்ணைப் பறி கொடுத்த பெற்றோர் நவீனின் வேலையைப் பறித்தனர். நவீன் தன் திறமையால் சீக்கிரமே அடுத்த வேலைக்கு போய் விட்டான்.

இன்று புதிய வேலையில் சேர வேண்டும். காலையிலிருந்தே குட்டி போட்ட புலி போல கவியைச் சுற்றி சுற்றி வந்தான். அவன் இடுப்பைக் கட்டிப் பிடித்தபடி "ம்ம்ம்ம், கிளம்புங்க இப்படியே பார்த்திட்டு இருந்தா எப்படி. " கொஞ்சினாள்.

'இல்ல கவி, இந்த ஏரியா ரொம்ப மோசம் ..... இப்போ வேலை கிடைச்சு இருக்கிற இடம் வேற ரொம்ப தூரம்..... உனக்கு என்னென்ன வேணுமோ எல்லாம் வீட்டிலேயே இருக்கு..... அதனால ....."

"அதனால...."

"நான் வீட்டைப் பூட்டி சாவியைக் கொண்டு போறேன்.சாயங்காலம் சீக்கிரமா வந்திறேன். வந்து உன்னை வெளியே கூட்டிப் போறேன் "

"என்னது, என்ன உள்ள வைச்சு பூட்டிட்டு போறீங்களா? "

" உன் பாதுகாப்புக்குதான்"

" என் பாதுகாப்புக்கு கதவைப் பூட்டி உள்ளே இருக்கத் தெரியாதா?" அவள் குரலில் கோபத்தைக் கண்டவன், உடனே மிருகமானான்.

"எல்லாம் எனக்குத் தெரியும் உள்ளே போடி" இடது கையால் அவளை உள்ளே தள்ளியபடி வலது கையால் கதவைப் பூட்டி வேகமாக வெளியேறினான்.

திகைத்துப் போய் ஜன்னலில் நின்று அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டு வாசலில் ஒரு வடைக்காரர். சின்ன அடுப்பு எந்நேரமும் தகதகவென எரிந்து கொண்டிருக்கும். ஜன்னலில் சாய்வாக முகத்தை சாய்த்த படி நின்ற கவியைப் பார்த்து," எப்படி தாயீ, இந்த ராட்ஷஷன்ட மாட்டினே. நான் ஒரு பத்து வருஷமா இங்கே தான் கடை போட்டிருக்கேன். மூத்தாளை படுத்தினான் பாரு, அவ செத்த அன்னைக்கு ஒரே சண்டை. இவனே கொளுத்தி இருப்பான். சிலிண்டர் வெடிச்சிடுச்சின்னு கதை விட்டுட்டான். சுத்து முத்தும் ஒரு ஆளிட்ட பேச மாட்டான். பார்த்து சூதனமா இருந்துக்க தாயீ."

எதுவும் பேசாமல் கட்டிலில் போய் விழுந்தாள்." தவறு செய்து விட்டோமோ. எப்படி சமாளிக்க போகிறோம். என்ன ஒரு மாதம் தானே ஆச்சு. அம்மாவிடம் பேசிப் பார்ப்போமே. கோபப்பட்டாலும் சரியான வழி சொல்வாளே. " போன் ரிசிவர் எடுத்து நம்பர் டயல் செய்தாள். " உங்கள் தொலை பேசியில் இந்த வசதி இல்லை." ஒரு அக்கா நிறுத்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவள் கை நடுங்கத் தொடங்கியது. கூடுக்குள் மாட்டிய எலி போல் மனம் அங்கும் இங்கும் ஓடத் தொடங்கியது. "மாட்டிக் கொண்டோமோ"

திருமணம் ஆன உடனே எதோ காரணம் சொல்லி தன் செல் போனை வாங்கி வைத்துக் கொண்டான். தான் நிராதரவாக இருப்பதாகப் பட்டது. கொஞ்சம் கோபக் காரன் ஆனாலும் நல்லவன் தான். ராத்திரி சந்தோஷமா இருக்கும் போது சொல்லி பார்க்கலாம். ச்சே! அந்த வடைக்காரர் எதோ குழப்பி விட்டுட்டார். எல்லாம் சரி செய்து விடலாம் ." தனக்குத்தானே தைரியம் சொல்லி ரேடியோவை ஆன் செய்து பிரம்பு ஊஞ்சலில் சாய்ந்து மெல்ல ஆடிக் கொண்டே சிந்தனையிலிருந்து விலக முயற்சித்தாள்

(இன்னும்)

28 March, 2010

சந்தேகக் கேடு

நவீனும் கவிதாவும் கைக்கெட்டும் தூரத்தில், கடலல்ல அவர்கள் கை எட்டும் தூரத்தில் கடற்கரையில் இருந்தார்கள். நவீன் கல்லூரி விரிவுரையாளர். கவிதா அவர் மாணவி. கவிதாவின் கல்லூரி வாழ்க்கை நாளையோடு முடிகிறது.

"ரொம்ப நேரமா எதுவும் பேசாம இருக்கிறது போர் அடிக்கிது. ஏதாவது பேசுங்க" கவிதா

அவன் பார்வை போகும் திசையை பார்த்தாள். ஒரு இளைஞனும் இளைஞியும் தலையோடு தலை முட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். கண்ணுக்கு எதிரே கடல் , அலைகளை வைத்து விளையாட்டுக் காட்டி கொண்டிருக்க, அவர்கள் மணலில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்.

"சொல்லுங்க நவீன். நாளைக்கு நான் ஊருக்குப் போகணும். எத்தனையோ நாள் நாம வெளியில மீட் பண்ணி இருக்கோம். ஆனா நீங்க அதிகம் பேசினதே இல்லை. என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்க தானே? "
எதிரில் ஒருவன் அவளையே வெறித்துக் கொண்டிருக்க நவீன் முகமெல்லாம் சிவக்க எட்டி அவன் சட்டையைப் பிடித்தான். "டேய்" "நீ முன்ன பின்ன பெண்களைப் பார்த்ததில்லை? "அவன் நமட்டுச் சிரிப்பால் நவீனை எரிச்சல் படுத்தினான். கவிதாவுக்கு பெருமை பிடிபடவில்லை. "நம்மை ஒருவன் பார்ப்பதையே பொறுத்துக்கொள்ள முடியலியே, இவர் நிச்சயமாக பத்திரமாக பார்த்துக் கொள்வார்னு" அவளாகவே முடிவெடுத்துக் கொண்டாள்.
" ஏன் கவி, இத்தனை பேர் இருக்கும் போது உன்னை ஏன் பார்த்துக் கொண்டே வந்தான்? நீ ஏதாவது ரியாக்க்ஷன் கொடுத்தியா? "திடுக்கிட்டு நிமிர்ந்தாள், "இல்ல ஒரு மாதிரி நமட்டு சிரிப்பு சிரித்தான். அதான் கேட்டேன்."
"விளையாடாதீங்க. நான் கல்லூரியில சேர்ந்த முத நாளே என்னை நீங்க இப்படித்தானே வெறித்துப் பார்த்தீங்க. நான் ஏதாவது ரியாக்க்ஷன் கொடுத்தேனா? உமா வந்து "உங்க மனைவி தீப்பிடித்து இறந்து போய்ட்டாங்க. அதிலிருந்து நீங்க இப்படித்தான்னு சொன்னா. "

அதுக்கு அப்பறம் கமலும் சிம்ரனும் "....யாரு நீயா நானா?" னு பாடுவாங்களே அது மாதிரி யார் காரணம்னே தெரியாம ரெண்டு பெரும் ரொம்ப நெருங்கிட்டோம். "சொல்லுங்க எப்போ நம்ம கல்யாணம்? "
கவிதா கேட்டாளே ஒழிய சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறோமானு அவளுக்கே சந்தேகம் தான். ஆனால் ஏனோ இன்று அவள் பேசுவது எதுவும் அவள் கட்டுப்பாட்டில் இல்லை. நவீன் மிகச் சிறந்த ஆங்கில விரிவுரையாளன். அவன் காதல் கதைகளை விவரிக்கும் போது மயங்கிப் போய் கதாநாயகி இடத்தில் தன்னை பொருத்திக் கொள்வாள். ஹீரோ சொல்லுவதை எல்லாம் அவன் தன்னிடம் சொல்லுவதாகவே கற்பனை செய்வாள். இந்த கிறுக்குத் தனத்தை எல்லாம் யாரிடமும் கூறாமல் அவனிடம் மட்டுமே கூறியதால் இன்று முற்றிப் போய் இருக்கிறது.
"நான் யோசித்து முடிவு எடுக்க நினைச்சேன். ஆனா நீ ரொம்ப சொல்றதால
நாளை திருச்செந்துர்ல போய் சாமி மின்னாடி தாலி கட்டிறேன் . அப்படியே விடுமுறை முழுவதும் கொடைக்கானல் , ஊட்டி னு சுற்றிட்டு வருவோம். வந்து உன் பெத்தவங்களை சமாதானம் செய்ய முடியுதான்னு பார்ப்போம். இப்போவும் சொல்றேன் கவி நீ சொல்றதால தான் இந்த கல்யாணம்."

கவி ஒருவித பரவச நிலைக்கு வந்து விட்டாள். காதல் என்பது, தான் நம்புவதை மட்டும் காட்டி மற்றதை மறைத்து கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடி விடுகிறதே. இப்பொழுது கை எட்டும் தூரத்தைக் கடந்து விட்டாள். நவீன் அருகில் நெருங்கி அவன் தோளில் தலை சாய்ந்தாள். எந்த அசைவும் இல்லாமல் நவீன் இருப்பதைப் பார்த்ததும் தோளில்சாய்ந்தபடி கண்களை உயர்த்தினாள். ஆனால் அவன் கண்களோ சுற்றி சுற்றி எந்த இளைஞனாவது அவளைக் கவனிக்கிறானா என்பதிலேயே இருந்தது. வழக்கமான சந்தேகம் அவளுக்கு இப்பொழுதும் தலை தூக்கியது "தான் எடுத்த முடிவு சரி தானா?"

மறு நாள் தேவதை போல் வந்திருந்த கவிதாவை கண் கொட்டாமல் பார்த்தான். நவீனும் ஆண்மை நிறைந்தவன் தான். தன்உரிமையைக் காட்டும் விதமாக அவள் நெற்றியில் விழுந்த ஒற்றை முடியை ஒதுக்கி ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தான். கோவிலில் பூசாரி மந்திரித்துக் கொடுத்த தாலியை கையில் வாங்கியவன் இன்னும் தன் கழுத்தில் கட்டாமல் என்ன செய்து கொண்டிருக்கிறான், குனிந்திருந்த கவி மெல்ல நிமிர்ந்து அவன் கண் போன திசையில் நோக்கினாள். அங்கே ஒரு இளைஞன் கண்களை மூடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தான். நவீன் மெல்ல முணு முணுத்தான், "ராஸ்கல் இவ்வளவு நேரம் உன்னைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பார்த்ததும் சாமீ கும்பிடுற மாதிரி நடிக்கிறான்."அவன் குரலில் தீ பறந்துக் கொண்டிருந்தது. அவள் மனக் குரல் மெல்ல கேட்டது "நீ சரியான பாதையில் தான் போய்க் கொண்டிருக்கிறாயா?" கவி நடுங்கும் குரலில் மெல்ல " நீங்க முதல்ல தாலியக் கட்டுங்க." என்றாள். கட்டிவிட்டான்.

அடுத்த இரண்டு மாதங்களும் எப்படியோ ஓடி விட்டன . கல்லூரி முடிந்து மகள் வீட்டுக்கு வரவில்லை என்று பெற்றோர் கல்லூரிக்கு சென்று விசாரிக்க அவள் உரிய நாளில் விடுதியைக் காலி செய்து சென்றது தெரிந்ததும், பதற்றம் அதிகரித்து அவளின் தோழிகளிடம் விசாரித்தனர். துப்பு கிடைக்காமல் வேறு வழி இன்றி போலீசிடம் சரணடைய போலீஸ் விசாரணையில் ஒரு தோழி சொன்னாள் 'அவ எதுவும் என்னிடம் சொன்னதில்ல ஆனா நவீன் சார் கிளாசில மட்டும் அவ ஒரு பதற்றத்திலேயே தான் இருப்பா. சார் அவ இருக்கிற பக்கமே பார்க்கமாட்டார். நாங்க பேசினா சார் நல்லா ஜாலியா பேசுவாங்க ஆனா கவி எதாவது சந்தேகம் கேட்டாக் கூட பதிலே சொல்ல மாட்டாங்க. "

போலிசுக்கு இது போதுமே. விசாரித்து கொடைக்கானல் போய் சேர்ந்தார்கள்.
அப்பொழுது நவீனும், கவியும் ஊட்டி ஏரி சுற்றிப்பார்க்க புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். " ஹேய், இன்னும் கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணிக்கலாமே." நவீன் அவளை வளைத்த படி கன்னத்தில் மெதுவாக மீசையால் கூச்சம் ஊட்டினான். கவி இந்த பத்து நாட்களில் மிகுந்த குழப்பத்தில் இருந்தாள். தனியே இருக்கும் போது இவனைப் போல் ஒரு கணவன் இருக்க முடியுமா என்னும்படி அன்பைப் பொழிகிறான். வெளியே போனால் ஒரு நாளும் சண்டை ஏதும் இல்லாமல் திரும்ப முடிவதில்லை.

தன் மார்பு வரை மறைத்திருந்த shawl சுருக்கி தன் கழுத்தை ஒட்டிப் போட்டாள். ஒரு நொடியில் sleeveless சுரிதாரில் glamour girl ஆகி இருந்தாள். "போலாமா"
ஒரு சாதாரண நிகழ்ச்சி TV இல் ஓடிக் கொண்டிருக்க, 'போலாம்' என்றான்.
நிமிட முள் ஆறு எண்களைக் கடந்த பின்னும் அசையாதிருந்தான்.

"என்னங்க, போலாமே,"

"ம்ம்ம், ஏன் கவி, நாம இன்னைக்கு ஊட்டி ஏரிக்கு போறது உன் நண்பர்கள் யாருக்காவது தெரியுமா? "

"இல்லையே , நமக்கு திருமணம் ஆனதே நான் இன்னும் யாருக்கும் சொல்லல. ஏன் கேட்கிறீங்க?"

" சொன்ன உடனே ஸ்டைலை மாத்திக்கிற மாதிரி டிரஸ் பண்ணி இருக்கியே. என் முன்னாடி ஒரு மாதிரி நான் இல்லாதப்ப ஒரு மாதிரி இருக்கலாம்னு தானே."

"ச்சே ! இதுவே உங்களுக்கு வழக்கமா போயிடுச்சு. எதாவது நீங்க சொன்னா உங்களுக்கு பிடிக்கிற மாதிரி இருக்கலாமேனு மாத்தினா சந்தேகத்தோட பேசுறீங்க. ரெண்டுல எதை சுய நினைவில செய்றீங்கன்னு தெரியல. "

"என்னடி சொன்னே?"

தாட்டியான உருவமானவன், உள்ளங்கைகளை விரித்து அவள் கழுத்தை நெருக்கி தலையை சுவரோடு அழுத்தினான்.

மூச்சுத் திணற இருமினாள், "Be careful. யாரைப் பார்த்து சந்தேகப் படுறேன்னு சொன்னே. "

அவன் உதடுகளின் நடுக்கம் அவனை சந்தேகத் தீ தான் தகித்துக் கொண்டிருக்கிறது என்றது. கைகளை உதறி தண்ணீர் பாட்டிலை வாயில் சாய்த்தான். பாதி வாயினுள்ளும் மீதி அவன் உடலை நனைத்தும் வழிந்து கொண்டிருந்தது. விருட்டென்று வெளியேறினான்.

அவன் மீதி வைத்த நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்தாள். அவனைப் போல் வழிய வழிய குடிக்க முடியாது. தண்ணீருக்காக ரூம் பாயை வரச் சொன்னால் அவனை வரச் சொல்லி என்ன செய்தாய் என்று கூசாமல் கேட்பான்.
அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. அம்மா மடியில் படுத்து சத்தம் வராமல் அழ வேண்டும். தன் உடல் அதிர்வை வைத்தே தன் அழுகையைக் கண்டு பிடித்து மெல்ல தட்டிக் கொடுப்பாள். அம்மாவை உடனே பார்க்கணும் போல் இருந்தது.
(இன்னும் வரும் )