Bio Data !!

30 October, 2021

 # புத்தக விமர்சனம்

இந்திய இலக்கியச் சிற்பிகள்.

எழுத்தாளர் லா.ச.ரா பற்றி எழுதியவர் லா.ச.ரா.சப்தரிஷி

இன்று லா.ச.ரா அவர்களின் ஜன்ம தினமும் இறப்பு தினமும். எத்தனை பேருக்கு இப்படி அமையும். 

இது சாகித்ய அகடமி வெளியீடு. விலை ₹50/-

பதினைந்து தலைப்புகளில் எழுதி உள்ளார். இதன் கூடுதல் சிறப்பு மகனே தந்தையைப் பற்றி எழுதுவது.

அவருடைய மொத்த புத்தகங்களையும் மனப்பாடம் செய்தவர் போல ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் அது எந்த எந்த கதையில் எந்த விதமாக வருகிறது என்று ஒரு ஆய்வு மாணவரைப் போல குறிப்பிடுகின்றார்.

"லா.ச.ரா பற்றி நான்" என்பது முதல் தலைப்பு. அதில் அங்கங்கே ஆங்கில சொற்றொடர்களை ஆங்கில எழுத்துக்களிலேயே சொல்லி இருப்பது லா.ச.ரா வின் தனித்துவத்தைப் பிரதிபலித்தது.

லாசரா அவர்கள் கதைக்கான தலைப்பைத் தீர்மானித்துக் கொண்டு தான் எழுதத் தொடங்க வேண்டும் . சில சமயங்களில் தலைப்புக்கே கதையை மேலே தள்ளிக் கொண்டு போகும் சக்தி உண்டு என்பாராம்.

லாசராவை பிடிக்காதவர்கள் லாசராவைப் படிக்காதவர்கள். அவர் எழுத்தை புரிந்து படித்து உள்ளே இறங்கி விட்டோமானால் அவரை வெளியேற்றுவது கடினம். அவர் எழுத்தின் மயக் அப்படிப்பட்டது என்கிறார் நூலின்  ஆசிரியர்.

லாசரா அவர்கள் அவருடைய எழுத்தில் தான் பேசுவதாக நினைப்பதில்லை. அவர் மூலமாய் அவர் எழுத்து மூலமாய் அவர் மூதாதைகளே பேசுவதாய் நம்புகிறார்.

சப்தரிஷி அவர்கள் "எல்லா வார்த்தைகளையும் இந்த கதையிலேயே போட்டு விட்டால் அடுத்த கதைக்கு என்ன செய்வீங்க" என்பாராம். அதற்கு லாசரா "உலகத்திலே எல்லோருமே மூச்சு விடுகிறோம். காத்து தீர்ந்தா போய் விட்டது" என்பாராம். 

"அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்துக் கொள்கையில் மார் மேல் மார்பு அழுந்தித் திணறுகையில் அவள் தொண்டையிலிருந்து புறா முனகல் வெளிப்படுகையில் .............இப்படியே தொடர்கிறது. இவர் சொல்லின் செல்வர் அல்லாமல் வேறெவர்? 

அவர் எழுதிய புத்தகத்தின் பெயரான சிந்தா நதியை " ஸிந்தா நதி" என்கிறார்கள். நதி ஸிந்தாமல் இருக்குமா? அது சிந்தா நதி ( Chindha nathi) சிந்தனை நதி என்பாராம்.

லாசரா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டாராம்." சாவே உன்னை ஏற்கிறேன். ஏனெனில் எனக்கு வேறு வழி இல்லை. நீ நியதி. உன்னுடன் என்றுமே சமாதானமாக முடியாது. நீ பலவான். ஆனால் நியாயவான் இல்லை' என்றாராம்.   உண்மை தானே. வேற வழியில்லை. சாவை ஏற்றுத் தானே ஆக வேண்டும்.

கவிஞர் வாலி அவர்கள் லாசரா பற்றி இப்படி சொல்லி இருக்கிறார். " லாசரா இலக்கிய உலகின் பிதாமகர்.அவர் ஆஞ்சநேயர். அவருக்குத் தன் பலமே தெரியாது. வார்த்தைகள் வரிசையா வந்து அவர் வீட்டு வாசலில் நின்று லாசரா நம்மைப் பற்றி பேசாரா என ஏங்கும்." 

எழுத்தாளர் பிரபஞ்சன் லாசராவை "சொல் வலை வேட்டுவன்" என்கிறார். லாசராவின் எழுத்துகளைப் பற்றி பல எழுத்தாளர்கள் பேசியதும். இறுதியில் அவரே தன் எழுத்து பற்றி பேசியதும் வாசிக்க வாசிக்க திகட்டாதவை.

30.10.1916 இல் பிறந்த லாசரா தான் எழுத ஆரம்பித்து மிகச் சரியாக எழுபத்தி ஐந்தாம் வருடத்தில் 30.10.2007 இல்  மறைந்தார். தனது மனைவி ஹேமாவதியுடன் 62 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இவருக்கு நான்கு மகன்களும். ஒரு மகளும் உள்ளனர்.

்என்னைப் பின்னிருத்திக் கொண்டு முடிந்த வரை லாசராவின் வார்த்தைகளிலேயே சொல்லி இருக்கிறேன் என்கிறார் சப்தரிஷி.

இந்த புத்தகம் வாங்கி பொக்கிஷமாக நம் வீட்டில் வைக்கப் பட வேண்டிய ஒன்று.

25 October, 2021

# புத்தக விமர்சனம்

 "ஒரு கோட்டுக்கு வெளியே" 

எழுதியவர் சு.சமுத்திரம்.


ஒரு முன்னேற்றமடையாத ஜாதி பாகுபாடு அதிக முக்கியத்துவம் பெற்ற கிராமம். அங்கே தவறு செய்ததாகக் கருதியவர்களை வட்டமாக ஒரு கோடு வரைந்து அதற்குள் வைத்து அதை விட்டு வெளியே வர விட மாட்டேன் என்கிறார்கள். அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தண்டனைத் தொகையை கட்டிய பின் தான் வெளியே விடுவார்கள். 


உலகம்மை என்னும் ஒரு அப்பாவிப் பெண்ணும். அவள் தந்தையும் தான் கதையில் முக்கியமானவர்கள்.  தனக்குத் தர வேண்டிய  பாக்கி பணத்தை தரவில்லை என்று வட்டமாக ஒரு கோடு வரைந்து உலகம்மையின் தந்தையை அதனுள்  நிறுத்துகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. 


ஜாதி உயர்வு தாழ்வு என்றாலே அது பிராமணர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது போல் ஒரு மாயை இருக்கிறது. ஆனால் அனேகம் பேருக்கு  ஜாதி வரிசையில் தனக்கு கீழே இருப்பவர்களை தன்னை விட தாழ்ந்தவன் என்று இழிவாய் நடத்தும் பழக்கம் தான் இருந்திருக்கிறது. இருக்கிறது. இன்று ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு பெண் முடி திருத்தும் தொழிலாளியின் தாய் "சேரியிலிருந்து வருபவர்களுக்கு என் மகன் முடி திருத்த மாட்டான் " என்கிறாள். தெளிவாகத் தெரிகிறது சேரி என்று குறிப்பிடுவது அவர்களை விட தாழ்ந்த்தாக நினைக்கும் மக்கள் குடியிருக்கும் பகுதியை என்பது. பதிவு எழுதும் போது சரியாக அந்த வீடியோ பார்க்க கிடைத்தது.


உலகம்மையையும் ஊர் தள்ளி வைத்திருக்கிது. "ஒரே ஒரு தீக்குச்சிக்காக அவள் அப்படி நடக்கும் போது அவள் வயிற்றில் ஒரு தீக்குச்சியை வைத்திருந்தால் அதில் தீப்பிடித்திருக்கும்" இதை விட அழுத்தமாய் ஒரு பெண்ணின் வலியைச் சொல்ல முடியாது. 


"பாரதம் கிராமங்களில் வாழ்வதாக பல தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அந்த கிராமங்கள் சேரிகளில் வாழ்கின்றன என்னும் உண்மை இன்னும் பலர் காதுகளுக்கு எட்டவில்லை" என்று ஆசிரியர் கதை எழுதும் போது சொல்லி இருக்கிறார். இத்தனை ஆண்டு காலத்தில் இது மாறி இருக்குமென்றே நம்புவோம்.


கிழவரான உலகம்மையின் தந்தை,  ஐவராசா தன் வீட்டிலிருந்து வெளியேற இருக்கும் ஒரே பாதையையும் அடைப்பதை தடுக்க ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரையாக கெஞ்சும் இடம் பரிதாபத்தின் உச்சம்.


இறுதியில் உலகம்மை எடுக்கும் அதிரடி முடிவு ஜாதி ஜாதி என்று வெறி பிடித்து அலைபவர்களுக்கு கொடுக்கும் சவுக்கடி. அப்பொழுது எல்லோரும் அவளை மன்னிக்க தயாராய் இருக்கிறார்கள். ஆனால் அவள் முடிவில் மாற்றமில்லை.


"பெத்தவன்" . எழுதியவர் இமையம். இதுவும் சாதிகள் நர்த்தனம் புரியும் கதை தான். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தங்களை விட தாழ்ந்ததாக சொல்லப்பட்ட ஜாதி சார்ந்த ஒரு பையனை காதலித்ததற்காக ஒரு பெண் கடந்து வரும் அவஸ்தைகள் தான் கதை. அந்த காதலை கை விட அவளுக்கு நடக்கும் அநியாயங்கள் கற்பனை என்று கடந்து விட முடியாது. இன்றும் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.   சமுதாயம் ஒருவனது சொந்த வாழ்வில் ஓரளவுக்குத் தான் தலையிட முடியும். அவரவர்க்கான முடிவை அவரவர் தான் எடுக்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்லிக் கொடுக்கும்  கதை.

40₹ விலையில் ஒரு அதி அற்புத நாவல். பெத்தவன் பெரியவன்.

01 October, 2021

 #cinema சினிமா

You tube இல் ஆதாமின்ட  மகன் அபு என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். படத்தின் பெயரே உரைப்பது போல ஒரு முஸ்லிம் தம்பதியர் ஹஜ் யாத்திரைக்காக பணம் சேர்க்கிறார்கள். அவர்கள் ஹஜ்  போனார்களா? திரும்பி வந்தார்களா என்பதைப் பற்றி சொல்லும் கதை.

கதையின் அத்தனை மாந்தர்களுள்  99.9% சதவீதம் நல்லவர்கள். அந்த .1% கெட்டவனும் மனம் மாறி சொல்லும் வசனம் நம் நெஞ்சில் அறையும்.

அபு ஹஜ்க்கு புறப்படு முன் ஒவ்வொருவரிடமாகப் போய் தான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளும் படி கேட்பார். அப்படி தன் பக்கத்து வீட்டுக்காரன் நிலத்துக்காக தன்னிடம் சண்டையிட்டவனிடம் செல்வார். அவன் ஒரு விபத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடப்பான். இவரைப் பார்த்தும்  ஒன்று சொல்வான். "நான் அல்லா ஏன் என்னை எடுத்துக் கொள்ளாமல் இன்னும் கஷ்டப்பட விட்டிருக்கிறான் என நினைப்பேன். நீங்க மன்னிப்பு கேட்க வரும் போது நான் இல்லாமலிருந்தால் உங்க மனம் வருந்தும். அது கூடாதுன்னு தான் என்னை இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வைத்திருக்கிறான். " 

ஹலால் என்பது உணவுக்கு தான் சம்பந்தப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த படம் பார்ந்த பிறகு தான் ஹஜ் செல்ல பயன்படுத்தும் பணம் சம்பந்தமாக கூட ஹலால் வருகிறது என்று புரிந்தேன். அபுவின் மனைவி ஹஜ் செல்ல தன் மகனை பணம் அனுப்ப சொல்லலாமா எனக் கேட்கும் போது அவர் மறுத்து இவன் எந்த வழியில் சம்பாதித்ததோ என்று சொல்லும் போதும் ஹலால் என்று வருகிறது. நம் இஸ்லாம் தோழர்கள் யாராவது தெளிவுபடுத்துங்கள்.

அபு என்ற முஸ்லிம், ஜான்சனாக வரும் கலாபவன் மணி  கிறிஸ்தவர் பள்ளி ஆசிரியர் , கோவிந்தன் மாஸ்டராக  வரும் நெடுமுடி வேணு மூவரும் நல்லவர்களாக இருப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறார்கள். அபு வாக வரும் சலீம் குமார் தேசிய விருது வாங்கினாராம். காமெடி நடிகர்களாக வருபவர்களிடம் தைர்யமாக இத்தகைய ரோல்களைக் கொடுக்கிறார்கள்.

என் கணவர் சொன்னார் "இவருக்கு நேஷனல் விருது கிடைத்திருக்கிறது. நேஷனல் என்ன  இன்டர் நேஷனல் விருதே கொடுக்கலாம். " ஆமாம் இந்த ஆஸ்கார் விருது கொடுப்பவர்கள் மென்னுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தால் இவர் நிச்சயமாக ஆஸ்கார் வாங்கி இருப்பார். இவர் மனைவியாக வரும் ஜரினா வகாப் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தின் இயக்குநர் சலீம் அகமதுவுக்கு இது முதல் படமாம். 

மலையாளப் பின்னணியோடு இயைந்து பார்க்கத் தக்க நல்ல ஒரு படம்.2011 இல் வெளி வந்த படம். எப்படியோ என் கண்ணில் இவ்வளவு நாள் சிக்கவில்லை.  யூட்யூபில் சப் டைட்டிலும் வருகிறது. கண்டிப்பாக பாருங்கள்