Bio Data !!

02 September, 2026

நாவல் : பஃறுளி ஆசிரியர் : நர்சிம் மிளிர் பதிப்பகம் . விலை ரூ 300 முதல் பதிப்பு : மே 2024 " குமரியில் இருந்து மதுரை நோக்கிப் பாய்ந்த நதி " னு சிலப்பதிகாரத்துல வரும் ஒரு நதியின் பெயர் தான் பஃறுளி. ஆம். அதாவது எல்லா நதிகளும் கடலை நோக்கிப் போகும் போது கடலிலிருந்து நகரத்தை நோக்கி ஒரு நதி ஓடி வந்தால் எத்தகைய விநோதமோ அதைப் போன்றது கதையின் கரு. 2007 இல் எழுதத் தொடங்கி இருக்கிறார் நர்சிம். சிறுகதை, நாவல் , கவிதை என மூன்று தளங்களிலும் எழுதக் கூடியவர்களுள் ஒருவர் இவர். மனித உறவுகளின் எழுத்தாளர் என்று எழுத்தாளர் பிரபஞ்சனால் பாராட்டப்பட்டவர் . இவர் எழுதிய "அய்யனார் கம்மா" என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு பெட்னா உட்பட பல விருதுகளை வென்று உள்ளது சிறுகதைகளிலேயே காதலை அழகுபடச் சொல்லும் ஆசிரியருக்கு பஃறுளி நாவல் ஒரு பெரும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது ஆசிரியர் கோவலன் கண்ணகியை விட்டுச் சென்று மாதவியுடன் வாழ்ந்து பின் திரும்பி வந்தது போல கண்ணகி சென்றிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற சிந்தனையில் எழுந்தது இந்த கதை என்கிறார் ஆசிரியர் . மாயக்கண்ணன், கோமதி இருவரும் புதிதாகத் திருமணமான இளம் தம்பதிகள். ஆசிரியர்கள். திருமணத்துக்கு பின் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்கள். அது மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளி. மதுரைக்காரரான நர்ஸிமுக்கு மதுரை தமிழில் கொஞ்சி விளையாட ஏற்ற தளம். காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மதுரை மக்கள் . நட்பும் அன்பும் விருந்தோம்பலும் அவர்கள் பேச்சிலேயே நடம் புரியும். மாயக்கண்ணனும் , அவர் தோழர்களும், முக்கிய உயிர்த்தோழனான தேவாவும் பேசும் இடங்கள் அவ்வளவு ரசிப்புக்குரியதாய் இருக்கும். கம்யூனிசத்தில் ஆர்வமுள்ள தோழர்களின் உரையாடலும் , கதை நடந்த காலத்தைக் குறிக்க தோழர் லீலாவதியின் மரணத்தை பேச்சின் நடுவில் கொண்டு வந்ததும் சிறப்பு. அந்தப் பள்ளி வளர்ச்சியின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் எம் கே என்னும் மாயக்கண்ணன் தான் வரவேண்டிய உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கு மாதவன் என்பவர் வருகிறார் என்பதாலேயே எதிரியாக பாவிக்கிறார். மாதவன், தன் மனைவியிடம் முகம் மலர பேசும் பொழுது மாயக்கண்ணனுக்கு பெரும் வில்லனாகவே மாறிவிடுகிறார். கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவது ஒரு சில அனுகூலங்கள் இருந்தாலும் பல நேரங்களில் இடைஞ்சலாகத் தான் இருக்கும். பணி நேர செயல்பாடுகளின் தாக்கம் வீட்டிலும் தொடரும். நர்சிம்மின் கதைகளில் எப்பொழுதுமே நாம் தெரிந்து கொள்ள ஒரு புது விஷயம் இருக்கும். இரும்பு ஸ்டாண்டில் மாட்டை நிறுத்தி அசை விடாமல் வைத்து மருத்துவர் வைத்தியம் பார்க்கும் விஷயம் இந்த நாவலில் எனக்கு பதாய் இருந்தது. " அடுத்து என்ன கேட்க போகிறாய் எனும் நோக்கில் நிமிர்ந்து நின்றது அவனை சலனமற்று இருக்கச் செய்தது." கோமதியை சந்தேக வார்த்தைகளால் கொல்லும் போது அவள் நேர் கொண்ட பார்வை அவனை மௌனமாக்குகிறது. பொதுவாக ஒருவர் மேல் சந்தேகம் வர பெரிதாக காரணம் ஒன்றும் இராது. அதை அலட்சியப்படுத்தினால் ஒன்றுமில்லாமல் போகக்கூடிய விஷயம் தான் நடந்திருக்கும். அதை பெரிதுபடுத்துவதாலேயே சில நேரங்களில் உண்மையாகி விடும் வாய்ப்புண்டு. மாதவனிடம் கோமதி இயல்பாக பேசுவது கூட மாயக்கண்ணனுக்கு விகல்பமாகத் தோன்றி அவன் மனதின் அமைதியை குறைக்கிறது . மொத்த வீட்டின் அமைதியையே அழிக்கிறது. அன்பைக் காட்டுவது போல் அக்கரை இருப்பது போல் காட்டி பெண்ணைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் தந்திரம் தான் மாயக் கண்ணன் பயன்படுத்துவது. "நம்மளப் பிடிக்காமப் போயிடுமோங்கிறத விட இன்னொருத்தர பிடிச்சிறக் கூடாதுன்ற பயம் தான மதி மருள வைக்கிது" // ஆண் மனதை பெண்களுக்கு புரிய வைக்கும் இது போன்ற வரிகள் பல உண்டு. "நீயெல்லாம் ராஜா மாணிக்க இருந்தா மட்டும் போதாதுடா ராஜா மாணிக்க யோசனையும் பண்ணணும் . சிலத பத்தியெல்லாம் யோசனை கூட பண்ணக் கூடாது" "தகரத்துல சேர் செஞ்சு பளபளன்னு இருக்கேன்னு சொல்லுறதா தேக்குல உட்கார்ந்தவன் போவியா" அதே போல தன்னம்பிக்கை அற்ற ஆண்களுக்கு சரியான அறிவுரை சொல்லும் இது போன்ற வரிகளும் உண்டு. "யாரும் யாரிடமும் தன்னை குற்றவாளியாகக் காட்டிக் கொள்ள தயாராக இல்லை எல்லோருக்கும் ஒரு நியாயம்" இன்றைய நடைமுறையில் மனித மனம் கொண்டுள்ள மாற்றத்தை எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளாத மன நிலையையும் நடுவே காட்டுகிறார். எம். கே ( மாயக் கண்ணன்) தன் நண்பனின் கல்யாண வேலையா சுத்தும் போது கோமதி அவளுக்குப் பிடிச்சதைச் செய்யலாம்னு சொல்ற லிஸ்ட்ல "நினைச்ச நேரம் கழிவறை போகலாம்' னு எப்படி சேர்த்தீங்க நர்சிம். காலை நேர அவசர வேளை(லை)யில் இந்தக் கழிவறைப் பிரச்னையால் உடல் நலம் குன்றிய பெண்கள் எத்தனை பேர் தெரியுமா. அதிகம் பேசப்படாத ஒரு பிரச்னையை மெல்லத் தொட்டு கடந்து விட்டீர்கள். யதார்த்தமான வாழ்க்கையைச் சொல்லி நகர்ந்து செல்லும் கதை. மதுரையின் கள்ளழகர் ஆற்றிலிறங்கும் வைபவத்தை நேரிலிருந்து பார்த்தது போல் உணர வைக்கும் கதை.

29 August, 2026

பௌர்ணமிப் பெண்ணின் நிறை அழகிலும் மயங்காது மாமுனி போல் இறுகி இருண்டு கிடந்த நீள் நீர்ப்பரப்பின் "சுனாமி" எனும் கோரத் தாண்டவம் என் ரசனையைச் சிதைத்த நேரம் தான் வந்தது ஒரு செய்தி " நேபாளத்தில் பேரழிவு" எங்கள் "இதய" தேசத்தின் ஒரு பகுதியை அரணாய்க் காத்த வெண்பனி சூழ் இமயத்திலும் உலக வெப்பமடைதலால் அமைதியான அதிரடித் தாக்குதல். பேரிரைச்சலோடு நீர் கிளம்பி வரும் போது மக்களோடு மாக்களையும் கபளீகரம். இங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் எங்கே!! இதயத்தின் வலியை இடது கை உணர்த்துவது போல இமயத்தின் வலியை உலகுக்கு உரக்க உரைத்திருக்கிறது நேபாளம். உயிரைத் தவிர அத்தனையும் அடித்துச் செல்வதை பரிதவித்து பார்த்து நிற்குது ஒரு குடும்பம். ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு உயிரைக் காத்துக் கொண்ட முதியவர் இருவர். நீரின் வேகத்திலும் நீந்திக் கரை சேர்ந்த பரிக்களின் கூட்டம் ஒன்று. விதி உள்ளோர் பிழைத்துக் கொள்ளட்டும் எனக் விழி மூடிக் கிடந்தது பிரபஞ்சம். உடம்பானாலும் உலகமே ஆனாலும் கட்டுக்குள் இருந்தால் மட்டுமே அற்புதம். என்ன செய்யப் போகிறோம் நாம்.

27 August, 2026

உடன்படிக்கைப் பேழை. இன்றைய ஹிந்து திசை நாளிதழில் என் எழுத்து

உடன்படிக்கை பேழை என்றொரு சொற்றொடர் வேதாகமத்தில் அடிக்கடி வரும். அது என்ன உடன்படிக்கை பேழை? தூய்மையான தங்கத்தால் மூடப்பட்ட ஒரு புனித மரப்பெட்டி. இஸ்ரவேலுடன் கடவுள் தொடர்பு கொண்ட ஒரு சாதனமாக நம்பப்பட்டது. சித்திம் மரத்தால் செய்யப்பட்டு உள்ளேயும் வெளியேயும் தங்கத்தால் பூசுவார்கள். இதன் மூடியை "கிருபாசனம்" என அழைப்பார்கள் . அந்த மூடியின் மேல் இரண்டு வான தூதர்கள் நிற்பது போன்ற அமைப்பு இருக்கும் . அந்த உடன்படிக்கை பேழைக்குள் ஆண்டவர் மோசேயிடம் தந்த பத்துக் கட்டளைகள் எழுதிய இரண்டு கற்பலகைகள் , மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரம், துளிர்த்த ஆரோனின் கோல் ஆகியவை இருக்கும் . இது "சாட்சிப் பெட்டி " என்றும் அழைக்கப்படும். மோசேயின் பிறப்பு ஒரு சுவாரசியமான விஷயம் . எகிப்து மன்னர் ஒருவர் எபிரேய மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா இருவரிடமும் தன் நாட்டுல் பிறக்கும் குழந்தைகள் ஆண் மகவுகளாக இருந்தால் கொன்று விடுங்கள். பெண் குழந்தைகள் ஆனால் வாழ விடுங்கள் என்று கட்டளையிட்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் ஆண் குழந்தைகளைக் கொல்லாமல் தப்புவித்து மன்னர் விசாரித்த போது எபிரேய பெண்கள் வலிமையானவர்களாக இருப்பதால் நாங்கள் போகும் முன்னே குழந்தை பெற்று விடுகிறார்கள் என்றனர். எனவே மன்னர் தன் குடிமக்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் நைல் நதியில் வீசி விட வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பிறந்தால் வாழ விடலாம் என்றும் ஆணையிட்டார். அந்த சமயத்தில் லேவி குலப் பெண் ஒருத்தி அழகான ஆண்மகவை பெற்றாள். மூன்று மாதங்களாக மறைத்து வைத்துப் பின் முடியாத போது கோரைப் புல்லால் ஒரு பேழை செய்து அதன் மேல் நிலக்கீல் பூசி அதனுள் அக்குழந்தையை வைத்து நைல் நதியின் நாணலுக்கு இடையில் விட்டாள். குழந்தையின் சகோதரி மறைந்திருந்து பார்த்திருந்தாள். அப்போது பார்வோன் மன்னனின் மகள் நீராட வந்தாள். அந்த பேழையை எடுத்து அதனுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கண்டாள். அழும் குழந்தையைக் கண்ட அதன் சகோதரி இளவரசியிடம் சென்று " இந்த குழந்தையைப் பாலூட்டி வளர்க்க ஒரு செவிலியை நான் அழைத்து வரவா?" என கேட்கச் சம்மதம் கிடைத்ததும், குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். குழந்தை வளர்ந்த பின் இளவரசியிடம் கொண்டு விட "நீரிலிருந்து கிடைத்த மகன்" என்பதால் "மோசே" எனப் பெயரிட்டு வளர்த்தாள். மோசே தன் இனத்தவன் ஆகிய எபிரேயனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைப் பார்த்து சுற்றிலும் யாரும் இல்லை எனக் கண்டு அவனைக் கொன்று மணலுக்குள் புதைத்தார். தான் செய்தது வெளியே தெரிந்து விட்டது என்ற அச்சத்தில் , பார்வோன் மன்னன் தன்னை கொல்லத் தேடியதால் தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியேறி, சிப்போரா என்ற பெண்ணை மணந்தார். அந்த மிதியானில் சீனாய் மலையில், ஒரு எரியும் முட்புதரிலிருந்து ஆண்டவர் உரத்த குரலில் பத்து கட்டளைகளைக் கூறி, இரு கற்பலகைகளில் எழுதி, மோசே இடம் தந்தார். இந்தப் பத்து கட்டளைகளையும் முக்கியமான இரண்டு கட்டளைகளில் அடக்கலாம். (1) உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் மனதோடும் உன் தேவனாகிய ஆண்டவரை அன்பு செய்வாயாக. (2) உன்னை நேசிப்பது போல் உன் அண்டை வீட்டாரையும் அன்பு செய்வாயாக. அத்தனை மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றைத் தானே. அன்பு செய்வோம்.

22 August, 2026

Cocktail 2

ஹிந்தி திரைப்படம் காக்டெயில் 2. இயக்குநர் : 2012 இல் காக்டெயில் என்ற படத்தை இயக்கிய ஹேமி அவர்கள். முக்கிய கதாபாத்திரங்கள் ஷாகித் கபூர், ராஷ்மிகா மன்டனா, க்ருத்தி சனான், மீமீ படம் பார்த்ததிலிருந்து க்ருத்தி சனானின் பெரிய ரசிகை ஆகி விட்டேன் நான். முகம் அவ்வளவு அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும். ராஷ்மிகாவுக்கு ஒரு துள்ளல் முகம். அவர் முகம் காட்டும் புன்னகை ஒரு நேரம் அசட்டுத் தனத்தை பிரதிபலிக்கும். அடுத்த நொடி களங்கமற்ற தனத்தைக் காட்டும். அதனால் கதாநாயகன் ஷாகித் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் படம் பார்க்க நினைத்தேன். பள்ளிக் காலம் தொட்டே நண்பர்களாகி அதன் பின் காதலர்களாகி லிவ் இன்னில் வாழும் நாயகனும் நாயகியும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். எந்த வித ஆட்சேபணையுமில்லாமல் திருமணம் வரை செல்கிறதே என யோசிக்கும் போது, தன் காதலன் வாய்ப்புக் கிடைத்தாலும் உத்தமனாக இருப்பானா என ஒரு உருப்படாத சந்தேகம் அவளுக்கு வருகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இரண்டாவதை அனுபவிக்கலாமே என எண்ணம் வரும் ஆணுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறாள். ஒரு பெண் காதலனுடன் போகும் போது அழகான பெண்ணை உடன் வைத்திருப்பதே ஆபத்து. அதில் என் காதலனுக்கு சோதனையை ஏற்படுத்தி அவன் மனச் சுத்தமுடையவன் தானா என உறுதிபடுத்திக் கொடு என அந்த அழகான பெண்ணிடமே பொறுப்பைக் கொடுத்தால் எவ்வளவு நாசம் விளையும். அது தான் கதைக்கான கரு. ஆனால் படத்தின் முடிவில் ரெண்டு பெண்களையும் இடதும் வலதுமாக அந்த காதலன் வாங்கும் போது ஆண்கள் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும் . எந்த ஒரு நட்பும் அறிமுகமானதும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆனால் இன்றைய சமூக ஊடகம் அந்த புத்துணர்ச்சி என்றும் இருக்கணும் என்பதை வலியுறுத்துகிறது. அது நடைமுறைக்கொவ்வாதது. இதைப் புரிந்து கொள்ளாததாலேயே பல உறவுப் பிளவுகள் நேர்கின்றன. இன்றைய தலைமுறைக்கு நல்ல புரிதலை உண்டாக்கும் ஒரு படம். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு வசனங்கள் உண்டு. வேகமாகத் தொடரப் பழகி விட்டால் படம் நன்றாகவே புரியும். என்ன ஒன்று ஆரம்பத்தில் படம் ஒரு அடலட்ஸ் ஒன்லி படமாகவே இருக்கிறது. சிசிலி என்னும் இடத்தை "நன்றாகச்" சுற்றிக் காட்டி இருக்கிறார்கள். ஆனால் போகப் போக படம் தன் போக்கை மாற்றிக் கொள்கிறது. நல்ல ஒரு படம் பார்த்த உணர்வு.

18 August, 2026

#இடி தாங்கி

ஒரு பதிவு பார்த்தேன் அவர்கள் இருந்த அடுக்ககத்தின் மொட்டை மாடியில் இடி விழுந்து நெருப்பு பிடித்ததாகவும். ஒவ்வொரு வீடாக வந்து அவர்களை வெளியேற்றியதாகவும் சொன்னார்கள். எனக்கு நினைவடுக்குகளின் ஆழத்திலிருந்து ஒரு எண்ணம் கீறிக் கிளம்பியது. எங்க வீடு சர்ச்சுக்கு அருகில் தான். இப்போ இருக்குற அளவுக்கு பெரிய சர்ச் கிடையாது ஆனாலாம் கோபுரம் உயரமாக இருக்கும். அதன் உச்சியில் திரிசூலத்தின் அமைப்பில் ஒரு இரும்புத் தண்டு வைக்கப் பட்டிருக்கும். அதன் பெயர் இடிதாங்கி. எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தா அந்த இடி தாங்கி நல்லாத் தெரியும். அப்போ எங்க அப்பா சொல்வாங்க. இடி ஒஇழுந்தா சுற்று வட்டாரத்துல ரொம்பத் தூரத்துக்கு பாதிப்பு இருக்கும். அதனால தான் உயரமான இடத்துல அந்த இடிதாங்கிய வைப்பாங்க. இடி விழுந்தா அந்த இரும்புக் கம்பி இடியின் சக்தியை இழுத்து மண்ணுக்குள் அனுப்பி விடும். பக்கத்தில உள்ள வீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இராது. Shock obsorber னு இப்போ புரியுது. அப்போ நாம பாதுகாப்பா இருக்கிறோம்னு மட்டும் தான் தோணுச்சுது. இப்போ பெருநகரங்களில் உயர உயரமா கட்டிடங்களைக் கட்டுறாங்களே அங்கே எல்லாம் இந்த இடி தாங்கிகள் வைக்கிறாங்களா? எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே? இடி தாங்கிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கீங்களா இப்போ அவை இருக்கின்றனவா? கமென்ட்டுல சொல்லுங்களேன்.