Bio Data !!

10 September, 2026

OTT : Netflix படம் பெயர் : Newton's 3rd law இயக்குநர் : ராஜேஷ் கர்னா மொழி தெலுங்கு. தமிழிலும் டப்பிங் உண்டு. முக்கிய கதாபாத்திரங்கள்: சுமந்த், ஜெகதி பாபு, ட்ரிநாத் வர்மா, ரவி வர்மா, நேகா பத்தன் ஷெல்லி கிஷோர். கல்லூரியில நியூட்டனின் மூன்றாம் விதி படித்த ஞாபகம் இருக்குதா? Every action has an equal and opposite reaction. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. அது தான் கதையின் ஒரு வரி. கர்மா என்று சொல்கிறோம். அது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான வினையை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்துவது. ஒரு காலத்தில் தெய்வம் நின்று கொல்லும் என்றார்கள். இப்போ அப்படி இல்லை. நம் கண் எதிரே வினை புரிந்தவர்கள் அதன் பலனை அனுபவிப்பதை பார்க்கிறோம். இந்த கருத்துத் தான் படமெடுக்க வைத்திருக்கும். நன்றாக வாழ்ந்த குடும்பம் ஒன்று தங்கள் நகைக் கடை ஒன்று திருட்டுப் போனதால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறது. குடும்பத் தலைவன் இந்த துயரத்தில் குடியில் மூழ்கி விடுகிறார். தாய் குடும்பப் பாரம் தூக்கிச் சுமக்க செவிலியாகப் பணிக்குச் செல்கிறாள். தங்கள் ஒரே மகனை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் எனப் பாடுபட அவனோ தன் தாயையும் தந்தையையும் கடனில்லா சுபிட்ச வாழ்வு வாழ வைக்கத் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறான். காவல் துறை அதிகாரியாக வரும் சுமந்த் கட்டுடலுடன் கூட திருத்தமான முகத்துடன் அந்தக் கதாபாத்திரத்தின் குணநலன் பிரதிபலிக்க தோதாக வருகிறார். மகனாக கல்லூரி மாணவனாக வரும் ட்ரிநாத் வர்மா இள வயதின் துடிப்பை , வேகத்தை, அன்பும் அராஜகமும் கலந்த அந்த வயதின் வெளிப்பாட்டை சிறப்புறக் காட்டுகிறார். யதார்த்தம் உணர்ந்து நடிக்கிறாரே ஷெல்லி கிஷோர் என்று தேடிப் பார்த்தால் "தங்க மீன்கள்" படத்தில் நடித்திருக்கிறார். 2006 இல் கேரளா அரசு தொலைக்காட்சி விருது வாங்கி இருக்கிறார். மகன் தேர்ந்தெடுத்த தவறான வழியில் குடும்ப நிலை உயர்ந்ததா?? தன் தாய் தந்தையை சந்தோஷமாக வைத்திருக்க முடிந்ததா ? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். தவற விடக் கூடாத சிறந்த படம். த்ரில்லர் படங்கள் எடுப்பதில் மலையாளமும் தெலுங்கும் போட்டி போட்டு முன்னேறும் போது நாம் தமிழில் மட்டும் ஏன் இன்னும் பொட்டு வெடி வெடித்துக் கொண்டு இருக்கிறோம்.

08 September, 2026

நான் பொதுவாக அரசியல் பேசுவதில்லை. ஆனால் ஓரளவு அரசியல் தெரியும். என் தனிப்பட்ட கருத்தை நண்பர்களிடம் தனியாகப் பகிர்ந்து கொள்வேன். எந்தக் கட்சியின் கண் மூடித் தனமான தீவிர ஆதரவாளரும் இல்லை நான். கலைஞர் காலத்தில் அவர் பேசும் தமிழ் , வயதான காலத்திலும் அவருடையதான கடும் உழைப்பு பிடிக்கும். ஆனாலும் செல்வி ஜெ உடனான மோதலில் அவருடைய செயல்பாடு ரொம்ப அதிருப்தியைக் கொடுத்தது. எங்கள் வீட்டுக்குள்ளேயே எதிரெதிர் அணியாக நிறைய வாக்குவாதங்களைக் கொண்டு வந்தது. ஆனால் திரு ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியேற்ற பின் விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே குறியாக முன்னேறியது ரொம்பப் பிடித்திருந்தது . எவ்வளவோ நல்லது செய்தும் அவரது தொகுதியில் தோற்கடிக்கப் பட்டது மன உளைச்சலைத் தந்தது. தற்போதைய சூழல் எல்லார் மேலும் அதிருப்தியைத் தருகிறது. பாவப்பட்ட பொது ஜனங்களுக்கு நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையைப் போக்குகிறது் ஒரு சாரார் கூச்சலிடுவதும். அந்தச் சத்தத்தை மீறி பேசுபவர் பேசுவதும், தனது கை அசைவுகளாலேயே கூச்சலிடுபவர்களை மேலும் கூச்சலிட வைப்பதும் அயர்வைத் தருகிறது. ஒரு விதமான எதிர் மறை வைப்ரேஷன் பரவும். அது நல்லதில்லை. நாட்டுக்கும் தனிப்பட்ட மனிதர்களின் உடல் நலத்துக்கும். இது வரை நடந்ததைக் கூட அப்பாவி பொது ஜனம் அனுபவமின்மை என மறந்து போக வேண்டுமென்றால் ஒழுங்கைக் காக்க வேண்டியவர் கையறு நிலையில் அமர்ந்திருக்காமல் தலையிட வேண்டியது அத்தியாவசியம். வெளி நடப்பு என்பது நாகரீகமான முறையில் காட்டும் எதிர்ப்பு. பேசும் அத்தனை பேருமே கண்ணியம் காக்க வேண்டியது அத்தியாவசியம். அரசியல் மாற்றம் வேண்டும் என்று களமிறங்கிய 30+ 40+ காரர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடக் கூடாது. இது தவிர்க்க முடியாமல் வந்த அரசியல் பதிவு தான்.

07 September, 2026

#நாவல் அறிமுகம் #கருணைநதி

நாவலின் பெயர் : கருணை நதி ஆசிரியர் : மிதையா கானவி பதிப்பகம் : புக் வைப் விலை. : 180 ரூபாய் நூலாசிரியர் போர்க்களத்தில் கோரமான யுத்தத்தை நேரில் கண்டு , களத்தில் காயமடைந்து, உயிர் தப்பிய நேரடி சாட்சியம் . கதை இலங்கைப் போரின் போது மக்கள் பட்ட அவதிகளை சொல்கிறது. சொந்த வீடு விட்டு, நாடு விட்டு , தான் சேர்த்த அத்தனை செல்வங்களையும் இழந்து புலம்பெயர்வது பெரும் வலி. அதை விடக் கொடுமை போர் நடக்கும் இடங்களில் போராடிக் கொண்டே உயிர் வாழ்வது. ஆனால் அந்தத் தளத்திலும் அழகான ஒரு காதலை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். திவா 17 5 2009 வரை வன்னியிலிருந்து பின் இடம் பெயர்ந்து வவுனியா புனர்வாழ்வு மையத்தில் தஞ்சமடைந்தவன். மையத்தில் அவர்களை மாடுகள் போல் அடைத்து வைத்திருந்ததாகவும் நம் நாட்டில் மாடுகளுக்கு கூட அதைவிட அதிக சுதந்திரம் இருந்ததாகவும் எரிச்சல் அடைகிறான். போரில் தப்பி வந்து முகாமில் இருந்த சிலர் நோய்வாய்ப்பட்டும் இறக்கிறார்கள். படுத்துறங்கவோ உடைமாற்றவோ தனியிடம் எவருக்குமில்லை. ஒவ்வொரு வேளை உணவுக்கும் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது. கொஞ்சம் சமயம் தப்பிச் சென்றாலும் உணவு இல்லாமல் தவிக்க வேண்டி வந்தது. உணவு திண்டாட்டம் இப்படியானால் குடிப்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடான இடத்தில் குளிப்பது எப்படி . அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கே போராட்டம் . இதுதான் போரின் அவல நிலை. அங்கே ஒழுங்காக வாரப்படாத தலைமுடி, செருப்பில்லாத கால்கள் அழுக்கான ஆடையோடு தான் ஒரு காலத்தில், ஒருதலையாகக் காதலித்த மருத்துவர் சங்கவியை பார்க்கிறார் திவா. தன் நண்பன் கரன் மூலம் தன் உயிரோடு, பலரையும் காத்த அவள் இருப்பிடத்தை அறிந்து போரில் தான் தாக்கப்பட்டது, தனக்கு சங்கவி மருத்துவ உதவி செய்தது, காக்க முற்படும்போது அவளுடன் பணிபுரிந்த மருத்துவர் குண்டடிப்பட்டு இறந்தது எல்லாம் விளக்கமாக எழுதி கடிதம் போடுகிறான். போரின் வலிமிகு தருணங்களை வாசிக்க வாசிக்கப் பதை பதைத்து போகிறது நெஞ்சம் . ஆனால் அந்த கடிதம் சங்கவியின் மனநிலையை மாற்றி தன் அத்தியாவசிய கடமை என்ன என்று உணரச் செய்கிறது . கடிதம் எழுதியது யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே சங்கவியின் மருத்துவத் தொழிலுக்கு உதவி செய்கிறான் திவா. ஒரு முறை காதலைச் சொல்லத் தயங்கி இழந்த தன் காதலியை மறுபடியும் இழந்து விடக்கூடாது என்று பயத்தால் வந்த தயக்கம் அவன் காதலைச் சொல்ல தடை போட்டுக்கொண்டே இருக்கிறது. கடமையைக் காதலிக்கும் சங்கவியுடன் இடையில் வந்த தன் காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? முகாமிலேயே இருந்தார்களா? புலம் பெயர்ந்து வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்களா? எனப் பலப்பல கேள்விகள் எழலாம். "கருணை நதி " அதற்கான பதிலைத் தரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.

06 September, 2026

உள்ளம் நொறுங்காமலிருக்க உடைத்துப் பேசுவோம் பாகம் ஒண்ணு. பெண்கள் வேலைக்கு போகணும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேணும். பெண்கள் முன்னேறணும்னு பேசும் போதெல்லாம் சந்தோஷமாத் தான் இருக்குது. ஆனால் அந்தப் பெண்கள் மாதாந்தர நோவினால் படும் அவஸ்தைகளை நினைத்துப் பார்க்கிறோமா? இப்போ ஒரு சில பதிவுகளைப் பார்த்ததால் எனக்கும் எழுதத் தோன்றியது. ஆரம்ப காலங்களில் பெண்கள் பழைய துணியைப் பயன்படுத்தினார்கள். அது எந்த அளவுக்கு சுகாதாரமாய் இருந்திருக்கும்னு இப்போ நினைச்சாலே நடுங்குது. (நாப்கின் கண்டு பிடிச்ச மகராசனை கை எடுத்து கும்பிடணும். ) அந்தத் துணியை நம்ம சொந்த வீடே ஆனாலும் மறைவாய் பிறர் கண்ணில் படாமல் அலசிக் காயப் போட அவ்வளவு சிரமப்படணும். பதிமூணு பதினாலு வயதில் தண்ணீரை ஊற்றி காலால் தேய்த்து அதன் பின் சோப்பு போட்டு துவைப்பது மனதைக் கல்லாக்கும் முதல் கட்டம். துவைத்தாலும் கறையின் வெளிவரி மறையாமல் தான் இருக்கும். காற்றடிக்கும் போது வரும் மெல்லிய நாற்றம் உள்ளூர கூச வைக்கும். சகோதரர்களோடு பிறந்த பிள்ளைகளை, பொதுவான கழிவறை கொண்ட காம்ப்பௌண்ட் வீடுகளில் வாழ்ந்த பெண் பிள்ளைகளின் நிலை நினைத்தால் கண்ணில் இரத்தமே வரும். அந்த அழுத்தமான துணி பட்டு தொடையின் உள் பக்கம் சில நேரம் ரணமாகிப் போகும். ஒரு சிலருக்கு அந்த நேரத்தில் தொடை ஒன்றோடொன்று உரசுவதால் தீப்பட்டது போல் எரியும். இந்தக் கஷ்டங்கள் தான் காரணமோ பல பெண் குழந்தைகள் தாம் பெரிய பொண் ஆகி விட்டோம் என்று அறிந்ததும் அழும். காரணம் கேட்டால் தெரியாது. இப்போ பரவாயில்லை. ஓரளவு விளம்பரங்கள் பார்த்து விஷய ஞானம் கொஞ்சம் இருக்குது. அதெல்லாம் தான் மாறிடுச்சே அப்புறம் ஏன் பதிவு? இன்னும் பேச வேண்டிய விஷயங்கள் , அனுசரணையோடு பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏகமாய் இருக்குது. சில பெண் குழந்தைகளுக்கு முதல் முறை இரத்த கசிவு வந்த பிறகு சில மாதங்கள் வராது. அதன் பின் தொடர்ந்து வரத் தொடங்கும். ஆனால் ஒரு சிலருக்கு அப்போதே மாதா மாதம் வரத் தொடங்கி விடும். பன்னிரெண்டு வயது தொடங்கி ( இப்போது பத்து வயதுக் குழந்தைகளே மெச்சுவர்ட் ஆகி விடும் பரிதாபம்) கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் விக்ரமாதித்தன் வேதாளத்தைச் சுமந்தது போல் இந்த துயரத்தைச் சுமக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு சில மாதங்கள் வராமலே இருந்து பின் அதிகமாக இரத்தப் போக்கு இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு மாதம் தோறும் முதல் அல்லது இரண்டாம் நாள் கடுமையான வயிற்று வலி இருக்கும். மாதா மாதம் அன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்து வந்த பின் ஆசிரியர்களிடம் திட்டும் வாங்கிக் கட்டுவாள். சிலருக்கு முந்தின மாதம் வந்த தேதியில் இருந்து 28, 29, 30 இவற்றில் ஏதாவது ஒரு முறையில் மாதம் தோறும் வரும். அப்படி வந்தால் சிறப்பு. அப்படி இல்லாமல் தாறுமாறாக வந்தாலோ அதிகப்படியான அடி வயிற்று வலி வந்தாலோ தாமதிக்காமல் பெண் மருத்துவரை அணுகுங்கள். நீர்க்கட்டிப் பிரச்னைகளோ அல்லது வேறு ஏதாவது பிரச்னைகளோ இருந்தால் ஆரம்பத்திலேயே , அல்லது திருமணம் செய்து கொடுக்கும் முன்பாவது சரி செய்து விட வேண்டும். திருமணமாகி குழந்தை பிறக்காமல் தவிக்கும் பல பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது. மனித குலம் தழைக்க இந்த வேதனை கடக்கும் பெண்களுக்கு வீட்டிலோ சமுதாயத்திலோ சுய மரியாதையாவது தரப்படுமா என்றால் அதுவும் இல்லை. ஏன் பெண் குழந்தைகளுக்கு மட்டும் தான் பிரச்னையா ஆண் குழந்தைகளுக்கு இல்லையா என்றால் அவர்களுக்கும் வேறு விதமான பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையும் பேசுவோம். பேசத் தோன்றும் போதெல்லாம் எழுதுகிறேன். நீங்களும் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

02 September, 2026

நாவல் : பஃறுளி ஆசிரியர் : நர்சிம் மிளிர் பதிப்பகம் . விலை ரூ 300 முதல் பதிப்பு : மே 2024 " குமரியில் இருந்து மதுரை நோக்கிப் பாய்ந்த நதி " னு சிலப்பதிகாரத்துல வரும் ஒரு நதியின் பெயர் தான் பஃறுளி. ஆம். அதாவது எல்லா நதிகளும் கடலை நோக்கிப் போகும் போது கடலிலிருந்து நகரத்தை நோக்கி ஒரு நதி ஓடி வந்தால் எத்தகைய விநோதமோ அதைப் போன்றது கதையின் கரு. 2007 இல் எழுதத் தொடங்கி இருக்கிறார் நர்சிம். சிறுகதை, நாவல் , கவிதை என மூன்று தளங்களிலும் எழுதக் கூடியவர்களுள் ஒருவர் இவர். மனித உறவுகளின் எழுத்தாளர் என்று எழுத்தாளர் பிரபஞ்சனால் பாராட்டப்பட்டவர் . இவர் எழுதிய "அய்யனார் கம்மா" என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு பெட்னா உட்பட பல விருதுகளை வென்று உள்ளது சிறுகதைகளிலேயே காதலை அழகுபடச் சொல்லும் ஆசிரியருக்கு பஃறுளி நாவல் ஒரு பெரும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது ஆசிரியர் கோவலன் கண்ணகியை விட்டுச் சென்று மாதவியுடன் வாழ்ந்து பின் திரும்பி வந்தது போல கண்ணகி சென்றிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற சிந்தனையில் எழுந்தது இந்த கதை என்கிறார் ஆசிரியர் . மாயக்கண்ணன், கோமதி இருவரும் புதிதாகத் திருமணமான இளம் தம்பதிகள். ஆசிரியர்கள். திருமணத்துக்கு பின் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்கள். அது மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளி. மதுரைக்காரரான நர்ஸிமுக்கு மதுரை தமிழில் கொஞ்சி விளையாட ஏற்ற தளம். காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மதுரை மக்கள் . நட்பும் அன்பும் விருந்தோம்பலும் அவர்கள் பேச்சிலேயே நடம் புரியும். மாயக்கண்ணனும் , அவர் தோழர்களும், முக்கிய உயிர்த்தோழனான தேவாவும் பேசும் இடங்கள் அவ்வளவு ரசிப்புக்குரியதாய் இருக்கும். கம்யூனிசத்தில் ஆர்வமுள்ள தோழர்களின் உரையாடலும் , கதை நடந்த காலத்தைக் குறிக்க தோழர் லீலாவதியின் மரணத்தை பேச்சின் நடுவில் கொண்டு வந்ததும் சிறப்பு. அந்தப் பள்ளி வளர்ச்சியின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் எம் கே என்னும் மாயக்கண்ணன் தான் வரவேண்டிய உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கு மாதவன் என்பவர் வருகிறார் என்பதாலேயே எதிரியாக பாவிக்கிறார். மாதவன், தன் மனைவியிடம் முகம் மலர பேசும் பொழுது மாயக்கண்ணனுக்கு பெரும் வில்லனாகவே மாறிவிடுகிறார். கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவது ஒரு சில அனுகூலங்கள் இருந்தாலும் பல நேரங்களில் இடைஞ்சலாகத் தான் இருக்கும். பணி நேர செயல்பாடுகளின் தாக்கம் வீட்டிலும் தொடரும். நர்சிம்மின் கதைகளில் எப்பொழுதுமே நாம் தெரிந்து கொள்ள ஒரு புது விஷயம் இருக்கும். இரும்பு ஸ்டாண்டில் மாட்டை நிறுத்தி அசை விடாமல் வைத்து மருத்துவர் வைத்தியம் பார்க்கும் விஷயம் இந்த நாவலில் எனக்கு பதாய் இருந்தது. " அடுத்து என்ன கேட்க போகிறாய் எனும் நோக்கில் நிமிர்ந்து நின்றது அவனை சலனமற்று இருக்கச் செய்தது." கோமதியை சந்தேக வார்த்தைகளால் கொல்லும் போது அவள் நேர் கொண்ட பார்வை அவனை மௌனமாக்குகிறது. பொதுவாக ஒருவர் மேல் சந்தேகம் வர பெரிதாக காரணம் ஒன்றும் இராது. அதை அலட்சியப்படுத்தினால் ஒன்றுமில்லாமல் போகக்கூடிய விஷயம் தான் நடந்திருக்கும். அதை பெரிதுபடுத்துவதாலேயே சில நேரங்களில் உண்மையாகி விடும் வாய்ப்புண்டு. மாதவனிடம் கோமதி இயல்பாக பேசுவது கூட மாயக்கண்ணனுக்கு விகல்பமாகத் தோன்றி அவன் மனதின் அமைதியை குறைக்கிறது . மொத்த வீட்டின் அமைதியையே அழிக்கிறது. அன்பைக் காட்டுவது போல் அக்கரை இருப்பது போல் காட்டி பெண்ணைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் தந்திரம் தான் மாயக் கண்ணன் பயன்படுத்துவது. "நம்மளப் பிடிக்காமப் போயிடுமோங்கிறத விட இன்னொருத்தர பிடிச்சிறக் கூடாதுன்ற பயம் தான மதி மருள வைக்கிது" // ஆண் மனதை பெண்களுக்கு புரிய வைக்கும் இது போன்ற வரிகள் பல உண்டு. "நீயெல்லாம் ராஜா மாணிக்க இருந்தா மட்டும் போதாதுடா ராஜா மாணிக்க யோசனையும் பண்ணணும் . சிலத பத்தியெல்லாம் யோசனை கூட பண்ணக் கூடாது" "தகரத்துல சேர் செஞ்சு பளபளன்னு இருக்கேன்னு சொல்லுறதா தேக்குல உட்கார்ந்தவன் போவியா" அதே போல தன்னம்பிக்கை அற்ற ஆண்களுக்கு சரியான அறிவுரை சொல்லும் இது போன்ற வரிகளும் உண்டு. "யாரும் யாரிடமும் தன்னை குற்றவாளியாகக் காட்டிக் கொள்ள தயாராக இல்லை எல்லோருக்கும் ஒரு நியாயம்" இன்றைய நடைமுறையில் மனித மனம் கொண்டுள்ள மாற்றத்தை எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளாத மன நிலையையும் நடுவே காட்டுகிறார். எம். கே ( மாயக் கண்ணன்) தன் நண்பனின் கல்யாண வேலையா சுத்தும் போது கோமதி அவளுக்குப் பிடிச்சதைச் செய்யலாம்னு சொல்ற லிஸ்ட்ல "நினைச்ச நேரம் கழிவறை போகலாம்' னு எப்படி சேர்த்தீங்க நர்சிம். காலை நேர அவசர வேளை(லை)யில் இந்தக் கழிவறைப் பிரச்னையால் உடல் நலம் குன்றிய பெண்கள் எத்தனை பேர் தெரியுமா. அதிகம் பேசப்படாத ஒரு பிரச்னையை மெல்லத் தொட்டு கடந்து விட்டீர்கள். யதார்த்தமான வாழ்க்கையைச் சொல்லி நகர்ந்து செல்லும் கதை. மதுரையின் கள்ளழகர் ஆற்றிலிறங்கும் வைபவத்தை நேரிலிருந்து பார்த்தது போல் உணர வைக்கும் கதை.