Bio Data !!

01 July, 2025

#அவினாசிப் பெண்ணின் மரண துயரம்.

போ.து.ம்.ங்.க சமீபத்தில் பர்வீன் சுல்தானா பேசிய ஒரு வீடியோ பார்த்தேன். 57 வயதில் விவாகரத்துக் கேட்ட ஒரு பெண்ணைப் பற்றிப் பேசினார். நீதிபதி பல காரணங்களைச் சொல்லிக் கேட்கிறார். இந்தப் பெண் எந்த வித கெட்ட பழக்கங்களும் தன் கணவருக்கு இல்லைன்னு சொல்றாள். விவாகரத்துக்கு சொல்லும் காரணம் "24 மணி்நேரமும் அவருக்கு சமைத்துப் போடுவதையே சிந்தனையில் நிறைத்திருக்க வேண்டி இருக்கிறது. போதும்ங்க." என்பது தான். இதற்கு சில பெண்களே கூட "சமைக்கிறத தவிர ஒரு பெண்ணுக்கு வேறென்ன வேலைன்னு" கேட்கலாம். அவள் தனி உயிர். அவளுக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதை அனுபவிக்க அவளுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். இப்போ திருமணமான 78 நாளில் ஒரு பெண் " போதும்" என்பதை உணர்ந்து தற்கொலை தான் வழி என முடிவெடுத்திருக்கிறாள். ( எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை ஒரு தீர்வல்ல). போதும்ப்பா இந்த வாழ்க்கை என்னால முடியலைன்னு அவள் பேசிய ஒரு ஆடியோ வலம் வருகிறது. பறி கொடுத்த பின் புலம்பி என்ன பயன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஓய்வு பெற்ற பின் விவாகரத்துக்கு நீதி மன்றம் நாடினார். அவரைப் பற்றி நாளை எழுதுகிறேன். அதனால் "போதும்" என்ற உணர்வு ஒரு பெண்ணுக்கு எதனால், யாரால் எப்பொழுது வரும் என்பதை வரையறை செய்ய முடியாது. குட்டக் குட்ட குனிகிறாள் என்பதாலே ஒருவரை வலுவற்றவர் என நினைக்காதீர்கள். உங்கள் மேல் உள்ள பாசத்தாலோ, தன் பெற்றவர் மேல் உள்ள மரியாதையாலோ, சமுதாய அழுத்தத்தாலோ கூட குனிந்து இருக்கலாம். " போ.து.ம்" என்று தோணும் போது வெடித்துச் சிதறுவாள்.

27 June, 2025

# மாமன் தமிழ் திரைப்படம் யூட்யூபில் பார்த்தேன். இயக்குநர் : பிரசாந்த் பாண்டியராஜ் முக்கிய கதாபாத்திரங்கள்: சூரி,(இன்பா) ஐஸ்வர்ய லக்ஷ்மி, (ரேகா) ஸ்வாசிகா, அவர் கணவராக பாபா பாஸ்கர், ராஜ்கிரண், விஜி, பிரகீத் சிவன்.( சூரியின் அக்கா மகன்) கிராமங்களில் தன் தம்பிக்கு தன் மேல் உள்ள பாசத்தை அவன் மனைவிக்குக் கூட விட்டுக் கொடுக்காத தீவிரத் தன்மையை பார்த்திருப்போம். மாமியாரோடும் நாத்தனாரோடும் போராடி தன் கணவனின் அன்பை சிறிதளவேனும் தன் பக்கம் திருப்ப ஒரு பெண் படும் சிரமம் சொல்லி மாளாது. இங்கே அக்காவின் மகன், சிறுவன் தான் . அவன் தன் தாய் மாமனை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிவதாயில்லை. தாய் மாமனான சூரிக்கு திருமணமான பின் இதனால் வரும் சிரமங்கள் தான் கதை. ஒரு மருத்துவராய் இருந்தும், குடும்பத்தார் மேல் சூரிக்கு இருக்கும் பாசத்தைப் பார்த்தே மணக்கத் தயாராய் இருக்கும் பெண் , அந்தப் பாசம் தன்னிடமிருந்து சூரியைத் தள்ளி வைக்கும் போது எவ்வளவு கடுமையாக முடிவெடுக்கிறாள் என்பது நம்மை கலங்க வைக்கத்தான் செய்கிறது. கடைசி அரை மணி நேரம் நம்மை உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளிக்க விடுகிறார்கள். உறவுகளின் அவசியத்தை , வலியுறுத்தும் இத்தகைய படங்கள் தற்காலத்துக்கு மிகவும் அவசியம். ராஜ்கிரண், விஜி தம்பதிகள் மூலம் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லித் தருகிறார்கள். சண்டையே போடாமல் வாழ்வது மட்டுமே சிறந்ததல்ல. சண்டை போட்டாலும் கொஞ்ச நேரத்தில் இணையத் தெரிவது தான் வாழ்க்கை. இடையே நடிகர் விமல் வந்து எங்களோடு ஜாலியா சுத்திகிட்டு இருந்த உன்னைய சீரியஸாக்கி விட்டுட்டாங்க என்கிறார். அது கதைக்கும் நிஜத்துக்கும் பொருத்தமாய் இருக்கிறது. அவர் சீரியஸாவே இருக்கட்டும் . அப்போ தான் நல்ல நல்ல படங்கள் கிடைக்கும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

19 June, 2025

OTT Amazon Prime மொழி : மலையாளம் படத்தின் பெயர் : மதுர மனோகர மோஹம். இயக்குநர் : ஸ்டெஃபி சேவியர். முக்கிய நடிகர்கள் : ஷரப் உதின், ரஜிஷா விஜயன். பிந்து பணிக்கர். ஒளிப்பதிவாளர் : சந்துரு செல்வராஜ் காமெடி ஸோனர். பல உறுப்பினர்கள் கொண்ட அழகிய குடும்பம். அந்தக் குடும்பத்து பள்ளி மாணவி தன் நண்பனோடு பக்கில் வந்து இறங்கினாலே குடும்பம் பதறும். சோஷியல் இன்ஃப்ளூயன்ஸர்கள் பார்த்து வீடியோ எடுத்துப் போட்டால் என்ன செய்வது என்று அவள் அண்ணன் அஞ்சுவான். உண்மை தான். சமுதாயத்தைப் பாதிக்கும் வீடியோ எடுத்துப் போடுபவர்கள் அந்த அளவுக்கு நேர்மை அற்றுப் போய் விடக் கூடாது. பத்திரிகை தர்மம் பொல் இதற்கு ஒரு தர்மம் இழுக்க வேண்டும். ஆனால் அதே அண்ணன் தன் ஜாதிப் பெண்ணக்க் காதலிக்கும் போது எந்தப் பிரச்னையும் இல்லாது போகும். பஞ்சாயத்தில் ஒருவர் சரித்திர முக்கியத்துவம் ( 😀) வாய்ந்த ஒரு உண்மையைச் சொல்லுவார். " நம் குடும்பத்துப் பையன் வேற ஜாதிப் பெண்ணை மணந்தால் பிரச்னை இல்லை. அதுவே நம் ஜாதிப் பெண் வேற்று இனத்துப் பையனைத் திருமணம் செய்தால் நம் இனத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறையும். அடே!! அது அப்படியா? அந்த கூட்டத்தில் ஒரு தந்தை கேட்பார் " என் மூத்த பெண்ணை நம் இனத்துப் பையனுக்குத் தான் திருமணம் முடித்தேன். அவளுக்கு ஒரு சிக்கல் வந்தால் எத்தனை பேர் உடன் வந்து பையனைக் கேள்வி கேட்பீர்கள்" . இதே கேள்வி எங்கள் ஊர் தைர்யத் தமிழச்சி ஒரு நிகழ்ச்சியில் கேட்டாள். "ஆணவக் கொலை செய்யும் இந்தப் பெற்றோர் தான் தன் ஜாதிப் பையனைத் திரிமணம் செய்த பெண்ணுக்கு ஒரு பிரச்னை வரும் போது பெண் அனுசரித்துத் தான் வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்கள் என்று கோபமாக பேசியது நினைவுக்கு வருகிறது. ஒரு இடத்தில் தன் தங்கையின் தவறான போக்கு கண்டுபிடிக்கப்பட அண்ணன் இடிந்து போல் படியில் அமர்ந்து மேலே பார்க்க காமரா இன்னொரு தங்கை தன் வெள்ளை நிறப் புதுப் பாவாடையை குடை போல் சுற்றி வட்டமிடுவதைக் காட்டும். அழகான காட்சி இது. ஒரு ஆண் பல பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து , பின் வீட்டில் பார்க்கும் பெண்டைத் திருமணம் செய்வதாக்க் கதைகளில் வருவதுண்டு. நிஜத்திலும் கண்டதுண்டு. இதில் மாத்தி யோசித்திருக்கிறார்கள். அதுவும் நகைச்சுவை விரவி. 2023 இல் வந்த படம். இப்போது தான் OTT க்கு வந்திருக்கிறது. மனதை ரிலாக்ஸ் செய்ய பார்க்கலாம். நாம் செய்யும் தவறு கண் முன்னே காட்சியாக விரியும் போது. ஒரு சிலர் மாறவும் வாய்ப்பிருக்கிறது. படம் பார்க்கும் போது எனக்கு வழக்கமாக வரும் சந்தேகம் எழுந்தது. தன் குடும்ப பெண்களைப் பற்றிய தவறான விஷயங்களக ஆண்கள் தம் நண்பர்களோடு பகிர்ந்து அதைச் சரி செய்ய பார்க்கிறார்களே அந்த நணபர்களுக்கு இவர்கள் வீட்டுப் பெண்கள் மேல் எந்த அளவுக்கு மரியாதை இருக்கும். எனக்குத் தெரியல. நீங்களாவது சொல்லுங்க.

16 June, 2025

# தகப்பன் சாமி சிவப்பு ரெட், மேல் டாப் ல ஒரு சொற்றொடர். தகப்பனே சாமி தானே. எனக்கு எங்க அப்பாவை நினைச்சாலே பல எண்ணங்கள் குதித்துக் கொண்டி கிளம்பும். அப்போ நான் பதினொன்று படித்துக் கொண்டு இருக்கிறேன். அது தான் பள்ளி இறுதி ஆண்டு. இப்போ மாதிரி +2 இல்லை. எங்களுக்கு ஆறு பாடங்கள். தமிழ், ஆங்கிலம் , கணக்கு, அறிவியல் , சரித்திரம் & பூகோளம், எலக்டிவ் ( எனக்கு அதுவும் கணக்கு) என் வகுப்பு ஆசிரியை பிச்சம்மாள் மிஸ் எங்க அம்மவோட நெருங்கிய தோழி. வந்து எங்க அப்பாட்ட கேட்கிறாங்க." ASPP (assistant school pupil leader) தமிழ் மீடியத்துல எடுப்பாங்க. ரூஃபியை போடச் சொல்லலாம்னு நினைக்கிறேன். நல்லா சுறுசுறுப்பா இருக்குறா". அது வரை பள்ளியில் என்னை தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாத ஒருவர். என்னைப் புகழ்ந்து சொல்லவும் எனக்கு தலை கால் புரியல. உடனே எங்க அப்பா" வேணாங்க. படிப்பு டைவர்ட் ஆகிடும். அதை உட்கார்ந்து படிக்க வைக்கிறதே கஷ்டம்" என்று என் ஆசை பலூனை புஸ்ஸாக்கி விட்டார்கள். " நல்ல மூளை இருக்குது. உட்கார்ந்து படிக்க மாட்டேங்குதே" இது தான் அவங்க கவலையா இருக்கும். தேர்வு தொடங்கியது . ஆறு பாடங்களோடு தமிழ் ஆங்கிலம் இரண்டும் இரண்டு பேப்பர்களாக மொத்தம் எட்டு. பாதிக் கிணறு தாண்டி இருக்கிறேன். படிச்சு ( நாம படிக்கிற லட்சணத்துக்கு) உடம்பு சூடாகும்னு மாலையிலும் ஒரு தரம் குளிக்க சொல்வாங்க. குளிக்கும் போது காலில் தொடை பக்கமாக ஒரு நீர்க்கொப்பளம். எதுக்கும் அம்மாவிடம் சொல்லிடுவோம்னு கூப்பிட அவங்க பார்த்தால் வேறு ஒன்றிரண்டு இடங்களிலும். பதறிய படி அப்பாவிடம் சென்று " அம்மன் போட்டிருக்கிற மாதிரி இருக்குது என்று சொல்ல. அவரும் பார்த்து உறுதி செய்தார்கள். எனக்கு அதன் பாரம் புரியவில்லை. அம்மாவும் அப்பாவும் ஆடிப் போயிட்டாங்க. உடனே பிச்சம்மா மிஸ்ஸோட கலந்து ஆலோசிக்கிறாங்க. " அவள் எழுதிடுவான்னா பெர்மிஷன் வாங்கிடலாம்" னாங்க. எங்க அம்மாவும். உயர் பள்ளி ஆசிரியை தான். நான் தேர்வெழுதும் பள்ளியில் அவர்கள் தேர்வு சூப்பர்வைசர் வேறு ஒரு அறையில். ஒரு வருடம் வீண் செய்வதா? தோற்று விட்டால் என்ன செய்வது? பல யோசனைக்குப் பின் என்னிடம் கேட்டார்கள். நமக்கு எல்லாமே விளையாட்டுத் தானே. அதெல்லாம் எழுதிடுவேன்னு சொல்லிட்டேன். மறு நாள் உடம்பெல்லாம் கொப்பளம் போட்டுட்டுது. கண் இமைகளின் மேல் கூட. கண்ணிலிருந்து தண்ணீரா வடியுது. உடம்பு பலவீனமா இருக்குது. எழுத எழுத கை தளறுது. எனக்கு இடம் வாசலுக்கு அருகில் என்பதால் அது வரை காரில் கூட்டிப் போய் மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் உட்கார வைத்து விட்டார்கள். என. கண் பார்வையில் படும் படி அப்பா . நான் சோர்ந்து தலை சாய்க்கும் போது கொண்டு வந்த ஹார்லிக்ஸ்சை ஆசிரியரிடம் கொடுத்து அனுப்பி குடிக்கச் சொல்வார்கள். பாடங்களை நான் படிக்க முடியாததால் அப்பாவும் அம்மாவும் மாடியில் இருந்த என்னருகே வந்து வாசிப்பார்கள். கேட்டுக் கொண்டிருப்பேன். அந்த நாளிலேயே படுத்துக் கொண்டே ஜெயித்தவள் நான். 😀. உன் முன் தைர்யமா இருந்து கீழே போய் அப்பா அழுவாங்கன்னு பின்னாளில் அம்மா சொல்வாங்க. அப்போ ரிசல்ட் மார்க் எல்லாம் வர நாளாகும். மார்க் வந்ததும் எங்க அப்பா என்னைத் தூக்கி ஒரு சுற்று சுற்றினாங்க. கணக்கில் 100/100. ஆங்கிலத்தில் பள்ளியில் முதல் மதிப்பெண். மொத்த மார்க் 486/600 . 81% அதன் பிறகு B Sc., B. ed., என படித்தாலும் அந்த பள்ளி மதிப்பெண்ணின் அடிப்படையில் கிடைத்த வேலை தான் தொலைத் தொடர்பு. 81% + 10% (டிகிரி முடித்ததற்காக) . வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் வந்தேன். ஒருவர் கிடைத்த வேலையில் சேராததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. பின் அரசுத் தேர்வு எழுதி அதிகாரியும் ஆனேன். அந்த உயர்வைப் பார்க்க தகப்பன் சாமிக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை.

14 June, 2025

# ST. Thomas Mount

4 ஆம் நாள் பதிவாக இருந்தாலும் போனது முதல் நாளில். உறவினர் வீட்டுத் திருமணம் சென்னையில் ST. Thomas Mount இல். அவர்கள் CSI. அந்த சர்ச் மலை அடிவாரத்திலிருக்கிறது. மலை மேல் RC Church. நான் ஒரு வருடம் சென்னையில் டிரெயினிங்கில் இருக்கும் போது போயிருக்கிறேன். படி வழியாக ஏறி. இடம் கொஞ்சம் ஒதுக்குப் புறமாய் இருப்பதால் அங்கங்கே காதல் ஜோடிகள். இப்போ காலச் சூழ்நிலையால் கூடியிருக்கலாம். இல்லை மக்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால் குறைந்திருக்கலாம். தெரியவில்லை. நாங்கள் காரிலேயே மலை முகடு வரை சென்று விட்டதால் ஒரு பதினைந்து படிகள் மட்டும் ஏற வேண்டி இருந்தது. கடந்த மாதம் தான் பஸிலிக்காவாக (திருத்தலமாக ) போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்ச் இடித்துக் கட்டும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. மேலிருந்து நகரமும் வானூர்தி நிலையமும் பார்க்க கொள்ளை அழகாய் இருக்கும். அதுவும் இரவு நேரத்தில். மூன்று நிமிட வீடியோ என் chellanaikutti youtube channel இல் இணைத்திருக்கிறேன் பாருங்கள். அடுத்து ரிசப்ஷன் AVM Gardens vada palani. உள்ளே போகும் போதே மேலே உள்ள உலக உருண்டை என் பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் சென்றது. அப்பா தெரிந்தவர் மூலம் ஷூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்கள். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டிங் அலங்காரம் மட்டும். மஞ்சுளாவோடு படிகளில் ஏறி நடனம் ஆடுவார். அந்த இடம். இன்னொன்று ஜெய்சங்கர் நடித்த நூற்றுக்கு நூறு. அது ஷூட்டிங் பார்த்தோம். சலித்தோம். ஒரு வசனத்தை எத்தனை முறை ரீடேக். அப்பப்பா!! இப்பொழுது முன் பாதியில் காவேரி மருத்துவமனை இயங்குகிறது. பின் பாதியில் தான் பஃபே. நல்ல வேளையாக மழை இல்லை. புனித தேற்றரவு அன்னை ஆலயம் என்று ஒன்று காரைக்காலில் இருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பழமையான சர்ச். இந்த ஆலயத்தின் பெயர் அதிகம் கேள்விப்படாதது. 1739 இல் ஒரு சின்ன ஆலயமாக தொடங்கி இருக்கிறது. காரைக்காலில் லகட் ஹவுஸ், படகுத்துறை, பீச் என்று நேரம் கழிக்க இடங்கள் உள்ளன. வண்ணமடித்த படகுகள் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது வானவில் இறங்கி வந்து கடலில் நீந்துவது போல் இருந்தது. அழகை ரசிப்பவர்கள் தூசியும் துரும்பும் கூட அழகு தான். ஐந்தாம் பதிவு நான் ராஜஸ்தானில் பயணித்த போது நடந்த திடுக்கிடும் நிகழ்வை சொல்லி நிறைவு செய்கிறேன்