chella நாய்க்குட்டி
11 July, 2026
ஒரு ஞாயிறு அன்று நடந்த நீயா நானாவில் கோபிநாத் ஒரு கேள்வி எழுப்பினார். "ஆண்களுக்கு ரிஸ்க் எடுப்பதில் ஒரு விருப்பம் இருப்பது போல் பெண்களுக்கு தனக்கு வலி ஏறபடுத்திக் கொள்வதில் ஒரு அடிக்ஷன் இருக்கிறதோ? " என்றார்.
ஏன் சாமி!
அப்படி இருந்தா குடிச்சுட்டு வந்து பெண்களை அடிக்கிற ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறாங்க. வலி கிடைப்பது ஒரு கஷ்டமா? அதற்கு டாட்டூ போட்டா வலியை அனுபவிக்கணும்.
ஆணானாலும் பெண்ணானாலும் அடுத்தவர் நம்மைப் பாரக்க வேண்டும் என்று ஒரு செயல் செய்தால் அது சரியில்லை.
அதுல ஒரு வேடிக்கைப் பார்த்தீங்களா? கருப்பாய் இருப்பவர்களுக்கு நாம் அழகாக இல்லையோ என்ற காம்ப்ளெக்ஸ்சை உண்டாக்குபவர்கள் தான் தன் பொன் நிற தோலின் மேல் கருப்பாய் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.
நிறத்தில் என்ன இருக்கிறது என்ற பாடத்தை இதில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
08 July, 2026
இவர் வாழ்ந்த காலம் 41 ஆண்டுகள் மட்டுமே. அந்தக் குறுகிய காலத்தில் எங்கள் குடும்பத்துக்கு இவர் போட்ட அடித்தளம் அபாரமானது.
அந்த அடித்தளத்தின் பலத்தில் தான் இன்று இந்த ஆலமரம் பரந்து விரிந்து இருக்கிறது. இவரது கொள்ளுப் பேரன் பேத்திகளை வெளிநாட்டிலும் இருத்தி இருக்கிறது. என்றும் உங்களை மறவேன் அப்பா.
இந்த ஆல மரம் இன்னும் இன்னும் ஆழமாக வேரூன்ற உங்கள் ஆசி நிலைத்திருக்கணும் அப்பா
03 July, 2026
Bynge இல் லாசரா அவர்கள் எழுதிய "உத்ராயணம்" என்னும் சிறுகதை வாசித்தேன். உடனே ஒரு உத்வேகம் எழுந்தது. அவருடைய எல்லா கதைகளையும் வாசித்து அத்தனை சொற்களையும் பொக்கிஷமாய் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு ஒரு பாக்கியம் இருக்கிறது. வாசித்தவுடன் அவருடைய அருமை மகனுடன் ஒரு conversation வைத்துக் கொள்வேன். இதோ அண்ணன் சப்தரிஷியும் நானும் பேசிக் கொண்டது.
நான்: அண்ணன் இன்று லாசரா எழுதிய உத்ராயணம் வாசித்தேன். அதில் கண்ணன் னு குறிப்பிடுவது உங்களைத் தானா?
அண்ணன்: ஆமா. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் தரேன். அதுவும் லாசராவின் கதைகளைச் சொல்லும் ரம்யா கண்டுபிடித்த சொன்ன விஷயம். அவர் எழுதும் கதைகளில் பாசிட்டிவ் காரெக்டர்களுக்கு அதிகம் தன் பிள்ளைகளின் பெயரையே பயன்படுத்தி இருக்கிறார். நெகடிவ் காரெக்டர்களுக்கு பெயர் இல்லாமல் அவன் அவள் என்றே எழுதி இருக்கிறார்.
நான்: இதை இனி கவனத்தில் இருத்தி வாசிக்கிறேன் அண்ணன்.
அண்ணன்: உங்களுக்கு இந்து தத்துவங்களில் ஆர்வமிருப்பதால் இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். எங்க அப்பா புருவம் திக்கா நீண்டு வளர்ந்து இருக்கும். அது போல் பீஷ்மரின் புருவமும் இரண்டு பக்கமும் நீண்டு வளர்ந்து தொங்கி போர் புரியும் போது தொந்தரவாய் இருக்குமாம். அதனால் இரு போர் வீரர்கள் இரண்டு புறமும் அம்பினால் புருவத்தை தூக்கிப் பிடித்து அவர் போர் செய்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்களாம்.
நான்: interesting ஆன விஷயம் அண்ணன்.
இப்போ ஏன் இந்த விஷயத்தை அண்ணன் சொல்றார் உத்ராயணம் வாசிச்சு பாருங்க புரியும்.
இப்போ உத்ராயணம் கதையில் நான் ரசித்த வரிகள்:
"இது வரை ரெண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக் கொண்டாச்சு. காஞ்சாச்சு. ஆனால் உடல் வாணலியாய் பொரிகிறது. இனி மேல் ஈரம் பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசு தான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா?"( மார்பில் சளி நிறைந்து இருமும் போது ஏற்படும் சத்தத்தை மார்பில் கொலுசு என்கிறார்)
" இது குறைக்கிற நாயுமல்ல. கடிக்கிற நாயுமல்ல. நாய்களில் ஊமை உண்டோ?" (அட ஆமால்ல! நாய்களின் முக்கிய அடையாளமே குறைப்பு தானே! வாய் பேச முடியாத குறைக்க முடியாத நாய்கள் உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?)
"நாங்கள் எங்கே பேசிக்கிறோம். எங்களைப் பிணைக்கும் மௌனச் சரடே எங்கள் பேச்சென்றால் நாங்கள் நிறையப் பேசுகிறோம்"
"இரவு வேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கையில் விட்டுச் செல்லும் நுறைத் துளிகள்.பொரியும் முத்துக் கொதிகள்"
கல்வித் தெய்வம் அவரோடு கை கோர்த்துக் கொண்டு வார்த்தைகளை வாரிக் கொட்டி இருக்கிறது. முத்துக்களாய் அவை கதைகள் எங்கும் ஜொலிக்கின்றன.
02 July, 2026
ஒருவரை நமக்கு ரொம்ம்ம்ப பிடிக்கும்னா அவரைப் பற்றிய புரிதல் நமக்கு 100% இருக்கும். அவ்வளவு அவர்களை நாம் புரிந்து வைத்திருப்பதாலேயே அவர்களுக்கு நம்மை அவ்வ்வ்வளவு பிடிக்கும். ஆனால் இந்த வட்டப் பாதை ரொம்ப அபூர்வமாகத் தான் நிகழும்.
29 June, 2026
பெண்களாகிய நமக்கு உடம்பு சரியில்லைன்னா, கூட இருக்கிறவங்களுக்கு முதல்ல தோணுற எண்ணம் "நம்ம routine spoil ஆகுமே" என்பது தான். இதை உணராம நாமும் நமக்கு கடைசி priority தான் கொடுக்கிறோம். நம்ம உடம்புக்கே வாய் இருந்தா அழும் என்னையும் கவனிச்சுக்கோன்னு. அதனால் ஒவ்வொருவரும் அக்கரையில் தனக்கு முதல் இடம் கொடுப்போம். ஏன்னா இப்போ வர்ர சின்ன சின்ன வியாதிகள் கூட அத்தனை பேருக்கும் இழுத்து விட்டுட்டுத் தான் போகுது. அதனால் தன்னைக் காத்துக் கொள்வதும் பிறர் நலம் தான்.
Subscribe to:
Posts (Atom)
