chella நாய்க்குட்டி
02 March, 2026
நெல்லை சாரதா கல்லூரி. பல ஆண்டுகளுக்கு முன் தொலைபேசி அதிகாரியாகப் போய் கல்லூரி முதல்வரின் அறையில் ப்ராட் பேன்ட் சரி செய்து வந்திருக்கிறேன்.
அதன் பின் சமீபத்தில் என் தோழி உடனும் அவள் தோழியுடனும் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. தான் படித்த கல்லூரியை இருபதாண்டுகளுக்குப் பின் பார்க்க ஆசைப்பட்டாள். எங்க வீட்டிலிருந்து கிளம்பும் போது சுரிதார் வேண்டாம் , புடவைக்கு மாறிக் கொண்டு வா என அவள் தோழி சொன்னதும், நான் சுரிதாரில் இருக்கிறேனே பரவாயில்லையா எனக் கேட்டேன்.
நாங்க அந்த கல்லூரி மாணவர்கள். படிக்கும் போது புடவைக்கு மட்டுமே அனுமதி. அதிலும் அர்ஷா அங்கே உள்ள பல மாணவிகளுக்கு ரோல் மாடலாக இருந்தவள். அதனால் சொன்னேன் என்றாள்.
போகும் போது "அம்மா, பதினைந்து நிமிடம் தான். எனக்கு முக்கியமான இடங்களில் நின்று புகைப்படம் எடுக்கணும். எடுத்திட்டு கிளம்பிட வேண்டியது தான் " என்றாள். ஆனால் கல்லூரியில் நாங்கள் இருந்தது இரண்டு மணி நேரம். எனக்கு அந்த பிள்ளைகளின் சந்தோஷத்தை "நேரமாகுதுன்னு" சொல்லி கெடுக்க மனமே வரல.
கல்லூரி முதல்வர் இவ்வளவு down to earth ஆ இருந்து ஒருவரை நான் பார்த்ததே இல்லை. பழைய மாணவிகளிடம் எவ்வளவு நினைவுப் பகிர்வு. என்னிடம்" நீங்கள் எத்த வருடம் இங்கே படித்தீர்கள் " என்று கேட்டார்கள். "நான் இந்த கல்லூரியில் படிக்கவில்லை. " என்று நான் படித்த கல்லூரியின் பெயரைச் சொல்லி என் வயதைச் சொன்னதும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. "இவ்வளவு வயதா? நம்பவே முடியல" என்று எனக்கு உற்சாக பானமளித்தார்கள்.
"இவ்வளவு கட்டுப்பாட்டில் வளரும் போது பெண் குழந்தைகள் திருமணத்துக்குப் பின் வாழ்க்கையை சுலபமாக எதிர் கொள்கிறார்களா" எனக் கேட்டேன். "நிச்சயமாக. விட்டுக் கொடுத்தலும் பணிந்து நடப்பதும் இயல்பாகவே வந்து விடும்" என்றார்கள்.
இவர்கள் கல்லூரிக்குள் ஆண்களுக்கு அனுமதி இல்லை. மாணவிகளை அழைத்துச் செல்ல வந்தவர்களும் கல்லூரிக்கு வெளியே தான் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காத்திருக்கிறார்கள். பெற்றவர்கள் பெண் குழந்தைகளை இந்த கல்லூரிக்கு அனுப்பி விட்டு நிம்மதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.
அந்த நேரம் வகுப்புகள் முடிந்ததற்கான மணி அடித்ததும் மாணவிகள் பட்டாம் பூச்சிகள் போலப் பறந்து வந்தார்கள். இவ்வளவு கட்டுப்பாட்டிற்கான எந்த நெருக்கடியும் அவர்கள் முகத்திலில்லை. ஒரு வகையில் குழந்தைகளுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுப்பதும் அவர்களுக்கு நாம் செய்யும் தீமையோ எனத் தோன்றுகிறது.
19 February, 2026
நாவல் : குட்டிமா.
ஆசிரியர் : அராத்து
Auto narrative Publishing
விலை 500/- ரூபாய்.
முதல் பதிப்பு : ஜனவரி 2026
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நாவலின் ஆசிரியரைப் பார்த்து ஒரு ஆணாதிக்கவாதி. பெண்களை மதிக்காதவர் என்ற கருத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் பார்க்க வேண்டும் என்று தான் புத்தகத்தை வாங்கினேன். பெண்கள் தாமே தம்மை அடிமைப்படுத்திக் கொண்டு கிடப்பதைப் பார்த்த ஆதங்கம் தான் எழுத்தில் வெளிப்படுகிறது.
கொஞ்சம் "ரா" வாகத் தான் எழுத்து இருக்கிறது. ஆனால் நான் பதின்ம வயதிலிருந்தே ஆங்கில நாவல்கள் வாசித்துப் பழக்கப்பட்டவள் என்பதால் என்னைத் தயார்படுத்திக் கொண்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். ,
ஆரம்பமே பதை பதைக்க வைக்கிறது. கதை நாயகி சிந்துவின் ( இரண்டு கால்களையும் விபத்தில் இழந்த) தகப்பன் தன் மனைவியுடன் உடையின்றி இயங்கிக் கொண்டிருப்பதை சிந்து பார்த்து விடுகிறாள். ச்சீ!! இதையெல்லாம் எப்படி வாசிக்கிறது என்பவர்கள் இந்த இடத்தில் நகர்ந்து விடலாம்.
பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளோடு உறவு கொண்டு விடலாம். ஆணுக்குத் தான் அது சிரமம் என்று நினைத்திருந்த என் நம்பிக்கையை தவிடு பொடியாக்கியது இந்த நாவல். ஒரு பெண் ஆரோக்கியமான திருமண வாழ்வு நடத்த அவளுக்கு அதிர்ச்சி தராத நியாயமான பால்யமும், பதின்ம காலமும் அத்தியாவசியம் என்பதைப் புரிய வைக்கத் தான் அந்த முதல் காட்சி.
"அழகுப் பெண்கள் அடங்கி இருந்தால் ஆண்களுக்குத் தேவி.
அந்தப் பெண்கள் சுதந்திரமாக பேச ஆரம்பித்தாலே காளி"
வஞ்சி என்ற மிகத் தைர்யமான கதா பாத்திரம். தன் எமோஷனல் ஃபீலிங்குக்கு ஆண்கள் தேவை இல்லை. செக்சுவல் ஃபீலிங்குக்கு மட்டுமே தேவை" என்று மாத்தி யோசிப்பவள். எமோஷனல் ஃபீலிங்குக்கு ஆண்களைச் சார்ந்த பெண்கள் தானே ஏமாந்து போய் மரண வேதனை அனுபவிக்கிறார்கள்.
தேவைக்கும் அதிகமாய் பண வசதி கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் நான்கைந்து ஆண்களை தன்னைச் சீராட்ட அமர்த்திக் கொள்கிறாள் வஞ்சி. இதைத் தான் மாத்தி யோசிப்பவள் என்றேன். ஆசிரியர் , ஒரு ஆண் தன் பண பலத்தாலேயே பல பெண்களோடு உல்லாசமாய் இருப்பதை ரசிக்கிறீர்களே அதை வஞ்சி வழியாக மாத்தி யோசித்தால் உங்களுக்கு எவ்வளவு ஏற்பற்றதாய் இருக்கிறது என்று "ரா" வாக உணர்த்துகிறார்.
வீணா என்றொரு கதாபாத்திரம். இவள் சிந்துவுக்கும் வஞ்சிக்கும் நடுவாந்தரமாக இருப்பாள். வீணாவை வைப் ஒரு தேவதையைப் போல் பார்த்துக் கொள்வான். ஆனால் அவளாக ஆசை வந்து அந்தரங்கமாக தொட்டால் வெறி வந்தவன் போல் கத்துவான். அவனுக்கு இருக்கும் உடல் குறை மாத்திரை போட்டு நிவர்த்தி செய்து கொள்வதால் அவன் முடிவு செய்யும் போது தான் வீணாவை ஆராதிப்பான்.
வீணா வஞ்சியிடம் "தன் தூய்மையான தெய்வீகமான காதல் கதை" யை விளக்கிச் சொலறப்போ அடப் போங்கப்பா "எல்லா காதல் கதையும் தெய்வீகமானது தான்" என்று தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது்
ஆசிரியர் ஆணாதிக்கவாதியோன்னு நினைச்சு வாசிக்கத் தொடங்கின கதை முடிக்கும் போது பெண்ணியவாதியோன்னு ஆகிடுச்சு. ஏன் சார் ரெண்டுக்கும் நடுவுல வாழ வழியிருக்குதா?
சுரேந்தர் சிந்துவிடமும், முரளி வீணாவிடமும் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது "இப்படித்தானே ஒரு சில ஆண்கள் கணிக்கப்பட்ட காய் நகர்த்துதலில் பெண்களை வீழ்த்துகிறார்கள் என்று தோன்றியது.
ரசித்த வரிகளில் ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
" நாவல் முழுவதும் வாக்கியங்களும் வார்த்தைகளும் நாக்குப் பூச்சிகள் போல நெளிந்து கொண்டே இருந்தன."
" அழகு என்பது புற அழகு மட்டுமல்ல. உள்ளிருந்து பெருகும் அழகும் புறத் தோற்றத்தில் அழகுறக் கலந்து ஒட்டு மொத்த அழகும் ஒளிர்ந்து மிளிர வேண்டும்"
"மேட்டர் மேட்டர் என மேட்டர் ஒரு மேட்டரே இல்லை என்று ஆன பின் தான் அனைத்து விஷயங்களிலும் கருத்து மோதல் வரும்"
பெண் மென்மையாகத் தான் புணர வேண்டும் என்று ஆண்கள் நினைப்பதாக ஒரு இடத்தில் வருகிறது. பெண் என்று பொதுமைப்படுத்துவதை விட "தன்" மனைவி, "தன் " கதை நாயகி, "தன்" ஆதர்ஷ மனுஷி என ஒரு சிலரை மட்டுமே இந்த வரையறைக்குள் அடைக்கிறது ஆண் மனம். காமத்துக்காக பணம் கொடுத்து செல்லும் பெண் இந்த வரையறைக்குள் வருவாளா? இல்லையே?
ஒரு வித்தியாசமான நாவல் வாசித்த திருப்தியோடு முடித்தேன்.
06 February, 2026
தற்பொழுது அரசியலில் முக்கியமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்துக்கு லேசாக தொடர்புடைய ஒரு வெப் சீரீஸ் "குற்றம் புரிந்தவன்" சோனி லைவ்வில். ஏழு எபிஸோடுகள்.
இயக்கியவர் : செல்வமணி முனியப்பன்.
பசுபதி, விதார்த் ஆகியோர் முக்கியமான கதா பாத்திரங்களில். பசுபதி வைத்திருக்கும் விக் மிக இயல்பாக அவருக்குப் பொருந்துகிறது.
பசுபதி, லட்சுமி பிரியா, லிஸி ஆன்டனி மூன்று பேருக்கும் நடிப்பில் கடும் போட்டி. விதார்த் நன்றாக நடித்திருந்தாலும் இவர்கள் அளவுக்கு வாய்ப்புகள் இல்லை.
மருத்துவமனையில் மருந்தாளராக பணி புரிபவர் பாஸ்கரன் ( பசுபதி) அவர் மகள் இறந்து போன நிலையில் மருமகனும் இல்லாமல் போக நோய்வாய்ப்பட்ட பேரன் பாஸ்கரன் தம்பதியர் பொறுப்பில்.
அவர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் எஸ்தரின் குழந்தை காணாமல் போக கதை வேகமெடுக்கிறது.
எதிர்பாராத எத்தனையோ திருப்பங்கள். பேரனாக வரும் குழந்தை தன் தந்தையுடன் யூட்யூபில் நடிப்பவர். தன் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து முகத்தில் பாவனை காட்டி இருக்கிறது.
சோதனைகள் பல திசைகளில் தாக்குதல் நடத்தும் போது ஒரு நல்ல மனிதன் கூட தடம் புரள நேரிடுகிறது என்பதைக் காட்டுகிறது.
கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பார்க்க வேண்டிய சீரீஸ்.
31 January, 2026
திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு இவ்வளவு ஆதரவு வரும்னு நான் நினைக்கல. பொதுவா நான் சந்தோஷமாவோ வருத்தமாவோ ஒரு விஷயம் என்னை பாதிச்சா முக நூலில் உடனே பதிந்திடுவேன். அப்படித் தான் இதுவும் நடந்தது. அந்த பெண்ணுக்கு ஏதும் தொந்தரவு வந்திடக் கூடாதுன்னு தான் விசிட்டிங் கார்ட் போடல.
ஆனா இப்போ ஏதும் தொந்தரவு வராது. உதவி தான் கிடைக்கும் என்பது நிச்சயமானதால் பதிகிறேன். அவர் பெயர் ஷீலா. திருச்சி ரயில் நிலையத்தில் இருக்கிறார். அவர் தொடர்பு எண் 93442 69075.
தேவைப்படுபவர்கள் இவர்களுடைய ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
( பி.கு : கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பிருந்து நெல்லையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. அடுத்து அவரை சந்தித்து எழுதுகிறேன்)
திருச்சியில் திருமணம் முடித்த கையோடு வேர்களைத் தேடிப் புறப்பட்டோம்.
என் கணவரோட சித்தப்பா இருப்பது காரைக்குடி அருகே பொய்யா வயல் என்னும் கிராமம். அவர் அப்பா கூடப் பிறந்தவர்களில் எஞ்சி இருப்பவர் இந்த சித்தப்பா மட்டுமே. அங்கே தான் என் மாமனாரோட கல்லறையும் அவங்க அம்மாவோட கல்லறையும் இருக்கின்றன.
அனைவரையும் சந்திக்க காரைக்குடி சென்றோம். மறு நாள் பொய்யா வயல் செல்வதாக ஏற்பாடு. காரைக்குடியில் எங்கே தங்கலாம் என விசாரிக்க தெரிந்தவர்களை அழைத்தேன். தெரியவில்லை என்றாலும் "காரைக்குடி" யைத் தன் பெயரில் இணைத்திருந்தவர்களையும் அழைத்துப் பார்த்தேன். ஒருவரும் போனை எடுக்கவில்லை. பிறகு ஒவ்வொருவராக பேசி விட்டார்கள். அதற்குள் அறை முடிவாகி விட்டது.
அருகிலுள்ள கடையில் விசாரித்து "சத்குரு" என்னும் லாட்ஜ்க்கு சென்றோம். நாளொன்றுக்கு வாடகை ரூபாய் 2300/- Double bed room. பக்கா ஏற்பாட்டுடன் வாசலில் தண்ணீர் தொட்டியில் தங்க மீன்கள் விரைவாக நீந்திக் கொண்டு இருக்க, செம வைப்பாக இருந்தது.
அவர்களே cab book பண்ணுவதற்கான செல் எண்ணையும் கொடுத்து விட , நாங்க பேசி பத்து மணிக்கு வரச் சொன்னோம். மறு நாள் காலை சரியா 9.45 க்கு வந்து தான் வந்து விட்டதைத் தெரிவித்தார் ஓட்டுநர். அப்போதே ஒரு சிறப்பான ஓட்டுநரோடு தான் பயணிக்கப் போகிறோம் என்பது நிச்சயமாகி விட்டது.
அடுத்து காரைக்குடி பற்றி பதிவுகள் வருகின்றன. அதையும் தவறாமல் பார்த்திடுங்க.
Subscribe to:
Comments (Atom)
