chella நாய்க்குட்டி
26 March, 2026
Couple friendly - Tamil film
Can i have a hug?
இந்தக் காலப் பிள்ளைங்க எவ்வளவு சுலபமா ஒரு கட்டிப்பிடி வைத்தியத்தை கேட்டு வாங்கித் தான் பலவீனப்பட்ட நேரத்தில் தன்னை பலப்படுத்திக்கிறாங்க என்பதை அழகான ஒரு காதல் படமா பார்க்க, நீங்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய படம் "Couple friendly" amazon prime ல இருக்குது. மூலம் தெலுகுன்னு நினைக்கிறேன். தமிழிலும் இருக்குது.
ஹீரோ ஷிவா ( சந்தோஷ் ஷோபன்)
ஹீரோயின் ( மானசா வாரணாசி)
வாய் பேச முடியாத நடிகை அபிநயா போல சாயல். ஒரு வேளை உறவாக இருக்கலாமோ?
இதர முக்கிய கதாபாத்திரங்கள் யோகி, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் .
இசை : ஆதித்யா ரவீந்திரன். ஒன்றிப் போக வைக்கும் இசை.
இயக்குநர் : அஸ்வின் சந்திரசேகர்.
நாயகன் திருச்சியில் இருந்தும் நாயகி நெல்லையில் இருந்தும் சென்னை செல்வதாகக் காட்டுகிறார்கள். இது தமிழில். மூலப் படம் தெலுகு.
Interior decoration எடுத்து வேலை செய்ய ஆசைப்படும் ஒருவர் சரியான வேலை கிடைக்காமல் தத்தளிக்கும் போது rapido மாதிரி bike booling மூலம் சம்பாதிக்கிறார். Bike booling என்கிறார்கள். Rapido வுக்கும் bike booling க்கும் என்ன வித்தியாசம் தெரியல. அப்படித் தான் கதா நாயகனும் நாயகியும் அறிமுகமாகிறாங்க.
நாயகிக்கு தங்க இடமே கிடைக்காத போது rent sharing ல ஒரே வீட்டில் தங்கி அந்நியோன்யமாகுறாங்க. அது என்னங்க மொட்டை மாடியில படுக்கிறது கேள்விப்பட்டு இருக்கிறோம். மொட்டை மாடியிலும் உள்ள ஒரு அறையின் மேலே போய் ஹீரோ தூங்குறார். உருண்டு விழுந்தா என்ன ஆகிறது.
ஆனாலும் அங்கே படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கிறது டிவைன். அதுவும் ஜோடியா படுத்துக்கிட்டு பார்க்கும் போது சான்சே இல்ல. பல இடங்களில் DOP கலக்கி இருக்கிறார்.
இப்ப 2k kids வாழ்வியல் முறையைக் காட்டும் படங்கள் வரத் தொடங்கிடுச்சு. இதுவும் அந்த வகையில் ஒன்று தான். இப்போ உண்மையான காதல் இல்லை. பிடிக்கலைன்னா உடனே பிரிந்து வேற ஆளப் பிடிச்சிடுறாங்கன்னு சொல்றோம்ல. அது இல்ல. "நீ என்னை விட்டுட்டு போயிட மாட்டேல்ல" என்று ஒரு இடத்தில் நாயகனும், ஒரு இடத்தில் நாயகியும் கேட்பது போன்ற காதல். எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்களும் பார்த்திட்டு சொல்லுங்களேன்.
17 March, 2026
மிண்டியும் பறஞ்சும் அமேசான்
அமேசான் ப்ரைம்
மலையாளம்
இயக்குநர் : அருண் போஸ்
முக்கிய நடிகர்கள் : உன்னி முகுந்தன், ( சனல்) அபர்ணா பால முரளி. ( லீனா வர்கீஸ்) ஜாஃபர் இடுக்கி ( வர்கீஸ், லீனாவோட அப்பா) , மாலா பார்வதி ( சனலோட அம்மா.
மலையாளத்தில் மிண்டுறதுன்னாலும் பறையறதுன்னாலும் ஒரே அர்த்தம் தானே என்று சிந்தித்த படி படம் பார்க்கத் தொடங்கினால் மனதோடு மனது நெருக்கமாக பேசுவதற்கு பயன்படுத்துவது என்பது புரிந்தது. சரி தானா ன்னு மலையாளம் தெரிந்தவர்கள் தான் சொல்லணும். படத்துக்கு பெயர் மிகச் சரியானது கணவனை நினைத்து மனைவியும் மனைவியை நினைத்து கணவனும் முடிவெடுக்கிறார்கள்.
ஒரு சிலரது வாழ்க்கை எதிர் பாரா நிகழ்வுகள் நிறைந்ததாய் மேடும் பள்ளமுமாய் இன்பமும் துன்பமுமாய் கலந்து இருக்கும். ஒரு சிலருக்கு வாழ் நாள் முழுவதும் துன்பம் மிகுந்ததாய் இருக்கும். ஆனால் அபூர்வமாய் வெகு சிலருக்கு எந்த வித சிரமமும் இல்லாமல் ஐஸ் க்ரீம் தொண்டையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல் சுலபமாய் இருக்கும் வாழ்க்கை.
இந்தக் கடைசி வகையைச் சேர்ந்தவர்களின் கதை தான் படம். ஹீரோ வெளி நாட்டிலிருந்து தன் மனைவியைப் பார்க்க வருகிறார். விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்குச் சென்று தாயைக் கண்டு, தங்கையின் கணவரின் காரை எடுத்துக் கொண்டு மனைவியை வந்து சந்திக்கிறார். இதற்கு இடையில் ஒவ்வொரு நிகழ்வுக்கு தொடர்பாய் பழைய காட்சிகள் ப்ளாஷ் பேக்கில் இடைச் செருகலாய் வருகிறது.
கணவன் மனைவிக்கு இடையே ரொம்ப மென்மையாய் காதல் சீண்டல்கள். அருமையான பாடல்கள். எந்த ஒரு வில்லத்தனமும் இல்லாமல் வரும் அத்தனை கதா பாத்திரங்களும் மிக நல்லவர்கள்.
இப்படியான வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமற்றதாய் இருக்குமோ என நான் நினைத்தது மட்டுமே வில்லத்தனம்.
அழகான கதாநாயகன், நன்கு மெலிந்து உடல் எடை குறைத்த அழகான கதா நாயகி. இவர்களின் காதல் வீட்டுக்குத் தெரியும் போதும் பெரிதாய் பிரச்னையில்லை. பெரு மழையோடு பல நிலச் சரிவுகள் நடக்கும் பாதையில் சனலில் சுமுகமான பயணம், காதல் திருமணம் செய்த கணவனும் மனைவியும் திருமணமான ஆரம்பத்திலேயே நாடு விட்டு நாடு பிரிந்து இருந்தாலும் அவர்களிடையே எந்த ஒரு சிக்கலும் இல்லை. இப்படி போக்குவரத்தற்ற சாலையில் ஆட்டோ கியர் வண்டியில் பயணம் போவது போல் ஒரு படம் பார்க்க ஆசைப்பட்டால் இந்த படத்தைப் பார்க்கலாம்.
16 March, 2026
மான் குட்டிகளும் பருந்துகளும்.
மான்குட்டிகளும் பருந்துகளும்
தொகுப்பாசிரியர் ஜெ.பி. ஜோஸபின் பாபா.
உலகின் பல பகுதிகளிலிருந்து 21 பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து உருவான புத்தகம்.
நான் அதிலுள்ள ஒரு சில கதைகளைப் பற்றி சின்ன சின்ன குறிப்புகள் தருகிறேன்.
வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாங்குவதற்கு கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
சுவாசம் பதிப்பகம்
ஹரன் பிரசன்னா.
அலைபேசி எண் 8148066645
கோவையைச் சேர்ந்த அகிலாவின் எழுத்துக்கு நான் ரசிகை. அதனால் "காயம்" என்ற அவர்களின் சிறுகதையை முதலில் எடுத்து வாசித்தேன். ஒவ்வொரு பெண்ணுக்குமே சிறு வயதில் நடந்த நிகழ்வால் , யாரிடமும் சொல்ல முடியாமல் போய் , அழுத்தமான காயமாய் மனநில் பதிந்த விஷயம் ஏதாவதொன்று இருக்கும். அது இல்லாத பெண் பாக்கியசாலி. ஆரோக்கியமான குடும்ப வாழ்வைப் பெற்றிருப்பாள்.
அத்தகைய ஒரு பெண்ணின் கதை தான் காயம்.
ஊட்டி போகும் வழியிலுள்ள கேத்தியின் இளங்காலைப் பொழுதின் வர்ணனையோடு கதை தொடங்குகிறது. அங்கே யூக்கலிப்டஸின் மணம் எல்லா வீடுகளிலும் இருப்பதற்கான காரணமாக இவர் சொல்லப்படுவது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம்.
"கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. வெகு சகஜமாக பாலம் போட்டு விடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை பேச முற்படாதவர்களாக சங்கோஷப்படுபவர்களாக கொள்ளலாம்" என்கிறார். மன நலம் சார்ந்த மிகச் சரியான உண்மை.
திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கூறுகையில் "ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும். திமிரா பேசும். அப்புறம் எவன் பார்த்துகிட்டு சும்மா இருப்பான் " என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்வதாக எழுதி தற்கொலைக்கான காரணத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறார்.
இதே போல தன் இள வயதில் நடந்து நேர் மறை முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுவாரஸ்யமாகச் சொல்லி கதையை நகர்த்திய தருணத்தில் "அப்படியும் இருக்கலாமென நினைத்தேன்" என்று எழுதி அதிர்ச்சி தருகிறார்.
சிறு குழந்தைகளை சிறு வயது தானே என்று எண்ணி அலட்சியமாக நடத்தாதீர்கள். அது அவர்களின் உள் மன ஆறாதக் காயமாக இருந்து வளர்ந்த பின் குடும்ப வாழ்க்கையைக் கூட பாதிக்கும் வாய்ப்புண்டு்
புத்தகத்தை வாங்கி வாசித்து இன்புறுங்கள்.
15 March, 2026
நகுலனின் நாலு கட்டு வீடு - குமரி உத்ரா
" நகுலனின் நாலு கட்டு வீடு"
ஆசிரியர் : குமரி உத்ரா.
வேரல் பதிப்பகம் .
விலை : 140 ரூபாய் .
முதல் பதிப்பு : ஜனவரி 2026 .
இந்த சிறுகதை தொகுப்பிற்கு அழகான முன்னுரை கொடுத்திருக்கிறார் நட. சிவகுமார். இவர் குமரி உத்ராவின் கதைகள் மருத நிலப்பரப்புக்குள் உலாவும் உதிரி கதை மாந்தர்களைச் சுமந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் போல் நகருகிறது என்கிறார்.
தன் 14 வயதுக்குள் தான் பயணப்பட்ட பாதைகளில், வழித்தடங்களில் தன் கண்ணில் பட்ட காட்சிகளையும், செவி வழி கேட்ட நிகழ்வுகளையும் , தன் அனுபவங்களாகவும் கதைகளாகவும் லேசாக தொட்டு விட்டு சென்றதாக சொல்கிறார் உத்ரா.
இது 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு . முதல் கதை அரளிப்பூ. வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதை. உழைப்பாளி மேனகா. எல்லோரும் அவளை மேனா என்றே அழைக்கிறார்கள். அதனால் மேனகா என முழுமையாக அழைக்கும் சின்னப் பண்ணை அழகுவை அவளுக்கு ரொம்ப பிடிக்கிறது. மேனகாவின் துள்ளலான வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது கதை . வீட்டில் வளரும் அரளிச் செடியைப் பற்றி சொல்லும் போது அரளிச்செடியின் வேர் மருந்தாக பயன்படுவதைச் சொல்லி " கெட்டது 10 இருந்தா நல்லது இரண்டு இருக்கும். நல்லதை மட்டும் நாம பயன்படுத்தணும் என்கிறார் வைத்தியர். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் தானே. அரளிச்செடி ஒரு தவறான கதை முடிவுக்கு நம்மை அழைத்துச் சென்றாலும், நேர்மறையாகவே முடித்திருக்கிறது.
"முட்டை கிறுக்கி" இரண்டாவது கதை. பாளை தெற்கு பஜார் சர்ச்சின் வாசலில் இருந்து ஸ்வட்டர் பின்னும் ஒரு வட இந்திய பெண் நினைவுக்கு வந்தார். அம்மா இல்லாத சமயம் சோறும் குழம்பும் இரண்டு வகை காய்கறியுடன் கொடுக்கும் மகளுக்கு வாழையிலை போட்டு சாப்பாடு கொடுக்க வெகு நாள் ஆசை. நாம மட்டும் சுட சுட தோசை சாப்பிடுகிறோம் ஆனால் ராப்பாடிக்கு மட்டும் கண்ணில் படாமல் வைத்து விடுகிறோம் அது தவறு என்று உட்கார வைத்து தோசை சுட்டு போட்ட ஒரு அண்ணன் இதை வாசிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தார்.
"கல்யாண குழியான்" என்றொரு கதை. சந்திரி, பஷீர் என்ற இரண்டு குழந்தைகளின் கல்மிஷமில்லா அன்பு. பஷீரின் தந்தை சில மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருக்க சந்திரி சொன்னதைக் கேட்டு மதம் தாண்டி கோயிலில் இரு குழந்தைகளும் பிரார்த்திப்பதை சொல்லும்போது இப்படி இருக்கும் குழந்தைகள் தானே வளர்ந்த பிறகு மதத்தின் பெயரால் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்கிறார்கள் என்று தோன்றியது.
" நூல் சேலை" தாய் இறந்த செய்தி கேட்ட இளைய மகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது அவளை அணைத்துப் பிடித்த அக்காவின் அன்பை சொல்லும் கதை. " இளையவளாய் பிறந்த என் சின்ன மகள் ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள் என்ற பெருமை முகம் அவளிடம் தெரிந்தது." இந்த வரி என்னைப் போன்ற தமக்கை இல்லா பெண்களுக்கும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தும். " அன்று பிடித்தது போல அவள் உடம்பு இப்போது கைகளில் இல்லை எனப் புரிந்தது " உத்ராவின் எழுத்து வன்மைக்கு ஒரு சான்று இந்த வரி.
" மஞ்சாடி முத்துக்கள்" தன் வீட்டுக்கு வேலை செய்ய வந்த தேனம்மையின் தன் வயதுப் பேத்தி மல்லிகா வளர்ந்த பின் அதே ஏழ்மை நிலையில் பார்த்ததைச் சொல்லும் கதை . " அவள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இரண்டாம் முறை சந்திக்க வாய்க்கும் போது பார்க்காமலே விலகிச் செல்லும் பாங்கு . உணர்வுபூர்வமான கதை.
" வாயில் வெற்றிலையை மென்று கன்னம் ஓரமாக ஒதுக்கி வைத்து உப்பிய கன்னத்துடன் கை வீசி பெண்ணைப் போல நடக்கும் ராஜப்பனின் தாய்மைக் கருவாக்கி வரைந்த கதை வவுலாடி . ஒன்றிரண்டு கதைகள் பலமுறை சொல்லப்பட்ட கருக்கள் கீட்சிகளைச் சொல்கின்றன என்ற சின்ன குறையைத் தவிர்க்கலாம் .
புத்தகம் விரும்புவோர் கீழ்க்கண்ட என்னை தொடர்பு கொள்ளவும்.
குமரி உத்ரா : 94865 56166
12 March, 2026
மாதவியின்
கண்ணழகில்
மயங்கிப் போன
கோவலன் போல்
வாயு அடுப்பில்
கிறங்கிப் போய்
கரியடுப்பை
மறந்த நாங்கள்
இன்று கண்ணகியிடம்
திரும்பிய,
திருந்திய
கோவலனாய்
விறகெரிக்க
முடிவெடுத்துத்
தேடினால்
நிழல் தரும்
நல்ல மரங்களை
அல்லவா
வெட்டிச் சாய்க்க
வேண்டும் போல.
Subscribe to:
Comments (Atom)
