Bio Data !!

15 August, 2026

நாவல் : வீனஸ் ஆசிரியர் : பா. கண்மணி முதல் பதிப்பு டிசம்பர் 2025 விலை : ரூ 180 வீனஸ் ஒரு அல்ட்ரா மாடர்ன், ஆண் பெண் இருவருக்குமான அழகு நிலையத்தின் பெயர். அதன் உரிமையாளர் ரஞ்சனி. "ஜெபரா மலர்க்கொத்தை வாங்கி அதன் செர்ரி பிங்க்கை நெஞ்சோடு மென்மையாய் அணைத்த ரஞ்சனி.....' கதைத் தொடக்கமே நம்மை அறிமுகமில்லாத ஒரு ஏரியாவுக்குள் கூட்டிச் செல்லப் போகிறது என மனசுக்குள் மணி அடித்துச் சொல்கிறது. அது தான் நடக்கிறது. பெங்களூரிலுள்ள ஒரு அழகு நிலையம் அதன் செயல்பாடுகள் அங்கு வருபவர்களின் மன நிலைகள் எல்லாம் நமக்குப் புதிதாக இருக்கிறது. அங்கு வரும் ரித்விக் ஒரு கலைஞன். முன்னணி ஆடை வடிவமைப்பாளர். பட்டு லுங்கியை முன் புறம் கொசுவித் தைத்து உடுத்தி மேலே ஒரு ஷெர்வானி அணிந்திருக்கிறார். அவருடன் கட்டுடல் கொண்ட ஒரு இளைஞரும் வருகிறார். ரித்விக்கின் மகனை விட ஏழெட்டு வயது மூத்தவராய் இருக்கலாம். அவனை அவர் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தார் என்று வருகிறது. " அத்தனை பெரிய ஆளுமையின் அலைக்ழிப்பைக் கண்ட ரஞ்சனி வியந்தாள் " என வருகிறது. இது போல் சில இடங்கள் கூடுதலாய் சில வரிகள் வந்திருந்தால் அநாகரீகமாக ஆகி இருக்கும் என்ற அளவில் அளவாகக் கத்தரிக்கப்பட்டு இருக்கின்றன. அழகு நிலையம் கதையின் களம் என்பதால் "எதைச் செய்ய வேண்டும் என்பது ்மட்டுமல்ல எதைச் செய்யக் கூடாது என்பதிலும் தோற்றப் பொலிவு அடங்கியிருக்கிறது " போன்ற அழகுக் குறிப்புகளும் கதையில் விரவிக் கிடக்கின்றன. ஒரு தனித்த , வளர்ந்த மகளை வளர்க்கும் தாயின் சிரமங்களையும் சொல்லி இருக்கிறார். தான் நினைத்தது நடக்காத போது மகள் "அப்புறம் எதுக்கு என் கஸ்டடியை எடுத்துக்கிட்டீங்க" என சுள் ளென கேட்கும் போது இப்படித்தானே பல குழந்தைகளும் இருக்கின்றன எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கதா பாத்திரத்தை மையமாக வைத்து எழுதி இறுதியில் மெயின் கதையில் கொண்டு சேர்ப்பதை ஒரு உத்தியாகப் பயன்படு்தியது போல் தெரிகிறது. வித்தியாசமாக இருந்தது. "தன் காரியதரிசியை சின்னப் பெண்ணாகவே தேர்ந்தெடுக்கும் வாகேசனுக்கு மனைவி சின்னப் பெண்ணாகத் தெரிவதில் மட்டும் பிரச்னை. " இது பல பெண்களுக்கும் இருக்கும் ஆதங்கம் தான். தன் மனைவி என்னவெல்லாம் செய்யக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கிறார்களோ அதைச் செய்து வரும் பெண்ணை மனைவி உடனிருப்பதைக் கூட சட்டை செய்யாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். இதைப் போல ஒரு பெண்ணின் ஆதங்கத்தைப் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். "எவ்வளவு உயரத்தில் சென்றமர்ந்தாலும் பெண்ணைச் சுற்றி மொய்க்கும் ஈக்கள் வந்து விடும்" என்கிறார். உயர் பதவியில் இருக்கும் அந்தப் பெண்களின் முந்தானை விலகினால் கூட அந்த ஈக்கள் விட்டு வைக்காது என்கிறார். ஒரு வித்தியாசமான யோசனையையும் சொல்லி இருக்கிறார். "திருமணத்திற்குப் பிறகு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தம்பதியரைச் சந்தித்து இந்த உறவைத் தொடர்வதில் உங்களுக்கு விருப்பமா எனக் கேட்க வேண்டுமாம். " சந்தியா எனும் கதாபாத்திரம் சொல்கிறது. இப்படிச் செய்தால் எத்தனை திருமணங்கள் தேறும். ஆனால் இருவருமே வாழ்க்கையை சரி வர நடத்திச் செல்லவும் வாய்ப்பிருக்கும். பெரு நகரத்தின் பல திசைகளையும் கண்ணோட்டங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நாவல். அதுவே இதன் ப்ளஸாகவும் மைனஸாகவும் இருக்கிறது. பல இடங்களில் கதையோடு ஒன்ற முடியாமல் எட்டி நிற்பது போல இருக்கிறது. ஆனால் வாசிப்பதற்கு சுவாரஸ்யமான ஒரு நாவல்.

13 August, 2026

#நூறு சாமி

திரைப்படம் : நூறு சாமி இயக்குநர் : சசி முக்கிய கதாபாத்திரங்கள் விஜய் ஆன்டனி , ஸ்வாசிகா, ( லப்பர் பந்து படத்தில் அடித்து ஆடியவர்) அஜய் திஷான், சக்தி, பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , லிஜோ மோள் மற்றும் பலர். OTT :zee5 " நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா" என்ற பாடல் வரி படத்தின் பேரைக் கொடுத்திருக்குமோ? இது ஒரு கதாநாயகியின் படம் தான். விஜய் ஆன்டனி கடைசி நாற்பது நிமிடங்கள் தான் வருகிறார். கதாநாயகிக்கு தாராளமாக இடமளித்திருக்கிறார்கள். என்னா ஒரு நடிப்பு!! இரு வளர்ந்த பையன்களின் ஒற்றைத் தாயாக ( single mother) கலக்கி இருக்கிறார். மலையாளப் படங்களை அடியொற்றி நிறைய இடங்களில் நமக்கு ஸ்பூன் feeding செய்யாமல் நம்மை உணர வைக்கிறார்கள். ஒரு கதாபாத்திரம் அடிக்கடி சிகரெட் குடிப்பதையும், செல்வி என்ற அந்த இளம் விதவையிடம் அத்து மீறிப் பேசுவதையும் காட்டி வந்து , ஒரு முக்கியமான இடத்தில் ஆளைக் காட்டாமல் அந்த சிகரெட் பிடத்த ஒற்றைக்கையை மட்டும் காட்டி நம்மை உணர வைக்கிறார்கள். கதை நாயகி செல்வியின் அண்ணனாக வரும் கருணாஸ் சமுதாய விருப்பத்தை மீறி நடக்கும் ஒரு பெண்ணிடம் கடுமை காட்டும் அண்ணனை கண் முன்னே கொண்டு நிறுத்துகுறைந்த. அடாவடி மனிதனாக வரும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் . அவருக்கு ஒரு அடிப்பொடி. தான் கதைக்குள் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நமக்குள் ஒரு மென் பதற்றத்தை உண்டாக்குகிறார். பாஸ்கராக வரும் அஜய் திஷான் தந்தையற்று வளரும் ஒரு தலைமகனின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். தன் தாயை செல்வி , செல்வி என்று பெயர் சொல்லும் அழைக்கும் இரண்டாவது மகன் சக்தி ய்ட்யூபர் என்று நினைக்கிறேன். சரி தானா சொல்லுங்கள். அவனுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது. தனது வயதின் இருபதுகளிலேயே தன் கணவனை இழந்த ஒரு பெண் ஒரு கால கட்டத்தில் மறுமணம் புரிய நினைக்கிறாள். அப்போது கோபமாக மறுதலிக்கும் மூத்த மகன் தான் அவளது நாற்பதுகளில் முனைப்பெடுத்து திருமணம் செய்து வைக்க நினைக்கிறான். அந்த வாழாவெட்டி (?) மாப்பிள்ளை தான் விஜய் ஆன்டனி. குறைந்த கால அளவே வந்தாலும் மனதில் ஆழப் பதிந்து விடுகிறார். படத்தோடு ஒன்றி வரும் பாடல்கள். இந்தக் காலத்தில் விவாகரத்தானவர்களே திருமணம் எளிதாகச் செய்யும் போது விதவை மறுமணம் ஒரு விஷயமா என நினைக்காதீர்கள். எங்கோ ஒரு கிராமத்தில் இன்னும் இது கடினமானதாக இருக்கலாம். ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுந்த கதை தான் இது என்கிறார்கள். இயக்குநர் சசி பல வருடங்களுக்கு முன் எடுத்த "பூ " படம் நம் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது போல இதுவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. பார்க்காதவங்க பார்த்திடுங்க. ஒரு நல்ல feel கொடுக்கும் படம்.

04 August, 2026

# தாயின் வலி

என் தாயின் வலி தெரிந்து வளர்ந்ததால் என்னை நம்பி வந்தவர்களை கண்ணின் மணி போல் பார்த்தேன். நான் பெற்ற மக்களை உயிரினும் மேலாய் வளர்த்தேன். எனக்கென ஒரு தேவை இல்லையென்றே இருந்தேன். எதெல்லாம் நான் இயல்பென்று நினைத்தேனோ அதெல்லாம் அற்புதமென்றார்கள். நிர்மூலமாய் ஆக்கிய போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்த என்னை அதிசயமாய் வியந்தார்கள் என் அன்பு ஒன்றே என்னைக் காப்பதை அறியாமல். அன்பே செய்க அதை இன்றே செய்க. அதையும் நன்றே செய்க

28 July, 2026

#பஃறுளி

// அடுத்து என்ன கேட்கப் போகிறாய். அற்ப ஆணே கேள் எனும் நோக்கில் "நிமிர்ந்து" நின்றது அவனை சலனமற்று இருக்கச் செய்தது. // என் பல்லாண்டு கால நண்பர் நர்சிம் எழுதிய "பஃறுளி" நாவலில் ஒரு வரி. " அற்ப ஆண் " இது ஒரு சில வயது பேதமற்ற சந்தேகம் என்னும் தீரா நோய் பற்றிய ஒரு சிலரை மட்டுமே குறிக்கும். எத்தனையோ பெருந்தன்மையான நல்ல ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் ரொம்ப கொஞ்ச பேர் என்று ஒதுங்கிப் போக முடியாத அளவில் இருக்கிறார்கள். Exceptions are not rules என்பார்கள் . அந்ம அளவில் குறுகிய எண்ணிக்கையில் இருந்தால் நாம் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இராது. இந்த "நிமிர்வு" க்குப் பின் கலங்கிப் பாரத்துத் தன் மார்பில் சாய்ந்த கணவனை அரவணைத்துக் கொள்கிறாள் கோமதி என்னும் கதை நாயகி. அவ்வளவு தான் ஒரு சில பெண்களைத் தவிர மீதி எல்லோரையும் தாய்மை என்னும் அலை சூழ்ந்து அரவணைத்துக் கொள்ளும். அவள் கோபத்தைக் கொல்லும். பெண்ணின் உணர்வுகளை உணர்ந்து சொல்லும் மற்றுமொரு எழுத்தாளர்.

26 July, 2026

சரிதா ஜோ எழுதிய ஆகிருதி

"ஆகிருதி" புத்தக அறிமுகம் சிறுகதை தொகுப்பு : ஆகிருதி ஆசிரியர் :  சரிதா ஜோ. பதிப்பாளர் :  பாரதி புத்தகாலயம் . விலை. :  220 ரூபாய் . முதல் பதிப்பு : டிசம்பர் 2025  “ கதை சொல்லி முக்கிய கதாபாத்திரத்தின் தோளின்  மேல் கை போட்டபடி நின்று கொண்டு செல்வது போல் கதைகள் அமைந்திருப்பதால் கதைக்கு அருகில் செல்வது எளிதாக இருக்கிறது”  என்று அம்பை அம்மா அவர்கள் தன் வாழ்த்துரையில் சொல்லி இருக்கிறார்.  எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் “ எந்த மெனக்கடலும் இல்லாமல் வட்டார மொழியை  கையாண்டு இருக்கிறார் ஆசிரியர்”  என்கிறார். தொகுப்பிலுள்ள  அத்தனை கதைகளும் வட்டார வழக்குக்கும் கிராமிய சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டவை. அதனாலையே நமக்கு புத்தகத்தோடு ஒன்ற முடிகிறது  சரிதா  இதுவரை குழந்தைகளுக்கு இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார் .இவருடைய சிறுவர்களுக்கான புத்தகங்கள் ஆங்கிலம் குஜராத்தி மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.   முதன்முறையாக பெரியவர்களுக்கான சிறுகதைகளை எழுதி தொகுத்திருக்கிறார்.  அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  “ ஆகிருதி” என்னும் முதல் கதை வட்டார வழக்கில் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது.  மணப்பெண் கருப்பு என்றும் , வேறு பெண்ணை காட்டி ஏமாற்றி  இந்தப் பெண்ணை திருமணம் செய்து விட்டீர்கள் என்றும் உருவக்  கேலி செய்து தகராறு செய்யும் கணவனும்,  அதனால் வலி அனுபவிக்கும் பெண்ணும் தான் கதை மாந்தர்கள்.  துணிச்சலாக முடிவெடுக்கும் இந்தப் பெண் மூலம் ஒரு வழிகாட்டுதலை கதையில்  சொல்லி இருக்கிறார். இரண்டாவது கதையான “ வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகை” களில் சிவப்பு நிற செருப்பு போடும் சிலுக்காவை முன்னிறுத்துகிறார். ஒரு காலத்தில் ஆண்களில் பலரை ஈர்த்து வைத்திருந்த நடிகை சிலுக்கு,  இந்த பேர் வைப்பதற்கு ஒரு காரணமாய் இருக்குமோ என்று எண்ணும்படி இந்த பாத்திரம் படைக்கப்பட்டு இருக்கிறது.  ஒரு பெண் அழகாகவும்,  நாகரிகமாகவும் இருந்து விட்டால் பெண்கள் , தம்  கணவன் அவளால் ஆகர்ஷிக்கப்பட்டு விடுவானோ என்னும் பயத்தில் முந்திக்கொண்டு அவளுக்கு  “ பட்டம் “ கொடுத்து விடுவார்கள் .அப்படியானவள் தான் சிலுக்கா . ஆனால் குழந்தைகளை அவளுக்கும் , அவளை குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் அப்படிப்பட்ட சிலுக்காவுக்காக எழுதப்பட்ட கதை தான்  இது. “ வாக்கு”  மூன்றாவது கதை . ஒரு குழந்தை பள்ளியில்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறது. நிகழ்ச்சிக்கு முந்தின தினம் எல்லாவித அலங்காரங்களோடு  சோதனை முயற்சி செய்ய இருந்த போது   தன் தங்க ஜிமிக்கியை  வீட்டில் கழற்றி வைக்காமல் வந்தது தெரிகிறது. வேறு வழியில்லாமல் தன் பையில் வைத்து நிகழ்ச்சிக்குப் போட வேண்டிய பிளாஸ்டிக் கம்மலை போட்டுச் செல்ல வந்த பின் தான் தன் தங்க ஜிமிக்கி  தொலைந்து போனதை  அறிகிறாள்.  ஒரு பொருள் தொலைந்த உடன் அம்மாவிடம் ஓடி வந்து அழும் குழந்தைகள் ஒரு ரகம். தொலைந்ததையே மறைத்து சமாளிக்க முயலும் குழந்தைகள் ஒரு ரகம். இந்தக் கதையின் குழந்தை இரண்டாவது ரகம். தப்புக்கு மேல் தப்பாக செய்து தன் சித்தப்பாவையும் சேர்த்து திருடு போனதை மறைக்கப்  பார்க்கிறது. குழந்தைகளுக்குத் தவறை உணர்த்தாமலும் சித்தப்பா ஏமாற்றியதன் காரணத்தை வலுவாகச் சொல்லாததும் இந்தக் கதையின் குறையாகத் தோன்றியது.  “ தாயாதி பாத்தியம்” நான்காவது கதை. ஆறு மகன்கள் இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற பெருந்தனக்காரர் பழனிச்சாமி. அவரும் அவர் மனைவி ராசம்மாளுமாகச் சேர்ந்து நாற்பது ஏக்கர் சொத்து சேர்த்திருந்தார்கள். ராசம்மா பாம்பு கடித்து இறந்த பிறகு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுத்து  ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பழனிச்சாமி.  வயது ஏறி மறதி நோய் வந்த நிலையிலும்    ராசம்மாவை தேடும் அவர் பயணம் நின்ற பாடில்லை என்கிறார் ஆசிரியர். எதை மறந்தாலும்  அவர் மறக்காதிருந்த பேத்தி சித்ரா தான்  அவரைத் தேடி அழைத்து வருவாள். ஆலமரத்தின் கட்டையாக வெட்டி விடப்பட்ட விழுதுகள்,  மனிதாபிமானமற்ற உறவுகளுக்கு படிமமாக நன்கு பொருந்திப்  போனது .அந்த விழுதுகளோட கதை முடிகிறது. எனக்கு இந்த தொகுப்பில் மிகவும் பிடித்த ஒரு கதை. “கழுவாய்” ஜாதி, மதம் மாறி நடக்கும் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாத மக்களை அவர்கள் நம்பும் விடயங்கள் மூலமே மனம் மாற்றும் நேர் மறை சிந்தனை மிகு கதை. “ஆலா” என்றொரு கதை. நித்யா தன் கிராமத்தில் இருக்கும் ஆல மரத்தை நெருங்கிய தோழியாக நினைத்து ஆலா என்றழைத்து வளர்ந்து வரும் போது கிராம வளர்ச்சிக்காக அந்த ஆல மரம் வெட்டுப்பட்டுக் கிடப்பது யானை ஒன்றை பாகம் பாகமாக வெட்டிக் கிடத்தியது போல் உள்ளது என்கிறார். அருமையான மனதைக் கீறும் படிமம். ஆல மரங்கள் பல கதைகளிலும் தன் விழுதுகளை அசைக்கின்றன.  “தாபந்தம்” கதைகளின் பெயர்களின் தேர்வில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டது தெரிகிறது.  தன் அக்கா மகன் மாதவன் மேல் அளப்பரிய அன்பு கொண்ட கோவிந்தன் தன் அடி மனத்தில் உறைந்திருந்த  ஜாதி வெறியால் எப்படி தன் மருமகனை தான் சாகும் வரை பார்க்காமல் பிரிகிறார் என்பதைச் சிவப்பு சாட்டையை சொடுக்கிச்  சொல்லும் கதை. ஆகச் சிறந்த கதை  “ வீடிலிகள் ” இறுதிக்  கதை. பெண்கள் அனேகமாக அனைவரும் தம்மோடு பொருத்திப் பார்க்கும் கதை. அதிலும் முக்கியமாக முளையில்  கட்டிய மாடாக , கயிற்றின் நீளம் தரும் சுதந்திரம் ஒரு மாயையாகத் தோன்றுவது அனேகமாக அனைத்துப் பெண்களுக்குமாய் இருக்கும். தகப்பன்,  கணவன்,  மகன் என வேறுபாடு இல்லாமல் அத்தனை பேரும் ஆண் என்ற வலுவான பிடியைத் தளர விடுவதில்லை. என்று மாறும் பெண்களின் இந்த நிலை. தன் பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டுமே பெண்களுக்கு உரிமையானதாக இல்லை. முக்கியமான முடிவிகள் எடுக்கும் உரிமையை ஆண்கள் தன் கை வசமே வைத்திருக்கிறார்கள் என் பதைச் சொல்லும் கதை. ஆகிருதி செழிப்பான மொழி வளத்தோடும், கதைக்கருவோடும் வெளி வந்திருக்கிறது.