chella நாய்க்குட்டி
29 August, 2026
பௌர்ணமிப் பெண்ணின்
நிறை அழகிலும்
மயங்காது
மாமுனி போல்
இறுகி இருண்டு கிடந்த
நீள் நீர்ப்பரப்பின்
"சுனாமி" எனும்
கோரத் தாண்டவம்
என் ரசனையைச்
சிதைத்த நேரம் தான்
வந்தது ஒரு செய்தி
" நேபாளத்தில் பேரழிவு"
எங்கள் "இதய" தேசத்தின்
ஒரு பகுதியை
அரணாய்க் காத்த
வெண்பனி சூழ் இமயத்திலும்
உலக வெப்பமடைதலால்
அமைதியான
அதிரடித் தாக்குதல்.
பேரிரைச்சலோடு
நீர் கிளம்பி வரும் போது
மக்களோடு மாக்களையும்
கபளீகரம்.
இங்கே
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
எங்கே!!
இதயத்தின் வலியை
இடது கை உணர்த்துவது போல
இமயத்தின் வலியை
உலகுக்கு
உரக்க உரைத்திருக்கிறது
நேபாளம்.
உயிரைத் தவிர
அத்தனையும் அடித்துச் செல்வதை
பரிதவித்து பார்த்து
நிற்குது
ஒரு குடும்பம்.
ஒருவரை ஒருவர்
பற்றிக் கொண்டு
உயிரைக் காத்துக் கொண்ட
முதியவர் இருவர்.
நீரின் வேகத்திலும்
நீந்திக் கரை சேர்ந்த
பரிக்களின்
கூட்டம் ஒன்று.
விதி உள்ளோர்
பிழைத்துக் கொள்ளட்டும்
எனக் விழி மூடிக்
கிடந்தது பிரபஞ்சம்.
உடம்பானாலும்
உலகமே ஆனாலும்
கட்டுக்குள்
இருந்தால் மட்டுமே
அற்புதம்.
என்ன செய்யப்
போகிறோம் நாம்.
27 August, 2026
உடன்படிக்கைப் பேழை. இன்றைய ஹிந்து திசை நாளிதழில் என் எழுத்து
உடன்படிக்கை பேழை என்றொரு சொற்றொடர் வேதாகமத்தில் அடிக்கடி வரும். அது என்ன உடன்படிக்கை பேழை? தூய்மையான தங்கத்தால் மூடப்பட்ட ஒரு புனித மரப்பெட்டி. இஸ்ரவேலுடன் கடவுள் தொடர்பு கொண்ட ஒரு சாதனமாக நம்பப்பட்டது. சித்திம் மரத்தால் செய்யப்பட்டு உள்ளேயும் வெளியேயும் தங்கத்தால் பூசுவார்கள். இதன் மூடியை "கிருபாசனம்" என அழைப்பார்கள் . அந்த மூடியின் மேல் இரண்டு வான தூதர்கள் நிற்பது போன்ற அமைப்பு இருக்கும் .
அந்த உடன்படிக்கை பேழைக்குள் ஆண்டவர் மோசேயிடம் தந்த பத்துக் கட்டளைகள் எழுதிய இரண்டு கற்பலகைகள் , மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரம், துளிர்த்த ஆரோனின் கோல் ஆகியவை இருக்கும் . இது "சாட்சிப் பெட்டி " என்றும் அழைக்கப்படும்.
மோசேயின் பிறப்பு ஒரு சுவாரசியமான விஷயம் . எகிப்து மன்னர் ஒருவர் எபிரேய மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா இருவரிடமும் தன் நாட்டுல் பிறக்கும் குழந்தைகள் ஆண் மகவுகளாக இருந்தால் கொன்று விடுங்கள். பெண் குழந்தைகள் ஆனால் வாழ விடுங்கள் என்று கட்டளையிட்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் ஆண் குழந்தைகளைக் கொல்லாமல் தப்புவித்து மன்னர் விசாரித்த போது எபிரேய பெண்கள் வலிமையானவர்களாக இருப்பதால் நாங்கள் போகும் முன்னே குழந்தை பெற்று விடுகிறார்கள் என்றனர். எனவே மன்னர் தன் குடிமக்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் நைல் நதியில் வீசி விட வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பிறந்தால் வாழ விடலாம் என்றும் ஆணையிட்டார்.
அந்த சமயத்தில் லேவி குலப் பெண் ஒருத்தி அழகான ஆண்மகவை பெற்றாள். மூன்று மாதங்களாக மறைத்து வைத்துப் பின் முடியாத போது கோரைப் புல்லால் ஒரு பேழை செய்து அதன் மேல் நிலக்கீல் பூசி அதனுள் அக்குழந்தையை வைத்து நைல் நதியின் நாணலுக்கு இடையில் விட்டாள். குழந்தையின் சகோதரி மறைந்திருந்து பார்த்திருந்தாள்.
அப்போது பார்வோன் மன்னனின் மகள் நீராட வந்தாள். அந்த பேழையை எடுத்து அதனுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கண்டாள். அழும் குழந்தையைக் கண்ட அதன் சகோதரி இளவரசியிடம் சென்று " இந்த குழந்தையைப் பாலூட்டி வளர்க்க ஒரு செவிலியை நான் அழைத்து வரவா?" என கேட்கச் சம்மதம் கிடைத்ததும், குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். குழந்தை வளர்ந்த பின் இளவரசியிடம் கொண்டு விட "நீரிலிருந்து கிடைத்த மகன்" என்பதால் "மோசே" எனப் பெயரிட்டு வளர்த்தாள்.
மோசே தன் இனத்தவன் ஆகிய எபிரேயனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைப் பார்த்து சுற்றிலும் யாரும் இல்லை எனக் கண்டு அவனைக் கொன்று மணலுக்குள் புதைத்தார். தான் செய்தது வெளியே தெரிந்து விட்டது என்ற அச்சத்தில் , பார்வோன் மன்னன் தன்னை கொல்லத் தேடியதால் தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியேறி, சிப்போரா என்ற பெண்ணை மணந்தார். அந்த மிதியானில் சீனாய் மலையில், ஒரு எரியும் முட்புதரிலிருந்து ஆண்டவர் உரத்த குரலில் பத்து கட்டளைகளைக் கூறி, இரு கற்பலகைகளில் எழுதி, மோசே இடம் தந்தார்.
இந்தப் பத்து கட்டளைகளையும் முக்கியமான இரண்டு கட்டளைகளில் அடக்கலாம்.
(1) உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் மனதோடும் உன் தேவனாகிய ஆண்டவரை அன்பு செய்வாயாக.
(2) உன்னை நேசிப்பது போல் உன் அண்டை வீட்டாரையும் அன்பு செய்வாயாக.
அத்தனை மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றைத் தானே. அன்பு செய்வோம்.
22 August, 2026
Cocktail 2
ஹிந்தி திரைப்படம் காக்டெயில் 2. இயக்குநர் : 2012 இல் காக்டெயில் என்ற படத்தை இயக்கிய ஹேமி அவர்கள்.
முக்கிய கதாபாத்திரங்கள் ஷாகித் கபூர், ராஷ்மிகா மன்டனா, க்ருத்தி சனான், மீமீ படம் பார்த்ததிலிருந்து க்ருத்தி சனானின் பெரிய ரசிகை ஆகி விட்டேன் நான். முகம் அவ்வளவு அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும்.
ராஷ்மிகாவுக்கு ஒரு துள்ளல் முகம். அவர் முகம் காட்டும் புன்னகை ஒரு நேரம் அசட்டுத் தனத்தை பிரதிபலிக்கும். அடுத்த நொடி களங்கமற்ற தனத்தைக் காட்டும். அதனால் கதாநாயகன் ஷாகித் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் படம் பார்க்க நினைத்தேன்.
பள்ளிக் காலம் தொட்டே நண்பர்களாகி அதன் பின் காதலர்களாகி லிவ் இன்னில் வாழும் நாயகனும் நாயகியும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். எந்த வித ஆட்சேபணையுமில்லாமல் திருமணம் வரை செல்கிறதே என யோசிக்கும் போது, தன் காதலன் வாய்ப்புக் கிடைத்தாலும் உத்தமனாக இருப்பானா என ஒரு உருப்படாத சந்தேகம் அவளுக்கு வருகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இரண்டாவதை அனுபவிக்கலாமே என எண்ணம் வரும் ஆணுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறாள்.
ஒரு பெண் காதலனுடன் போகும் போது அழகான பெண்ணை உடன் வைத்திருப்பதே ஆபத்து. அதில் என் காதலனுக்கு சோதனையை ஏற்படுத்தி அவன் மனச் சுத்தமுடையவன் தானா என உறுதிபடுத்திக் கொடு என அந்த அழகான பெண்ணிடமே பொறுப்பைக் கொடுத்தால் எவ்வளவு நாசம் விளையும்.
அது தான் கதைக்கான கரு. ஆனால் படத்தின் முடிவில் ரெண்டு பெண்களையும் இடதும் வலதுமாக அந்த காதலன் வாங்கும் போது ஆண்கள் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும் .
எந்த ஒரு நட்பும் அறிமுகமானதும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆனால் இன்றைய சமூக ஊடகம் அந்த புத்துணர்ச்சி என்றும் இருக்கணும் என்பதை வலியுறுத்துகிறது. அது நடைமுறைக்கொவ்வாதது. இதைப் புரிந்து கொள்ளாததாலேயே பல உறவுப் பிளவுகள் நேர்கின்றன.
இன்றைய தலைமுறைக்கு நல்ல புரிதலை உண்டாக்கும் ஒரு படம். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு வசனங்கள் உண்டு. வேகமாகத் தொடரப் பழகி விட்டால் படம் நன்றாகவே புரியும்.
என்ன ஒன்று ஆரம்பத்தில் படம் ஒரு அடலட்ஸ் ஒன்லி படமாகவே இருக்கிறது. சிசிலி என்னும் இடத்தை "நன்றாகச்" சுற்றிக் காட்டி இருக்கிறார்கள். ஆனால் போகப் போக படம் தன் போக்கை மாற்றிக் கொள்கிறது.
நல்ல ஒரு படம் பார்த்த உணர்வு.
18 August, 2026
#இடி தாங்கி
ஒரு பதிவு பார்த்தேன் அவர்கள் இருந்த அடுக்ககத்தின் மொட்டை மாடியில் இடி விழுந்து நெருப்பு பிடித்ததாகவும். ஒவ்வொரு வீடாக வந்து அவர்களை வெளியேற்றியதாகவும் சொன்னார்கள்.
எனக்கு நினைவடுக்குகளின் ஆழத்திலிருந்து ஒரு எண்ணம் கீறிக் கிளம்பியது. எங்க வீடு சர்ச்சுக்கு அருகில் தான். இப்போ இருக்குற அளவுக்கு பெரிய சர்ச் கிடையாது ஆனாலாம் கோபுரம் உயரமாக இருக்கும். அதன் உச்சியில் திரிசூலத்தின் அமைப்பில் ஒரு இரும்புத் தண்டு வைக்கப் பட்டிருக்கும். அதன் பெயர் இடிதாங்கி.
எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தா அந்த இடி தாங்கி நல்லாத் தெரியும். அப்போ எங்க அப்பா சொல்வாங்க. இடி ஒஇழுந்தா சுற்று வட்டாரத்துல ரொம்பத் தூரத்துக்கு பாதிப்பு இருக்கும். அதனால தான் உயரமான இடத்துல அந்த இடிதாங்கிய வைப்பாங்க. இடி விழுந்தா அந்த இரும்புக் கம்பி இடியின் சக்தியை இழுத்து மண்ணுக்குள் அனுப்பி விடும். பக்கத்தில உள்ள வீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இராது. Shock obsorber னு இப்போ புரியுது. அப்போ நாம பாதுகாப்பா இருக்கிறோம்னு மட்டும் தான் தோணுச்சுது.
இப்போ பெருநகரங்களில் உயர உயரமா கட்டிடங்களைக் கட்டுறாங்களே அங்கே எல்லாம் இந்த இடி தாங்கிகள் வைக்கிறாங்களா? எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே?
இடி தாங்கிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கீங்களா இப்போ அவை இருக்கின்றனவா? கமென்ட்டுல சொல்லுங்களேன்.
16 August, 2026
என் சிறு வயசுல தினம் காலையில இட்லி, தண்ணியா தேங்காய் சட்னி தான். தேங்காய் கூட ஓடிப் போய் பக்கத்துல உள்ள ரெட்டியார் கடையில சில்லு வாங்கி வந்து தான் சமையல் நடக்கும். நம்ம யோகம் போற நேரம் புதுத் தேங்காய் உடைக்கணும்னா உடைச்சு அப்படியே தண்ணியை நம்ம வாயில விடுவார். சின்ன பிள்ளைக்கு வாய் சின்னதா தானே இருக்கும். அது வாய்க்கு அந்தப் பக்கமும் இந்த பக்கமும் ஓடி சட்டையை எல்லாம் நனைக்கும்.
வித்தியாசமான பலகாரம்னா ஞாயிற்றுக் கிழமை தான். அப்போ எங்க வீட்டுல வேலை செய்து கொண்டிருந்தவள் வள்ளியம்மா தாட்டியமான ஆளு. வகை வகையா செஞ்சு கொடுப்பாங்க. அப்போ கூட பண்டிகை நாட்கள்ல மட்டும் பலகாரமா இட்லி சாப்பிட்ட குடும்பங்கள் பல இருந்தன.
அதுக்கும் கீழா வெங்காயத்தையோ பச்ச மிளகாயையோ கடிச்சுகிட்டு கஞ்சி குடிச்சுகிட்டு பள்ளி வந்ம பிள்ளைகளும் இருந்தாங்க.
ஆனால் இப்போ புரோட்டீன் எவ்வளவு இருக்கணும். கொழுப்பு சத்து எவ்வளவு இருக்கணு்னு பார்த்து பார்த்து சாப்பாடு கொடுக்கிறாங்க.
அதிலயும் good cholesterol
Bad cholesterol
Good colostral ல
Soluble cholesterol
Insoluble cholesterol
அடேங்கப்பா இப்படி பார்த்து பார்த்து கொடுக்கும் போது நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளா இருக்கணும்ல அது தான் இல்ல. "ச்" என்றால் சளி. "ம்" என்றால் காய்ச்சல்.
நாம ரொம்ப நொர்நாட்டியமா பார்க்கிறோமா இல்ல இப்படித்தான் இப்போ இருக்கணுமா?
ஒண்ணுமே புரியல உலகத்துல . என்னவோ நடக்குது மர்ம்மா இருக்குது.
ஒண்ணுமே புரியல உலகத்துல.
Subscribe to:
Posts (Atom)
