chella நாய்க்குட்டி
13 July, 2026
நாவல்: காதல் அசுரன் கிளைவ் ஆசிரியர் எம் எம் தீன்
படைப்பு பதிப்பகம்.
விலை. : 500 ரூபாய்.
முதற்பதிப்பு : டிசம்பர் 2024 .
கிளைவ் வாழ்க்கையில் இத்தனை காதலா?? என்று உங்களை அதிசயிக்க வைக்கும் என்ற ஆசிரியரின் முன்னுரையோடு முனைப்போடு வாசிப்பை தொடங்கினேன்.
ராபர்ட் கிளைவ் தன் 17 வது வயதில் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவைத் தன் நாட்டோடு இணைக்கத் துடித்த டூப்ளேயை தோற்கடித்து, ஆற்காடு கோட்டையை கைப்பற்றி " ஆற்காட்டு நவாப் " என்ற பெயரும் பெற்றார்.
கும்பினி பையன்களை மணக்க இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்த பதினொரு பெண்களில் ஒருவரான மார்க்கெட் மஸ்கரலினைக் காதலித்து திருமணம் செய்ததை சொல்லும் கதை.
தீனின் நாவல்கள் தொடங்கும் போது அட்டகாசமான இயற்கை வர்ணனைகளோடு தொடங்கும். போகப் போக அவர் கதைக்குள் போய் விடுவதாலோ, இல்லை நாம் கதைக்குள் மூழ்கி விடுவதாலேயோ அதை ரசிக்க தவறி விடுவோம்.
அதனாலேயே நான் நாவலின் முதல் அத்தியாயத்தை இரண்டு முறை வாசிப்பேன் " பொன் துகளாய் கிடக்கும் நீண்ட கடற்கரையை பார்த்தான்"
" கடலலை வெள்ளி நுரைக் கோடு தீட்டிக்கொண்டு கரையை நோக்கித் தாவி வந்து கொண்டிருந்தது"
" அவன் சிவப்பு தொப்பி தன் சிவந்த இறக்கையை விரித்த பறவையைப் போல பறந்து கீழ்த்தரை படிக்கட்டில் உட்கார்ந்தது.
" இந்த மணல் துகள்கள் சூரியனால் புடம் போடப்பட்ட தங்கப்பரல்கள் போல மினுங்கின. "
இவை எல்லாம் நாவலின் தொடக்கத்தில் என்னை ரசனைக்குள் ஆழ்த்திய வரிகள்.
கிளைவும் எட்மண்டும் நண்பர்கள். எட்மண்டு ஒரு பெண்ணின் சாயலோடு கிளைவுக்கு அறிவுரை சொல்வான். அவனுக்கு பெண்களை விட கிளைவை பிடித்திருந்தது.
எல்லா ராணுவ குழுக்களிலும் வயதானவர்களை அனுபவத்திற்காகவும், இளைஞர்களை வேகமான செயலுக்காகவும் இணைத்து இருப்பார்கள். இளைஞர்கள் கனவுப் போதையில் மிதக்க , வயதானவர்கள் பலான ஜோக்குகளோடு வலம் வருவார்கள்.
தன் அப்பாவும் சித்தப்பாவும் வழி அனுப்பி வைக்க கிளம்பி வந்த ஏழை கிளைவ் பல இன்னல்களுக்கு உள்ளாகிறார். அவன் வந்த கப்பலும் விபத்துக்குள்ளாகி ஒன்பது மாதங்கள் தாமதமாக, கையில் உள்ள பணமும் செலவழிந்து பரிதாபமாக நிற்பதை வாசிக்கும் போது இதிலிருந்து அவர் ஆற்காட்டு நவாப்பாக ஆனது வரையிலான அவர் வளர்ச்சியைப் படிக்க ஆர்வம் கூடுகிறது.
கிளைவ் லோப்மாஸ் இனப்பெண் ஒருத்தியை சந்திப்பதாக வருகிறது. அவள் அழகை வர்ணிக்கும் போது சமீபத்தில் கும்பமேளாவில் பாசிமணி விற்க வந்து, சோசியல் மீடியாவால் பிரபலமாக்கப்பட்ட மோனாலிசா என்ற பெண் நினைவுக்கு வந்தார்.
லோப்மாஸ் இனம் என்பது ஆங்கிலோ இந்தியர் போல, போர்ச்சுக்கீசியர் இந்தியர் கலந்ததால் உருவானது என்கிறார் ஆசிரியர்.
பெண்கள் க்ளைவின் அழகினாலும் கம்பீரத்தினாலும் மட்டுமல்ல அறிவினாலும் , துணிச்சலினாலும் கவரப்பட்டு இருப்பார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணிடம் " எல்லா நேரத்தையும் தனது ஆக்கிக் கொள்கிறவன் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பான்" என்பார்.
இதற்கு ஒரு உதாரணம் எப்போதாவது தன் எதிர்ப்பாலினத்திடம் ஒரு ஈர்ப்பு வருகிற போது அவனோ அவளோ அதில் கரைந்து போய் காணாமல் போய் விடுகிறார்கள். அந்த நேசத்திற்காக எதையும் இழக்கவும் செய்யவும் துணிந்து விடுகிறார்கள் இது கதைக்கு இடையே ஆசிரியரின் கருத்து . பல காதல் வெற்றி பெறுவதற்கு இந்த உணர்வு இருவரிடமும் சமமாக இருப்பது தான் காரணம் ஆகிறது.
சினிமா பார்த்து சில சமயங்களில் கொடுத்த காசு இந்த ஒரு சீனுக்கு சரியா போச்சு என்று சொல்வோமே அதுபோல கிளைவ் ஜாகியூஸ் என்ற பெண்ணிடம் விடைபெறும் நிகழ்ச்சி வாசிக்கும் போது தோன்றியது என்ன ஒரு அழகான விடைபெறல். " உன்னை என் வளர்ப்புத் தாய் போல் பார்த்துக் கொள்வேன்" என்று கிளைவ் சொல்லுவார். வெறும் உடல் சார்ந்து மட்டுமின்றி ஒரு தாய் மீது காட்டும் அன்பும் அக்கறையும் ஒத்ததுதான் உண்மை காதல்.
ஒன்றிரண்டு உடைகளோடு கப்பல் ஏறிய கிளைவ் அந்த உடைகளும் கிழிந்த நிலையில் தன் சித்தப்பாவின் நண்பர் செய்த உதவியோடு வாழ்க்கையை தொடங்குகிறார் . அந்த எளிய நிலையிலிருந்து ஆற்காட்டு வீரரான வளர்ச்சி நமக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது .
கிளைவ் மாபெரும் வீரனாக இருந்தாலும் இடையிடையே கப்பலில் ஏறிய போது இருந்த ஏழ்மையை சொல்லும் போதும் நலிந்தவனுக்கும் நன்றாகி விடலாம் என்ற நம்பிக்கை வரும். இந்தியா வந்த போது தன் அப்பாவுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுகிறார். எதற்கும் பதில் வரவில்லை. பின் தன் சித்தப்பாவுக்கு எழுதுகிறார். பின் இரண்டு மாதம் கழித்து தன் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு எழுதுகிறார் . கடிதம் எழுதுவதற்கு பதில் வராத போதிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு எழுதுகிறார். எனக்கு இந்த கடிதத்தை படிக்காமலே கூட ஒரு வார்த்தை எழுதினால் போதும்
மனம் இதம் கொண்ட நட்பை உணர்த்திவிடும் என்று எழுதி இருக்கிறார் .
கடற்காற்று கப்பலை அலைக்கழிக்க பாய் மரங்களை விரித்து பலரும் அதன் மேல் ஏறி நிற்கிறார்கள் அவர்களுள் ராபின்யங் என்ற கைதியும் ஒருவன். கடற்காற்று அமைதியானதும் அவன் இரு கைகளையும் விரித்து ஆரவாரிக்கும் போது திடீரென்று மறுபடியும் அந்த கடல் காற்று அவனை அடித்து இழுத்து கடலில் போடுகிறது. நுரை பூக்களின் மேல் அவன் தலை தெரிந்தால் காப்பாற்றி விடலாம் என்ற நிலையில் தெரியாது போக அவனை அங்கேயே விட்டபடி கப்பல் நகர்ந்து விடும் இந்த நிகழ்வை தீன் எழுதினால் வாசிக்கும் போது நாமே கப்பலில் பயணித்த உணர்வு. ஆம் அச்சம் தரும் உணர்வு வரும்.
கொன்சால்வஸ் என்ற கேப்டன் கடலில் எப்படி திசை கண்டு பயணிக்கிறோம் என்று பள்ளிப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லிக்கொடுப்பார் . நமக்கும் அது பாடமாகும். அந்த காலத்தில் கிராஸ் டாப் என்ற குழல் போன்ற கருவியையும் வானவெளி குறியீடுகளையும் வைத்துத்தான் கப்பலில் பயணத்திருக்கிறார்கள். சில சமயம் அவை தப்பாகி விடும் போது உலகைச் சுற்ற வேண்டி வரும்.
மலர்கள் இரவில் கண்களை மூடிக்கொண்டு பகலில் கண் விழிப்பது அங்கு நடக்கும் குடியையும் கும்மாளத்தையும் காணாமல் இருப்பதற்குத் தானோ என்று ஒரு இடத்தில் எழுதி இருப்பார் ஆசிரியர். எவ்வளவு அழகான கற்பனை. மலர்கள் மென்மையானவை அல்லவா? இதுபோல , கதைக்கு இடையே ஆசிரியர் நம்மோடு பேசிக் கொண்டே இருப்பார். கதை வாசிக்க தொடங்கிய கொஞ்சம் பக்கங்களிலேயே கிளைவுக்கும் எட்மண்டுக்கும் இடையிலான நட்பை பற்றிய என் சந்தேகத்தை கதை ஆசிரியருக்கு whatsapp மெசேஜ் செய்தேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை காரணம் என் சந்தேத்துக்கான விடை கதையின் கடைசி பக்கத்தில் இருந்தது. அது கிளைவ் மார்கரெட்டை விரும்பி திருமணம் செய்வதற்கான வித்தியாசமான காரணமாக இருந்தது. ஆம் காதல் அசுரன் தான் கிளைவ். நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் இந்த புத்தகம் .
நான் ரசித்தவற்றுள் ஒரு சில வரிகள் :
' காற்று மெழுகுவர்த்தியை ஆட்டுவது போல அவன் மனம் வேறொரு அசைதலை செய்து கொண்டே இருப்பதும் அவனுக்கு விளங்கியது" . அலை பாயும் மனதை காற்றுக்கு அலைக்கழியும மெழுகு திரியின் சுடருக்கு ஒப்பிட்டுசொன்னது ரசிக்க வைத்தது.
"அன்பாகப் பேசும் பெண்கள் , ஆண்களை புதிய உலகத்திற்கு அழைத்துப் போகிறார்கள் "
" கிளைவ் கிடு கிடுவென நடுக்கொடி மரத்தில் ஏறி பாய் மரத்தை விரித்துக் கட்டினான். கடல் அங்கிருத்து பார்க்க பொங்கி எழும் வட்டத் தொட்டி போல இருந்தது. வெண் மேகங்கள் விர்ரென்ற சத்தத்துடன் குளிர் காற்று போல போய்க் கொண்டிருந்தது."
"எல்லா பாய் மரங்களையும் விரித்து விடும் போது கப்பல் பூப் போல மலர்வதைப் பார்க்க அழகாக இருந்தது."
" மனிதன் மிகுந்த மகிழ்விலோ மிகுந்த வெறுமையிலோ இருக்கும்போது பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் போகிறான் "
"அர்ஜூன் லக்கி இல்ல? அவன்ட எல்லாமே இருக்குது.
ஹேய்! உன்னோட நான் இருக்கிறேன். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குது."
திரைக்கு செல்லாமல் நேரே நம்மை OTT மூலம் வந்து சேர்ந்த TEST படத்தில் நயன்தாரா மாதவனிடம் சொல்லும் இந்த வசனம் எனக்கு ரொம்ப பிடிச்சது. கிடைத்து விட்டதாலேயே பலரிடம் மதிப்பிழந்த கதையைச் சொல்லிய வசனம்.
"டீச்சரம்மா சொன்னா நிறுத்திடணும். டீச்சரம்மா சொன்னா சாப்பிடணும். டீச்சரம்மா சொன்னா அப்பா ஆகிடணும்" கோபமாக மாதவன் தன் மனைவியிடம் பேசும் வசனம். ரம்ப யதார்த்தம்.
யாருங்க வசனமெழுதியது. அந்த புறங்கையில் ஒரு மெல்லிய முத்தம்.
போரடிச்ச படம். இதைப் போய் புகழ்றீங்கன்னு சொல்றவங்களுக்கு ஒரு சொல். நான் எல்லாரிடமிருந்தும் எல்லாவற்றிலிருந்தும் நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்பும் அன்னப் பறவை.
நயன்தாரா, மீரா ஜாஸ்மின், மாதவன், சித்தார்த் , காளி வெங்கட் எல்லோருமே தம் திறமையை மிக அழுத்தமாக திரைத்துறையில் பதித்தவர்கள். கதைக் கரு மிகவும் கனம் வாய்ந்தது. விளையாட்டில் கூட விளையாடும் பணம்.
ஆனால் ஏதோ ஒரு தவறு மக்களை திரைப்படத்தை ரசிக்க விடாமல் செய்திருக்கிறது. அது என்ன என்பதை கண்டு பிடிக்க இயக்குநர் முயற்சி செய்யணும். ஒரு வேளை மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள் ஆனதால் எதிர்பார்ப்பு அதிகமாக எகிறியது காரணமாய் இருக்குமோ. தெரியவில்லை.
எல்லா தந்தையருக்கும் தன் பிள்ளைகள் முன் தான் ஹீரோவாக திகழ வேண்டும் என்ற ஆவல் இருக்கும் . எத்தனை பேருக்கு வாய்க்கும். ஆனால் சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு இல்லாமல் நேர்மையாய் வாழ்ந்து பாருங்கள். காலத்துக்கும் நினைக்கும்.
# செலவும் சிக்கனமும்.
செலவையும் சிக்கனத்தையும் சரியான விகிதத்தில் கொண்டு செல்வது என்பது கயிற்றின் மேல் நடப்பதைப் போல சாகசம் நிறைந்தது.
கையில் கிடைத்ததை எல்லாம் செலவழித்து சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்வது ஒரு வகை. அது ஒரு நாள் வெளுத்து விடும். அது நமக்கு வேண்டாம்.
சிக்கனமாய் இருக்கிறேன் பேர்வழி என்று விளக்கணைத்ததும் உடை கழற்றி வைக்கும் சுருளிராசன் தத்துவமும் கதைக்குதவாது.
அப்போ எப்படி வாழணும்.
அதுவும் இன்று காய்கறி விற்கும் விலையில் நாம் அதிகம் வீணாக்கும், நாளை உதவும் என்று fridge இல் வைத்து குப்பைக்கு போவதை குறைப்பதே பெரிய சிக்கனம். மதியம் மிஞ்சும் காய்கறியை இரவு உணவில் ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டாலே fridge க்கு போகாது. இரவு செலவழியாது என்று தோன்றினால் மாலையே வீட்டு வேலைக்கு உதவியாய் வருபவர்களிடம் கொடுத்து விடலாம். யாரோ ஒருவருக்கு உதவி விடும்.
EB bill எத்தனை ஆயிரம் வந்தாலும் கட்டுவதற்கு நமக்கு திராணி இருக்கலாம். ஆனால் அதற்காக கரண்ட்டையோ தண்ணீரையோ வீணாக்குவது நாம் நாட்டுக்கு செய்யும் துரோகம். ஆளுக்கு ஒரு அறையில் இருந்து கொள்ளலாம் அதற்குரிய வசதி இன்று நமக்கு இருக்கிறது. ஆனால் ஆளே இல்லாத அறையிலும் லைட் டும் காற்றாடியும் இயங்குவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது. சின்ன பிள்ளைகள் அணைக்காமல் சென்றால் நாம் அணைக்க கூடாது. அவர்களை அழைத்து அணைக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் அந்த நல்ல பழக்கத்தை பழகுவார்கள்.
ஒருவருக்காக ஒரு காரில் செல்வது ஆடம்பரம் என்கிறார்கள். ஆனால் அது சில சமயங்களில் தவிர்க்க முடியாதது. ஆனால் நான் ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறேன். கூடிய வரையில் நான் செல்லும் வழியில் தெரிந்தவர்கள் பஸ்சுக்கு நின்றால் நான் அழைத்து செல்வேன். சில நேரங்களில் நான் செல்ல வேண்டிய பாதை தவிர்த்து அவர்களுக்காக மாற்று வழியிலும் செல்வதுண்டு. முக்கியமான என் வயதுடையவர்களைக் கண்டால் கண்டிப்பாக உதவுவேன்.
இன்னும் யோசித்தால் பல வழிகளில் சிக்கன நடவடிக்கை தொடங்கலாம். நம்மிடம் தான் இருக்கிறதே என்று அலட்சியமாக இருந்தால் பணம் ஒரு நொடியில் நம்மை தலை குப்புற தள்ளி விடும்.
சிக்கனமாய் இல்லாமல் செலவழிப்பது எவ்வளவு தவறோ அதே அளவு செலவழிக்காமல் சேர்த்துக் கொண்டே இருப்பதும் தவறு.
இரண்டுக்கும் நடுவில் சரியாக பாலன்ஸ் செய்து வாழ்க்கையை வளமோடு வாழ்வோம்
12 July, 2026
இதெல்லாம் சின்ன வயதில் மனதில் பதிந்த விஷயங்கள். அப்போ எங்க அப்பாயி எங்களோட தான் இருந்தாங்க. சித்து உருவமாக. தங்க நிறத்தில் இருப்பாங்க. தலை முடி சுருட்டையாக தோள் அளவு தான் இருக்கும். அதைத் தூக்கி கோடாலி முடிச்சு போட்டிருப்பாங்க. வீட்டில் எப்போதும் சட்டை இல்லாமல் சேலை அணிந்து முந்தானையைச் சுத்தி மார்புக்கு மேல் மறைத்து சொருகி இருப்பாங்க. காதின் பாம்படங்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தோளுக்கு சேதி சொல்லும். கழுத்தில் கைகளில் சுருங்கி இருக்கும் தோலை அழுத்திப் பிடித்து விட்டால் அது நேராக கொஞ்ச நேரம் ஆகும். அது எனக்கு பிடித்த விளையாட்டு. அத்தனை நகங்களும் வளைந்து கிளியின் அலகு போல தோற்றம் அளிக்கும்.
வாசலில் நுழைந்ததும் உள்ள அறையில் ஜன்னலை ஒட்டி போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்து வெளியில் போவார் வருவோரை வேடிக்கை பார்ப்பது தான் பொழுது போக்கு.
ஏண்டி இவளே என்பதுடன் பெயரைச் சேர்த்துத் தான் யாருடனும் பேச்சு தொடங்கும். பெரிய பெரிய பற்கள் எந்நேரமும் போட்டிருக்கும் வெற்றிலையால் காவி படிந்து சிரிக்கும் போது ஒரு வெள்ளந்தித் தனத்தை வெளிப்படுத்தும்.
திடீர்னு பையப் பைய மாடியேறிப் போவார்கள். அந்த சமயம் நானும் கூட ஏறினால் எங்க அம்மா " வேண்டாம் இங்கேயே இரு." எனத் தடுத்து விடுவார்கள். அந்த நேரம் அனேகமாக மதியம் மூன்று மணியாகத் தான் இருக்கும். மாடிக்கு ஏன் போகிறார்கள் என்பது எனக்கு ஆர்வம் கிளப்பும் விடை தெரியாக் கேள்வியாகவே இருந்தது. ஒரு நாள் யாருமில்லாத சமயம் மெல்ல ஏறி விட்டேன். அதற்குப் பிறகு பயந்து போய் போவதில்லை.
சுவற்றில் மாட்டி இருந்த இயேசு நாதரின் படத்தின் முன் முழந்தாளிருந்து, ஒரு சின்ன சாட்டையால் தன்னை அடித்த படி செபம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு முறை சாட்டை காற்றில் வீறிடும் போதும் விசுக் விசுக் என சத்தமிட்டது. கண்கள் மூடிய படி குரலில் மெல்லிய அழுகை கலந்து அவர்கள் செபித்தது மறுபடியும் மாடி ஏறிப் பார்க்கும் துணிவைத் தகர்த்து விட்டது.
21 பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளிவந்துள்ள " மான் குட்டிகளும் பருந்துகளும்" புத்தகத்தைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். எனது மாயக் கண்ணன் என்ற சிறுகதையும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
முதல் கதை புதிய மாதவி எழுதிய "நினைவு நாள்"
சில ஆண்கள் காடு மலை எல்லாம் சுற்றித் திரிந்து தகவல் சேகரித்து எழுதுவது தான் சிறந்த எழுத்துன்னு நினைக்கிறாங்க. அறிவுக்கு இணையா உணர்வுகளும் முக்கியமானவை தான்.
உணர்வுப் பாதிப்பை உண்டாக்கும் கதைகளை பெண்களால் தான் சிறப்பாக எழுத முடியும். அதற்கொரு உதாரணம் இந்த சிறுகதை நினைவு நாள்.
மனைவி இறந்த கணேஷும் கணவனை இழந்த மீனாவும் மறுமணம் புரிந்து கொள்கிறார்கள். எதைப் பேசினாலும் தன் இறந்து போன மனைவியிடமே வந்து பேச்சை முடிப்பது தான் "மனைவி மீதி இவ்வளவு அன்பா" என்று வியந்து திருமணம் புரிய வைத்தது.
ஆனால் மீனாவுக்கு திருமணத்துக்குப் பின் அதுவே மன உழைச்சலைத் தந்தது.கணேஷின் மனைவி உமா இறந்த ஆண்டு நினைவு நாள் அன்று வீட்டை அதகள் படுத்தி விடுவான். அதை மிக அழகாக விவரித்திருக்கிறார்.
ஆனால் சாலை விபத்தில் இறந்து போன மீனாவின் கணவன் ரமேஷின் இறந்த நாள் சத்தமில்லாமல் கடந்து போகும். இந்த ஆர்ப்பாட்டம் மீனா செய்திருந்தால் கணேஷ் அதை எப்படி எதிர்கொண்டிருப்பான். இதை சிந்திக்க வைக்கத் தான் பெண்ணெழுத்து தேவையாய் இருக்கிறது.
கணேஷ் பேசிக் கொண்டிருந்தான். உமா கேட்டுக் கொண்டிருந்தாள் . மீனா மௌனமாக இருந்தாள் அவள் மௌனத்தை ரமேஷுடன் இரவுகளும் கேட்டுக் கொண்டிருந்தன என அழகாக முடித்திருந்தார்.
என்னை உடைத்துப் போட்ட ஒரு வரி உண்டு " தலையணையை எடுத்து வயிற்றோடு வைத்துச் சேர்த்துக் கட்டிக் கொண்டு கால்கள் இரண்டையும் மடக்கிப் பனிக்குடம் உடைக்கப் போகும் குழந்தையைப் போல படுத்திருந்தாள்"
இது தான் அந்த வரி.
அகிலாவின் " காயம்" என்ற சிறுகதை. ஒவ்வொரு பெண்ணுக்குமே சிறு வயதில் நடந்த நிகழ்வால் , யாரிடமும் சொல்ல முடியாமல் போய் , அழுத்தமான காயமாய் மனநில் பதிந்த விஷயம் ஏதாவதொன்று இருக்கும். அது இல்லாத பெண் பாக்கியசாலி. ஆரோக்கியமான குடும்ப வாழ்வைப் பெற்றிருப்பாள். அத்தகைய ஒரு பெண்ணின் கதை தான் காயம். ஊட்டி போகும் வழியிலுள்ள கேத்தியின் இளங்காலைப் பொழுதின் வர்ணனையோடு கதை தொடங்குகிறது. அங்கே யூக்கலிப்டஸின் மணம் எல்லா வீடுகளிலும் இருப்பதற்கான காரணமாக இவர் சொல்லப்படுவது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம். "கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. வெகு சகஜமாக பாலம் போட்டு விடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை பேச முற்படாதவர்களாக சங்கோஷப்படுபவர்களாக கொள்ளலாம்" என்கிறார். மன நலம் சார்ந்த மிகச் சரியான உண்மை. திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கூறுகையில் "ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும். திமிரா பேசும். அப்புறம் எவன் பார்த்துகிட்டு சும்மா இருப்பான் " என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்வதாக எழுதி தற்கொலைக்கான காரணத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இதே போல தன் இள வயதில் நடந்து நேர் மறை முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுவாரஸ்யமாகச் சொல்லி கதையை நகர்த்திய தருணத்தில் "அப்படியும் இருக்கலாமென நினைத்தேன்" என்று எழுதி அதிர்ச்சி தருகிறார். சிறு குழந்தைகளை சிறு வயது தானே என்று எண்ணி அலட்சியமாக நடத்தாதீர்கள். அது அவர்களின் உள் மன ஆறாதக் காயமாக இருந்து வளர்ந்த பின் குடும்ப வாழ்க்கையைக் கூட பாதிக்கும் வாய்ப்புண்டு் .
ஆசிரியர் இளம்பிறை எழுதிய
"பூரணக் குட்டி" மற்றுமொரு கதை. வட்டார மொழி இவர்களுக்கு நன்றாக கை வருகிறது. பூரணக் குட்டி பெயர் காரணம் பதற வைக்கும். கழிப்பறை வீட்டில் இல்லாததால் மலம் கழிக்கப் போன வயற் காட்டிலேயே இவளை பெற்றெடுத்திருப்பார்கள் பூரணக் குட்டியின் தாய். இன்று கூட வீட்டில் கழிப்பறை இல்லாமல் பெண் போன இடத்தில் கற்பு அழிக்கப்பட்டு கொலையும் செய்யப்படும் செய்தி கேள்விப்படுகிறோம். இந்த கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வந்திருந்தால் ஒரு முத்திரை கதையாக ஆகி இருக்க வாய்ப்புண்டு.
தனலட்சுமி பாஸ்கரன் எழுதிய யாசகம் ஒரு கதை கோவில் வாசலில் பூ விற்கும் பெண்ணிடம் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகளைப் பற்றி ஞானசுந்தரி விசாரிக்கிறாள் கேட்டு முடித்ததும் இறைவனிடம் தனக்காக வேண்டாமல் அவர்களுக்காக யாசகம் கேட்கிறாள். வாசகம் கேட்ட கையோடு அந்தப் பகுதி கவுன்சிலருக்கு ஒரு விண்ணப்பமும் எழுதி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது
இந்த சிறுகதை தொகுப்பில் நான் எழுதிய மாயக்கண்ணன் என்ற சிறுகதையும் உண்டு . பொதுவாகவே ஆண்கள் எளிதில் சில விஷயங்களை நம்பி விடுவார்கள் ஆனால் பெண்கள் நுண்ணறிவோடு வரக்கூடிய ஆபத்தையும் யோசித்து இயங்குவார்கள் இந்த கதையில் அப்படி ஒரு அவசர தனத்தில் தனக்கு சீட்டு விளையாடும் இடத்தில் அறிமுகமான ஒருவனை தன் தங்கைக்கு திருமணம் முடித்துக் கொடுத்து அது எவ்வளவு பெரிய சிக்கலில் போய் நின்றது என்பதை சிறுகதையாக சொல்லி இருக்கிறேன்.
21 பெண்களின் சிறுகதைகளை 25 நாட்களில் தொகுத்து ஒரு தொகுப்பாக வர பெரும் முயற்சி செய்த ஜோஸ்வின் பாவா அவர்களின் சிறுகதை பாப(வ)நாசம் அதாவது பாபநாசம் எடுத்துக்கலாம் பாபநாசம்னு எடுத்துக்கலாம் ஒரு பள்ளி ஆசிரியர் தன் மாணவர்களை அழைத்துக்கொண்டு தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் பணிக்கு செல்கிறார்கள் பனிம வயது பிள்ளைகளை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டு விடுவது என்பது பெரும் பணி ஒரு சின்ன சிக்கல் கடந்து பத்திரமாக அழைத்து வந்து சேர்த்தாலும் பணியை விட்டு நீக்கப்பட்டதாக அந்தப் பெண்மணிக்கு கடிதம் வருகிறது பல இடங்களில் சம்பளம் வந்தால் போதும் மெனக்கடல் வேண்டாம் என சிலர் முடிவெடுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது பொறுப்பெடுத்தால் தானே பிழைகள் ஏற்பட என்று ஒரு பாதுகாப்பு ஜோனிலேயே தன் பனிக்காலத்தை முடித்து விடுவார்கள் ஒரு பெண் ஆசிரியரின் பரிதாப நிலையை சொல்லும் கதை
அர்ஷா எழுதிய "அதிகாரத்தின் களிமண் பொம்மைகள்" சூர்ய பிரகாஷ் தலைமைச் செயல் அதிகாரி. கம்பீர ஆண். தன்னை அழகாக வெளிப்படுத்தக் கூடியவர்.வாசிப்பு பழக்கமுடையவர். கணினியில் நவீன செயல்பாடுகள் நன்கு அறிந்தவர். அவர் அலுவலகத்தில் புதிதாக பணிக்குச் சேர்ந்த தமிழரசு கணவனால் நிராகரிக்கப்பட்டவர். அலுவலகங்களில் பெண்ணை தன் வயப்படுத்த ஆண்கள் பயன்படுத்தும் உத்திகளை சிறப்பாகக் கையாள்வதில் வல்லவர் சூர்ய பிரகாஷ். ஆனால் தமிழரசி அவர் பெண்களை எடைபோட்டு வைத்திருப்பதிலிருந்து எப்படி மாறுபட்டவள் என்பதை தெளிந்த நீரோடை போலச் சொல்லும் கதை.
மொத்தத்தில் பல விருதுகள் வாங்கினவர்கள் முதல் தம் முதல் சிறுகதை எழுதியவர் வரை இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு. ஒரு சில வெளிநாட்டு பெண்களும் இடம் பெற்றிருப்பதால் அகில உலகத்தின் பெண்களின் உணர்வுகளைப் புரிந்த கொள்ள உதவும் ஒரு தொகுப்பாக இருக்கிறது.
தொகுப்பாசிரியர் ஜெ.பி ஜோஸ்ஃபின் பாபா
Swasam பதிப்பகம்.
தொடரபு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 8148066645
Subscribe to:
Posts (Atom)
