Bio Data !!

09 June, 2026

45 வருடங்களுக்கு முன் ஒரு காட்சி அப்பா இல்லை. அம்மா மட்டுமே . மருத்துவமனையில் பிள்ளை பெற்றவள் ஓடி வந்து அம்மாவைப் பற்றிய படி காலில் விழுந்து அழ, அம்மா அழ, சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் அழ உள்ளே தொட்டிலில் குழந்தை தனியாக அழத் தொடங்கியது. பிள்ளை பெற்றவள் வேறு யாரும் இல்லை நானே தான். காதல் திருமணத்தால் கோபத்தில் இருந்த அம்மா பிள்ளை பெற்ற மூன்றாம் நாள் தான் பார்க்க வந்தார்கள். இன்று ஏன் இது நினைவுக்கு வருகிறது? யாருடைய ஆதரவும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவது, தனி ஒருத்தியாய் ஆதரவில்லாமல் பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுவது. தாய் இணைந்த கையோடு கணரிடமிருந்து அழ அழ பிரித்துச் செல்வது இதற்கெல்லாம் என்ன விலை? என் கணவரிடம் சொன்னார்கள் "அவளையும் குழந்தையையும் மட்டும் தான் அழைத்துச் செல்ல முடியும். விருப்பம் இல்லையென்றால் இங்கேயே வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்" இத்தனைக்கும் மேலே பணி புரிந்து இல்லற சுமைகளுக்கு தோள் கொடுக்கிறாளே அந்த வலிகளுக்கும் விலை நிர்ணயிக்க முடிந்தால் கணக்கு போடலாம். இல்லறத்தில் யார் அதிகம் செலவு செய்தது என. பெண்கள் ஆண்களின் குடும்பச் சுமைக்கு தோள் கொடுக்கத் தான் பணி புரிய வந்தார்கள். தனக்கான செலவுகளைத் தானே பார்த்துக் கொண்டு கணவனைக் கொஞ்சம் விடுவிக்கலாமே என நினைத்தார்கள். இன்றைய நிலைமை என்ன? இன்று எத்தனை பேருக்கு அது நினைவில் இருக்கிறது. என்னமோ மனசு தொய்ந்து இருக்கிறது. சொல்லணும்னு தோணுச்சு.

06 June, 2026

# மன ஒடுக்கம். Inferiority complex க்கு மிக அழகான தமிழ்ச் சொல் மன ஒடுக்கம். சிறு வயதிலிருந்தே என்னிடம் தன்னம்பிக்கை மிகுந்து இருந்ததை உணர்ந்திருக்கிறேன். நான் பெரிய அழகி எல்லாம் இல்லை. என் இரு தங்கைகளும் எங்க அப்பாவைப் போல பொன் தோல் உடையவர்கள். நான் எங்க அம்மாவைப் போல மாநிறம். "உங்க தங்கச்சியா. பார்த்தா தெரியவே இல்ல. " இது நிறத்தை மட்டுமே குறிப்பிடுவது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். மூவரில் உயரமும் உயரத்துக்கு ஏற்ற உடம்பும் உடையவள் நான். அது ஒரு பொருட்டாகவே ஆரம்பத்தில் இருந்ததில்லை. இதே ஒடுக்கத்தை என் மகளும் சந்தித்திருக்கிறாள். ஒருத்தி அப்பாவைப் போல. மற்றொருத்தி என்னைப் போல. இப்போ கொஞ்சம் மாற்றம். "உங்க அக்காவா? பார்த்தா தெரியவே இல்ல" ஆனா எங்க அப்பா என்னை ஒரு ஆண் பிள்ளையைப் போல வளர்த்தார். வங்கி, தபால் நிலையம், ரயில் நிலையம் ஒவ்வொரு இடத்துக்கு அவர் போகும் போதும் என்னை அழைத்துச் செல்வார். பெண் பிள்ளைகள் எங்க பகுதியில் சைக்குள் ஓட்டாத போது என் 12 வயதில் Francis என்ற ஒரு அண்ணனை வைத்து எனக்கு சைக்கிள் ஓட்டச் சொல்லித் தந்தார். நல்லா ஓட்டப் பழகியவுடன் தாமு என்ற பக்கத்து வீட்டுப் பையனோட போட்டி போட்டு ஓட்டி பால் கொண்டு வந்த ஒரு சிறுமி மீது மோதி வீட்டுக்குப் புகார் வந்த போது சமாதானம் செய்து பணம் கொடுத்து அனுப்பினார். என்னை முதுகில் தட்டி கவனமா ஓட்டணும் என்றார். இப்படி பதினைந்து வயது வரை அவர் போட்ட அடித்தளம் தான் இன்று வரை கட்டடத்தை உறுதியாக நிற்க வைத்திருக்கிறது. அதனால் அன்று முதல் இன்று வரை என் பலங்களை மட்டும் நினைத்திருக்கிறேன். பலவீனங்களை பலப்படுத்த மட்டுமே கவனத்தில் கொண்டிருக்கிறேன். என் தன்னம்பிக்கையே என்னை மேலும் மேலும் அழகாக்கியது. இப்போ அடுத்த பக்கத்துக்கு வருவோம். சமுதாயம் சொல்லும் பல பலங்கள் இருந்தும் அடுத்தவரோடு பொருத்திப் பார்த்து தன்னை தாழ்வாக நினைத்துக் கொள்வார்கள் ஒரு சிலர். அதுவே எந்த ஒரு காரியத்திலும் இறங்கும் துணிச்சலைத் தராது. போதாததற்கு துணிந்து இறங்குபவர்களை இளக்காரமாகப் பேச வைக்கும். இது தான் நம் பெர்சனாலிட்டியை எவ்வளவு அழகானவராக இருந்தாலும் அசிங்கமாகக் காட்டும். நம் பிள்ளைகளோ பேரப் பிள்ளைகளோ வளரும் போதே அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகம் வீட்டில் நடக்கும் Body shaming, அறிவை ஒப்பிட்டுப் பேசுதல் போன்றவற்றால் தான் மன ஒடுக்கமே உண்டாகும். அதைத் தவிர்க்க வேண்டும். மற்ற திறமைகள் தானாக வளர்ந்து விடும். நான் மிகவும் அஞ்சுவது மன ஒடுக்கம் உடையோருடனான நட்பு, உறவு.

02 June, 2026

"நீ உன் வாழ்க்கையின் வசந்த காலமெனும் வாலிபப் பருவத்தில் கடவுளை அழைக்காவிடில் குளிர் காலமெனும் முதுமைப் பருவத்தில் அவர் வர மாட்டார்." இன்று வாசித்ததில் என்னை பாதித்தது. என்னைப் பொருத்தவரை எப்போ அழைத்தாலும் தயங்காமல் வந்து அரவணைப்பவன் தான் இறைவன். நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க.

29 May, 2026

மலரினும் மெல்லிய மனமுடையார் இந்த பூ பேர் தெரியாது. மகிழம்பூவா இருக்கலாம். நல்ல மணம் அத்த இடத்தைக் கடக்கும் போது வா வா என்றழைக்கும். அத்தனை பேரும் அலட்சியப்படுத்திய அழைப்பை ஒருவர் மதித்தார். தினம் உதிரும் பூக்களை அழகாக அடுக்கி வைத்தார். நான் இன்று அவரிடம் பேசினேன். ஆங்கிலத்தில் தான். ரொம்ப ஆர்வமா தினமும் அலங்கரிக்கிறீங்களே! என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் பதிவெழுதத் தூண்டியது. இரவெல்லாம் நிறைய பூக்கள் உதிர்ந்து கிடக்குது. அப்படியே விட்டால் ஏறி மிதித்து நடந்து போவாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால விழுந்த பூக்களை அலங்கரிப்பேன் என்றார். ஒரு நல்ல விஷயம் என்னென்னா இதன் பக்கத்தில் உதிர்ந்து கிடக்கும் பூக்களையும் மக்கள் மிதிப்பதில்லை. ஒதுங்கிச் செல்கிறார்கள். மலரினும் மெல்லிய மனமுடையவர்கள்.

28 May, 2026

நமக்கு அவர்களைப் பார்த்துப் பொறாமைப் பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். ஆனால் நமக்கு பொறாமையே வராது. அவர்களிடம் இல்லாத ஒரு விஷயம் நம்மிடம் இருக்கும். அதைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.