Bio Data !!

16 March, 2026

மான் குட்டிகளும் பருந்துகளும்.

மான்குட்டிகளும் பருந்துகளும் தொகுப்பாசிரியர் ஜெ.பி. ஜோஸபின் பாபா. உலகின் பல பகுதிகளிலிருந்து 21 பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து உருவான புத்தகம். நான் அதிலுள்ள ஒரு சில கதைகளைப் பற்றி சின்ன சின்ன குறிப்புகள் தருகிறேன். வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாங்குவதற்கு கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். சுவாசம் பதிப்பகம் ஹரன் பிரசன்னா. அலைபேசி எண் 8148066645 கோவையைச் சேர்ந்த அகிலாவின் எழுத்துக்கு நான் ரசிகை. அதனால் "காயம்" என்ற அவர்களின் சிறுகதையை முதலில் எடுத்து வாசித்தேன். ஒவ்வொரு பெண்ணுக்குமே சிறு வயதில் நடந்த நிகழ்வால் , யாரிடமும் சொல்ல முடியாமல் போய் , அழுத்தமான காயமாய் மனநில் பதிந்த விஷயம் ஏதாவதொன்று இருக்கும். அது இல்லாத பெண் பாக்கியசாலி. ஆரோக்கியமான குடும்ப வாழ்வைப் பெற்றிருப்பாள். அத்தகைய ஒரு பெண்ணின் கதை தான் காயம். ஊட்டி போகும் வழியிலுள்ள கேத்தியின் இளங்காலைப் பொழுதின் வர்ணனையோடு கதை தொடங்குகிறது. அங்கே யூக்கலிப்டஸின் மணம் எல்லா வீடுகளிலும் இருப்பதற்கான காரணமாக இவர் சொல்லப்படுவது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம். "கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. வெகு சகஜமாக பாலம் போட்டு விடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை பேச முற்படாதவர்களாக சங்கோஷப்படுபவர்களாக கொள்ளலாம்" என்கிறார். மன நலம் சார்ந்த மிகச் சரியான உண்மை. திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கூறுகையில் "ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும். திமிரா பேசும். அப்புறம் எவன் பார்த்துகிட்டு சும்மா இருப்பான் " என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்வதாக எழுதி தற்கொலைக்கான காரணத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இதே போல தன் இள வயதில் நடந்து நேர் மறை முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுவாரஸ்யமாகச் சொல்லி கதையை நகர்த்திய தருணத்தில் "அப்படியும் இருக்கலாமென நினைத்தேன்" என்று எழுதி அதிர்ச்சி தருகிறார். சிறு குழந்தைகளை சிறு வயது தானே என்று எண்ணி அலட்சியமாக நடத்தாதீர்கள். அது அவர்களின் உள் மன ஆறாதக் காயமாக இருந்து வளர்ந்த பின் குடும்ப வாழ்க்கையைக் கூட பாதிக்கும் வாய்ப்புண்டு் புத்தகத்தை வாங்கி வாசித்து இன்புறுங்கள்.

15 March, 2026

நகுலனின் நாலு கட்டு வீடு - குமரி உத்ரா

" நகுலனின் நாலு கட்டு வீடு" ஆசிரியர் : குமரி உத்ரா. வேரல் பதிப்பகம் . விலை : 140 ரூபாய் . முதல் பதிப்பு : ஜனவரி 2026 . இந்த சிறுகதை தொகுப்பிற்கு அழகான முன்னுரை கொடுத்திருக்கிறார் நட. சிவகுமார். இவர் குமரி உத்ராவின் கதைகள் மருத நிலப்பரப்புக்குள் உலாவும் உதிரி கதை மாந்தர்களைச் சுமந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் போல் நகருகிறது என்கிறார். தன் 14 வயதுக்குள் தான் பயணப்பட்ட பாதைகளில், வழித்தடங்களில் தன் கண்ணில் பட்ட காட்சிகளையும், செவி வழி கேட்ட நிகழ்வுகளையும் , தன் அனுபவங்களாகவும் கதைகளாகவும் லேசாக தொட்டு விட்டு சென்றதாக சொல்கிறார் உத்ரா. இது 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு . முதல் கதை அரளிப்பூ. வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதை. உழைப்பாளி மேனகா. எல்லோரும் அவளை மேனா என்றே அழைக்கிறார்கள். அதனால் மேனகா என முழுமையாக அழைக்கும் சின்னப் பண்ணை அழகுவை அவளுக்கு ரொம்ப பிடிக்கிறது. மேனகாவின் துள்ளலான வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது கதை . வீட்டில் வளரும் அரளிச் செடியைப் பற்றி சொல்லும் போது அரளிச்செடியின் வேர் மருந்தாக பயன்படுவதைச் சொல்லி " கெட்டது 10 இருந்தா நல்லது இரண்டு இருக்கும். நல்லதை மட்டும் நாம பயன்படுத்தணும் என்கிறார் வைத்தியர். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் தானே. அரளிச்செடி ஒரு தவறான கதை முடிவுக்கு நம்மை அழைத்துச் சென்றாலும், நேர்மறையாகவே முடித்திருக்கிறது. "முட்டை கிறுக்கி" இரண்டாவது கதை. பாளை தெற்கு பஜார் சர்ச்சின் வாசலில் இருந்து ஸ்வட்டர் பின்னும் ஒரு வட இந்திய பெண் நினைவுக்கு வந்தார். அம்மா இல்லாத சமயம் சோறும் குழம்பும் இரண்டு வகை காய்கறியுடன் கொடுக்கும் மகளுக்கு வாழையிலை போட்டு சாப்பாடு கொடுக்க வெகு நாள் ஆசை. நாம மட்டும் சுட சுட தோசை சாப்பிடுகிறோம் ஆனால் ராப்பாடிக்கு மட்டும் கண்ணில் படாமல் வைத்து விடுகிறோம் அது தவறு என்று உட்கார வைத்து தோசை சுட்டு போட்ட ஒரு அண்ணன் இதை வாசிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தார். "கல்யாண குழியான்" என்றொரு கதை. சந்திரி, பஷீர் என்ற இரண்டு குழந்தைகளின் கல்மிஷமில்லா அன்பு. பஷீரின் தந்தை சில மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருக்க சந்திரி சொன்னதைக் கேட்டு மதம் தாண்டி கோயிலில் இரு குழந்தைகளும் பிரார்த்திப்பதை சொல்லும்போது இப்படி இருக்கும் குழந்தைகள் தானே வளர்ந்த பிறகு மதத்தின் பெயரால் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்கிறார்கள் என்று தோன்றியது. " நூல் சேலை" தாய் இறந்த செய்தி கேட்ட இளைய மகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது அவளை அணைத்துப் பிடித்த அக்காவின் அன்பை சொல்லும் கதை. " இளையவளாய் பிறந்த என் சின்ன மகள் ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள் என்ற பெருமை முகம் அவளிடம் தெரிந்தது." இந்த வரி என்னைப் போன்ற தமக்கை இல்லா பெண்களுக்கும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தும். " அன்று பிடித்தது போல அவள் உடம்பு இப்போது கைகளில் இல்லை எனப் புரிந்தது " உத்ராவின் எழுத்து வன்மைக்கு ஒரு சான்று இந்த வரி. " மஞ்சாடி முத்துக்கள்" தன் வீட்டுக்கு வேலை செய்ய வந்த தேனம்மையின் தன் வயதுப் பேத்தி மல்லிகா வளர்ந்த பின் அதே ஏழ்மை நிலையில் பார்த்ததைச் சொல்லும் கதை . " அவள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இரண்டாம் முறை சந்திக்க வாய்க்கும் போது பார்க்காமலே விலகிச் செல்லும் பாங்கு . உணர்வுபூர்வமான கதை. " வாயில் வெற்றிலையை மென்று கன்னம் ஓரமாக ஒதுக்கி வைத்து உப்பிய கன்னத்துடன் கை வீசி பெண்ணைப் போல நடக்கும் ராஜப்பனின் தாய்மைக் கருவாக்கி வரைந்த கதை வவுலாடி . ஒன்றிரண்டு கதைகள் பலமுறை சொல்லப்பட்ட கருக்கள் கீட்சிகளைச் சொல்கின்றன என்ற சின்ன குறையைத் தவிர்க்கலாம் . புத்தகம் விரும்புவோர் கீழ்க்கண்ட என்னை தொடர்பு கொள்ளவும். குமரி உத்ரா : 94865 56166

12 March, 2026

மாதவியின் கண்ணழகில் மயங்கிப் போன கோவலன் போல் வாயு அடுப்பில் கிறங்கிப் போய் கரியடுப்பை மறந்த நாங்கள் இன்று கண்ணகியிடம் திரும்பிய, திருந்திய கோவலனாய் விறகெரிக்க முடிவெடுத்துத் தேடினால் நிழல் தரும் நல்ல மரங்களை அல்லவா வெட்டிச் சாய்க்க வேண்டும் போல.

11 March, 2026

தமுஎச வி எம் சத்திரம் கிளை நடத்திய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை பாளை சரோஜ் நினைவகத்தில் பேராசிரியர் முத்துலட்சுமி அவர்கள் தலைமை ஏற்று நடத்தித் தந்தார். திரு வண்ணமுத்து அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.சி.த. இஷா & ச.ஜீவன் கவிதை வாசித்தார்கள். சாகித்ய அகடமி விருதாளர் முனைவர் விமலா " தமிழிலக்கியப் புலத்தில் பெண்ணியப் போக்குகள்" என்ற தலைப்பில் பேசினார். "பெண் சந்தித்த முதல் தோல்வி தான் முதன்மை இடத்திலிருந்து இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது தான் என்றார். உண்மை தானே . ஆதியிலே தாய் வழிச் சமூகமாக இருந்து ஒரு மூத்த தாய்க் கிழவியின் பேச்சு கேட்டு நடந்த சமூகம் பற்றி நாம் அறிந்தது தானே. பாரதியார் பெண் விடுதலை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் ஒருவர் " எவ்வளவு புரட்சி பேசினாலும் சாலையில் நடந்து வரும் போது உமக்கு பத்தடி தள்ளி பின்னால் தானே உங்க மனைவி மனைவி வர்ராங்க" என்று கேட்ட உடன் தன் மனைவியின் தோளில் கை போட்டு அக்ரஹாரத்தில் உடன் அழைத்துச் சென்றவர் பாரதியார் என்பதை நினைவுபடுத்தினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சத்யா ஒரு அருமையான கருத்தினைச் சொன்னார். பாலியல் பற்றி கொஞ்சமும் தெரியாத வயதில் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் அதுவே பெரியவர்களிடம் குழந்தைகளை தவறான இடங்களில் தொடாதே என அழுத்தி வலியிறுத்துவதில்லை என்றார். நம் பழக்கமே தவறு செய்யும் ஆண்களை விட்டு விட்டு பெண்களிடம் நீ சரியான உடை அணிந்து வா என சொல்வது தானே. பாப்பாக்குடி செல்வமணி அவர்கள் " உலகம் ரொம்ப மாறி விட்டது. என் மனைவி மகன்களிடம் நல்லா வீட்டு வேலை செய்யப் பழகிக்கோ. அப்போ தான் கல்யாணமாகிப் போற இடத்துல அடி வாங்காமத் தப்பலாம் " என்று சொல்லி வளர்ப்பதாகச் சொன்னார். அது நகைச்சுவைக்காக மட்டும் அல்ல உண்மையிலேயே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றத்தைத் தான் குறிப்பிடுகிறார். ஆனாலும் அந்த குழந்தைகளின் தாய் பாராட்டுக்குரியவர்களே! தமிழ்நாடு அரசு சிறந்த பெண் குழந்தை விருது பெற்ற சூடாமணிக்கு பொன்னாடை போற்றி பரிசளித்தார்கள். சமூகப் போராளி துளசியம்மாள் " பிணம் எரிப்பது உட்பட பெண்கள் பங்களிக்காத தொழில் என்று எதுவுமே இன்று இல்லை. " என்றார். அவர் சொன்ன இன்னொரு கருத்தை என்னை வெகுவாகக் கவர்ந்தது. "எட்டு மணி நேரம் உழைப்பு போராடிப் பெற்றுக் கொடுத்தார்கள். அது ஏன் எட்டு மணி நேரம் உழைப்பு என்றால். எட்டு மணி நேரம் உழைப்பு , எட்டு மணி நேரம் உறக்கம் , எட்டு மணி நேரம் ஓய்வு. ஓய்வு என்பது பெண்களுக்கான நேரம் என்றார். சரி தானே " மீ டைம் " என்று இன்றைய பெண்கள் குரல் எழுப்பும் அந்த ஓய்வுக்கான எட்டு மணி நேரத்தில் தான் பெண்கள் குடும்பத்தின் உயர்வுக்காக வெளியே சென்று உழைக்கக் கற்றுக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் போனது. எட்டு மணி நேரம் கூட வேண்டாம். நமக்கான விருப்பத்துக்காக சில மணி நேரங்களையாவது ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலையை ஐடி போன்ற துறைகளில் தம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆட்டோ ஓட்டும் பெண்களைக் கௌரவிப்பது, தோழர் நாறும்பூநாதன் வார்த்தெடுத்த தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை சூடாமணியை பாராட்டுவது, வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நடனம், கவிதை வாசித்தல் என வாய்ப்புக் கொடுப்பது என மகளிர் தின நிகழ்ச்சி களை கட்டியது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அமைத்துத் தந்த தோழர்களுக்கு பாராட்டுகள்.

09 March, 2026

மகளிர் தினம் 2026

பாளை சரோஜ் நினைவகத்தில் 7.3.2026 அன்று தமுஎச வி.எம் சத்திரம் கிளை முன்னெடுத்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. போன உடன் நான் கண்டது மொத்தமாக பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடையுடன் வட்டமாக அமர்ந்திருந்த காட்சி. நம்ம ஊர்ல இத்தனை பெண் ஆட்டோ ஓட்டுனர்களா? ஆச்சர்யப்பட்ட நான் உடனே போய் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். பேரா. முத்துலட்சுமி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனரான நெல்லையைச் சேர்ந்த காந்திமதி இருக்காங்களான்னு கேட்டு, திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுனர் பற்றிய என் பதிவு 1,70,000 வியூஸ் போனதைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் வரவில்லை. ஆனால் பெண் ஆட்டோ ஓட்டுனர்களை ஓரணியாக்கி பொறுப்பேற்று செயல் பட்டுக் கொண்டிருக்கும் தோழர் ஜெயஸ்ரீ அவர்கள் தான் அவரிடம் நான் விசாரித்ததை சொல்வதாகக் கூறினார்கள். அவர்களை மகளிர் தினத்தன்று மரியாதை செய்வதற்காக அழைத்திருந்தார்கள். துணிச்சலாக பெண்கள் எல்லா துறைகளிலும் இறங்குவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. பதிவு எழுதும் போது ஒரு விஷயத்தை வலியுறுத்தச் சொன்னார்கள். "நெல்லை புது பஸ் நிலையத்தில் பெண்களுக்கான தனி ஆட்டோ ஸ்டான்ட் கேட்டு ஆட்சியாளரிடம் மனு கொடித்திருக்கிறார்களாம். அதை செஞ்சு கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி எழுதுங்கம்மா" என்றார்கள். சாராள் டக்கர் கல்லூரி அருகில் உள்ள நிலையத்தில் ஐந்து பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் காத்து இருக்கிறார்களாம். சிறப்புல்ல !!!! பெண்கள் கல்லூரி அருகில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பது வெகு சிறப்பு. உரியவர்களின் கவனத்துக்கு இது எப்படியும் போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு் . செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையோடு வேண்டுகோள் வைப்போம். செய்து கொடுங்கள் ஐயா. வணங்குகிறோம். நிகழ்ச்சி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன். காத்திருங்கள்