வாழ்க்கையில் இடையிடையே சிக்கலில் மாட்டி அதை பதிவாக்குவது நமக்கு வழக்கம் தானே ? தற்போது அது ஒரு நோயாகவே ஆகி விட்டது. எங்கேயாவது வெளியே போய் எந்த ஒரு வித்தியாசமான நிகழ்வும் இல்லை என்றால் வாழ்க்கை போர் அடித்து விடுகிறது. எதற்கு இவ்வளவு முன்னுரை? காரணம் இருக்கு நண்பர்களே இருக்கு !
இந்த மாதத்தின் தொடக்கத்தில் மதுரை செல்ல வேண்டி இருந்தது ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்காக. சரி போகு முன் செலவுக்கு வேண்டுமே என ATM இல் (ATM ஐ தமிழ்ப்படுத்தும் போது 'அடம்' என்கிறது. அது காரணப்பெயராக இருக்குமோ?) பணம் எடுக்க சென்றேன். தொகையைக் குறிப்பிட்ட பின் டக, டக என மெஷின் எண்ணுகிறது, எண்ணுகிறது, எண்ணிக் கொண்டே இருக்கிறது. பணம் வெளியே வந்த பாடாய் இல்லை. அவசர நேரத்தில் நம்மை எப்படி எரிச்சல் படுத்துவது என்று நம் அருகில் இருப்பவர்களைப் போலவே அதுவும் அறிந்து வைத்திருக்கிறது. சரி அடுத்தவருக்காவது கிடைக்கிறதா வென பார்ப்போம் என்று அவரது உள் வருகைக்கு கண்களாலேயே சம்மதம் கொடுத்து வேறு புறம் திரும்பி நின்று கொண்டேன். (அவரது பாஸ்வோர்டை கவனிக்காமல் இருக்கவாம் ) அவருக்கும் அதே டக, டக தான். 'trasaction failed ' என்னும் ஸ்லிப்பை ஹான்ட்பாகில் பத்திரமாக வைத்தபடி அடுத்த ATM க்கு விரைந்தேன். அது நல்ல பிள்ளையாக கேட்ட தொகையை லட்டு போல் கொடுத்தது. இனிப்புக்குள் ஒளித்து வைத்த கசப்பு மாத்திரை போல் பணம் வந்த கையோடு வந்த ஸ்லிப் அதிர்ச்சி அளித்தது. மீதிப் பணம் குறைவது போல் ஒரு உணர்வு. மினி statement எடுத்து பார்த்தால் சந்தேகித்தது போலவே டக டக வுக்காக பத்தாயிரம் தவறாக எடுத்திருந்தது.
மறு நாள் ஞாயிறு. வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று மதுரைக்கு கிளம்பினாலும் மனதுக்குள் மழைப் பூச்சியாய் நினைவுகள் ஊர்ந்து கொண்டே இருந்தன. திங்களன்று காலை வந்தவுடன் வங்கி செல்ல விழைந்தாலும் அலுவலகம், காரின் சீட் பெல்ட்டாய் இறுக்கிக் கொண்டது. ஒரு மணிக்கு அடித்துப் பிடித்து வங்கி சென்று, ATM க்கு என்று உள்ள அதிகாரியிடம் நடந்ததை சொன்னேன். நமக்கு தான் இது அதிர்ச்சி வைத்தியம், அவர்களுக்கு இது நடைமுறை தான் என்ற ஒரு பாவனையோடு வேறு ஒரு இடத்தை கை காட்டி 'அங்கே உள்ள பெண்ணிடம் படிவம் வாங்கி நிரப்பிக் கொடுத்துப் போங்க' என்றார்கள். நடக்கத் தொடங்கியதும்' "Transaction failed" ஸ்லிப்பை ஒரு செராக்ஸ் எடுத்து சேர்த்துக் கொடுங்கள் ' என்றார். நல்ல வேளையடா சாமி, மூன்றாம் நாளே வந்து விட்டேன். இல்லை என்றால் ஸ்லிப் கரை படியா கரம் போல வெள்ளை வெளேர் என்று ஆகி இருக்கும்.
அடுத்த சீட் பெண் கொஞ்சம் சின்ன வயசாக இருக்கிறது கடுகடுப்பு கொஞ்சம் குறைவாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டே முன்னேறிக் கொண்டிருக்கும் போதே, பரிட்சையில் காப்பி அடிக்க எட்டிப் பார்ப்பதைப் போல கணினியின் உள்ளே எட்டிப் பார்க்கும் பெண்ணைப் பார்த்து 'கொஞ்சம் முன்னாலே போய் நில்லுங்கம்மா " என்று சிடுசிடுத்தது. சின்ன வயதுப் பெண். அது ஏன் வங்கியில் வேலை செய்யும் அனைவரும் சிரிப்பு என்ற சொல்லையே அகராதியில் இருந்து எடுத்தவர்கள் போல் இருக்கிறார்கள். அமைதியாக காத்திருந்து அந்த பெண் கொடுத்த படிவத்தை நிரப்பி, செராக்ஸ் சேர்த்து முதலில் பார்த்த அதிகாரியிடம் சென்று சேர்த்தேன். ஏதோ படித்தவர்களாய் இருக்கிறோம் படிவத்தில் நிரப்பும் விதம் அறிந்து செய்கிறோம். ஏழை பாழைகள் என்ன செய்வார்கள்? இதில் ஒரு விசேஷம் என்ன வென்றால் பணம் குறைந்ததை நாமே கண்டு பிடித்தால் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பணம் நமக்கு வந்து சேர்ந்து விடுகிறது. பணம் எடுக்கும் போது தவறு நேர்ந்திருக்கிறது என்பதை கண்டு பிடிக்கத் தெரியாத ஐயோ பாவம்களும், அதீத பணம் படைத்தவர்களும் இழக்கும் பணம் என்று அவர்களை வந்து சேரும் ஆண்டவனுக்கே வெளிச்சம்!
படிவத்தில் நமது அலைபேசியின் எண்ணைக் கொடுத்திருப்பதால் படிவம் கொடுத்த அடுத்த நொடி, கம்ப்ளைன்ட் பதிவு செய்ததற்கான ஒரு எண்ணை நமது அலைபேசிக்கு அனுப்பி விடுகிறார்கள். இது ஒன்று எல்லா துறையினரும் தவறாது செய்து விடுகிறார்கள். நாலு நாளில் சரியாகும் என்றார்கள். நான் எதற்கும் இருக்கட்டும் என்று ஏழு நாட்கள் கழிந்த பின் பணம் வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டதா என்று பார்ப்போம் என்று ATM ஐ நெருங்கினேன். பணம் எடுக்க வந்தது போல் இல்லை என் மன நிலை, பணம் திருடச் சென்றவனைப் போல ஒரே பக்!! பக்!! எல்லா கடவுள்களையும் ஒரு முறை வேண்டிக் கொண்டு statement எடுத்தேன். பணம் ஏற்றப் படவில்லை.
சரி அதிகப் பணி இருந்திருக்கும் இன்னும் ஒரு வாரம் பொறுப்போம் என்று காத்திருந்தேன். மறு வாரமும் ஏற்றப் படவில்லை. எனக்கு டென்ஷன் கால் விரல்களில் இருந்து மெல்ல மெல்ல உச்சந் தலை நோக்கி பயணிக்க தொடங்கியது. மறுபடியும் வங்கி அதிகாரியின் முறைப்பை சந்திக்க விருப்பம் இல்லை. நான் சந்தித்த வங்கி அதிகாரி பெண்ணாய் இருந்தும் இவ்வளவு விறைப்பாய் இருக்கிறாரே என்ற வேதனை வேறு. என் கையில் உள்ள ஸ்லிப்பை உருட்டிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பெங்களூரு எண் குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தேன். கம்ப்ளைன்ட் பதிவு செய்ததும் அலைபேசிக்கு வந்ததே ஒரு எண் அதைக் கேட்டார்கள். சொன்னதும் "மேடம் உங்கள் கம்ப்ளைன்ட் க்ளோஸ் செய்தாகி விட்டதே" என்றார் (கம்ப்ளைன்ட் ஐ சரி செய்யாமல் 'க்ளோஸ்' செய்பவர்களை என்ன செய்யலாம் !) இருந்தாலும் அவரது குரல் நமக்கு பேசும் தைரியத்தைக் கொடுத்தது.
"சார், க்ளோஸ் செய்திருந்தால் பணம் எனக்கு வந்திருக்க வேண்டுமே. சில நிமிடங்களுக்கு முன் செக் செய்து தான் உங்களை அழைக்கிறேன்." என்றேன்
மறு முனையில் கொஞ்ச நேரம் மௌனம்.
"மேடம் கொஞ்சம் வெயிட் செய்யுங்கள். 24 மணி நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் ஏற்றப்பட்டிருக்கும்.இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கு இருக்கும் வங்கியில் விசாரியுங்கள் " என்றார் மென்மையாக.
"மறுபடியுமா?" என்று மனதுக்குள் மருண்டு, நன்றி சொல்லி காத்திருந்தேன்.
கண் மூடி கை விரல்களில் குறி இட கொக்கை வேண்டும் சிறு பிள்ளை போல இருபத்தி நாலு மணி நேரமும்,மனது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
மறுபடியும் ATM க்கு படை எடுப்பு. மறுபடியும் பக் பக். அப்பாடா இந்த முறை பணம் வரவு வைக்கப் பட்டிருந்தது. ஆனாலும் குளத்தில் அடிக்கும் அலை போல சின்னதாய் கேள்வி எழுந்து கொண்டு தான் இருந்தது.
இன்று வங்கிக் கணக்கில் வட்டி ஒவ்வொரு 'நாளும்' கணக்கிடப் படுகிறது. என் கணக்கில் பதினைந்து நாட்கள் இல்லாத இந்த பத்தாயிரம் பணத்துக்கு வட்டியை நான் செய்யாத ஒரு தவறுக்காக நான் இழப்பது சரி தானா?
வாடிக்கையாளர்கள் கண்டு பிடிக்காத இது போன்ற தொகைகள் சரியாக அவர்கள் கணக்கில் ஏறுகிறதா?
கஷ்டப் பாடு பட்டு சேர்க்கும் பணம் கிடைக்காமல் போய் விடுமோ என வருந்தி வரும் வாடிக்கையாளர்களிடம் வெறுப்பை காட்டும் வங்கி அதிகாரிகளின் போக்கு சரி தானா?
எத்தனையோ தனியார் வங்கிகள் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றாலும் , நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக அரசுடைமையாக்கப் பட்ட வங்கிகளில் கணக்கு வைத்து இருக்கும் எங்களைப் போன்ற வாடிக்கையாளர்களிடம் இவர்கள் போக்கு மாறும் காலம் என்னும் இவ்வளவு தொலைவில் இருக்கிறது?
இன்னும் எத்தனையோ, எத்தனையோ கேள்விகள். நண்பர்களே!! இன்று நம்மில் பலர் நம் கணக்கில் எவ்வளவு பணம் போடப் பட்டிருக்கிறது.(சம்பளம் தாங்க!!)நாம் எடுக்கும் தொகை தான் சரியாக கழிக்கப் படுகிறதா என்று சரி பார்ப்பதில்லை. எல்லா அலுவலகங்களிலும் ஆட்குறைப்பு, ஆதீத வேலை, தவறு நடப்பது இயல்பாகிப் போகிறது. நம் பங்குக்கு நாமும் சரி பார்த்துக் கொள்வது அவசியம். அதனால் இந்த பதிவு. இது ஒரு அலெர்ட் சிக்னல் தான்.