எனக்கு தெரிந்த ஒரு குடும்பம். கணவன் மிக நல்ல மனிதன். அமைதியானவன். அதிக ஆசைகள் இல்லாதவன். அதிர்ந்து பேச அறியாதவன்.
மனைவி ஆடம்பரமும் அலங்காரமும் நிறைந்த வாழ்க்கையை விரும்புபவள். வேலைக்கு சென்று தன் கணவனின் வருமானத்திற்கு கூடுதல் ஊட்டம் அளிப்பதை விட்டு , கணவனை தன் அதிக பட்ச செலவுகளுக்காக அதிகம் பணம் சேர்க்க தூண்டியவள்.
திருமணம் ஆன பொழுதில் இருந்தே அரசு வேலையில் இருந்த அவனுக்கு, அதைத் தவிர ஏதேனும் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. சீட்டு பிடிப்பது போன்ற இதர வேலைகளில் சம்பாதிக்கத் தொடங்கினான். இரவு, நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினான். பணம் வேண்டும் என்று ஆசை கொண்ட மனைவி நேரத்தோடு வீட்டுக்கு வர வேண்டும் என்றும் விரும்பினாள். அதனால் தினப்படி சண்டை.
சம்பாதிக்கும் அவன் தன் மனைவிக்கு இவ்வளவு ஏன் அடி பணிந்து போனான் என்பதே விளங்கிக் கொள்ள முடிந்ததில்லை. (இப்படி பல கணவர்கள் இருக்கிறார்கள்) அவள் தேவைகளை ஈடு கட்ட ஒவ்வொரு கட்டமாக முன்னேறி(!?!) இறுதியில் அவன் வந்து சேர்ந்த இடம் இந்த MLN.
அவன் இந்த மாதிரி தேடலிலேயே இருந்ததால் இத்தகைய ஏமாற்று வேலைகள் நமக்கெல்லாம் தெரியும் முன்னமேயே அவனுக்கு அறிமுகம் ஆகி விடும். நான் பல முறை அவனிடம் சொல்லி இருக்கிறேன். "உழைத்து சம்பாதிப்பதை தவிர வேறு எதுவும் தங்காது" என்று. என்னைப் பொறுத்த வரை லாட்டரி போன்ற விஷயங்கள் இது வரை முயன்றதில்லை. ஒரே ஒரு முறை குழந்தைகள் நலனுக்காக நடத்திய லாட்டரி வாங்கி இருக்கிறேன். ஆனால் அவன், இரு சம்பளக் காரர்களுக்கு எங்கள் கஷ்டம் சொல்லிப் புரிவதில்லை என்று சிரித்தபடி சென்று விடுவான்.
நான் எப்பொழுதும் அவன் விவரிக்கும் விஷயங்களுக்கு எதிர் பதில் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்பதால், இந்த MLN விஷயத்தை சொல்லாமலே விட்டு விட்டான்.MLN நடத்தியது அவன் மனைவியின் பெயரில்.பணம் டெபாசிட் செய்யும் முறை. ஆறு மாதத்தில் இரு மடங்காகும். வேகமான இந்த உலகத்தில் முன்னைப் போல ஐந்து ஆண்டுகள் காத்திருக்க யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. உடனடித்தேவை கான்செர் கிருமிகள் போல் வேகமாக பலுகிப் பெருகும் பணம். அது ஆளைக் கொல்லும் பணம் என்று உணர்வதில்லை.
முதல் கொஞ்ச நாட்கள் ஒழுங்காக பணம் கிடைத்ததில் பலர் சேர ஆரம்பிக்க ஒரு சுப யோக சுப தினத்தில் அவன் சேகரித்துக் கொடுத்த இருபத்தி ஐந்து லட்சம் ரூபாயுடன் ஒருவன் ஓடி விட்டான். பணம் கிடைக்கவில்லை என்றதும் ஒவ்வொருவராக நெருக்கடி கொடுக்க ஆரம்பிக்க வேறு வழி அறியாமல், இது யாராலும் உதவி செய்ய முடியாத பெரிய தொகை என்று நினைத்து, வட்டிக்கு கடன் கொடுக்கும் ஒருவனிடத்தில் வகையாக மாட்டிக் கொண்டான்.
வாங்கிய கடனுக்கு மாதா மாதம் அவன் சம்பளம் முழுவதையும் வட்டியாக கொடுக்க வேண்டிய நிலை. முதல் மாதம் கொடுத்தான் மறு மாதம் மனைவி குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். தினம் காலையும் மாலையும் அலை பேசியில் பேசியவன், அழைக்க அழைக்க பதில் தராமல் இருந்ததும் கிளம்பி வந்தனர் அவன் மனைவியும் குழந்தைகளும். வீட்டுக்குள் இறந்து கிடந்தான். சர்க்கரை நோயாளியான அவனுக்கு மரணம் மாரடைப்பால் வந்ததா? மரணத்தை மோகித்து தழுவிக் கொண்டானா? ஒருவருக்கும் தெரியாமலே ஒரு சகாப்தம் முடிந்தது.
யார் குற்றவாளி ?
- கணவனின் வரவுக்குள் செலவுகளை அடக்கத் தெரியாத மனைவியா?- மனம் போல் வாழ்ந்த மனைவியை அடக்கத் தெரியாத கணவனா?
- எப்படி கொடுக்க முடியும் என்று யோசிக்காமல் நமக்கு பணம் வந்து விடும் என்று நம்பும்
பொது ஜனமா?
- உயிர் பலி வாங்கும் இது போன்ற திட்டங்களை அனுமதிக்கும் அரசாங்கமா?
யார் குற்றவாளி ? நீங்க தான் கொஞ்சம் சொல்லுங்களேன்