Bio Data !!

21 December, 2021

ஒரு கதை பற்றிய விமர்சனம் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. கதை அறுபது வயது, மனைவியை இழந்த ஆண். பிள்ளைகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில் காலை நடையில் சந்தித்த ஐம்பது வயது, கணவனை இழந்த பெண்ணை மணக்கிறார். பதிவு இதை பகடி செய்தது. சாகப் போகும் காலத்தில் இது தேவையா என்கிறது. இது சார்ந்த என் கருத்து: முதலில் அறுபது வயது சாகப் போகும் வயது இல்லை. நிறைய பேருக்கு பிள்ளைகள் படிப்பு திருமணம் முடிந்து பெற்றோர் தமக்காக வாழத் தொடங்கும் நேரம். உடலின் நோய் கூறுகள் எதையும் கண்டு கொள்ளாமல் ஓடி இருப்போம். அவை அப்போது தான் தலை தூக்கும். என்னை கொஞ்சம் கவனி என்று சொல்லும். பல் கண் ஆகியவற்றில் வயதுக்கே உரிய மாற்றங்கள் நிகழும். அப்போ தான் தனியாகவே சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கும் மருத்துவ மனையில் தனிமையில் காத்துக் கிடக்கும் போது ஒரு துணை தேடும். இரத்தத்தை பரிசோதனைக்கு கொடுத்து என்ன சொல்வார்களோ ஏது சொல்வார்களோன்னு பயப்படும் போது “ஒண்ணும் இருக்காது “ன்னு தோள் தட்டி சொல்ல ஒரு கரம் தேடும். படுக்கை சுகத்துக்கு மட்டும் அல்ல திருமணம். பிள்ளைகள் இப்போ தூர தேசங்களில் வேலை செய்யும் போது பெற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் துணை வர முடிவதில்லை. அப்பொழுது அவர்களுக்கு தேவையான துணையை தேடுவதில் தவறில்லை. சுற்றி இருக்கும் உலகம் “ இந்த வயதில் இது தேவையான்னு” தான் சொல்லும். தனிமையில் வயதான் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமல் நல்ல நட்பின் பொருட்டு அடிக்கடி சந்தித்துக் கொண்டால் மட்டும் வயதுக்கு மரியாதை கொடுத்து தவறாக பேசாமல் இருக்குமா? பேசும். அதற்கு திருமணம் நல்ல தீர்வல்லவா? அவர்கள் மன நிலைக்கு பொறுத்தமான துணை கிடைத்தால் செய்து கொள்ளட்டுமே! இதில் நமக்கு என்ன பிரச்சினை. கூட இருபது முப்பது ஆண்டுகள் வாழ்வார்கள். நல்லது தானே. சில மரணங்கள் என்னை ரொம்ப தொந்தரவு செய்கின்றன. வளர்த்தெடுக்க சின்ன பிள்ளைகள் இருக்கும் போது நேரும் மரணங்கள். பிள்ளைகள் எல்லாம் வெளி நாட்டில் இருக்கும் சந்தோஷத்தில் கணவனும் மனைவியுமாக சந்தோஷமாக வாழும் நேரத்தில் இணையில் ஒரு பறவை மரணித்து போவது. சிலருக்கு தனிமை சொர்க்கம். இங்கு அவர்களைப் பற்றிய பேச்சில்லை. தனிமை நரகமாய் இருப்பவர்கள் தங்களுக்கேற்ற துணை கிடைத்தால் சேர்ந்து கொள்ளட்டும். வாழ்த்துவோம்.

07 December, 2021

#புத்தக விமர்சனம் 

கதையின் பெயர்  : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.

ஆசிரியர் : பெருமாள் முருகன்.

பதிப்பகம்   : காலச்சுவடு

விலை : ரூ 175/-

கையில் புழுப் போல் நெளியும் கரிய நிற சிறிய வெள்ளாட்டுக் குட்டி.. அதை ஒரு கிழவன், வழியில் ஒரு மனிதன் கொடுத்ததாக சொல்லி தன் கிழவியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறான்.. கிழவி பூனை ஏற்கனவே வளர்த்தவள். அதை பூனாச்சி என்று அழைப்பதால் வெள்ளாட்டுக் குட்டியையும் பூனாச்சி என்றே அழைக்கிறாள்.

இரவில் அழும் குட்டியை தன் வீட்டிலுள்ள வெள்ளாட்டிடம் பால் குடிக்க விட முதலில் ஏமாந்து பால் சுரந்த ஆடு புரிந்து கொண்டு பூனாச்சி குடிக்க வந்தால் சுரக்காது இருந்து விடுகிறது. அதை “ கள்ள மடி” என்கிறார் ஆசிரியர்.

வெள்ளாடு என்றால் இரண்டு மூன்று குட்டி போடும். செம்மறி ஒரு சமயம் ஒரு குட்டி தான் போடும் போன்ற நான் அறியாத தகவல்கள் பல கிடைத்தன இந்த கதையை வாசிக்கும் போது.

“வாயிருப்பது மூடிக் கொள்ளத்தான் . கையிருப்பது கும்பிடு போடத்தான். காலிருப்பது மண்டி இடத்தான். முதுகிருப்பது குனியத்தான். உடலிருப்பது ஒடுங்கத்தான். ராசாங்கத்திடம் எப்படி நடக்க வேண்டும் என்பதை எல்லோரும் நன்றாகவே கற்றிருந்தார்கள்”” இதைச் சொல்வதன் மூலம் எளியோரின் வேதனையை நம் கண் முன்னே கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.

“ செம்மறிக் குட்டிகளை அவளுக்குப் பிடிக்கவில்லை. அவை எப்போதும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே இருக்கின்றன. வெள்ளாடுகளைப் பார் எப்போதும் தலை நிமிர்த்திக் கொண்டு தான் இருக்கின்றன.” எவ்வளவு நுண்ணிய அவதானம். சிந்தித்து பார்த்தால் செம்மறி ஆடுகள் சோகம் ததும்பும் கண்களை உடையவை தான்.

“குனிவைத் தளை என்று உணராமல் வாழும் பாக்கியம் பெற்றவை செம்மறிகள் “ என்கிறார்..

ஒடை அடிப்பது என்னும் புது சொல்லை படித்தேன். காளைகளை காயடிப்பது எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவும் அது போலத்தான் போலும். ஆனாலும் மனிதர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள். எனக்கும் கொடூரமாய் ஒரு எண்ணம் தோன்றியது. பச்சிளம் குழந்தகளை பாழ் பண்ணும் மனிதர்களுக்கு இதையே தண்டனையாய் கொடுக்கலாமோ? ஓரிருவருக்கு கொடுத்தால் போதும். எல்லாம் ஒழுங்காகும்.

கதைக்கு ஊடாக சமுதாய அக்கரையை பிறர் பேச வைப்பார். அப்படித்தான் “ சனம், எல்லாத்தையும் அழிச்சு அழிச்சு கையில வழிச்சு வழிச்சு வாயில் போட்டுக்குது. அப்புறம் சனத்தை தவிர வேறெது இங்க வாழ முடியும். கடசியா சனமுந்தான் வாழ முடியுமா? “ என்று அக்கிழவி பெருமூச்சு விட்டாள் என்கிறார்..

பிரபஞ்சம் எல்லோருக்குமானது. நமது வசதிக்காக காடு, பறவைகள் , விலங்குகளை அழிக்கிறோம் என்ற ஆதங்கம் புரிகிறது. பஞ்சத்தின் கொடுமையை அவர் விவரிக்கும் போது பதறுகிறது. ஜனத்தின் வலி நம்மை உணற வைக்க பக்கம் பக்கமாய் எழுத வேண்டியதில்லை. ஒரு 140 பக்கங்கள் போதும். அது இதில் இருக்கிறது.