Bio Data !!

03 January, 2019


காதல்
என் பார்வையில் காதலைப் பற்றி சொல்கிறேன். இப்படிப்பட்ட காதலைத் தவிர்த்தால் தப்பித்துக் கொள்ளலாம்.

அனேகமாக காதலித்தவர்களைப் பார்த்தீர்களென்றால் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்களாய் இருப்பார்கள்.
அது கல்லூரியாக இருக்கலாம்.
கடவுளின் இருப்பிடமாக இருக்கலாம்.
சங்க கூட்டங்களாக இருக்கலாம்.
ஏதானும் கலை பயிலும் இடமாக இருக்கலாம்.
தான் தினமும் செல்லும் ஆட்டோவாக இருக்கலாம்.
பணி புரியும் இடமாக இருக்கலாம்.
தான் தினமும் செல்லும் தெருவாக கூட இருக்கலாம்
இன்றைய கால கட்டத்தில் முக நூலாக கூட இருக்கலாம்.

அனேகமாக அத்தனை காதல்களும் இந்த இடங்களுக்குள் அடங்கி விடும். ஒருவரை அடிக்கடி பார்க்கும் போது அவரது உடை உடுத்தும் பாணி, பேசும் தோரணை, அவரது அழகு, நிர்வாக நேர்த்தி, அவர் எழுதும் விதம், கற்பிக்கும் திறன் இவற்றுள் ஏதோ ஒன்றில் விழுந்து விடுகிறோம். அதன் பின் அவர் செய்யும் எல்லாமே நமக்கு பிடித்ததாகவே ஆகி விடுகிறது. பிடிக்காவிட்டாலும் அதற்கொரு காரணத்தை நாமே தேடி சமாதானப் படுத்திக் கொள்கிறோம்.

பிறர் வந்து நாம் காதலிப்பவரைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அதை நம் மனம் ஏற்றுக் கொள்வதில்லை. நாம் நினைத்தது நிறைவேறும் வரை அந்த ஒன்றைத் தவிர நம் மனம் வேறு ஒன்றைப் பற்றியும் நினைப்பதில்லை.
இதில் காதல் ஜெயிக்க வேண்டும் என்பதை விட நாம் தோற்று விடக் கூடாது என்ற தீவிரமே அதிகமாக இருக்கிறது. 

எல்லாம் நடந்து திருமணமும் முடிந்த பிறகு " நான் காதலித்ததும் திருமணம் செய்த தும் தவறு தான்" என்று சொல்லி பயனில்லை.

இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாம் தினசரி பார்ப்பவரை காதலிக்க கூடாது. நாம் காதலிப்பவர் கண்ணில் படாமல் இருந்தாலும் நம்மால் அவரைக் காதலிக்க முடிகிறதா?  அவர் நடத்தையை நம்ப முடிகிறதா எனப் பார்க்க வேண்டும். யாரேனும் நாம் காதலிப்பவரைப் பற்றி தவறாகச் சொன்னால் உடனடியாக எதிர்வினை ஆற்ற வில்லை என்றாலும் மனதின் ஒரு ஓரத்தில் அதை வைத்தபடியே இருந்தால் பல நிகழ்வுகளை கலைத்து போட்டு அடுக்கும் போது கட்டடம் அமைந்து விடும்.

அன்பு செய்யுங்கள். அரவணையுங்கள். அடுத்த கட்டம் செல்லும் முன் தாமதியுங்கள். ஆபத்தை தவிர்க்கலாம்.