Bio Data !!

29 March, 2021

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மிகப் பெரிய கனியாக நான் ஸூம் மீட்டிங்குகளை பார்க்கிறேன். அப்படி ஒரு கனியை நேற்று ருசித்தேன். எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் முக நூல் பக்கத்தில் இந்த தகவலைப் பார்த்தேன். நேற்று (27.3.2021) இரவு 8.30க்கு ஒரு ஸூம் மீட்டிங் "ஏன் இலக்கியம்." என்ற தலைப்பில்  அவர் பேசப் போவதாக. பென்சில்வேனியாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.


அவர் பேசியதில் நான் கிரகித்ததில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

வாசிப்பு சிந்தனையைத் தூண்டும். இன்றைய வாழ்க்கையில் படிப்பு என்பதே  சிந்திப்பதைக் குறைத்துக் கொண்டு  வாழ்க்கைக்கான investment ஆக எடுத்துக் கொண்டதால் தான் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் குறைந்து விட்டன. இந்தியாவில் புதியவை கண்டுபிடித்து 60 ஆண்டுகள் ஆகிடுச்சுன்னு சொல்றாங்க என்றார். 


எனக்கு புதியதாய் பல செய்திகள் இந்த மீட்டிங்கில் கிடைத்தன. அதில் ஒன்று  பார்சிக்களின் இறுதிச் சடங்கு நடத்தும் முறை.  பார்சிக்கள் இறந்தவர்களை புதைப்பதுமில்லை எரிப்பதுமில்லை. அவர்களது சூர்யக் கோயிலின் உச்சியில் இறந்த உடலைப் போட்டு விடுவார்கள். கழுகுகளுக்கு அந்த உடல் உணவாகி விடும் என்னும் புதிய செய்தி எனக்குக் கிடைத்தது.(இதைப் பற்றி இன்னும் விரிவாய் தெரிந்து கொள்ள வேண்டும்)


ஒரு கதை சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரக் கூடியது என்பதற்கு உதாரணமாக கிறுக்குக் கோழி என்று ஒரு கதை சொன்னார். சாதாரணமாக நாம் கடந்து போகும் ஒரு கதையோ கவிதையோ ஒரு சிலரின் வாழ்க்கையையே மாற்றும் திறன் படைத்தது என்றார். 


 விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கொடுக்கும் ஒரு sofistication in life நம்ம எதிக்ஸை தொலைக்க வைக்கிறதோ எனச் சந்தேகம் எழுகிறது என்றார். இந்த இடத்தில் தான் நான் மாறுபட்டேன். அந்த விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு பகுதி தான் ஸூம் மீட்டிங். இன்றைய லக்ஷ்மி சரவணகுமாரின் பேச்சைக் கேட்டவர்கள் கண்டிப்பாக தன் வாசிப்பின் நீளத்தையும் ஆழத்தையும் அதிகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 


தமிழ்நாட்டில் பெரிய பெரிய நூலகங்கள் பேய் பங்களா போல் இருக்கின்றன என்றார். கேரளாவில் அவர் ஒரு டூர் போன போது ஒரு நூலகம் புது பளபளப்புடன் இருந்ததாம்.  விசாரித்த போது அங்கே நூலகங்களை புதுப்பித்து புத்தகங்களில்  பழையன நீக்கி புதியவை சேர்த்து எழுத்தாளர்களை மக்களிடம் சென்று புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வைத்து வாசிப்பை விரிவுபடுத்துகிறார்கள் என்று தெரிந்ததாம்.  நம் தமிழக நூலகங்களில் இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று தோன்றியது. 


நல்ல கதைகளை  வாசித்து வரும்  ஒருவன் வாழ்க்கையை பார்க்கும் முறைக்கும் வாசிக்கும் பழக்கம் இல்லாத  ஒருவன் பார்க்கும் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்கிறார். உண்மை தான். ஏன் நம்மை சுற்றி உள்ள பலருக்கு பார்வை விசாலம் இல்லை என நினைப்பேன். அதற்கு இந்த வாசிப்பு குறைபாடு தான் காரணம் என்று புரிந்தது. 


சர்வாதிகாரிகள் பொதுவாகவே புத்தகங்களுக்கு எதிரானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். புத்தகங்கள் மக்களுக்கு சிந்திக்க சொல்லிக் கொடுத்து விடும் என்ற அச்சம் தான் காரணம். என்று சொல்லி புத்தகங்கள் எவ்வளவு வலுவான ஆயுதங்கள் என்று புரிய வைத்தார். 


ஒரு நாவல் எழுதுவதற்காக தான் கம்போடியா போய் வந்த அனுபவத்தை சொன்னார். எழுத்துத் தொழில் மேல் அவருக்கு இருக்கும் sincerity மெய் சிலிர்க்க வைத்தது.


பயில்வானின் மத்தளம். என்னும் ஒரு கதையைப் பற்றி சொன்னார். ஒரு கைப்பிடி அளவு கோதுமை என்ற ஒரு கதை படித்தாலே நமக்கு போதுமான வாழ்க்கை அறிவு கிடைக்கும் என்றார். அவரது பரந்த வாசிப்பு என் அகங்காரத்தில் ஒரு அடி வைத்தது. பத்து வயதிலிருந்து வாசிக்கிறேன். நிறைய வாசித்து விட்டேன் என்ற என் எண்ணம் சரிந்தது. 


நமது தமிழ் மொழியிலேயே இரண்டு தலைமுறைக்கு வாசிப்பதற்கான விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் என்றார். உண்மை தான். வாசிப்பை அதிகரிப்போம். வாசிப்பதில்லை என்றால் இன்றே தொடங்குவோம்.

23 March, 2021

#Bachelor days
அப்போ நான் ஒன்பதாவது படிச்சுகிட்டு இருந்தேன். கொஞ்சம் கூடுதலாகவே துரு துரு. சுற்று வட்டாரத்தில் முதன் முதலாக சைக்கிள் ஓட்டிய பெண். பையன்கள் பேச நினைத்தாலும் எங்க அப்பா கல்லூரிப் பேராசிரியரானதால் பயப்படுவார்கள்.
ஒரு நாள் மாலை நானும் என் தோழியும் சயன்ஸ் மிஸ்ஸிடம்  சந்தேகம் கேட்பதற்காக சென்றோம். போகும் வழியில் சிவன் கோயில் தேர் அருகே வரும் போது தேரை ஒட்டி நானும் எனக்கடுத்து தோழியும் வர ஒருவன் வேகமாக வந்து என்னை மோதியபடி தேருக்கும் எனக்கும் இடையே சென்றான். என் தோழி "எடு செருப்ப" என்றாள். அப்போ திட்டுவதற்கு பொதுவாக உபயோகிக்கும் வார்த்தை. நாங்க போன இடத்தில் நேரமாகிட்டுது. இருட்டி விட்டது. திரும்பும் போது தேரின் அருகில் ஒரு கூட்டமாய் பையன்கள் நிற்கிறார்கள். என் தோழி "பயப்படாம வா. நாம கடந்து போயிடுவோம்" னு சொல்றா. எனக்கு கை கால் எல்லாம் உதறுது. நாங்க பயப்படுவோம்னு நினைச்சவங்க நாங்க தைரியமா கடந்ததும் ஒண்ணும் சொல்லாம விட்டுட்டாங்க.

நாங்க வீட்டுக்கு வந்தும் இந்த சாகஸ செயலை பேசிகிட்டு இருக்கிறோம். எங்க அப்பா வந்திட்டாங்க. என்னன்னு விசாரிச்சதும் என் தோழி விஷயத்தை சொல்லிட்டாள். அந்த பையன்்களின் ஒரு தோழன் எங்க வீட்டுக்கு அடுத்த வீடு. அங்கே எல்லோரும் வந்து நின்னு பேசிகிட்டு இருந்தாங்க எங்க அப்பா இடித்தது யாருன்னு கேட்டு அவனை வீட்டுக்கு கூப்பிட்டு மிரட்டி அனுப்பிட்டாங்க.

இவன் எல்லோரிடமும் நானும் அவளும் காதலிக்கிறோம். அதனால அவங்க அப்பா என்னைக் கூப்பிட்டு திட்டினார்னு சொல்லி என்னை பழி வாங்கி விட்டான். இது எங்களுக்கு தெரிய வரவே இல்லை. மூன்று வருடங்களில் எங்க அப்பா இறந்த போக எனக்கும் என் இன்றைய கணவருக்கும் காதல் பிறந்தது. அப்போ அதே பையன் இவரிடமும் "என்னை அவள் காதலிக்கிறாள். எனக்காக இந்தவாக மதம் மாற தயாராய் இருக்கிறாள்" என்று கதை விட்டு இருக்கிறான். என்னவர் மனம் பொதுவாகவே புதைகுழி. என்னிடம் ஏதும் கேட்கவில்லை.

ஐந்து வருடங்கள் கழித்து எனக்கும் இவருக்கும் திருமணமான பிறகு என்னிடம் கேட்கிறார். "அவன் ஏன் என்னிடம் இப்படி சொன்னான். நீ அவனோடு பேசி இருக்கிறாயா? " என்றார். அப்பொழுது நடந்த விவரத்தையும் எங்க அப்பா திட்டியதற்கு அவன் இப்படி பழி வாங்கி இருக்கிறான் போலிருக்கிறது என்று சொன்னேன்.

நல்ல வேளை காதலித்தவரையே திருமணம் முடித்தேன் இல்லையென்றால் இவன் எத்தனை பேரிடம் இப்படி சொல்லி என் திருமணத்தை தடை செய்திருப்பான். நான் அடிக்கடி சொல்வது இது தான் "தண்டனை அனுபவிக்க நாம் கண்டிப்பாக தவறு செய்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை"

பதின் வயதில் நான் அனுபவித்தது தான் இன்றும் யார் யாரைப் பற்றி தவறாகப் பேசினாலும் அதை அலட்சியப்படுத்தி உதற என்னால் முடிகிறது.

10 March, 2021

 ஜெயமோகனின் "கொதி" என்னும் சிறுகதையைப் படித்ததும் எனக்கு என் வாழ்வின் ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. 

அப்போ நான் நாகர்கோயிலில் பணி புரிந்து கொண்டிருந்தேன். பெரிய அலுவலகமாக இல்லாமல் இரண்டு மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்து செக்‌ஷன்களை பிரித்து பிரித்து வைத்திருந்தார்கள். நான் பில்லிங் செக்‌ஷனில் இருந்தேன். அப்போ வெளியூர்கள் வெளிநாடுகள் போன் பேச வேண்டுமென்றால் STD ISD போட்டுத் தான் பேச வேண்டும். எந்த இடம் எவ்வளவு நேரம் என்ன வகையான கால்கள் என்பதெல்லாம் எழுதப்பட்ட டிக்கெட்டுகள் கட்டு கட்டாக எங்கள் செக்‌ஷனுக்கு வரும். 

அதை இரண்டு விதமாக தகவல் சேகரிப்பார்கள். இரண்டு பேர் வெறும் தொகைகளை மட்டுமாய் அடித்து ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் மொத்தமாய் எவ்வளவு தொகை என்று கணக்கெடுப்பார்கள். வேறு இரண்டு பேர் முழு விவரணைகளோடு கணக்கெடுப்பார்கள். இரண்டையும் டேலி செய்து அடித்த தொகையை சரி பார்ப்பார்கள். மூன்றாவது இடம் பிராட்மா. பிரம்மா இல்லைங்க பிராட்மா . 

ஆரம்ப கால கம்ப்யூட்டர் ஒரு அறையை முழுவதும் அடைத்து இருந்ததாமே அது  போல் இந்த பிராட்மா மெஷின் ஒரு அறை முழுவதும் அடைத்து இருக்கும். ஒரு பெரிய யானையை அங்குசம் கொண்டு அடக்குவது போல் ஒருவர் அந்த மெஷினை ஆண்டு கொண்டிருப்பார். அவர் ஏற்கனவே பெரிய உருவம். பெயர் செல்வராஜ். அந்த அறையின் புழுக்கம் தாங்காமல் தன் ஷர்ட்டைக் கழட்டிப் போட்டு பேன்ட்டும் பனியனோடும் இருந்து பணி புரிவார். அவருக்கு மட்டும் அந்த சலுகை உண்டு. 

வீடு தான் அலுவலகம் என்பதால் சாப்பிடுவதற்கு தனி அறை கிடையாது. அவரவர் இடத்திலேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். நானும் என் தோழியான காசி மாரியம்மாளும் வீட்டின் முன் பகுதியில் போர்ட்டிகோவில் அமர்ந்து மதிய உணவு எடுத்துக் கொள்வோம். நாங்கள் சாப்பிடும் போது ஒரு நாய் வந்து எங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கும். அதற்கு உணவு அளித்திருப்பேனா என்று உறுதியாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் சின்ன வட்ட டிபன் பாக்சில் கொண்டு செல்லும் சாப்பாடு எங்களுக்கே பத்தியும் பத்தாமல் தான் இருக்கும். ஒரு வேளை போட்டும் இருக்கலாம். ஏனென்றால் போட்டதால் தான் பல நாட்கள் அந்த நாய் வந்திருக்கும். அந்த நாய் தினமும் நாங்கள்  சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே இருந்ததில் எனக்கு கொதி விழுந்து விட்டது. உணவைக் கண்டாலே வெறுப்பு. கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ் உணவில் கொஞ்சம் சாப்பிட்டதும் அதற்கு மேல் சாப்பிடவே முடியாது. மொத்த உணவையும் நாய்க்கு போட்டு விடுவேன். உடல் மெலியத் தொடங்கி விட்டது. அப்பொழுது கதையில் வந்தது போல் கொதி எடுத்த ஞாபகம் லேசாக இருக்கிறது. சரியாக ஞாபகம் இல்லை. 

இன்று நவீன மயமான  உலகில் அந்த கொதி விழுவதும் எடுப்பதும் கூட குறைந்து விட்டது. பார்க்க வைத்து சாப்பிடாதே. பகிர்ந்து சாப்பிடுன்னு சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பகிர்ந்துண்ணுதல் பழக்குதல் நலம். 

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்தது. பழ ஜூஸ் என்று பல பழங்களையும் வெட்டி போட்டு ஒரு பெரிய எவர்சில்வர் அண்டாவில் கலந்து ஐஸ் போட்டு  ஜூஸ் பழக்கடைகளில் வைத்திருப்பார்கள். அது எனக்கு ரொம்ப favourite. என் கணவர் திட்டினாலும் எனது சாய்ஸ் அதுவாகத் தான் இருக்கும். என் கணவர் அது விற்க முடியாமல் கொஞ்சம் சிதைந்து போன பழங்களால் பண்றது சாப்பிடாதே என்று சொல்வார்.நாமளா கேட்போம்!

அப்படி ஒரு வேலை முடிந்து நான் கடையில் நின்று குடித்துக் கொண்டிருந்த போது ஒரு வயதான பெண்மணி என்னைப் பார்த்து கொண்டே வந்தார். எனக்கு கொரோனா பல உழைக்கும் நடுத்தர மக்களை உழைப்பில்லாமல் ஆக்கி இரந்து பிழைக்க வைத்திருந்தது ஞாபகம் வந்தது. "குடிக்கிறீங்களாம்மா" ன்னு கேட்டேன். சரி என்பது சரியாகத் தெரிந்து விடாமல் தலையை அசைத்தார்கள். அவர்களுக்கும் ஒரு தம்ளர் வாங்கிக் கொடுத்து நகர்ந்தேன். சில நேரங்களில் சில நல்ல விஷயங்கள் திடீரென மனதில் உதிக்கும். இனி ஹோட்டல்களிலோ பழக் கடைகளிலோ வெளி இடங்களில் உணவு உண்ண நேர்ந்தால் அருகில் இருக்கும் ஒரு இல்லாதவருக்கும் உடனே உணவு வாங்கி அளித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். 

ஒரு சிறுகதை நம்முள் எத்தனை எண்ணங்களை கிளறி விடுகிறது.

 MRI scan

(கொஞ்சம் நீளமான பதிவு தான். கடந்து போகாமல் வாசியுங்கள். )


பிள்ளைகளை,  பெற்றவர்களாகிய  நாம் அன்பைக் கொட்டித் தான் வளர்க்கிறோம். பிரதி அன்பை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்கள் அன்பைக் காட்டும் போது நாம் மகிழ்ந்து போகிறோம். அது தான் அவர்களுக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாய் அமையும். 


ஐந்து மாதங்களுக்கு முன் நான் திடீரென்று சுகமில்லாமல் ஆன போது அவசரத்துக்கு CT Scan எடுத்து மருந்து கொடுத்தார்கள். அதில் ஒன்று blood thinner க்காக உள்ளது. அதை ராஜஸ்தானில் இருக்கும் வரை தொடர்ந்து எடுக்க சொன்னார்கள். 

இப்போது ஒரு MRI scan எடுத்த பிறகு மருந்து தொடர்ந்து எடுக்க வேண்டுமா என்பதை பார்க்கலாம் என்று மருத்துவர்  ஆலோசித்ததால் ஒரு MRI அனுபவம்.


MRI எடுப்பதற்கு முன் எந்த உலோகமும் உடம்பில் இல்லாதவாறு எடுத்து விடச் சொல்கிறார்கள். புடவையில் குத்தும் சேஃப்டி பின் (பற்களை நேர் செய்வதற்காக போடப்படும் கிளிப் இருக்கிறதா என உறுதி செய்து கொள்கிறார்கள்) முதற் கொண்டு ஆபரணங்கள் அனைத்தையும் கழட்டி விடச் சொல்கிறார்கள். அதனால் உடன் ஒருவரை அழைத்துச் செல்லுதல் நலம். 


அப்படி இல்லாமல் தனியாகச் செல்ல நேர்ந்தாலும் ஒரு லாக்கர் கொடுக்கிறார்கள் அதில் வைத்துக் கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் அம்மாவை MRI scan எடுக்க அழைத்துச் சென்ற நினைவு வந்தது. மிகப் பெரிய அந்த மெஷினில் படுக்கச் சொன்னதும் பயந்து போய் என் கை விரல்களை இறுகப் பற்றிக் கொண்டதன் ஈரப் பளபளப்பை இப்போது உணர்ந்தேன். என்னை வெளியேறச் சொன்னதும் கையை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டார்கள். 


இப்போது நான் அவர்கள் சொன்னது போல் தயாராகி அந்த பெரிய மிஷினில் ஏறிப் படுத்தேன். 

இரு பஞ்சு உருண்டைகளை கொடுத்து காதுகளில் அடைத்துக் கொள்ளச் சொன்னார்கள். மெஷின் பெரிய சத்தத்துடன் இயங்கும் என நினைக்கிறேன். தலை அசைந்து விடாமல் அணைவாக வைக்கிறார்கள். கையில் பந்து போன்ற ஒன்றைக் கொடுத்து ஏதும் எமர்ஜென்சின்னா இதை அழுத்துங்கள் என்றார்கள். அப்போது ஒரு "தடக்" எமர்ஜென்சின்னா என்ன செய்யும் எனக் கேட்டேன். எது எமர்ஜென்சி என்று தெரியாமல் இருந்து விடக் கூடாதல்லவா. ஏதேனும் discomfort இருந்தா இந்த பந்தை அழுத்தினா நாங்க வந்து விடுவோம் என்றார்கள். அப்பொழுது தான் அந்த மெஷினோடு நம்மை தனியே விட்டு அவர்கள் விலகப் போகிறார்கள் என்பது புரிந்தது. ஒரு பதினைந்து நிமிடத்தில் முடிந்து விடும் என்று சொல்லி சென்றார்கள். மெஷின் ஆன் ஆனது. தடதடத்தது. நாம் காதுகளையும் அடைத்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டதால் அதன் அதிர்வின் ஆக்சுவல் டெசிபல் தெரியவில்லை. கண்களை மூடிக் கொண்டிருப்பதால் உறங்கி விடக் கூடாது என்கிறார்கள். 


நான் அந்த பதினைந்து நிமிடத்தை கடக்க இப்படி யோசித்தேன். மனதில் பயமும் எழுந்து விடக் கூடாது. உறங்கியும் விடக் கூடாது. கடவுளை நம்புபவர்களின் ஆயுதமான பிரார்த்தனையை கையில் எடுத்தேன். நாங்கள் கிறிஸ்தவர்கள்,  சொல்லும் ஜெபமாலையை சொல்லத் தொடங்கினேன். சொல்லத் தொடங்கும் முன் இந்த டெஸ்ட் எடுக்கும் போது நான் பயப்படக் கூடாது என்றும் இதன் ரிசல்ட்டில் எனக்கு தொந்தரவான எந்த செய்தியும் வரக் கூடாதென்றும் வேண்டிக் கொண்டேன். பதினைந்து நிமிடங்கள் பதினைந்து நொடிகளாக கடந்து போனது. இடையிடையே சின்ன சின்ன அதிர்வு. ஒரு சின்ன அசைவில் நம் உடல் முன்னேறுவது தெரிகிறது. டைப் அடிப்பதைப் போலவோ மரங் கொத்திப் பறவை ஏற்படுத்தும் சத்தம் போல டொக் டொக் என்றோ கேட்டுக் கொண்டே இருக்கிறது. வழக்கம் போலவே அறிவியல் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. 


அங்கே முடிந்த பிறகு கடலில் இறங்கி குளித்த பின் நல்ல தண்ணியில் குளிப்பது போல ஏற்கனவே எடுத்த மெஷினுக்கு தங்கை போல இருந்த இன்னொரு மெஷினில் மறுபடியும் டெஸ்ட் செய்தார்கள். வெளியே வந்ததும்  ரிபோர்ட் தயார் ஆனதும் நம் செல்லுக்கு மெசேஜ் வரும் என்றார்கள். தலை லேசாக வலிப்பது போல் இருந்தது. அது என் கற்பனையாக கூட இருக்கலாம். காரை நானே ஓட்டி வந்திருந்ததால் மறுபடியும் ஓட்டிச் செல்லலாமா என்ற என் ஐயத்தை தெளிவுபடுத்திக் கொண்டேன். செல்லலாம் என்று சொல்லி விட்டார்கள். ஒரு வியாதி தாக்கிய நேரத்தில்  இதே ஸ்கான் எடுக்கச் சென்றிருந்தால் இவ்வளவு நிதானமாக இருந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். என் டார்லிங் வேகன் R ஐ கிளப்பி ஜாலியாக ஓட்டத் தொடங்கினேன். மறுநாள்  ரிப்போர்ட் ரெடி ஆனதும் நம் போனுக்கு தகவல் வரும் என்று சொன்னார்கள். ஆனால் சில மணி நேரங்களிலேயே தகவல் வந்து விட்டது. 


நாங்கள் மறு நாள் போய் ரிபோர்ட் வாங்கி மருத்துவரையும் பார்த்தோம். பயப்படும்படி ஏதும் இல்லை என்றும் பிரச்னை சிறிய அளவில் இருப்பதால் மருந்து எடுத்துக் கொள்ளும் படியும் சொன்னார்கள். மூளை என்பது நம் உடலின் very delicate darling. அதை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


என் பிள்ளையை நான் ஆசீர்வதித்த சமயம் இது தான்.  தன் பிசி schedule யிலும் தலைக்கு மேல் அவள் பணிகள் மிதந்து கொண்டிருந்த போதும் இந்த டெஸ்ட்டை எடுத்து விட வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து சென்ற அந்த பொழுது,  என்னை நான் பெற்ற மகளை வாழ்த்தச் சொன்னது. 


என்ன தான் தைரியமாக இருந்தாலும் என் மிரட்சி கண்களிலே தெரிந்ததால் அதை படத்தோடு பதிய வேணும் என்று அந்த நேரத்திலும் செல்ஃபி எடுத்த கூத்தை எங்கே போய் சொல்ல 😀