இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மிகப் பெரிய கனியாக நான் ஸூம் மீட்டிங்குகளை பார்க்கிறேன். அப்படி ஒரு கனியை நேற்று ருசித்தேன். எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் முக நூல் பக்கத்தில் இந்த தகவலைப் பார்த்தேன். நேற்று (27.3.2021) இரவு 8.30க்கு ஒரு ஸூம் மீட்டிங் "ஏன் இலக்கியம்." என்ற தலைப்பில் அவர் பேசப் போவதாக. பென்சில்வேனியாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் பேசியதில் நான் கிரகித்ததில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
வாசிப்பு சிந்தனையைத் தூண்டும். இன்றைய வாழ்க்கையில் படிப்பு என்பதே சிந்திப்பதைக் குறைத்துக் கொண்டு வாழ்க்கைக்கான investment ஆக எடுத்துக் கொண்டதால் தான் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் குறைந்து விட்டன. இந்தியாவில் புதியவை கண்டுபிடித்து 60 ஆண்டுகள் ஆகிடுச்சுன்னு சொல்றாங்க என்றார்.
எனக்கு புதியதாய் பல செய்திகள் இந்த மீட்டிங்கில் கிடைத்தன. அதில் ஒன்று பார்சிக்களின் இறுதிச் சடங்கு நடத்தும் முறை. பார்சிக்கள் இறந்தவர்களை புதைப்பதுமில்லை எரிப்பதுமில்லை. அவர்களது சூர்யக் கோயிலின் உச்சியில் இறந்த உடலைப் போட்டு விடுவார்கள். கழுகுகளுக்கு அந்த உடல் உணவாகி விடும் என்னும் புதிய செய்தி எனக்குக் கிடைத்தது.(இதைப் பற்றி இன்னும் விரிவாய் தெரிந்து கொள்ள வேண்டும்)
ஒரு கதை சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரக் கூடியது என்பதற்கு உதாரணமாக கிறுக்குக் கோழி என்று ஒரு கதை சொன்னார். சாதாரணமாக நாம் கடந்து போகும் ஒரு கதையோ கவிதையோ ஒரு சிலரின் வாழ்க்கையையே மாற்றும் திறன் படைத்தது என்றார்.
விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கொடுக்கும் ஒரு sofistication in life நம்ம எதிக்ஸை தொலைக்க வைக்கிறதோ எனச் சந்தேகம் எழுகிறது என்றார். இந்த இடத்தில் தான் நான் மாறுபட்டேன். அந்த விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு பகுதி தான் ஸூம் மீட்டிங். இன்றைய லக்ஷ்மி சரவணகுமாரின் பேச்சைக் கேட்டவர்கள் கண்டிப்பாக தன் வாசிப்பின் நீளத்தையும் ஆழத்தையும் அதிகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ்நாட்டில் பெரிய பெரிய நூலகங்கள் பேய் பங்களா போல் இருக்கின்றன என்றார். கேரளாவில் அவர் ஒரு டூர் போன போது ஒரு நூலகம் புது பளபளப்புடன் இருந்ததாம். விசாரித்த போது அங்கே நூலகங்களை புதுப்பித்து புத்தகங்களில் பழையன நீக்கி புதியவை சேர்த்து எழுத்தாளர்களை மக்களிடம் சென்று புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வைத்து வாசிப்பை விரிவுபடுத்துகிறார்கள் என்று தெரிந்ததாம். நம் தமிழக நூலகங்களில் இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று தோன்றியது.
நல்ல கதைகளை வாசித்து வரும் ஒருவன் வாழ்க்கையை பார்க்கும் முறைக்கும் வாசிக்கும் பழக்கம் இல்லாத ஒருவன் பார்க்கும் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்கிறார். உண்மை தான். ஏன் நம்மை சுற்றி உள்ள பலருக்கு பார்வை விசாலம் இல்லை என நினைப்பேன். அதற்கு இந்த வாசிப்பு குறைபாடு தான் காரணம் என்று புரிந்தது.
சர்வாதிகாரிகள் பொதுவாகவே புத்தகங்களுக்கு எதிரானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். புத்தகங்கள் மக்களுக்கு சிந்திக்க சொல்லிக் கொடுத்து விடும் என்ற அச்சம் தான் காரணம். என்று சொல்லி புத்தகங்கள் எவ்வளவு வலுவான ஆயுதங்கள் என்று புரிய வைத்தார்.
ஒரு நாவல் எழுதுவதற்காக தான் கம்போடியா போய் வந்த அனுபவத்தை சொன்னார். எழுத்துத் தொழில் மேல் அவருக்கு இருக்கும் sincerity மெய் சிலிர்க்க வைத்தது.
பயில்வானின் மத்தளம். என்னும் ஒரு கதையைப் பற்றி சொன்னார். ஒரு கைப்பிடி அளவு கோதுமை என்ற ஒரு கதை படித்தாலே நமக்கு போதுமான வாழ்க்கை அறிவு கிடைக்கும் என்றார். அவரது பரந்த வாசிப்பு என் அகங்காரத்தில் ஒரு அடி வைத்தது. பத்து வயதிலிருந்து வாசிக்கிறேன். நிறைய வாசித்து விட்டேன் என்ற என் எண்ணம் சரிந்தது.
நமது தமிழ் மொழியிலேயே இரண்டு தலைமுறைக்கு வாசிப்பதற்கான விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் என்றார். உண்மை தான். வாசிப்பை அதிகரிப்போம். வாசிப்பதில்லை என்றால் இன்றே தொடங்குவோம்.