Bio Data !!

29 December, 2010

தோற்றுப் போன காதல்(கிட்டியும், கிட்டாமலும்)

கிட்டாதாயின்
வெட்டென மற!
நன்றாய்த்தான்
சொல்லி வைத்தார்.
கிட்டாததாலன்றோ
தீரேன் என்கிறது
காதல் ஆசை.

கிட்டியதாலேயே
காதல் கசந்து
வாரேன் என்கிறது
காதலும் ஆசையும் !

காதல் நிலைக்க
காதலில் தோற்ப்போம்
வாரீர்!

தோற்றதாலேயே
காலம் கடந்து
வாழும் , காதல் வாழும்.
ஆதலினால்
காதலில் தோற்ப்பீர்!!

19 December, 2010

ஈசன்!

நெல்லையில் புதிப்பிக்கப்பட்ட 'ரத்னா' திரை அரங்கம் .
திரைப்படம் : ஈசன்.
திரை அரங்கத்தில் நுழைந்து  "கூட்டத்தைப்" பார்த்ததும் ஒரு 'திக்'.
இனிய ஞாயிறு வீணாய்ப் போகுமோ? 
படம் வந்து அதிக  நாள் ஆகலியே , கூட்டம் இன்னும் அதிகமா இருக்கணுமே என்று எண்ணிய படியே அரங்கத்தினுள் நுழைந்தேன். 

பாட்டுடனே படம் ஆரம்பம். இந்த மாதிரி பாட்டோட படம் ஆரம்பித்தாலே பிடிக்க மாட்டேங்குது. ஆனால் அந்த பாடல் நடைபெறும் பப் தான் படத்தின் 'கோர் ' என்பது போக போகத்தான் புரியுது.

தன் நண்பன் சமுத்திரக்கனியை காவல்துறை அதிகாரியாக்கி அழகு பார்த்திருக்கிறார் சசிகுமார்.  பொருத்தமான உடல் வாகு சமுத்திரக்கனிக்கு. காவல் அதிகாரிகள் ஜிம்முக்கு போய் கட்டுக்கோப்பாய் உடலை வைத்திருப்பது பார்க்க அழகாத்தான் இருக்கிறது. கமிஷனரிடம்"லவ் பண்ணி போட்ட டிரஸ் சார் இது" என சமுத்திரக்கனி சொன்னதும் "இந்தக் கரை வேட்டி போனா இன்னொரு கரை வேட்டி. சலாம் போட கத்துக்கோ. " என்கிறார். அதில் அரசியல் வாதிகளுக்கு சலாம் போட வேண்டிய காவல் துறையின் வேதனை இழையோடுகிறது. சமுத்திரக்கனி இன்னும் கொஞ்சம் மிடுக்கைக் காட்டி இருக்கலாம் என்பது என் எண்ணம்.  

படத்தின் முதல் பாதி 'நீதி போதனை கதைகள்' புத்தகம் படிப்பது போல்  இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் செய்தித்தாளில் ஏற்கனவே பார்த்த செய்திகளை நினைவூட்டுவது போலவே இருக்கின்றன. இன்டர்வெல்லில் "இந்த அபிநயாப் பொண்ணுக்காக படம் பார்க்க வந்தேன்,பொன்னான நேரத்தை வீண் செய்திட்டேன் போலிருக்கே" என்றேன். இன்டர்வெல் வரை அபிநயாவைக் கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார்கள். என் மகள் " தலை (சசிகுமாருக்கு அவள் கொடுத்த பெயர்) ஏமாத்த மாட்டார் பாப்போம் " என்றாள்.  என் அருகில் இருந்த பெண் " என்ன சொல்ல வர்றாங்கன்னே புரிய மாடேங்குதே" என்றாள். இப்படியாக இடைவேளை இனிதே வந்தது.

சும்மா சொல்லக் கூடாது இடைவேளைக்கு அப்பறம் அரங்கம் அமைதி காத்தது. ஈசனூர் - சிவகங்கை மாவட்டம் என்ற பின் குறிப்புடன் அழகழகான இயற்கைக் காட்சிகள். அம்மா இல்லாமல் இருந்தாலும் தந்தையின் அரவணைப்புடன் கூடிய அழகான குடும்பம். என்று தொடங்கி நகரத் தொடங்கிய கதை அழகு. 

நகர வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கும் நண்பனிடம் " நகரத்தில உதவி கேட்டா ஒவ்வொருத்தரும் ஒதுங்கிக்கிறாங்க. ஒருத்தர் முகத்தில கூட சிரிப்பைக் காணோம்" என்று அபிநயாவின் அப்பாவாக வரும் (மலையாள இயக்குனர்) நபர்  கேட்க " இன்னம் கொஞ்ச நாளில உங்களுக்கு இதெல்லாம் பழகிடும். அப்பறம் உங்க முகத்திலையும் சிரிப்பை பார்க்க முடியாது" என்கிறார். பின்னால் வரப் போவதை முன்னாடியே உணர்த்திய வசனம். 

அபினவ் வருகிறார். நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக சொல்லும் படி எதுவும் இல்லை.
அமைச்சராக வரும் A .L . அழகப்பன் அம்சமாக பாத்திரத்தில் பொருந்துகிறார். அவர் மனைவியாக வருபவர் துளசி தானே? 
அபிநயா தான் யார் என்று அறிமுகப் படுத்தும் கட்டத்தில் "Poornima, the silence speaker"
என்கிறார். தான் வாய் பேச முடியாதவள் என்று சொல்ல "மௌன மொழி பேசுபவள்" என்பது ரசிக்க வைத்தது. 
அபிநயாவின் தம்பியாக வரும் துஷ்யந்த் சரியான தேர்வு. 
சுப்ரமணியபுரத்தில் மைனராக வருபவர் அமைச்சரின் அந்தரங்க சேவகனாக தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். 
பாடல்கள் ஜேம்ஸ் வசந்தன். இசைத்திருக்கிறார். கடற்கரையில்  ஆஜானுபாகுவான அந்த பெண்ணின் பாடலும் பாடல் சார்ந்த நடனமும் வித்தியாசமாக இருந்தது. 

உதவி செய்பவன் மேல் உடனடிக் காதல். இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இப்படி காட்ட போகிறார்களோ என்று வேதனையாக இருக்கிறது . எனக்கு ஒரு சந்தேகம். இப்படி காதலிக்க ஆரம்பித்த பின் இன்னொருவன்  வந்து உதவி செய்தால் என்ன செய்வார்கள் .

சசிகுமாரிடம்  ஒரு கேள்வி. 'சுப்ரமணிபுரத்தில்'  இருந்த வேகம் இதில் குறைகிறதே ஏன்?
முதல் பாதியில் நகைச்சுவையை அதிகரித்திருந்தால் கதை பாலன்ஸ் ஆகி இருக்குமே. வெற்றியை பற்றிய பயம் கவனத்தை சிதைத்து விட்டதா? இன்னும் சிறப்பான பல திரைப்படங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சசிகுமார். 

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டவில்லை என்றாலும் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியைக் கொடுத்தது ஈசன்

14 December, 2010

உள்ளங்கையில் ஒரு ஓவியப் போட்டி !!


என்ன திடீர்னு உள்ளங்கை படம்னு பார்க்கிறீங்களா? எனக்கு மிகவும் பிடித்த ஓர் உறுப்பு உள்ளங்கை. அதில் ஓடும் வரிகள். அந்த வரிகளை வைத்து சின்ன வயதில் சொன்ன ஜோசியங்கள்.

"ஏய் !கைய காட்டுப்பா. ஒண்ணு, ரெண்டு, மூணு ...ஐயய்யோ !உனக்கு ஆறுபிள்ளைகள்". என்று கையின் ஓரங்களில் ஓடும் மெல்லிய வரிகளை எண்ணி சொல்வதும், "ச்சீய் ! போங்கப்பா" என்று அதற்கே வண்டி வண்டியாக வெட்கப்படுவதும்.சின்ன வயது செல்ல நினைவுகள்.

கல்லூரியில் "டீ! உனக்கு உள்ளங்கை மேட்டில் ஒரு பெருக்கல் குறி இருக்குது. உனக்கு காதல் திருமணம் தான்" என்று பதினைந்து வயது பையனைப் பார்த்தால் கூட வெட்கப்பட்டு ஓடும் ஒருத்தியை பார்த்து சொல்வதும், அவள் எதிர்பாரா விதமாக கல்லூரி  இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே காதல் திருமணம்  செய்ததும், அடுத்தவருக்கு தெரியாமல் தனது உள்ளங்கை மேட்டில் பெருக்கல் குறி இருக்கிறதா என்று சோதிப்பதுமாக கன்னி வயது காதல் நினைவுகள்.

நன்கு பேசிப் பழகிய நண்பன் திடும்மென நீட்டிய கையை  தயக்கத்தோடு குலுக்கியதும் அந்த உள்ளங்கையின் மென்மை நெடுநாள் வரை நினைவில் நின்றதும் , கை உயர்த்தி ஆசிர்வதிக்கும் சாமியார்களின் அந்தரங்கம் வீதிக்கு வரும் போது ஏமாற்றின் அடையாளமாய் உயர்ந்து நின்ற உள்ளங்கைகளே நெடு நாள் மறக்க முடியாமல் நினைவுக்கு வருவதும், பஞ்சின் மென்மையை தொடுதலில் உணரச் செய்யும் உள்ளங்கை பல உழைப்புகளை கடந்து வரும் போது காய்த்துப் போகுமே என திருமணமான புதிதில் பட்ட அதீத கவலையுமாய், நினைவில் பூவாய் விரியும் உள்ளங்கை.

கணப் பொழுதும் கணினியை விட்டு அகலாததால், சோர்வுற்று சூடேறிய கண்களின் மேல்  முழுவதுமாய்  குவிந்து, பசலை உற்ற பெண்ணை ஒரு தொடுகையில் குளிர்வூட்டும் தலைவனைப் போல குளிரச் செய்யும் உள்ளங்கைகள்.
தாமரையின் நிறமும், மென்மையும் வெட்குற்று தலை தாள வைக்கும் மழலையின் உள்ளங்கைகள்.

ஒரு விழாக் கால புறப்பாடு பிள்ளையார் சுழி போடுவது உள்ளங்கைகளின் மேல்  தீட்டும் "மெகந்தி" என்னும்   ஓவியப் போட்டியில் தான். இப்பொழுது சொல்லுங்கள் இந்த உள்ளங்கைகளின் மேல் நான் கொண்ட காதல் சரியானது தானா என்று.

05 December, 2010

அம்மாவுடன் ஒரு பேட்டி !!

என்ன! தலைப்பைப் பார்த்ததும் விர்ருனு வந்தீங்களா?
இது எங்க அம்மாப்பா,
எழுபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் அன்னை,செசிலி ரஞ்சிதம் , என் ஆதர்சத் தலைவியுடன் ஒரு பேட்டி.
நான்: அம்மா ! பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். எழுபத்தைந்தாம் வயதில் அடி எடுத்து   வைக்கிறீர்களா?
அம்மா : ஆமா , இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ.
நான்: அம்மா, உங்கள் குடும்பத்தைப் பற்றி, உங்கள் பள்ளி நாட்களை பற்றி சொல்லுங்க.
அம்மா: எங்க அப்பா நெல்லையில் St Xaviers கல்லூரியில் கணிதத்தில் மிகச் சிறந்த பேராசிரியர். கணிதத்தில் , மாநிலத்தில் முதலாவதாக வந்து தங்க மெடல் வாங்கினாங்க.  பெயர் சந்தியாகு பிள்ளை(மன்னிக்கவும் அந்த காலங்களில் ஜாதிப் பெயரும் ஓட்டிப் பிறந்த ரெட்டைப் பிள்ளைகள் போல் பெயரோடு இணைந்து கொள்கிறது.) கணிதத்தில் பல புத்தகங்கள் போட்டு இருக்கிறார்கள். அம்மாவுக்கு பிள்ளைகளை பார்ப்பதே பெரிய பணி. நாங்கள் பன்னிரண்டு பேர். நான் தான் மூத்த பெண். எனக்கும் கணிதத்தில் ஆர்வம் என்பதால் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பிள்ளை. காலையில் வாக்கிங் கூட்டிச் செல்வார்கள். அது தான் எனக்கு கணக்கு சொல்லித்தரும் நேரம். நடந்து கொண்டே அவர்கள் கணக்கை சொல்லித்தர நான் கற்பனையில் புரிந்து இடையே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.அது கவனம் திசை திரும்பாமல் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை அதிகரித்தது.
               
நான் படித்தது ST Ignatius  கான்வென்ட், கல்லூரி Sarah Tucker, மறுபடியும் B.ED படிக்க
ST Ignatius கே வந்தேன். B. Ed தொடங்கிய முதல் வருடம் (1957) படித்த பெருமை உண்டு
அப்போ  கணிதத்துக்கு ஆசிரியர் கிடைப்பது அரிது என்பதால் வீட்டுக்கே வந்து வேலைக்கு ஆர்டர் கொடுத்து கூட்டிச் செல்வார்கள். ( ம்ம்ம்ஹூம் )
மதர் அலெக்ஸ் ஹெட்மிஸ்ட்ரெஸ் ஆக இருந்த நேரம். ரொம்ப ஸ்ட்ரிக்ட்
நான் : அப்பா பற்றி சொல்லுங்களேன். முப்பத்தைந்து ஆண்டுகள் முன் இறந்து போன அவரைப் பற்றி கடந்த வருடம் ஒரு  பதிவு போட்டு இருந்தேன். 

அப்பாவோட மாணவர் ஒருவர் எனது பதிவில் கமெண்ட் போட்டு இருந்தார். சிலிர்த்துப் போனேன்.
அம்மா : He is a great man. ST. Xavier's college இல் Mr. Soosai Rathinam , (Physics) என்றால் மிகப் பிரபலம். மிகவும் அன்பான மனிதர். எங்கள் திருமணம் ஆகி பதினேழு வருடங்கள் என்னை உள்ளங்கையில் தான் தாங்கி இருந்தாங்க. பேராசிரியர் என்ற கர்வம் துளி கூட கிடையாது. நீங்கள் சின்ன பிள்ளைகளாய் இருந்த போது, அப்போல்லாம் கல்லூரியில் வகுப்பு எடுக்கும் நேரம் தவிர மீதி நேரம்  வீட்டில் இருந்து கொள்ளலாம். வேலைக்கு ஒரு சிறுமி இருந்தாலும், வகுப்பு இல்லாத நேரம் எல்லாம் வீட்டில் குழந்தைகளோடு தான் இருப்பாங்க. வாழும் விதிகளில் இருந்து சிறிது கூட விலகாத மனிதர். (இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் எங்கள் கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது.) அப்போ அப்பாவுக்கு 41; எனக்கு 38; ஆழ்ந்த ரசிப்போடு தன்னோடி ஈர்த்துக் கொண்ட திரைப்படம் திடீரென முடிந்தது போல் ஒரு டிசம்பர் 18 இல் மண்ணுலகை விட்டு மறைந்து விரைந்து   போனாங்க.
நான்: உங்கள் மேல் என் பிரமிப்பு கூடியது அதன் பின் தான். எப்படி அப்போவோட இறப்பை எதிர் கொண்டீங்க.
அம்மா: காந்திமதி ஸ்கூலில் ஆசிரியையாக பணி புரிந்து கொண்டு இருந்தேன்.
நான்: அங்கே உங்கள் எழுத்துக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்ததே!
அம்மா: ஆமாம். அப்போ திருமதி அம்மணி சுப்ரமணியம் தான் தலைமை ஆசிரியையாக இருந்தார்கள். ஒரு தாயைப் போல் ஆசிரியர்களை அவர்கள் நடத்துவார்கள். திறமைகளை ஊக்குவிப்பார்கள். ஆசிரியர்களின் குடும்பத்தோடு ஒரு குடும்ப நண்பரைப் போல பழகுவார்கள். அப்பா இறந்த நேரம் அவர்களும், சக ஆசிரியர்களும் எனக்கு மன ஆறுதலையும், தைரியத்தையும் அளித்தார்கள். திடீர்னு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அது வரை என் கணவன் தான் உலகம் என்று இருந்தேன். திடீரென மூன்று பெண் பிள்ளைகளுடன் தனியாய்ப் போனேன்.
அப்பா இருக்கும் வரை பி.எட் படிப்பே போதும் என்று இருந்தேன். அந்த இழப்பை மறக்க படிக்க ஆரம்பித்தேன். முதலில் M.Ed படித்தேன் .அதில் பல்கலைகழக  அளவில் முதலாவதாக வந்து தங்க மெடல்  வாங்கினேன். கணிதத்தில் M.Sc படிப்பதற்கு துணிச்சல் இல்லாததால் M.A (English ) முடித்தேன். அதில் வாங்கிய மதிப்பெண்கள் கொடுத்த தைரியத்தில் அடுத்து M.Sc (Maths)  என மூன்று மாஸ்டர் டிகிரிகள் வாங்கினேன். கல்வி கொடுத்த தைரியத்திலும், உறவுகளும் நண்பர்களும் கொடுத்த ஆதரவிலும் மூன்று பெண் குழந்தைகளுக்கும் உயர்ந்த கல்வி, உயர்ந்த பணி, உயர்ந்த இடத்தில் திருமணமும் செய்து கொடுக்க முடிந்தது.
நான்: ஆமாம் அம்மா . அப்பா இல்லை என்பது வலியாய் இருந்ததே ஒழிய எந்த சூழ்நிலையிலும் அந்த இழப்பை நாங்கள் உணராத படி தான் வளர்த்தீர்கள். இத்தனை ஆண்டு காலங்களில் நீங்கள் மிகச் சிறந்ததாய் உணர்ந்த தருணம் ஏது?
அம்மா : என் பேத்தியின் மகனை நான் கைகளில் ஏந்திய தருணம். நான்காவது தலைமுறை காணும் பாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றி. ஒரு இழப்பை தந்த இறைவன் பேரன், பேத்திகள் என நிறைவைத் தந்திருக்கிறார்.
எனது அறுபது வயதில் "இத்தனை ஆண்டுகள் எங்களுக்காக வாழ்ந்து விட்டீர்கள். உங்களுக்காக இதையாவது செய்யுங்கள்"என்று என் பிள்ளைகள் ரோம், ஜெருசலேம் போன்ற நாடுகளுக்கு தெரிந்தவர் குடும்பத்துடன் திருப்பயணம் அனுப்பி வைத்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மற்றும் ஒரு வெளி நாட்டு பயணம் இவை மிகவும் மகிழ்ச்சியாய் என்னை உணர செய்த நேரங்கள். 
நான்: நீங்கள் மிக மோசமாக உணர்ந்த தருணம் ஏது?
அம்மா: அப்பா இருக்கும் வரை தம்பதி சமேதராய் எங்களை பெருமைப் படுத்திய சமூகம் நான் கணவனை இழந்ததால், என்னை ஒரு சகுனத் தடையாய் பார்த்த நிமிடங்கள் என்னை மிக மோசமாய்ப் பாதித்தன.
நான்: இந்தப் பதிவின் மூலம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

அம்மா: சமூகத்துக்கு ஒரு வேண்டுகோள். துணையை இழந்து துடித்துக் கொண்டு இருப்பவர்களை, உங்கள் துரதிர்ஷ்டப் பார்வையால் இன்னும் குத்திக் கிளறாதீர்கள்.
இளம் வயதில் இணையை இழந்த பெண்களே! வாழ்வு ஒரு இருட்டான குகை போல் தெரியும். ஆனால் உள்ளே போகப் போக கண்கள் பழகி வெளிச்சமும், வழியும் தெரியும். எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையையும் , தைரியத்தையும்  மட்டும் இழக்காதீர்கள். இறைவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி கிட்டுவது நிச்சயம்.

28 November, 2010

எம் எல் என் - Multi Level Marketting

விகடனில் MLN (Multi level marketting)  பற்றிய ஒரு பகுதியைப் பார்த்ததும் எழுதத் தோன்றிய பதிவு இது.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பம். கணவன் மிக நல்ல மனிதன். அமைதியானவன். அதிக ஆசைகள் இல்லாதவன். அதிர்ந்து பேச அறியாதவன்.
மனைவி ஆடம்பரமும் அலங்காரமும் நிறைந்த வாழ்க்கையை விரும்புபவள். வேலைக்கு சென்று தன் கணவனின் வருமானத்திற்கு கூடுதல் ஊட்டம் அளிப்பதை விட்டு , கணவனை தன் அதிக பட்ச செலவுகளுக்காக அதிகம் பணம் சேர்க்க தூண்டியவள்.
திருமணம் ஆன பொழுதில் இருந்தே அரசு வேலையில் இருந்த அவனுக்கு, அதைத் தவிர ஏதேனும் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. சீட்டு பிடிப்பது போன்ற இதர வேலைகளில் சம்பாதிக்கத் தொடங்கினான். இரவு, நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினான். பணம் வேண்டும் என்று ஆசை கொண்ட மனைவி நேரத்தோடு வீட்டுக்கு வர வேண்டும் என்றும் விரும்பினாள். அதனால் தினப்படி சண்டை.

சம்பாதிக்கும் அவன் தன் மனைவிக்கு இவ்வளவு ஏன் அடி பணிந்து போனான் என்பதே விளங்கிக் கொள்ள முடிந்ததில்லை. (இப்படி பல கணவர்கள் இருக்கிறார்கள்) அவள் தேவைகளை ஈடு கட்ட ஒவ்வொரு கட்டமாக முன்னேறி(!?!) இறுதியில் அவன் வந்து சேர்ந்த இடம்  இந்த MLN.

அவன்  இந்த  மாதிரி தேடலிலேயே இருந்ததால் இத்தகைய ஏமாற்று வேலைகள் நமக்கெல்லாம் தெரியும் முன்னமேயே அவனுக்கு அறிமுகம் ஆகி விடும். நான் பல முறை அவனிடம் சொல்லி இருக்கிறேன். "உழைத்து சம்பாதிப்பதை தவிர வேறு எதுவும் தங்காது" என்று. என்னைப் பொறுத்த வரை லாட்டரி போன்ற விஷயங்கள் இது வரை முயன்றதில்லை. ஒரே ஒரு முறை குழந்தைகள் நலனுக்காக நடத்திய லாட்டரி வாங்கி இருக்கிறேன். ஆனால் அவன், இரு சம்பளக் காரர்களுக்கு எங்கள் கஷ்டம் சொல்லிப் புரிவதில்லை என்று சிரித்தபடி சென்று விடுவான்.

நான் எப்பொழுதும் அவன் விவரிக்கும் விஷயங்களுக்கு எதிர் பதில் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்பதால், இந்த MLN விஷயத்தை சொல்லாமலே விட்டு விட்டான்.MLN நடத்தியது அவன் மனைவியின் பெயரில்.பணம் டெபாசிட் செய்யும் முறை. ஆறு மாதத்தில் இரு மடங்காகும். வேகமான இந்த உலகத்தில் முன்னைப் போல ஐந்து ஆண்டுகள் காத்திருக்க யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. உடனடித்தேவை கான்செர் கிருமிகள் போல் வேகமாக பலுகிப் பெருகும் பணம். அது ஆளைக் கொல்லும் பணம் என்று உணர்வதில்லை.

முதல் கொஞ்ச நாட்கள் ஒழுங்காக பணம் கிடைத்ததில் பலர் சேர ஆரம்பிக்க ஒரு சுப யோக சுப தினத்தில் அவன் சேகரித்துக் கொடுத்த இருபத்தி ஐந்து லட்சம் ரூபாயுடன் ஒருவன் ஓடி விட்டான். பணம் கிடைக்கவில்லை என்றதும் ஒவ்வொருவராக நெருக்கடி கொடுக்க ஆரம்பிக்க வேறு வழி அறியாமல், இது யாராலும் உதவி செய்ய முடியாத பெரிய தொகை என்று நினைத்து, வட்டிக்கு கடன் கொடுக்கும் ஒருவனிடத்தில் வகையாக மாட்டிக் கொண்டான்.

வாங்கிய கடனுக்கு மாதா மாதம் அவன் சம்பளம் முழுவதையும் வட்டியாக கொடுக்க வேண்டிய நிலை. முதல் மாதம் கொடுத்தான் மறு மாதம் மனைவி குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். தினம் காலையும் மாலையும் அலை பேசியில் பேசியவன், அழைக்க அழைக்க பதில் தராமல் இருந்ததும் கிளம்பி வந்தனர் அவன் மனைவியும் குழந்தைகளும். வீட்டுக்குள் இறந்து கிடந்தான். சர்க்கரை நோயாளியான அவனுக்கு மரணம் மாரடைப்பால் வந்ததா? மரணத்தை மோகித்து தழுவிக் கொண்டானா?   ஒருவருக்கும் தெரியாமலே ஒரு சகாப்தம் முடிந்தது.
யார் குற்றவாளி  ? 
- கணவனின் வரவுக்குள் செலவுகளை அடக்கத் தெரியாத மனைவியா?
- மனம் போல் வாழ்ந்த மனைவியை அடக்கத் தெரியாத கணவனா?
- எப்படி கொடுக்க முடியும் என்று யோசிக்காமல் நமக்கு பணம் வந்து விடும் என்று நம்பும்
  பொது ஜனமா?
- உயிர் பலி வாங்கும் இது போன்ற திட்டங்களை அனுமதிக்கும் அரசாங்கமா?
யார் குற்றவாளி  ? நீங்க தான் கொஞ்சம் சொல்லுங்களேன்

22 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும் - நிறைவு பாகம்

 பகதூரை படம் பிடித்து முடித்த பின் அவன் முன் நாட்களில் தாடியுடன் இருந்தானோ? இல்லையோ ? என ஐயம் வர அருகில் இருந்த சலூனுக்கு அழைத்து சென்று சலூன்காரர் முகம் சுளித்தாலும் நயமாக பேசி, "தாடிய எடுத்து விடப்பா. நான் செய்ற ஒரு நல்ல காரியத்தில உனக்கும் பங்கு இருக்கட்டும்" முரண்டு பிடித்த பகதூரை பல கதைகள் பேசி மயக்கி ஒரு வழியாக 'சுந்தரன்' ஆக்கி விட்டார்கள்.
அந்த நிலையிலும் ஒரு போட்டோ பிடித்து மறு நாள் டேட்டா கார்ட் மூலம் கணினியில் ஏற்றி மெயிலிலும் அனுப்பி விட்டான்.

மறுநாள் கணினியில் அமர்வதற்கே கொஞ்சம் உதறலாக தான் இருந்தது. கண்களை மூடி ஒரு நிமிடம் இறைவனை நினைத்தான். "ஒரு நல்ல ஆரம்பம் மட்டுமே ஒரு செயலை சிறந்ததாக்காது. ஒரு நல்ல முடிவும் வேண்டும். தெய்வமே ! பகதூரை அவன் குடும்பத்தோடு சென்று சேர்த்திடு. " பிரார்த்தித்து மெயிலை திறந்தான். அவன் எதிர்பார்த்த பதில் கண்ணை சிமிட்டியது.
"நீங்கள் அனுப்பிய புகைப்படம் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் காட்டப்பட்டது. உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்கு உரியது. தாடியுடன் இருந்த புகைப்படம் மட்டும் அனுப்பி இருந்தால் அடையாளம் காண சிரமம் ஏற்பட்டிருக்கும் . அவர்களின் சந்தோஷம் உங்களுக்கு வாழ்த்தாய் சென்று சேரட்டும். பகதூரின் தந்தை மைந்தனை பிரிந்த  துக்கத்தில் மரணப் படுக்கையில் இருக்கிறார். உடனே புறப்பட்டு வரவும். வந்து சேரும் நேரம் அறிவித்தால் என்னுடைய ஆட்கள் ரயில் நிலையம் வந்து உங்களை அழைத்து செல்வார்கள். "   
"என்ன சார், ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல் இருக்கு. G .M  உங்களை உடனே வந்து பார்க்க சொன்னார். " பியூன் நடராஜன் வந்து சொன்னான்.
"என்ன விஷயம் நடராஜன்? "
"தெரியல சார், ஒரு fax வந்தது. அதை பார்த்ததும் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னார். "
வேகமாக சென்று உதவியாளரிடம் தனது வரவை சொல்லி அனுப்பி காத்து இருந்தான்.
"சார், உங்களை உள்ளே வரச் சொன்னாங்க"
"குட் மார்னிங் சார், "
தனது இருக்கையில் இருந்து எழுந்து ஷங்கரின் கைகளைப் பிடித்து பலமாக குலுக்கினார். G .M   "ஷங்கர் உங்கள் முயற்சியைப் பற்றி இப்பொழுது தான் தகவல் வந்தது. சுயநலம் மிகுந்து விட்ட உலகத்தில் அறியாத ஒருவனுக்காக இவ்வளவு சிரமங்கள் எடுத்து வெற்றியும் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்! எப்போ புறப்படுறீங்க ஹாசியாபாத்துக்கு. "
"டிக்கெட் கிடைக்குமான்னு தெரியல சார் கிடைச்சிட்டா உடனே புறப்பட வேண்டியது தான் "
"டோன்ட் வொரி.நீங்க இவ்வளவு சிரமம் எடுக்கிறப்போ கொஞ்சம் உதவி நாங்க செய்யலைன்ன எப்படி.ரயில்வே துறையில பேசி அதெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. " என்று சொல்லி ஷங்கர்  சந்திக்க வேண்டிய அதிகாரியின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.
"ரொம்ப நன்றி சார்."
அதன் பின் அவசரமாக வீட்டுக்கு சென்று பகதூரை இறுக்கி அணைத்த படி "பகதூர், போலாமா உங்க ஊருக்கு. உங்க குடும்பத்து ஆட்களை கண்டு பிடிச்சாச்சு. " என்றான். புரிந்து கொண்ட பகதூர் லேசாக குனிந்து ஷங்கரின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி தன் கைகளை மீட்டுதன்னுடைய முகத்தில் மூடி இருந்தவன் மெல்ல  குலுங்கத் தொடங்கினான். தொடர்ந்து ஒரு மிருகத்தின் அழுகைக் குரல் போல் அவனிடம் இருந்து புறப்பட்டது.
"உண்மையாவாடா சொல்றே. ?" என்றபடி உள்ளில் இருந்து வந்த ஷங்கரின் அம்மா "என் செல்லமே! புள்ளைய பிரிஞ்சு அந்த தாய் எவ்வளவு வேதனைப் படுறாளோனு எத்தனையோ நாள் கவலைப் பட்டு இருக்கேன். உன்னைப் பெத்ததில பெருமைப் படுறேண்டா. "என்று உச்சி முகர்ந்தாள்.
மறு நாள் புறப்பட்டு ரெண்டு பேரும் ரயில் ஏறினார்கள். வாட்ட சாட்டமாக இருக்கும் ஒருவன் குழந்தைத்தனமாய் மிரண்டு பார்ப்பதையும். சிற்றுருவம் கொண்ட ஒருவன் தந்தையின் பாசத்தோடு அவன் கை பிடித்து அழைத்து வருவதையும். அங்கிருந்தவர்கள் விநோதமாய் பார்த்தார்கள். தானோ ஹிந்தி தெரியாதவன். தன் அருகில் இருக்கும் ஹிந்தி தெரிந்தவனோ  மன நிலை பிறழ்ந்தவன். ஒரு வித கலக்கத்தோடு பயணம் செய்தான்.
இரண்டு நாள் ரயில் பயணம் மிரட்சி தருவதாய் தான் இருந்தது. இருண்ட குகைப்பகுதியை கடக்கும் போது மிரண்டு பகதூர் அலற, அந்த அலறலில் பயந்த கம்பார்ட் மென்டே அலற, ஷங்கரை அங்கிருந்தவர்கள் ஒரு எதிரியைப் போல பார்க்க, எப்படியோ வந்து சேர்ந்தார்கள். ரயில் நிலையத்தில் "ஷங்கர் பகதூர்" என்று எழுதிய அட்டையை பிடித்தபடி நின்றிருந்த இருவரை அணுகி தெளிவு படுத்திக் கொண்டதும் அந்த இருவரும் மெளனமாக காருக்கு அழைத்து சென்றார்கள். தன் இனத்தை விட்டு பிரிந்த பறவை மீண்டு சென்று சேர்ந்ததும் சந்தோஷக் கூக்குரல் இடுமே அதைப் போல் பகதூர் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தான்.

அவன் அமைதி ஆகி விட்டதைப் பார்த்ததும் வீடு நெருங்கி இருக்குமோ என 
நினைத்தான். ஒரு வீட்டின் முன் நிறைய ஆண்கள் கூடி அமர்ந்திருந்தார்கள். திடீரென வேகம் பிடித்த பகதூர் அந்த வீட்டை நோக்கி ஓடினான். அமர்ந்திருந்த ஆண்கள் பரபரப்பாக எழுந்தார்கள். பகதூர் வீட்டிற்க்குள் நுழைந்ததும் கூட்டாய் ஒரு அழுகை புறப்பட்டது. அது வரை பிரிந்திருந்த பகதூரை பார்ப்பதற்கு தான் கூடி இருக்கிறார்கள் என்று நினைத்திருந்த ஷங்கர் அருகில் நின்றவரிடம் "வீட்டில எல்லோரும் ...." என விசாரிக்கத் தொடங்கி அவர் புரியாமல் விழிப்பதைப் பார்த்ததும் விறு விறு வென வீட்டினுள் சென்றான்.

அங்கே கட்டிலில் பகதூரின் தந்தை இறந்து கிடந்தார். சில மணி துளிகள் பொறுத்திருந்தால் மகனை பார்த்திருப்பார். அவர் இறந்ததை அறியாத பகதூர் அருகில் படுத்து அவரைக் கட்டிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு குழந்தை மிரண்டு போய் நின்றது. அந்தக் கண்கள் ரயில் ஏறியதும் மிரண்டு விழித்த பகதூரை நினைவு படுத்தியது. அவனது குழந்தையாகத்தான் இருக்க வேண்டும். அப்படியெனில் அருகில் கண்களில் நீர் வழிய, மார்வாடிப் பெண்கள் போல் தலையில் முக்காடிட்ட பெண் அவன் மனைவி ஆகத்தான் இருக்க வேண்டும்.
"பாவிப் பெண்ணே ! நீ எப்படி உன் கணவனை பிரிந்தும் ஊர் வந்து சேர்ந்தாய். கவனமாய் இருந்திருக்க வேண்டாமா? எப்படியோ உன் கணவனை உன்னிடம் சேர்த்து விட்டேன். இனியேனும் பத்திரமாக பார்த்துக்கொள் " என மனதுக்குள் நினைத்தபடி, 
பகதூரின் தந்தை தனயனைக் காணாமலே போய் சேர்ந்த துக்கமும், ஒரு நல்ல நண்பனை விட்டுப் பிரியும்  துக்கமும் சேர்ந்து பாரமாய் அழுத்த தன்னை அழைத்து வந்தவர்களுடன் சேர்ந்து ஆட்சியாளரின் அலுவலகம் நோக்கி தளர்ந்து போய் நடக்கத் தொடங்கினான். 
ஒரு வினோத ஒலியுடன் ஓடி வந்த பகதூர் ஷங்கரை இறுக்கிக் கட்டிக் கொண்டான். 
அவன் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது.  



15 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும் - பாகம் ரெண்டு

கண்ணீர் வழிய படுத்துக் கிடந்த அந்த பெரிய உருவம், ஷங்கரை தூங்க விடவில்லை.
தன் இலக்கிய வேலைகளுக்கும், தான் செய்ய நினைக்கும் சேவைகளுக்கும் தோதுப்படாது என்றே ஷங்கர் மணம் முடிக்கவில்லை. பகதூர் பற்றி தான் கொடுத்து இருக்கும் தகவல்களுக்கு ஏதேனும் இடத்தில் இருந்து பதில் வந்து விட்டால் உடனே அவனைக் கூட்டிக் கொண்டு வட மாநிலம் செல்லத் தயாராகத் தான் இருந்தான். பதில் வர வேண்டுமே?  இல்லாத பட்சத்தில் அடுத்து தான் எடுத்து வைக்க வேண்டிய அடி என்ன?  லேசான கலங்கிய எண்ணங்களும் தூக்கமுமாய் தொடங்கி ஆழ்ந்து உறங்கிப் போனான். 

மறு நாள் ஏதும் பேசாமலே ஏக்கம் நிறைந்த கண்களோடு தன்னைப் பார்த்த பகதூரின் முதுகில் ஆதரவாக தட்டிய படியே பணிக்கு கிளம்பினான். அலுவலகம் வந்ததும் தன் நண்பரும், இந்த மாதிரியான விஷயங்களில் தனக்கு குருவும், ஆன தன் அதிகாரியிடம் சென்று
"சார், மெயில் செக் பண்ணிக்கவா? " என்றபடி கணினியின் முன் அமர்ந்தான்."எல்லாம் முடிந்த பிறகு பகதூரிடம் சொல்லி இருக்கணும். நேற்று மெயில் பண்ணி இருக்கிற விஷயத்தை சொன்னதும் அழுதுட்டான் சார், அந்த பெரிய, கருப்பு திராட்சை போன்ற  கண்களில் இருந்து கண்ணீர் விழுந்ததும் நான் ஆடிப் போய்ட்டேன் ரொம்ப நேரம் தூங்க முடியல."என்ற படி மெயிலைத் திறந்தவன், "வாவ்" என்றான்.
இரு ஆட்சியாளர்களிடம் இருந்து மெயில் வந்து இருந்தது. "தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். முயற்சி செய்கிறோம். " என்ற உட் கருத்தோடு ஹிந்தியில் வந்திருந்தது. மூன்றாவது ஆட்சியாளரிடம் இருந்து பதில் இல்லை.
வீட்டுக்கு வந்த ஷங்கரும் தான் எடுக்கும் முயற்சிகளை மறந்தது போல் மறைத்தபடி செயல்படத்  தொடங்கினான். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிய நிலையில் மூன்றாவது ஆட்சியாளரிடம் இருந்து ஒரு செய்தி . "நீங்கள் சொல்லிய தகவலின் படி கீழ் மட்ட அதிகாரிகள் வரை தெரியப் படுத்தி விசாரிக்க வேண்டி இருந்ததால் கொஞ்சம் கால தாமதம் ஆகி விட்டது. அதே சூழ்நிலையிலும், அதே உருவ அமைப்பிலும் தவற விட்டா ஒருவரைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. அவரை ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தால் உறுதி செய்ய உதவியாக இருக்கும்"

ஷங்கருக்கு இந்த மெயிலை பார்த்ததும் லேசாக படபடத்தது. தனது முயற்சி பலித்து விடும் போலிருக்கிறதே ! மெயிலை மறு முறை வாசித்து பார்த்தான்.சொல்லலாம்  என்றால் அதிகாரி வெளியே போய் இருந்தார். எழுந்தான் யாரிடமாவது இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. அது மட்டும் அல்ல பகிர்ந்து கொண்டால் தான் உற்சாக மிகுதியில் தான் கண்டு கொள்ளாமல் விட்ட ஏதேனும் விஷயத்தை குறிப்பிடுவார்கள்.  

மெல்ல காரிடாரில் நடந்தான் எதிரே அலுவலகத் தோழி சந்தியா வந்து கொண்டு இருந்தாள்  . "காலை வணக்கம் சந்தியா?"
"வணக்கம்" வழக்கமான சந்தியா அவன்  உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ளக் கூடியவள். இன்று என்ன வெறும் 'வணக்கம்'.ஏதேனும் விஷயம் இருக்கும்.  தான் சொல்ல வந்தது அதை விட முக்கியம் குறைந்ததாய் இருக்கலாம்
"ஏதும் சிறப்பான செய்தி உண்டா ?"
"உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்களே எதிரே வந்துட்டீங்க "
"சொல்லு சந்தியா? "
"எங்க வீட்டு பக்கத்தில ஒரு பீடி கடை இருக்கு. சின்ன சின்ன பெண்கள், வசதி இல்லாதவர்கள் பீடி சுற்றி கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.அங்கு பணி புரிபவன் கொஞ்சம் சல்லித்தனம் பண்றான். குடுக்க வேண்டிய தொகையை குறைத்துக் கொடுக்கிறான். மறுபடி கேட்டு வரும் பெண்களிடம் சில்மிஷம் செய்து ,பின் தான் பணம் கொடுக்கிறான். இதுக்கு ஒரு முடிவு கட்டணும் சார், தனக்கு ஒத்து வராதவர்களின் பீடிக் கட்டு சரியாக இருக்கிறது என்று சொல்லும் முன் அவர்களை நோகடிக்கிறான். பாவம் கஷ்டப்பட்ட பெண்கள். வேற வழி இல்லாம வாசல் உட்கார்ந்து புலம்பறப்போ  அம்மா கேட்டு சொன்னாங்க" 
"கண்டிப்பா உதவி செய்யலாம் சந்தியா. பீடிக் கடை உரிமையாளரை போய் பார்க்கும் போது யாராவது  ஒண்ணு  ரெண்டு பேர் வந்து சொல்வாங்க தானே ?"
"நிச்சயமா  வருவாங்க சார்"
அதன் பின் அவனுக்கு தன் விஷயத்தை சொல்ல தோன்றவில்லை  அன்றைய அலுவல்களை முடித்து வீடு திரும்பினான்.  
ஏதோ சாதனை செய்த நிறைவு இன்று முழுவதும்.  எல்லோரிடமும் மிகவும் அன்பாக பேசத் தோன்றியது.  தன் வீடு இருக்கும் தெருவில் திரும்பியதும் பன்னீர்  பூக்களின் வாசனை அவனை ஈர்த்தது  வெண் பட்டுக் கம்பளம் விரித்தது போல் மரத்தின் அடிவாரம் முழுவதும் பன்னீர் பூக்கள் பல திசைகளிலும் படுத்துக் கிடந்தன அதன் வாசனையை நன்கு இழுத்து  நுரையீரல் முழுவதும் நிறைத்துக் கொண்டான்.  மனதின் பரவசம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.   மனது நிதானப் பட்டது.  என்ன ஆனாலும் பகதூரை அவன் குடும்பத்தில் கொண்டு சேர்க்கும் வரை இதைப் பற்றி அவனிடம் மூச்சு விடக் கூடாது என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.
"பகதூர் ஜம்னு குளிச்சிட்டு வா பார்க்கலாம் ஒரு போட்டோ எடுப்போம். "
கொஞ்ச நாட்களாகவே அவனிடம் மலர்ச்சியும் இல்லை,  மறுதலிப்பும் இல்லை. இயந்திரம் போல் சொன்னதை செய்து கொண்டு இருந்தான் 
தான் வைத்திருக்கும் டிஜிட்டல் காமெராவை அம்மாவிடம் கொடுத்து  எப்படி இயக்குவது என்று சொல்லிக் கொடுத்தவன் "அம்மா மூணு போட்டோ எடுக்கணும்.  நானும் பகதூரும் சேர்ந்து ஒண்ணு, என்னை தனியா ஒண்ணு, பகதூரை தனியா ஒண்ணு. சரியா பகதூர்" என்றான். எங்கே அவனை மட்டும் தனியே படம் பிடிக்க வேண்டும் என்றால் முரண்டு பிடித்து விடுவானோ என்று தன்னையும் கூட்டு  சேர்த்துக் கொண்டான். 

நாளை கணினியில் ஏத்தி மெயிலில் வட மாநில ஆட்சியாளருக்கு அனுப்பி விட வேண்டும் என்று முடிவு செய்தான் பகதூரிடம் பேசப் பயமாக இருந்தது  தான் ஏதாவது உளறி விடுவோம் என்று ஜெயமோகன் அவர்களின் "காடு" நாவலை  கையில் எடுத்த படி படுக்கையில் சாய்ந்தான். 
பகதூர் அவனுக்கு ஒதுக்கி இருந்த,வீட்டின் வெளிப்புறம் அமைந்திருந்த, அறையில் தன் உடமைகளை கட்டிப் பிடித்த படி உறங்கப் போனான்.
(இன்னும் வரும்)

07 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும்

ஷங்கரும் பகதூர் சிங்கும் நல்ல நண்பர்கள்.
ஷங்கரின் வயது முப்பத்தைந்து. அரசு ஊழியன். இலக்கியத்தில் ஆர்வம் உடையவன். கவிதைகள் எழுதுவான். ஒரு நாளின் அதிக பொழுது வீட்டுக்கு வெளியிலேயே செலவழிப்பான். வீட்டுக்கு வந்த பின்னும் அவன் வீட்டு வாசலில் படுத்துக் கிடக்கும் பகதூர் சிங்கிடம் ஒரு மணி நேரம் பேசிய பின் தான் வீட்டுக்குள் நுழைவான்.சில நாட்களில் அதிகப் பசியின் காரணமாக் நேராக சாப்பிட வந்தாலும் அதன் பின்  ஒரு மணி நேரம் அவர்கள் பேச்சு தொடரும். அவர்களின் உரையாடல் மிகவும் வேடிக்கையானது. ஷங்கருக்கு தமிழும் ஆங்கிலமும் தெரியும். பகதூருக்கோ ஹிந்தி மட்டும் தான் தெரியும். ஆனாலும் இருவரும் மற்றவர் சொல்ல வருவதை புரிந்து கொள்வார்கள்.

பகதூர் சிங். வட மாநிலத்தில் இருந்து தல யாத்திரை வந்த ஒரு குழுவில் இருந்து வழி தவறியவன். கொஞ்சம் மன நிலை சரியில்லாதவன். அதனாலும் மொழிக் குழப்பத்தாலும் அவன் தன் கூட்டத்திடம் சென்று சேர முடியாமல் போனது. திருச்செந்தூரில் இருந்து கால் போன போக்கில் நடந்து நெல்லை வந்து பெருமாள்புரத்தில் ரயில் தண்டவாளம் ஓரமாக நடந்து கொண்டு  இருந்தவனை, ஷங்கர் தான் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான். பகதூர் வாட்ட சாட்டமாக இருப்பான்.அவனது கோதுமை நிறத்துக்கு செம்பட்டை தாடி ஒரு தனி அழகைக் கொடுக்கும். ஒரே உடையை அதிக நாட்களுக்கு மாற்றாமல் போட்டு இருப்பதால் அவனிடம் இருந்து எழும் லேசான அழுக்கு வாடையும், திடீரென கையில் கிடைக்கும் கல்லை அருகில் இருப்பவர் மீது வீசுவதும்  சிறு குழந்தைகளை அவனைக் கண்டதும் கூச்சலிட்டபடி ஓட வைக்கும் . அது அவனை பைத்தியக்காரன் என்னும் கூட்டத்தில் உறுப்பினராக்கி இருந்தது.

பகதூர் வாசல் படியில் சாய்ந்தபடியே நேர் எதிரே இருக்கும் டிவியில் தெரிவதை எல்லாம் புரிவது போல் பார்த்துக் கொண்டு இருப்பான். நாளெல்லாம் வீட்டில் தனியே இருக்கும் ஷங்கரின் அம்மாவுக்கு நல்ல ஒரு துணை. எப்போதாவது ஹிந்தி நிகழ்ச்சிக்கு சானல் மாறும் போது அவன் கண்களில் தோன்றும் ஒளி அபாரமானது.

ஒரு நாள், ஷங்கரின் வண்டிச் சத்தம் கேட்டதும், வினோத ஒலி எழுப்பினான். "என்ன பகதூர் உன் நண்பன் வந்தாச்சா?" என்றபடி ஷங்கரின் அம்மா இரவு உணவுக்கு குழம்பை சூடு பண்ண எழுந்தார்கள்.
"ம்ம் ம்ம் "என்ற படி  அவசரமாக எழுந்து வாசலில் வந்து நின்றான். ஐந்து நிமிடம் கழித்து வந்த ஷங்கர் "ஹேய், பகதூர் இன்னைக்காவது குளிச்சியா? " என்றான்.
"ஹாங் " என்றபடி வண்டியை ஷங்கரிடம் இருந்து வாங்கி உள்ளே கொண்டு வந்து நிறுத்தினான்.
"எப்போவாவது குளிச்சாலே இவ்வளவு அழகா இருக்கியே? தினமும் குளிச்சா இங்கேயே ஒரு பொண்ணு பார்த்து ஒனக்கு கல்யாணமும் பண்ணி வைச்சிறலாம்.  இல்லம்மா? "
"போடா உனக்கு எப்போ பார்த்தாலும் அவனைச் சீண்டிக்கிட்டே இருக்கணும். அவன் குடும்பத்தை கண்டு பிடிச்சு அவனை சேர்த்து வைக்கிற வழியைப்பாருன்னு சொல்றேன்.ஏதாவது முயற்சி செய்றியா?"
"இன்னைக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன். பகதூர் அடிக்கடி ஒரு வட இந்தியக் கிராமத்தோட பேர சொல்வானே? அது எந்த மாநிலம் எந்த தாலுகானு கிட்டத்தட்ட நெட்ல தேடி நெருங்கியாச்சு. எல்லா ஆட்சியாளருக்கும் ஒரு மெயில் ஐடி இருக்கும். அப்படி சந்தேகப் படுற ரெண்டு மூணு ஆட்சியாளருக்கு மெயில் பண்ணி இருக்கேன். பார்ப்போம்.
என்ன பகதூர், உங்க ஊருக்கு போறியா?"
இது வரை அம்மாவும் மகனும் பேசும் போது மாறி மாறி அவர்கள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன் இந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை.
"ஏன் உன் நண்பனை விட்டுட்டு போக பிடிக்கலியா? அப்படினா இங்கேயே எங்களோடேயே  இருந்திடு" பெரிய தட்டில் நிறைய சாதம் போட்டு, நடுவில் குழி  பறித்து, குழி நிறைத்து குழம்பு ஊற்றி, ஓரமாக எண்ணையில் முறுகலாக பொறித்த உருளைக் கிழங்கும் அப்பளமும் வைத்து இருவரிடமும் ஆளுக்கொன்றாய் நீட்டினாள்.

ரெண்டு கால்களையும் குத்துக் காலிட்டு தட்டை காலின் மேல் வைத்த படி பெரிய பெரிய கவளமாக உருட்டி வாயினுள் திணித்தான். உடை மாற்றி ஒரு காக்கைக் குளியல் போட்டு வந்த ஷங்கரும் ஒரு தட்டை எடுத்த படி நாற்காலியில் அமர்ந்து உண்ணத் தொடங்கினான்.
"என்ன பகதூர், அம்மா கேட்டதுக்கு பதிலே சொல்லல. எங்களோடேயே இருந்திடு. என்ன சொல்ற ? "
"அவன் எங்கே இப்போ பேசப் போறான். தட்டுக் காலியாகணும் முதல்ல. அப்பறம் தான் மீதி எல்லாம்."
நொடியில் தட்டு காலியானதும் செம்பில் இருந்த நீரை குடித்தான். அவன் தண்ணீர் குடிப்பதே ஒரு கலையாக இருக்கும். செம்பை வாயின் அருகில் வைத்து குடிக்க மாட்டான். நல்ல நீளமான கைகள் அவனுக்கு. செம்பை நன்றாக உயர்த்தி வாயில் நீரை ஊற்றுவான். சிந்தாமல் சிதறாமல் நீர் ஒரு அருவி விழுவதைப் போல் நேராக அவன் வாயில் இறங்கும். நீர் இறங்க இறங்க அவன் தொண்டையின் கடின பகுதி மெல்லிய ரோஸ் நிறத்தில் மேலும் கீழும் ஏறி  இறங்கும். குடித்து முடிக்கும் போது செம்பில் இருந்து மிஞ்சிய நீர் 'புல்லுக்கும் அங்கே பொசியுமாம்' என்பது போல் முடி நிறைந்த அவன் நெஞ்சு பகுதியில் இறங்கி நனைக்கும்.

உண்டு முடித்த ஷங்கர் வெளியே ஒரு நாற்காலியை எடுத்து போட்ட படி அமர்ந்து ரெண்டு கைகளையும் நீட்டி நெட்டி முறித்தான். நண்பனுடன் ஒரு மணி நேரம் செலவழிக்க அவன் தயாராகி விட்டான். பகதூர் என்றும் இல்லா வழக்கமாக அப்படியே சாய்ந்து படுத்து விட்டான். 
"ஹேய்! பகதூர் இது என்ன புது பழக்கம். சாப்பிட்ட உடன் அப்படியே சாயறது? என்றான் ஷங்கர். பதிலில்லை.
"பகதூர்" மறு குரலுக்கும் பதில்  இல்லாமல்  இருந்தது "என்ன இவனுக்கு உடம்பு சரியில்லையா?" என்று முணுமுணுத்த படி எழுந்து நெற்றியில் கை வைக்கும் போது ஒரு பெரிய சொட்டுக் கண்ணீர் பகதூரின் நீண்ட கண்களில் இருந்து கீழே விழக் கண்டான். 
"அம்மா, இவன் அழறான்மா  " என்று குரல் கொடுத்தான்.
"நான் நினைச்சேன்டா. அவன் மனசுக்குள்ள குடும்பம், மனைவி, குழந்தைகள் னு ஏக்கம் இருக்கத்தானே செய்யும். நீ அவன் கிராமத்தை கண்டு பிடிச்சிட்டதா சொன்னதும் ஊர் ஞாயபகம் வந்திருக்கும். சரி, சரி நீ போய் படு நாளைக்கு சரியா இடுவான்" என்று அம்மா சொன்னதும்
"இவனை சீக்கிரம் கொண்டு சேர்க்கணும் போலிருக்கே" என்று சொல்லியபடியே ஷங்கர் படுக்க சென்றான். 
(இன்னும் வரும் )

04 November, 2010

HAPPY DEEPAVALI !!

அனைவருக்கும் தீபாவளி  திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

01 November, 2010

எண்ணச் சிதறல்கள் !

எல்லோருக்கும் ஒரு நவம்பர் வணக்கம்.
ரொம்ப சந்தோஷமாத் தான் ஐம்பதாவது பதிவு தாண்டினேன்.
திடும்னு கணினி மூச்சை நிறுத்திடுச்சு. சரி தட்டிக் கொட்டி சரி பண்ணிடலாம்னு பார்த்தா கதைக்கு ஆகல. கணினிக்கான வைத்தியரை வைத்து சரி பண்ணிடலாம்னு நினைச்சேன். அவரோ சினிமா வைத்தியரைப் போல கண் கலங்காத குறையா "ஐ ஆம் வெரி சாரி " னுட்டார். கணினி மரணித்த விஷயத்தை சொன்னதும் நண்பர் ஒருவர் ஆழ்ந்த அனுதாபங்களை அனுப்பினார். "உங்கள் கதைகளின் சோகம் தாங்காமல் மூச்சை நிறுத்திக் கொண்டிருக்கும் " என்றார். நானும் ஜாலியா எழுதணும்னு தான் பார்க்கிறேன். முடியலியே.

எனக்கும் கூட பதினைந்து நாட்கள் பதிவுலகம் பக்கம் வராமல் பச்சை தண்ணி கூட பல்லில பட மாட்டேன்னுடுச்சு. இப்போ மறுபடி கால் பதித்ததும் தான் அப்பாடான்னு இருக்கு. டச் விட்டுப் போனதில எழுதக் கூட வரமாட்டேனுது.

கொஞ்ச நாளாவே செய்திகள் பக்கம் போகவே பயம்மா இருக்கு. பெங்களூரில் கொலை செய்யப்பட்ட நெல்லை பெண். உறவுப் பையன் விரும்பியும் அவள் கிடைக்காத காரணத்தால் எந்த பாவமும் செய்யாத அந்தப் பெண் பலியாகிறாள். இந்த செய்தியைப் பார்த்த அநேகம் பேர் சொல்லிய வார்த்தைகள் " அய்யோ பாவம், பொண்ணு அவ்வளவு அழகா இருக்கு. " இங்கே மனிதர்களின் சைக்காலஜி எனக்குப் புரிவதில்லை. அழகான பெண் கொலை செய்யப் பட்டால் அதிகம் பாவப் படுகிறார்களே ஏன்?

ஒரு சின்ன செய்தி, BSNL வாடிக்கையாளர்களுக்கு, நவம்பர் 1 லிருந்து நவம்பர் 12  வரை ஈசி சார்ஜ் செய்யும் Rs 55, Rs 110, Rs 220, Rs 550 ஆகிய தொகைகளுக்கு full talktime . புதிதாக கொடுக்கப்பட்ட "என் நண்பன் சூப்பர்" என்னும் ப்ளானில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏதாவது ஒரு landline  க்கு முழுவதும் இலவசமாக பேசும் வசதி உள்ளது. அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும்.

'எந்திரன்' படம் பற்றி இப்போ பேசினால் நல்லா இருக்காது. இருந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் என்னைப் போன்றவர்கள் அவரின் வேகத்தையும் ஸ்டைலையும் பிரமித்து பார்த்தது போல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞர்கள் ரசிப்பதை பார்க்கும் போது அழகு என்பது இளமையிலும், வெளித்தோற்றத்திலும் இல்லை என்பது ஆணித் தரமாக புரிகிறது.

இப்போதைக்கு இது போதும். வர்ர்ரட்ட்டா !

12 October, 2010

நாய்க்குட்டி போல் என் மனசு!!

விரட்ட விரட்ட பின்னே வரும் நாய்க்குட்டி போல் என் மனசு தொந்தரவு செய்கிறது. பின்னூட்டம் இட்டது கூட ஒரு பதிவும் போடலாமே! விரட்டியும் ஆசை போகாததால் இந்த பதிவு. வல்லிக்கண்ணன் எழுதிய ஒரு புத்தகத்தில் "சொரி மணல்" பற்றி இருந்தது. அவர் எழுதியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் முந்தியது.தாமிரபரணி ஆற்றை கடக்கும்போது வெள்ளைதுரை குதிரையோடு சொரி மணலில் மறைந்து போனதை குறிப்பு இட்டிருந்தார்.இன்னும் அடங்கவில்லை சொரி மணலின் பசி. பள்ளியில் இருந்து மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தான் மாணவன். இதோ வந்திரேன்னு போனவன் ஆற்றுக்கு குளிக்க போய் விட்டான். குறும்புக்கார மாணவர்கள் சிலரின் ஆசையால் அங்கே ஒரு உயிர் இழப்பு நேர்ந்தது. மகன் வந்ததும் சாப்பிடலாம்னு தாய் காத்திருக்க அங்கே மகனையே தின்று விட்டது சொரி மணல். மலைகளைக் குடைகிறோம். நிலங்களைத் தோண்டி வானுயர கட்டடங்கள் அமைக்கிறோம். இந்த சொரி மணலின் வாய்க்கு ஒரு பூட்டு போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும். என்றோ ஒரு நாள் தான் நடக்கிறது என்பதால் உயிரின் விலை மலிவாய்ப் போகலாமா?

நண்பர்களின் பிறந்த நாளைத் தான் வாழ்த்த மறந்து விட்டு அசடு வழிவோம் என்றால், எனக்கு பிடித்த, என்னை பீடித்த பதிவுலகில் நான் நுழைந்த முதல் நாளை எப்படி மறந்து போனேன். 10.10.2009 அதனால் நான் முதன் முதல் எழுதியது மீள் பதிவாய். 

ஒரு வருடத்துக்குள் என்னில் இத்தனை மாயமா? இத்தனை மாற்றமா? THANK U BLOG WORLD. 
ஒரு  சின்ன  திருத்தம் என் முந்திய பதிவில். ஹலோ FM நாளை நுழையப் போவது  ஐந்தாம் ஆண்டு என தவறுதலாக கொடுத்து விட்டேன். நான்காம் ஆண்டில் தான்.
இன்னும் பல ஆண்டு நிறைவு காணட்டும் வாழ்த்துக்கள்! !

10 October, 2010

எண்ணச் சிதறல்கள் !!

*** இதை பதியும் நேரம் 10:10:10:10:10
***சனியன்று இரவு "அழகிய தமிழ் மகன் " என்றொரு நிகழ்ச்சி, விஜய் டிவி யில், நல்லாத்தான் போயிட்டு இருந்தது. நிகழ்ச்சி இறுதி கட்டம் நிகழ்ந்து கொண்டு இருந்தது. நிகழ்ச்சியை நடத்துவது குஷ்பூ. அன்று சிறப்பு நடுவராக சினேகாவும்(கிளிப் பச்சை நிறத்தில் அரைத் தாவணியில் அழகாக இருந்தாலும் பொருத்தமாக இல்லை ), பூஜாவும். பொதுவாகவே பூஜா எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் "நான் கடவுள்" படத்தில் பார்த்ததில் இருந்து ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

அழகு, அறிவு, திறமை, அன்பு என பல குணாதிசயங்களிலும் போட்டி வைத்து இறுதி கட்டத்துக்கு நான்கு பேர் தேர்வாகி இருந்தார்கள். அப்துல், சித்தார்த், சோம சேகர், ரவி ஷங்கர். Mr. smart, Mr. intelligent, Mr. entertainer போல பல பரிசுகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு பரிசு கொடுக்கு முன் பூஜா செய்த ஒரு காரியம் தான் இந்த பதிவு எழுத தூண்டிய விஷயம்.

அப்துலை பார்த்து "இந்த பரிசு வாங்கணும்னா என்னைத் தூக்கணும்" என்றார். அதற்கு  அப்துல் பூஜாவை தூக்கியது இயல்பான முறை. வீடுகளில் சந்தோஷ மிகுதியில் மகன்கள் தாயை கூட அப்படி தூக்குவது உண்டு. ஆனால் அதன் பின் " ஹேய்  , இப்படி இல்லப்பா ரொமாண்டிக்கா தூக்கணும்" என்றார்.
பாடல்களில் காதலன் காதலியைத் தூக்குவது போல தூக்க, குஷ்பூவின் முக பாவனையே அதை விரும்பாதது போல் வெளிப்படையாக காட்ட, அதற்கு அப்துலின் எதிர்வினை அதை இன்னும் மோசமாக்கியது.

இங்கே ஒரு விஷயம் சொல்லி யாக வேண்டும். பூஜா நடிகையானதால் பாடல் காட்சிகளில் நடித்து அது ஒரு சாதாரண நிகழ்வாக தெரியலாம். ஒரு லே மேனுக்கு அது ஒரு பரவசப் படுத்தும் நிகழ்வு. அப்துல் தான் தோற்றதால் தான்(எப்படியும் இறுதியில் ஜெயித்து அழகிய தமிழ் மகன் பட்டம் வென்றது அப்துல் தான்)  அந்த சந்தர்ப்பம் கிடைத்தது என்று ஜெயித்தவனுக்கு நன்றி கூறினார். பொது நிகழ்ச்சிகளில்  இதை போன்ற செயல்களைத் தவிர்க்கலாமே பூஜா ! இளைஞர்களின் மனது ஓசோன் படலம் போன்றதல்ல பல exploitation களைத் தாண்டி கிழியத் தொடங்க.  கண்ணாடிப் பாத்திரம் போன்றது. எளிதில் கீறல் விழும். பிறகு அந்தக் கீறலையே விரும்பி விரும்பி பெரிய பிளவு ஆக்கிக் கொள்ளும்.

இன்றைய எனது வருத்தமே பெண்கள் மேல் தான். செயல்களில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. அறியாப் பாலக ஒன்பது வயதுப் பெண் குழந்தையே பாழ் படும் போது , சில்லறைச் சீண்டல்களால் சீறி எழும் இளைஞர்கள் சீரழித்து விடும் வாய்ப்பு அதிகம். பெண்களே கவனமாய் இருங்கள் உங்கள் சின்ன சின்ன செயல்களில்.அதுவும் 'அங்காடித் தெரு' படம் வந்த பிறகு மால்களில் இந்த சில்லறைச் சீண்டல்கள் கூடி இருப்பது போல் தெரிகிறது. இந்த மாதிரி செயல்கள் செய்யும் முன்னே ஒரு நிமிடம் ' சரியா? தவறா?' என நம் மனமே பட்டி மன்றம் நடத்தும். அப்படி நடத்தத் தொடங்கி விட்டாலே அது தவறு என்று தான் அர்த்தம். அதை தவிர்ப்பது சாலச் சிறந்தது.   சொல்லறதை சொல்லிப் புட்டேன். செய்றதை செஞ்சுக்குங்க.

***நேற்றைய "நீயா ? நானா? " அப்பா பெண் உறவு பற்றியது. காலத்தின் மாறுதல்களை அழகாக புரிந்து கொள்ள முடிந்தது. இறந்து போன என் அப்பாவின் நினைவில் மனது கொஞ்சம் ஏங்கியது. காதல் என்றாலே கத்தி களேபரம் பண்ணிய காலம் போய் இன்று, வந்திருப்பவர்களில் பாதிக்கு மேல் என் பெண்ணின் விருப்பம் தான் முக்கியம். பெண் விரும்பும் பட்சத்தில் ஜாதி மாறி இருப்பதை பெரிதாய் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னது சமுதாய மாற்றத்தை புலப்படுத்தியது. 

***நண்பர் ஒருவர் கதை எல்லாம் எழுதுறீங்க என் கவிதை முயற்சி செய்யக் கூடாது என்றார். நேசமித்ரன்  , வசுமித்ர , சிவாஜி கவிதைகள் எல்லாம் பார்த்த பிறகு கவிதை எழுத இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் கரைந்து போனது கற்பூரமாய்.

***BSNL  இல் 7.10.10 முதல்  17.10.10 வரையும் ,   1.11.10. முதல்  12.11.10 வரையும் rs.55, 110, 220, 550 க்கு topup செய்தால் full talk time கிடைக்கிறது . உபயோகிப்பவர்களுக்கு பயன்படட்டுமே என்று இந்த தகவல். வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருப்பதால் இடையிடையே பகிர்ந்து கொள்ளலாம்னு நினைக்கிறேன்.     

*** நெல்லை ஹலோ FM அக்டோபர் பதின்மூன்றாம் தேதி நான்காண்டு வெற்றிகரமாக முடிக்கிறது. இதை முன்னிட்டு நேயர்களுக்கு மரக் கன்றுகள் கொடுக்கிறார்கள். பசுமையாய் வளர்ப்பதற்காக. வாழ்த்துகிறேன் ஐந்தாம் ஆண்டில் வெற்றிகரமாக கை குலுக்கி செல்வதற்கும், பசுமையை வளர்ப்பதற்கும். 

03 October, 2010

நந்தினி !

நந்தினி பால்கனியின் கம்பிகளில் சாய்ந்து, கீழே எதையோ உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தாள். பிரபாகர் அங்கே கொஞ்ச நேரம் நின்று அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். அவள் நின்றிருந்த நிலை அவள் உடல் அமைப்பை ஒரு சிலை போல் அழகாக்கி அவனை உடனடியாக செயல்படத் தூண்டியது. மெல்ல சத்தமில்லாமல் அவள் அருகில் சென்றவன் அவள் இடுப்பை வளைத்த படி, வயிற்றில் விரல்களால் தாளமிட்டான். திடுக்கிட்டு தன்னை கட்டிக் கொள்வாள் என எதிர்பார்த்தால் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வையின் கோட்டைப் பிடித்த படி கீழே சென்றான். காரணம் புரிந்தது. அங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவள் கவனம் குழந்தைகளிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள்.

அவர்களுககு திருமணமாகி ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன. பெருசுகளின் பேச்சின் படி சொல்வதென்றால் " ஒரு பூச்சி பொட்டைக் காணோம் " இப்பொழுது தான் அவர்களின் குடும்ப வைத்தியர் சின்ன வயதில் அவனுக்கு வந்த பெரியம்மை, அணுக்களை மிகவும் பாதித்து இருக்கலாம் என்று  சொல்லி, ஒரு குழந்தையை தத்து எடுக்கும் ஆலோசனை சொல்லி இருந்தார். நந்தினி பாவம், அவள் திருமண ஆசையே குழந்தை என்பதை நடுப் புள்ளியாக கொண்ட வட்டமாக இருந்தது. தன் வாழ்வில் குழந்தைப் பேற்றுக்கு வாய்ப்பில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

பிராபகரிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. அது சிக்கனத்தை தாண்டிய கஞ்சத்தனம். "இந்தக் காலத்தில் ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்து ஆளாக்க ஏகப்பட்டதை செலவழிக்க வேண்டி இருக்கிறது. உனக்கு நான், எனக்கு நீ குழந்தை தானே" என்று சொல்லிப் பார்த்தான். நந்தினியை வெறுமையில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. சரி ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று விசாரித்தால், சட்ட திட்டங்களும், அதற்கு செய்ய வேண்டிய செலவும் கண்ணைக் கட்டியது.

இப்பொழுது தான் உணர்வு பெற்றவளாக நந்தினி,
"எப்போ வந்தீங்க? "
"அதெல்லாம் அப்போவே வந்தாச்சு. நீ என்ன யோசனையில இருக்கிற? நான் வந்து உன் இடுப்பில தாளம் போட்டதைக்  கூட உணரல்ல. வேற எவனாவது வந்திருந்தா என்னத்துக்கு ஆகுறது. "
"ச்சீய்ய்யய்" என்று வெட்கப்பட்டாள். இதற்காகவே  இவளுக்கு எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனா ஒன்று கூட ,முடியலையே. அவன் சோர்வுறுவதைக் கண்ட அவள் உற்சாகமானவள் போல் மாறி ,
"வாங்க, ஒரு டீ சாப்பிட்டு, யாரோ நண்பனை பார்க்கணும்னு சொன்னீங்களே போகலாம்,"
சாகசக் காரி, தான் எதை நினைத்து மருகுகிறோம்கிறதை மறைமுகமாக உணர்த்தி விட்டாள். அந்த நண்பன், குழந்தை தத்து எடுக்கும் விஷயமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பவன்.

"நான் ரிப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுறேன். நீயும் கிளம்பு போயிட்டு வந்திடலாம். "
புறப்பட்டு வண்டியில் ஏறும்போதும் அவள் பார்வை அந்த காலனி குழந்தைகள் விளையாடிக்  கொண்டிருக்கும் பகுதிக்கு போய் உடனே மீண்டதை கவனித்தான்.
போற வழியில் ஒரு கோயிலைக் கண்டதும் " கொஞ்சம் வண்டிய ஒரு ஓரமா நிறுத்துங்க. உள்ளே போய் சாமிகிட்ட ஒரு வேண்டுதல் போட்டுட்டு வந்திடுறேன். " என்றாள் நந்தினி.
அவள் கோவிலுக்குள் செல்ல பிராபகர் செல்லில் அந்த நண்பனை அழைத்தான் " ரிச்சர்ட், நாங்க வந்து கிட்டு இருக்கோம். நீயும் தயாரா இருந்தா, நீ சொன்ன இடத்தில போய் பார்த்திட்டு வந்திடலாம். இன்னும் பிரசவம் ஆக ஒரு வாரம் தானே இருக்குது."
"வாங்க, ஏழைப்பட்ட குடும்பம். அவங்க புள்ளை ஒரு நல்ல இடத்தில வளரணும் அது தான் அவங்க விருப்பம். "
அதற்குள் நந்தினி வருவதைக் கண்டவன் பேச்சை முடித்து வண்டியை தயார் நிலையில் வைத்தான்.
மூன்று பேரும் சேர்ந்து ஒரு சேரிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.
"சார், வண்டிய ஓரமா நிறுத்திட்டு வாங்க. மண்ணில புதைஞ்சா சிரமம் ஆயிடும். 
மேடம், கொஞ்சம் பார்த்து ஓரமா வாங்க."
அவர்கள் சென்ற வீட்டு வாசலில், கூடி,  மலர்ந்த முகத்துடன் பேசிக் கொண்டு இருந்தவர்கள், இவர்களைப் பார்த்ததும், முணுமுணுத்தபடி ஒதுங்கினார்கள்.
"என்னம்மா? ஏதும் விசேஷமா?" என்றான் ரிச்சர்ட்.
" ஆமா, செல்லம்மா , ஆம்புளைப் புள்ளை பெத்திருக்கால்ல"அதைக் கேட்டதும், பிராபகரனின் வயிற்றுக்குள்  முளைத்து, வளர்ந்து, இதயத்தில் விரிந்தது ஒரு தாமரைப் பூ. இனி நந்தினியின் முகத்தில் சிரிப்பை பார்க்கலாம்.
"பரவா இல்லை சார்,நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.  நாம நினைத்ததுக்கு ஒரு வாரம் முன்னமே பிரசவம் ஆயிடுச்சு."

ஒரு கிழிந்த பாயின் மேல் விரித்த பழைய சேலையில் துவண்ட தாமரைத்  தண்டாக படுத்திருந்தாள் செல்லம்மா. அவளுக்கு அருகே, நீர் பலூனில் இருந்து தற்பொழுது தான் தரையிறங்கிய  செல்லக் குழந்தை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். குழந்தையின் அருகே சென்ற நந்தினி அதன் பட்டு விரல்களை தன் நுனி விரலால் வருடினாள். செல்லம்மாவின்  கணவன் பிரபாகரனையும், அவன் நண்பனையும் வெளியே அழைத்து சென்றான்.
"சார், நீங்க ரொம்ப நல்லவங்க. நான் கேட்டவுடனே பணத்தை தூக்கி கொடுத்திட்டீங்க. நானும் மூணு பொம்பளை பிள்ளைகளுக்கு பிறகு உண்டாகி இருக்கிறாளே, எங்கே ஆம்பிள பிள்ளை பெறப் போறான்னு பணத்தை வாங்கிட்டேன். இப்போ  மனசு சஞ்சலமா இருக்குது சார், இவன் வளந்து பெரியவனாகிட்டான்னா, மூணு அக்காவையும் கரை ஏத்த ஏந்தலா இருப்பான். கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து,  வாங்கின பணத்தை அடைச்சிடுதேன். " என்றான்.
இருவரும் திகைத்து நிற்கும் போது செல்லம்மா தன் கணவனை உள்ளே அழைத்தாள்.
நந்தினியின் முகத்தை மெல்ல ஏந்தியபடி " ஏங்க, இந்த புள்ளை முகத்தை பாருங்க. எவ்வளவு ஏக்கம், எவ்வளவு பாசம். நமக்கு இந்த புள்ளை போனா இன்னொண்ணு. சொன்ன சொல்ல காப்பாத்துங்க. " என்றாள். 
"ஏம்மா, நந்தினி நீ ஒரு உதவி மட்டும் செய்யணும். ஆம்புளப் புள்ள, தாயி கிட்ட எவ்வளவு பால் குடிச்சாலும் அதுக்கு வயிறு ரொம்பாது.அப்படி இருக்கையில நீங்க இப்போவே கொண்டு போய்ட்டா, அதுக்கு பசி அமர்த்த முடியாது. ஒரு மூணு மாசம் நான் வைச்சிருந்திட்டு அப்பறம் தந்துடுதேன், தாயீ."
நந்தினி அவள் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதிந்து கொண்டாள். "நீங்க கவலைப் படாதீங்க. நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போ கொண்டு போறோம்." என்றாள். அதற்குள் அவள் கண்கள் நிறைந்தன .

அதன் பின் தினம் பிரபா அலுவலகம் முடிந்து வரும் போதே நந்தினி தயாராக இருப்பதும் இருவருமாக குழந்தையை பார்க்க செல்வதும் திரும்பும் போது குழந்தைக்கு தேவையான ஏதாவது ஒன்று வாங்கிக் கொண்டு திரும்புவதுமாக  மூன்று மாதங்கள் தொடர்ந்தன. நந்தினி திருமணமாகி இவ்வளவு ஆண்டுகளில் இத்தனை சந்தோஷமாக பார்த்ததில்லை என்று பிராபகரன் நினைத்தான். 
அன்று குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல தயாராக வந்திருந்தார்கள் தம்பதியர். செல்லம்மா ஏதோ ஒரு கலக்கத்தோடு குழந்தையை கையில் கொடுத்தாள். கையில் குழந்தையை  வாங்கிய நந்தினியிடம் " கண்ணு, குழந்தையை கழுத்தோடு சேர்த்து பிடுச்சுக்கோ. அது என்னனு தெரியல, இத்தன நாளாகியும் கழுத்து இன்னும் ஓரக்கல." என்றாள். நந்தினிக்கும் குழந்தையின் பார்வை ஏதோ நிலைப்படாமல் இருப்பது போல் தோன்றியது. 
"என்னங்க, போற வழியில நம்ம டாக்டர்ட குழந்தையை காட்டிட்டு போய்டுவோம். " என்றபடி நந்தினி காரில் ஏற , பிராபகர் பின் தொடர, செல்லம்மா குடும்பத்தினர் அத்தனை பேரின் கண்களும் அவர்களை தெரு முனை திரும்பும் வரை பின் தொடர்ந்தன. 

குழந்தையை  பார்த்த டாக்டர் ஒரு வெடி குண்டை சர்வ சாவகாசமாக வீசினார். 
"என்ன  பிராபகர், குழந்தையை தத்து வாங்கும் முன்ன யாரையாவது கன்சல்ட் செய்திருக்க வேண்டாமா? இட் லுக்ஸ் லைக் எ ஸ்பெஷல் சைல்ட். மூளை சரியாக வளர்ச்சி அடையாத குழந்தை போல இருக்குதே. என்னம்மா நந்தினி, நீயாவது சொல்லி இருக்க கூடாதா? " என்றார்.
நந்தினி பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். 
பிராபகர்," டாக்டர், என்ன சொல்றீங்க. சரியா பாருங்க .அப்படி நீங்க சொல்றது சரியா இருக்கிற பட்சத்தல, அப்படியே கொண்டு போய் பெத்தவங்கள்ட்டயே குடுத்துட வேண்டியது தான். பிராடு பய. " என்றான். அவன் குரல் நடுங்கிக் கொண்டு இருந்தது. 

டாக்டர் தான் சொல்வதில் சந்தேகம் இல்லை என்றும் அவர்கள் விரும்பினால் வேறு சிறப்பு மருத்துவர் யாரையாவது  பார்க்கும் படியும் சொல்லியதும்,  பிராபகர் வெளியே செல்ல, நந்தினி இயக்கப்பட்ட ரோபோ போல பின்தொடர்ந்தாள். 
"டிரைவர், வண்டிய வந்த வழியிலேயே திருப்புங்க " என்றான் பிரபா. 
உடனே நந்தினி " இல்லைங்க, நம்ம வீட்டுக்கே போகலாம்."
"அதுவும் சரி தான், என்ன சொல்லித் திருப்பிக் கொடுக்கலாம்னு நிதானமா யோசிச்சிட்டு அங்கே போகலாம்." - பிரபா
வீடு வரை நந்தினி அமைதியாகவே வந்தாள். இடையிடையே குழந்தையை பார்ப்பதும் , தன் கண்களை துடைப்பதும் தான் அவள் இன்னும் சாகவில்லை என்பதன் அடையாளம்.
வீடு வந்தும் ரொம்ப நேரம் அதே அமைதி தொடர்ந்தது. 
"என்னம்மா, நந்தினி, என்ன சொல்ற? நீயுமாச்சு, உன் புள்ளையுமாச்சு. பிடின்னு குடுத்திடலாம். ராஸ்கல், பணத்துக்கு தான் இழுப்பான். அதையும் நீயே வச்சுக்கோன்னு சொல்லிட்டா சரினுடுவான். " 
"இல்லைங்க, என்ன பாவம் செய்தோமோ, இத்தன வருஷமா எதுவுமே உண்டாகல. நமக்கே ஒரு பிள்ளை இப்படி பிறந்திருந்தா தூக்கிப் போட்டுருவோமா? இருக்கட்டும். " என்ற படி குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள். எத்தனை முறை கலங்கினாலும் , குட்டை நிமிடத்தில் தெளிவாவது போல் சட்டென தெளிந்திருந்தாள். 
காலம் உருண்டோடியது.
ரேசில் ஓடுற எல்லோருமா முதலாவது வர முடியுது. அதிலும் கடைசியாக வருபவர் ஒருவர் இருக்கத் தானே செய்கிறார். அப்படி குழந்தை மெல்ல மெல்ல முன்னேறி வந்தது.
அன்று,
குழந்தை தூங்கிக் கொண்டு இருந்தான். பிரபாகரனின் தோளில் சாய்ந்த படியே நந்தினி கிசுகிசுத்தாள், " ரெண்டு மாசமாச்சு ....."
மீண்டும் பிராபகரனின் நெஞ்சில் தாமரைப் பூ பூத்தது. 

26 September, 2010

"கண்ணொளி காப்போம் "

"கண்ணொளி காப்போம் " மற்றுமொரு அரசுத் திட்டம். ஆசிரியர்கள், மாணவர்களின் பார்வைத்திறன் குறைபாட்டை கண்டு பிடித்துக் கூற வேண்டும். அரசு அதை  சரி செய்வதற்கு ஆவன செய்யும். இது கடந்த வாரச் செய்தி.

இது என்னுடைய பள்ளி நாட்களை மறுபடியும் நினைவுக்கு கொண்டு வந்தது. அப்பொழுது நான் ஒன்பதாவது படித்துக் (?) கொண்டிருந்தேன். பெரிய வகுப்பறை. வழக்கம் போல் வகுப்பில் இரண்டாம் வரிசையில் இருப்பிடம். வரலாறு புவியியலுக்கு ஒரு ஆசிரியர். அப்போலாம் இத்தனை பாடங்கள் ஏது. மொத்தமே ஐந்து பாடங்கள் தான். இப்போ உள்ள பிள்ளைகள் ரொம்ப  பாவம். ஒவ்வொரு பாடமும் ரெண்டு. அது தவிர எக்ஸ்ட்ராவா ரெண்டு.

அந்த வரலாற்று ஆசிரியர் வயதானவர். வந்ததும் நாற்காலியில் அமர்பவர் மணி அடித்ததும் தான் எழுந்து போவார். புத்தகத்தை திறந்து அதனுள் கோனார் நோட்ஸ் வைத்து வரிசையாக வாசித்துக் கொண்டே செல்வார். அதில் வரும் கேள்விகளை இடையிடையே கேள்விகளாய் கேட்டுக் கொள்வார். நம்ம யாரு? நாங்களும் கோனார் நோட்ஸ் வாங்கி புத்தகத்தை திறந்து அதனுள் வைத்துக் கொள்வோம். ஆசிரியர் மூச்சு விட எடுத்துக் கொள்ளும் இடைவெளியில் நாங்கள் அவர் விட்டதை எடுத்துக் கொடுப்போம். அவர் அதைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொண்டதில்லை.

அந்த ஒன்பதாம் வகுப்பு ஒரு ரசனையான காலம். அன்றைய பெண் குழந்தைகள் பொதுவாக பூப்படையும் காலம் அது. அதுவும் அல்லாமல் பெண்கள் பூப்படைந்தால் மொத்தம் பதினாறு நாட்கள் வெளியில் விடுவதில்லை. எனவே நாங்கள், மாணவிகள் நீண்ட விடுமுறை எடுத்து விட்டாலே  நாட்களை எண்ண ஆரம்பித்து விடுவோம். பதினாறு நாட்கள் கடந்து ஒரு பெண் வகுப்புக்கு வந்து விட்டாலே வெறும் கையால் ஆரத்தி எடுத்து குலவை இட்டு ரகளை பண்ணி விடுவோம். எல்லாம் மணி அடிக்கும் வரை தான். மணி அடித்து விட்டால் மயான அமைதி சூழ்ந்து விடும்.

அன்று மாதாந்திர பரீட்சை.  பூப்படைந்து விடுமுறை முடிந்து வந்த பெண்ணை கலாட்டா பண்ணிக் கொண்டு இருந்ததில் வரலாற்று ஆசிரியர் உள்ளே வந்ததை கவனிக்கவில்லை. வந்தவர் வேகமாக கேள்விகளை போர்டில் எழுதிப் போட்டு என் அருகே வந்து "Get up and go to the last bench" என்றார். எழுதப் போறது  பரீட்சை, அதை எங்கே இருந்து எழுதினா என்ன னு எழுந்து கடைசி பெஞ்சுக்கு போய் விட்டேன். உட்கார்ந்து போர்டை பார்த்து ஒரே முழி. பதிலே தெரியலயானு பார்க்கிறீங்களா? இல்லைங்க கேள்வியே தெரியல. கண்ணெல்லாம் மய மயங்குது. ரெண்டு கையால் கண்ணை அழுந்தத் தேச்சிட்டு பார்க்கிறேன். அப்பவும் ஒண்ணும் தெரியல. 

பேனாவைக் கீழே வச்சிட்டு ரெண்டு கைகளாலேயும் கன்னத்தைத் தாங்கிட்டு ஆசிரியரையே பரிதாபமாகப் பார்த்த படி உட்கார்ந்து விட்டேன். முதலில் கண்டு கொள்ளாதது போல் இருந்தவர் பிறகு அருகில் வந்தார். " என்ன ? படிக்கலையா?" என்றார்.
" படிச்சிட்டு தான் வந்தேன் மிஸ் ."
"அப்பறம் என்ன கேட்டு இருக்கிற கேள்விக்கு பதில் தெரியலையா? "
"இல்ல மிஸ், கேட்டு இருக்கிற கேள்வியே என்னனு தெரியல" என்றேன்.
எங்கள் குறும்புத்தனம் தெரிந்தவர் ஆதலால் சந்தேகமாகவே பார்த்த படி "என்ன சொல்றே" என்றார்.
"நிஜமா மிஸ், இங்கே இருந்து போர்டில என்ன எழுதி இருக்குதுனே தெரியல" என்றேன்.
அருகில் உள்ள மாணவிகளை பார்த்தால் காகிதத்தில் நட்ட கண்ணை நகர்த்தாமல் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.
எழுதிப் போடுவதற்காக கொண்டு வந்த காகிதத்தை  கொடுத்தார். அப்பறம் என்ன. லேட்டா ஆரம்பிச்சு எழுதி முடித்துக் கொடுத்தாச்சு. முடித்ததும் ஆசிரியர் என் தோழியின் அருகில் வந்து "அவளுக்கு கண்ணில் ஏதோ தொல்லை இருப்பது போல் இருக்கிறது. வீட்டில சொல்லச் சொன்னா அவ டபாச்சிடுவா. நீ போய் அவங்க வீட்டில சொல்லணும். கண் டாக்டரை பார்க்கச் சொல்லி . " என்றார்.

எனக்கு ஒரே வருத்தம். வைத்தியரிடம் செல்ல, விருப்பமில்லாமல் வெளியே அழைத்தால் நாலு கால்களையும் நாலு புறம் பரப்பி அடம் பிடிக்குமே நாய்க்குட்டி அது போல் மறுத்தாலும் ஆரம்ப கட்டத்திலே குறையை கண்டு பிடிக்கவும் அதிக அளவில் கண்ணின் பவர் அதிகரிக்காமல் இருக்கவும் அது உதவியது. ஒரு சின்ன நிகழ்ச்சியில் இருந்து மாணவியின் குறையை ஊகித்து, வீட்டுக்கு தகவல் அனுப்பி உதவிய அந்த ஆசிரியரை அதற்கு பின் ரொம்ப பிடித்துப் போய் விட்டது. கோனார் நோட்ஸ் கொண்டு போவதே இல்லை. பாடம் நடத்துவது போல் அவர்களின் பாவனையும் அதை கவனிப்பது போன்ற எங்கள் பாவனையும் சிக்கலின்றி தொடர்ந்தது.

ஆசிரியர்களே ! விளையாட்டா எடுத்துக் கொள்ளாமல் கண்ணொளித் திட்டத்தின் பயன்   மாணவர்களை சென்று சேர உதவுங்கள்.

19 September, 2010

நான் ரசித்த புத்தகச் சுரங்கம்!!

வாங்க மக்காஸ்,
ஆவலுடன் காத்திருந்த, புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் பற்றிய விமர்சனம்.

எஸ். ராமகிருஷ்ணனின் "வாசக பர்வம்" 
உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடு.
விலை ரூ.110/-
முதல் பதிப்பு : டிசெம்பர் 2009

"வெள்ளிவீதியாரின் சங்கக் கவிதைகளை வாசித்து விட்டு மதுரையின் வீதிகளில் எந்த இடத்தில் அவள் இருந்தாள் என்று இரவெல்லாம் அவள் பெயர் சொல்லி அழைத்தபடி அலைந்திருக்கிறேன்" என்ற அவரின் முன்னுரையில் உள்ள வரிகளே உள்ளே இருக்கும் செய்திக்கு கட்டியம் கூறும் முன்னுரை. "ஏ வாசகா! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள் " என்ற நகுலனின் வரியை குறிப்பிட்டு "புத்தகங்கள் வாசிப்பதை விட உயர்ந்த சந்தோஷம் வேறு எதுவும் இல்லை என்று நம்புபவன் நான் " என்கிறார். நானும் தான்.
ஆம், வைக்கம் பஷீர், சுஜாதா, பிரபஞ்சன், வண்ண தாசன், நிலவன், கவிஞர் மீரா, ஜெயகாந்தன் போல பதினெட்டு எழுத்தாளர்களுடன் அவருக்கு உள்ள உறவைப் பற்றிய விளக்கங்கள் அழகு தமிழில். கல்லூரி நாட்கள் தொட்டே அறிமுகம் ஆன எழுத்தாளர்களைத் தேடி அவர்கள் இல்லம் சென்றிருக்கிறார். அவர்களைப் பார்த்த பரவசத்தில் பேச்சு வராமல் தவித்து இருக்கிறார். சினிமா நாயகன் , நாயகிகளைப் பார்த்து பரவசம் அடையும் நம் மக்களுக்கு மத்தியில் இப்படி ஒரு மனிதர். 

 பேராசிரியர் " எது உங்களை எழுத வைத்தது " என்று கேட்டதும் பஷீர் சற்றும் யோசிக்காமல் "பசி" என்றார். முகத்தில் அறைந்த இந்த பதிலை விட்டு நான் வெளியே வர சில நொடிகள் பிடித்தது. 

 பிரபஞ்சனைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்ற இடத்தில் பேசும் போது தனக்கு அந்த புத்தகம் பிடிக்கவில்லை என்றும் பிடிக்காததற்க்கான காரணத்தையும் கூறி அபத்தம் நிறைந்த அர்த்தமற்ற இந்த புத்தகத்தை பாராட்டி பலர் பேசும் போது தன்னால் தொடர்ந்து இருக்க முடியாது என்று கூறி வெளியேறியதாகவும், சபை அதிர்ந்து போனதையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

பதிவுலகின் all time favourite வண்ணதாசன் பற்றியும் எழுதி இருக்கிறார். "யானைகள் உரத்த குரலிட்டு தன் இருப்பைக் காட்டிக் கொள்வதில்லை இயல்பிலேயே அது யாவரையும் கவர்ந்து விடுகிறது. வண்ணதாசனின் உறவும் படைப்பிலக்கியமும் அத்தகையதே. " என்கிறார்.

அடுத்து அருந்ததி ராயின் "தோழர்களுடன் ஒரு பயணம்" தமிழில் அ. முத்துகிருஷ்ணன் .
பயணி பதிப்பகத்தின் வெளியீடு. 
விலை ரூ.60/-
முதல் பதிப்பு : 2010
"பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகப்படியான ஊழல் மதிப்பு என்பது சில நூறு கோடிகளை தாண்டாது. ஆனால் இன்று மிகச் சிறிய பின் தங்கிய மாநிலங்களில் கூட ஆயிரம் கோடி ஊழல்கள் எல்லாம் சர்வ சாதாரணம். "  ௦
இந்த வரிகளை பதிப்பகத்தின் முன்னுரையில் படித்தது தான் எனக்கு இந்த புத்தகத்தை வாங்கத் தூண்டியது. வேகமாகக் கடக்க முடியாத வார்த்தைகள். அதனால் பயணிப்பு மெதுவாகத் தான். 
"பேய்கள் சிலருக்கு மேலே வட்டமிடும் ஆவியாகவும் சிலருக்கு இல்லாத ஒன்றாகவும் இருக்கலாம். அப்படியாயின் அந்த பேய்க்கு நேர் எதிரானது தான் இன்று வனங்களைக்  கிழித்து செல்லும் நால் வழிச் சாலைகள்.  அது நமக்கு வரப் போவதை முன் அறிவிக்கும் கட்டியக் காரனே.  " மலை வாழ் பழங்குடியினருக்கு ஆதரவான புத்தகம். 

"நான் திரும்பிப் பார்த்த போது அவர்கள் கை அசைத்து நின்றார்கள். இவர்கள் கனவுகளுடன் வாழ்பவர்கள். ஆனால் உலகில் மற்றவர்கள் எல்லாம் கொடுங்கனவுகளுடன் தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு இரவும் இந்த பயணத்தைப் 
பற்றியே நினைக்கிறேன்." என்கிறார்.

கொஞ்ச நாள்  முன்னால ஓவியர் புகழேந்தியின் ஓவியங்களைப் பற்றி எழுதி இருந்தேன் அவர் எழுதியதாலேயே இந்தப் புத்தகம் என்னைக் கவர்ந்தது. 
ஓவியர் புகழேந்தியின் "ஈழ மண்ணின் ஈரச் சுவடுகள் "
தோழமை  வெளியீடு. 
விலை ரூ.175/-
முதல் பதிப்பு : ஏப்ரல் 2006
இன்னும் வாசிக்கத் தொடங்கவில்லை. 

இன்னும் 'நர்சிம்'மின் " அய்யனார் கம்மா
அகநாழிகை வெளியீடு.
விலை ரூ.40
முதல் பதிப்பு : ஜனவரி 2010
ஆசிரியர் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி சொல்லியே ஏமாற்றி விட்டதால் அங்கே பார்த்த உடன் பற்றிக் கொண்டேன். "தந்தையானவன்" எத்தனை முறை வாசித்து இருந்தாலும் முதல் முறை படித்த போது இருந்த பாதிப்பை அப்படியே கொண்டு வந்தது. அது எழுத்தாளரின் வெற்றி. கிராமிய மணம் கொண்டு வருவதற்காகவே சில கதைகளில் அதிகப் படியான *** வார்த்தைகள். ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் கிராமங்கள் அப்படி இருந்தன. இப்பொழுது மாறி இருக்கும் என்று நான் கருதுகிறேன். உண்மை என்ன தெரியவில்லை. இறுதிக் கதை முதன் முதலில் எழுதியது என்று நினைக்கிறேன்.பால் மணம் மாறா அறிமுக எழுத்தாளரின் வாசம் தெரிகிறது. பதிவுலக நண்பரின் புத்தகம் என்பதால் கூடுதல் ஒட்டுதலோடு படித்தேன். அதனால் குறைகள் அதிகம் தெரியவில்லை.   

இன்னும் இரண்டு புத்தகங்கள் 
ஜெயமோகனின் "அனல் காற்று
தமிழினி வெளியீடு.
விலை ரூ. 90௦
முதல் பதிப்பு : டிசெம்பர்  2009

மற்றொன்று கோபிநாத்தின் "ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!" 
சிக்ஸ்த்  சென்ஸ் வெளியீடு .
விலை ரூ. 60
முதல் பதிப்பு : டிசெம்பர் 2008

இந்த ரெண்டு புத்தகங்களும் இன்னும் வாசிக்கவில்லை என்று தான் எழுதி முடிக்க நினைத்திருந்தேன். இரவு படுக்கையில் ஜெயமோகனின் குறு நாவலை லேசாக புரட்டிப் பார்க்கலாம் என்று தான் எடுத்தேன். உணர்வுகளின் அனல் காற்று. இரவு பனிரெண்டு மணி வரை படித்தேன். கீழே வைக்க முடியவில்லை. மறு நாள் அலுவலகப் பணியை எண்ணி மூடினேன். இன்று முடித்து விடுவேன். அதைப் பற்றி ஒன்றும் எழுதலைன்னு    பார்க்கிறீங்களா? எழுதறதா இல்லை. ஏன்னா இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உணர வைக்கும் நாவல் அவரவர் அனுபவங்களைப் பொறுத்து. அதனால் விமர்சனம் உங்கள் கைகளிலேயே விட்டு விடுகிறேன். 

வர்ரட்டா !!

12 September, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்


                                                                                            
"ஹல்லோ!! என்ன பாஸ்!!"
"**********"
"படித்த புத்தகம் பற்றிய பதிவா?"
"**********"
"அடுத்த போஸ்ட் அது தான் பாஸ், கொஞ்சம் பிஸி "
"********"
"என்ன பிஸியா ?ஹி!! ஹி!!பாஸ் (எ) பாஸ்கரன் பார்க்க போயிட்டேன்  பாஸ்" 
ஆமாங்க !!உலக வரலாற்றில் முதல் முறையாக  பாஸ் (எ) பாஸ்கரன் படம் வந்த ரெண்டாம் நாளே பார்த்து விட்டேன். 
படம் சூப்பருங்க. !!!
கடிகார முள் சுற்ற சுற்ற, படத்தில் உள்ளவங்க பெயர் வரும் போதே படம் வித்தியாசமா இருக்கப் போகுதுன்னு பட்சி சொல்லிருச்சு. 
அட ! ஆர்யா என்ட்ரி சீனுக்கு விசில் தூள் பறந்தது. அதுவும் ,
"பாசு, பாசு, பாசு 
என் பேரக் கேளு பாசு" பாட்டில யுவன் இசையும், முத்துக் குமாரின் பாடல் வரிகளும், ஆர்யாவின் நடனமும் ரசிகர்களின் விசிலும் சேர்ந்து பட்டையைக் கிளப்புச்சு போங்க. 
என் உடன் வந்த எங்க அம்மா படம் பார்க்க விட மாட்டாங்க போலிருக்கே ன்னாங்க.ஆனா கொஞ்ச நேரத்தில அரங்கம் அமைதி ஆகி விட்டது. 

ஆர்யாவுக்கு மதராசப் பட்டணத்துக்கு அப்பறம் மௌசு கூடிட்டுதுன்னு நினைக்கிறேன். பட்சி இன்னும் ஒண்ணும் சொல்லுச்சு. ஆர்யா டாப் லிஸ்ட்ல வர்ற நாள் இன்னும் அதிக தூரத்தில் இல்லை. வரிசையா மூணு படம் சூப்பர் டூப்பர் ஹிட்.(மூணாவது எந்த படமா? இது தாங்க அது)

நயன்தாரா ! ரஜினி கூடவும் சரத் கூடவும் நடித்த பப்ளிமாஸ் நயன் தானா இது? ஒரு சுத்து மெலியும் போது சின்ன புள்ளைங்களுக்கு ஜோடியா நல்லா இருந்தது.ஆனா இப்போ ? ஆனாலும் அந்தச் சிரிப்பு மட்டும் அழகு குறையாமல். ரொம்ப மெலிந்ததால் இயக்குனருக்கு அமலா நினைவுக்கு வந்து விட்டார் போல, அதனால் சத்யாவின் "வளை ஓசை" பாடல் ஒரு 'இடை' செருகல். 

படத்துக்கு வருவோம். வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பய ரோல நன்கு உணர்ந்து நடிச்சிருக்கார்  ஆர்யா. நயனைக் கை பிடிக்க அண்ணி போடும் கண்டிஷனுக்காக வீட்டை விட்டு வெளியேறி கஷ்டப்பட்டாலும் "சினிமாக் கதாநாயகன் எப்படியும் ஆறே மாதத்தில் அம்பானி ஆகி விடுவான் " ஆதலால் ஆர்யாவின் மேல் இரக்கம் வரவே இல்லை.

ஆர்யாவின் அண்ணா,  தொலைகாட்சி தொடர்களில்  வில்லனாக வந்தவர், அண்ணியும் அப்படித்தான். அழகும் இயல்பான நடிப்புமாக அசத்துகிறார்கள். இவர்களை பெரிய திரையில் முன்னமேயே எதிர்பார்த்தேன். கொஞ்சம் லேட் ஆக வந்தாலும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.       

அடுத்து சந்தானம், படம் முழுவதும் பக்க பலமாக வருகிறார். ஜென்ட்ஸ் பார்லர் வைத்திருப்பதால் கொஞ்சம் ஸ்டைலாகவே இருக்கிறார். இவரும் ஆர்யாவும் சேர்ந்து படம் முழுவதும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். எனக்கு இன்டேர்மிஷன் வந்ததும் ஒரு சந்தேகம் அடுத்த பாதி எப்படி இருக்குமோனு. ஒரு நண்பனுக்கு எஸ் எம் எஸ் தட்டினேன். " இது வரை நல்லாத்தான் போயிட்டிருக்கு. இனிமே எப்படி" 
பதில் வந்தது "டோன்ட் வொரி . நல்லாவே போகும்" 
சொன்னது போலவே படம் முடியும் கடைசித் துளி வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை. 

அது என்னங்க,  பாட்டு சீன் வந்ததும் வெளி நாடு போயிடறாங்க. எந்த நாடு போனாலும் நம்ம நாட்டு ஆண் மக்கள் இருக்கையில் இருந்து  புறப்பட்டுறாங்க. இந்த முறை சில பெண் மக்களும். வேறு சிலர் செல்லில் கேம் விளையாடப் போறதா சொல்றாங்க. லவ்ஸ் வந்ததும் வெளி நாட்ல போய் டான்ஸ் ஆடுறதும், கூடவே சில வெளி நாட்டினர் நம்ம இளைய தளபதி டான்ஸ் ஆடுறதும் படா தமாசா கீதுங்க. 

பலரால் முடியாத ஒரு காரியத்தை ஒரு மாற்றுத் திறனாளி செய்து முடிப்பதாகக் காட்டியதற்கு இயக்குனர் ராஜேஷுக்கு ஒரு பாராட்டு. ஆனால் மலையாளப் பட பிட்  நாயகியை படத்தில் திணித்து மாணவர்களை ஜொள்  விட வைத்ததற்கு ஒரு குட்டு.  

படத்தின் இறுதியில் நட்புக்காக  ஜீவா . அசத்திட்டீங்க  ஜீவா! கட்சி பத்து நிமிடங்களை கல கலப்பாகவே கொண்டு செல்கிறார்.  மொத்தத்தில் நீங்கள் தான் 'நண்பேன்டா'
சித்ரா லக்ஷ்மணன், நாடோடிகளில் சசிகுமாரின் அம்மாவாக வந்தவர், படத்தில் ஆர்யாவின் தங்கையாக வந்தவர் இன்னும் பலரும் தங்கள் பகுதிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நான் ரசித்த காட்சி. ரயில் நிலையத்தில் நயன்தாரா வருத்தத்தில் தனிமையில் இருக்க, ஒரு மன நிலை பிறழ்ந்தவர் தொல்லை கொடுக்க, வருண பகவான் போல எதிர்பாராத நேரத்தில் அங்கே வந்த கதாநாயகன் " எங்கேயாவது லவ் தோற்றுப் போய் பொம்பளப் பிள்ளைங்க நே நே நே  னு தலையைப் பிராண்டிக் கிட்டு சுத்தறதைப் பார்த்திருக்கோமா? நீங்க மட்டும் ஏன்டா இப்படி" என்கிறார். அட! ஆமாமில்லை.  

யுவன் சொல்லவே வேண்டாம். 
முத்துகுமார் சொல்லவே வேண்டாம், 
இன்னும் பல விஷயங்கள் சொல்லவே வேண்டாம், என்னங்க இன்னும் கிளம்பாமவா இருக்கீங்க படம் பார்க்க. 

29 August, 2010

கல்லூரிச் சாலையிலே !

(நேற்று 'நீயும் நானும்' நிகழ்ச்சியில் பங்கு கொண்டு கலக்கிய ஐந்து பதிவர்களுக்கும், பரிசு பெற்ற நர்சிம் அவர்களுககு சிறப்பாகவும்  நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் !! ) 
சில மாதங்களுக்கு முன் அலுவலகத்துக்கு ஒரு அழைப்பு. முகவரி மிக சிம்பிள் ஆக பெயர், **** அதிகாரி, ஊர் பெயர். நான் படித்த கல்லூரியில் ( சாரா டக்கர் கல்லூரி  )  இருந்து பழைய மாணவர்கள் மீண்டும் இணைவதற்கான விழாவிற்கான அழைப்பு. எனக்கு ஒரே துள்ளல். படித்து இத்தனை ஆண்டுகள் கழித்து நினைவு வைத்து அனுப்பி இருக்கிறார்களே. கண்டிப்பாக போகணும். ஞாயிறு அன்று ஓய்வு நாள் என்பதை  கடின உழைப்பு நாள் னு மாற்றிடலாம். அப்பப்பா எத்தனை வேலைகள். ஒரு வழியா அத்தனை வேலையையும் முடித்து, புறப்பட்டேன். சிலர் எந்த விழாவுக்கும் ரொம்ப சிம்பிள் ஆக வருவார்கள். சிலர் எதுவானாலும் கிரான்ட் தான். நான் பொதுவா இடத்துக்கு தக்கன போகணும்னு நினைப்பேன். ஒரு குழப்பம். நிறைய பேர் வருவாங்களா? சின்ன பிள்ளைங்க இப்போ படிச்சு முடிச்சவங்க மத்தியில ரொம்ப odd  man  out  ஆகத் தெரிவோமோ? இப்படி பலவாறாக யோசித்து அடர் நீலத்தில் ஒரு சேலை கட்டி புறப்பட்டு போனேன். கல்லூரி வாசலில் வாட்ச்மன் சர்ச்க்கு செல்லுமாறு வழி காட்டினார். எனக்குள் ஒரே சந்தோஷம்.  அடடா அந்த நாட்கள். சிட்டுக் குருவிகளாய் சிறகடித்து பறந்த காலம் .

அந்த சர்ச்க்குள் சென்றதும் எனக்கு அதிர்ச்சியும் ஆனந்தமும்.
அதிர்ச்சி, அங்கே இருந்தது மொத்தம் முப்பது பேருக்குள். அதில் பாதி பேர் இப்பொழுது அந்தக் கல்லூரியில் பணி புரிபவர்கள். ரொம்ப வயசானவர்கள் சிலர், என்னை ஒத்தவர்கள் சிலர்.  ஐந்து ஆண்டுகளுக்குள் படித்து முடித்தவர்கள் ஒருவர் கூட இல்லை. ஏன் இந்த நிலை? நாம் படித்த கல்லூரிக்கு வர வேண்டும் என்ற  ஆர்வமும்  நம் ஆசிரியர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஏன் இன்றைய மாணவர்களிடம் இல்லை. புரியவில்லை.

ஆனந்ததிற்கு காரணம் எனக்கு மிகவும் பிடித்த, யாருடைய பெயரை என்  மகளுக்கு வைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருக்கிறேனோ அந்த சிந்தியா மிஸ்சும் அதே அடர் நீலத்தில் சேலை. சின்ன சின்ன விஷயங்களில் கூட சந்தோஷப் படும் அந்த பருவ வயதில் தொலைத்த மனது திரும்ப கிடைத்தது போல் சந்தோஷம். எங்கே போயிற்று அந்த சந்தோஷமும், சிரிப்பும். திரும்பக் கிடைத்தது ஒரு மூன்று மணி நேரங்களுக்கு மட்டும்.

அதன் பின் MBA ஹாலில் ஒரு மீட்டிங். கல்லூரியைப் பற்றிக் கிடைத்த தகவல்களில் சில:
...கல்லூரி ஆரம்பிக்கப் பட்டது 1896 ஆம் ஆண்டில் நான்கே நான்கு மாணவர்களுடன்.
...மிஸ் சாராஹ் டக்கர் என்ற பெண்மணி பெண்களுக்கான தனிக் கல்லூரி இருந்தால் தான் பெண்களில் படிப்பவர் எண்ணிக்கை கூடும் என்பதற்காக எடுத்த முயற்சி தான் இந்த கல்லூரியின்  வரவு. 
...முதலில் சாரா டக்கர் ஹை ஸ்கூல் கட்டடத்தின் உள்ளேயே இருந்தது. பின் தனிக் கட்டடமாக பெருமாள்புரத்தில் கட்டப்பட்டது.
... நூறு ஆண்டுகளைக் கடந்த கல்லூரி. இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் நூறினை ஒட்டிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள்.
அங்கு படித்த மாணவர்களே பலர் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்.
வந்திருந்தவர்களில் எழுபத்திரண்டு வயதில் ஒருவர், அறுபத்தி ஐந்தில் சிலர். அதில் இருவர் பள்ளியில் இருந்து ஒன்றாகப் படித்தவர்கள். "திஸ் கேர்ள், பள்ளியிலேயே வகுப்புத் தலைவி, குனிந்து கொண்டே, பேசுபவர்கள் பெயரை எழுதி ஆசிரியரிடம் கொடுத்து விடுவாள் " என்றதும் சிரிப்பு எழுந்தது. அது அறுபத்தி ஐந்து வயது பெண்ணை கேர்ள் என்று சொன்னதற்காக .

நான் என் ஆசிரியரின் பெயரை என் மகளுக்கு வைத்து இருக்கிறேன் என்றதும் கை தட்டி சந்தோஷப் பட்டார்கள். எண்பத்தி ஆறில் முடித்த ஒரு பெண் என் வயதில் உள்ளவர்கள் வருவார்கள் என்று வந்தேன் இங்கே ஆன்ட்டிகளும் பாட்டிகளும் வந்திருக்கிறார்கள் என்றாள். (!?!)

சில போட்டிகள் வைத்தார்கள்.சின்ன சின்ன துண்டு சீட்டுகளில்  எண்கள் எழுதி,ஆளுக்கு ஒரு துண்டு  பேப்பரை எல்லோரையும் எடுக்கச் சொன்னார்கள். சில வரையறைக்குள் வந்தவர்களை அமரச் சொன்னார்கள். இறுதியில்
  13   என்ற அதிர்ஷ்டமில்லாததாக சொல்லப் படும் எண்ணைக்  கொண்டிருந்த பெண் அதிர்ஷ்டசாலியாகத் தேர்ந்து எடுக்கப் பட்டு பரிசு கொடுக்கப் பட்டாள்.

எல்லாம் முடிந்து நாங்கள் படிக்கும் போது இருந்த கட்டடங்கள், மரங்கள் காலி இடங்களுடன் பேசி ஒரு வித நிறைவுடன் வீட்டிற்கு வந்து பிள்ளைகளிடம் " எங்க காலேஜ் ல ....." என்றதும் ரெண்டும் கோரசாக " ஹையோ ! இப்பவே கண்ணக் கட்டுதே..."
என்றதுகள். போதாதற்கு நானும் இந்த வருடம் 'ஓய்வு பெறும்' சிந்தியா மிஸ்சும் எடுத்த போட்டோ பார்த்து "அம்மா உன்னை விட உங்க மிஸ் ரொம்பவே யங்." என்று கடுப்பு ஏத்தியதும் பதிவு எழுத உட்கார்ந்து விட்டேன்.

28 August, 2010

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

ஆசிரியர் தினத்துக்கு ரொம்ப முன் கூட்டியே ஒரு பதிவு போட்டுட்டதால, ஒரு கடுமையான ஆசிரியரைப் பற்றி ஒரு பதிவு.

அதுக்கு முன்ன ஒரு செய்தி. நேற்று மதுரையில் புத்தகத் திருவிழா சென்றிருந்தேன். சில புத்தகங்கள் வாங்கினேன். அதைப் பற்றி அடுத்த பதிவு. திருவிழாவில் சில அறிய முகங்கள் அறிமுகம் ஆனது. திரு.ஞானி, பேச நினைத்தேன் வேகமாக நடந்து கொண்டே இருந்தார். உடம்பு பரவா இல்லையா சார், அறுவை சிகிச்சை நடந்த உடம்பு கொஞ்சம் மெதுவா நடக்கலாமே?  திரு சாரு நிவேதிதா, உயிர்மை ஸ்டால் வாசலில் அமர்ந்திருந்தார். கூட ரெண்டு பேர். ஒரு வேளை அவர்களும் எழுத்தாளர்களாக இருக்கலாம். எனக்கு தெரிந்தவர்கள் இல்லை. ஒரு வேளை தனியாக இருந்திருந்தால் பேசி இருப்பேனோ என்னவோ, விகடனில் 'மனம் கொத்தி பறவை' நல்ல இருக்குனு சொல்ல நினைத்தேன். சொல்ல வில்லை. திரு மனுஷ்ய புத்திரன் , முடித்து வெளியே வரும் போது காரிலிருந்து இறங்கினார்கள்.  என் அதிர்ச்சியை  அமர்த்தி முக மலர்ச்சியோடு அவரிடம் சென்று பேசினேன். அவரும் புன்சிரிப்போடு சில வார்த்தைகள் பேசினார். மறுபடியும் ஸ்டால் சென்று கொஞ்ச நேரம் பேசி வர ஆசை தான். அன்றே திருநெல்வேலி திரும்ப வேண்டி இருந்ததால் அப்படியே திரும்பி விட்டேன். sorry சார் .
இன்னும் ஒரு மதுரை பதிவரை சந்திப்பதாக ஆவலோடு இருந்தேன். சந்தர்ப்பம் சதி செய்து விட்டது.

இப்போ  விஷயத்துக்கு  வருவோம் .
அப்பொழுது நான் ஆறாவது படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அன்றிலிருந்து இன்று வரை, வகுப்பு ஆனாலும் சரி மீட்டிங் ஆனாலும் சரி முதல் வரிசையில் இருக்கணும். பேசுபவர்களின் ஒரு வார்த்தை கூட சிந்தி சிதறி விடாமல் முழுவதையும் உள் வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்புக்கு வெளியே மணப்பெண் (!?!) பெஞ்சில்  அமரும் பெரிய பெண்கள் தான் நண்பர்கள். 

இந்தக் காலம் போல பள்ளி சிறுவர்களை அடிக்கக் கூடாத காலம் அல்ல அது. எங்கள் 
வகுப்பு ஆசிரியை கடுமையானவர்கள். ரொம்பக் காலம் கழித்து அவர்களை பார்த்தேன். அதே கடுமை. ஏன்  சில மனிதர்கள் வாழ்வில் சிரிப்பை மறந்து வளர்கிறார்கள் என்று தெரியவில்லை. வகுப்பில் யார் குறும்பு செய்தாலும் இருக்கும் இடத்தில் இருந்தே டஸ்டரை  எறிவார்கள். அவர்கள் குறி பார்த்து எறிவதும், நாங்கள் அது மேலே பட்டு விடாமல் ஒதுங்குவதும் நல்ல விளையாட்டாக இருக்கும். அதை விட பெரிய விளையாட்டு ஒன்று உண்டு. சசிந்தனா என்று ஒரு பெண். பிரபல பீடிக் கடை முதலாளியின்  பெண். இருக்கும் நாலு வரிசை பெஞ்சுகளின் இடைப்பட்ட மூன்று வரிசைகளின் இடையில் அவள் ஓடுவதும், அவளை அடிக்க அந்த ஆசிரியர் பின்னேயே ஓடுவதும் எங்களுக்கு எல்லாம் நல்ல பொழுது போக்கு . 


மதிய உணவு ஒரு பெரிய வட்டமாக இருந்து எடுத்துக் கொள்வோம். அன்று சாப்பிடும் போது ஒரு சதித் திட்டம் தீட்டப் பட்டது. இந்த ஆசிரியரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வர ரேவதியின் உதவி நாடப் பட்டது. ரேவதியின் தாய் ஒரு மருத்துவர். மறு
நாள் கைகளில் கண்ணாடி வளையல் அணிந்து வந்த அவள் வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தும் போது பக்கத்தில் இருந்த பெண்ணிடம் பேசிக் கொண்டே இருந்தாள். அது சதித் திட்டத்தின் ஒரு பகுதி. எதிர்ப்பார்த்தது போலவே ஆசிரியர் டஸ்டரை எறிய அதைத் தடுப்பது போல் கண்ணாடி வளையல்கள் அணிந்த கையை குறுக்கே நீட்ட டஸ்டர் பட்டு  வளையல்கள் கல கலவென சிரித்து சிதறின.

அதில் சில பல  துண்டுகள் கைகளில் பட்டு வெளிப்பட்ட ரத்தமும் சதியை நினைத்து சிரித்தது. அது நாளின் கடைசி வகுப்பு. ஒரு நிமிடம் ரத்தத்தை பார்த்து ஆசிரியர் அதிர்ந்தாலும் அதிர்ச்சியை வெளிக் காட்டாமல் அமர்த்தலாக வெளியேறினார். 

வீட்டுக்கு போகும் வழியில் சதித்திட்டத்தின் அடுத்த பகுதி தீட்டப் பட்டது. மறு நாள் ரேவதியைப் பார்த்த ஆசிரியருக்கு அதிர்ச்சி  என்றால் எங்களுக்கு அதை விட பெரிய அதிர்ச்சி. நிஜமாகவே அடி பட்டு விட்டதோ? வலது கையில் முழங்கையில் இருந்து மணிக் கட்டு வரை பெரிய பேண்டேஜ் . கலக்கத்தை மறைத்துக் கொண்டே பாடம் நடத்தத் தொடங்கினார்கள் ஆசிரியர். மெல்ல எழுந்து முன்னே வந்தாள் ரேவதி. ஆசிரியரை நெருங்கி " மிஸ், எனக்கு இன்னைக்கு எழுத முடியாது" என்றாள். 
"ஏன்? என்ன ஆச்சு?"
"நீங்க நேற்று டஸ்டரை எறிந்ததில கண்ணாடி வளையல்   எல்லாம் உடஞ்சதில துண்டு கைக்குள்ள  போய் செப்டிக் ஆகிடுச்சு.ஒரே வலி மிஸ்."

இப்பொழுது தான் தன் செயலின் ஆபத்தை உணர்ந்தது போல் ஆசிரியர் தயங்க அந்தத் தயக்கத்தை சந்தர்ப்பமாக்கிக் கொண்டு மாணவர்கள் சல சலக்கத் தொடங்கினார்கள். நேரம் ஆக ஆக சலசலப்பு அதிகமாகத் தொடங்கியது. மாணவர்களை கட்டுப்படுத்தும் நிலையில் ஆசிரியர் இல்லை. கட்டுப்படுத்தினாலும் அடங்கும் நிலையில் மாணவர்கள் இல்லை. கண்களில் புறப்பட்ட செயற்கை கண்ணீரோடு திரும்பிய ரேவதி என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டி சிரித்தது போல் இருந்தது. 
ஆசிரியர் தன் இயல்பில் இருந்திருந்தால் அந்த சத்தத்தை அடக்க ஒரு நொடி போதும். இப்பொழுது அவர்களை அதிர்ச்சி ஆண்டு கொண்டிருந்தது. 
"எல்லோரும் அமைதியாக படித்துக் கொண்டிருங்கள்" என்று சொல்லிய படி மாடியில் வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்த தன் தோழியிடம்  ஆலோசனை கேட்க சென்றார்கள்.       
அன்று ஆசிரியருக்கு நேரம் சரி இல்லை என்று தான் நினைக்கிறேன். அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்துக்குள் தலைமை ஆசிரியர் தனது வழக்கமான ரௌண்ட்ஸ் வந்து விட்டார்கள். அப்பொழுது  தலைமைஆசிரியராய் இருக்கும் கன்னியாஸ்திரிகள் நாளுக்கு ஒரு முறை பள்ளி முழுவதும் ஒரு தடவை சுற்றி வருவார்கள். ஆசிரியர்கள் மேலும் மாணவர்கள் மேலும் ஒரு கண்காணிப்பு. 

வகுப்பின் சத்தம் அவரை ஈர்க்க உள்ளே நுழைந்து ஆசிரியரை எங்கே என்றார்கள். 
முன் வரிசையில் இருந்த என்னைப் பார்த்து" போய் உங்க கிளாஸ் மிஸ் எங்கே இருந்தாலும் கூட்டி வா' என்றார்கள். 
மாடிக்கு ஓடிப் போன நான் " மிஸ் , உங்களை ஹெட்மிஸ்ட்ரெஸ் கூட்டி வரச் சொன்னார்கள்  " என்றேன்.  
அதிர்ந்த ஆசிரியர் அலறி அடித்து கீழே இறங்க அதற்குள் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் கதை சொல்லி முடித்திருந்தார்கள். ரேவதியின் கை அருகே தலைமை ஆசிரியர் கையைக் கொண்டு செல்ல அவள் அதிக பட்ச வலியைக் காட்ட கையை பின்னே உருவிக் கொண்டார்கள். 
"வாட் நான்சென்ஸ்  இஸ் திஸ்? கம் டு மை ரூம் " என்று அழுத்தமாக சொல்லிய படி தலைமை ஆசிரியர் முன்னே செல்ல ஆசிரியர் பின்னே செல்ல எங்களுக்கு எல்லாம் கொண்டாட்டம். கடைசி வரிசைக்கு சென்ற நான் கட்டு போட்டு இருந்த ரேவதியின் கையை பிடித்து  கொஞ்சம் பலமாகவே குலுக்க அவள் போலியாக வலியைக் காட்டினாள் கண்ணைச் சிமிட்டியபடி. 
ஆசிரியரின் கடுமையான செயல் அன்றே முடிவுக்கு வந்தது. 
வீட்டுக்கு செல்லும் வழியில் நான் " கண்ண கண்ண சிமிட்டியா சிரிக்கிற . கட்ட பிரிச்சு பார்த்திருந்தா தெரிஞ்சிருக்கும் சேதி" என்றேன். 
" கையை 'தொட வந்தாலே' வலிக்குது. அப்பறம் எப்படி பிரிச்சு பார்க்கிறது" என்று அவள் சொல்ல நாங்கள் சிரித்த சிரிப்பில் முகம் சுளித்து முதிய பெண் ஒருவர்
' பொம்பளப் பிள்ளையாய் அடக்கமா போகத் தெரியுதா" என்று உறுமினார்.
"அடக்கமா அப்படினா?" என்று நான் மெல்ல கேட்க மறுபடியும் பிறந்த சிரிப்பில் தெருவில் வானவில் உதித்தது. 

22 August, 2010

மகிழ்ச்சி கொள்ளடி பெண்ணே !!

ஒரு பதிவர் வலைப்பூ இல்லாதவர்கள் படைப்புகளை அனுப்பினால் நான் பதிவு செய்கிறேன் என்று சொல்லி இருந்தார், நல்ல எண்ணமாக தோன்றியது.  அதில் ஒரு சின்ன மாற்றம் செய்து தன் வலைப்பூவின் ஸ்டைலுக்கு மாறுபட்ட ஒரு படைப்பு இருந்தால் நாம் அதை பதிவு செய்யலாமே என நினைத்தேன், 
கர்ஜிக்கும் பதிவர் ஒருவரிடம் கவிதை கேட்டேன் பெண்ணை ப(போ)ற்றி , இதோ இங்கே !
யாரென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம். 

மகிழ்ச்சி  கொள்ளடி  பெண்ணே !.
மண்ணின்  திறமுனக்கு  ..!
மெய்  பொருள்  யாதெனில் 
பொய்யன்றி  இருத்தல் .
பேறு காலத்து   பெருந்துயர்  கொண்டாய் ..
மண்ணில்  யாவர்க்கும் மற்றுயிர்  தந்தாய்..
அகழ்வானை  தாங்கு  நிலம்  போல ,
இகழ்வானை  தாங்குக  பெண்ணே !

கர்வங்  கொள்  பெண்ணே !
கடலின்  நிறமுனக்கு
ஆழி  எனும்  பரப்  பிரம்மம் .
அள்ளி  வீசும்  மலை  போல ,
வீறு  கொள்ளுக  பெண்ணே !
நீ  ஓடி ஒழிந்திடலாமோ ..
நீல  கருப்பை  தனிலே 
நித்திலம்  சுமந்த  தாயே !
ஊது  சங்கி னொலி போல ,
நீ  வீதி  முழங்குதலாகும் 

காதல்  கொள்ளடி  பெண்ணே !
காற்றின்  கனமுனக்கு .
வீசு  தென்றலென  மேவி 
நீ  பேசும்  பாங்கினதற்க்கு ,
நேச  மொழி  தனிலே 
வேறு  பாஷை  உண்டோ டி ..?

ஈரமுலர்த்து  மொறு  காற்று .,
விழி  ஈரம்  நீக்குதல்  போல ,
வாசம்  கொள்ளடி  பெண்ணே!
நீ  தென்றலடி ..
நீ  தென்றல் ..

வாஞ்சை  கொள்ளடி  பெண்ணே !
வானின்  வனப்புனக்கு .
வெம்மை  உலவுமொரு  காடு 
தண்ணிலவு , குளிருமொரு  சோலை 
குறும்பு  செய்யுமொரு  மேகம் 
உன்  குழந்தை  என்று  காண் பெண்ணே !

புன்னகை  செய்யும்  நட்சத்திரம் ,
பொன்  நகை  என்று  நீ  சூட்டு .
ஒளி  மின்னலென  தவறு  சுட்டு 
பேரிடி  என  தலையில்  குட்டு ..

கண்டு  கொள்ளடி  பெண்ணே !
கனலின்  கண்ணுனக்கு .
தீயில்  வேகு மொரு தங்கம் .
அன்றி  வேறு  பயனிலை  அதற்கு ..
வீடு  நிறையுமொளி விளக்கு ..
திரி  தூண்டும்  விரலும்  நீ யதற்கு..
சூழும்  பகையினை  யகற்று..
வேகு  விறகென  கொழுத்து ..
தேடல்  பேரொளியாம்  .
பெண்  நீ  அதிலொரு  பொறியாம் ..

கருணை   கொள்ளடி  பெண்ணே!
கடவுளின்  கரமுனக்கு ..
நிற்பதும் 
நிகழ்வதும்
நிலைப் பதும்
பெண் 
பெண் .
பெண் .