Bio Data !!

26 September, 2022

 "அதுவும் நானும்" 

இந்த தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது எங்க அப்பாவோட கைக்கடிகாரம்.  வட்டமா எண்கள் பெரிது பெரிதாய் பட்டையாய் தங்க  ஸ்டிராப் இணைத்த  கைக்கடிகாரம். அப்பாவுக்கு நகைகள் மேல் கொஞ்சம் ஆசை அதிகம் தான். அப்போ தெரியல. இப்போ நினைச்சு பார்த்தா அப்படித் தான் தோணுது. கழுத்தில் பெரிய தங்க சங்கிலி போட்டிருப்பார். அதன் டாலர் இப்போதுள்ள பத்து ரூபா நாணயத்தை விட கொஞ்சம் பெரிதாய். இன்னும் சரியாய் சொன்னால் ஒரு மஞ்சள் சரிகைத் தாளை இரண்டாய் பிளந்தால் உள்ளே சாக்லெட் இருக்குமே அது போல் இருக்கும். அது சரியாய் வந்து அவர் தொப்புளை மறைக்கும். சின்ன பெண் குழந்தைகளுக்கு அருணா கயிற்றில் ஒரு வெள்ளி இலை போட்டிருப்பாங்களே அது போல.

 விரல்கள் இரண்டில் பெரிதாய் மோதிரம் போட்டிருப்பார். ஒரு மோதிரம் பெரிய சங்கு வடிவில் மேலே ப்ளூ எனாமலில் ரத்தினம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது என்  கையில் இல்லை. எப்பவாவது படம் போடுறேன்.  இன்னொரு மோதிரம் டைமண்ட் ஷேப்பில் டார்க் ப்ளூ கல் வைத்து சுற்றி வெள்ளை கல் பதித்திருக்கும்.

 இந்த மூணு பொருளுமே அம்மாவிடம் அப்பா ஞாபகமாய் எனக்கு வேணும்னு வாங்கி வைத்திருந்தேன். வாட்ச் மட்டும் ஸ்டிராப் இல்லாமல். எவ்வளவு ரசித்து ரசித்து நகைகளை செய்திருக்கிறாங்க. செய்யுமிடம் கூட நல்லா ஞாபகம் இருக்குது. சிவன் கோவில் அருகிலுள்ள தேருக்கு எதிரே போகும் தெருவில் ஒரு ஆசாரி இருந்தார். அங்கே போவோம். ஆமா சின்ன பிள்ளையா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போவாங்க. லேசா தான் ஞாபகம் இருக்கு. ஒரு பெரிய மண் பாத்திரத்தில் தவிடு மாதிரி ஏதோ போட்டு சூடு பண்ணி அதில் தங்கத்தை உருக்கி செம்பு சேர்ப்பாங்க. அதன் பின் நாங்க வீட்டுக்கு வந்திடுவோம். கேட்ட நகைகளை  செஞ்சு வீட்டுக்கு வந்து கொடுத்திடுவார். 

அதே பழக்கத்துக்கு நானும் பெரிய மகள் திருமணம் வரை ஆசாரி மூலம் தான் நகைகள் செய்தேன். சின்ன மகளுக்கு வரும் போது 916 வந்திட்டுது. அதில் பெரிய மகளுக்கு ரொம்ப ஆதங்கம். பின் அவள் நகைகளையும் 916 ஆக மாற்றிக் கொடுத்தேன். 

மெயின் கதைக்கு வருவோம். அந்த தங்க ஸ்டிராப் போட்ட வாட்ச் ஒரு முறை அப்பா மார்க்கெட்டில் காய் வாங்கும் போது தவறி விழுந்து எடுத்தவர்கள் வாட்ச் ரொம்ப பழசா இருந்ததால தங்கம்னு தெரியாம திருப்பிக் கொடுத்தது ஒரு கிளைக் கதை.அதற்கு செல்  கிடையாது. சின்ன திருக்கு தான். எப்போ திருகினாலும் ஓடும்.  அந்த ஸ்டிராப் இல்லாத வாட்ச்சை என் நகைகளோட வைத்திருந்தேன். ஒரு சென்டிமென்டல் அட்டாச்மென்ட். எப்படி தொலைந்தது. நகைகளை எடுக்காமல் அந்த பழைய வாட்ச்சை யார் எடுத்தார்கள். அது புரியாத புதிர். காணாமலே போயிட்டுது.

 அப்பாவுடைய ரெண்டு மோதிரங்களையும் ரெண்டு பேரன்கள் வளர்ந்ததும் கொடுக்கணும்னு வச்சிருக்கிறேன். பெரிய பணக்கார வீட்டில மட்டும் தான் பரம்பரை நகை இருக்கணுமா? நாமளும் வச்சிருப்போமே! 😀

 நேற்று ஒரு அற்புதமான அனுபவம். "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் " குழுவில் எழுத்தாளர் வைத்தீஸ்வரன் அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்வில் மாலன் அவர்கள் வைத்தீஸ்வரன் அவர்களின் கதைகளைப் பற்றி  பேசினார். வாய்ப்பு கிடைத்தது கலந்து கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மிகப் பயனுள்ளதாக கழிந்தது.

இவரைப் பற்றி தெரிந்து கொள்ள கூகிளில் தேடிய போது இவருடைய மிக அருமையான கவிதை ஒன்று கையிலகப்பட்டது.
இதோ!!
"கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு.”

எத்தனையோ புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். பலராலும் புகழப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்களே  முன்னுரிமை பெறுகின்றன. நன்றாக எழுதும் ஆனால் மிகப் பெரிய கவனிப்பு பெறாத எத்தனை எழுத்துகள் நம் கண் தப்பி இருக்கின்றனவோ எனத் தோன்றியது நிஜம். எனது லிஸ்ட்டில் இவருடைய புத்தகங்களை இணைத்து விட்டேன். அவமானமாக இருக்கிறது கிட்டத்தட்ட அவர் வயது தொண்ணூறை நெருங்கும் வரை  ஒருவரை இவ்வளவு காலம் அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என. 

இனி மாலன் அவர்களின் உரையிலிருந்து:
தமிழர்கள் வாங்கி வந்த வரம் எத்தனை திறமைகள் இருந்தாலும் ஒரு சின்ன சிமிழுக்குள் அடைப்பது. ஒருவர் பல திறமைகள் கொண்டவராய் இருந்தாலும் அவற்றுள் ஒன்றில் அவரை முன்னிலைப்படுத்தி விடுவதால் மற்றவை தெரியாமல் போய் விடுகின்றன என்றார். வைத்தீஸ்வரன்  அவர்கள் தொல்லியல் படிப்பை பரோடாவில் படித்தார். கவிதைகள்  அதிகம் எழுதி உள்ள  வைத்தீஸ்வரனின் சிறு கதைத் தொகுப்பு கால்  முளைத்த மனம் . 12 சிறு கதைகள். "ஒரு கொத்துப் புல்" 26 சிறு கதைகளின் தொகுப்பு.
கிட்டத்தட்ட 50 கதைகள் எழுதி இருக்கிறார்
ஏறத்தாழ 15 ஆவது வயதில்  எழுத தொடங்கினார்.  கவிதைகள் எழுத தொடங்கி தாமதமாகத் தான் கதைகள் எழுத தொடங்கினார்.

.எழுத்தாளர்களின் மனதில் பொதுவாக காலம் உறைந்து விடும். இதற்கு விதி விலக்கு வைத்தீஸ்வரன் என்றார். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த பல எழுத்தாளர்கள் அதைப் பற்றி எழுதாமல் இருந்த  காலத்திலும் இவர் "கொடியின் துயரம்" என்ற சிறுகதை சுதந்திர போராட்டத்தைப் பற்றி எழுதி உள்ளார். சுதந்திரம் வந்த போது வைத்தீஸ்வரனுக்கு 12 வயது.

 (நேற்றைய தொடர்ச்சி. படிக்கலைன்னா அதை வாசிச்சிட்டு இதை வாசிங்க)

 "கசங்கிய காகிதம் "என்னும் ஒரு அருமையான கதையை விவரித்தார் மாலன்.  இவர் எழுதியதில் ஆகச் சிறந்த கதை "மலைகள்"  என்றார்.இது சுற்றுச்சூழலைப் பற்றிய கதை. கவிதையை விட்டு வெளியே வர முடியவில்லை என்பதை காட்டும் கதை. கதையின் பல வரிகள் நான்காக மடக்கி எழுதினால் மிகச் சிறந்த புதுக் கவிதை ஆகி இருக்கும் என்றார். அவர் எழுதிய காலத்தில் மரபுக் கவிதைகள் உயர்ந்தோங்கி நின்றன.  அதிகம் பேசப்படாத ஆனால் பேசப்பட வேண்டிய கதைகள் வைத்தீஸ்வரன் அவர்களின்  கதைகள் என்றார். 

மாலன் அவர்களிடமோ வைத்தீஸ்வரன் அவர்களிடமோ நம்  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன போது வாய்ப்பை தவற விடாமல் நான் மாலன் அவர்களிடம் பேசினேன். என் எழுத்தை அங்கீகரித்த முதல் மனிதர் அல்லவா. அவர் இந்தியா டுடேயின் ஆசிரியராக இருந்த போது கிரிக்கெட் பற்றி நான் எழுதிய கடிதம் 100₹ பரிசு பெற்ற விவரத்தை சொன்னேன். அதன் பிறகு தான் நான் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதாக நினைத்த என் கணவர் உருப்படியாக நான் ஏதோ எழுதுகிறேன் என்று ஏற்றுக் கொண்டார் என்றேன். சிரித்தார். மற்றொரு விஷயத்தை சொன்னார். பெண்களுக்கு அரசியல் விளையாட்டு போன்றவை தெரியாது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தமிழ் இந்தியா டுடே மூலம் பெண்கள் அவர்கள் உலக அறிவை வளர்த்துக் கொண்டார்கள் என்றார். உண்மை தான். 

அதன் பின் திரு. வைத்தீஸ்வரன் அவர்கள்  முழுமையாக கற்பனையாக எனக்கு எழுத வராது.வாழ்வில் நான் சந்தித்த பார்த்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு தான் கதை எழுதுவேன் என்றார். இந்த நிகழ்வை பிறந்த நாள் பரிசாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.சார்வாகன் அவர்கள் இவரிடம் "வந்து பார்த்திடுங்க. அடுத்த வாரம் இருக்க மாட்டேன் என்றாராம். போய் பார்த்து வந்திருக்கிறார். மறு வாரம் சொன்னது போலவே அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். பார்த்த போது சொல்லி இருந்தாராம் " என் மனைவி இறந்தது,  கூடவே இருந்தாலும் எனக்குத்  தெரியாது. உறங்குகிறார்கள் என்று நினைத்து இருந்திருக்கிறார்.  இரண்டு பேரும் டாக்டர். ஒரு அவையில் பேசிக் கொண்டிருத்தவர்க்கு போன் மூலம் தான் இறந்த செய்தி சொல்லப்பட்டதாம்.   இதை கதையாக எழுதினாராம் வைத்தீஸ்வரன் அவர்கள். ஆனால் முடிவை இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபடி மாற்றி எழுதினாராம். 

நானும் இதே போல் ஒரு செய்தி கேள்விப்பட்டு இருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் காலையில் மனைவி தூங்குகிறாள் என நினைத்து பேப்பர் படித்து வாக்கிங் போய் வந்து ரொம்ப நேரம் கழித்து தான் மனைவி இறந்த விஷயமே தெரிந்ததாம். 

வழக்கத்துக்கு மாறாய் எது நடந்தாலும் அதை உத்தேசமாய் எடுத்துக் கொள்ளாமல் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை  காப்பாற்ற கூட முடியலாம். 

வாழ்க இணையம். வாழ்க "வாசிப்போம் தபிழ் இலக்கியம் வளர்ப்போம்" குழு

19 September, 2022

புத்தகத்தின் பெயர் : 18 ஆவது அட்சக்கோடு ஆசிரியர் : அசோகமித்திரன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் விலை : 90/- ஆசிரியர் தன் முன்னுரையில் எழுதி இருக்கிறார். “ பிரபலமில்லாதிருப்பதின் ஒரு நன்மை பிரபலம் அடையாத நிலையே கவசமாகச் செயல்படும்” ஆரம்பமே என்னை சிந்திக்க வைத்தது. ஒருவர் பிரபலமாகாத வரையிலும் அவரை பற்றிய எந்த ஒரு எதிர்மறை செய்தியும் பெரிதாக வருவதில்லை. பிரபலமடைந்ததும் எத்தனையோ வருஷத்துக்கு முந்திய செய்திகள் எல்லாம் புற்றீசல் போல் புறப்பட்டு வரும். அப்படி பார்த்தால் ஆசிரியர் சொல்வது சரி தான் போல் இருக்கிறது. இந்த புத்தகம் ஹிந்தி மொழி பெயர்ப்புக்கு போன போது பத்தாண்டுகள் புறக்கணிப்பில் இருந்து பின் ஒருவர் துணிந்து வெளிக்கொணர்ந்தாராம். ஆனால் அது நூலுருவம் பெற்ற நாளில் கொலை செய்யப்பட்டு இருந்தாராம். சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் அழகில் ஆரம்பிக்கிறது கதை. “ ஒரு முறை தரையில் விழுந்து பிடித்தாலும் அவுட். இரு முறை தத்தி வந்து பிடித்தால் மூன்று முறை குதித்து குதித்து வந்தால் கூட அவுட். என்று வைத்துக் கொள்வோம் என்கிறார்கள்.எந்த ஒரு சட்ட திட்டமும் இல்லாத குழந்தை விளையாட்டு. அந்த காலத்திய உடையை இப்படி வர்ணிக்கிறார். ஹிந்து முஸ்லிம் பையன்கள் நிஜார் அல்லது பைஜாமா பேண்ட் மீது சட்டையை தொங்க விட்டுக் கொள்வார்கள். சட்டைக்காரப் பையன் கள் சட்டையை இடுப்பில் நிஜார் அல்லது பேன்ட்டில் சொருகிக் கொள்வார்கள். தமிழர்களில் பெரியவர்கள் முழுக்கைச் சட்டையை உள்ளே சொருகிக் கொண்டு கச்சம் வைத்த வேஷ்டி கோட், தொப்பியில் இருப்பார்கள். வேஷ்டியில் முழுக்கை ஷர்ட் இன் பண்ணி எங்க அப்பா போட்டோ ஒண்ணு நான் பார்த்திருக்கிறேன். இப்போ தான் புரியுது இது அந்தக் கால ஸ்டைல் போலிருக்கிறது. பிச்சைக்காரர்கள் கூட ஒரு இடம் விட்டு ஒரு இடம் சென்றால் சங்கடப்பட வேண்டி இருக்கும். இந்த ரெப்யூஜிஸ் எதை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள் என்கிறார். அங்கே நமக்கு நாடு விட்டு நாடு அகதிகளாக வருபவர்களின் மனநிலை நன்கு புரிகிறது. சந்திரசேகரன் படிக்கும் கல்லூரியில் இருந்து சில மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு கலவரத்தைப் பற்றி விவரிக்கிறார். எனக்கு பாளையில் லூர்துநாதன் என்ற மாணவர் இறந்த சமயம் நடந்த கலவரம் நினைவில் கிளம்பியது. இந்திய நாட்டுக்குள்ளேயே இரண்டு விதமான நாணயங்கள் இருந்திருக்கின்றன. இந்திய நாணயம் ஹைதராபாத் ஹாலி நாணயம். “ அவள் விவரமணிந்த கண்கள் உடையவள். விவரமறிந்த கண்கள் ஏனோ அழகைக் குறைத்து விடுகின்றன.”´இதை வாசித்ததும் என்னுள் ஒரு கோபம் எழுந்தது. ஏன் எளிதாக ஏமாற்ற முடியாது என்பதாலா? ஹைதராபாத் சமஸ்தானத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூளூம் அபாயம். இதை வாசிக்கும் போது பிரகாஷ் ராஜின் சொல்லாததும் உண்மை புத்தகத்தில் அவர் மகள் “ பம்பாயில் ஏன் வெடிகுண்டு போட்டார்கள். அங்கேயும் பார்டர் வாரா? அது இந்தியாவுக்குள்ளே தானே இருக்கிறது. “ என்று கேட்டது நினைவுக்கு வருகிறது. இந்தியாவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையேயான போர் நடக்கும் போது இந்திய கவர்னர் ஜெனரலாக சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரி இருந்திருக்கிறார். அவரும் கே. எம். முன்ஷியும் இந்தியா ஒன்றாக இணைவதற்கு உதவி இருக்கிறார்கள். நான் ரசித்த வரி1 : “ உலகமே அவன் காலடியிலிருந்து கிளம்பி எல்லாத் திசைகளிலும் சரிந்து வழிந்து போவது போலிருந்தது. ஒரு மிகப் பெரிய பலூன் மீது வரைந்த சித்திரம் போல……” நான் ரசித்த வரி2: இருட்டு ஒரு திரவம் என்று தோன்றியது. திரவமாகக் காற்றில் மிதக்கக் கூடியது என்று தோன்றியது. “ ஹ கதையின் முடிவு என்றென்றும் நம் மனதில் அழியாமல் நிற்கும் துயர சம்பவம். . இத்தகைய புத்தகங்களை வாசித்து நம் கடந்த காலங்களை புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.