Bio Data !!

17 June, 2020

"பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல தன்னம்பிக்கை"  அதி காலை நேர வாசிப்புகளில் இப்படி சில விதை நெல் கிடைக்கும். மற்ற நேரங்களிலும் இருக்குமாய் தான் இருக்கும். நம் கண்களில் படுவதில்லை.

இந்த தன்னம்பிக்கை தான் இன்று அதிக நாள் பயன்படுத்தப்படாத சுரப்பி போல பழுதடைந்து கிடக்கிறது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் கூட நடக்க கஷ்டமான ஒரு காரியத்தை சேலன்ஜ் ஆக எடுத்துக் கொண்டு நடத்தி முடிக்கும் பழக்கம் நம்மிடையே இருந்தது. பல காதல் திருமணங்கள் காதலை விட எதிர்ப்பு கூடக் கூட இருகி நடந்ததாகவே இருந்திருக்கின்றன.

"காதல் போயின் சாதல்" என்பது மறைந்து "காதல் போயின் காதல் போயின் இன்னுமொரு காதல்" என வந்தது மரணத்தை நிறுத்திய வழியில் வேண்டுமானால் நல்லதாய் இருந்திருக்கலாமே ஒழிய முயற்சியை பின்னடையச் செய்து விட்டது.

இன்று அது இன்னும் கொஞ்சம் அதிகரித்து நம் இயல்பான வாழ்க்கை முறை சிறிது மாறினாலே "எல்லாம் முடிஞ்சு போச்சு " என ஒப்பாரி வைக்கிறது. ஆதி மனிதனின் போராட்டத்தை நினைத்துப் பார்த்தால் நாம் எவ்வளவு வளர்ந்து வந்து நிற்கிறோம் என்பது தெரியும்.

அதற்குள் கடைசி மனிதனைப் பற்றி அங்கங்கே கற்பனைகள். ஒரு எழுபது வயது உள்ளவரைக் கேட்டுப் பாருங்கள் இது வரை எத்தனை உலக அழிவு செய்திகளைக் கடந்து வந்திருக்கிறார் என.இயேசுநாதரின் இரு விரல்கள் உயர்ந்திருப்பதை வைத்து உலகம் இரண்டாயிரம் ஆண்டில் அழிந்து விடும் என்றார்கள்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என் கல்லூரித்  தோழியிடம் சொன்னது " அப்போ என் பிள்ளைக்கு இருபது  வயதை நெருங்குமே. நான் என்ன செய்வேன்" இதைச் சொல்லும் போது எனக்கு திருமணமே ஆகவில்லை. இன்று அந்த மகள் நாற்பதை நெருங்கிய வயதில் தன் பிள்ளையின் வயதை எண்ணி கலங்குகிறாள். இது தான் வாழ்க்கை. இன்னும் பல ஆண்டுகள் கழித்து  என் பேரன் தன் பிள்ளையை நினைத்து கலங்குவான்.

சில டீன் ஏஜ் பிள்ளைகள் தன் பெற்றோர் இருவரும் கொரோனாவில் இறந்து போனால் நாம் என்ன ஆவோம் என கலங்குகிறார்களாம். நோயை விட நோய் வந்து விடுமோ என்ற பயம் தான் மிகப் பெரிய வியாதி.  பயம் தவிர்ப்போம். வருவதை தவிர்க்க திராணியற்ற ஒரு கட்டத்தில்,  இருப்பதை கொண்டாடுவது தானே புத்திசாலித்தனம்.

இப்பொழுது முதல் வரியையே மீண்டும் சொல்கிறேன்.
"பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல தன்னம்பிக்கை"

நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் கடப்போம். நம் அத்தனை பேரின் ஒட்டு மொத்த நம்பிக்கை இந்த உலகை மீண்டும் பூத்துக் குலுங்கச் செய்யும்.

15 June, 2020

மன அழுத்தம்.
கொஞ்சம்  நீளமான பதிவு தான். தவறாமல் படியுங்கள். இப்பொழுதோ எப்பொழுதோ உதவலாம்.

இந்த தலைப்பில் கொஞ்ச நாளாவே எழுதவா வேணாவான்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். சுஷாந்த்தின் மரணம் ரொம்பவே அசைத்து விட்டது. அங்கங்கே நாட்டாமைகளின் தீர்ப்பு வேறு.

நான் இயல்பில் தைரியமான பெண் தான். ஆண்களுடன் ஒற்றை பெண்ணாக யூனியன் மீட்டிங்கில் இருப்பதெல்லாம் கஷ்டமாவே தோணினதில்லை. அலுவலக மீட்டிங்குகளில் எப்பொழுதும் முதல் வரிசை தான். ஒரு கருத்தை எடுத்துச் சொல்ல பிறர் தயங்கினாலும் நான் குரல் கொடுப்பேன்.

எனக்கு பயம் என்றால் என்ன என்று காட்டியது டிப்ரஷன். எனக்கு காலில் ஒரு தோல் பிரச்னை இருந்தது. அதாவது பித்த வெடிப்பு போல் மேல் பாதத்தில். அலுவலகப் பணிகளில் ஸ்ட்ரெஸ் கூடும் போது அது அதிகரிக்கும். வலி உயிர் போகும். காலையில் இயல்பாக அலுவலகம் செல்வேன். இரவு வீடு திரும்பும் போது ஒரு மனவலிமையோடு காரை ஓட்டிக் கொண்டு வந்து விடுவேன்.  ஆனால் சுவரைப் பிடித்த படி தான் நடக்க முடியும்.

அப்பொழுது ஒரு மருத்துவர் ஸ்ட்ரெஸ்சுக்கு மருந்து கொடுத்தார். விடாமல் தினமும் மருந்து எடுக்க வேண்டும் என்று சொல்லித் தான் கொடுத்தார். அந்த மாத்திரை எடுத்தால் தூக்க கலக்கமாக இருக்கும். சில நாள் வேலை அதிகமாக இருக்கும் போது எடுக்க மாட்டேன். மீதி நாள் எடுப்பேன். இப்படி மாற்றி மாற்றி எடுத்ததில் டிப்ரஷனை நானே வலிய வரவழைத்துக் கொண்டேன்.

உடை உடுத்துவதில் எனக்கு அதிக ஆர்வம். திடீரென எனக்கு உடைகளைக் கண்டாலே வெறுப்பானது. எதற்கு இத்தனை எடுத்து வைத்திருக்கிறோம் என்று என் மேலேயே கோபம் வந்தது. புத்தகங்கள் படிப்பது உயிர் மூச்சு. ஆனால் ஒரு பக்கம் கூட தொடர்ச்சியாக படிக்க முடியாமல் போனது. இவை ஆரம்ப கால சிம்ப்டம்ஸ். என் தோழி இதைச் சொல்லும் போதே நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் திடீர்னு பிடிக்காம போனால் அது டிப்ரஷனின் சிம்ப்டம் ஆச்சே என்றாள். நான் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

நாளாக நாளாக நான் அது வரை அறிந்திராத பயம் என்னை ஆட்டியது. காலையில் எழுந்ததுமே மனதுக்குள் ஒரு படபடப்பு. எந்த வேலையிலும் ஈடுபாடு இன்மை. மீட்டிங்குகளில் கடைசி வரிசை. எனது கருத்துகளை அழுத்தம் திருத்தமாக எடுத்து வைப்பவள் குழப்பவாதி ஆனேன். இப்ப இந்த வேலை செய்யலாம்னு சொல்றீங்களா செய்யக் கூடாதுன்னு சொல்றீங்களான்னு மேலதிகாரி ஒரு முறை கேட்டார். அந்த அளவுக்கு பட்டி மன்றம் நடத்தி இருக்கிறேன்.

யோசித்து பார்த்தேன். நாம் இனி வேலையில் இருப்பது சரியில்லை என முடிவெடுத்தேன். அப்போது வரைக்கும் மாத்திரைகளை எடுப்பதும் விடுப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது காரணம் அது தான் என்று அறியாமலே. பல நல்ல உள்ளங்கள் நல்ல ஒரு வேலைக்காரியை இழக்க விரும்பாமல் லாங் லீவில் போய் சரி செய்து கூட வரச் சொன்னார்கள். எனக்கு ஓய்வு பெற  நான்கு ஆண்டுகள் இருந்தன. ஆனால் போதும் என்று முடிவெடுத்து ஓய்வு பெற்றேன். கடைசி நாள் அன்று கூட நான்  விண்ணப்பத்தை வாபஸ் பெற்று விடுவேன் என்று எதிர்பார்த்தார்கள். அந்த அளவுக்கு நான் வொர்க்கஹாலிக்.

ஆனால் ஒன்று ஒருவருக்கு டிப்ரஷன் வந்து விட்டால் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் தானே தனியாய் அதிலிருந்து வெளியேற முடியாது. ஆரம்ப காலங்களில் வேணுமானால் பிரார்த்தனை , கவுன்சிலிங், யோகா போன்றவை உதவலாம். குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததால் என்னால் வெளியேற முடிந்தது. என் மகள் சொல்வாள் " அம்மா நம் குடும்பத்தினரின் ஆணி வேர் நீ. நீ இவ்வளவு கலங்கி எங்களிடம் பேசினால் எங்கள் ஒருவராலும் வேலை செய்ய முடியவில்லை. தைரியமா இரும்மா" என்பாள்.

நரக நேரமது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது. என் கணவர். அவ்வளவு ஆதரவு. கடைசியில் ரிடயர்ட்மென்ட்டுக்கு ஒரு மாதம் முன்பு லீவு எடுத்து இருந்தேன். கிட்டத்தட்ட 35ஆண்டுகள் உடம்பு சரியில்லை என்று கூட ஒரு நாளும் சமைக்காமல் இருந்ததில்லை. ஆனால் அந்த ஒரு மாதமும் ஹோட்டல் சாப்பாடு தான். வி.ஆர்.எஸ் ஃபார்ம் நிரப்ப கான்சன்டிரேஷனே கிடைக்க மாட்டேங்குது. அழுதேன். இனம் புரியாத பயம்.

ஒரு வெளியூர் தோழியிடம் இந்த நிலைமைப் பற்றி சொன்னேன். அவள் என் மகளிடம் உடனே போனில் பேசி இருக்கிறாள். "எனக்கு உங்க அம்மாவை சிறு பிள்ளையிலிருந்து தெரியும். அவள் இயல்பு இது இல்லை. உடனடியாக டாக்டரிடம் கூட்டுச் செல்லுங்கள்" என்று அவள் மகளைப் பற்றி சொல்லி இருக்கிறார். மகள் தஞ்சையில் மன நல மருத்துவர்.

டிரீட்மென்ட் எடுத்துக் கொண்டேன். சிலர் மன நலத்துக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் வாழ்நாள் முழுதும் அவசியப்படும் என்பார்கள். இல்லை இரண்டு ஆண்டுகளில் நிறுத்தி விட்டார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரே விஷயம்  மருந்துகளின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்தினார்கள்.

1  மன நல பாதிப்பு பல காரணங்களால் வரலாம். அதைப் பைத்தியம் என்று முடிவு பண்ணுவதும் விமர்சிப்பதும் மஹா தவறு. மூளை ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் போல. யாருக்கும் எந்த நேரமும் அதன் செயல்பாடு சிக்கலுக்குள்ளாகலாம்.

2 எவ்வளவு தைரியம் மிகுந்தவராய் இருந்தாலும் குடும்பத்தினர் உதவினால் ஒழிய அவர்கள் அதிலிருந்து வெளியே வர முடியாது.

3 மருத்துவர்  தரும் மருந்துகளை  நாமாக அதிகப்படுத்துவதோ குறைப்பதோ கூடாது.

4 இந்த பாதிப்பு பயத்தை உண்டாக்குவது போல அதிக கோபத்தையும் உண்டாக்கலாம். இந்த நேரங்களில் இவர்கள் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தமில்லை.

5 கொண்டாட்டங்கள் அற்ற வாழ்க்கை, வேலை பறிப்பு, பழகி இராத வறுமை, தவறான மருந்து , பரம்பரை ஜீன் என மன உளைச்சல் வர காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஏதென்று ஆராயாமல் உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள். மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

இவை எல்லாம் ஒரு பாதிக்கப்பட்டவரே சொல்லும் போது நம்பிக்கை வரும். அதனால் சொல்ல முடிவெடுத்தேன்.

இப்பொழுது தான் உலகமே உள்ளங்கையில் இருக்கிறதே . அத்தனை பேருமே உடன் இருப்பவர் தான். உயிர்கள் அத்தனை மலிவானவையல்ல. எத்தனையோ கண்டு பிடித்தாலும் இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது உயிரைப் படைப்பது ஒன்று தான்.

நம்பிக்கையோடிருந்து பிறருக்கு நம்பிக்கை ஊட்டுவோம்.

11 June, 2020


 "ஊதா நிற உப்பு பொம்மைகள்" எழுதியவர் கார்த்திகேயன் செங்கமலை. புத்கத்தின் பெயரே கவித்துவமாய் இருக்கிறதல்லவா? 

இதில் இரண்டு கதைகள். ஒன்று " ஊதா நிற உப்பு பொம்மைகள்" மிகச் சிறப்பான கதை. குடும்ப பாரம் உள் நாட்டில் பணி புரிந்து குறைக்க முடியாது என்பதால் வெளி நாட்டில் சென்று பணி புரியும் ஒருவன் காலின் மேல் ஒரு வண்டி ஏறி விடுகிறது. வண்டியின் சொந்தக்காரன் இழப்பீடு மருத்துவ செலவும் கொடுத்தும் அது இவனை வந்து சேரவில்லை. இடைத்தரகரான ஒரு மலையாளி அதை ஸ்வாகா பண்ண நினைக்கும் போது அங்குள்ள ஒருவரின் துணையோடு அதை பெறுகிறான். வெளிநாட்டில் உழைத்தது போதும் எனத் திரும்பி வரும் போது இவனைப் போலவே வேறொருவன் நம்பிக்கையோடு விமானம் ஏறுகிறான். 


இரண்டாவது " பச்சை நிற முத்துக்கள்" குமரப்பன் ஒரு டெல்டா மாவட்ட தென்னை விவசாயி. இரண்டு ஏக்கர் நிலத்தில் 90 தென்னை மரங்களை வைத்து வரும் வருமானத்தில் தன் மகனை பொறியியல் படிக்க வைத்து மென் பொருள் நிறுவனத்தில் வேலையிலும் அமர்த்தி விட்டார்.

கஜா புயலின் தாக்கத்தால் மொத்தமும் பறி போனதில் மனம் உடைந்து மகன் வீட்டில் வந்து இருக்கிறார். செம்பியன் தன் குடும்பத்தோடு இவர் தென்னந் தோப்பில் ஒரு குடிசையில் தங்கி வேலைகளைப் பார்த்து வருகிறான். செம்பியன் மகள் அறிவுக்கரசி. குமரப்பனுக்கு தென்னை அழிந்ததை விட அறிவுக்கரசி மீது தென்னை விழுந்து அவள் தலை நசுங்கி இறந்ததைத் தான் தாங்க முடியவில்லை. 

செம்பியன் தான் சேர்த்து வைத்திருந்த 2இலட்சம் பணத்தை குமரப்பனிடம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சொல்கிறான். 

குமரப்பன் மகன் கதிரவன் தன் கைப்பேசியில் தான் உருவாக்கிய செயலியைத் திறந்து கஜா புயலுக்கு இது வரை வந்த நன்கொடை எவ்வளவு எனப் பார்ப்பதாக கதை முடிகிறது.