Bio Data !!

24 June, 2015

எல்லோரும் நலம் தானே !!
ரொம்ப  நாள்,  ஏன் வருடங்களே ஆகி விட்டன பதிவு எழுதி .
வேலைப் பளு இந்த பக்கமே வர விடலை .

ப்ளாக் திறந்து பார்க்க முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணத்தோடு தான் வந்தேன் .நல்ல வேளை உயிர் இருந்தது.

நான் இப்போது மாரி செல்வராஜின்  "மறக்கவே நினைக்கிறேன் " படித்தேன் ஏற்கனவே  விகடனில் படித்திருந்தாலும் மொத்தமாக படிக்கும் போது பல பலா சுளைகளை உள்ளடக்கிய ஒரு பலாப் பழம் போல் உள்ளது.

மாரி  டைரியில் எழுதிய முதல் வரி " முதலில் சென்னைக்கு தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்ளுதல் . பின் சென்னையை எனதாக்கிக் கொள்ளுதல் "

இது புதிதாக திருமணம் புரிந்தவர்களுக்கும் பொருந்தும்.
" முதலில் கணவன் (மனைவி) க்கு தகுந்தவர்களாக தன்னை மாற்றிக் கொள்ளுதல் பின் அதன் மூலம் கணவனை தனதாக்கிக் கொள்ளுதல் "

"ஆதியாகமம் " ஒரு பூனைக்குட்டி பற்றிய கட்டுரை. இறுதியில் அது இருப்பது தெரியாமல் மேலே நெல்லைக் கொட்டி அவிப்பதாய் வரும் போது இருதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

"இறையாண்மை " மதப் பிரிவு பார்க்காமல் பழகும் இரு நண்பர்களிடையே இருக்கும் நட்பு எப்படி  நொறுங்கிப் போகிறது என்பதை விளக்குகிறது.

"தேர்வு " பாசாகி விட்டேன் என்று தெரிந்ததும் அடித்து உடைத்து உள்ளே வைத்திருந்த கொம்புகளின் குருத்துகள் படக்கென்று மண்டையின் மேல் முளைத்து விட்டதை போல் இருந்தது எனக்கு.  அருமையான வார்த்தை கோர்வை.

"பெண்  தெய்வங்கள் "  "மகன்கள்"  என ஒவ்வொன்றும் பலாச்சுளை தான் . எதை சொல்ல. எதை விட.

கட்டுரையை முடிக்கும் போது எழுதுகிறார்."எல்லாவற்றிக்கும் மேலாக "உங்களிடம் ஒரு உண்மையை சொல்லி விட்டு விடை பெறலாம் என்று நினைக்கிறேன் . ஏனெனில் என்னளவில் "நான் " என்பது கண்டிப்பாக நீங்கள் நினைத்துக் கொண்டு இருப்பது அல்லவே. ஆனாலும் நீங்கள் இத்தனை நாளாக செவி மடுத்த உங்களுக்கு பிரியமான குரலை நீங்கள் பத்திரப் படுத்திக் கொள்ளவே அதே குரலில் சத்தம் போட்டு சொல்கிறேன்" என்னும் போது நான் புரிந்து கொண்டது , தான் பார்த்த அனைத்து மனிதர்களையும் "நான்" என்றே எழுதியதாய் நான் புரிந்து கொண்டேன். அது  சரி என்று முடிக்கும் போது  அழுத்திய  ஒரு கவிதை சொல்லிற்று..

" சிலுவையில் அறையப்பட்டவன் என்பதற்காக
என்னை கர்த்தராக நினைத்து நீங்கள் காதலித்திருந்தால்
கவிதை எழுதிஇருந்தால்
கண்ணீர் வடித்திருந்தால்,
மூன்றாம் நாள்
உயிர்த்தெளுவானென்று
காத்திருந்தால்
எதற்கும்
நான் பொறுப்பில்லை .

ஏனெனில் அந்தக்
கர்த்தருக்குப்  பக்கத்தில்
எந்தப் பிரார்த்தனையுமின்றி
அறையப்பட்ட
இரண்டு திருடர்களில் ஒருவனாகக் கூட
நானிருக்கலாம்."

அற்புதமான புத்தகம்.