23 December, 2022
19 December, 2022
08 December, 2022
அவன் # கதை திறனாய்வு.
05 December, 2022
மெல்ல விலகும் பனித்திரை. # புத்தக விமர்சனம்.
01 December, 2022
25 October, 2022
படத்தின் பெயர் : ஒரு தெக்கன் தள்ளு கேஸ்
மொழி : மலையாளம்.
இயக்குநர் : ஸ்ரீஜித்
முக்கிய கதாபாத்திரத்தில் : பிஜு மேனன், பத்மப்ரியா, நிமிஷா, ரோஷன் மாத்யூ.
படம் நெட் ப்ளிக்ஸில்.
ஏ.ஆர் இந்துகோபாலன் அவர்கள் எழுதிய "அம்மணி பிள்ளை வீட்டு கேஸ்" என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.
ஒரு அழகான கடலோர கிராமம். அங்கு மீன் பிடித்தல் முக்கிய தொழில். ஓங்கி உயர்ந்த ஒரு கலங்கரை விளக்கம். அதில் பணி புரியும் அம்மிணி அண்ணன் தான் கதாநாயகன். அம்மிணியாக பிஜு. அழகன். கதாபாத்திரத்துக்கு கச்சிதமானவன். நெடிதுயர்ந்த கலங்கரை விளக்கத்தில் பணி புரிவதால் அந்த கிராமத்தில் அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்க முடியாது.
அவர் மனைவி பத்ம ப்ரியா. கடலின் ஆழத்துக்கு நிகர் நிற்கும் கண்கள். அதில் காதலும் பாசமும் போட்டி போட்டு வழிகின்றன் அம்மிணியின் உறவுப் பெண் வசந்தி(நிமிஷா) அவளைக் காதலிப்பவன் பொடியன் (ரோஷன்) இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து விட்ட அம்மிணி அடிக்க விரட்டும் போது பொடியனும் அவன் நண்பர்களும் அவரை நன்கு அடித்து விடுகிறார்கள்.
ஒவ்வொருவராய் ஊருக்கு முன் அடித்து பழி தீர்ப்பது தான் கதை. டொப் டொப் னு பொட்டு வெடி சுட்டு பழி வாங்குவதை விட இது மிகவும் நன்றாக இருக்கிறது. அதை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.
இரண்டு மணி நேரம் ஒரு கிராமத்நில் இருந்து வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது.
பார்க்கலாம்.
20 October, 2022
டிரெயின்ல தள்ளி விட்டானே அந்த சத்யா பொண்ணோட அம்மா பேசுற ஒரு வீடியோ பார்த்தேன். பரிதாபம். அந்த அம்மாஒரு நோயாளி. ஒரே சமயத்தில் கணவனையும் இழந்து மகளையும் இழந்து பரிதவிக்கிறார்கள். இந்த மீடியா காரங்க ஆளு மாத்தி ஆளு போய் மைக்க நீட்டறாங்க. அந்த அம்மா ஒன்றிரண்டு கேள்விகள் மண்டையில நச்னு அடிச்ச மாதிரி கேட்டாங்க.
1 என் மகள் இறந்து போயிட்டானு ஆளு மாத்தி ஆளு என்னை வந்து கேட்கிறீங்களே அந்த பையன் வீட்டில் இருப்பவர்களிடம் இப்படிப் பண்ணிட்டானே நியாயமான்னு யாராவது போய் கேட்டீங்களா? அந்த குடும்பத்து ஆட்களை வெளி உலகத்துக்கு ஏன் காட்டலைங்கிற அந்த தாயின் கேள்வி நியாயமாத் தான் தெரியுது.
2. என் மகளைப் பற்றி தப்புத் தப்பா போட்டு பார்வையாளர்களை அதிகரிச்சு சம்பாதிக்கிறீங்களே அப்படியாவது கிடைக்கிற அந்த பணம் உங்களுக்கு அவசியமா?
3. என் பெண் அந்த பையன் தொந்தரவு பண்றதா சொன்னதும் போலீஸ்ல புகார் கொடுத்தேன். அவன் குடும்பத்து ஆட்கள் புகாரை வாபஸ் வாங்கி விடுங்கள் அவனை வெளி நாடு அனுப்பிடுறோம்னு கெஞ்சி கேட்டுக் கொண்டதால் வாபஸ் வாங்கினேன். வாங்காதிருந்தால் அவன் இந்நேரம் உள்ளே இருந்திருப்பான் என் மகள் உயிரோடு இருந்திருப்பாளே?! அப்போ இரக்கப்பட்டதல்லவா தப்பாக போய் விட்டது.
இது ஒரு முறையல்ல. சித்ரா இறந்த போதும் இதே தான் நடந்தது. இன்னும் ஒரு பெண் இறந்தாலும் இதே தான் நடக்கும்.
இறந்தவர்களின் குடும்பத்து ஆட்களை நிம்மதியாக துக்கம் அனுஷ்டிக்க விட வேண்டாமா? இறப்பே பெரும் சோகம். அதை மேலும் குத்திக் கிளற வேண்டாமே!
19 October, 2022
பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் :
18 October, 2022
சில பெண்களுக்கு ஒரு பழக்கமுண்டு நான் கவனித்திருக்கிறேன். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை வந்தால் எப்போதுமே குற்றத்தை மனைவி பக்கமே சுமத்துவது.
(உ.ம்) ஆக ஒரு பெண் ரொம்ப அமைதியா யாரிடமும் அதிகம் பேசாதவளாக இருந்தால் அவள் கணவன் செய்யும் தவறுகளுக்கு காரணம். "பொண்ணுன்னா கலகலப்பா இருக்கணும். இப்படி உம்மணாமூஞ்சி மாதிரி இருந்தா இப்படி தப்பெல்லாம் நடக்கத் தான் செய்யும் " னு சொல்வாங்க.
இதுவே பெண் கலகலப்பா பேசுறவளா இருந்தா அதை ஒரு குற்றமா சொல்வாங்க. மொத்தத்தில ஆண் செய்யும் தவறுகளுக்கு பெண் மட்டுமே காரணம் எனக் கொண்டு வருவாங்க.இதைச் சொல்வது அனேகமா பெண்கள் தான்.
ஆண்களும் மனிதர்கள் தானே. தவறு செய்வது இயல்பு தானே! இதில் ஒரு சைக்காலஜி கவனிக்கணும். அவங்க சொல்ல வர்ரது என்னன்னா "அந்த இடத்தில் நான் இருந்திருந்தா இந்த தப்பு நடந்திருக்காதுன்னு தன்னை உயர்வு படுத்தறதுக்காக பெண்ணை குற்றப்படுத்துறாங்க.
அதை சம்பந்தப்பட்டவங்களிடமே சொல்றாங்க. இது எது வரை நடக்கும்னா சொல்பவர் வீட்டில் ஒரு பிரச்னை வந்து அது கை மீறிப் போய் தன்னால் சமாளிக்க முடியாமல் போகும் வரை நடக்கும். முதல்ல அடுத்தவர் வீட்டுப் பிரச்னையில் கருத்து சொல்வதை விடணும். அப்படியே சொன்னாலும் அது நேர்மையான கருத்தாய் இருக்கணும். என்ன நாஞ் சொல்றது?
13 October, 2022
Netflix இல் "The Holiday " னு ஒரு அற்புதமான படம் பார்த்தேன். டைரக்ஷன் : Nancy Meyars.
ஒரு பெண் இயக்குநர் என்பதால் பெண்ணின் உணர்வுகளை மிக நன்றாக காட்டி இருக்கிறார்.
வாழ்வில் ஏமாற்றத்தை சந்தித்த இரண்டு பெண்கள். ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லிக் கொண்டே இன்னொரு பெண்ணை மணக்கத் தயாராகும் ஒருவன். ஒரு பார்ட்டியில் தன் காதலனின் திருமண செய்தி கேட்டு அதிர்ந்து போகிறாள். அதற்கு கொஞ்ச நேரம் முன்பு கூட அவளிடம் தன் காதலை சொல்லி போனவன். அவள் பெயர் ஐரிஸ். நமக்கு ரொம்ப அறிமுகமான டைட்டானிக் பட ஹீரோயின் கேத் வின்ஸ்லட் தான் ஐரிஸாக நடிக்கிறார்.
மற்றொரு பெண் தன் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அவனுடன் சண்டை இட்டு வீட்டை விட்டு விரட்டுகிறாள். அவள் பெயர் அமென்டா. ஐரிஸ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அமென்டா பெரும் பணக்காரி.
துயரத்தில் இருக்கும் இருவரும் கிறிஸ்மஸ் விடுமுறையை வேறு இடத்தில் கழிக்க முடிவு செய்து இன்டர்நெட் மூலம் சந்தித்து அவர்கள் வீடுகளை ஸ்வாப் செய்து கொள்கிறார்கள். அதாவது இரண்டு வாரம் ஒருவர் வீட்டில் அடுத்தவர் இருப்பது.
அமென்டாவை ஐரிஸின் சகோதரன் சந்திக்கிறான். அன்பு செய்கிறான். ஐரிஸ் வீட்டின் பக்கத்தில் ஒரு முதியவர் பல ஆண்டுகளுக்கு முன் பிரபல இயக்குநர். முதுமையின் கோளாறுகளால் தனிமையில் வாடுபவர். அவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது.
இறுதியில் படம் சுபமாக முடிகிறது. ஆங்கில படங்களில் பெண்கள் அழுது அவ்வளவாக பார்த்ததில்லை. இந்த படத்தில் பெண்ணோடு சேர்ந்து ஆணும் கண் வேர்க்கிறான்.
பின்னணியில் பனி படர்ந்த காட்சிகள் கண்ணுக்கு வெகு குளுமை.
ஐரிஸ் அமென்டாவுடனும் தன் அண்ணனுடனும் பேசும் போது ஒருவரை ஒருவர் ஹோல்ட் செய்து அடுத்தவருடன் பேசுகிறார். அதான் கான் கால் போடலாமே என நினைத்து வந்தால் ஒரு கடையில் படங்களின் CD பார்க்கிறார்கள். அதில் ஒன்று JAWS படம். சரி தான் எப்ப வந்த படம்னு போய் பார்த்தால் 2006 இல் வெளியான படம்.
பெண்கள் உலகில் எல்லா பகுதியிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் போலிருக்கிறது. அதீத காதல் அது முறியும் போது அதீத வெறுப்பு. இரண்டுக்கும் நடுவில் உணர்வை நிறுத்த தெரிந்தால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
26 September, 2022
"அதுவும் நானும்"
இந்த தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது எங்க அப்பாவோட கைக்கடிகாரம். வட்டமா எண்கள் பெரிது பெரிதாய் பட்டையாய் தங்க ஸ்டிராப் இணைத்த கைக்கடிகாரம். அப்பாவுக்கு நகைகள் மேல் கொஞ்சம் ஆசை அதிகம் தான். அப்போ தெரியல. இப்போ நினைச்சு பார்த்தா அப்படித் தான் தோணுது. கழுத்தில் பெரிய தங்க சங்கிலி போட்டிருப்பார். அதன் டாலர் இப்போதுள்ள பத்து ரூபா நாணயத்தை விட கொஞ்சம் பெரிதாய். இன்னும் சரியாய் சொன்னால் ஒரு மஞ்சள் சரிகைத் தாளை இரண்டாய் பிளந்தால் உள்ளே சாக்லெட் இருக்குமே அது போல் இருக்கும். அது சரியாய் வந்து அவர் தொப்புளை மறைக்கும். சின்ன பெண் குழந்தைகளுக்கு அருணா கயிற்றில் ஒரு வெள்ளி இலை போட்டிருப்பாங்களே அது போல.
விரல்கள் இரண்டில் பெரிதாய் மோதிரம் போட்டிருப்பார். ஒரு மோதிரம் பெரிய சங்கு வடிவில் மேலே ப்ளூ எனாமலில் ரத்தினம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது என் கையில் இல்லை. எப்பவாவது படம் போடுறேன். இன்னொரு மோதிரம் டைமண்ட் ஷேப்பில் டார்க் ப்ளூ கல் வைத்து சுற்றி வெள்ளை கல் பதித்திருக்கும்.
இந்த மூணு பொருளுமே அம்மாவிடம் அப்பா ஞாபகமாய் எனக்கு வேணும்னு வாங்கி வைத்திருந்தேன். வாட்ச் மட்டும் ஸ்டிராப் இல்லாமல். எவ்வளவு ரசித்து ரசித்து நகைகளை செய்திருக்கிறாங்க. செய்யுமிடம் கூட நல்லா ஞாபகம் இருக்குது. சிவன் கோவில் அருகிலுள்ள தேருக்கு எதிரே போகும் தெருவில் ஒரு ஆசாரி இருந்தார். அங்கே போவோம். ஆமா சின்ன பிள்ளையா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போவாங்க. லேசா தான் ஞாபகம் இருக்கு. ஒரு பெரிய மண் பாத்திரத்தில் தவிடு மாதிரி ஏதோ போட்டு சூடு பண்ணி அதில் தங்கத்தை உருக்கி செம்பு சேர்ப்பாங்க. அதன் பின் நாங்க வீட்டுக்கு வந்திடுவோம். கேட்ட நகைகளை செஞ்சு வீட்டுக்கு வந்து கொடுத்திடுவார்.
அதே பழக்கத்துக்கு நானும் பெரிய மகள் திருமணம் வரை ஆசாரி மூலம் தான் நகைகள் செய்தேன். சின்ன மகளுக்கு வரும் போது 916 வந்திட்டுது. அதில் பெரிய மகளுக்கு ரொம்ப ஆதங்கம். பின் அவள் நகைகளையும் 916 ஆக மாற்றிக் கொடுத்தேன்.
மெயின் கதைக்கு வருவோம். அந்த தங்க ஸ்டிராப் போட்ட வாட்ச் ஒரு முறை அப்பா மார்க்கெட்டில் காய் வாங்கும் போது தவறி விழுந்து எடுத்தவர்கள் வாட்ச் ரொம்ப பழசா இருந்ததால தங்கம்னு தெரியாம திருப்பிக் கொடுத்தது ஒரு கிளைக் கதை.அதற்கு செல் கிடையாது. சின்ன திருக்கு தான். எப்போ திருகினாலும் ஓடும். அந்த ஸ்டிராப் இல்லாத வாட்ச்சை என் நகைகளோட வைத்திருந்தேன். ஒரு சென்டிமென்டல் அட்டாச்மென்ட். எப்படி தொலைந்தது. நகைகளை எடுக்காமல் அந்த பழைய வாட்ச்சை யார் எடுத்தார்கள். அது புரியாத புதிர். காணாமலே போயிட்டுது.
அப்பாவுடைய ரெண்டு மோதிரங்களையும் ரெண்டு பேரன்கள் வளர்ந்ததும் கொடுக்கணும்னு வச்சிருக்கிறேன். பெரிய பணக்கார வீட்டில மட்டும் தான் பரம்பரை நகை இருக்கணுமா? நாமளும் வச்சிருப்போமே! 😀
நேற்று ஒரு அற்புதமான அனுபவம். "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் " குழுவில் எழுத்தாளர் வைத்தீஸ்வரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்வில் மாலன் அவர்கள் வைத்தீஸ்வரன் அவர்களின் கதைகளைப் பற்றி பேசினார். வாய்ப்பு கிடைத்தது கலந்து கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மிகப் பயனுள்ளதாக கழிந்தது.
இவரைப் பற்றி தெரிந்து கொள்ள கூகிளில் தேடிய போது இவருடைய மிக அருமையான கவிதை ஒன்று கையிலகப்பட்டது. இதோ!! "கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு. நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு. மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு. நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு.” எத்தனையோ புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். பலராலும் புகழப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்களே முன்னுரிமை பெறுகின்றன. நன்றாக எழுதும் ஆனால் மிகப் பெரிய கவனிப்பு பெறாத எத்தனை எழுத்துகள் நம் கண் தப்பி இருக்கின்றனவோ எனத் தோன்றியது நிஜம். எனது லிஸ்ட்டில் இவருடைய புத்தகங்களை இணைத்து விட்டேன். அவமானமாக இருக்கிறது கிட்டத்தட்ட அவர் வயது தொண்ணூறை நெருங்கும் வரை ஒருவரை இவ்வளவு காலம் அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என. இனி மாலன் அவர்களின் உரையிலிருந்து: தமிழர்கள் வாங்கி வந்த வரம் எத்தனை திறமைகள் இருந்தாலும் ஒரு சின்ன சிமிழுக்குள் அடைப்பது. ஒருவர் பல திறமைகள் கொண்டவராய் இருந்தாலும் அவற்றுள் ஒன்றில் அவரை முன்னிலைப்படுத்தி விடுவதால் மற்றவை தெரியாமல் போய் விடுகின்றன என்றார். வைத்தீஸ்வரன் அவர்கள் தொல்லியல் படிப்பை பரோடாவில் படித்தார். கவிதைகள் அதிகம் எழுதி உள்ள வைத்தீஸ்வரனின் சிறு கதைத் தொகுப்பு கால் முளைத்த மனம் . 12 சிறு கதைகள். "ஒரு கொத்துப் புல்" 26 சிறு கதைகளின் தொகுப்பு. கிட்டத்தட்ட 50 கதைகள் எழுதி இருக்கிறார் ஏறத்தாழ 15 ஆவது வயதில் எழுத தொடங்கினார். கவிதைகள் எழுத தொடங்கி தாமதமாகத் தான் கதைகள் எழுத தொடங்கினார். .எழுத்தாளர்களின் மனதில் பொதுவாக காலம் உறைந்து விடும். இதற்கு விதி விலக்கு வைத்தீஸ்வரன் என்றார். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த பல எழுத்தாளர்கள் அதைப் பற்றி எழுதாமல் இருந்த காலத்திலும் இவர் "கொடியின் துயரம்" என்ற சிறுகதை சுதந்திர போராட்டத்தைப் பற்றி எழுதி உள்ளார். சுதந்திரம் வந்த போது வைத்தீஸ்வரனுக்கு 12 வயது. (நேற்றைய தொடர்ச்சி. படிக்கலைன்னா அதை வாசிச்சிட்டு இதை வாசிங்க) "கசங்கிய காகிதம் "என்னும் ஒரு அருமையான கதையை விவரித்தார் மாலன். இவர் எழுதியதில் ஆகச் சிறந்த கதை "மலைகள்" என்றார்.இது சுற்றுச்சூழலைப் பற்றிய கதை. கவிதையை விட்டு வெளியே வர முடியவில்லை என்பதை காட்டும் கதை. கதையின் பல வரிகள் நான்காக மடக்கி எழுதினால் மிகச் சிறந்த புதுக் கவிதை ஆகி இருக்கும் என்றார். அவர் எழுதிய காலத்தில் மரபுக் கவிதைகள் உயர்ந்தோங்கி நின்றன. அதிகம் பேசப்படாத ஆனால் பேசப்பட வேண்டிய கதைகள் வைத்தீஸ்வரன் அவர்களின் கதைகள் என்றார். மாலன் அவர்களிடமோ வைத்தீஸ்வரன் அவர்களிடமோ நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன போது வாய்ப்பை தவற விடாமல் நான் மாலன் அவர்களிடம் பேசினேன். என் எழுத்தை அங்கீகரித்த முதல் மனிதர் அல்லவா. அவர் இந்தியா டுடேயின் ஆசிரியராக இருந்த போது கிரிக்கெட் பற்றி நான் எழுதிய கடிதம் 100₹ பரிசு பெற்ற விவரத்தை சொன்னேன். அதன் பிறகு தான் நான் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதாக நினைத்த என் கணவர் உருப்படியாக நான் ஏதோ எழுதுகிறேன் என்று ஏற்றுக் கொண்டார் என்றேன். சிரித்தார். மற்றொரு விஷயத்தை சொன்னார். பெண்களுக்கு அரசியல் விளையாட்டு போன்றவை தெரியாது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தமிழ் இந்தியா டுடே மூலம் பெண்கள் அவர்கள் உலக அறிவை வளர்த்துக் கொண்டார்கள் என்றார். உண்மை தான். அதன் பின் திரு. வைத்தீஸ்வரன் அவர்கள் முழுமையாக கற்பனையாக எனக்கு எழுத வராது.வாழ்வில் நான் சந்தித்த பார்த்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு தான் கதை எழுதுவேன் என்றார். இந்த நிகழ்வை பிறந்த நாள் பரிசாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.சார்வாகன் அவர்கள் இவரிடம் "வந்து பார்த்திடுங்க. அடுத்த வாரம் இருக்க மாட்டேன் என்றாராம். போய் பார்த்து வந்திருக்கிறார். மறு வாரம் சொன்னது போலவே அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். பார்த்த போது சொல்லி இருந்தாராம் " என் மனைவி இறந்தது, கூடவே இருந்தாலும் எனக்குத் தெரியாது. உறங்குகிறார்கள் என்று நினைத்து இருந்திருக்கிறார். இரண்டு பேரும் டாக்டர். ஒரு அவையில் பேசிக் கொண்டிருத்தவர்க்கு போன் மூலம் தான் இறந்த செய்தி சொல்லப்பட்டதாம். இதை கதையாக எழுதினாராம் வைத்தீஸ்வரன் அவர்கள். ஆனால் முடிவை இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபடி மாற்றி எழுதினாராம். நானும் இதே போல் ஒரு செய்தி கேள்விப்பட்டு இருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் காலையில் மனைவி தூங்குகிறாள் என நினைத்து பேப்பர் படித்து வாக்கிங் போய் வந்து ரொம்ப நேரம் கழித்து தான் மனைவி இறந்த விஷயமே தெரிந்ததாம். வழக்கத்துக்கு மாறாய் எது நடந்தாலும் அதை உத்தேசமாய் எடுத்துக் கொள்ளாமல் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை காப்பாற்ற கூட முடியலாம். வாழ்க இணையம். வாழ்க "வாசிப்போம் தபிழ் இலக்கியம் வளர்ப்போம்" குழு
19 September, 2022
04 July, 2022
29 May, 2022
நான் பல விஷயங்களை நான் வாசித்தவற்றை நான் பார்த்தவற்றை என் பேரனுடனான என் சந்தோஷங்களை இன்னும் எனக்கே எனக்கான சில விஷயங்களைத் தவிர அனைத்தையும் உங்களுடன் தான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்ன சொல்வீர்கள் என்ற அச்சமோ என்னைத் தீர்ப்பிடுவீர்கள் என்ற பயமோ இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அந்த நெருப்பாற்றையும் கடந்து தான் பயணித்திருக்கிறேன்.
சரி சரி விஷயத்துக்கு வாரேன். திரு நங்கைகள் நாம் புரிந்து கொள்ளாத கதாபாத்திரங்களாகவே நம் வாழ்வில் இருந்திருக்கிறார்கள். எனக்கும் அப்படியே. அண்மையில் தான் ஜெர்மனி வாழ் திருநங்கை ஒருவரின் யூட்யூப் சானல் பார்க்க நேர்ந்தது. அந்த பதிவு அவரின் அறிவை ஒளியூட்டிக் காட்டியது.
அதிலிருந்து அவரது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் பார்க்கிறேன். வழக்கமாக டீன் ஏஜ் என்பது சந்தோஷங்கள் நிறைந்தது. என்னைப் போல் காதல் என்னும் சாகரத்தில் வலியப் போய் குதித்து வலிகளை இழுத்துக் கொண்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் அது வஸந்த காலம்.
ஆனால் அந்த வயதில் தான் அனேக திருநங்கையர் தாம் திருநங்கை என்பதை உணரத் தொடங்குகிறார்கள். அந்த குத்தீட்டி அவர்களைக் குற்றுயிரும் கொலை உயிருமாக ஆக்குகிறது. அனேகம் பேர் குடும்பத்தை பிரிகிறார்கள். குடும்பம் ஆதரவளிக்க மறுக்கிறது. ஆனால் நான் பார்த்த இவரோ தாயின் முழு அரவணைப்பில் வளர்ந்து படித்து உயர் நிலைக்கு வந்திருக்கிறார். மெடிக்கல் துறையில் பணி புரியும் இவர் இந்த கொரோனா காலத்தில் சமுதாயத்துக்கு தன் பங்கினையும் அளித்திருக்கிறார்.
அவர் இன்று யூட்யூபில் சொன்ன ஒரு விஷயம் தான் இந்த பதிவின் நோக்கம். " உங்கள் குழந்தை திரு நங்கை என்று அறிந்த நொடி உதறித் தள்ள நினைக்காதீர்கள். நோயிலும் போரிலும் விபத்திலும் குழந்தைகளைப் பறி கொடுத்து அவர்களின் போட்டோக்களோடு பேசிக் கொண்டிருக்கும் பெற்றவர்களைப் பாருங்கள். உங்களுக்கு உயிரும் சதையுமாய் ஒரு குழந்தை இருக்கிறது. பிறர் என்ன சொல்வார்களோ என்ற கவலையில் அந்த குழந்தைகளை உதறித் தள்ளாதீர்கள். அது அவர்கள் தவறல்ல. "
பெற்ற அவர்களே உதறும் போது தான் வாழ வழி அறியாமல் பல தவறான வழியைத் தேடுகிறார்கள். ஏற்கனவே படைப்பின் மேல் கோபத்தோடு தான் இருப்பார்கள். குடும்பம் ஆதரித்து வளர்த்து அவர்களுக்கான திறமையில் அவர்கள் ஜொலிக்க அனுமதிக்க வேண்டும். எல்லோரும் இணைந்து வாழ்வதற்கானது தான் இந்த பூமி. அதை ஒரு சிலருக்கு மறுத்து சாவை நோக்கி அவர்களை நகர்த்தக் கூடாது.
காலையில் அந்த வீடியோ பார்த்ததில் இருந்து மனம் கனத்துப் போய் கிடக்கிறது. பதிவின் மூலம் பாரத்தை இறக்கப் பார்க்கிறேன். ஏதோ ஒருவர் இருவர் இந்த பதிவைப் பார்த்து திருநங்கைகள் மீதான தன் பார்வையை மாற்றிக் கொண்டால் நல்லது தானே.
இதைப் போய் ஏன் எழுதிக்கிட்டு என்று நினைக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
18 February, 2022
பெயர். : மாயம்
பெருமாள் முருகனின் சிறு கதைத் தொகுப்பு.
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : ₹200
இருபது சிறு கதைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துப் பரல். அனேகமாக எல்லா கதை நாயகர்களின் பெயரையும் முருகேசு என்றே வைத்திருக்கிறார். முருகேசு அப்பாவியாய், அதகளம் பண்ணுபவனாய், காதலனாய், கணவனாய், அப்பாவியாய் , அயோக்கியனாய் எல்லாமாய் வருகிறான்.
கடைக்குட்டி : கடைசி வரி வெடி குண்டு.
நுங்கு : நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு "ஏறி வேலை" என்று சொல்வதுண்டு என்கிறார். அரசாங்க வேலை அலுவலகத்தினாலாலும் ஏரியேயானாலும் ஒரு வித மெத்தனத்தோடு இருப்பதை சாடுகிறார்.
போதும் : இந்த கதையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது "காதலைச் சொல்லவும் முன் எடுத்துச் செல்லவும் முடியாத ஒருவனுக்கு காதலிக்க தகுதியில்லை. அவர்கள் தான் காதல் தேர்வில் தோற்கிறார்கள்.
வீராப்பு: விளையாட்டு வினையாகும் என்பதைச் சொன்ன கதை. " வேலை பார்த்து உன் சம்பளத்தைச் சேர்த்து வை. ஓரளவு சேர்த்ததும் மீதியை நான் போட்டு உன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். " என்ற அப்பாவின் வளர்ப்பு அருமை.
ஆட்டம் : ஏரோப்ளேன் கரம் என்னும் ஒரு வித தாய விளையாட்டை இந்தக் கதையில் நமக்கு நினைவுபடுத்துகிறார். தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்பாவும் மகனும் கொரோனா காலத்தில் இந்த விளையாட்டை விளையாடி ஜெயித்தவர் ஆர்ப்பாட்டமாய் சிரிக்கும் போது அந்த காலத்துக்கே போனது போல் இருக்கிறது.
இந்த கதையில் நான் மிகவும் ரசித்த வரி . " குற்றம் சாட்டுபவரையும் குற்றம் சாட்டப்பட்டவரையும் சமமாகப் பாவித்து ஒவ்வொரு வாக்கியத்தில் இருவருக்கும் பாதகமில்லாமல் நடந்து கொள்ளும் வித்தை அம்மாக்களின் தனித்திறன்"
தொடை : பஸ் பயணம் பல காதல்களைப் பார்த்திருக்கும். இதுவும் அது போல் ஒரு அழகான காதல் கதை.
அருவி : இந்த கதையில் வரும் "நீரோலம்" என்னும் வார்த்தைவரப் போகும் துயரத்தை முன்னுணர்த்துவதாய் இருந்தது. குறிப்பிடப்பட்ட "அருவி" எனக்கு பல ஆண்டுகளுக்கு முன் கொல்லி மலையில் பார்த்த அருவியை நினைவூட்டியது.
நாய் : காதல் என்பதில் பெண்களுக்கு என்ன வித தெளிவு வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லும் கதை.
கருவாடு : பகைமையை பல ஆண்டுகள் தேவையில்லாமல்மனதில் சுமந்து வருகிறோம்.அது ஒரு எளிய முயற்சியில் மணல் வீடாய் சரிந்து போகும் என்பதைச் சொல்லும் கதை.
பந்தயம் : ஆண் நட்பினிடையே பணம் கொடுக்கல் வாங்கல் வெகு சகஜம். பெரும்பாலும் நட்பு முறிவதும் பணத்தாலோ பெண்ணாலோ தானே? இந்த கதையில் நண்பர்கள் நட்பு முறிந்ததா? தெரியவில்லை.
தொழில் : தொழில் போட்டி பலருக்கு இடையே வந்திருக்கும். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே கூட வருமா? வரும் என்று சொல்லும் கதை.
பரிகாரம் : அழுத்தமான அழ வைக்கும் கதை.
மாயம்: போட்டி என்பது இருவருக்கும் தெரிந்து வருவது தான். அப்படி ஒருவனுக்குத் தெரியாமலே நடக்கும் போட்டியும் அதனால் நேரும் விபரீதமும் தான் கதை. இந்த கதை தான் புத்தகத்தின் பெயரும் கூட.
என்ன?? இருபது கதைகள் வரலையேன்னு பார்க்கிறீங்களா? சில கதைகள் என்னன்னே தெரியாம நீங்க வாசிப்பதற்காக. உங்கள் வாரிசுகளின் வாசிப்பை மெருகேற்ற நினைத்தால் இந்த புத்தகத்தை பரிசளிக்கலாம்.
07 February, 2022
நேற்று ஒரு அருமையான திறனாய்வு "வாருங்கள் படிப்போம்" குழுவில்.
புத்தகத்தின் பெயர் :நேற்று ஒரு அருமையான திறனாய்வு "வாருங்கள் படிப்போம்" குழுவில்.
புத்தகத்தின் பெயர் : How to avoid a climate disaster.
எழுதியவர் : பில் கேட்ஸ்.
திறனாய்வு செய்தவர் : எழிலரசன்.
இவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்.
Climate disaster என்பது கடல் மாதிரியான விஷயம். பலரும் கால நிலை மாற்றம் என்பது நமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்று நினைக்கிறார்கள். இந்த புத்தகத்தை வாசித்த பின் தான் எனக்கு பல கதவுகள் திறந்தன என்கிறார் எழிலரசன்.்
பூமி வெப்பமடைவதை எளிய உதாரணத்தோடு விளக்கி இருப்பதாக சொன்னார். வெயிலில் ஒரு காரை நிறுத்தி இருக்கிறோம். உள்ளே நன்கு சூடாகி விட்டது. வந்ததும் ஜன்னல் கதவுகளை திறந்து விட்டால் தான் வெப்பம் வெளியேறுகிறது. அது போலவே பூமியை சுற்றி கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஜன் போன்றவை படலமாக
மூடி இருக்கும் போது பூமியில் உள்ள வெப்பம் வெளியேறாமல் பூமி உஷ்ணமடைகிறது. ( நான் இது வரை வெளியில் இருந்து வெப்பம் பூமியைத் தாக்குவது அதிகரிப்பது தான் global warming என நினைத்திருந்தேன்) இதனால் சரி செய்ய முடியாத பாதிப்புகள் நேரலாம் என்கிறார் ஆசிரியர்.
இப்போதும் நிகழும் பல காரியங்களை நாம் பூமி வெப்பமடைவதோடு இணைக்காமல் தனித்தனியாக பார்க்கிறோம். அது தவறு என்கிறார். Extreme whether events க்கு இது தான் காரணம் என்கிறார். அதிக வெப்பமும் அதிக குளிரும் பொதுவாகவே கிருமிகள் வாழ ஏற்ற சூழல். இப்போ ஏதாவது மணி அடிக்கிறதா? ஆம் புதுப்புது நோய்கள் கூட உருவாகலாம் என்கிறார். Sun stroke இறப்புகள் அதிகரிக்கலாம். இதில் பாதிப்படைவது வெயிலில் உழைக்கும் எளிய மக்களாக இருப்பார்கள்.
வாகனங்கள் மட்டுமல்லாது சிமென்ட் தொழிற்சாலை எவர்சில்வர் தொழிற்சாலை போன்றவை வெளியிடும் கார்பனும் பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன என்கிறார்.
Green premium என்றொரு பதத்தை ஆசிரியர் பயன்படுத்தி இருக்கிறார். இதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டு தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.்வெப்பத்தை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பயனில்லை அதிரடியாக பூஜ்யத்துக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார்.
தனி மனிதன் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் கார்பனை விட ஆகாய விமானங்கள், கப்பல்கள் போன்றவை வெளியிடும் அளவு மிக அதிகம். அவை குறைக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
பூமி வெப்பமடைந்ததற்கு வளர்ச்சி அடைந்த நாடுகளே பெரும் காரணம் என்பதால் அதை தடுக்க செய்யும் ஆராய்ச்சிகளுக்கு அவையே அதிக பணம் வழங்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் பில் கேட்ஸ்.
இந்த திறனாய்வு இந்த புத்தகத்தை உடனே வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது நிஜம்.