Bio Data !!

14 July, 2013

அஞ்ஞாடி !! புத்தக பகிர்வு

"அஞ்ஞாடி"  என்னும் பூமணியின் நாவலை வாசித்து முடித்தேன். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். யாரிடமும் சொன்னால் எப்படி அவ்வளவு பெரிய புத்தகத்தை வாசித்து முடித்தீர்கள் என்று கேட்கிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு மாதம் வைத்து வாசித்து சுவைத்தேன்.  வாசித்து முடித்து எழுத தொடங்கினால் சில சுவையான விஷயங்கள் விட்டுப் போகும் என்பதால் ரசித்தவற்றை அவ்வப்பொழுதே எழுதி வைத்தேன்.

"அஞ்ஞாடி" பெயர் புதுமையாய் இருந்தது. போகப் போகத் தான் ஒரு குறிப்பிட்ட இனத்தில் அம்மாவை "அஞ்ஞா" என்று அழைக்கும் வழக்கமும் "அஞ்ஞாடி"  என்பது "அம்மாடி" என்பதாய் இருக்குமோ என்பதும் புரிந்தது.   ஆண்டி , மாரி  என்று இரண்டு நண்பர்கள். சிறு வயதில் அவர்கள் அடிக்கும் லூட்டியில் ஆரம்பிக்கிறது கதை. மாரி வண்ணான் குடும்பத்தை சேர்ந்தவன். அவனோடு சரிக்கு சமமாய் பழக விடாததால் வீட்டுக்குத் தெரியாமல் போய்  சேர்ந்து விளையாடுகிறான் ஆண்டி. அவர்கள் விளையாடும் விதவிதமான விளையாட்டுக்கள் இன்னொரு பிறவி எடுத்து கிராமத்தில் ஒரு சிறுவனின் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. 

வேக வேகமாக வளர்ந்து இளைஞர்கள் ஆகி திருமணம் முடித்து கதை போகும் போது ஆசிரியர் இன்னும் மீதி பக்கங்களில் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவல் எழுகிறது. 75 பக்கங்களில் மாரி  மரணிக்கும் போது  அடடா! சின்ன வயதில் தான் போகப் போவதை அறிந்து தான் வாழ்க்கையை அவ்வளவு வேக வேகமாக வாழ்ந்து முடித்தானோ என்று பரிதாபம் ஏற்படுகிறது. 

ஒரு குறிப்பிட்ட இனம் தங்களை கோயில் இருக்கும் தெருவுக்குள்ளேயே விடாமல் தடுப்பதை எதிர்த்து எந்த நீதி மன்றத்தின் ஆதரவும் கிடைக்காமல் 100 குடும்பங்கள் உள்ள ஒரு கிராமம் முழுவதுமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாற விரும்புவதைப் பார்க்கும் போது  ஜாதியின் பெயரை சொல்லி மனிதர்களுக்கும் ஏற்றதாழ்வு காட்டும் சமுதாயம் என்று தான் திருந்துமோ என்று ஆற்றாமை  இயல்பாய் எழுகிறது. 

இறந்து பேயாய் சுற்றுபவர்கள் தங்கள் பேரன்களை சந்திக்கும் இடம் நல்ல கற்பனை. விட்டலாச்சாரியார் படம் பார்த்த எபக்ட் .பனை மரத்தில் தன் வாலை சுற்றி பற்றிக் கொண்டு கதை சொல்லும் பேயை நேரில்  பார்த்தது போலவே இருந்தது. 

கடவுளர்கள் இயேசுவின் தாய் மாதா, முருகன் , வள்ளி மூவரும் சந்தித்து உரையாடுவதாக வருவது யதார்தத்தை  நகைச்சுவை உணர்வு கலந்து சொல்லப் பட்டதாக இருக்கிறது. 

சாகித்திய அகடமிக்கு பரிந்து உரைக்கப்பட்ட நாவல்.  பக்கங்கள் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாமோ? ஆனாலும் ஆசிரியரின் இமாலய முயற்சி அதீத பாராட்டுக்கு உரியது. எந்த நல்ல நாவலைப் படித்து முடித்தாலும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இப்பொழுதும் ஏற்பட்டதால் இந்த பகிர்வு. கீழே உள்ளது புத்தகம் வாசிக்க முடிவெடுத்ததும் நான் பார்த்த ஒரு வலைத்தளத்தில் எனக்கு பிடித்த வரிகள். உங்களுக்கும் பிடிக்குதா பாருங்களேன்! " அஞ்ஞாடியில் நூற்றாண்டுகளின் காலச்சித்திரம் தீட்டி அதற்குள் ஒரு கதையை வைத்து கதைக்குள் இன்னும் பல கதைகளையும் கனவுகளையும் வைத்து வாசகனின் பாஷையிலே பேசி... பூமணி உயரத்தை தொட்டிருக்கின்றார். என்னை மாதிரி வாசகர்கள் அந்த உயரத்தைத் தொடுவதற்குத் தோதாக படிக்கட்டுகள் , பிடித்தேற பக்கவாட்டு கைப்பிடிகள், அங்கங்கே மூச்சு வாங்கும் போது சற்று இளைப்பாற்ச் செல்ல திண்டுகள் என்று திட்டமிட்டு அமைத்துள்ளார். அஞ்ஞாடி மொத்தத்தையும் 22 பாகங்களாகப் பிரித்து ஒன்றிலிருந்து இன்னொன்று போக அளவாக படிக்கட்டுகளை அமைத்து ஓய்வெடுக்க திண்டுகளை அமைத்திருந்தாலும் சில பகுதிகள் மிக செங்குத்தாக இருக்க , என்னைப் போன்ற வாசகர்களுக்கு மூச்சுத் திணறத் தான் செய்கிறது. " 

எல்லாம் தொட்டு தொட்டு அரை குறையாக விட்டது போல் இருக்கிறதா. விளம்பரத்தில் அனு சொல்லுவது போல "யாங் ! புத்தகத்தை வாசித்து பார்த்து ரசிங்க "விளம்பரம்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாயபகம் வருது. இடை இடையே நான் ரசித்த விளம்பரங்களை நான் குறிப்பிடுவது உண்டு. தற்சமயம் நான் ரசிக்கும்   விளம்பரம் "DAIRY MILK SILK"  என்ன ஒரு அழகான காட்சி அமைப்பு. அதில் வருபவர்களின் முக பாவம். சிக்னலில் கிடைக்கும் நிமிட இடை வெளியில் பரிமாறிக் கொள்ளும் உணர்வுப் பரிமாற்றம். அந்த பெண்ணின் சிரிப்பு ரொம்ப அழகாக இருக்கிறது.