Bio Data !!

15 May, 2020

 இந்த நிகழ்வில் நான் என்பது எங்க அம்மா!!

காலை ஐந்து மணிக்கே எழுந்து ஒரு சின்ன பக்கெட்டில் நீரெடுத்து வழக்கம் போல் வாசல் தெளித்து திரும்பும் போது தலை சுற்றி அப்படியே படிகளில் விழுகிறேன். கோலம் போடவில்லையே என்ற எண்ணம் வருகிறது. படியிலேயே இப்படி விழுந்து கிடக்கிறோமே எழுந்து உள்ளே போக வேண்டுமே என்று தோன்றுகிறது. அசைய முடியவில்லை. உள்ளே என் மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அப்படியே கிடக்கிறேன்.

கொஞ்ச நேரத்தில் எங்கள் எதிர் வீட்டுப் பெண் வருகிறாள். "அய்யோ டீச்சர்" என்ற படி உள்ளே போய் என் மகளை எழுப்பி அழைத்து வருகிறாள். "வாசல் தெளிச்ச உடனே கதவை மூடிருவாங்களே ரொம்ப நேரமா கதவு திறந்து கிடக்குதேன்னு வந்தேன்" என்று அவள் சொல்வது கேட்கிறது. பதில் சொல்ல முடியவில்லை.

அவசர அவசரமாய் சில போன் கால்கள் செய்கிறாள் என் மகள். அவள் பதற்றம் என்னை மேலும் பதற வைக்கிறது. என் பிள்ளுகளுக்கு ஒரு தொல்லையும் கொடுக்க கூடாது என்றல்லவா இத்தனை நாளுமிருந்தேன்.  ஏற்கனவே மூன்றாண்டுகளுக்கு முன் இதே போல உடம்பு முடியாமல் போனதால டிரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்த  டாக்டரிடம் அழைத்துப் போனார்கள்.

ஒரு நாளில் நினைவு வந்தது. பிள்ளைகள் எல்லோரும் இருந்தார்கள். அத்தனை பேரும் வேலையை விட்டுட்டு வந்து நிற்கிறார்களே என்று இருந்தது. சொல்ல முடியவில்லை. மறு நாள் ஆக்ஸிடண்ட் ஆன ஒரு பையனை ICUவில் என் பக்கத்து பெட்டில் போட்டார்கள். இளைஞன். தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. பாவம் பிள்ள னு மனசுக்குள் கருணை பொங்கியது.

அப்போ ஒரு நர்ஸ் வந்து என் பெண்ணிடம் "அக்கா!அம்மாவை சேரில் வைத்து கொஞ்ச நேரம் வெளியே வச்சிருங்க. அந்த பையனுக்கு ஆப்பரேஷன் பண்ணனும். அதுக்கு தலையை மொட்டை அடிக்கணும். அம்மா பார்க்காம இருந்தா நல்லது. " னு சொன்னாள்.

நர்ஸ் உதவியோட என்னை சேரில் உட்கார வைத்து நகர்த்தி கொண்டு போய் வாசல் பக்கம் வைத்தாள் என் மகள். வாசலில் இருந்த கண்ணாடியில் என் உருவம் தெரிந்தது. லேசாக ஒரு புறம் போயிருந்த வாயை நேராக்க முயன்றேன். முடியவில்லை. அதை கையால் சரி செய்ய முயன்றேன். கை அசைக்க முடியவில்லை. "அய்யோ! எனக்கு பக்க வாதமா? அதனால் தான் சேரில் என்னால் தானாக உட்கார முடியவில்லைய? கடைசி வரை நடமாட்டத்திலேயே இருக்க வேண்டும் என நினைத்தேனே! என் பிள்ளைகளுக்கு பாரமாய் இருக்கப் போகிறேனா? "

என் உடலில் தீ வைத்தது போல் சூடு பரவுகிறது. உடல் அனலாய் கொதிக்க தொடங்குகிறது. என்னை அழைத்து போய் கட்டிலில் படுக்க வைக்கிறார்கள். கண்களை இறுக்க மூடிக் கொள்கிறேன். அதன் பின் ஓரிரு முறை மட்டுமே கண்களைத் திறக்கிறேன். என்னைச் சுற்றி எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த பேத்திகள் பாட்டி பாட்டி என்கிறார்கள். அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு எப்பொழுதும் போல் "பெஸ்ட் ஆஃப் லக்" சொல்ல மனம் துடிக்கிறது. என் பேத்திகளின் தோழிகள் எனக்கு வைத்திருக்கும் பெயரே "பெஸ்ட் ஆஃப் லக் பாட்டி"

கொஞ்சம் தள்ளி என் கொள்ளுப் பேரன்கள். அவர்களைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சத் தோன்றுகிறது. கட்டிலை விட்டு கையை அசைக்க முடியவில்லை. கண்களை மூடிக் கொள்கிறேன். கண்களின் ஓரமாக கண்ணீர் வழிகிறது. யாரோ துடைக்கிறார்கள். என் மனதுக்குள் போராட்டமாக இருக்கிறது. என் விழிகளில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்க முடியவில்லையே மற்ற காரியங்களை எப்படி செய்யப் போகிறேன்.  என் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கப் போகிறேனா? கூடாது. என் கண்களை இறுக்க மூடிக் கொள்கிறேன். எத்தனை நாட்கள் அப்படி இருந்தேன் எனத் தெரியாது. "பத்து நாட்களா இப்படியே தான் இருக்காங்கன்னு யாரோ சொல்வது கேட்கிறது. பத்து நாட்கள் இப்படியே இருந்து விட்டேனா? அப்ப இப்படியே தொடர்ந்திட வேண்டியது தான். இனி நான் இருந்து என்ன பயன். மண்ணுக்கும் பெண்களுக்கும் பாரமாய்.

திடீரென்று எனக்கு மூச்சு விட சிரமமாய் இருக்கிறது. எல்லோரும் பரபரப்பாய் அங்கும் இங்கும் போவது தெரிகிறது. எனக்கு இருக்கும் ஒரே ஒரு அன்பு பேரனின் திருமணம் பார்க்காம போகிறேனே. இன்னும் ஒரு பேத்தி இருக்கிறாளே. அவள் திருமணத்தை கண் குளிர பார்க்கணுமே. அவர்கள் பெற்றுத் தரும் குழந்தைகளை தொட்டுண் தூக்கணுமே. சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும் போதே என் பெரிய மகள் என் தலையை தடவிய படி சொல்வது கேட்கிறது. "அம்மா கவலைப்படாதீங்க. நீங்க இருந்து செய்ய வேண்டிய எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்." என் மனசு கொஞ்சம் ஆசுவாசப்படுகிறது.

அப்பொழுது  "பாட் டி" இது என் பேரனின் குரலல்லவா? வெளிநாட்டில் இருந்தானே வந்து விட்டானா? பார்க்க முயல்கிறேன். கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் அவன் ஏதோ பேசுகிறான் கேட்கிறது. என் மகள் " ஃபோனை சரியா பிடிங்க" என்பது கேட்கிறது. ஓ! ஃபோனில் பேசுகிறானா? என் விழியின் கருமணிகள் வேக வேகளாக அங்குமிங்கும் அசைகின்றன. சில நொடிகளில் நின்று விட்டது.

ஓ! நான் இறந்து விட்டேன். என் வாரிசுகளை பார்க்க முடியாது. ஆனாலும் அவர்களுக்கு பாரமாய் இல்லாமல் நான் நினைத்தது போலவே இறந்து விட்டேன். எல்லோரும் கதறுவார்கள். தகப்பன் இல்லாது நான் வளர்த்த பிள்ளைகள் அனாதைகளாகிப் போகும். அருகில் இருக்க முடியாத என் பேரன் துடித்துப் போவான். பரவாயில்லை.

இப்போழுது எனக்கு அசைய முடிகிறது. உடலில் பாரமில்லை. என்னை அழகாக பட்டுடுத்தி கிடத்தி இருக்கிறார்கள். அத்தனை பேரும் அழுது கொண்டிருக்கிறார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் ஆகிப் போன என் கணவனை பார்த்து விடுவேன். என் குடும்பத்தை ஆல மரமாய் நான் வளர்த்து விட்ட அழகைப் பார்த்து அவர் பெருமிதமாய் பூரிப்பார். நான் அவர் தோள்களில் சாய்ந்து கொள்வேன். அவர் மறக்காமல் என் மூக்கை அழுந்தப் பற்றிய படி கிண்டலாய் சிரிப்பார்.

வரு