Bio Data !!

20 January, 2023

புத்தகத்தின் பெயர் : வாதி ஆசிரியர் : நாராயணி கண்ணகி “எழுத்து” பிரசுரம் விலை : ரூ 320/- இந்த புத்தகம் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 இன் மூன்றாம் பரிசு பெற்றது.. இந்த ஆசிரியர் எழுதியவற்றுள் நான் வாசிக்கும் முதல் நாவல். இப்பொழுதெல்லாம் இலக்கியத் தரம் வாய்ந்த புத்தகங்களை வாசித்து முடிக்கும் போதே மறுபடியும் முதலில் இருந்து வாசிக்கணும் என்ற எண்ணம் வருகிறது. கண்ணப்பன் என்பவர் தன் கதை சொல்லுவது போல் வருகிறது. அவரை அழைக்க க்யூ பிராஞ்ச் போலீஸ்காரன் சந்திரகுமார் வருகிறார். எதிரில் வரும் மாடுகள் மடியைச் சுமந்து கொண்டு அரக்கி அரக்கி நடப்பதைப் பார்க்கும் போது பால்மடி முதுகில் வரும் படி தயாரித்தாலாவது பரவாயில்லை எப்படியும் கன்று குட்டிகளுக்கு பால் கொடுக்கப் போவதில்லை என் நினைக்கிறார்.அந்த இளகிய மனசுக்காரர். “ ஞாபகம் தான் நாம் பிறந்ததிலிருந்து புலன்களெனும் ஆயுதம் தாங்கி வாழ்நாளெல்லாம் தொடரும் யுத்தங்கலிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உத்தி” இந்த ஞாபகத்தின் வலு வயதானவர்களைக் கேட்டால் தான் தெரியும். சமயத்தில் ஒரு பெயர் நினைவுக்கு வராமல் அவர்கள் படும் பாடு. அதென்ன பெயர்களில் மட்டும் நினைவுபடுத்துதலில் அததனை தடுமாற்றம்..இதைக் கேட்ட போது என் நண்பரின் தந்தை சொன்னார் “ முதலில் மறக்கத் தொடங்குவது பெயர்களும் எண்களும் தான்”என்று. கண்ணப்பனின் சிறு வயது நினைவில் கதை தொடர்கிறது. நடராசண்ணன் தன்னோடு அவனை தான் செல்லும் இடத்துக்கெல்லாம் அழைத்துச் செல்கிறார். நடராசனின் தொழில் அங்கே வரும் கூட்ஸ் ரயில் மேடேறி மெல்ல போகும் போது பாய்ந்து ஏறி அதில் உள்ள அரிசி கோதுமை போன்றவற்றின் மூட்டைகளை கீழே தள்ளி தன் கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுப்பார். சோஷலிச “ வாதி.” கண்ணப்பனின் அம்மா ஒரு முறை சொல்லிக் கொடுக்கிறாள் “ யானை உடம்பை பார்க்காதடா பயந்திருவ. கண்ணப் பாரு. ஆளுங்க கண்ணு மாதிரியே இருக்கும். பாசத்தோட பார்க்கும்” இதை வாசிக்கும் போது எனக்குத் தோன்றியது. ஒரு பிரச்னை கண் முன்னே யானை போல் நிற்கும் போது அதன் அளவைப் பார்த்தால் பயந்து போவோம். பிரச்னையின் கண்ணான அதன் வேர்க்காலை தேடிப் பார்த்தால் அதன் தீர்வு தெரியும். கண்ணப்பனை டீ குடிக்க அழைத்துச் செல்லும் கடையின் சொந்தக்காரர் ராமசாமி. அவர் மனைவி தனம் அவ்வளவு அழகு. எப்போதும் சிரித்துப் பேசிக் கொண்டே இருப்பாள். தன் அழகுக்கு எந்த வகையிலும் ஈடில்லாத மாமாவிடமும் குழந்தைகளிடமும் பாசத்தைப் பொழிந்தாள். அதோடு கூட கண்ணப்பனிடமும். கதையின் முக்கிய கரு ஜமீந்தார்களின் அக்கிரமம். ஒரு பெண் குழந்தை பெரியவளானதும் ஜமீந்தார்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு பச்சைப் பிள்ளைகள் தான் கூடுதல் ஆனந்தம். இரவு கடந்து அந்த குழந்தை “ சீர் குலைந்து சீர் கொண்டு வருவாள். இரண்டு ஜரிகைப் புடவை, இரண்டு ரவிக்கை ஒரு ஜோடி தங்கத்தோடு ஒரு எட்டுக்கல் மூக்குத்தி வெள்ளிக் கால் கொலுசு கண்ணாடி வளையல்கள், சீப்பு குங்குமம் மஞ்சள் . காலம் பூராவும் பெண்ணின் குடும்பம் உழைத்ததற்கும் சிறுமி தன்னை இழப்பதற்குமான சீர்.{என்ன ஒரு கொடுமை. } நடராசனோடு சேர்ந்து இன்னும் சில நண்பர்களும் இதற்கு முடிவு கட்ட துணிகிறார்கள். அவர்களில் ஒருவர் பாலாமணி. திருமணம் செய்யாதவர். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பினாங்கிலிருந்து பர்மா அகதிகளாய் இந்தியா வந்து சேர்ந்தவர்கள் .பாலாமணி தன் செயல்களை தடுக்கும் தாயிடம் இவ்வாறு சொல்கிறார். “உனக்குப் புரியும். உலகப் போர பாத்திருக்க. கண்ணுக்கெதிர்ல ராணுவம். பீரங்கி துப்பாக்கி சாவு ரத்தம் ஜனங்க உடம்புலருந்து மரம் உலுக்கி காய்ங்க விழற மாதிரி காலு கையி கண்ணுமுட்ட தல ரோட்ல விழுந்து சிதறனதை பாத்து இருக்கே.உனக்குப் புரியும். நானே போராடலைன்னா வேற யார் போராடுவா. இவங்க இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் கொத்தடிமையாவே வதைபடுவாங்க” அநியாயம் அழிக்க அனைவரும் அமைதியாய் வாழ ஒரு சிலர் தியாகம் செய்யத்தான் வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு சிலர் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தான் எடுத்துக் கொண்ட கதை களத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். நான் மிகவும் ரசித்த வரிகள்: “ ஒவ்வொறு மனுசனும் ஒரு சுடு காடுய்யா. வயித்தில எம்முட்டு பொணம் பொதைக்கிறோம். ஆடு, கோழி, பன்னி, மீனு முட்டன்னு வயித்துச் சுடுகாட்டுல எம்முட்டு பொதைக்கிறோம்” “மீனுங்க தூண்டி முள்ளுல புடுச்சா அதுங்களுக்கு தொண்ட வலிக்குமுன்னு வல போட்டுத் தான் புடிப்போம்” “ கடவுள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை எழுதும் போது ஒவ்வொரு வகையான மையினால் எழுதி விடுகிறார். போராளிகள் வாழ்க்கையை ரத்தத்தினாலும் ஏழைகளின் வாழ்க்கையை வியர்வையாலும் ஜமீந்தாரர்களின் வாழ்க்கையை தங்கத்தினாலும் தனம் கனகா டீச்சர் போன்ற பெண்களின் வாழ்க்கையைக் கண்ணீராலும் எழுதி விடுகிறார்”

13 January, 2023

நான் கிருஷ்ண தேவ ராயன் ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன்.

புத்தகத்தின் பெயர் : நான் கிருஷ்ணதேவராயன் ஆசிரியர் : ரா. கி. ரங்கராஜன் பூம்பாவை பதிப்பகம். விலை : ரூ 450/- நான் ஆசிரியருடைய :”அவன்” என்னும் நாவல் வாசித்தேன். அதன் முன்னுரையில் “கிருஷ்ணதேவ ராயன் கதையை சொல்லும் போது “ நான்” என்று எழுதியதால் என் கதையை சொல்லும் போது “அவன்” என்று சொல்கிறேன் என்று இந்த புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார். அப்பொழுதே இதை படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். பொதுவாக புத்தகங்களை நாம் தேடிப் போக வேண்டியதில்லை. அவை நல்ல வாசகனை தேடி வந்து சேர்ந்து விடும் என்று நினைப்பேன். அதைப் போலவே ஊர்ப்புற நூலகத்துக்கு நான் போனதும் என்னை கை தட்டி அழைத்தார் கிருஷ்ண தேவ ராயர். இந்த நாவலை எழுத ஆசிரியர் கடுமையாக உழைத்திருக்கிறார். கதையில் ஒரு இடத்தில் நட்சத்திரங்களின் நிலையை வைத்து அரசர் எதிரியை வீழ்த்துவது போல எழுதி இருக்கிறார். இதைப் படித்த ஒரு விஞ்ஞானி தான் எழுதும் புத்தகத்துக்கு இவரிடம் உதவி கேட்டாராம். இந்த புத்தகம் அரசரது அரசியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவரது காதல் மனத்தையும் அரச வாழ்க்கையில் அது படும் அவஸ்தையையும் சொல்கிறது. சுஜாதா அவர்கள் தன் பாராட்டுரையில் தமிழில் தன்மை ஒருமையில் சரித்திர கதை இதற்கு முன் வந்ததில்லை என்கிறார். இலக்கிய ரசனை மிகுந்த திரு கமல ஹாசன் அவர்கள் தான், இப்படி ஒன்றை எழுதும் எண்ணத்தை விதைத்தவர் என்கிறார் ஆசிரியர். இவருடைய முன்னுரையை படிக்கும் போது அவர் எடுத்திருக்கும் பெரும் முயற்சி தெரிகிறது. கதையின் முதல் வரியே “ என் பெயர் கிருஷ்ணன். முன்னோர்களுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக தேவராயன் என்று சேர்த்துக் கொண்டிருக்கிறேன் “ என்று வருகிறது. எந்த வித படோபடோபமும் இல்லாத ஒரு எளிய பேரரசர் என்பது புரிந்து விடுகிறது. அதை உறுதிப்படுத்துவது போலவே பணியாளர்களிடம் சாதாரணமாக உரையாடுவது, குடி மக்களின் துயரம் கண்டு துவண்டு அதைத் தீர்க்க உடனடி முடிவெடுப்பது என பல சம்பவங்கள் வருகின்றன. நாவலை வாசித்து முடிக்கும் போது கிருஷ்ண தேவராயர் மேல் நாம் கொண்டிருந்த மதிப்பு இன்னும் உயரே போயிருப்பதை உணர முடியும். நடனப் பெண்மணி சின்னா தேவி மேல் பெருங் காதல் கொள்கிறார் அரசர். ஆனால் இரண்டு குடும்பங்களுக்கும் முன்னோர் காலத்தில் இருந்த முரண்பட்ட சம்பவத்தால் காதல் வளர்வது பெரும்பாடாய் இருக்கிறது. சின்னா தேவியின் அண்ணன் எதிராஜன் அவர்கள் காதல் தெரிந்த உடனேயே அவளைத் தனியே அழைத்துச் சென்று விடுகிறார். அன்றைய காலத்தின் அவல வழி முறைகள் பலவற்றை கதை நெடுக சொல்லி வருகிறார். அதில் ஒன்று அரண்மனை வளாகத்துக்குள் அரச குடும்பத்தவரை பல்லக்கிலோ அல்லது பணியாளர்கள் தம் தோளிலோ தூக்கிச் செல்வது.அவர்கள் பொதுவாக வாட்ட சாட்டமான நடு வயதுக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் அரசர் அந்தப்புரத்துக்கு போகும் போது ஆண்கள் வர முடியாது என்பதால் ஒரு பெண் அவரை தோளில் தூக்கிச் செல்ல நிற்பாள். உடனடியாக அதை கண்டித்து அவளைத் தன் அந்தரங்க சேவகியாக அமர்த்திக் கொள்கிறார். அவள் பெயர் காயத்ரி. கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரம்.. அவள் ஒரு முக்கிய கடமையை முடிக்க அரசரின் அன்பையும் இளகிய மனத்தையும் பயன்படுத்திக் கொள்கிறாள். அவளிடம் அரசர் ஒரு மென் மனத்துடன் இருப்பது அரசவையின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை.அரசருக்கும் காயத்ரியால் ஒரு காரியம் நடக்க வேண்டி இருக்கிறது. சின்னா தேவியின் இருப்பிடத்தை கண்டு பிடித்துச் சொல்வதாக வாக்குக் கொடுக்கிறாள். அதனாலேயே காயத்ரி அரசரிடம் நெருங்கி பழகுவதை தடுக்க மற்றவர்களால் முடியவில்லை. மற்றொரு வேதனையான வழி முறை ஒன்றையும் குறிப்பிடுகிறார். ஒரு பெண் கெட்டுப் போய் விட்டதாக சந்தேகம் வந்து விட்டால் அவள் ஜாதிக்காரரகள் அவளை ஜாதியை விட்டு விலக்கி வைத்து அதற்கு அடையாளமாக அவள் கையில் ஒரு பெருக்கல் குறி போல் சூடு வைத்து விடுகிறார்கள். காலம் காலமாக கெட்டுப் போவது பெண்ணாக மட்டுமே இருக்கிறாள் அவலம் தான். ஒரு சுவையான பழக்கத்தைப் பற்றியும் சொல்லி இருக்கிறார். ஒவ்வொறு அரசரும் புதிதாக முடியேற்றதும் அதற்கு முன் இருந்த அரசரின் வைர வைடூரியங்கள் இருக்கும் பெட்டியை மூடி பூட்டி விடுவார்கள். அதை அடுத்து வரும் அரசர் பயன்படுத்துவதில்லை. அவை தவிர்க்க முடியாத காலங்களில் மக்களுக்கு பயன்படும். அது போலவே அரசர் ஒரு நாள் உடுத்திய உடையை இன்னொரு முறை பயன்படுத்த மாட்டார். அதை சேர்த்து வைப்பார்களாம். ஏதாவது ஒரு முக்கியமான நபர் வரும் போது அவருக்கு அளிப்பார்களாம். அவர்களும் அரசர் ஒரு முறை உடுத்திய உடை என்பதால் சந்தோஷமாகவும் பெருமையாகவும் வாங்கி உடுத்திக் கொள்வார்களாம்.. அரசரின் அரசவையில் தெனாலி என்பவர் விகடகவியாகவும் விதூஷகனாகவும் இருந்தது நமக்கெல்லாம் தெரியும். அவர் பெயர் ராம கிருஷ்ண கவி என்பதும் அவர் “ பாண்டுரங்க மகாத்மியம்” என்னும் நூலை எழுதினார் என்பதும் எனக்கு புதிய செய்தி. அவர் “ நான் பண்டிதர்களின் மத்தியில் இருக்கும் போது அவர்களுக்குச் சமமாக நடந்து கொள்கிறேன். பாமரர்களுடன் இருக்கும் போது பாமரனாக இருக்கிறேன். வேடிக்கை கதைகள் சொல்கிறேன்” என்கிறார். தெனாலி மேல் நாம் கொண்ட பார்வையே வேறு விதமாக மாறி விடுகிறது. போருக்கு செல்லும் போது போர் வீரர்களின் மனைவி குழந்தைகள் உடன் செல்லும் வழக்கம் இருந்தது. அவர்களின் காப்பாறுவதற்காகவாவது கடுமையாக போரிடுவார்கள் என்பது காரணமாக இருந்தது. கிருஷ்ண தேவ ராயர் அதை மாற்றினார். போருக்கு செல்லும் போது வீரர்களின் குடும்பத்தார் உடன் வரக்கூடாது என்று கட்டளை இட்டார். எனக்கு விளையாட்டு வீரர்கள் வெளிநாடு செல்லும் போது மனைவி உடன் செல்லலாம் , கூடாது என்று இரண்டு கருத்து நிலவுவது நினைவுக்கு வந்தது. ஆண்கள் முக்கிய பணியிலிருக்கும் போது, அவர்கள் மனதுக்கு நெருக்கமானவர்கள் உடன் இருப்பது சாதகமா? பாதகமா? அரசர் சின்னாதேவியைக் கண்டடைந்தாரா? அவளை மணந்தாரா? அல்லது நாட்டின் நலன் கருதி வேறு பெண்ணை மணந்தாரா? அவருடன் இனிமையாக குடும்பம் நடத்தினாரா? தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறதா புத்தகதை தேடுங்கள். கண்டடைவீர்கள்.

11 January, 2023

சில உணவு வகைகள் முதன் முதல் நாம் சாப்பிட்டது இன்னும் பசுமையாய் நம் நினைவில் இருக்கும். அந்த ருசி வேறெப்போதும் வராதது போல் தோற்றமளிக்கும். நான் திருமணமான புதிதில் நாகர்கோவிலில் ஹோட்டல் பாரதிக்கு போனோம். அப்போல்லாம் மெனு கார்ட் கிடையாது. வரிசையா என்ன இருக்குன்னு வேகமா சொல்றது வெயிட்டருக்கான சிறப்புத் தகுதி. அவர்கள் சொல்வது அவ்வளவு அழகா இருக்கும். அதில் சேமியா உப்புமா என்பது எனக்கு புதுமையாகப் பட்டது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன். என்னைப் பொறுத்த வரை சேமியா என்பது பாயாசத்துக்காக பயன்படும் ஒரு பொருள் தான். அதை ஆர்டர் பண்ணினோம். அங்கங்கே கல் பதித்தது போல் கடலைப் பருப்பு மினுங்க அந்த உப்புமா இன்றும் நினைவில் சூடாய். இப்போ வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டாலும் அந்த முதன் முறை சாப்பிட்டது ஸ்பெஷல் தான். அடுத்து என் கணவரின் நண்பர் வீட்டுக்கு திருமணமான புதிதில் சென்றிருந்தோம். ஒரு கடற்கரை பட்டணம். ஆப்பத்தின் நடுப் பகுதியில் முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைத்து வேக வைத்து கொடுத்தார்கள். அன்று முட்டை தோசையெல்லாம் கேள்விபட்டிராத காலம். முதல் காதலைப் போல முதல் ருசிக்கும் தனி அழகிருக்கிறது. ரெண்டு நல்லது சொன்னா ரெண்டு சொதப்பலும் சொல்லணும் தானே. திருமணத்துக்கு முன் நான் வைத்த ரசம் இன்றும் என் வீட்டுத் தெருவில் மணக்கிறது. பக்கத்து வீட்டு பாட்டி எல்லாம் சொல்லிக் கொடுத்தவுக அடுப்புல வைக்கணும்னு சொல்ல மறந்திட்டாக. நானும் எல்லா வேலையையும் தரையிலேயே முடிச்சிட்டேன். அந்த நேரம் பார்த்து வந்த என் சித்தியிடம் ருசி பார்க்க சொன்ன போது தான் சூடா இருக்கும்னு ஊதினதும் என் தலையில பல்ப் எரிந்தது. ஆத்தீ! அடுப்புல வச்சிருக்கணும் போலிருக்கேன்னு. இதற்குள் என் தங்கை வாசலில் போய் ப்ராட்காஸ்ட் பண்ணி விட இன்றும் கூட அம்மா வீட்டு பக்கம் போனா ரசம் வாசம் தான். அப்போ என் வயிற்றில் முதல் குழந்தை ஐந்து மாதம். ஏதோ எனக்குத் தெரிந்ததை சமைத்துப் போட்டு என் கணவரை உயிர் வாழ வைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மத்தியானம் சாப்பாட்டு நேரம் வீட்டு ஓனர் அம்மா வந்தாங்க. கட்டாயப்படுத்தி சாப்பிடச் சொன்னேன். சாப்பிட்டவங்க என் பிரசவம் வரை நீ சாதம் மட்டும் வை. நான் குழம்பும் காயும் கொடுத்து விடுறேன்னு சொல்லிட்டாங்க. இதுக்கு மேல அன்றைய சாப்பாட்டின் மகிமையை நான் சொல்ல வேண்டாம். இன்னும் குலோப் ஜாமூன் செய்றேன்னு குய்யோ முறையோன்னு கத்தின கதை, இடியாப்பம் செய்றேன்னு பிழிய உதவிக்கு கணவரைக் கூப்பிட்டு "இதை அமுக்க யானையைத் தான் கூட்டிட்டு வரணும். நான் கேட்டேனா இடியாப்பம் வேணும்னு" அப்பிடின்னு அவர் சலிச்சுகிட்ட கதை எல்லாம் இருக்குது. நீங்க பாவம். அதனால வேண்டாம். இன்றைய புள்ளைங்க ரொம்ப புத்திசாலிங்க. புகைஞ்சிட்டா கூட smoked chicken னு அதுக்கு ஒரு புது பேரை வைச்சிட்டு அதை ஒரு டிஷ் ஆக்கிடுறாங்க. உங்கள் மனதில் நிற்கும் ஏதாவது உணவு முதன் முறை ருசி பார்த்த அனுபவம் சொல்லுங்களேன். அனுபவிப்போம்.

08 January, 2023

அப்பா!!

இந்த படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவர் தான் அபாக்கியவானான என் அப்பா. ஏன் இப்படி சொல்றேன்? மனசு நிறைய மனைவி மக்கள் என்று ஆசைகளை நிறைத்து வைத்திருந்தவர் தன் பிள்ளைகளின் வளர்ச்சி ஒன்றைக் கூட பார்க்காமல் 41 வயதில் மரித்துப் போனார். இன்று அவருடைய பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் இருக்கும் உயரத்தைப் பார்க்க அவர் இல்லையே என்ற வருத்தம் அரித்துக் கொண்டே இருக்கிறது. சிறிய உருவம் தான். ஆனால் கம்பீரம். கல்லாரியில் பிசிக்ஸ் பேராசிரியர். பெயர் சூசை ரத்தினம். அவருடைய மாணவர்களில் சிலர் என்னுடன் முக நூலில் நட்பில் இருக்கிறார்கள். அவருடைய இரு மாணவர்கள் bency & Parimelazhagar Pari என்னுடன் முக நூல் நட்பாய் இருந்து இன்று கடந்த காலமாகிப் போனவர்கள். என்சிசி அதிகாரி. ரொம்ப ஸ்டிரிக்ட். அதனாலேயே நான் அடிகள் பல வாங்கி இருக்கிறேன். அந்த என்சிசி கம்பு யாரெல்லாம் பார்த்திருக்கீங்க. கருப்பு நிறத்தில் வழ வழன்னு இருக்கும். உச்சியிலே தங்க பூண் அலங்கரிக்கும். அடிச்சா ஒவ்வொரு அடியும் உடம்பில் ஒரு வரி எழுதும். அடியின் முற்றுப் புள்ளியாய் அந்த தங்க பூணால் உச்சி மண்டையில் ஒரு "நச்" . வாழ்க்கையை ரசித்து வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. அவங்க வேலை பார்க்கும் போது வகுப்பு இருக்கும் நேரம் மட்டும் கல்லூரிக்குப் போனால் போதும் அதனால் நான் குழந்தையா இருந்தப்போ வேலைக்கு ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு அப்பா தான் என்னை வளர்த்திருக்காங்க. அதனாலேயே அவர் இறக்கும் வரை எனக்கு அம்மாவை விட அப்பான்னா தான் ப்ரியம் அதிகம். இப்போ இந்த படத்தில அப்பா கூட இருக்கிற யாரோ ஒருவர் முக நூலிலும் உலவிக் கொண்டு இருக்கலாம். இல்லை அவர்களின் பிள்ளைகள் இருக்கலாம். அப்படி யாராவது ஒருவர் தொடர்பு கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்த படத்தை பகிர்கிறேன். இன்னும் அப்பா பற்றி சொல்ல பல விஷயங்கள் இருக்குது. சமயம் வரும் போது அப்பப்போ சொல்றேன்.

05 January, 2023

புத்தகத்தின் பெயர் : கல்லறை ஆசிரியர் : எம்.எம். தீன் சந்தியா பதிப்பகம். விலை : 260/- ஆசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கறிஞராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகிறார். 1979 ஆம் ஆண்டு இவர் எழுதிய சிறுகதை முதன் முதலாக பரிசு பெற்றிருக்கிறது. எழுத்தின் மேல் மிகுந்த ஆர்வம் உடையவர். சௌமா விருது, படைப்பு விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார். மரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சொற்களும் மனிதனுக்கு சங்கடம் அளிப்பவை. ஏன் இப்படி ஒரு பெயர் என்று ஆசிரியரின் நண்பர் வினவிய போதும் இந்த நாவலுக்கு இது தான் பெயர் என்று தீர்மானமாக இருந்திருக்கிறார். கதை கல்லறையை சுற்றி வந்தாலும் வேறு பல விசயங்களையும் சுவாரஸ்யமாக சொல்கிறது. ஜோ ஒரு கணினித்துறையில் வேலை பார்ப்பவன். அவனது ஆதர்ஸ நாயகன் அவனுடைய தாத்தா. சத்திய நாத உபதேசியார் , கம்பீரமாக அவர் நடக்கும் நடையை அவன் தன் ஹெச் ஆர் மேலாளருடன் ஒப்புட்டு பார்க்கிறான். உயரமானவன் ஆனாலும் கால் வீசிப் பாவி நடக்காது. அது நகர மேட்டிமை நடை. பெருமை வாழ்வு தெரியும், ஆனால் கம்பீரம் இருக்காது என்கிறார். ஜோவுக்கு மாலா என்றொரு தோழி. அவனுக்கு மாலா ஒரு பிரமிப்பான மனுஷியைப் போல உயர்ந்து நிற்கிறாள். சபலம் கொண்ட புதிது புதிதான ஆண்கள் அவளிடம் கெஞ்சிக் கிடப்பதை சிரித்த படி கடக்கிறாள். இந்த இடத்தில் எனக்கும் தோன்றியது “ புதிதாக ஒரு பெண்ணின் மேல் ஈர்ப்பு வந்ததும் ஏன் ஆண் இப்படி குழைந்து போகிறான். காலப் போக்கில் இழுக்கப் பட்ட எலாஸ்டிக் தன் பழைய நிலைக்கு வருவது போல் இறுகி விடுகிறான். ஆரம்ப குழைதலை இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு அவன் இறுக்கமும் இயல்பாய் கடக்க முடிகிறது மாலாவைப் போலவே. ஜோவுக்கும் ஜெனிக்கும் இடையே ஒரு மென் காதல். கல்லறை பற்றிய கதையில் காதலுக்கு ஏன் பெரிய இடமென நினைத்திருப்பார் போலும். ஆனாலும் கதையில் வரும் பெண்களை ஆசிரியர் வர்ணிக்கும் போது அவ்வளவு அழகாக இருக்கிறது. “ ஒரு குடை போல தன்னை விரித்துக் கொள்ளும் ஜெனி காரில் ஒரு மஞ்சள் பூ போல அமர்ந்து இருந்தாள்” என்கிறார். கல்லறை பற்றிய ஒரு கதையை சொல்லும் போது பிரபலங்களின் கல்லறை பற்றிய அரிய தகவல்களையும் ஊடு பாவாக சொல்லி செல்கிறார். மும்தாஜின் கல்லறை மூன்று முறை இடம் மாற்றப் பட்டதாக சொல்கிறார். அதே போல் அருட் திரு சேவியரின் உடல் கோவாவில் இருந்தாலும் அவர் ஜப்பானில் இறந்து பின் அவர் உடல் கோவாவுக்கு கொண்டு வரப் பட்டதாக சொல்கிறார். இப்படி அரிய தகவல்களை கதையில் அங்கங்கே தெளித்திருக்கிறார். ரேனியஸ் அயர்வாள் சொல்வாராம் “ ஒரு நாளை நன்றாக பயன்படுத்தினால் அது ஒரு வாரத்துக்கு சமம். ஒரு வாரத்தை நன்றாக பயன்படுத்தினால் அது ஒரு மாதத்துக்கு சமம். ஒரு மாதம் ஒரு வருடத்துக்கு சமம்” எவ்வளவு அருமையான இந்த காலத்துக்கும் ஏற்ற சொல்லாடல். புலமாடனின் சிலம்புக்கம்பை பற்றி சொல்லும் போது இவர் எழுத்து நடை வியக்க வைக்கிறது. இதோ அவரது வார்த்தைகளிலேயே “ சுழற்றும் போது சர் சர்னு சத்தம் கேட்கும். ராஜநாகம் சீறுறது போல சீறிச் சாரைப்பாம்பு போல மினு மினுக்கும்” நம் கண் முன்னே ஒன்றுடன் ஒன்று பிணைந்து உறவாடும் விஷமற்ற பாம்புகள் தெரியும். ஐயர்வாளை வைத்து பல்லக்கு தூக்கி செல்லும் ஒரு காட்சி வருகிறது. வெளி நாட்டவர்களும் மனிதனை மனிதன் தூக்குவதை எப்படி அனுமதித்தார்கள் என்ற சந்தேகம் வந்தது. ஆசிரியரிடம் கேட்டேன். “ அந்த காலத்தில் எந்த வித போக்குவரத்தும் இல்லாமல் இருந்ததால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு போக இது தான் வழியாக இருந்தது “ என்றார். முன்பு ஒரு நாவலில் ( வெள்ளை யானை} சாரட்டில் இருந்து இறங்க ஏதுவாக ஒரு ஏழ்மை மனிதன் மண்டி
இடுவதாக வந்தது. மனிதரை மனிதர் இழிவு படுத்தும் மேட்டிமைத் தனம் எங்கும் என்றும் உள்ளது போல் இருக்கிறது. கல்லறை என்பது கற்பனைக்கு ஒரு வரண்ட பகுதி என்றாலும் இடையிடையே இயற்கையை ரசித்து வர்ணிக்கிறார். மேற்கோரத்தில் பெய்த சாரல் நடந்து அவர்களை நோக்கி வானத்திற்கும் பூமிக்குமாக அசைந்தாடி வந்தது என்கிறார். அது மட்டுமில்லாமல் வரும் போது ஒவ்வொரு கல்லறையிலும் சில நொடிகள் நின்று பேசி விட்டு வருவது போல் இருந்தது என்கிறார். சில சமயம் அரை வட்டத்தில் ஆடி வரும் சாரல் என்கிறார். அது காற்றின் வீச்சில் மழை சாரலில் ஏற்படும் நடனம். மிகவும் வித்தியாசமான நாவல். நான் கதையை படித்து முடித்ததும் முதல் சில அதிகாரங்களை மறுபடியும் படித்தேன் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக மனதில் பதித்துக் கொள்வதற்காக.