Bio Data !!

23 March, 2021

#Bachelor days
அப்போ நான் ஒன்பதாவது படிச்சுகிட்டு இருந்தேன். கொஞ்சம் கூடுதலாகவே துரு துரு. சுற்று வட்டாரத்தில் முதன் முதலாக சைக்கிள் ஓட்டிய பெண். பையன்கள் பேச நினைத்தாலும் எங்க அப்பா கல்லூரிப் பேராசிரியரானதால் பயப்படுவார்கள்.
ஒரு நாள் மாலை நானும் என் தோழியும் சயன்ஸ் மிஸ்ஸிடம்  சந்தேகம் கேட்பதற்காக சென்றோம். போகும் வழியில் சிவன் கோயில் தேர் அருகே வரும் போது தேரை ஒட்டி நானும் எனக்கடுத்து தோழியும் வர ஒருவன் வேகமாக வந்து என்னை மோதியபடி தேருக்கும் எனக்கும் இடையே சென்றான். என் தோழி "எடு செருப்ப" என்றாள். அப்போ திட்டுவதற்கு பொதுவாக உபயோகிக்கும் வார்த்தை. நாங்க போன இடத்தில் நேரமாகிட்டுது. இருட்டி விட்டது. திரும்பும் போது தேரின் அருகில் ஒரு கூட்டமாய் பையன்கள் நிற்கிறார்கள். என் தோழி "பயப்படாம வா. நாம கடந்து போயிடுவோம்" னு சொல்றா. எனக்கு கை கால் எல்லாம் உதறுது. நாங்க பயப்படுவோம்னு நினைச்சவங்க நாங்க தைரியமா கடந்ததும் ஒண்ணும் சொல்லாம விட்டுட்டாங்க.

நாங்க வீட்டுக்கு வந்தும் இந்த சாகஸ செயலை பேசிகிட்டு இருக்கிறோம். எங்க அப்பா வந்திட்டாங்க. என்னன்னு விசாரிச்சதும் என் தோழி விஷயத்தை சொல்லிட்டாள். அந்த பையன்்களின் ஒரு தோழன் எங்க வீட்டுக்கு அடுத்த வீடு. அங்கே எல்லோரும் வந்து நின்னு பேசிகிட்டு இருந்தாங்க எங்க அப்பா இடித்தது யாருன்னு கேட்டு அவனை வீட்டுக்கு கூப்பிட்டு மிரட்டி அனுப்பிட்டாங்க.

இவன் எல்லோரிடமும் நானும் அவளும் காதலிக்கிறோம். அதனால அவங்க அப்பா என்னைக் கூப்பிட்டு திட்டினார்னு சொல்லி என்னை பழி வாங்கி விட்டான். இது எங்களுக்கு தெரிய வரவே இல்லை. மூன்று வருடங்களில் எங்க அப்பா இறந்த போக எனக்கும் என் இன்றைய கணவருக்கும் காதல் பிறந்தது. அப்போ அதே பையன் இவரிடமும் "என்னை அவள் காதலிக்கிறாள். எனக்காக இந்தவாக மதம் மாற தயாராய் இருக்கிறாள்" என்று கதை விட்டு இருக்கிறான். என்னவர் மனம் பொதுவாகவே புதைகுழி. என்னிடம் ஏதும் கேட்கவில்லை.

ஐந்து வருடங்கள் கழித்து எனக்கும் இவருக்கும் திருமணமான பிறகு என்னிடம் கேட்கிறார். "அவன் ஏன் என்னிடம் இப்படி சொன்னான். நீ அவனோடு பேசி இருக்கிறாயா? " என்றார். அப்பொழுது நடந்த விவரத்தையும் எங்க அப்பா திட்டியதற்கு அவன் இப்படி பழி வாங்கி இருக்கிறான் போலிருக்கிறது என்று சொன்னேன்.

நல்ல வேளை காதலித்தவரையே திருமணம் முடித்தேன் இல்லையென்றால் இவன் எத்தனை பேரிடம் இப்படி சொல்லி என் திருமணத்தை தடை செய்திருப்பான். நான் அடிக்கடி சொல்வது இது தான் "தண்டனை அனுபவிக்க நாம் கண்டிப்பாக தவறு செய்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை"

பதின் வயதில் நான் அனுபவித்தது தான் இன்றும் யார் யாரைப் பற்றி தவறாகப் பேசினாலும் அதை அலட்சியப்படுத்தி உதற என்னால் முடிகிறது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!