Bio Data !!

19 April, 2026

#நான் கேட்ட நற்செய்தி 2

"அதிகாரம் எப்போதுமே ஒரே இடத்தில் குவிந்து கிடக்கக்கூடாது. அது பரவலாக்கப்பட வேண்டும். அப்போது தான் தவறுகள் குறையும். பணிகள் முடிவுக்கு வரும். " ஆமாங்க நினைச்சுப் பார்த்தா வேலை நடக்காத ஒரு அலுவலகத்தை உற்று நோக்கினா மற்றவர் மேல் நம்பிக்கை இல்லாமல் அத்தனை பொறுப்பையும் தானே சுமந்து , தானும் முடிக்க முடியாமல் பணிகள் தேங்கிக் கிடப்பதைப் பார்க்கலாம். வீடுகளில் மாமியார் மருமகளிடம் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கத் தெரியாமல் தானே செய்து புலம்பிக் கிடப்பதைப் பார்க்கலாம். அதிகாரம் தேங்கும் போது மாற்றி யோசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. தவறு ஏற்பட்டு விட வாய்ப்பு அதிகம். பிரித்துக் கொடுத்து விட்டால் நாம் மேற் பார்வை மட்டும் பார்த்தால் போதும். சிந்திப்போமா.

#நான் கேட்ட நற்செய்தி 1

ஞாயிற்றுக் கிழமை சர்ச்க்குப் போனேன். குருவானவர் சொன்ன ஒரு விஷயம் பகிரணும்னு தோணுச்சு. "தன்னிடம் இருப்பதிலிருந்து கொடுப்பது மனித இரக்கம். தன்னிடமிருப்பதை எல்லாம் கொடுப்பது இறை இரக்கம்" அருமைல்ல. யாரோ ஒருவருக்கு நம்மிடமிருப்பது எல்லாம் கொடுத்து விடலாம்னு தோணும். அந்த நட்பை எக்காரணம் கொண்டும் கை நழுவ விட்டிடக் கூடாது.

18 April, 2026

"பிரமிக்க வைத்த பிரபலம்" முக நூல் தந்த வரங்களில் மிகப் பெரியது யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நெருங்கிப் பேசி விடலாம். அப்படி எனக்கு பலர் அறிமுகமாகி இருந்தாலும் நான் சொல்லப் போகிறவர் அதையெல்லாம் தாண்டி உயர்ந்தோங்கி நிற்பவர். இவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளரின் மகன். தன் சிறு வயதிலேயே ஒரு பாப்புலாரிட்டியை பார்த்து வளர்ந்தவர். ஆனால் அந்த பெருமிதம் அவரிடம் கொஞ்சம் கூட இருக்காது. பரந்த வாசிப்பு உடையவர். மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர். இதையெல்லாம் தாண்டி மிகவும் ருசியாக சமைக்கத் தெரிந்தவர். நான் பிரமித்த முக்கியமான விஷயம் என்னவென்றால் ஈகோ கிஞ்சித்தும் இல்லாதவர். தான் ஆண் என்ற அகந்தை அற்றவர். இவர் அசோக் லேலான்டில் பணி புரிந்த போது இவர் மனைவி வங்கி மேலாளர். எனக்கு இந்த வேலை நல்லாத் தெரியும் மனைவிக்கு இந்த விஷயம் நல்லாத் தெரியும். அவரவருக்குத் தெரிந்த பொறுப்பு இரண்டு பேரும் எடுத்துக் கொண்டோம். இதில் ஆண் என்ன பெண் என்ன என்பார். பல பிரபலங்கள் இவர் வீட்டிற்கு வந்து தங்கி இருக்கிறார்கள். பல பிரபலங்களின் தனிப்பட்ட அலைபேசி எண் இவரிடம் உண்டு. யாரையும் தானாய் அழைத்து பேச மாட்டார். இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் தந்தை பற்றிய செய்தி தாய் பற்றிய செய்தி ஏன் பாட்டி பற்றிய செய்தி கூட அருவி போல் கொட்டும். நாம் உம் மட்டும் கொட்டிக் கொண்டிருந்தால் போதும். நான் இவர் வீட்டுக்குச் சென்று திரும்பும் போது இவர் கொடுத்து விட்ட பொருட்கள் தாய் வீட்டு சீதனம் போல் இருந்தது. மனதிலிருந்து "அண்ணா " என்று நான் அழைக்கும் ஒரு நபர். " உன் மனைவியைத் தவிர மற்ற பெண்கள் அனைவரையும் சக்தியின் வடிவமாகத் தான் பார்க்கணும் " என்று இவர் அப்பா சொல்லி வளர்த்திருக்கிறார் . அப்படியே வளர்ந்திருக்கிறார். இவருக்கு ஒரே ஒரு பெண். அவள் இப்போ பல் மருத்துவர். நான் நினைப்பேன் இவருக்கு ஒரு மகன் இருந்திருந்தால் சமுதாயத் துக்கு ஒரு நல்ல ஆண் மகன் கிடைத்திருப்பான். நான் பிரமித்துப் பார்க்கும் அந்த பிரபலம் பிரபல எழுத்தாளர் லா.ச.ர அவர்களின் புதல்வன் எழுத்தாளர் சப்தரிஷி. இவர் தன் பரந்த மனதின் முக்கியம் கூட தெரியாமல் ஒருவரை யொருவர் அன்பு செய்வது என்பது அவ்வளவு பெரிய விஷயமா என சாதாரணமாக கடந்து செல்வர். அவர் எனக்கு நண்பரானது முக நூல் எனக்கு செய்த அருந் தவப் பயன்.

#social awareness #Toxic relationship

சமீபத்திய " நீயா நானா" வில் காதல் தோல்வி உற்றுத் தவிக்கும் பெண்ணை அத்தனை பேரும் பாராட்டினார்கள். அந்தப் பெண்ணே நிகழ்ச்சியில் அதை ஒத்துக் கொள்ளவும் செய்தாள். அது தான் தனது முதல் காதல் அதனால் விட முடியவில்லை என்றாள். தான் மிகவும் டாக்ஸிக்காக நடந்து கொண்டதாக அவளே ஒத்துக் கொள்ளவும் செய்தாள். இருந்தும் வேறொரு பதிவு ஒரு குழுப் புகைப்படத்திலிருந்து அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்து பதிந்து "இந்தப் பொண்ணு ரொம்ப டாக்ஸிக்கான பொண்ணு " என எழுதி இருக்கிறார்கள். அதைத் தான் அவளே சொல்லிட்டாளே அப்புறம் என்ன புதுக் கண்டுபிடிப்பு. அவங்க ரெண்டு பேரில் யார் செய்தது தப்பு என விவாதிக்க வேண்டாம். அதன் பின் உள்ள மனோ தத்துவத்தை மட்டும் நான் பேசுகிறேன். இருவர் காதலிக்கிறார்கள் வேண்டாம் இருவர் பழகுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.்அதில் ஒருவருக்கு அந்த அனுபவம் புதிது. அது தான் இத்தப் பெண் சொன்னது போல் முதல் காதல்.்இவள் மனதில் இருக்கும் அதே மகிழ்ச்சி அதே அனுபவம் அடுத்தவருக்கு இருக்காது. ஆனால் இருப்பதாக இவள் நம்பிக் கொள்வாள்/ன். குறுகிய காலப் பிரிவு வரும் போது தன்னைப் போலவே அடுத்தவரும் துயரப்படுவார்கள் எனக் கற்பனை செய்து கொள்வாள். அது இருக்கலாம் இல்லாமலும் போகலாம். அவரால் சரி செய்ய முடியாத பிரிவை தான் சரி செய்து விடலாம் என நம்புவாள். அதற்கு எடுக்கும் முயற்சியைத் தான் நாம் டாக்சிக் என்கிறோம். அனேக சமயங்களில் பிரிந்து செல்பவர் தான் பழகுவதற்கு முதல் அடியை எடுத்து வைத்திருப்பார்கள். ஏன் அழுத்தம் கூட கொடுத்திருப்பார்கள் அவர்களைப் பொறுத்தவரை தான் ஆசைப்பட்டதை அடைந்த உடன் அவர்கள் நிறைவடைந்திடுவார்கள். அதனால் தான் அடுத்து நகர முடிகிறது. நகர முடியாத ஒருவர் முயற்சி செய்வதோ முடியாத போது தற்கொலை செய்வதோ நடக்கிறது. நான் இங்கே பெண்ணுக்காக வக்காலத்து வாங்கவில்லை. ஆண் பெண் இருவரிலுமே பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். பழகத் தொடங்கிய உடன் அதை நண்பர்களிடம் பிரகடனப்படுத்திய ஒருவனுக்கு பிரிய நினைத்ததும் பகிர ஆட்கள் இருக்கிறார்கள். அதில் கிடைக்கும் சரியான/ தவறான உதவிப்படி அவன் வாழ்க்கை அமைகிறது. ஆரம்பத்தைப் பகிராத பெண் பிரிய நேரும் போதும் பகிர ஆள் இல்லாமல் தன் காதலனின் நண்பர்கள் மூலம் முயற்சி செய்கிறாள். அதைத் தான் டாக்ஸிக் என்கிறோம். இது இன்று நேற்று அல்ல. அன்றே பாடி வைத்தான் கவிஞன் " நினைக்கத் தெரிந்த மனமே உனக்குப் பழகத் தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா" என்று. பழகி விட்டதால் இறுதி வரை இருந்து தான் தீர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது ஒரு முறையான பிரிதலாக இருக்க வேண்டும். ஏனென்றால் இருவருக்கும் அந்தக் கடமை இருக்கிறது. ஒருவரிடம் நெருங்க எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள் அதே முயற்சி விலகும் போதும் காயம் படாமல் / படுத்தாமல் விலக எடுக்க வேண்டும். முயற்சிப்போம்.

31 March, 2026

கரிப்பு மணிகள் 3

"கரிப்பு மணிகள் " முதல் பதிப்பு 2013 இல் வந்திருக்கிறது. அதிலுள்ள ஒரு வரியைத் தருகிறேன். பதிமூணு வருடங்களுக்குப் பின்னும் இன்றும் அதே நிலை தொடர்வதை நினைத்துப் பாருங்கள். "பவருள்ளவ ( இந்தக் கதை நெடுக இறுதியில் வர வேண்டிய " ன்" னை விட்டே எழுதுகிறார்கள். விடும் போது பால் மாறி விடுகிறது. ஆணைப் பற்றிச் சொல்வது பெண் போல் குறிப்பிடப்பட்டு விடுகிறது. ஆனால் அது அங்கு உள்ள பேச்சு மொழி போல) சேட்ட செஞ்சா அது லாவம்னு அடங்கிப் போற பெண்டுவளத்தா இது வரைக்கும் நான் கேள்விப்பட்டிருக்கே. பாத்துமிருக்கே நீ தான் தயிரியமா எடுத்துச் சொல்றே" பல பெண்கள் தாம் வரம்பு மீறிக் கையாளப்படும் போது கையாள்பவன் பவருள்ளவனாக இருந்தால் அவனுக்கு தன்னைப் பிடித்ததே பெரும் பாக்கியம் என்பது போல் உணர்ந்து வளர விடுகிறார்கள். அது கை மீறிப் போகும் போது வெளியிடுகிறார்கள். அப்போ அதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகிறது. இந்த நிலை இன்று வரை இருக்கிறது. மாற்றம் பெண்களிடமிருந்தே தொடங்க வேண்டும். மிக அழகாகவோ, திறமையாகவோ, பொருளாதார வசதியோடோ so called பவருள்ளவனாகவோ இருக்கும் ஒருவன் "உன் விருப்பமின்றி" உன்னைத் தொட்டாலும் எதிர்க்கப் பழகு. இத்தகைய சிறந்த ஒருவனுக்கு நம்மைப் பிடித்ததே பெரிய விஷயம் என பெருமை கொள்ளாதே. அவன் வேலை முடிந்ததும் உன்னைத் துச்சமாய் தூக்கி எரிவான். மீண்டும் வருவேன்.

30 March, 2026

கரிப்பு மணிகள் 2

கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன். இதை வாசித்த பின் இனி சமையலில் உப்பிடும் போது நம் கண்ணீர் துளிகளும் இணைந்து உப்பின் சுவை கூடிப் போகலாம். எத்தனை விதமான கஷ்டங்களைக் கடந்து இந்த உப்பு நம்மை வந்து சேருகிறது என நமக்கு புரிய வைக்கும் ஒரு நாவல். இது வரை வாசிக்காதவர்கள் வாசிக்க வேண்டிய ஒன்று. உப்பளத்தில் பணிக்கு வரும் இளம் பெண்களுக்கு உபத்திரவம் கொடுக்கும் கங்காணிகள். சம்மதிக்க மறுப்பவர்களுக்கு பணி மறுப்பு. "போய்த் தொலையுது" ன்னு சம்மதிச்சிட்டால் அடுத்து குழந்தை சுமக்கும் துயரம். தொடர்ந்து வரும் பேறு கால அவதி. அன்னக்கிளி அந்த வெள்ளை வெளேரென்ற உப்பளக் களத்தில் தன் இரத்தம் சிதற விழுந்து கிடப்பதை விவரிக்கும் போது உப்பின் நிறம் சிவப்பாக உறுத்துகிறது. ப்பா!! என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத காட்சி. "கண்டவனுக்கும் முந்தி விரிச்சு வயித்துல பிள்ளை வாங்கிட்டு வந்து நம்ம உசுர வாங்குதுங்க" ன்னு வசைச் சொல் வேறு. அந்த நேரத்தில் பிறக்கும் குழந்தையும் பெண் பிள்ளையாகப் போக நமக்கே "ஐய்யோ! அடுத்தும் ஒரு பொட்ட பிள்ளையா" என அடி வயிற்றிலிருந்து ஒரு கூக்குரல் எழும். உணர்வு சரியா பிரதிபலிக்கணும்னு பாதிக்கும் இடம் வரும் போதே ஒரு பதிவைப் போட்டு விடுகிறேன். மீண்டும் வருவேன்.

28 March, 2026

கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

அதிகம் கேள்விப்பட்டு நான் இது வரை வாசிக்காமலிருந்த நாவல் மூத்த தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய "கரிப்பு மணிகள்" தற்போது ஊரக நூலகத்தில் கிடைத்து வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். முதல் அதிகாரத்தில் நான் பார்த்த சிறப்பு அம்சம் வட்டார மொழியில் கதை எழுதுபவர்கள் பயன்படுத்த வேண்டும் எனத் தோன்றியதால் உடனே குறிக்கிறேன். வட்டார மொழி வார்த்தைகளின் அர்த்தம் புரியாமலே வாசிப்பது ஒரு குறையாகவே என் மனதில் இருந்தது. அவர்கள் கதையில் அதிகம் புழங்கப்படாததாக வரும் வட்டார மொழிச் சொல் வரும் இடத்தில் பக்கத்திலேயே அதன் அர்த்தத்தை அடைப்புக் குறிக்குள் போட்டு இருக்கிறார்கள். அது அர்த்தம் புரிவதாக மட்டுமல்லாமல் அது பயன்படுத்தப்படும் வேறு இடங்களிலும் நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. மொத்தமாக இறுதியில் வட்டார மொழிச் சொற்களும் அதன் அர்த்தங்களும் இருப்பதை விட இது நல்லா இருக்கிற மாதிரி எனக்குத் தெரியுது. வாசிப்பாளர்கள் தங்கள் கருத்தை பகிரவும்.

26 March, 2026

Couple friendly - Tamil film

Can i have a hug? இந்தக் காலப் பிள்ளைங்க எவ்வளவு சுலபமா ஒரு கட்டிப்பிடி வைத்தியத்தை கேட்டு வாங்கித் தான் பலவீனப்பட்ட நேரத்தில் தன்னை பலப்படுத்திக்கிறாங்க என்பதை அழகான ஒரு காதல் படமா பார்க்க, நீங்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய படம் "Couple friendly" amazon prime ல இருக்குது. மூலம் தெலுகுன்னு நினைக்கிறேன். தமிழிலும் இருக்குது. ஹீரோ ஷிவா ( சந்தோஷ் ஷோபன்) ஹீரோயின் ( மானசா வாரணாசி) வாய் பேச முடியாத நடிகை அபிநயா போல சாயல். ஒரு வேளை உறவாக இருக்கலாமோ? இதர முக்கிய கதாபாத்திரங்கள் யோகி, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் . இசை : ஆதித்யா ரவீந்திரன். ஒன்றிப் போக வைக்கும் இசை. இயக்குநர் : அஸ்வின் சந்திரசேகர். நாயகன் திருச்சியில் இருந்தும் நாயகி நெல்லையில் இருந்தும் சென்னை செல்வதாகக் காட்டுகிறார்கள். இது தமிழில். மூலப் படம் தெலுகு. Interior decoration எடுத்து வேலை செய்ய ஆசைப்படும் ஒருவர் சரியான வேலை கிடைக்காமல் தத்தளிக்கும் போது rapido மாதிரி bike booling மூலம் சம்பாதிக்கிறார். Bike booling என்கிறார்கள். Rapido வுக்கும் bike booling க்கும் என்ன வித்தியாசம் தெரியல. அப்படித் தான் கதா நாயகனும் நாயகியும் அறிமுகமாகிறாங்க. நாயகிக்கு தங்க இடமே கிடைக்காத போது rent sharing ல ஒரே வீட்டில் தங்கி அந்நியோன்யமாகுறாங்க. அது என்னங்க மொட்டை மாடியில படுக்கிறது கேள்விப்பட்டு இருக்கிறோம். மொட்டை மாடியிலும் உள்ள ஒரு அறையின் மேலே போய் ஹீரோ தூங்குறார். உருண்டு விழுந்தா என்ன ஆகிறது. ஆனாலும் அங்கே படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கிறது டிவைன். அதுவும் ஜோடியா படுத்துக்கிட்டு பார்க்கும் போது சான்சே இல்ல. பல இடங்களில் DOP கலக்கி இருக்கிறார். இப்ப 2k kids வாழ்வியல் முறையைக் காட்டும் படங்கள் வரத் தொடங்கிடுச்சு. இதுவும் அந்த வகையில் ஒன்று தான். இப்போ உண்மையான காதல் இல்லை. பிடிக்கலைன்னா உடனே பிரிந்து வேற ஆளப் பிடிச்சிடுறாங்கன்னு சொல்றோம்ல. அது இல்ல. "நீ என்னை விட்டுட்டு போயிட மாட்டேல்ல" என்று ஒரு இடத்தில் நாயகனும், ஒரு இடத்தில் நாயகியும் கேட்பது போன்ற காதல். எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்களும் பார்த்திட்டு சொல்லுங்களேன்.

17 March, 2026

மிண்டியும் பறஞ்சும் அமேசான்

அமேசான் ப்ரைம் மலையாளம் இயக்குநர் : அருண் போஸ் முக்கிய நடிகர்கள் : உன்னி முகுந்தன், ( சனல்) அபர்ணா பால முரளி. ( லீனா வர்கீஸ்) ஜாஃபர் இடுக்கி ( வர்கீஸ், லீனாவோட அப்பா) , மாலா பார்வதி ( சனலோட அம்மா. மலையாளத்தில் மிண்டுறதுன்னாலும் பறையறதுன்னாலும் ஒரே அர்த்தம் தானே என்று சிந்தித்த படி படம் பார்க்கத் தொடங்கினால் மனதோடு மனது நெருக்கமாக பேசுவதற்கு பயன்படுத்துவது என்பது புரிந்தது. சரி தானா ன்னு மலையாளம் தெரிந்தவர்கள் தான் சொல்லணும். படத்துக்கு பெயர் மிகச் சரியானது கணவனை நினைத்து மனைவியும் மனைவியை நினைத்து கணவனும் முடிவெடுக்கிறார்கள். ஒரு சிலரது வாழ்க்கை எதிர் பாரா நிகழ்வுகள் நிறைந்ததாய் மேடும் பள்ளமுமாய் இன்பமும் துன்பமுமாய் கலந்து இருக்கும். ஒரு சிலருக்கு வாழ் நாள் முழுவதும் துன்பம் மிகுந்ததாய் இருக்கும். ஆனால் அபூர்வமாய் வெகு சிலருக்கு எந்த வித சிரமமும் இல்லாமல் ஐஸ் க்ரீம் தொண்டையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல் சுலபமாய் இருக்கும் வாழ்க்கை. இந்தக் கடைசி வகையைச் சேர்ந்தவர்களின் கதை தான் படம். ஹீரோ வெளி நாட்டிலிருந்து தன் மனைவியைப் பார்க்க வருகிறார். விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்குச் சென்று தாயைக் கண்டு, தங்கையின் கணவரின் காரை எடுத்துக் கொண்டு மனைவியை வந்து சந்திக்கிறார். இதற்கு இடையில் ஒவ்வொரு நிகழ்வுக்கு தொடர்பாய் பழைய காட்சிகள் ப்ளாஷ் பேக்கில் இடைச் செருகலாய் வருகிறது. கணவன் மனைவிக்கு இடையே ரொம்ப மென்மையாய் காதல் சீண்டல்கள். அருமையான பாடல்கள். எந்த ஒரு வில்லத்தனமும் இல்லாமல் வரும் அத்தனை கதா பாத்திரங்களும் மிக நல்லவர்கள். இப்படியான வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமற்றதாய் இருக்குமோ என நான் நினைத்தது மட்டுமே வில்லத்தனம். அழகான கதாநாயகன், நன்கு மெலிந்து உடல் எடை குறைத்த அழகான கதா நாயகி. இவர்களின் காதல் வீட்டுக்குத் தெரியும் போதும் பெரிதாய் பிரச்னையில்லை. பெரு மழையோடு பல நிலச் சரிவுகள் நடக்கும் பாதையில் சனலில் சுமுகமான பயணம், காதல் திருமணம் செய்த கணவனும் மனைவியும் திருமணமான ஆரம்பத்திலேயே நாடு விட்டு நாடு பிரிந்து இருந்தாலும் அவர்களிடையே எந்த ஒரு சிக்கலும் இல்லை. இப்படி போக்குவரத்தற்ற சாலையில் ஆட்டோ கியர் வண்டியில் பயணம் போவது போல் ஒரு படம் பார்க்க ஆசைப்பட்டால் இந்த படத்தைப் பார்க்கலாம்.

16 March, 2026

மான் குட்டிகளும் பருந்துகளும்.

மான்குட்டிகளும் பருந்துகளும் தொகுப்பாசிரியர் ஜெ.பி. ஜோஸபின் பாபா. உலகின் பல பகுதிகளிலிருந்து 21 பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து உருவான புத்தகம். நான் அதிலுள்ள ஒரு சில கதைகளைப் பற்றி சின்ன சின்ன குறிப்புகள் தருகிறேன். வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாங்குவதற்கு கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். சுவாசம் பதிப்பகம் ஹரன் பிரசன்னா. அலைபேசி எண் 8148066645 கோவையைச் சேர்ந்த அகிலாவின் எழுத்துக்கு நான் ரசிகை. அதனால் "காயம்" என்ற அவர்களின் சிறுகதையை முதலில் எடுத்து வாசித்தேன். ஒவ்வொரு பெண்ணுக்குமே சிறு வயதில் நடந்த நிகழ்வால் , யாரிடமும் சொல்ல முடியாமல் போய் , அழுத்தமான காயமாய் மனநில் பதிந்த விஷயம் ஏதாவதொன்று இருக்கும். அது இல்லாத பெண் பாக்கியசாலி. ஆரோக்கியமான குடும்ப வாழ்வைப் பெற்றிருப்பாள். அத்தகைய ஒரு பெண்ணின் கதை தான் காயம். ஊட்டி போகும் வழியிலுள்ள கேத்தியின் இளங்காலைப் பொழுதின் வர்ணனையோடு கதை தொடங்குகிறது. அங்கே யூக்கலிப்டஸின் மணம் எல்லா வீடுகளிலும் இருப்பதற்கான காரணமாக இவர் சொல்லப்படுவது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம். "கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. வெகு சகஜமாக பாலம் போட்டு விடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை பேச முற்படாதவர்களாக சங்கோஷப்படுபவர்களாக கொள்ளலாம்" என்கிறார். மன நலம் சார்ந்த மிகச் சரியான உண்மை. திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கூறுகையில் "ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும். திமிரா பேசும். அப்புறம் எவன் பார்த்துகிட்டு சும்மா இருப்பான் " என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்வதாக எழுதி தற்கொலைக்கான காரணத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இதே போல தன் இள வயதில் நடந்து நேர் மறை முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுவாரஸ்யமாகச் சொல்லி கதையை நகர்த்திய தருணத்தில் "அப்படியும் இருக்கலாமென நினைத்தேன்" என்று எழுதி அதிர்ச்சி தருகிறார். சிறு குழந்தைகளை சிறு வயது தானே என்று எண்ணி அலட்சியமாக நடத்தாதீர்கள். அது அவர்களின் உள் மன ஆறாதக் காயமாக இருந்து வளர்ந்த பின் குடும்ப வாழ்க்கையைக் கூட பாதிக்கும் வாய்ப்புண்டு் புத்தகத்தை வாங்கி வாசித்து இன்புறுங்கள்.

15 March, 2026

நகுலனின் நாலு கட்டு வீடு - குமரி உத்ரா

" நகுலனின் நாலு கட்டு வீடு" ஆசிரியர் : குமரி உத்ரா. வேரல் பதிப்பகம் . விலை : 140 ரூபாய் . முதல் பதிப்பு : ஜனவரி 2026 . இந்த சிறுகதை தொகுப்பிற்கு அழகான முன்னுரை கொடுத்திருக்கிறார் நட. சிவகுமார். இவர் குமரி உத்ராவின் கதைகள் மருத நிலப்பரப்புக்குள் உலாவும் உதிரி கதை மாந்தர்களைச் சுமந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் போல் நகருகிறது என்கிறார். தன் 14 வயதுக்குள் தான் பயணப்பட்ட பாதைகளில், வழித்தடங்களில் தன் கண்ணில் பட்ட காட்சிகளையும், செவி வழி கேட்ட நிகழ்வுகளையும் , தன் அனுபவங்களாகவும் கதைகளாகவும் லேசாக தொட்டு விட்டு சென்றதாக சொல்கிறார் உத்ரா. இது 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு . முதல் கதை அரளிப்பூ. வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதை. உழைப்பாளி மேனகா. எல்லோரும் அவளை மேனா என்றே அழைக்கிறார்கள். அதனால் மேனகா என முழுமையாக அழைக்கும் சின்னப் பண்ணை அழகுவை அவளுக்கு ரொம்ப பிடிக்கிறது. மேனகாவின் துள்ளலான வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது கதை . வீட்டில் வளரும் அரளிச் செடியைப் பற்றி சொல்லும் போது அரளிச்செடியின் வேர் மருந்தாக பயன்படுவதைச் சொல்லி " கெட்டது 10 இருந்தா நல்லது இரண்டு இருக்கும். நல்லதை மட்டும் நாம பயன்படுத்தணும் என்கிறார் வைத்தியர். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் தானே. அரளிச்செடி ஒரு தவறான கதை முடிவுக்கு நம்மை அழைத்துச் சென்றாலும், நேர்மறையாகவே முடித்திருக்கிறது. "முட்டை கிறுக்கி" இரண்டாவது கதை. பாளை தெற்கு பஜார் சர்ச்சின் வாசலில் இருந்து ஸ்வட்டர் பின்னும் ஒரு வட இந்திய பெண் நினைவுக்கு வந்தார். அம்மா இல்லாத சமயம் சோறும் குழம்பும் இரண்டு வகை காய்கறியுடன் கொடுக்கும் மகளுக்கு வாழையிலை போட்டு சாப்பாடு கொடுக்க வெகு நாள் ஆசை. நாம மட்டும் சுட சுட தோசை சாப்பிடுகிறோம் ஆனால் ராப்பாடிக்கு மட்டும் கண்ணில் படாமல் வைத்து விடுகிறோம் அது தவறு என்று உட்கார வைத்து தோசை சுட்டு போட்ட ஒரு அண்ணன் இதை வாசிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தார். "கல்யாண குழியான்" என்றொரு கதை. சந்திரி, பஷீர் என்ற இரண்டு குழந்தைகளின் கல்மிஷமில்லா அன்பு. பஷீரின் தந்தை சில மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருக்க சந்திரி சொன்னதைக் கேட்டு மதம் தாண்டி கோயிலில் இரு குழந்தைகளும் பிரார்த்திப்பதை சொல்லும்போது இப்படி இருக்கும் குழந்தைகள் தானே வளர்ந்த பிறகு மதத்தின் பெயரால் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்கிறார்கள் என்று தோன்றியது. " நூல் சேலை" தாய் இறந்த செய்தி கேட்ட இளைய மகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது அவளை அணைத்துப் பிடித்த அக்காவின் அன்பை சொல்லும் கதை. " இளையவளாய் பிறந்த என் சின்ன மகள் ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள் என்ற பெருமை முகம் அவளிடம் தெரிந்தது." இந்த வரி என்னைப் போன்ற தமக்கை இல்லா பெண்களுக்கும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தும். " அன்று பிடித்தது போல அவள் உடம்பு இப்போது கைகளில் இல்லை எனப் புரிந்தது " உத்ராவின் எழுத்து வன்மைக்கு ஒரு சான்று இந்த வரி. " மஞ்சாடி முத்துக்கள்" தன் வீட்டுக்கு வேலை செய்ய வந்த தேனம்மையின் தன் வயதுப் பேத்தி மல்லிகா வளர்ந்த பின் அதே ஏழ்மை நிலையில் பார்த்ததைச் சொல்லும் கதை . " அவள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இரண்டாம் முறை சந்திக்க வாய்க்கும் போது பார்க்காமலே விலகிச் செல்லும் பாங்கு . உணர்வுபூர்வமான கதை. " வாயில் வெற்றிலையை மென்று கன்னம் ஓரமாக ஒதுக்கி வைத்து உப்பிய கன்னத்துடன் கை வீசி பெண்ணைப் போல நடக்கும் ராஜப்பனின் தாய்மைக் கருவாக்கி வரைந்த கதை வவுலாடி . ஒன்றிரண்டு கதைகள் பலமுறை சொல்லப்பட்ட கருக்கள் கீட்சிகளைச் சொல்கின்றன என்ற சின்ன குறையைத் தவிர்க்கலாம் . புத்தகம் விரும்புவோர் கீழ்க்கண்ட என்னை தொடர்பு கொள்ளவும். குமரி உத்ரா : 94865 56166

12 March, 2026

மாதவியின் கண்ணழகில் மயங்கிப் போன கோவலன் போல் வாயு அடுப்பில் கிறங்கிப் போய் கரியடுப்பை மறந்த நாங்கள் இன்று கண்ணகியிடம் திரும்பிய, திருந்திய கோவலனாய் விறகெரிக்க முடிவெடுத்துத் தேடினால் நிழல் தரும் நல்ல மரங்களை அல்லவா வெட்டிச் சாய்க்க வேண்டும் போல.

11 March, 2026

தமுஎச வி எம் சத்திரம் கிளை நடத்திய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை பாளை சரோஜ் நினைவகத்தில் பேராசிரியர் முத்துலட்சுமி அவர்கள் தலைமை ஏற்று நடத்தித் தந்தார். திரு வண்ணமுத்து அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.சி.த. இஷா & ச.ஜீவன் கவிதை வாசித்தார்கள். சாகித்ய அகடமி விருதாளர் முனைவர் விமலா " தமிழிலக்கியப் புலத்தில் பெண்ணியப் போக்குகள்" என்ற தலைப்பில் பேசினார். "பெண் சந்தித்த முதல் தோல்வி தான் முதன்மை இடத்திலிருந்து இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது தான் என்றார். உண்மை தானே . ஆதியிலே தாய் வழிச் சமூகமாக இருந்து ஒரு மூத்த தாய்க் கிழவியின் பேச்சு கேட்டு நடந்த சமூகம் பற்றி நாம் அறிந்தது தானே. பாரதியார் பெண் விடுதலை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் ஒருவர் " எவ்வளவு புரட்சி பேசினாலும் சாலையில் நடந்து வரும் போது உமக்கு பத்தடி தள்ளி பின்னால் தானே உங்க மனைவி மனைவி வர்ராங்க" என்று கேட்ட உடன் தன் மனைவியின் தோளில் கை போட்டு அக்ரஹாரத்தில் உடன் அழைத்துச் சென்றவர் பாரதியார் என்பதை நினைவுபடுத்தினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சத்யா ஒரு அருமையான கருத்தினைச் சொன்னார். பாலியல் பற்றி கொஞ்சமும் தெரியாத வயதில் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் அதுவே பெரியவர்களிடம் குழந்தைகளை தவறான இடங்களில் தொடாதே என அழுத்தி வலியிறுத்துவதில்லை என்றார். நம் பழக்கமே தவறு செய்யும் ஆண்களை விட்டு விட்டு பெண்களிடம் நீ சரியான உடை அணிந்து வா என சொல்வது தானே. பாப்பாக்குடி செல்வமணி அவர்கள் " உலகம் ரொம்ப மாறி விட்டது. என் மனைவி மகன்களிடம் நல்லா வீட்டு வேலை செய்யப் பழகிக்கோ. அப்போ தான் கல்யாணமாகிப் போற இடத்துல அடி வாங்காமத் தப்பலாம் " என்று சொல்லி வளர்ப்பதாகச் சொன்னார். அது நகைச்சுவைக்காக மட்டும் அல்ல உண்மையிலேயே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றத்தைத் தான் குறிப்பிடுகிறார். ஆனாலும் அந்த குழந்தைகளின் தாய் பாராட்டுக்குரியவர்களே! தமிழ்நாடு அரசு சிறந்த பெண் குழந்தை விருது பெற்ற சூடாமணிக்கு பொன்னாடை போற்றி பரிசளித்தார்கள். சமூகப் போராளி துளசியம்மாள் " பிணம் எரிப்பது உட்பட பெண்கள் பங்களிக்காத தொழில் என்று எதுவுமே இன்று இல்லை. " என்றார். அவர் சொன்ன இன்னொரு கருத்தை என்னை வெகுவாகக் கவர்ந்தது. "எட்டு மணி நேரம் உழைப்பு போராடிப் பெற்றுக் கொடுத்தார்கள். அது ஏன் எட்டு மணி நேரம் உழைப்பு என்றால். எட்டு மணி நேரம் உழைப்பு , எட்டு மணி நேரம் உறக்கம் , எட்டு மணி நேரம் ஓய்வு. ஓய்வு என்பது பெண்களுக்கான நேரம் என்றார். சரி தானே " மீ டைம் " என்று இன்றைய பெண்கள் குரல் எழுப்பும் அந்த ஓய்வுக்கான எட்டு மணி நேரத்தில் தான் பெண்கள் குடும்பத்தின் உயர்வுக்காக வெளியே சென்று உழைக்கக் கற்றுக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் போனது. எட்டு மணி நேரம் கூட வேண்டாம். நமக்கான விருப்பத்துக்காக சில மணி நேரங்களையாவது ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலையை ஐடி போன்ற துறைகளில் தம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆட்டோ ஓட்டும் பெண்களைக் கௌரவிப்பது, தோழர் நாறும்பூநாதன் வார்த்தெடுத்த தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை சூடாமணியை பாராட்டுவது, வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நடனம், கவிதை வாசித்தல் என வாய்ப்புக் கொடுப்பது என மகளிர் தின நிகழ்ச்சி களை கட்டியது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அமைத்துத் தந்த தோழர்களுக்கு பாராட்டுகள்.

09 March, 2026

மகளிர் தினம் 2026

பாளை சரோஜ் நினைவகத்தில் 7.3.2026 அன்று தமுஎச வி.எம் சத்திரம் கிளை முன்னெடுத்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. போன உடன் நான் கண்டது மொத்தமாக பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடையுடன் வட்டமாக அமர்ந்திருந்த காட்சி. நம்ம ஊர்ல இத்தனை பெண் ஆட்டோ ஓட்டுனர்களா? ஆச்சர்யப்பட்ட நான் உடனே போய் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். பேரா. முத்துலட்சுமி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனரான நெல்லையைச் சேர்ந்த காந்திமதி இருக்காங்களான்னு கேட்டு, திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுனர் பற்றிய என் பதிவு 1,70,000 வியூஸ் போனதைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் வரவில்லை. ஆனால் பெண் ஆட்டோ ஓட்டுனர்களை ஓரணியாக்கி பொறுப்பேற்று செயல் பட்டுக் கொண்டிருக்கும் தோழர் ஜெயஸ்ரீ அவர்கள் தான் அவரிடம் நான் விசாரித்ததை சொல்வதாகக் கூறினார்கள். அவர்களை மகளிர் தினத்தன்று மரியாதை செய்வதற்காக அழைத்திருந்தார்கள். துணிச்சலாக பெண்கள் எல்லா துறைகளிலும் இறங்குவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. பதிவு எழுதும் போது ஒரு விஷயத்தை வலியுறுத்தச் சொன்னார்கள். "நெல்லை புது பஸ் நிலையத்தில் பெண்களுக்கான தனி ஆட்டோ ஸ்டான்ட் கேட்டு ஆட்சியாளரிடம் மனு கொடித்திருக்கிறார்களாம். அதை செஞ்சு கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி எழுதுங்கம்மா" என்றார்கள். சாராள் டக்கர் கல்லூரி அருகில் உள்ள நிலையத்தில் ஐந்து பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் காத்து இருக்கிறார்களாம். சிறப்புல்ல !!!! பெண்கள் கல்லூரி அருகில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பது வெகு சிறப்பு. உரியவர்களின் கவனத்துக்கு இது எப்படியும் போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு் . செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையோடு வேண்டுகோள் வைப்போம். செய்து கொடுங்கள் ஐயா. வணங்குகிறோம். நிகழ்ச்சி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன். காத்திருங்கள்

02 March, 2026

நெல்லை சாரதா கல்லூரி. பல ஆண்டுகளுக்கு முன் தொலைபேசி அதிகாரியாகப் போய் கல்லூரி முதல்வரின் அறையில் ப்ராட் பேன்ட் சரி செய்து வந்திருக்கிறேன். அதன் பின் சமீபத்தில் என் தோழி உடனும் அவள் தோழியுடனும் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. தான் படித்த கல்லூரியை இருபதாண்டுகளுக்குப் பின் பார்க்க ஆசைப்பட்டாள். எங்க வீட்டிலிருந்து கிளம்பும் போது சுரிதார் வேண்டாம் , புடவைக்கு மாறிக் கொண்டு வா என அவள் தோழி சொன்னதும், நான் சுரிதாரில் இருக்கிறேனே பரவாயில்லையா எனக் கேட்டேன். நாங்க அந்த கல்லூரி மாணவர்கள். படிக்கும் போது புடவைக்கு மட்டுமே அனுமதி. அதிலும் அர்ஷா அங்கே உள்ள பல மாணவிகளுக்கு ரோல் மாடலாக இருந்தவள். அதனால் சொன்னேன் என்றாள். போகும் போது "அம்மா, பதினைந்து நிமிடம் தான். எனக்கு முக்கியமான இடங்களில் நின்று புகைப்படம் எடுக்கணும். எடுத்திட்டு கிளம்பிட வேண்டியது தான் " என்றாள். ஆனால் கல்லூரியில் நாங்கள் இருந்தது இரண்டு மணி நேரம். எனக்கு அந்த பிள்ளைகளின் சந்தோஷத்தை "நேரமாகுதுன்னு" சொல்லி கெடுக்க மனமே வரல. கல்லூரி முதல்வர் இவ்வளவு down to earth ஆ இருந்து ஒருவரை நான் பார்த்ததே இல்லை. பழைய மாணவிகளிடம் எவ்வளவு நினைவுப் பகிர்வு. என்னிடம்" நீங்கள் எத்த வருடம் இங்கே படித்தீர்கள் " என்று கேட்டார்கள். "நான் இந்த கல்லூரியில் படிக்கவில்லை. " என்று நான் படித்த கல்லூரியின் பெயரைச் சொல்லி என் வயதைச் சொன்னதும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. "இவ்வளவு வயதா? நம்பவே முடியல" என்று எனக்கு உற்சாக பானமளித்தார்கள். "இவ்வளவு கட்டுப்பாட்டில் வளரும் போது பெண் குழந்தைகள் திருமணத்துக்குப் பின் வாழ்க்கையை சுலபமாக எதிர் கொள்கிறார்களா" எனக் கேட்டேன். "நிச்சயமாக. விட்டுக் கொடுத்தலும் பணிந்து நடப்பதும் இயல்பாகவே வந்து விடும்" என்றார்கள். இவர்கள் கல்லூரிக்குள் ஆண்களுக்கு அனுமதி இல்லை. மாணவிகளை அழைத்துச் செல்ல வந்தவர்களும் கல்லூரிக்கு வெளியே தான் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காத்திருக்கிறார்கள். பெற்றவர்கள் பெண் குழந்தைகளை இந்த கல்லூரிக்கு அனுப்பி விட்டு நிம்மதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அந்த நேரம் வகுப்புகள் முடிந்ததற்கான மணி அடித்ததும் மாணவிகள் பட்டாம் பூச்சிகள் போலப் பறந்து வந்தார்கள். இவ்வளவு கட்டுப்பாட்டிற்கான எந்த நெருக்கடியும் அவர்கள் முகத்திலில்லை. ஒரு வகையில் குழந்தைகளுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுப்பதும் அவர்களுக்கு நாம் செய்யும் தீமையோ எனத் தோன்றுகிறது.

19 February, 2026

நாவல் : குட்டிமா. ஆசிரியர் : அராத்து Auto narrative Publishing விலை 500/- ரூபாய். முதல் பதிப்பு : ஜனவரி 2026 சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நாவலின் ஆசிரியரைப் பார்த்து ஒரு ஆணாதிக்கவாதி. பெண்களை மதிக்காதவர் என்ற கருத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் பார்க்க வேண்டும் என்று தான் புத்தகத்தை வாங்கினேன். பெண்கள் தாமே தம்மை அடிமைப்படுத்திக் கொண்டு கிடப்பதைப் பார்த்த ஆதங்கம் தான் எழுத்தில் வெளிப்படுகிறது. கொஞ்சம் "ரா" வாகத் தான் எழுத்து இருக்கிறது. ஆனால் நான் பதின்ம வயதிலிருந்தே ஆங்கில நாவல்கள் வாசித்துப் பழக்கப்பட்டவள் என்பதால் என்னைத் தயார்படுத்திக் கொண்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். , ஆரம்பமே பதை பதைக்க வைக்கிறது. கதை நாயகி சிந்துவின் ( இரண்டு கால்களையும் விபத்தில் இழந்த) தகப்பன் தன் மனைவியுடன் உடையின்றி இயங்கிக் கொண்டிருப்பதை சிந்து பார்த்து விடுகிறாள். ச்சீ!! இதையெல்லாம் எப்படி வாசிக்கிறது என்பவர்கள் இந்த இடத்தில் நகர்ந்து விடலாம். பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளோடு உறவு கொண்டு விடலாம். ஆணுக்குத் தான் அது சிரமம் என்று நினைத்திருந்த என் நம்பிக்கையை தவிடு பொடியாக்கியது இந்த நாவல். ஒரு பெண் ஆரோக்கியமான திருமண வாழ்வு நடத்த அவளுக்கு அதிர்ச்சி தராத நியாயமான பால்யமும், பதின்ம காலமும் அத்தியாவசியம் என்பதைப் புரிய வைக்கத் தான் அந்த முதல் காட்சி. "அழகுப் பெண்கள் அடங்கி இருந்தால் ஆண்களுக்குத் தேவி. அந்தப் பெண்கள் சுதந்திரமாக பேச ஆரம்பித்தாலே காளி" வஞ்சி என்ற மிகத் தைர்யமான கதா பாத்திரம். தன் எமோஷனல் ஃபீலிங்குக்கு ஆண்கள் தேவை இல்லை. செக்சுவல் ஃபீலிங்குக்கு மட்டுமே தேவை" என்று மாத்தி யோசிப்பவள். எமோஷனல் ஃபீலிங்குக்கு ஆண்களைச் சார்ந்த பெண்கள் தானே ஏமாந்து போய் மரண வேதனை அனுபவிக்கிறார்கள். தேவைக்கும் அதிகமாய் பண வசதி கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் நான்கைந்து ஆண்களை தன்னைச் சீராட்ட அமர்த்திக் கொள்கிறாள் வஞ்சி. இதைத் தான் மாத்தி யோசிப்பவள் என்றேன். ஆசிரியர் , ஒரு ஆண் தன் பண பலத்தாலேயே பல பெண்களோடு உல்லாசமாய் இருப்பதை ரசிக்கிறீர்களே அதை வஞ்சி வழியாக மாத்தி யோசித்தால் உங்களுக்கு எவ்வளவு ஏற்பற்றதாய் இருக்கிறது என்று "ரா" வாக உணர்த்துகிறார். வீணா என்றொரு கதாபாத்திரம். இவள் சிந்துவுக்கும் வஞ்சிக்கும் நடுவாந்தரமாக இருப்பாள். வீணாவை வைப் ஒரு தேவதையைப் போல் பார்த்துக் கொள்வான். ஆனால் அவளாக ஆசை வந்து அந்தரங்கமாக தொட்டால் வெறி வந்தவன் போல் கத்துவான். அவனுக்கு இருக்கும் உடல் குறை மாத்திரை போட்டு நிவர்த்தி செய்து கொள்வதால் அவன் முடிவு செய்யும் போது தான் வீணாவை ஆராதிப்பான். வீணா வஞ்சியிடம் "தன் தூய்மையான தெய்வீகமான காதல் கதை" யை விளக்கிச் சொலறப்போ அடப் போங்கப்பா "எல்லா காதல் கதையும் தெய்வீகமானது தான்" என்று தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது் ஆசிரியர் ஆணாதிக்கவாதியோன்னு நினைச்சு வாசிக்கத் தொடங்கின கதை முடிக்கும் போது பெண்ணியவாதியோன்னு ஆகிடுச்சு. ஏன் சார் ரெண்டுக்கும் நடுவுல வாழ வழியிருக்குதா? சுரேந்தர் சிந்துவிடமும், முரளி வீணாவிடமும் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது "இப்படித்தானே ஒரு சில ஆண்கள் கணிக்கப்பட்ட காய் நகர்த்துதலில் பெண்களை வீழ்த்துகிறார்கள் என்று தோன்றியது. ரசித்த வரிகளில் ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறேன். " நாவல் முழுவதும் வாக்கியங்களும் வார்த்தைகளும் நாக்குப் பூச்சிகள் போல நெளிந்து கொண்டே இருந்தன." " அழகு என்பது புற அழகு மட்டுமல்ல. உள்ளிருந்து பெருகும் அழகும் புறத் தோற்றத்தில் அழகுறக் கலந்து ஒட்டு மொத்த அழகும் ஒளிர்ந்து மிளிர வேண்டும்" "மேட்டர் மேட்டர் என மேட்டர் ஒரு மேட்டரே இல்லை என்று ஆன பின் தான் அனைத்து விஷயங்களிலும் கருத்து மோதல் வரும்" பெண் மென்மையாகத் தான் புணர வேண்டும் என்று ஆண்கள் நினைப்பதாக ஒரு இடத்தில் வருகிறது. பெண் என்று பொதுமைப்படுத்துவதை விட "தன்" மனைவி, "தன் " கதை நாயகி, "தன்" ஆதர்ஷ மனுஷி என ஒரு சிலரை மட்டுமே இந்த வரையறைக்குள் அடைக்கிறது ஆண் மனம். காமத்துக்காக பணம் கொடுத்து செல்லும் பெண் இந்த வரையறைக்குள் வருவாளா? இல்லையே? ஒரு வித்தியாசமான நாவல் வாசித்த திருப்தியோடு முடித்தேன்.

06 February, 2026

தற்பொழுது அரசியலில் முக்கியமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்துக்கு லேசாக தொடர்புடைய ஒரு வெப் சீரீஸ் "குற்றம் புரிந்தவன்" சோனி லைவ்வில். ஏழு எபிஸோடுகள். இயக்கியவர் : செல்வமணி முனியப்பன். பசுபதி, விதார்த் ஆகியோர் முக்கியமான கதா பாத்திரங்களில். பசுபதி வைத்திருக்கும் விக் மிக இயல்பாக அவருக்குப் பொருந்துகிறது. பசுபதி, லட்சுமி பிரியா, லிஸி ஆன்டனி மூன்று பேருக்கும் நடிப்பில் கடும் போட்டி. விதார்த் நன்றாக நடித்திருந்தாலும் இவர்கள் அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. மருத்துவமனையில் மருந்தாளராக பணி புரிபவர் பாஸ்கரன் ( பசுபதி) அவர் மகள் இறந்து போன நிலையில் மருமகனும் இல்லாமல் போக நோய்வாய்ப்பட்ட பேரன் பாஸ்கரன் தம்பதியர் பொறுப்பில். அவர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் எஸ்தரின் குழந்தை காணாமல் போக கதை வேகமெடுக்கிறது. எதிர்பாராத எத்தனையோ திருப்பங்கள். பேரனாக வரும் குழந்தை தன் தந்தையுடன் யூட்யூபில் நடிப்பவர். தன் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து முகத்தில் பாவனை காட்டி இருக்கிறது. சோதனைகள் பல திசைகளில் தாக்குதல் நடத்தும் போது ஒரு நல்ல மனிதன் கூட தடம் புரள நேரிடுகிறது என்பதைக் காட்டுகிறது. கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பார்க்க வேண்டிய சீரீஸ்.

31 January, 2026

திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு இவ்வளவு ஆதரவு வரும்னு நான் நினைக்கல. பொதுவா நான் சந்தோஷமாவோ வருத்தமாவோ ஒரு விஷயம் என்னை பாதிச்சா முக நூலில் உடனே பதிந்திடுவேன். அப்படித் தான் இதுவும் நடந்தது. அந்த பெண்ணுக்கு ஏதும் தொந்தரவு வந்திடக் கூடாதுன்னு தான் விசிட்டிங் கார்ட் போடல. ஆனா இப்போ ஏதும் தொந்தரவு வராது. உதவி தான் கிடைக்கும் என்பது நிச்சயமானதால் பதிகிறேன். அவர் பெயர் ஷீலா. திருச்சி ரயில் நிலையத்தில் இருக்கிறார். அவர் தொடர்பு எண் 93442 69075. தேவைப்படுபவர்கள் இவர்களுடைய ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி. ( பி.கு : கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பிருந்து நெல்லையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. அடுத்து அவரை சந்தித்து எழுதுகிறேன்)
திருச்சியில் திருமணம் முடித்த கையோடு வேர்களைத் தேடிப் புறப்பட்டோம். என் கணவரோட சித்தப்பா இருப்பது காரைக்குடி அருகே பொய்யா வயல் என்னும் கிராமம். அவர் அப்பா கூடப் பிறந்தவர்களில் எஞ்சி இருப்பவர் இந்த சித்தப்பா மட்டுமே. அங்கே தான் என் மாமனாரோட கல்லறையும் அவங்க அம்மாவோட கல்லறையும் இருக்கின்றன. அனைவரையும் சந்திக்க காரைக்குடி சென்றோம். மறு நாள் பொய்யா வயல் செல்வதாக ஏற்பாடு. காரைக்குடியில் எங்கே தங்கலாம் என விசாரிக்க தெரிந்தவர்களை அழைத்தேன். தெரியவில்லை என்றாலும் "காரைக்குடி" யைத் தன் பெயரில் இணைத்திருந்தவர்களையும் அழைத்துப் பார்த்தேன். ஒருவரும் போனை எடுக்கவில்லை. பிறகு ஒவ்வொருவராக பேசி விட்டார்கள். அதற்குள் அறை முடிவாகி விட்டது. அருகிலுள்ள கடையில் விசாரித்து "சத்குரு" என்னும் லாட்ஜ்க்கு சென்றோம். நாளொன்றுக்கு வாடகை ரூபாய் 2300/- Double bed room. பக்கா ஏற்பாட்டுடன் வாசலில் தண்ணீர் தொட்டியில் தங்க மீன்கள் விரைவாக நீந்திக் கொண்டு இருக்க, செம வைப்பாக இருந்தது. அவர்களே cab book பண்ணுவதற்கான செல் எண்ணையும் கொடுத்து விட , நாங்க பேசி பத்து மணிக்கு வரச் சொன்னோம். மறு நாள் காலை சரியா 9.45 க்கு வந்து தான் வந்து விட்டதைத் தெரிவித்தார் ஓட்டுநர். அப்போதே ஒரு சிறப்பான ஓட்டுநரோடு தான் பயணிக்கப் போகிறோம் என்பது நிச்சயமாகி விட்டது. அடுத்து காரைக்குடி பற்றி பதிவுகள் வருகின்றன. அதையும் தவறாமல் பார்த்திடுங்க.

30 January, 2026

திருச்சியில் ஒரு திருமணம் . வழக்கம் போல் கணவர் கடின வழியைத் தேர்ந்தெடுத்து மதுரை வரை பஸ்சில் போய் பிறகு அங்கிருந்து இன்னொரு பஸ்சில் திருச்சி செல்லலாம் என்றார். நானோ சொகுசுப் பேர்வழி. இன்டர் சிட்டியில திருச்சி போகலாம் என்றேன். மனம் இறங்கிய கணவர் என் வழியை ஓகே பண்ணினார். திருச்சியில் இறங்கிய பின் அவரே பயணம் சிறப்பாக இருந்தது என்றார். இன்டர் சிட்டி திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு நெல்லை வருகிறது. 2.45 க்கு மதியம் நெல்லையிலிருந்து புறப்படுகிறது. திருச்செந்தூரில் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டு வந்த ஒருவர் இன்டர் சிட்டி தானே என உறுதிப்படுத்திக் கொண்டார். "வந்தே பாரத்" தோனு சந்தேகமா இருந்தது " என்றார். அவ்வளவு சுகமாக இருந்தது பயணம். அந்த அன்பர் ஐந்து வருடமாக குழந்தை இல்லாமல் வேண்டுதல் வைத்து குழந்தை பிறந்த 17 நாட்களில் பாண்டிச்சேரியிலிருந்து திருச்செந்தூர் வந்து வேண்டுதல் செலுத்தி செல்கிறார். மதுரையை இரண்டே மணி நேரங்களில் அடைகிறது. அங்கிருந்து திருச்சி செல்ல 2 3/4 மணி நேரம். திண்டுக்கல் வழியாக சுற்றிச் செல்கிறது. திருச்சியில் இறங்கியதும் ஆட்டோ ஓட்டுனர்களாக நிறைய பெண்களைப் பார்க்க முடிந்தது. சந்தோஷமா இருந்தது. அதனால் திருமண மண்டபத்துக்கு ஒரு பெண் ஓட்டிய ஆட்டோவிலேயே ஏறினோம். அந்தப் பெண்ணும் உற்சாகமாகப் பேசிக் கொண்டே வந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டுறாராம். இப்போது அவருக்கு 42 தான் வயது. அப்போ 30+ யிலிருந்து ஓட்டுகிறார். மிகவும் தைர்யமாக பேசிக் கொண்டு வந்தார். பத்து வருடங்களில் ஏதும் பிரச்னையை சந்தித்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். ஏதும் நிகழ்வைச் சொல்வார் எனக் காத்திருக்க இது வரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. என்றார். குடிச்சிட்டு சில சமயம் ஏறுவாங்க நான் பேசிப் பேசியே "பத்திரமா போ தங்கச்சி" ன்னு சொல்ல வச்சிடுவேன்னார். இதயத்தில் மூணு ப்ளாக் இருக்கிறது. சிறு வயதிலேயே கணவர் என்னைப் பிரிந்து விட்டதால் நான் சிங்கிள் பேரன்ட் தான் என்று பல அதிர்ச்சிகளை அடுக்கடுக்காக அளித்தார். எனக்கு இந்த துணிச்சல்காரி உடன் படமெடுக்க ஆசையேற்பட்டது. முக நூலில் போடவா என்றேன் "தாராளமா போடுங்க. என்னைப் பார்த்து ஒன்றிரண்டு பேர் தைர்யமானால் நல்லது தானே என்றார். இறங்கும் போது ஒரு விசிட்டிங் கார்ட் கொடுத்து அடுத்த தடவை வரும் போது என்னை அழையுங்கள். திருச்சியில் உள்ள கோயில்கள் எல்லாம் கூட்டிட்டுப் போய் காட்டுறேன் " என்றார். படத்தில் துணிச்சல் காரியுடன் பாவமாக நான். ஏன் பாவம் என்றால் இது வரை என்ன செய்து விட்டேன் என்று என்னை துணிச்சல்காரி என்று நம்பிக் கொண்டிருந்தேன் என்று என் மனச்சாட்சி மண்டையிலடித்து கேள்வி கேட்டதால். தான்.. தேவைப்படும் திருச்சிகாரர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் விசிட்டிங் கார்ட் புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.

25 January, 2026

Adhi Beekara Kamukhan

OTT : Amezon prime Adhi Beekara kaamukan (அதி தீவிர காதலன்) மொழி : மலையாளம். இயக்குநர் : CC நிதின் முக்கிய கதாபாத்திரங்கள்: லுக்மேன், த்ருஷ்யா ரகுநாத் இசை : பிபின் அசோக் ஒரு ஆணும் பெண்ணும் பழகும் போது உணர்வுப் பாதிப்பு இருவருக்கும் சம அளவில் இருக்காது. அது அவரவருடைய கடந்த கால நிகழ்வுகளைப் பொருத்து இருக்கும். அந்த காதல் தோல்வியுற்றால் பாதிப்பும் இருவருக்கும் சம அளவு இருக்காது. அதனாலேயே எதிர் பாலினத்தவரிடம் அக்கரை காட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செல்லம், தங்கம், அழகி என்பது ஒருவருக்கு வெறும் சொற்களாக இருக்கலாம். ஆனால் வேறொருவருக்கோ அவை உயிரை உலுக்கும் உலைக்களனாக இருக்கும். அதே போலத்தான் ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காட்டும் அக்கரை வெறும் மனிதாபிமானம் சார்ந்ததாக இருக்கலாம். அதுவே எந்த ஒரு பெண்ணின் அன்பையும் அனுபவித்திராத ஆணுக்கு உயிரை உருவி விடும் கொலைக் கருவி ஆகி விடும். இந்தப் படத்தின் கதை அப்படி பாதிக்கப்பட்ட ஒரு ஆணின் நிலையைப் பேசுகிறது. ஒரு விதத்தில் நாம் என்றோ பார்த்து விட்ட முரளி, ஹீரா இணைந்து நடித்த "இதயம்" படம் போல இருந்தாலும் லுக் மேன் தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற முகத்தால் நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறார். அவர் சிரித்தால் நாம் சிரிக்கிறோம். அவர் தோற்று தெருவோடு அடக்க முடியாமல் அழுது கண்ணீர் வடித்து சென்றால் நாமும் சோர்ந்து போகிறோம். படிப்பில் அதிக ஆர்வமில்லாத அர்ஜுனன் சில வருட இடைவெளிக்குப் பின் ஒரு பேராசிரியரின் உதவியால் கல்லூரியில் சேர்கிறார். தன் கூட்டாளிகளுடன் விளையாடி மகிழ்வாய் பொழுதைப் போக்கியவருக்கு கல்லூரிப் படிப்பு பெரும் பாரமாய் இருக்கிறது. அவனுடைய தாய் அவனைக் கல்லூரியில் விட்டுச் செல்லும் போது காட்டிய பரிவைக் கண்ட ஹீரோயின் அனு அதே அன்பை அவன் மேல் காட்ட அது வரை தன் தாயை மிஞ்சிய அழகி உலகில் இல்லை என நினைத்திருந்த மகன் முதன் முறையாக வேறொரு பெண்ணை தன் தாயை மிஞ்சிய இடத்தில் வைத்து காதலித்து உருகுகிறான். அந்த காதலைப் பெண்ணிடம் சொல்லும் தைர்யம் வராமலே நாட்களைக் கடத்துகிறான். ஆண்களுக்கு சொல்லித் தர வேண்டிய இன்னொரு அறிவுரை உனக்கு ஒரு பெண்ணைப் பிடித்தால் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.என்ன பேச வேண்டும் என்பதை நீ தான் முடிவு செய்ய வேண்டும். அதைச் சரியாக செய்ய முடியாமல் நண்பனின் வழி காட்டுதலில் நடந்தால் உன் வாழ்வின் தீர்க்கமான முடிவுகளை நீ எப்படி தனியாக எடுக்கப் போகிறாய். கதை என்ற அளவில் பார்த்தால் அறுதப் பழசான இன்ட்ரோவர்ட் பையனின் காதல் தோல்வி தான். அதைத் தன் நடிப்பால் பாவனையால் தூக்கி நிறுத்தி இருக்கிறார் லுக் மேன்.

சமூக ஊடகம் - மன உறுதி - அவசியம்

சமூக ஊடகங்களில் இன்று பலரும் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் கேரளாவில் தீபக் என்ற ஆண் ஒரு பெண் தன்னை சோஷியல் மீடியாவில் தவறாகச் சித்தரித்து விட்டாள் என்று தற்கொலை செய்திருக்கிறார். இந்த நேரம் எனக்கு இங்கே உங்களிடம் சொல்ல ஒன்று இருக்கிறது. நான் 2011 இல் இருந்து வலை உலகத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன். அப்போ "ப்ளாக்" என்னும் வலைப்பூவில் நம் மனதுக்கு பிடித்த படி எழுதுவோம். அந்தக் காலத்திலேயே நான் இத்தகைய இடரைக் கடந்து வந்திருக்கிறேன். சென்னைக்கு ஒரு முறை போய் வந்த போது சில பிரபலங்களைக் கண்டு வந்ததால் அவர்களைப் பற்றி தினம் ஒரு பதிவாகப் போட்டுக் கொண்டிருத்தேன். எங்கே இவள் பெரியாளாக ஆகி விடுவாளோ என பொறாமைப்பட்ட சிலரின் தூண்டுதலால் ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து என்னை "அக்கா" என்று அன்பாக அழைப்பவர் என்னைப் பற்றி தப்பும் தவறுமாக ஒரு பதிவு போட்டு விட்டார். தப்புத் தவறும் என்றதும் வேற மாதிரி யோசிக்க வேண்டாம். ரொம்ப மெனக்கெட்டு ஒரு வேலை செய்திருந்தாங்க. தூத்துக்குடியிலிருந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு நான் பணி புரிந்த இடத்துக்கு போகச் சொல்லி, ( என் கெட்ட நேரம் நான் அப்போ மெயின் அலுவலகத்துக்குப் போயிருந்தேன். ) என் பணி இடம் பற்றிய தகவல்களைச் சேகரித்து விட்டார்கள். அப்போது தான் தாம் சொல்லும் பொய் கொஞ்சம் உண்மை போலத் தெரியும் என்று. அவரது வலைப்பக்கத்தில், நான் என் கீழ் பணி புரிபவர்களை மிகவும் துன்புறுத்துவதாகவும் (😀) என் அராஜகப் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் பதிந்திருந்தார்கள். நான் கிளார்க்காக இருந்து அதிகாரி ஆனவள். அதனாலேயே என் கீழ் பணி புரிபவர்களிடம் என்னால் ரொம்ப தோழமையாக பழக முடிந்தது. அது தெரியாமல் இப்போது போலவே பதிவின் கீழ் என்னை "சொர்ணாக்கா" ரேஞ்சுக்கு திட்டி பலரும் கமென்ட் போட்டிருந்தார்கள். அந்த பதிவில் என்னைப் பற்றிய ஒரு வரியில் கூட உண்மை கிடையாது. என்னால் இதை வீட்டிலும் பகிர்ந்து கொள்ள முடியாது. சமூக ஊடகத்தில் இயங்குவது பிடிக்காதிருந்தது. மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானேன். நான் இதைத் தொடர்ந்து ஒரு வருடம் ஏதும் எழுதாமல் வலைப்பூவை விட்டு விலகி இருந்தேன். பின் நண்பர்கள் உண்மையில்லாத ஒரு விஷயத்துக்காக நீங்க ஏன் எழுதாமல் இருக்கணும்னு வற்புறுத்தி , அதன் பின் எழுதத் தொடங்கி இன்று இந்த நிலையில் இருக்கிறேன். என்னை எதிர்த்தவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இனி இத்தகைய அவமானங்கள் உண்மைத்தன்மையற்ற செயல்பாடுகள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தப்பு செய்தவன் தண்டனை அடைய இப்போ நிறைய வாய்ப்புகள் இருக்குன்றன. மொத்த உலகத்திலும் சமூக ஊடகங்களில் இயங்குபவர் ரொம்பக் குறைவான பேர் தான் என்பதை பாதிக்கப்பட்டவர் முதலில் நன்கு உணர வேண்டும். அடுத்து காவல் துறையின் தலையீடு தேவைப்பட்டால் அவர்களை அணுக வேண்டும். முதலில் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும் . நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மைத் தவறாக எண்ண மாட்டார்கள். நம்மை அறியாதவர்கள் நம்மைப் பற்றித் தவறாக நினைத்தால் அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. அன்று தீபக்கைத் திட்டி கமென்ட் இட்டவர்கள் இன்று வீடியோ பகிர்ந்த பெண்ணைத் திட்டுகிறார்கள். நாளை ஒரு வேளை வேறொரு செய்தி வந்தால் மறுபடியும் மாறுவார்கள். இவர்களல்ல நம்மை நியாயத் தீர்ப்பிட வேண்டியவர்கள். இவர்களுக்காக கொடுக்க வேண்டிய அளவு மலிவானதல்ல நம் உயிர். இதுவும் கடந்து போகும் என்று திட மனதோடிருங்கள்.

19 January, 2026

திரைப்படம் : அங்கம்மாள். OTT : அமேசான் ப்ரைம். கதை : பெருமாள் முருகனின் “கோடித்துணி” சிறுகதை. அறிமுக இயக்குநர் : விபின் ராதாகிருஷ்ணன் முக்கிய நடிகர்கள் : கீதா கைலாசம் (அங்கம்மாள்) சரண் சக்தி,, பரணி. (அங்கம்மாளின் மகன்கள்) தென்றல் ரகுநாதன் அங்கம்மாளின் மூத்த மருமகள். முல்லையரசி ( மருத்துவர் மகன் காதலிக்கும் ஜாஸ்மின்) மேல் சட்டை போடாத ஆச்சி அல்லது அப்பத்தா அங்கம்மாள். ஒரு fusion ஆக பேத்தியை வைத்து Champ வண்டியோட்டிக் கொண்டே பழங் கதை பேசிப் போகிறார்கள். ஆரம்பமே இந்த படம் நமக்கு நிச்சயமாக பிடிக்கும் என்ற உறுதி அளித்தது. ஒரு சிலேட்டில் அங்கம்மாள் உச்சாணிப் பூவை வரைந்து பார்க்கும் போது , மனதிலேயே ஓராயிரம் கோலங்களோடு வசித்த என் அல்லி அக்காவிடமிருந்து ஒவ்வொரு கோலமாக ஸ்லேட்டில் போட வைத்து , நான் நோட்டுக்கு கொண்டு வந்த கோலங்களின் காட்சி ஞாபகம் வந்தது. அது என்ன உச்சாணிப்பூ. மலை மேல் பல வருடங்களுக்கு ஒரு முறை பூத்து கிராமம் எங்கும் வாசம் பரப்பும் பூ. அங்கம்மாளும் அத்தகைய ஒரு பூ தான். மற்ற பெண்களைப் போல் உண்டு, உறங்கி செத்து மடியும் சாதாரண வாழ்க்கையல்ல அவளுடையது. அங்கம்மாள் மகன் மருத்துவர் பவளம் தான் காதலிக்கும் பெண்ணிடம் ஒரு புகைப்படம் கேட்க “நான் போட்டோவில நல்லா இருக்க மாட்டேன் “ எனச் சொல்ல “நேரில மட்டும்” என்னும் அவனிடம் “சொல்லு, நேரில மட்டும் , என்ன நேர்ல மட்டும்“ என அவள் கேட்க “சொல்றேன். இரு படம் முடியட்டும் என அவளை இழுத்து தன் கன்னத்தில் கிஸ் அடிக்க வைக்கும் காட்சி செம ரொமான்ஸ். பவளத்தின் அப்பாவி அண்ணனாக பரணி நடிக்கிறார். பவளம் தான் காதலிக்கும் பணக்கார வீட்டின் குடும்பத்தினர் வருவார்களாதலால் அம்மா சேலைக்கு சட்டை போட்டு பழக வேண்டும் என்று வற்புறுத்த “என் மகனுக்காக சட்டை என்ன வேட்டி கட்டச் சொன்னாலும் கட்டுவேன்” என்று வெள்ளைத் துணியில் ப்ளவுஸ் தைத்து போட்டுக் கொள்கிறார். ஆனால் அதை ஓரிரு நாட்களிலேயே கழற்றியும் விடுகிறார் படத்தின் சில காட்சிகளில் அன்பும் காதலும் கலந்த கலவையோடு அங்கம்மாள் பார்க்கும் ஒரு முதியவர்( சிறு வயது நண்பராக இருக்கலாம் என்பது என் கணிப்பு. )முன் அந்த ப்ளவுஸும் வெட்கமுமாக நிற்பது போல் ஒரு காட்சி வைத்திருந்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும். பிடிவாதமான, கோபக்கார அங்கம்மா கதாபாத்திரத்துக்கு அவர்கள் போட்டிருக்கும் கருப்பு உதட்டுச் சாயம் அழுத்தமான உதடுகளைக் கொடுத்து , இன்னும் வலிமை சேர்க்கிறது. ஒரு மகனை வயக்காட்டில் வேலைக்கு அனுப்பி அடுத்த மகனை மருத்துவராக்குவது அந்தக் குடும்பத்துக்குள் எவ்வளவு பெரிய ஏற்றத் தாழ்வை உண்டாக்கும் என்பது சிந்திக்க வேண்டிய பிரச்னை. பரணி தாழ்வு மனப்பான்மையை உள் அழுத்தி தன் சோகத்தை நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொள்வதில் சமப்படுத்தும் , கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பாகவே வாசிக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். திரை உலகம் இவரை இன்னும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவரின் காதலி குடும்பம் இவர்கள் வீட்டுக்கு வரும் போது அங்கம்மாள் மகன் விருப்பப்படி மேல் சட்டை அணிந்து இருந்தாலும் , வந்த இளம்பெண் கையில்லாத , தோள்களை முழுவதுமாக தெரியும்படி அணிந்திருந்த ஆடை நவ நாகரீகம் என்று ஏற்றுக் கொள்ளும் சமூகத்தைச் சுட்டிக் காட்டி ஒருவர் அணியும் ஆடை அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. அடுத்தவர் அதைக் கட்டுப் படுத்துவது அவசியமற்றது என்ற கருத்தை வலியுறுத்து இருக்கலாம். செய்யவில்லை. கிராமத்துக்குப் பொருத்தமில்லாத நல்ல நிறமுடைய பையனுக்கு காதலியை மாநிறத்துக்கும் குறைவான நிறமுடைய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு சிறப்பு பாராட்டுகள். படம் முடிவடைந்தாலும் , என் மனம் இத்தகைய போராட்டக் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் இருந்து மருமகளாக வந்து சந்திக்கப் போகும் பிரச்னைகளை வைத்து அங்கம்மாள் 2 எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

05 January, 2026

திருப்பலியில முக்கியமான இடம் எழுந்தேற்றம் என்பது. அப்போது இயேசு சிலுவையில் தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காகக் கொடுத்து மரணித்த நேரம் நினைவுபடுத்தப்படும். இது சார்ந்த என் எண்ணங்கள். இந்த எழுந்தேற்ற நேரத்தில் எல்லோரும் ரொம்ப பய பக்தியோடு பிரார்த்திப்பார்கள். நான் நெற்றி நிலம் தொட வணங்குவேன். அந்த நேரத்தில் என் நிரந்தரப் பிரார்த்தனை என் இரு மகள்களின் முதுகுத் தண்டுவடம் பலப்பட வேண்டும் என்பதாக இருக்கும். அதன் உடன் அப்போதுள்ள தேவைகளும் இணைந்து கொள்ளும். ஒரு வயதான மூதாட்டி அப்போது மிகுந்த சத்தத்தோடு பிரார்த்திப்பார்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும். நான் வந்த புதிதில் அவர்களிடம் சொன்னேன். "அடுத்தவங்களுக்கு தொந்தரவில்லாமல் செபிக்க வேண்டாமா" என. அப்போ என் தோழி சொன்னார்கள் " எத்தனையோ பேர் சொல்லி பார்த்தாச்சு. நீங்க சொல்லியா மாத்தப் போறாங்க" என்று. இன்று வரை மாறவில்லை. ஆரம்ப காலங்களில் நன்மையை நாவில் தான் வழங்குவார்கள். குருக்கள் மட்டுமே வழங்குவார்கள். இப்போது கன்னியரும் கொடுக்கிறார்கள். கொரோனா காலத்தில் நாவில் கொடுப்பது தடை செய்யப்பட்டது. இடது கையில் வாங்கி வலது கையில் எடுத்து நாமே உட் கொள்ள வேண்டும் எனக் கொண்டு வந்தார்கள். எனக்கு இடது கையில் வாங்குவது பிடிக்காது அதனால் வலது கையில் வாங்கி அப்படியே வாயில் இட்டுக் கொள்வேன். இப்போ கொரோனா காலம் முடிந்த பிறகு வாயில் கொடுக்கிறார்கள். இதில் குருக்களுக்கு என்ன சங்கடம் என்றால் ஒருவருக்கு வாயில் கொடுக்க வேண்டும் . அடுத்து வருபவர் கையை நீட்டுவர். அதற்கடுத்து வருபவர்களுக்கு கையில் கொடுக்க வேண்டும் என்று எண்ணும் போது திடீரென்று அவருக்கு நின்று வாங்குவது மரியாதைக் குறைவாகத் தெரியும் முழங்கால் போட்டு வாங்குவார். ரொம்ப பாவம் அவங்க. ஒவ்வொருத்தருக்கும் கிண்ணத்தில் எடுத்து கொடுத்தே கை விழுந்து போகும். இதில் இத்தனை வேறுபாடுகள். அதுவும் திருவிழா நாட்களில் மிகுந்த கூட்டம் இருக்கும். அசந்து போய் விடுவார்கள். அதனால் கன்னியாஸ்திரிகளும் கொடுக்கலாம் என்று வந்தது நல்லது தான். ஆனால் சொல்லி வைத்தது போல் அத்தனை பேருமே முக்காட்டை கழுத்தில் தான் போடுகிறார்கள். கிறிஸ்தவ முறைப்படி ஆலயத்தினுள் பெண்கள் தலை முடிய தெரிய இருக்கக் கூடாது. அப்படி இருக்க நன்மை வழங்குபவர்கள் இப்படி வருவது உறுத்தலாக இருக்கிறது. ஒரு சின்ன ஆலோசனை. யாராவது உரியவர்கள் பார்வைக்கு சென்று சேருதா பார்ப்போம். நன்மை கொடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டிருப்பது கடினம். ஒரு நெட் தலையில் போட்டு முடிச்சிட்டுக் கொள்ளலாமே. உறுத்தாத மாற்றங்கள் வரவேற்கத் தக்கதே.!!
மாவட்டத் தலைவர் தமுஎச, திரு சேதுராம கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்க , தேவர்பிரான் வரவேற்புரை தொகுத்து வழங்கியவர் சத்யா. நிகழ்வு இளம்பிறை எழுதிய "யாழினியின் புத்தன்" புத்தக வெளியீடு. புத்தகத்தை " தமிழ்ச் சுடர் "தீன் வெளியிட குழந்தைகள், குழலி, காயத்ரி , தன்யா பெற்றுக் கொண்டார்கள். இன்னும் பேசிய மற்றவர்கள் விவரம் அறிய இணைத்துள்ள அறிவிப்பைப் பாருங்கள். "யாழினியின் புத்தன். புத்தன் ஒருவருக்கு உலகம் போற்றும் ஞானியாய்த் தெரிவான். ஒருவருக்கு தன் பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிக்க விட்டுச் சென்ற பொறுப்பற்றவனாய்த் தெரிவான். ஒருவருக்கு ஆசைகளைத் துறக்க முடிந்த வல்லவனாய்த் தெரிவான். இந்த புத்தகம் யாழினியின் புத்தன் எத்தகையவன் என்பதைச் சொல்லும் என்று நினைத்துத் தொடங்கினேன். ஆசிரியர் இளம்பிறையின் தமிழ் வளம் நான் அவர்களோடு பேசும் போதே நன்கு அறிந்தது. அதே போல் அவர்கள் பேத்தி குழலிக்கு தன்னிடம் பேசுபவர் யாராய் இருந்தாலும் ஈர்க்கும் சக்தி உண்டு. அதுவும் நான் அறிவேன். இளம்பிறை பெரும்பான்மை பெண் சமூகம் நினைப்பதை மாற்றி யோசிப்பவர். சின்ன சின்ன நிகழ்வுகள் கதைகளாக கொடுத்திருக்கிறார்கள். அதுவும் நீதி சார்ந்த கதைகள். கார்த்திகா வரைந்திருக்கும் படங்களும் குழந்தைகளை ஈர்ப்பனவாக உள்ளன. எழுதப்பட்ட பகுதிகளுக்கு பொறுத்தமான தலைப்புகள். காலக் குழந்தைகள் பாட்டி கதைகள் கேட்டு நல்வழிப்பட வாய்ப்பு குறைவு. அதனால் இத்தகைய புத்தகங்களின் அவசியம் ஏற்படுகிறது. இதில் தன் அப்பனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சரவணன் போல குழந்தைகள் பெரியவர்களுக்கு நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. அது இன்னும் அவர்களை ஈர்க்கும். ஒவ்வொரு பக்கத்திலும் இறுதியில் கொடுக்கப்பட்ட நீதிக் கருத்துகள் எல்லா பக்கங்களிலும் கொடுத்திருக்கலாம். புத்தகத்தின் அளவு குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் " மீதமொரு முலை எறி" இருக்கும் வடிவில் இருக்கிறது. அது சரி யாழினியின் புத்தன் யாரு. அவரவர் கற்பனைக்கு தோன்றுபவர் அவரவர் புத்தன். நல்லா இருக்குதுல்ல.அதே போலத் தான் இயேசுவும். இயேசு மாதா போன்றவர்களை வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் போலவே ஏன் காட்டணும்னு சில இடங்களில் கருப்பு நிறத்திலும் சிற்பங்கள் செய்து வைக்கிறார்கள். குழந்தைகளுக்கான எழுத்தை அதிகப்படுத்துவோம். இன்னும் கொஞ்ச நாளில் அவர்களே அவர்களுக்காக அதிகம் எழுதத் தொடங்குவார்கள். இப்பவே தொடங்கி விட்டார்கள்.