Bio Data !!

21 May, 2024

 அதிர வைத்த மரணம்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை அத்தனை பேர் கையிலும் செல் இருக்கிறது. அன்று பாப்பாக்கள் சோறு உண்ண நிலவைக் காட்டினோம் . இன்று அந்ம நிலவைக் கூட  செல்லில்  காட்டுகிறோம். அதிலும் மற்ற எல்லாவற்றையும் விட அதற்குப் பிடித்தது ரீல்ஸ் தான். 

என்ன நடந்தாலும் கை , உதவ உயர்வதற்கு முன்,  படம் பிடிக்கத் தான் உயர்கிறது. முதலில் படம் பிடிப்பவர் தனக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்தாலும் சில வீடியோக்கள் காட்டுத் தீயை விட வேகமாகப் பரவுகின்றன. 

அப்படிப் பரவிய ஒரு வீடியோ தான் ஒரு தாய் தவற விட்ட  குழந்தையை மீட்ட வீடியோ.  

 எவ்வளவு நேரம் அந்த குழந்தை தனக்குக் கிடைத்த பிடியை பிடித்துக் கொண்டிருந்ததோ? அதற்கு ஆயுசு கெட்டி தான் காப்பாற்றப்பட்டு விட்டது. ஆனால் அதைக் காக்க வேண்டிய தாய் தற்கொலை செய்து இறந்து போனதாகச் செய்தி.

 காரணம் :  இந்த செய்திக்கு சோஷியல் மீடியாவில்  வந்த எதிர்வினையாக இருக்கலாம். இல்லை வீட்டில் உள்ளவர்களின் எதிர்வினையாக இருக்கலாம். இல்லை தனக்குத் தானே இப்படிக் குழந்தையை விட்டு விட்டோமே காப்பாற்ற முடியாமல் போயிருந்தால் என்ன ஆகி இருக்கும் என திரும்பத் திரும்ப நினைத்துப்  பார்த்து தன் மீதே ஏற்பட்ட கோபம் காரணமாக இருக்கலாம். எப்படியோ ஒரு உயிர் பறந்து விட்டது. இனி அந்த குழந்தை, பெற்ற தாய் இல்லாத குழந்தை. 

பல செய்திகள் செல்லில் வேகமாய் பரவுகின்றன. அதற்கு கமென்ட் பண்ணும் போது நாகரீகமாகச் செய்வோம். நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டாம். உடனே நாம் ஏதோ தவறே செய்யாத  உத்தமர் வேடம் தரித்துக் கொள்ள வேண்டாம். நமது கமென்ட்டுகள் ஒரு உயிரை எடுக்கும் வலிமை வாய்ந்தது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். இந்ம இறப்பு செய்தி எனக்குச் சொன்னது இது தான்.

20 May, 2024

 பக்கத்து காலி ப்ளாட்டில் அடிக்கும் வெயில் அப்படியே வீட்டுக்குள் கடத்தப்பட அதைக் குறைக்கும் எண்ணத்தோடு ஜன்னலை ஒட்டி  வளர்க்கப்பட்ட வாதாம் மரம் இன்று வளர்ந்து படர்ந்து, குடை போல் விரிந்து பரப்பிய நிழலில்,  அடர் கருப்பு நிறத்தொரு பசு படுத்துக் கொண்டிருந்தது. 


அது எழுந்து நின்ற போது தான் தெரிந்தது அது வயிற்றில் கன்றின் சுமை தாளாது தான் படுத்துக் கிடந்திருக்கிறது. வலியில் கால் மாற்றி கால்  தடம் பதிக்கவில்லை. "அம்மா"  என்றொரு அலறல் இல்லை. அமைதியாக நின்றிருந்தது. 

கொஞ்ச நேரம் காத்து நின்று படுக்கச் சென்ற நான் விடிகாலை எழுந்ததும்  அதைத் தேடிச் சென்றேன். மடியின் பாரம் இறக்கி,  அங்கே மின்சாரத் துறையைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் போட்டிருந்த கிளைகளில் இருந்து இலை தழைகளை தின்று கொண்டு இருந்தது. கன்று கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தது. 

இவ்வளவு பாரமா சுமந்து கொண்டிருந்தாய்?? ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் எப்படி பெற்றெடுத்தாய்?? இந்தப் பசுவுக்கு உடைமைக்காரர்கள் என்ன இப்படி தேடாமல் இருக்கிறார்கள் என பலவிதமாக  வியந்து கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை பார்த்து வந்தேன். 

அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. என் பள்ளிக் காலங்களில் ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள மரத்தில் ஓலைப் பெட்டியில் கட்டி அங்கங்கே தொங்கிக் கொண்டிருக்கும். கன்று ஈனும் பசு வெளியே தள்ளும் கழிவுகள் தான் அது. அதைக் கவனிக்கவில்லை என்றால் பசு தின்று விடும். ஆபத்து . அதனால் அதை ஓலைப் பெட்டியில் வைத்து ஒதுக்குப் புறமாய் உள்ள மரத்தில் கட்டி விடுவார்கள் என்று வளர்ந்த பின் புரிந்து கொண்டிருந்திருக்கிறேன். 

இந்த பசு ஈன்ற இடத்தில் அப்படி ஏதும் இல்லையே?? பசுவுக்கு ஏதும் ஆகி விடுமா?? என் கவலைகளுக்கு நடுவே உடைமைக்காரர்கள் தகவல் கிடைத்து வந்து விட்டார்கள். வந்து ஓய்ந்து கிடந்த கன்றைத் தூக்கி பைக்கின் முன் பகுதியில் வைத்து லேசாக நகரத் தொடங்கியதும் அந்த கரிய நிறப் அம்மாப் பசு "அம்மா" என்று சத்தமிட்ட படி அந்த பைக்கை தொடர்ந்து தன் கனத்த மடி அசைய ஓடத் தொடங்கியது. 

தாய்மை. ஐந்தறிவு உடைய மிருகங்களிடமே தானாய் கனியும் போது, 

இயற்கையான ஒன்றிற்கு

நாம் , பெண்கள்  பெருமைப்பட எதுவுமே இல்லை என்று தோன்றியது.