Bio Data !!

25 October, 2021

# புத்தக விமர்சனம்

 "ஒரு கோட்டுக்கு வெளியே" 

எழுதியவர் சு.சமுத்திரம்.


ஒரு முன்னேற்றமடையாத ஜாதி பாகுபாடு அதிக முக்கியத்துவம் பெற்ற கிராமம். அங்கே தவறு செய்ததாகக் கருதியவர்களை வட்டமாக ஒரு கோடு வரைந்து அதற்குள் வைத்து அதை விட்டு வெளியே வர விட மாட்டேன் என்கிறார்கள். அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தண்டனைத் தொகையை கட்டிய பின் தான் வெளியே விடுவார்கள். 


உலகம்மை என்னும் ஒரு அப்பாவிப் பெண்ணும். அவள் தந்தையும் தான் கதையில் முக்கியமானவர்கள்.  தனக்குத் தர வேண்டிய  பாக்கி பணத்தை தரவில்லை என்று வட்டமாக ஒரு கோடு வரைந்து உலகம்மையின் தந்தையை அதனுள்  நிறுத்துகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. 


ஜாதி உயர்வு தாழ்வு என்றாலே அது பிராமணர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது போல் ஒரு மாயை இருக்கிறது. ஆனால் அனேகம் பேருக்கு  ஜாதி வரிசையில் தனக்கு கீழே இருப்பவர்களை தன்னை விட தாழ்ந்தவன் என்று இழிவாய் நடத்தும் பழக்கம் தான் இருந்திருக்கிறது. இருக்கிறது. இன்று ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு பெண் முடி திருத்தும் தொழிலாளியின் தாய் "சேரியிலிருந்து வருபவர்களுக்கு என் மகன் முடி திருத்த மாட்டான் " என்கிறாள். தெளிவாகத் தெரிகிறது சேரி என்று குறிப்பிடுவது அவர்களை விட தாழ்ந்த்தாக நினைக்கும் மக்கள் குடியிருக்கும் பகுதியை என்பது. பதிவு எழுதும் போது சரியாக அந்த வீடியோ பார்க்க கிடைத்தது.


உலகம்மையையும் ஊர் தள்ளி வைத்திருக்கிது. "ஒரே ஒரு தீக்குச்சிக்காக அவள் அப்படி நடக்கும் போது அவள் வயிற்றில் ஒரு தீக்குச்சியை வைத்திருந்தால் அதில் தீப்பிடித்திருக்கும்" இதை விட அழுத்தமாய் ஒரு பெண்ணின் வலியைச் சொல்ல முடியாது. 


"பாரதம் கிராமங்களில் வாழ்வதாக பல தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அந்த கிராமங்கள் சேரிகளில் வாழ்கின்றன என்னும் உண்மை இன்னும் பலர் காதுகளுக்கு எட்டவில்லை" என்று ஆசிரியர் கதை எழுதும் போது சொல்லி இருக்கிறார். இத்தனை ஆண்டு காலத்தில் இது மாறி இருக்குமென்றே நம்புவோம்.


கிழவரான உலகம்மையின் தந்தை,  ஐவராசா தன் வீட்டிலிருந்து வெளியேற இருக்கும் ஒரே பாதையையும் அடைப்பதை தடுக்க ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரையாக கெஞ்சும் இடம் பரிதாபத்தின் உச்சம்.


இறுதியில் உலகம்மை எடுக்கும் அதிரடி முடிவு ஜாதி ஜாதி என்று வெறி பிடித்து அலைபவர்களுக்கு கொடுக்கும் சவுக்கடி. அப்பொழுது எல்லோரும் அவளை மன்னிக்க தயாராய் இருக்கிறார்கள். ஆனால் அவள் முடிவில் மாற்றமில்லை.


"பெத்தவன்" . எழுதியவர் இமையம். இதுவும் சாதிகள் நர்த்தனம் புரியும் கதை தான். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தங்களை விட தாழ்ந்ததாக சொல்லப்பட்ட ஜாதி சார்ந்த ஒரு பையனை காதலித்ததற்காக ஒரு பெண் கடந்து வரும் அவஸ்தைகள் தான் கதை. அந்த காதலை கை விட அவளுக்கு நடக்கும் அநியாயங்கள் கற்பனை என்று கடந்து விட முடியாது. இன்றும் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.   சமுதாயம் ஒருவனது சொந்த வாழ்வில் ஓரளவுக்குத் தான் தலையிட முடியும். அவரவர்க்கான முடிவை அவரவர் தான் எடுக்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்லிக் கொடுக்கும்  கதை.

40₹ விலையில் ஒரு அதி அற்புத நாவல். பெத்தவன் பெரியவன்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!