Bio Data !!

20 October, 2020

 புத்தம் புது காலை

அமேசானில் வெளி வந்த படம். ஐந்து தனிக் கதைகளின் தொகுப்பாய் ஒரு படம். ஐந்து படங்கள். ஐந்து இயக்குனர்கள். ஐந்துக்கு மூணு ஓகே.

ஐந்து கதைகளுக்கு ஐந்து பெயர்கள். ஆனால் பெயர்கள் இங்கே அவசியமில்லை. முதல் கதை வயதான (ரொம்ப வயதெல்லாம் இல்லை ஜென்டில் மேன் ஒரு அறுபது தான்) ஒரு ஆணும் பெண்ணும் இளமையில் காதலர்கள் அவர்கள் சந்திக்க முடிவெடுத்து ஒருவர் வீட்டில் இருக்கும் போது 21 நாட்கள் லாக் டவுன் அறிவிப்பு. அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகள். பொதுவாக எங்கோ நடக்கும் ஒரு விஷயத்தை மீடியா ரசிக்கும் விதமாய் சொல்லும். அது பின் பலருக்கு நடக்கும். இது தானே நடைமுறை. அந்த விதத்தில் இப்பொழுது வயதானவர்களின் தனிமை இப்பொழுது சிந்திக்கப்படுகிறது. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு தெரிந்த விஷயம். ஆணுக்கு அறுபது வயது ஓய்வு பெற்று வந்த பணத்தை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தார். மனைவியை இழந்தவர். பேப்பரில் திருமணத்துக்கு அறிவிப்பு கொடுத்து ஒரு விவாகரத்தாகி குழந்தை இல்லாத பெண்ணை திருமணம் முடித்து இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் பென்ஷன் வாங்குகிறார்கள்.  சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

இரண்டாவது தான் முதல் தரமான படம். MS Baskar நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறார். கைகளைப் பின்னால் கட்டிய படியே நடப்பதிலாகட்டும் தன் பேத்தியின் கம்பெனி மீட்டிங்களில் வாலன்டரியாக நுழைந்து பங்கேற்பதிலாகட்டும் பல வருடங்கள் பிரிந்து இருந்த தன் மகளின் குரலைக் கேட்டு நெகிழ்வதிலாகட்டும் பாஸ்கர் அவர்களின் முழுத் திறமையும் சினிமாத்துறையில் பயன்படுத்தப்படவில்லை என்பதே என் ஆதங்கம்

மூன்றாவது படம் எனக்கு என் அம்மாவை நினைவுபடுத்தியது. நாங்களும் மூன்று பெண்கள் தான். கடைசி தங்கை பிந்திப் பிறந்தவள். இங்கே கோமாவில் இருந்த தாய் மீண்டு வருகிறார்கள். என் தாய் பரிதவிக்க விட்டு பறந்து போனார்கள். சுஹாசினி அனுஹாசன் ஸ்ருதிஹாசன் மூவரும் சகோதரிகளாய் அசத்துகிறார்கள்.

நாலாவது ஆன்ட்ரியாவின் பள்ளிக் காதல். பள்ளித் தோழன் டாக்டர். ஒரு இக்கட்டான சூழலில் நண்பனின் வீட்டுக்கு வருகிறாள். நண்பன் வந்த கொஞ்ச நேரத்தில் அவன் மருத்துவம் பார்த்த நோயாளி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆதலால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல். மருத்துவர் மாடியில் படுக்கப் போகும்  போது தன் செல்லை தன் தலகாணியில் பக்கத்திலேயே வைத்து தூங்குகிறார். மருத்துவரே இப்படி செய்யலாமா? சின்ன சின்ன ஓட்டைகளுடன் நிறைவு தராத கதை.

ஐந்தாவது கதையில் கார்த்திக் சுப்புராஜ் பயங்கர ஏமாற்றம் தருகிறார். 

இது படத்தைப் பற்றிய என் கருத்து. பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். பார்க்காதவர்கள் பார்த்திட்டு சொல்லுங்கள்

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!