Bio Data !!

03 August, 2023

புத்தகத்தின் பெயர் : கடம்ப வனத்துக் குயில் பாகம் 2 ஆசிரியர் உதயணன் யாழினி பதிப்பகம். விலை ரூ 352 [தொண்டி துறைமுகத்திலிருந்து கோஹினூர் வைரம் வெளி நாடு செல்லப் போகிறது என்று ஆருடம் சொல்லப்பட்டதால் மன்னர் தொண்டி துறைமுகத்துக்கு விரைகிறார். அங்கே என்ன நடந்தது என்பது பாகம் 2 இல்.] இது பாகம் 1 இல் நான் முடித்திருந்த வரிகள். இனி…….. விச்சி மலையிலிருந்து ஒரு ஒற்றன் அராபியன் வேடத்தில் தொண்டிக்கு கோஹினூர் வைரத்தோடு வருகிறான். அங்கு ஒரு மரக்கலத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்ததால் சீந்துவாரின்றி கிடந்தது. அராபியா என்ற ஒரு பெண்ணும் சல்லியன் என்னும் ஒரு சல்லிப் பயலும் அந்த மரக்கலத்தில் பயணம் செய்கிறார்கள். கோஹினூர் வைரத்தைத் தேடி கொங்கு மன்னர் ஒருவரும் மரக்கலத்தில் பயணிக்கிறார். இடை வழியில் தன் மரக்கலம் பாதிக்கப்பட்டதால் அங்கு வந்து சேருகிறால் கடம்பவனத்துக் குயில் என்னும் கொங்கு மன்னரின் அன்புக்குப் பாத்திரமானவள். அன்பு எப்படி பிறந்தது என்பதை மிக அழகாகச் சொல்கிறார் ஆசிரியர். “ காற்றும் காற்றும் கலப்பது போல நீரும் நீரும் கலப்பது போல மணமும் மணமும் கலப்பது போல மனமும் மனமும் கலக்கும் போது காதலாகிறது. “கப்பல் வெள்ளி” என்று ஒரு சொற்றொடர் எனக்கு புதிதாய் அறிமுகமானது. வானத்தில் உள்ள சப்தரிஷி மண்டலம் என்ற நட்சத்திரக் கூட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயராக கதையில் வருகிறது. அதைப் பார்த்து திசையை அறிந்து கொள்வார்களாம். மரக்கலம் தடம் மாறி ஒரு தீவுக்கு சென்று விடுகிறது. அந்த தீவின் பெயர் சகோத்ரா. அந்த தீவு வாசிகள் மனித மாமிசம் உண்பவர்கள். தீவுக்கு செல்லும் முன்னேயே பெரிய பெரிய பறவைகள் பறந்து வந்து தாக்கும். தீவுத் தலைவனின் வர்ணனையே பயங்கரமாக இருக்கும். மனித மானிசத்தை உண்ணும் முறையை பயங்கரமும் கொடுமையும் நிறைந்த ஒரு விஷயத்தைத் தீவு வாசி ஏதோ சைவ விருந்து உண்ணும் முறையைச் சொல்வது போல சொல்வார். சகோத்ரா தீவின் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் கற்பனை நிறைந்தவையாக இருந்தாலும் ஒரு வித படபடப்போடு நம்மை வாசிக்க வைக்கும். உண்மையிலேயே கனிபால் என்னும் மனித மாமிசம் தின்பவர்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் அப்படிபட்டவர்கள் இருக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டதை உணர்வு பூர்வமாக உணர முடிகிறது. கோஹினூர் வைரம் இன்னும் உரியவர் கையில் போய் சேரவில்லை. நான் படித்து ரசித்தது: “ நகைக்கும் நங்கைக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்.ஆகவே தான் நகைகள் நங்கையருக்கே பொருத்தமாக இருக்கின்றன. தங்கமும் வைரமும் தையலரை அலங்கரிக்கும் போது அழகாக ஜொலிக்கின்றன. “ என்றான் மன்னன். பாகம் 3 ம் தொடர்கிறது…….

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!