Bio Data !!

31 July, 2024

நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த உறுப்புகளின் இருப்பே நமக்குத் தெரியாது. அது செயல்படுவதில் சுணக்கம் ஏற்படும் போது தான் அப்படி ஒன்று இருக்கிறது என்பதையே உணர்வோம். அதே போல பூமித் தாய், பொறுமையின் சிகரமாய், நாம் அவளைச் சீரழிப்பதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் போது நமக்கு அவள் அருமை தெரிவதே இல்லை. ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளை நாம் எவ்வளவு சீரழித்துக் கொண்டு இருக்கிறோம். கழிவுகளின் புகலிடமா நீர் நிலைகள். கடலினடியில் அத்தனை கழிவுப் பொருட்களின் குவியலாம். சீற்றம் கொண்ட அந்தப் பூமிப் பெண் தன் மேல் கொண்ட அருவருப்பில் தன்னைச் சுத்தம் செய்து கொள்ள வருவித்தது போல் இருக்கின்றது இந்த மழைச் சீற்றம். கண்டதையும் தின்று வயிற்றைக் கெடுத்தால் தலையில் வலி எடுக்கும். அதைப் போலவே இயற்கையும் தன்னைக் கெடுப்பவர் யார் என்று தேர்ந்து அழிப்பதில்லை. நாட்டின் சில இடங்களில் பேரழிவைப் போல சுணக்கம் ஏற்படும் போதாவது நாம் சுதாரித்து நம் தாய்க்கு செய்யும் தீங்குகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இரவில் உறங்கச் சென்ற அந்த அன்பு உள்ளங்கள் நினைத்திருக்குமா நாம் அப்படியே புதைந்து போவோம் என. இவ்வளவு காலமாய் மொத்தம் மொத்தமாய் உயிர்களின் இழப்பை பார்க்காத நாம் சமீப காலமாய் அடிக்கடி எதிர் கொள்வதை உணர்கிறோமா? எனக்கு பக்தி உண்டு. அதனால் " மக்கள் மேல் உள்ள கோபம் தணிந்து இந்த பிரபஞ்சத்தை காப்பாற்று" என என் இஷ்ட தெய்வத்திடம் விடாமல் வேண்டுகிறேன். நீங்களும் உங்கள் விருப்ப தெய்வத்திடம் வேண்டுகோள் வையுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நாம் ரசித்து வாழும் இந்த உலகம் அழிந்து விடக் கூடாது என்றாவது மனதார நினையுங்கள். நம் அனைவரின் நேர் மறையான எண்ணம் இந்த பூமியைக் காக்கட்டும். # thought from vaya nadu disaster 😭

25 July, 2024

நாவலின் பெயர் : கூகை ஆசிரியர் : சோ. தர்மன். காலச்சுவடு பதிப்பகம். விலை : ரூ. 175/- முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2005 கூகை என்பதற்கு இன்னொரு பெயர் கோட்டான் ( எங்க அப்பா என்னை சிறு வயதில் கோட்டான் மாதிரி முழிக்காதேன்னு திட்டினது ஞாபகம் வருது. சரியா தெரியல)இடப் பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை உடையது. ஆனால் அவசியப்பட்டால் மட்டுமே பயன்படுத்தும். கூகையைக் காண்பதையும் அதன் குரல் கேட்பதையும் பாரம்பரியமாக அபசகுனமாக கருதுவதுண்டு. கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி பலரின் குணங்களை பறவைகள் விலங்குகளுடன் ஒப்பிட்டு சமகால தலித் வாழ்க்கையை படைப்பாக்கி வெற்றி கண்டிருக்கிறார் ஆசிரியர். சோ. தர்மன் அவர்களின் முதல் நாவல் “தூர்வை” இது ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. கூகைக்கு பகலில் கண் தெரியாது. அதனால் சிறு பறவை கூட பகலில் அதை கொத்தி துன்புறுத்தும். இரவில் அருகில் அண்டாது. அந்தக் காலத்தில் பெண்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை, ஜாதிப்படியில் தாழ்த்தி வைக்கப்பட்டவர்களை என்ன பாடு படுத்தி இருக்கிறார்கள் என்று நாவலில் வாசிக்க வாசிக்க நெஞ்சு பதறுகிறது. இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால். (ஒரு கிழ அரசன் 1700+ களில் இறத்த போது அவரோடு சதியில் இறங்கியவர்கள் 45 பெண்களாம். ) கணவனை ஏதாவது வாங்கி வரச் சொல்லி விட்டு மனைவியுடன் சல்லாபம் செய்யும் so called மேல் வர்க்கம் , அந்தப் பெண் பெற்ற பெண் குழந்தை தன் முகத்தை முட்டிகளில் புதைத்துக் கொண்டு அழும் கொடூரம். இந்த அவமானங்கள் அனைத்தும் தமக்கானதே என்று ஏற்றுக் கொள்ளும் அப்பாவி பொது ஜனம். இவர்களுக்கு நடுவில் காலம் காலமாய் தனக்கு உழைத்த அப்பாவி மக்களுக்கு தன் நிலத்தை பகிர்ந்து கொடுத்துவிட்டு பட்டணம் போக முடிவெடுக்கும் நல்லவர் நடராஜய்யரும் அங்கே தான் வாழ்கிறார். அவருக்கு எதிராய் கிளம்பியவர்கள் அவரோடு மோதி முடியாமல் ஜமீனிடம் சென்று புகார் கொடுக்க அவர் மிகப் பெரிய வில்லனாய் முடிவு எடுக்கிறார். “நடராஜய்யர் பகிர்ந்து கொடுக்கட்டும். அவர்கள் உழைக்கட்டும். விளைவிக்கட்டும். அறுவடை மட்டும் நாம் செய்து கொள்வோம் “ என்கிறார். என்ன ஒரு வில்லத்தனம். அதைப் போலவே பாவப்பட்ட ஜனங்கள் பாடுபட்டு நெல் விளைந்து வரும் போது ஜமீன் தன் ஆட்களை வைத்து அறுவடை செய்கிறார். சீனிக்கிழவன் என்னும் அவர்களின் தலைவன் எவ்வளவோ முறையிட்டும் ஏதும் நடக்காததால் நடராஜய்யரின் வயலில் ரத்தம் சிந்தியது. மோதல் வலுத்துக் கொண்டே போகும் போது தாழ்ந்த இனப் பெண்களுக்கு நீர் இறைத்து ஊற்ற மேல் ஜாதி எனப்படும் பெண்கள் மறுத்ததும் தாமே கிணறு தோண்டினார்கள். கடைகளில் சாமான் தர மறுத்ததும் தாமே கடை திறந்தார்கள். ஆனால் அதைப் போல் சுளுவாக அவர்கள் செய்ய மறுத்த சாவுச் சடங்குகளை மேல் சமூகம் எனப்படுபவர்கள் தாமே செய்யத் திணறினார்கள். பேச்சி என்றொரு சிறப்பான கதா பாத்திரம். அவள் விருப்பமில்லாமலே அவளை அடைந்த காளித்தேவர் விஷயம் தெரிந்து குடும்பம் எதிர்த்ததும் பேச்சியுடனே வாழப் புறப்பட்டு போராட்ட வாழ்க்கை வாழ்ந்து இறந்தும் போகிறார். அந்த வாழ்க்கையை பேச்சி அப்புச்சுப்பனிடம் விளக்கும் இடம் ரசிக்கத் தக்கதாய் இருக்கும். இந்தக் கதையின் சிறப்பு அதிகாரங்கள் பிரிக்காமலே மொத்தமாக எழுதி இருந்தாலும் அதன் சுவை குன்றாமல் இருப்பது தான். எந்த இடத்திலும் தயங்கி நிற்காமல் சிற்றோடை போல் செல்கிறது இந்தப் பெருங்கதை.மொத்த நாவலையும் இரண்டு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். இரண்டாவது பாகத்தில் ஒரு கற்பனையான வனப் பகுதியை சித்தரித்து அதில் அரசரை எப்படித் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை கற்பனையை விரித்து புனைந்திருக்கிறார். ரசனை மிகுந்த பகுதி அது. ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழம், ஈயம் பூசறது போல அழிந்து போன தொழில்களில் ஒன்று தங்கத் துகள் சலித்து எடுக்கும் வேலை. அதைப் பற்றி எழுதி இருக்கிறார். நகைக் கடைகள் நிறைய வந்த பின் இந்தத் தொழில் அழிந்து விட்டது. எனக்கு நினைவு இருக்கிறது. முன்பு தங்க ஆசாரிகளிடம் கொடுத்து நகை செய்யச் சொல்வார்கள். அப்பொழுது சிதறும் கண்ணுக்குத் தெரியாத மென் பொன் துகள்கள் கடைக்கு அருகில் உள்ள சாக்கடை மண் தெருமண் போன்றவற்றில் கலந்து இருக்கும். அதை பெருக்கி சேர்த்து சலித்து கிடைக்கும் தங்கத் துளிகளை ஆசாரிகளிடம் விற்பார்கள். மிகவும் கடினமான வேலை அது. இன்று வழக்கொழிந்து போய் விட்டது. கதை நெடுக பல இடங்களில் வரும் அழகு தமிழ் நடையை ரசித்தேன். உதாரணத்துக்கு ஒரு சில. ****ஒதுங்க நினைத்தாலும் உள்ளிழுக்கும் அலை. இழுப்பதும் அலை . தள்ளுவதும் அலை. அலை ஓய்ந்து குளிக்கக் காத்திருக்காது கடல் பறவை. நிலையற்ற சுழற்சியால் வதைபடும் வாழ்வு. நிலை தேடியலைந்து சிதையில் எரியும் உடல்: ***** கூகை ஒரே நொடியில் கடல் தண்ணீர் அத்தனையும் உறிஞ்சிக் கொண்டது. கடல் வற்றிய தரையிலிருந்து வெண் சங்குகள் கூட்டமாய் பறந்து வந்தன. அண்ணாந்து துப்பியது உறிஞ்சிய கடல் நீரை. பறந்து திரிந்த வெண் சங்குகளும் உதிர்ந்த அத்தனை நட்சத்திரங்களும் கொக்குக் கூட்டங்களாக மாறின. *****ஜமீன் கூப்பாடு போட்டான் கும்பிட்டே நின்ற கைகளின் முன்னால் முதன் முறையாக கும்பிட்டு நின்றான். கதை முடியும் போது அடித் தட்டு மக்கள் மீது நமக்கு இரக்கம் பிறப்பது நிச்சயம். நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நாவல் கூகை. ********************************************************************************************

05 July, 2024

நாவலின் பெயர் : ஆலவாயன். ஆசிரியர் : பெருமாள் முருகன் . காலச் சுவடு பதிப்பகம். விலை. : ரூபாய் 240 முதல் பதிப்பு : டிசம்பர் 2014 இவர் எழுதி மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான மாதொருபாகனின் இரு வெவ்வேறு கோணங்களை அர்த்தநாரி, ஆலவாயன், என இரு நாவல்களாக உருவாக்கியுள்ளார். இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கி வெவ்வேறு திசைகளில் பயணிக்கும். மாதொருபாகன் வாசிக்காதவர்களுக்கு ஒரு முன்னுரை. காளியும் பொன்னாவும் கணவன் மனைவி. அந்நியோன்னிய தம்பதி. ஆனால் குழந்தை இல்லை. பெரு நோம்பி அன்று நடக்கும் ஒரு நிகழ்வை எழுதியதால் தான் மாதொருபாகன் மாபெரும் விமர்சனத்திற்கு உள்ளானது . குழந்தை இல்லாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு அது. கொஞ்சம் அதிர்ச்சி தரும் நிகழ்வு தான். காளிக்கு சம்மதம் என்று பொய்யைச் சொல்லி பொன்னாவின் அண்ணன் முத்து இந்த நிகழ்வுக்கு அவளை அழைத்துச் சென்று விடுகிறான். தனக்கே தனக்கென நம்பி இருக்கும் பொன்னா இன்னொருவனோடு இணைந்து விட்டதை தாங்க முடியாமல் , காளி நாண்டு கொண்டான். காளியின் அம்மா சீராயி கணவனையும் இழந்து , தன் ஒரே மகனையும் இழந்து, கண்முன்னே பிணமாய் நடமாடும் தன் மருமகளின் நிலைக்கு, தானும் ஒரு காரணமாய் ஆகிப்போன துயரத்தில் , சிறுக சிறுக செத்துக் கொண்டிருக்கிறாள். சீராயியின் மாமியார் வகையில் சொந்தமான பவுனாயிப் பாட்டி " அடிப்புள்ள பொன்னா, நம்ம உசுரு அந்த சாமி கொடுத்தது. அது அவனுக்கு வேணுங்குறப்போ அவனே எடுத்துக்குவான். வலுவந்தத்தில் போக்கிக்க நம்மளுக்கு ஆக்கின இல்லை " என்று சொல்வது தற்கொலை எண்ணம் வரும் யாரானாலும் சிந்திக்க வேண்டியது. ஆசை ஆசையாகக் காத்திருந்த நிகழ்வும் பொன்னாவுக்கு நேர்ந்து விட்டது. ஆனால் காளிதான் இல்லை. கிராமமாகவே இருந்தாலும், குழந்தை தங்கின சமயம் தகப்பன் இல்லை என்பதால் தவறாக ஒரு சொல் யாரிடம் இருந்தும் வெளிப்படாதது மகிழ்வாய் இருந்தது. பிறக்கும் முன்னே அப்பனை முழுங்கியவள்/ ன் என்று கரித்துக் கொட்டுதல் அங்கு இல்லை. பண்டிதக்காரிச்சி என்றொரு புது வார்த்தை எனக்கு அறிமுகமானது. கிராமங்களில் சவரம் செய்வதற்கென்று ஒருவர் இருப்பார். அவர் மனைவிதான் பண்டிதக்காரிச்சி. அவள் பெயர் தங்காயி. பெண் பிள்ளைகளுக்கு அவள் வைத்தியம் பார்ப்பாள். பொன்னாவின் கையை எடுத்து, நாடி பார்த்து உறுதி சொல்லி திரும்பும் போது, அங்கே அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் வயதானவர்களின் கேலிப் பேச்சும், இரட்டை அர்த்த நக்கலும் அந்தக் காலப் பெண்கள் தங்கள் மன உளைச்சலை இப்படித்தானே தணித்துக் கொண்டார்கள் என்று தோன்றியது. அருவருக்க வைக்காத மெல்லிய நகைச்சுவை. தொரட்டுப்பாட்டி" ஊருக்கு சொல்லியிருங்காயா" என்று நமக்கு ஊர் வழக்கத்தை புரிய வைக்கிறார். கணவன் இறந்த நேரம் மனைவி குழந்தை உண்டாகி இருந்தால் வீட்டுப் பெரியவர்களை வைத்து அறிவித்து விடுவார்கள். இல்லை என்றால் குழந்தை பிறந்ததும் தாயை ஊரை விட்டுத் தள்ளி வைத்து விடுவார்கள் . ரொம்ப காலமாக இந்நிகழ்ச்சி ஊருக்குள் நடக்காமல் இருந்ததால் எல்லோரும் மறந்து இருந்த விஷயத்தைப் பாட்டி நினைவூட்டுகிறார்கள் . செங்கான் என்னும் பாத்திரத்தின் மூலம் பொன்னாவுக்கு ஆசிரியர் சொல்லும் அறிவுரை, தளர்ந்திருக்கும் அனைவருக்கும் ஆனது . " இப்படி எந்திரிச்சு வந்து காட்டு காரியத்தை பாராயா. எல்லா கஷ்டமும் பால மரத்து பஞ்சாட்டம் பறந்து போயிடும்.." சிறந்த எழுத்தாளர்கள் தம் கதைப் பாத்திரங்கள் மூலம் நல்ல கருத்துக்களை விதைத்து கொண்டே இருக்க வேண்டும் . இந்த கதையிலும் ஒரு controversial character உண்டு. திருமணம் ஆகாத, ஆனால் பெண் பலவீனம் உள்ள, தன் அண்ணனின் சொத்து வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக, தன் மனைவியையே அண்ணனிடம் அனுப்பி வைக்கும் தம்பி. ஆனால் தன்னை மதிக்காத கணவனை விட அவருடைய அண்ணன் எவ்வளவோ மேல் என்று தம்பி மனைவி முடிவு எடுக்கும் போது அவளுக்கு குடும்பத்தார் இழைக்கும் கொடுமை பரிதாபத்தை வரவழைக்கும். அண்ணன் பெயர் நல்லான். அவர் தன்னை " போற இடத்துல எர பொறுக்கிக்கிட்டு, கிடைச்ச இடத்தில தண்ணி குடிச்சிட்டு இருக்கிற புத்தி. அதனால எனக்கு குடும்பம் எல்லாம் ஒத்து வராது" என்கிறார். கதையின் முடிவு நாவலின் பெயருக்கான காரணம் வரும் பகுதி நெஞ்சோடு உறைந்து போகும் . இதை முடித்த கையோடு அர்த்தநாரி வாசிக்கும் ஆவலும் எழுந்தது.