Bio Data !!

27 January, 2025

ஒருவர் மேல் நமக்கு முழு நம்பிக்கை வந்து விட்டால் "அவர் செய்தால் சரியாக இருக்கும்" என்று நம்புவோம். அவர் செய்வது நமக்கு உடன்பாடு இல்லை என்றால் கூட மறுத்துச் சொல்லாமல் அவர் செய்வதன் காரணம் நமக்குப் புரியவில்லை என்று பொறுமையாய் அமைதியாய் இருப்போம். அதற்கு நமக்கு அவர் மேலும், அவர் செயல் திறன் மேலும், அவர் நேர்மை மேலும் முழு நம்பிக்கை வர வேண்டும். அப்பொழுது அந்த உறவு சுமுகமாய் போகும். அந்த காலத்தில் திருமணங்கள் அப்படித் தான் நடந்தன. கணவன் மனைவிக்கு இடையே அதிக வயது வித்தியாசம். படிப்பில் வித்தியாசம். பக்குவத்தில் வித்தியாசம். கண்ணை மூடி நம்பினார்கள். சில நேரங்களில் நம்பியவர் தவறு செய்தாலும் சகித்துச் சென்றார்கள். இப்போ அந்த வித்தியாசம் நிரவப்பட்டு குறைந்து போனதால் ஒருவருக்கு மற்றவர் மேல் முழு நம்பிக்கை இல்லை. அதனாலேயே பிணக்கு. பிரிவு. நான் நம் முன்னோர் முழு நம்பிக்கை வைத்தது சரி என்றோ தவறு என்றோ வாதிட வரவில்லை. காரணங்களை சிந்திக்கிறேன். பிள்ளைகளுக்கு பெற்றவர் மேலேயே அந்த நம்பிக்கை வைக்க முடிவதில்லை. காரணம் அவர்களை விட தமக்கு அதிகம் தெரியும் என நினைக்கிறார்கள். வெகு சிலவாய் ஒரு சில இடங்களில் பெற்றோரே குழந்தைகளுக்கு துரோகமும் இழைக்கின்றனர். தன்னம்பிக்கை மிகுந்துள்ள அவர்களுக்கு ஒரு நேரத்தில் யாருமில்லாமல் நிர்க்கதியாய் நிற்பது போன்ற உணர்வு வரும். இன்று யாரோ ஒருவர் மேலாவது வருத்தமோ கோபமோ சலிப்போ வராமல், அவர் சொன்னால்/ செய்தால் சரியாகத் தான் இருக்கும், என்ற நம்பிக்கை வைக்க முடிந்தால் பிறவிப் பயன் அடைந்து விட்டோம் என்று அர்த்தம். என்ன நான் சொல்றது. அப்படிப்பட்ட ஒருவரையாவது சம்பாதித்து விட வேண்டும். அது முடியாததாலேயே பலரும், முக்கியமாய் பெண்கள் கடவுள் மேல் நம்பிக்கை வைக்கிறோம். அவர் செய்தால் சரியாய் இருக்கும். இல்லை அவரே சரி செய்வார் என்ற நம்பிக்கை தான் பல பெண்கள் சாவை நாடாமல் வாழ்வதற்கு முக்கிய காரணம்.

24 January, 2025

வட இந்தியப் பெண்கள் பொதுவாகவே நன்றாகத் தங்களை அலங்கரித்துக் கொள்வார்கள். வீட்டு வேலைக்கு வரும் பெண் கூட லிப்ஸ்டிக் இல்லாமல் ஒரு நாள் கூட வர மாட்டாள். அதற்கு வீட்டு ஆண்களும் ஒத்துக் கொள்வார்கள். நம்ம பக்கத்துல வயிறு தெரியாம சேலை கட்டு, ஷால் போடாம வெளியே போகாதே எனப் பல கட்டுப்பாடுகள் பார்க்கும் போது நான் நினைத்தேன் "பரவாயில்லையே, ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ், லோ கட் நெக் எனப் போட்டு அவர்கள் ரொம்ப சுதந்திரமாக இருக்கிறார்களே என்று. நான்கு வருடங்கள் வட இந்தியாவில் இருந்தப்போ தான் தெரிந்தது அவர்கள் சுதந்திரம் ஆடை அளவில் தான் என்று. ஆணை மகிழ்விக்க பெண்கள் அழகாக இருக்கணும் அதைத் தாண்டி அவர்கள் சிந்திப்பதை அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்ட பலர் இருந்தனர். இப்போ அதுக்கும் வேட்டு வச்சிடுவாங்க போலிருக்குது. அலகாபாத் கும்ப மேளாவில் அழகிய ஐஸ்வர்யாக் கண்களுடன் பாசி மணி விற்றுக் கொண்டிருந்த பெண்ணை ட்ரென்டாக்கி விட்டு , போறவங்க வாரவங்க எல்லாம் வீடியோ எடுத்து, அவர்கள் வீட்டு ஆண்கள் அந்தப் பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்லும் படி செய்து விட்டார்கள் . இனி அந்த முகத்தில் பழைய சிரிப்பு வர அந்தப் பெண் எவ்வளவு போராட்டங்களைக் கடக்கணுமோ?? விட்டிடுங்க. அழகிய விஷயங்களை ரசிப்பதோட நிறுத்திக்கோங்க. அடுத்த கட்டத்துக்குப் போய் அவர்களை உலகப் பிரபலங்கள் ஆக்கி விடும் போது அவர்களுக்கு உள்ள சுதந்திரமும் பறி போகலாம்.
நாவல் முறி மருந்து. ஆசிரியர் : எஸ். செந்தில் குமார். தோழமை வெளியீடு. விலை ரூ 250. முதல் பதிப்பு : டிசம்பர் 2009 **** குழந்தைகள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து விளையாடும் "ராஜா ராணி " விளையாட்டோடு கதை தொடங்குகிறது. ஒருவனுக்கு காய்ச்சல் என்பதால் அந்த வாரம் அவர்கள் வீட்டிலும் அவனுடைய பெரியப்பா வீட்டிலும் கறி எடுக்கவில்லை என்னும் போது வாழும் கலையை நாம் எங்கிருந்து கற்பிக்கத் தொடங்க வேண்டும் என்பது புரிகிறது. ராமசாமியும் கந்தசாமியும் அண்ணன் தம்பி். ஒற்றுமையாக ஒன்றாக குடும்பமும் தொழிலும் நடத்திய இடத்தில், கந்தசாமி தான் நிலம் வாங்கிய விஷயத்தை தாயிடம் சொல்லவில்லை என்ற காரணத்தால் புகைந்த பகை அவர் குடும்பத்தோடு வேறு இடம் சென்றதில் முடிகிறது. ராமசாமியின் மனைவி செல்லம்மாள் " பாவி மனுஷன் செத்த வீடு மாதிரி செய்து விட்டுப் போயிட்டானே" என வருந்துகிறாள். வீடு அமைதியாக இருப்பதே மனுசனுக்கு நோய் என்று நினைக்கிறாள். கூட்டுக் குடும்பமாக துணி வியாபாரம் செய்தவர்கள் பிரிந்த பிறகு அவர்களுக்குள் ஏற்படும் போட்டி. உறவுகளுக்குள் முறைப் பிள்ளைகளுக்கு இடையே ஏற்படும் மெல்லிய காதல் அதன் வெளிப்பாடு , கோபத்தால் பிரிந்தவர்கள் மரணங்களால் இணையும் போது அவர்களுக்கிடையே இருக்கும் தயக்கத்தின் வெளிப்பாடு, சாங்கியம் என்ற பெயரில் உறவுகளைக் கட்டி வைத்திருந்த முறைகள், என்று அன்று இருந்து இன்று இல்லாமலாகிப் போன உறவுகளின் பிணைப்பு போன்வற்றை கதையில் அழகாகச் சொல்லி இருக்கிறார். இள வயது நண்பர்கள் பெண் சுகம், கோயில் திருவிழாக்களுக்கு நடனம் ஆட வரும் பெண்களிடம் சில்லறைச் சில்மிஷம், சிகரெட், குடி என தீய செயல்களில் எவ்வளவு இயல்பாக கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பதை சில இடங்களில் சொல்லி இருக்கிறார். " உன் நண்பர்கள் யாரென்று சொல். நீ யாரென்று நான் சொல்கிறேன் " என்பது தான் நினைவுக்கு வந்தது. சந்தையில் உள்ள கடைகளில் நடக்கும் நிகழ்வுகளை வாசிக்கும் போது நாமும் சந்தையில் ஒரு கடை போட்டு அமர்ந்து பார்ப்பது போலிருக்கிறது. ரங்கம்மாள் காலையில் கடை தொடங்க வரும் போது அந்த இடத்தில் யாரோ ஒருவர் மலம் கழித்து வைத்திருப்பதைச் சொல்லும் போது ஒரு பெண்மணி தனி ஆளாக உழைக்க என்ன என்ன சிரமங்களை எல்லாம் கடக்க வேண்டி இருக்கிறது என்று பரிதாபமாக இருந்தது. கதையில் எனக்குத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் திணிப்பு. ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது. கந்தசாமி, ராமசாமி இருவரின் சகோதரி மயில். அவள் கணவர் பெயர் தங்கப்பழம். இவரைச் சில இடங்களில் தங்கப்பழம் என்றும் சில இடங்களில் தானா பானா என்றும் சொல்கிறார்கள். அதைத் தவிர்த்து கதை நெடுக ஒரே மாதிரிச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது. ரசித்து வாசித்தது : தொடர்ந்து நிறைய தட்டான்கள் பட்டாணி மண்டைகளோடு இறக்கை விரித்துப் பறந்தது. ஆமால்ல தட்டான் மண்டை பட்டாணி போல் தான் இருக்கும். ஒரு மாதம் ஒரு கிராமத்துக்குப் போய் வாழ்ந்து வந்த திருப்தி கதையை வாசித்து முடிக்கும் போது எனக்குக் கிடைத்தது.

20 January, 2025

Reels நாம ரொம்ப பார்க்கிறதால அந்த வீடியோ போடுறவங்களோட பெர்சனலா ஒட்டுதல் ஆகிடுறோம். அதனாலேயே அவங்க மரணம் நம்மை ரொம்ப பாதிச்சிடுது. சில வருஷங்கள் முன்னால உதயா சுமதி ஒரு கப்பிள். ரொம்ப அழகா வீடியோ போடுவாங்க. நிறைய பேருக்கு பிடிக்கும். உதயா திடீர்னு ஒரு விபத்துல சிக்கினதும் அவர்கள் பணத் தேவையை சொல்லி வீடியோ போட பலர் பண உதவி செய்தார்கள். இருந்தும் உதயா மரணித்துப் போனான். பண உதவி செய்ததாலேயே அந்த குடும்பத்துக்கு உரிமைப்பட்டவர்கள் போல பல தலையீடு இருந்தது. இன்றும் அந்தப் பெண் சுமதி தனியாகத் தான் இருக்கிறாள். இப்போது அது போலவே மற்றுமொரு மரணம். ராகுல் டிக்கி. பெண் வேடமிட்டு நடிப்பவர்கள் பல தாக்குதல்களைத் தாங்க வேண்டி இருக்கிறது. நிறைய பெண் வேடமிட்டும் நிறைய நகைச்சுவை காட்சிகளை நடித்தும் வீடியோ போடும் ராகுலும் எனக்கு மிகவும் பிடித்தவர் இன்ஸ்ட்டாவில். இவர் மனைவிக்கு வயது 21 ஆம். சமீப காலமாக ஒன்றரை லட்சம் இரண்டு லட்சம் போட்டு தன் பிள்ளைகளுக்கு இந்த வண்டி வாங்கித் தருபவர்கள் தங்கள் பிள்ளைகளை எமனின் கையில் பிடித்துக் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வண்டிகள் குறிப்பிட்ட வேகம் வரை தான் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். அதை மீறி வேகமாகச் செல்லத் தொடங்கினால் அதன் கட்டுப்பாட்டுக்குள் நாம் வந்து விடுவோம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நொடி தவறு ஒரு உயிர் பலி. பிள்ளைகளை பறி கொடுத்து பெற்றோர் படும் பாடு காணச் சகிக்கவில்லை. சந்தோஷம் என்பதே துடைத்துப் போட்டாற் போலாகி விடுகிறது. தன் பெற்றோரை சந்தோஷமாக வைக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த பிள்ளையும் இத்தகைய சோகத்தை பரிசாகத் தராது. தன்னைப் பெற்றவர்களை தான் பெற்றவர்களை மனதில் நிறுத்தியே ஒவ்வொரு முறையும் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும். இறப்பு செய்தி கேட்டதிலிருந்து மனசே நல்லா இல்ல.

12 January, 2025

நாவல் : நெஞ்சில் ஒரு நெருஞ்சி ஆசிரியர் : அய்க்கண். சிவா பதிப்பகம். விலை : ரூ 100/- முதல் பதிப்பு : டிசம்பர் 2012. இது ஆசிரியருக்கு மிகப் பிடித்தமான நாவல் எனச் சொல்கிறார். நாவல் உலகின் முடி சூடா மன்னராக விளங்குகிறார் அய்க்கண். கதை நாயகன் முத்து தாய் தந்தையை இழந்தவன். அவனுடைய ஹை ஸ்கூல் வாத்தியார் மாணிக்கம் தான் அவனை படிக்க வைக்கிறார். முத்துவும் காலையில் பேப்பர் போட்டு மாலையில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டித் தன் மேல் செலவுகளை பார்த்துக் கொள்கிறார். முத்துவை எதேச்சையாக சந்தித்து, பின் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பதை அறிந்து , மேலும் நெருங்க முயலும் லதா கதை நாயகி. அதை புரிந்து கொள்ளும் முத்துவின் சிந்தனை ரொம்ப உயர்ந்தது. அவளோ உயர்ந்த கோபுரம். அவனோ பள்ளத்தாக்கிற்குள் கிடக்கும் குப்பை. அவளுடைய பரிவு என்னும் காற்றில் அந்த குப்பை பறந்து போய் கோபுரத்தில் உட்கார்ந்து இருக்கிறது . இன்னொரு காற்றில் அந்த குப்பை மீண்டும் பள்ளத்தில் விழுந்து கிடக்கப் போகிறது. எவ்வளவு தெளிந்த சிந்தனை. அந்தக் கதையின் ஆரம்பமே " அவனது நெஞ்சுக்குள் அந்த எண்ணம் நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டிருந்தது. அப்படி நடந்திருக்கக் கூடாது . அவள் சின்ன பெண் . ஆனால் அவன்?? " அப்படி ஒரு எதிர்பாராத நிகழ்வு தெளிந்த சிந்தனை உடைய இவனுக்கும் நிகழ்ந்து விடுகிறது. லதாவின் அப்பா மகாலிங்கம் உடம்பு சரியில்லாமல் போக, வைத்தியத்துக்கு வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்ற இடத்தில், நடக்கும் இரண்டு நிகழ்வுகள் நெஞ்சை உருக்குபவை. அங்கே ராஜா என்பவரின் மகள் ராஜி, சாமியிடம் போய்விட்டதாக சொல்லிவிட்ட தன் அம்மா, லதா தான் என்று நம்பி ஒட்டிக் கொள்ளும் ஓர் இடம் . இரண்டாவதாக அந்த ராஜாவின் தந்தையான பண்ணையார் தான், தன் வியாபாரத்தில் நஷ்டப்பட்டு, வீட்டில் தற்கொலை செய்ய வேண்டாம் என, ஹோட்டலில் தங்கி தற்கொலைக்கு முயலும் மகாலிங்கத்தை அதிலிருந்து காப்பாற்றி பண உதவி செய்தவர் என்பது விளக்கப்படும் இடம். பிரபஞ்சம் மனிதர்களை எங்கிருந்து எங்கு போய் சேர்க்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. கதையின் பெயர் "நெஞ்சில் ஒரு நெருஞ்சி" நெருஞ்சி என்பது ஊவா முள் போல வலிக்காது. ஆனால் இருக்கும் இடத்தில் இறுக்கமாய் நின்று உறுத்திக் கொண்டே இருக்கும். அதுபோல் லதாவுக்கு நடந்த ஒரு எதிர்பாராத நிகழ்வு நெருஞ்சியாய் உறுத்தி அவள் மண வாழ்வுக்கு எப்படி இடைஞ்சலாய் இருந்து மன உளைச்சலைத் தருகிறது என அழகாக கதையை நகர்த்திச் செல்கிறார் . காதல் என்பது அந்தக் கால காவியங்கள் போல tragedy யில் ஏங்கி ஏங்கிச் சாகிறதற்கு மட்டுமல்ல . நிஜ உலகிலே பிராக்டிக்கலாக வாழ்வதற்கும் முயற்சி செய்யணும். அதுதான் காதலின் உண்மையான வெற்றி என்று ஆசிரியர் சொன்னவுடன் பரவாயில்லை வித்தியாசமாக சிந்தித்து முடிவும் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் முடிவு வழக்கம்போல் தியாக வாழ்வு . பன்னிரெண்டு வருஷங்களுக்கு முன் இப்படி. சிந்தித்ததும் சிந்திக்க வைத்ததும் தான் இன்று பலரை துணிச்சலான முடிவு எடுக்கத் தூண்டி இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். அது போல் பல நிகழ்வுகளை சொல்லும் குடும்ப கதைகளை எழுதுவதற்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்ற சிந்தனையும் எழுந்தது. இது அவசரயுகம். ரசித்து படித்தது: " இதுவரை என்னைக் காதலனாக அடைந்ததற்காக நீ உன்னையே தாழ்த்திக் கொண்டாய். நவ் இட் இஸ் மை டர்ன். இனி உன்னை மனைவியாக அடைவதற்காக நான் என்னை உயர்த்திக் கொண்டாக வேண்டும். " " ஒரு ஆண் தான் பார்க்கிற அழகிய பெண்களை எல்லாம் விரும்புகிற காலத்தில், பிற ஆண்கள் மனதில் கூட இடம்பெறாமல் இருப்பதே பெண்ணுக்கு கற்பு என்கிற புராண கால இலக்கணத்தை வைத்துப் பார்த்தால் இன்றைக்கு எல்லா பெண்களுமே கற்பு இல்லாதவர்கள் ஆகிவிடுவார்கள்" "நெஞ்சில் ஒரு நெருஞ்சி" அழுத்தமான, ஆழமான கருத்தினைக் கொண்ட ஒரு நாவல்.