24 January, 2025
நாவல் முறி மருந்து.
ஆசிரியர் : எஸ். செந்தில் குமார்.
தோழமை வெளியீடு.
விலை ரூ 250.
முதல் பதிப்பு : டிசம்பர் 2009
****
குழந்தைகள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து விளையாடும் "ராஜா ராணி " விளையாட்டோடு கதை தொடங்குகிறது. ஒருவனுக்கு காய்ச்சல் என்பதால் அந்த வாரம் அவர்கள் வீட்டிலும் அவனுடைய பெரியப்பா வீட்டிலும் கறி எடுக்கவில்லை என்னும் போது வாழும் கலையை நாம் எங்கிருந்து கற்பிக்கத் தொடங்க வேண்டும் என்பது புரிகிறது.
ராமசாமியும் கந்தசாமியும் அண்ணன் தம்பி். ஒற்றுமையாக ஒன்றாக குடும்பமும் தொழிலும் நடத்திய இடத்தில், கந்தசாமி தான் நிலம் வாங்கிய விஷயத்தை தாயிடம் சொல்லவில்லை என்ற காரணத்தால் புகைந்த பகை அவர் குடும்பத்தோடு வேறு இடம் சென்றதில் முடிகிறது. ராமசாமியின் மனைவி செல்லம்மாள் " பாவி மனுஷன் செத்த வீடு மாதிரி செய்து விட்டுப் போயிட்டானே" என வருந்துகிறாள். வீடு அமைதியாக இருப்பதே மனுசனுக்கு நோய் என்று நினைக்கிறாள்.
கூட்டுக் குடும்பமாக துணி வியாபாரம் செய்தவர்கள் பிரிந்த பிறகு அவர்களுக்குள் ஏற்படும் போட்டி. உறவுகளுக்குள் முறைப் பிள்ளைகளுக்கு இடையே ஏற்படும் மெல்லிய காதல் அதன் வெளிப்பாடு , கோபத்தால் பிரிந்தவர்கள் மரணங்களால் இணையும் போது அவர்களுக்கிடையே இருக்கும் தயக்கத்தின் வெளிப்பாடு, சாங்கியம் என்ற பெயரில் உறவுகளைக் கட்டி வைத்திருந்த முறைகள், என்று அன்று இருந்து இன்று இல்லாமலாகிப் போன உறவுகளின் பிணைப்பு போன்வற்றை கதையில் அழகாகச் சொல்லி இருக்கிறார்.
இள வயது நண்பர்கள் பெண் சுகம், கோயில் திருவிழாக்களுக்கு நடனம் ஆட வரும் பெண்களிடம் சில்லறைச் சில்மிஷம், சிகரெட், குடி என தீய செயல்களில் எவ்வளவு இயல்பாக கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பதை சில இடங்களில் சொல்லி இருக்கிறார். " உன் நண்பர்கள் யாரென்று சொல். நீ யாரென்று நான் சொல்கிறேன் " என்பது தான் நினைவுக்கு வந்தது.
சந்தையில் உள்ள கடைகளில் நடக்கும் நிகழ்வுகளை வாசிக்கும் போது நாமும் சந்தையில் ஒரு கடை போட்டு அமர்ந்து பார்ப்பது போலிருக்கிறது. ரங்கம்மாள் காலையில் கடை தொடங்க வரும் போது அந்த இடத்தில் யாரோ ஒருவர் மலம் கழித்து வைத்திருப்பதைச் சொல்லும் போது ஒரு பெண்மணி தனி ஆளாக உழைக்க என்ன என்ன சிரமங்களை எல்லாம் கடக்க வேண்டி இருக்கிறது என்று பரிதாபமாக இருந்தது.
கதையில் எனக்குத் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றியது ஏகப்பட்ட கதாபாத்திரங்களின் திணிப்பு. ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும் பழைய நிகழ்வுகளை நினைவுபடுத்தி கதாபாத்திரங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டி இருக்கிறது.
கந்தசாமி, ராமசாமி இருவரின் சகோதரி மயில். அவள் கணவர் பெயர் தங்கப்பழம். இவரைச் சில இடங்களில் தங்கப்பழம் என்றும் சில இடங்களில் தானா பானா என்றும் சொல்கிறார்கள். அதைத் தவிர்த்து கதை நெடுக ஒரே மாதிரிச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றியது.
ரசித்து வாசித்தது : தொடர்ந்து நிறைய தட்டான்கள் பட்டாணி மண்டைகளோடு இறக்கை விரித்துப் பறந்தது. ஆமால்ல தட்டான் மண்டை பட்டாணி போல் தான் இருக்கும்.
ஒரு மாதம் ஒரு கிராமத்துக்குப் போய் வாழ்ந்து வந்த திருப்தி கதையை வாசித்து முடிக்கும் போது எனக்குக் கிடைத்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!