chella நாய்க்குட்டி
05 December, 2025
#நீயா நானா
இந்த வாரம் "நீயா நானா" டாபிக் "காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆனால் பிள்ளைகளின் காதலுக்கு தடை சொல்பவர்கள்"
நான் இந்த வகையில் வருவதாலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது. பிள்ளைகள் மட்டுமல்ல என்னுடன் பழகுபவர்கள் என் கருத்துக்கு மதிப்பளிப்பவர்களிடம் கூட காதல் வேண்டாம் என்று சொல்லி உண்மை நிலையை புரிய வைத்திருக்கிறேன். காதல் ஒரு மித்.
எங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் இப்போ இல்லைன்னு சொல்லலாம். பெற்றவங்க எதிர்க்காம சம்மதிச்சா பிரச்னை இல்லையேன்னு சொல்லலாம். எது எப்படி இருந்தாலும் திருமணம் என்றான பின், கணவரான பின் எல்லா ஆண்களும் ஒரே நேர் கோட்டில் நின்று விடுகிறார்கள் என்ற என் எண்ணம் ஒரு பெண்ணின் கருத்தால் மாறிப் போனது. அதனாலேயே தான் இந்த பதிவு.
அந்த பொண்ணு சொன்னது " ஒருவரைப் பிடிக்க ஆரம்பித்ததும் பரவச நிலைப் பேச்சு என்ற ஒன்று இருக்கும். நாங்கள் அந்த நிலையில் partner ஐ தேர்ந்தெடுக்க மாட்டோம். அதற்கடுத்து conversation stage னு ஒண்ணு வரும். அந்த நிலையில் தான் நமக்கு ஒத்து வருமா காதல் என்ற நிலைக்கு உயரலாமான்னு முடிவு பண்ணுவோம்.
இது நான் ஏன் நாங்கள் செய்த, செய்து கொண்டிருக்கும் தப்பை தலையிலடித்து சொன்னது. நாங்கள் எல்லோருமே அந்த பரவச நிலைப் பேச்சில் மயங்கித் தேர்ந்தெடுத்ததாலேயே தான் புலம்பல்களும் அழுகையும் பற்கடிப்பும். வயதானாலும் நாங்கள் அதே தவறைத் தான் செய்வோம்.
ஆனால் இந்த தலைமுறை தெளிவாக இருக்கிறார்கள். பரவச நிலைப் பேச்சை தவிற்பதுமில்லை. ரொம்ப யதார்த்தமாக கடந்து விடுகிறார்கள்.
இன்று மாதம்பட்டிக்கு எதிராக ஜாய் போடும் வீடியோக்களும் அந்த பரவச நிலையில் அனுப்பிய வீடியோக்கள் தான். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் கவனித்தால் பிரச்னைக்குள்ளாகாதவர்கள் இந்த பரவச நிலைப் பேச்சுக்கு மயங்காதவர்களாகவே இருப்பார்கள்.
மம்முட்டியும் பானுப்ரியாவும் "அழகன்" படத்தில் விடிய விடிய போனில் பேசுவார்களே அதுவும் இத்தகைய பரவசப் பேச்சில் தான் அடங்கும்.
அதனால் நம் தலைமுறை நாம் ஏதோ புத்திசாலிகள் எனவும் நம் பிள்ளைகள் தெளிவற்றிருப்பதாகவும் ஒரு கற்பனையில் இருந்து அவர்களை கண்டித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.
இது என் கருத்து. உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க. கேட்டுக் கொள்வோம். ்
நடு சென்டர் வெப் சீரீஸ்
Hotstar ல நடு சென்டர் னு ஒரு வெப் சீரீஸ் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு எபிசோட் தான் பார்த்திருக்கிறேன். திரைக்காக கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் என்றாலும் பயத்தை முற்றிலுமாக தவிர்க்க முடியாது.
பள்ளிகளில் மாணவர்களை கட்டுப்படுத்துவது இவ்வளவு கஷ்டம் என்றால் ஆசிரியத் தொழில் உண்மையிலேயே பரிதாபம் தான்.
ஒரு புறம் இப்படி இருக்க இன்னொரு புறம் குழந்தைகள் ஏழெட்டு வயதிலேயே எக்ஸ், க்ரஷ் பற்றி எல்லாம் முழு அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பேசுகிறார்கள் என்கிறார்கள். அந்த வகையில் பெற்றோர் நிலை அதை விடப் பரிதாபம்.
இன்றைய காலச் சூழலில் தவறான பாதையில் போய் விடாமல் குழந்தைகளைக் காக்க வேண்டியது நம் கடமை. குழந்தைகளில் ஆண் பெண் பேதமில்லாமல் எல்லோரையும்.
02 December, 2025
குதிரை வாகனம் by ஜீவகுமாரன்.
"அப்பா அம்மாவைக்கு தான் நல்ல மாப்பிள்ளை. எனக்குத் தான் தெரியும் சண்டியரைப் பற்றி" அவளும் சீண்டினாள்.
"சண்டியனோடை இன்றைக்கு நீ சண்டை பிடிக்கிறதாய் தீர்மானிச்சிட்டியா?"
அவள் மௌனமாக தலை குனிந்தாள்.
என் கைகள் அவளை அரவணைத்தது.
சண்டிக்குதிரை சண்டியனின் பிடியுள் அடங்கிக் கொண்டிருந்தது.
****
இது வீ ஜீவகுமாரன் அவர்கள் எழுதிய "குதிரை வாகனம்" நாவலில் ஒரு பகுதி. வளர்ந்த இரு ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல். இதுவல்லவோ காதல். இன்று எத்தனைக் குடும்பங்களுக்கு இடையே இந்ம அந்நியோன்யம் இருக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியும். நான் ரொம்ப ரசித்து வாசித்த பகுதி என்பதால் உங்களோடு பகிர்ந்தேன்.
சண்முகத்தார் என்னும் ஊர்ப் பெரியவர் ஒருவரின் குடும்பம் தான் கதையின் பின்புலம். இலங்கை தான் களம். அதனால் பேச்சு இலங்கைத் தமிழில் இருக்கும். வாசிக்க வாசிக்க கதையோடு ஒன்றிப் போவதால் எளிதில் புரியும்.
அதே போல பாலா என்னும் மருத்துவருக்கும் சண்டியருக்கும் இடையேயான நட்பும் பிரமிக்க வைக்கும். மொத்தத்தில் மனிதம் மிளிரும் கதை.
24 November, 2025
காதலின் ஐந்தாம் நிலை
திருமணத்தோட காதலின் நிலைகள் முடிவதா நினைக்கிறதால தான் காதலும் திருமணத்தோட நின்றிடுது. திரைப்படங்களில் திருமணத்துக்குப் பின்னான காதலின் நிலையைக் காட்டி இருந்தா பல பேர் காதலின் பக்கமே போக மாட்டாங்க.
உண்மையான காதல்னா அது தூய்மையான அன்பினால் ஆனதா இருக்கணும். ஒருத்தருக்கு கஷ்டம் வந்தா அடுத்தவங்களுக்கு கண்ணீர் வரணும். சந்தோஷம் வரக் கூடாது. சந்தோஷம் எப்படி வரும்னு கேட்கிறீங்களா? வரும் ஈகோ இருந்தால் வரும்.
என்னமோ பெரிய ஆளுன்னு நினைச்சியே நல்லா கஷ்டப்படுன்னு மனசு சொன்னால் அது உண்மையான காதல் கிடையாது. இந்த ஈகோ கல்யாணத்துக்குப் பிறகு தான் வரும். உங்களுக்குத் தெரிந்த வெற்றிகரமான தம்பதியரை கவனிச்சுப் பாருங்க அவங்க நடுவில ஈகோ கொஞ்சம் கூட இருக்காது.
பல காதல் திருமணங்கள் தான் தோல்வியைத் தழுவுகின்றன. காரணம் அங்கே தான் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் வருகின்றன. இன்னொரு முக்கியமான பிரச்னை கவனிக்கப்பட வேண்டியது இருக்கிறது. இது முக்கியமா ஆண்கள் சிந்திக்க வேண்டியது. நம்மை சந்திக்க வீட்டுக்குத் தெரியாம வந்தாளே இப்போ நமக்குத் தெரியாம யாரையும் போய் பார்த்திடுவாளோ என்பது குடற் புழு போல் நெளிந்து கொண்டே இருக்கும்.
இதை அடியோடு நீக்கினால் தான் காதல் பிழைக்கும். இல்லையென்றால் திருமணம் ஆன பின் கூட காதல் சாகும். ஆனால் திருமணத்துக்கு முன்னான நிலைகளில் கூட தோல்விக்குப் பின் காதல் பிழைப்பதற்கான வாய்ப்பு உண்டு. திருமணத்துக்குப் பின் காதல் செத்தால் பாலூற்ற வேண்டியது தான். கதை முடிந்தது.
இந்த பதிவுகள் எழுதத் தொடங்கியதும் நண்பர்கள் "எந்த காலத்துல இருக்கீங்க. இப்பல்லாம் இந்தக் காதல் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது. காமம் மட்டும் தான்" னு கூப்பிட்டு சொன்னாங்க. இருக்கட்டுமே நாம சொல்லித் தர்ரதை சொல்லித் தந்துகிட்டே இருப்போம். படிக்கும் போது படிக்கட்டும்.
(நிறைந்தது)
23 November, 2025
பட்ட மரம்
பட்ட மரம்
போலாச்சே
என் மனம்.
சந்தோஷ இலைகள்
அத்தனையுமுதிர்த்து.
ஒவ்வொரு முறை
முடிந்து போனேன்
என நான்
அலமந்து
போகும் போது
ஒற்றை இலை
துளிர்த்து
பிழைத்துக் கொள் என
உறுதியூட்டுகிறது.
என் மனம்
மலர்ந்ததும்
சந்தோஷச் சிறகுகள்
ஒவ்வொன்றாய்
இணைந்து கொள்கின்றன.
கிளை கொள்ளா
இலைகள்
பாரம் தாங்காமல்
தள்ளாடினாலும்
தாங்கிக் கொள்கிறேன்.
சந்தோஷ சிறகுகள்
எப்படியும் உதிர்ந்து
மனசு
பட்ட மரம் போலாகும்
என்றாலும்.
அணைத்துக் கொள்கிறேன்
அன்னையின்
வடிவாய்.
Subscribe to:
Comments (Atom)
