chella நாய்க்குட்டி
31 January, 2026
திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு இவ்வளவு ஆதரவு வரும்னு நான் நினைக்கல. பொதுவா நான் சந்தோஷமாவோ வருத்தமாவோ ஒரு விஷயம் என்னை பாதிச்சா முக நூலில் உடனே பதிந்திடுவேன். அப்படித் தான் இதுவும் நடந்தது. அந்த பெண்ணுக்கு ஏதும் தொந்தரவு வந்திடக் கூடாதுன்னு தான் விசிட்டிங் கார்ட் போடல.
ஆனா இப்போ ஏதும் தொந்தரவு வராது. உதவி தான் கிடைக்கும் என்பது நிச்சயமானதால் பதிகிறேன். அவர் பெயர் ஷீலா. திருச்சி ரயில் நிலையத்தில் இருக்கிறார். அவர் தொடர்பு எண் 93442 69075.
தேவைப்படுபவர்கள் இவர்களுடைய ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.
( பி.கு : கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பிருந்து நெல்லையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது. அடுத்து அவரை சந்தித்து எழுதுகிறேன்)
திருச்சியில் திருமணம் முடித்த கையோடு வேர்களைத் தேடிப் புறப்பட்டோம்.
என் கணவரோட சித்தப்பா இருப்பது காரைக்குடி அருகே பொய்யா வயல் என்னும் கிராமம். அவர் அப்பா கூடப் பிறந்தவர்களில் எஞ்சி இருப்பவர் இந்த சித்தப்பா மட்டுமே. அங்கே தான் என் மாமனாரோட கல்லறையும் அவங்க அம்மாவோட கல்லறையும் இருக்கின்றன.
அனைவரையும் சந்திக்க காரைக்குடி சென்றோம். மறு நாள் பொய்யா வயல் செல்வதாக ஏற்பாடு. காரைக்குடியில் எங்கே தங்கலாம் என விசாரிக்க தெரிந்தவர்களை அழைத்தேன். தெரியவில்லை என்றாலும் "காரைக்குடி" யைத் தன் பெயரில் இணைத்திருந்தவர்களையும் அழைத்துப் பார்த்தேன். ஒருவரும் போனை எடுக்கவில்லை. பிறகு ஒவ்வொருவராக பேசி விட்டார்கள். அதற்குள் அறை முடிவாகி விட்டது.
அருகிலுள்ள கடையில் விசாரித்து "சத்குரு" என்னும் லாட்ஜ்க்கு சென்றோம். நாளொன்றுக்கு வாடகை ரூபாய் 2300/- Double bed room. பக்கா ஏற்பாட்டுடன் வாசலில் தண்ணீர் தொட்டியில் தங்க மீன்கள் விரைவாக நீந்திக் கொண்டு இருக்க, செம வைப்பாக இருந்தது.
அவர்களே cab book பண்ணுவதற்கான செல் எண்ணையும் கொடுத்து விட , நாங்க பேசி பத்து மணிக்கு வரச் சொன்னோம். மறு நாள் காலை சரியா 9.45 க்கு வந்து தான் வந்து விட்டதைத் தெரிவித்தார் ஓட்டுநர். அப்போதே ஒரு சிறப்பான ஓட்டுநரோடு தான் பயணிக்கப் போகிறோம் என்பது நிச்சயமாகி விட்டது.
அடுத்து காரைக்குடி பற்றி பதிவுகள் வருகின்றன. அதையும் தவறாமல் பார்த்திடுங்க.
30 January, 2026
திருச்சியில் ஒரு திருமணம் .
வழக்கம் போல் கணவர் கடின வழியைத் தேர்ந்தெடுத்து மதுரை வரை பஸ்சில் போய் பிறகு அங்கிருந்து இன்னொரு பஸ்சில் திருச்சி செல்லலாம் என்றார்.
நானோ சொகுசுப் பேர்வழி. இன்டர் சிட்டியில திருச்சி போகலாம் என்றேன்.
மனம் இறங்கிய கணவர் என் வழியை ஓகே பண்ணினார். திருச்சியில் இறங்கிய பின் அவரே பயணம் சிறப்பாக இருந்தது என்றார்.
இன்டர் சிட்டி திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு நெல்லை வருகிறது. 2.45 க்கு மதியம் நெல்லையிலிருந்து புறப்படுகிறது. திருச்செந்தூரில் முருகனுக்கு நேர்ந்து மொட்டை போட்டு வந்த ஒருவர் இன்டர் சிட்டி தானே என உறுதிப்படுத்திக் கொண்டார். "வந்தே பாரத்" தோனு சந்தேகமா இருந்தது
" என்றார். அவ்வளவு சுகமாக இருந்தது பயணம். அந்த அன்பர் ஐந்து வருடமாக குழந்தை இல்லாமல் வேண்டுதல் வைத்து குழந்தை பிறந்த 17 நாட்களில் பாண்டிச்சேரியிலிருந்து திருச்செந்தூர் வந்து வேண்டுதல் செலுத்தி செல்கிறார்.
மதுரையை இரண்டே மணி நேரங்களில் அடைகிறது. அங்கிருந்து திருச்சி செல்ல 2 3/4 மணி நேரம். திண்டுக்கல் வழியாக சுற்றிச் செல்கிறது.
திருச்சியில் இறங்கியதும் ஆட்டோ ஓட்டுனர்களாக நிறைய பெண்களைப் பார்க்க முடிந்தது. சந்தோஷமா இருந்தது. அதனால் திருமண மண்டபத்துக்கு ஒரு பெண் ஓட்டிய ஆட்டோவிலேயே ஏறினோம்.
அந்தப் பெண்ணும் உற்சாகமாகப் பேசிக் கொண்டே வந்தார். பத்து வருடங்களுக்கு மேலாக ஆட்டோ ஓட்டுறாராம். இப்போது அவருக்கு 42 தான் வயது. அப்போ 30+ யிலிருந்து ஓட்டுகிறார். மிகவும் தைர்யமாக பேசிக் கொண்டு வந்தார்.
பத்து வருடங்களில் ஏதும் பிரச்னையை சந்தித்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். ஏதும் நிகழ்வைச் சொல்வார் எனக் காத்திருக்க இது வரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. என்றார். குடிச்சிட்டு சில சமயம் ஏறுவாங்க நான் பேசிப் பேசியே "பத்திரமா போ தங்கச்சி" ன்னு சொல்ல வச்சிடுவேன்னார்.
இதயத்தில் மூணு ப்ளாக் இருக்கிறது. சிறு வயதிலேயே கணவர் என்னைப் பிரிந்து விட்டதால் நான் சிங்கிள் பேரன்ட் தான் என்று பல அதிர்ச்சிகளை அடுக்கடுக்காக அளித்தார்.
எனக்கு இந்த துணிச்சல்காரி உடன் படமெடுக்க ஆசையேற்பட்டது. முக நூலில் போடவா என்றேன் "தாராளமா போடுங்க. என்னைப் பார்த்து ஒன்றிரண்டு பேர் தைர்யமானால் நல்லது தானே என்றார்.
இறங்கும் போது ஒரு விசிட்டிங் கார்ட் கொடுத்து அடுத்த தடவை வரும் போது என்னை அழையுங்கள். திருச்சியில் உள்ள கோயில்கள் எல்லாம் கூட்டிட்டுப் போய் காட்டுறேன் " என்றார்.
படத்தில் துணிச்சல் காரியுடன் பாவமாக நான். ஏன் பாவம் என்றால் இது வரை என்ன செய்து விட்டேன் என்று என்னை துணிச்சல்காரி என்று நம்பிக் கொண்டிருந்தேன் என்று என் மனச்சாட்சி மண்டையிலடித்து கேள்வி கேட்டதால். தான்..
தேவைப்படும் திருச்சிகாரர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் விசிட்டிங் கார்ட் புகைப்படம் எடுத்து அனுப்புகிறேன்.
25 January, 2026
Adhi Beekara Kamukhan
OTT : Amezon prime
Adhi Beekara kaamukan
(அதி தீவிர காதலன்)
மொழி : மலையாளம்.
இயக்குநர் : CC நிதின்
முக்கிய கதாபாத்திரங்கள்: லுக்மேன், த்ருஷ்யா ரகுநாத்
இசை : பிபின் அசோக்
ஒரு ஆணும் பெண்ணும் பழகும் போது உணர்வுப் பாதிப்பு இருவருக்கும் சம அளவில் இருக்காது. அது அவரவருடைய கடந்த கால நிகழ்வுகளைப் பொருத்து இருக்கும். அந்த காதல் தோல்வியுற்றால் பாதிப்பும் இருவருக்கும் சம அளவு இருக்காது.
அதனாலேயே எதிர் பாலினத்தவரிடம் அக்கரை காட்டும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செல்லம், தங்கம், அழகி என்பது ஒருவருக்கு வெறும் சொற்களாக இருக்கலாம். ஆனால் வேறொருவருக்கோ அவை உயிரை உலுக்கும் உலைக்களனாக இருக்கும். அதே போலத்தான் ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காட்டும் அக்கரை வெறும் மனிதாபிமானம் சார்ந்ததாக இருக்கலாம். அதுவே எந்த ஒரு பெண்ணின் அன்பையும் அனுபவித்திராத ஆணுக்கு உயிரை உருவி விடும் கொலைக் கருவி ஆகி விடும்.
இந்தப் படத்தின் கதை அப்படி பாதிக்கப்பட்ட ஒரு ஆணின் நிலையைப் பேசுகிறது.
ஒரு விதத்தில் நாம் என்றோ பார்த்து விட்ட முரளி, ஹீரா இணைந்து நடித்த "இதயம்" படம் போல இருந்தாலும் லுக் மேன் தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற முகத்தால் நம்மை படத்தோடு ஒன்ற வைக்கிறார். அவர் சிரித்தால் நாம் சிரிக்கிறோம். அவர் தோற்று தெருவோடு அடக்க முடியாமல் அழுது கண்ணீர் வடித்து சென்றால் நாமும் சோர்ந்து போகிறோம்.
படிப்பில் அதிக ஆர்வமில்லாத அர்ஜுனன் சில வருட இடைவெளிக்குப் பின் ஒரு பேராசிரியரின் உதவியால் கல்லூரியில் சேர்கிறார். தன் கூட்டாளிகளுடன் விளையாடி மகிழ்வாய் பொழுதைப் போக்கியவருக்கு கல்லூரிப் படிப்பு பெரும் பாரமாய் இருக்கிறது.
அவனுடைய தாய் அவனைக் கல்லூரியில் விட்டுச் செல்லும் போது காட்டிய பரிவைக் கண்ட ஹீரோயின் அனு அதே அன்பை அவன் மேல் காட்ட அது வரை தன் தாயை மிஞ்சிய அழகி உலகில் இல்லை என நினைத்திருந்த மகன் முதன் முறையாக வேறொரு பெண்ணை தன் தாயை மிஞ்சிய இடத்தில் வைத்து காதலித்து உருகுகிறான். அந்த காதலைப் பெண்ணிடம் சொல்லும் தைர்யம் வராமலே நாட்களைக் கடத்துகிறான்.
ஆண்களுக்கு சொல்லித் தர வேண்டிய இன்னொரு அறிவுரை உனக்கு ஒரு பெண்ணைப் பிடித்தால் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்.என்ன பேச வேண்டும் என்பதை நீ தான் முடிவு செய்ய வேண்டும். அதைச் சரியாக செய்ய முடியாமல் நண்பனின் வழி காட்டுதலில் நடந்தால் உன் வாழ்வின் தீர்க்கமான முடிவுகளை நீ எப்படி தனியாக எடுக்கப் போகிறாய்.
கதை என்ற அளவில் பார்த்தால் அறுதப் பழசான இன்ட்ரோவர்ட் பையனின் காதல் தோல்வி தான். அதைத் தன் நடிப்பால் பாவனையால் தூக்கி நிறுத்தி இருக்கிறார் லுக் மேன்.
சமூக ஊடகம் - மன உறுதி - அவசியம்
சமூக ஊடகங்களில் இன்று பலரும் இயங்கிக் கொண்டு இருக்கிறோம். சமீபத்தில் கேரளாவில் தீபக் என்ற ஆண் ஒரு பெண் தன்னை சோஷியல் மீடியாவில் தவறாகச் சித்தரித்து விட்டாள் என்று தற்கொலை செய்திருக்கிறார். இந்த நேரம் எனக்கு இங்கே உங்களிடம் சொல்ல ஒன்று இருக்கிறது.
நான் 2011 இல் இருந்து வலை உலகத்தில் நீந்திக் கொண்டிருக்கிறேன். அப்போ "ப்ளாக்" என்னும் வலைப்பூவில் நம் மனதுக்கு பிடித்த படி எழுதுவோம். அந்தக் காலத்திலேயே நான் இத்தகைய இடரைக் கடந்து வந்திருக்கிறேன்.
சென்னைக்கு ஒரு முறை போய் வந்த போது சில பிரபலங்களைக் கண்டு வந்ததால்
அவர்களைப் பற்றி தினம் ஒரு பதிவாகப் போட்டுக் கொண்டிருத்தேன். எங்கே இவள் பெரியாளாக ஆகி விடுவாளோ என பொறாமைப்பட்ட சிலரின் தூண்டுதலால் ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து என்னை "அக்கா" என்று அன்பாக அழைப்பவர் என்னைப் பற்றி தப்பும் தவறுமாக ஒரு பதிவு போட்டு விட்டார்.
தப்புத் தவறும் என்றதும் வேற மாதிரி யோசிக்க வேண்டாம். ரொம்ப மெனக்கெட்டு ஒரு வேலை செய்திருந்தாங்க. தூத்துக்குடியிலிருந்த ஒருவரைத் தொடர்பு கொண்டு நான் பணி புரிந்த இடத்துக்கு போகச் சொல்லி, ( என் கெட்ட நேரம் நான் அப்போ மெயின் அலுவலகத்துக்குப் போயிருந்தேன். ) என் பணி இடம் பற்றிய தகவல்களைச் சேகரித்து விட்டார்கள். அப்போது தான் தாம் சொல்லும் பொய் கொஞ்சம் உண்மை போலத் தெரியும் என்று.
அவரது வலைப்பக்கத்தில், நான் என் கீழ் பணி புரிபவர்களை மிகவும் துன்புறுத்துவதாகவும் (😀) என் அராஜகப் போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் பதிந்திருந்தார்கள். நான் கிளார்க்காக இருந்து அதிகாரி ஆனவள். அதனாலேயே என் கீழ் பணி புரிபவர்களிடம் என்னால் ரொம்ப தோழமையாக பழக முடிந்தது.
அது தெரியாமல் இப்போது போலவே பதிவின் கீழ் என்னை "சொர்ணாக்கா" ரேஞ்சுக்கு திட்டி பலரும் கமென்ட் போட்டிருந்தார்கள். அந்த பதிவில் என்னைப் பற்றிய ஒரு வரியில் கூட உண்மை கிடையாது.
என்னால் இதை வீட்டிலும் பகிர்ந்து கொள்ள முடியாது. சமூக ஊடகத்தில் இயங்குவது பிடிக்காதிருந்தது. மிகுந்த மன உளைச்சலுக்குள்ளானேன். நான் இதைத் தொடர்ந்து ஒரு வருடம் ஏதும் எழுதாமல் வலைப்பூவை விட்டு விலகி இருந்தேன்.
பின் நண்பர்கள் உண்மையில்லாத ஒரு விஷயத்துக்காக நீங்க ஏன் எழுதாமல் இருக்கணும்னு வற்புறுத்தி , அதன் பின் எழுதத் தொடங்கி இன்று இந்த நிலையில் இருக்கிறேன். என்னை எதிர்த்தவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை.
இனி இத்தகைய அவமானங்கள் உண்மைத்தன்மையற்ற செயல்பாடுகள் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். தப்பு செய்தவன் தண்டனை அடைய இப்போ நிறைய வாய்ப்புகள் இருக்குன்றன. மொத்த உலகத்திலும் சமூக ஊடகங்களில் இயங்குபவர் ரொம்பக் குறைவான பேர் தான் என்பதை பாதிக்கப்பட்டவர் முதலில் நன்கு உணர வேண்டும்.
அடுத்து காவல் துறையின் தலையீடு தேவைப்பட்டால் அவர்களை அணுக வேண்டும். முதலில் மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும் .
நம்மை நன்கு அறிந்தவர்கள் நம்மைத் தவறாக எண்ண மாட்டார்கள். நம்மை அறியாதவர்கள் நம்மைப் பற்றித் தவறாக நினைத்தால் அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.
அன்று தீபக்கைத் திட்டி கமென்ட் இட்டவர்கள் இன்று வீடியோ பகிர்ந்த பெண்ணைத் திட்டுகிறார்கள். நாளை ஒரு வேளை வேறொரு செய்தி வந்தால் மறுபடியும் மாறுவார்கள். இவர்களல்ல நம்மை நியாயத் தீர்ப்பிட வேண்டியவர்கள். இவர்களுக்காக கொடுக்க வேண்டிய அளவு மலிவானதல்ல நம் உயிர்.
இதுவும் கடந்து போகும் என்று
திட மனதோடிருங்கள்.
Subscribe to:
Comments (Atom)
