chella நாய்க்குட்டி
05 January, 2026
திருப்பலியில முக்கியமான இடம் எழுந்தேற்றம் என்பது. அப்போது இயேசு சிலுவையில் தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காகக் கொடுத்து மரணித்த நேரம் நினைவுபடுத்தப்படும்.
இது சார்ந்த என் எண்ணங்கள்.
இந்த எழுந்தேற்ற நேரத்தில் எல்லோரும் ரொம்ப பய பக்தியோடு பிரார்த்திப்பார்கள். நான் நெற்றி நிலம் தொட வணங்குவேன். அந்த நேரத்தில் என் நிரந்தரப் பிரார்த்தனை என் இரு மகள்களின் முதுகுத் தண்டுவடம் பலப்பட வேண்டும் என்பதாக இருக்கும். அதன் உடன் அப்போதுள்ள தேவைகளும் இணைந்து கொள்ளும்.
ஒரு வயதான மூதாட்டி அப்போது மிகுந்த சத்தத்தோடு பிரார்த்திப்பார்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும். நான் வந்த புதிதில் அவர்களிடம் சொன்னேன். "அடுத்தவங்களுக்கு தொந்தரவில்லாமல் செபிக்க வேண்டாமா" என. அப்போ என் தோழி சொன்னார்கள் " எத்தனையோ பேர் சொல்லி பார்த்தாச்சு. நீங்க சொல்லியா மாத்தப் போறாங்க" என்று. இன்று வரை மாறவில்லை.
ஆரம்ப காலங்களில் நன்மையை நாவில் தான் வழங்குவார்கள். குருக்கள் மட்டுமே வழங்குவார்கள். இப்போது கன்னியரும் கொடுக்கிறார்கள்.
கொரோனா காலத்தில் நாவில் கொடுப்பது தடை செய்யப்பட்டது. இடது கையில் வாங்கி வலது கையில் எடுத்து நாமே உட் கொள்ள வேண்டும் எனக் கொண்டு வந்தார்கள். எனக்கு இடது கையில் வாங்குவது பிடிக்காது அதனால் வலது கையில் வாங்கி அப்படியே வாயில் இட்டுக் கொள்வேன்.
இப்போ கொரோனா காலம் முடிந்த பிறகு வாயில் கொடுக்கிறார்கள். இதில் குருக்களுக்கு என்ன சங்கடம் என்றால் ஒருவருக்கு வாயில் கொடுக்க வேண்டும் . அடுத்து வருபவர் கையை நீட்டுவர். அதற்கடுத்து வருபவர்களுக்கு கையில் கொடுக்க வேண்டும் என்று எண்ணும் போது திடீரென்று அவருக்கு நின்று வாங்குவது மரியாதைக் குறைவாகத் தெரியும் முழங்கால் போட்டு வாங்குவார். ரொம்ப பாவம் அவங்க. ஒவ்வொருத்தருக்கும் கிண்ணத்தில் எடுத்து கொடுத்தே கை விழுந்து போகும். இதில் இத்தனை வேறுபாடுகள். அதுவும் திருவிழா நாட்களில் மிகுந்த கூட்டம் இருக்கும். அசந்து போய் விடுவார்கள். அதனால் கன்னியாஸ்திரிகளும் கொடுக்கலாம் என்று வந்தது நல்லது தான்.
ஆனால் சொல்லி வைத்தது போல் அத்தனை பேருமே முக்காட்டை கழுத்தில் தான் போடுகிறார்கள். கிறிஸ்தவ முறைப்படி ஆலயத்தினுள் பெண்கள் தலை முடிய தெரிய இருக்கக் கூடாது. அப்படி இருக்க நன்மை வழங்குபவர்கள் இப்படி வருவது உறுத்தலாக இருக்கிறது.
ஒரு சின்ன ஆலோசனை. யாராவது உரியவர்கள் பார்வைக்கு சென்று சேருதா பார்ப்போம். நன்மை கொடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டிருப்பது கடினம். ஒரு நெட் தலையில் போட்டு முடிச்சிட்டுக் கொள்ளலாமே.
உறுத்தாத மாற்றங்கள் வரவேற்கத் தக்கதே.!!
மாவட்டத் தலைவர் தமுஎச, திரு சேதுராம கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்க , தேவர்பிரான் வரவேற்புரை தொகுத்து வழங்கியவர் சத்யா. நிகழ்வு இளம்பிறை எழுதிய "யாழினியின் புத்தன்" புத்தக வெளியீடு.
புத்தகத்தை " தமிழ்ச் சுடர் "தீன் வெளியிட குழந்தைகள், குழலி, காயத்ரி , தன்யா பெற்றுக் கொண்டார்கள். இன்னும் பேசிய மற்றவர்கள் விவரம் அறிய இணைத்துள்ள அறிவிப்பைப் பாருங்கள்.
"யாழினியின் புத்தன்.
புத்தன் ஒருவருக்கு உலகம் போற்றும் ஞானியாய்த் தெரிவான். ஒருவருக்கு தன் பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிக்க விட்டுச் சென்ற பொறுப்பற்றவனாய்த் தெரிவான். ஒருவருக்கு ஆசைகளைத் துறக்க முடிந்த வல்லவனாய்த் தெரிவான். இந்த புத்தகம் யாழினியின் புத்தன் எத்தகையவன் என்பதைச் சொல்லும் என்று நினைத்துத் தொடங்கினேன்.
ஆசிரியர் இளம்பிறையின் தமிழ் வளம் நான் அவர்களோடு பேசும் போதே நன்கு அறிந்தது. அதே போல் அவர்கள் பேத்தி குழலிக்கு தன்னிடம் பேசுபவர் யாராய் இருந்தாலும் ஈர்க்கும் சக்தி உண்டு. அதுவும் நான் அறிவேன். இளம்பிறை பெரும்பான்மை பெண் சமூகம் நினைப்பதை மாற்றி யோசிப்பவர்.
சின்ன சின்ன நிகழ்வுகள் கதைகளாக கொடுத்திருக்கிறார்கள். அதுவும் நீதி சார்ந்த கதைகள். கார்த்திகா வரைந்திருக்கும் படங்களும் குழந்தைகளை ஈர்ப்பனவாக உள்ளன. எழுதப்பட்ட பகுதிகளுக்கு பொறுத்தமான தலைப்புகள். காலக் குழந்தைகள் பாட்டி கதைகள் கேட்டு நல்வழிப்பட வாய்ப்பு குறைவு. அதனால் இத்தகைய புத்தகங்களின் அவசியம் ஏற்படுகிறது.
இதில் தன் அப்பனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சரவணன் போல குழந்தைகள் பெரியவர்களுக்கு நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. அது இன்னும் அவர்களை ஈர்க்கும்.
ஒவ்வொரு பக்கத்திலும் இறுதியில் கொடுக்கப்பட்ட நீதிக் கருத்துகள் எல்லா பக்கங்களிலும் கொடுத்திருக்கலாம். புத்தகத்தின் அளவு குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் " மீதமொரு முலை எறி" இருக்கும் வடிவில் இருக்கிறது.
அது சரி யாழினியின் புத்தன் யாரு. அவரவர் கற்பனைக்கு தோன்றுபவர் அவரவர் புத்தன். நல்லா இருக்குதுல்ல.அதே போலத் தான் இயேசுவும். இயேசு மாதா போன்றவர்களை வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் போலவே ஏன் காட்டணும்னு சில இடங்களில் கருப்பு நிறத்திலும் சிற்பங்கள் செய்து வைக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான எழுத்தை அதிகப்படுத்துவோம். இன்னும் கொஞ்ச நாளில் அவர்களே அவர்களுக்காக அதிகம் எழுதத் தொடங்குவார்கள். இப்பவே தொடங்கி விட்டார்கள்.
29 December, 2025
Gen Z குழந்தைகளின் பாய்ச்சல்
எங்க அப்பாவின் மாணவர் திரு பாப்பையா அவர்கள் ஒருவரைத் தான் அறிந்திருந்தேன் ஆதலால் அவரை மட்டும் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். மற்றும் ஒரு மாணவர் " மேலும்" சிவசு ஐயா. இவரும் தூய சவேரியார் கல்லூரியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர். இந்த நிகழ்ச்சி பற்றி பாப்பையா சார் மூலம் அறிந்ததும் என்னை அழைத்துப் பேசினார். "அவ்வளவு அழகா உடை உடுத்தி வருவாரும்மா உங்க அப்பா ( என் உடை நேர்த்தியின் நதித் தலையணை அது தான் போல) " என்று சொன்னதோடு எங்க தாத்தா கணிதப் பேராசிரியர் சந்தியாகு அவர்களையும் நினைவு கூர்ந்தார். "வெள்ளை வேட்டி , ஜிப்பா, கழுத்தில் ஒரு சின்ன துண்டு, வகுப்புக்கு வெளியே காலணியைக் கழற்றி விட்டு வரும் அழகு" என அவரைப் பற்றியும் சொல்லி விட்டு தன் பேரன் எழுதிய ஆங்கில கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு என்னை அழைத்தார். அங்கே போன பின் தான் தெரிந்தது அவர் பேரன் அனிருத்தின் அம்மாவைப் பெற்ற அம்மாவும் ஆதி மூலமும் நானும் தொலைத் தொடர்புத் துறையில் ஒன்றாகப் பணி புரிந்திருக்கிறோம்.
சிறப்பான நிகழ்வும் , ருசியான இரவு உணவும் மனதையும் வயிற்றையும் நிறைக்கத் திரும்பினேன்.
முதலில் இந்த GenZ குழந்தைகளின் பாய்ச்சல். மேடையில் மூன்று குழந்தைகள். செல்வன் அனிருத், செல்வி பார்கவி ரமேஷ், செல்வன் விஷ்ணு வெங்கடேஷ்.
அனிருத் எழுதிய புத்தகத்தின் பெயர் "The Shimmering joy of writing" ஈர்க்கும் பெயரும் , அழகான மேலட்டையும், கனக்கும் கவிதைகளுமாக அந்த புத்தகம் இருந்தது என்றால், நளினமான ஆடலோடு கூட அனிருத்தின் ஒரு கவிதையை அழகான ஆங்கிலத்தில் வாசித்தாள் பார்கவி. செல்வன் விஷ்ணு மற்றுமொரு கவிதையை மனதில் உருவேற்றி அழுத்தமான குரலில் பாராமலே சொன்னான்.
நமக்குத் தேவையான சில கருத்துகளும் சொல்லக் கிடைத்தன. தொடர்கிறேன்.
19 December, 2025
காந்தா. டிஸ்னி ஹாட் ஸ்டாரில்
Disney Hotstar
படத்தின் பெயர் காந்தா
இயக்குநர் : செல்வமணி செல்வராஜ்
முக்கிய கதாபாத்திரங்கள்: துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ
தயாரிப்பாளர்கள் : ராணா டகுபதி, துல்கர் சல்மான் ( அட!!) மற்றும் இருவர்.
தமிழ் திரைப்பட உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் கதையின் லேசான சாயல் தெரிகிறது. தன் சூப்பர் ஸ்டார் பதவியை தன் கோபத்தால் இழந்து மிகவும் பரிதாப நிலைக்குச் சென்று மரித்தவர் தியாக ராஜ பாகவதர்.
உடையில், பேச்சில் சுற்றுச் சூழலில் அந்த காலத்தை மிக அழகாக்க் கொண்டு வந்திருக்கிறார்கள். துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ இருவர் முகமும் கதா பாத்திரத்துக்கு மிகவும் பொருந்திப் போகின்றது.
நடிப்பில் சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ மூவருக்குமே சபாஷ் சரியான போட்டி.
எப்போதுமே ஒருவர் உயிரை எடுக்குமளவு கோபம் இரண்டு ஆண்களுக்கு இடையில் வருவது பெண் சம்பந்தமாக அல்லது நிலம் சார்ந்ததாக இருக்கும். இங்கே பெண் சார்ந்து வருகிறது. ஆனால் பலியாவது ஓருயிரா?? இல்லை. இல்லை.
துல்கரின் மாமனாராக வழும் நிழல்கள் ரவி ஒரு சாயலில் நாசர் போல, ஒரு சாயலில் சங்கிலி முருகன் போல ஒரு சாயலில் நிழல்கள் ரவி போல மாறி மாறித் தெரிகிறார்.்
சமுத்திரக்கனி திரைப்பட இயக்குநர் . தன் அம்மாவின் கதையாக சாந்தா என்னும் படத்தை எடுக்க அந்த பெயரை சாந்தா என மாற்ற வேண்டும் என்பதில் தொடங்குகிறது இயக்குநர் கதாநாயகன் இருவருக்கும் இடையேயான ஈகோ.
கதாநாயகிக்கு தன் மனைவி அந்தஸ்தை கொடுக்க துல்கரும் , தன்னை வளர்த்து முதல் படம் கொடுத்த சமுத்திரக் கனியின் விருப்பத்தை மீறி துல்கரை மணம்முடிக்கத் துணிந்த பாக்யஸ்ரீ யையும் நடந்து விடுகிறது அந்த அசம்பாவிதம்.
படம் ரொம்ப நல்லா எடுத்திருக்கிறாங்க. பாருங்க.
அப்பா இறந்த 50 ஆம் ஆண்டு
தேதிய பார்த்தீங்களா?
இன்றிலிருந்து சரியாக ஐம்பதாண்டுகளுக்கு முன்.
ஆனா தேதி. அப்பாவோட இள வயதில் எடுத்தது.
ஐம்பதாண்டுகள் என்பது எப்படி சடுதியில் ஓடிப் போய் விட்டது.
அன்றிருந்த அப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மாவை அழகாக எங்களை அலங்காரம் பண்ணி விடச் சொல்லி வித விதமாய் போட்டோ எடுத்துச் சேர்த்த அப்பா. அம்மாவோட சேர்ந்து ஆடைகளை டிஸைன் செய்து தயாரித்து எங்களுக்கு அணிவித்து அழகு பார்த்த அப்பா. இன்று என்னிடம் இருந்து விலக மறுக்கும் மேட்டிமை உருவாகக் காரணமாக இருந்த அப்பா.
ஆனால் இப்போ தோணுது அவர் இன்னும் கொஞ்சம் காத்திரமாய் இருந்திருக்கலாமோ?
மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்ற மனம் இவ்வளவு பூஞ்சையாய் வலி தாங்க முடியாததாய், இருந்து உருகி உருகி காதலித்த மனைவியையும் , உயிராய் நினைத்த பிள்ளைகளையும் இப்படி நட்டாற்றில் விட்டது போல் விட்டு போயிருக்கக் கூடாதோ!
ஆனாலும் நீந்திக் கரை சேர்ந்து விட்டோம் அப்பா. உங்கள் பேரப் பிள்ளைகள் இன்று வெளிநாட்டிலும். அவர்களின் பிள்ளைகள் அங்கேயும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். என் கவலை எல்லாம் இதையெல்லாம் பார்க்க நீங்கள் இல்லாமல் போனீர்களே என்பது தான். இன்று வரை நீங்கள் இல்லாததால் நாங்கள் கடக்கும் வலிகள் அற்பமானவை அல்ல அப்பா.
பொதுவாக பிள்ளைகளை விட பேரப் பிள்ளைகளை அதிகம் நேசிப்போம் என்கிறார்கள். நீங்கள் பிள்ளைகளிடமே பேரன்பைக் காட்டியவர். அந்த மகாப் ப்ரவாக அன்பை உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு காட்டாமல் மறைந்து போனீர்களே அப்பா.
அதற்காகத் தான் சொல்கிறேன். அப்பாக்களே!! கொஞ்சம் காத்திரமாய் இருங்கள்.
பழகும் மனிதரிடமெல்லாம் உங்கள் அன்பின் சாயலைக் கண்டு பாசத்தில் பற்றிக் கொள்வதும், இடை வழியில் நீங்கள் விட்டுச் சென்றதைப் போலவே அவர்கள் விலகும் போது இளகித் தவிப்பதும் தொடர்கதையாகத் தான் அப்பா இருக்கிறது.
எவ்வளவோ துணிவோடு காரியங்கள் செய்தாலும் அன்பு என்ற விஷயத்தில் மட்டும் பலவீனமாகிப் போகிறேன். அன்பைக் காட்டிய நீங்கள் அன்பற்று ஜடமாய் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தந்திருக்கலாமே அப்பா.
நீங்கள் இல்லாமல் ஐம்பதாண்டுகள் வாழ்ந்து விட்டோம் என்பதே நம்ப முடியாமலிருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளோ! இந்த ஒன்றை மட்டும் எப்படியும் படித்து விட வேண்டும்.
நல்ல மனம் படைத்தோர், நாணயமானோர், கனிவானவர், பண்பானவர், என்னை அரவணைக்க நெருங்கி வருவோர், என்னை வியந்து என் தன்னம்பிக்கையை அதிகரிப்போர் அத்தனை பேரிடமும் இருந்து எட்டி இருக்க பழக வேண்டும். மற்றவர்களின் பிரிவு என்னைப் படுத்துவதே இல்லை என்ற நிலை வர வேண்டும்.்
விரைவில் வந்து சேர்ந்து விடுவேன். காத்திருங்க அப்பா.
Subscribe to:
Comments (Atom)
