Bio Data !!

13 December, 2025

வழக்கறிஞர் கருப்பையா நினைவஞ்சலி

அரிகேசவநல்லூர் என்னும் ஊரைச் சார்ந்த கருப்பையா வழக்கறிஞர் அவர்கள் தனது 76 ஆவது வயதில் இறந்த பிறகு அவர் மகன் ஆயிரம் K செல்வகுமார் என்பவர் ஆயிரம் பௌன்டேஷன் என்பதை நடத்தி வருகிறார். அவர் வழக்கறிஞர் கருப்பையா நினைவுச் சொற்பொழிவும் நடத்தி வருகிறார். 11 ஆம் ஆண்டு நினைவு சொற்பொழிவு இன்று நடந்தது. நண்பர் தீன் அவர்களால் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.என் அருகில் அமர்ந்திருந்த அவர் மகளிடம் அது என்ன "ஆயிரம்" என்று கேட்டேன். எங்க தாத்தா பெயர் என்று சொன்னார்கள். இன்றைய நிகழ்வில் கருப்பையா அவர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டது. இவர் நகைச்சுவையாக பேசக் கூடியவர். மிகச் சிறந்த வாசிப்பாளர். தமிழ் இலக்கியத்திலே ஆழ்ந்து நெறிப்பட்டவர். அவர் சொன்னதாக வழக்கறிஞர் மணி அவர்கள் சொன்னது " Irwing Wallace அவர்கள் எழுதிய The Second Lady வாசிக்கச் சொன்னார்" . நான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் வாசித்த அருமையான புத்தகம். ஆயிரம் நடராஜன் என்ற அவருடைய தம்பி Ernest Hemingway யின் நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருப்பதாகச் சொன்னார்கள். மூத்த வழக்கறிஞர் தீன் அவர்கள் பேசும் போது மனிதர்களில் பொதுவாக இரண்டு வகை உண்டு அதுவாவது . Introvert, extravert. Bava அவர்கள் வெளிப்பார்வைக்கு introvert ஆகத் தெரிவார். ஆனால் அவருடைய தயக்கமற்ற செயல்களில் extrovert ஆக வெளிப்படுவார். மூன்றாவதாக உள்ள உளவியல் தத்துவமான omnivert ஆகவும் தெரிவார் என்றார். "இலக்கியம் என்பது பூரணம். ஒரு அகலைக் கொண்டு ஆயிரம் அகல்கள் ஏற்றலாம். வெளிச்சம் குறையாது. அதைப் போன்றது இலக்கியம் " என்று வழக்கறிஞர் கருப்பையா அவர்கள் சொல்வார்கள் என்றார். வழக்கறிஞர்கள் இறந்த பிறகு அவர்களைப் பற்றி பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் ஆயிரம் K செல்வகுமார் தன் தந்தையைப் பற்றி பலரும் பேசும் விதமாக செயல் புரிந்திருக்கிறார் என்று பாராட்டினார். அடுத்து "மானுடம் வெல்லும் " என்னும் தலைப்பில் சிறப்பு உரை ஆற்ற வந்த பவா செல்லத்துரை தொடக்கத்திலேயே " நல்ல மேடைப் பேச்சாளர்கள் எவ்வளவு சத்தம் இருந்தாலும் பேசுவார்கள். நான் எழுத்தாளன். அமைதியான சூழலில் தான் என்னால் பேச முடியும் என்றார். கூட்டம் குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவு அமைதி காத்து அவர் உரையைக் கேட்டது. ஆசிரியத் தொழில் செய்த தன் தந்தையை நினைத்து தான் எதுவும் செய்ததில்லை என்று வருத்தமாகக் கூறினார். இவர் தந்தை தன் 21 ஆவது வயதில் தீபத்தன்று தற்கொலைக்கு முயன்று தப்பித்திருக்கிறார். தொங்கி விட வேண்டுமென கயிறு கட்டிய நிலையில் வானத்தில் வாண வேடிக்கைகளைக் கண்டதும் மனம் மாறி வீடு திரும்பி இருக்கிறார். நமக்கு இப்படி ஒரு அருமையான கதை சொல்லி அவர் வழியாக வர இருக்கும் போது மரணம் எப்படி அவரைத் தழுவும். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தீபத்தன்றே அவர் இறந்தார் என்றார். நிறைய விழுமியங்களை தந்தையிடமிருந்து பெற்றேன் என றார். அப்பாவைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுதல் நம்மை நெறிப்படுத்தும் என்ற தல்ல ஒரு கருத்தையும் சொன்னார். நேர்மை அறத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்று உணர்த்திய சுதந்திர தியாகி பற்றிய அருமையான "தியாகி" கதை சொன்னார். எத்தனை எத்தனை சிறு கதைகளை நினைவுகளின் அடுக்கில் சேமித்து வைத்திருக்கிறார். வாசிப்பு மட்டும் தான் நம்மை தினம் தினம் கழுவிச் சுத்தப்படுத்தும் என்றார். பல சிறுகதைகளைக் கேட்டு பலர் வாழ்வின் ஆகச் சிறந்த முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்றார். இன்றைய பொழுதை இந்த நிகழ்வு சின்ன நெருடலோடு கூடிய ஆகச் சிறந்த பொழுதாக்கியது.

11 December, 2025

சிற்றுளி

இவ்வாழ்வில் வேறு எதையும் விட அதிகமான ஒரு பிணைப்பு அவனுக்கு அவளிடம் இருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தில் அன்பை எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருக்க முடியாது. அது அவசியமும் அல்ல. புரிந்து கொண்டால் போதுமானது. இனி அவன் என்ன முயன்றாலும் அது போலியாக கவனக் குவிப்பை பெறும் பெரும் முயற்சியாகவே இருக்கும். அற்புதங்கள் நிகழக் காலமாகும். நிச்சயம் நேரம் எடுக்கும். காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயம் ஒரு நாள் நிகழ்ந்துவிடும். அவன் அற்புதங்களின் சமிஞ்சைகளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்" இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் "சிற்றுளி" என்ற ஜூலை & செப்டம்பர் 2025 இதழில் "நித்யா ஹரி" அவர்கள் எழுதிய "கானமயில்" என்ற சிறு கதையிலிருந்து ஒரு பகுதி. ரொம்ப நல்லா இருந்தது. இந்த உணர்வோட நம்மை இணைத்துக்கொள்ள முடியுது. ஒரு சந்தர்ப்பத்தில் அன்பு கொண்ட இருவருக்கு இடையே பிரிவு வந்தபின் அதை சரி செய்ய ஓரளவு தான் முயல வேண்டும். அதற்கு மேல் முயலும் போது அது ஒரு போலித்தனம் காட்டுவது போல் ஆகிவிடும். அப்படிங்கறத ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க. நல்ல சிறுகதை. சிற்றுளியில் இதுபோல பல ரசிக்கத் தகுந்த அம்சங்கள் உள்ள. தனி இதழ் 130 ரூபாயும் ஓராண்டு சந்தா 500 ரூபாயும் செலுத்தலாம்.

07 December, 2025

எங்கள் நெல்லை ஆயர் மேதகு ஜூட் பால் ராஜ் அவர்கள் ஆயராகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்த விழாவும், கிறிஸ்மஸ் விழாவும் இணைந்து ST.Anne's நடத்தும் மன நலம் குன்றியோர் மறு வாழ்வு இல்லத்தில் வைத்து நற்செய்திக் குழுவினரால் நடத்தப்பட்டது. கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இங்கு பல முறை சென்றிருக்கிறேன். கைவிடப்பட்ட முதியோரும் இருப்பார்கள். முதியோர் எண்ணிக்கை குறைந்திருப்பது போல் தோன்றியது. மக்களின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பல பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணம் பொருளாதாரமாகத் தானே இருக்கிறது. ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி இங்கிருப்பதாகச் சொன்னார்கள். எவ்வளவு ஞாபகமா ஸ்டெப்ஸ் போடுறாங்க. ஆட்டிஸம் குழந்தைகள் முன்னால இவ்வளவு இருந்த மாதிரி இல்லையேன்னு தோணியது. அப்போ ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. முழுமையாக மன நலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை இப்போ குறைஞ்சிருக்குது. இரண்டிக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம் என்று. தெரியல. ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் இணைந்து பாடினார்கள். அந்தப் பையன் பார்க்க பாதிக்கப்பட்டவன் போலயே தெரியவில்லை. நேராக என்னிடம் வந்து "நான் நல்லாப் பாடினேன்" என்றான். நாம "பாடினேனா" எனக் கேட்போம். அந்தக் கடைசி எழுத்து மாற்றத்தில் மட்டுமே தொக்கி நின்றது ஒருவரின் மன நலம். அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தாடையும் எல்லோருக்கும் உணவும் வழங்கப்பட்டன. ஆயர் அவர்கள் பேசியதில் எனக்கு ரொம்ப பிடித்தது " பிறப்பவரெல்லாம் மனிதரல்ல. பிறருக்காக வாழ்பவர் மட்டுமே மனிதர்" "தன்னைப் பற்றி மட்டுமே அக்கரைப் படுபவர்கள் இன்னும் வாழத் தொடங்கவே இல்லை என்பது தான் உண்மை" அருமையான கருத்துகள் தானே. சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள் பார்க்கிறோம். சேவை புரியும் இளைஞர்கள் அதிகரித்து விட்டார்கள். நம் மக்களை நாம் தானே தாங்கிப் பிடிப்போம். இணைத்திருக்கும் படங்களும் வீடியோக்களும் சான்று.

05 December, 2025

#நீயா நானா

இந்த வாரம் "நீயா நானா" டாபிக் "காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆனால் பிள்ளைகளின் காதலுக்கு தடை சொல்பவர்கள்" நான் இந்த வகையில் வருவதாலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது. பிள்ளைகள் மட்டுமல்ல என்னுடன் பழகுபவர்கள் என் கருத்துக்கு மதிப்பளிப்பவர்களிடம் கூட காதல் வேண்டாம் என்று சொல்லி உண்மை நிலையை புரிய வைத்திருக்கிறேன். காதல் ஒரு மித். எங்கள் வாழ்க்கையில் உள்ள சிரமங்கள் இப்போ இல்லைன்னு சொல்லலாம். பெற்றவங்க எதிர்க்காம சம்மதிச்சா பிரச்னை இல்லையேன்னு சொல்லலாம். எது எப்படி இருந்தாலும் திருமணம் என்றான பின், கணவரான பின் எல்லா ஆண்களும் ஒரே நேர் கோட்டில் நின்று விடுகிறார்கள் என்ற என் எண்ணம் ஒரு பெண்ணின் கருத்தால் மாறிப் போனது. அதனாலேயே தான் இந்த பதிவு. அந்த பொண்ணு சொன்னது " ஒருவரைப் பிடிக்க ஆரம்பித்ததும் பரவச நிலைப் பேச்சு என்ற ஒன்று இருக்கும். நாங்கள் அந்த நிலையில் partner ஐ தேர்ந்தெடுக்க மாட்டோம். அதற்கடுத்து conversation stage னு ஒண்ணு வரும். அந்த நிலையில் தான் நமக்கு ஒத்து வருமா காதல் என்ற நிலைக்கு உயரலாமான்னு முடிவு பண்ணுவோம். இது நான் ஏன் நாங்கள் செய்த, செய்து கொண்டிருக்கும் தப்பை தலையிலடித்து சொன்னது. நாங்கள் எல்லோருமே அந்த பரவச நிலைப் பேச்சில் மயங்கித் தேர்ந்தெடுத்ததாலேயே தான் புலம்பல்களும் அழுகையும் பற்கடிப்பும். வயதானாலும் நாங்கள் அதே தவறைத் தான் செய்வோம். ஆனால் இந்த தலைமுறை தெளிவாக இருக்கிறார்கள். பரவச நிலைப் பேச்சை தவிற்பதுமில்லை. ரொம்ப யதார்த்தமாக கடந்து விடுகிறார்கள். இன்று மாதம்பட்டிக்கு எதிராக ஜாய் போடும் வீடியோக்களும் அந்த பரவச நிலையில் அனுப்பிய வீடியோக்கள் தான். நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் கவனித்தால் பிரச்னைக்குள்ளாகாதவர்கள் இந்த பரவச நிலைப் பேச்சுக்கு மயங்காதவர்களாகவே இருப்பார்கள். மம்முட்டியும் பானுப்ரியாவும் "அழகன்" படத்தில் விடிய விடிய போனில் பேசுவார்களே அதுவும் இத்தகைய பரவசப் பேச்சில் தான் அடங்கும். அதனால் நம் தலைமுறை நாம் ஏதோ புத்திசாலிகள் எனவும் நம் பிள்ளைகள் தெளிவற்றிருப்பதாகவும் ஒரு கற்பனையில் இருந்து அவர்களை கண்டித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இது என் கருத்து. உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க. கேட்டுக் கொள்வோம். ்

நடு சென்டர் வெப் சீரீஸ்

Hotstar ல நடு சென்டர் னு ஒரு வெப் சீரீஸ் பார்க்க ஆரம்பிச்சேன். ஒரு எபிசோட் தான் பார்த்திருக்கிறேன். திரைக்காக கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் என்றாலும் பயத்தை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. பள்ளிகளில் மாணவர்களை கட்டுப்படுத்துவது இவ்வளவு கஷ்டம் என்றால் ஆசிரியத் தொழில் உண்மையிலேயே பரிதாபம் தான். ஒரு புறம் இப்படி இருக்க இன்னொரு புறம் குழந்தைகள் ஏழெட்டு வயதிலேயே எக்ஸ், க்ரஷ் பற்றி எல்லாம் முழு அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பேசுகிறார்கள் என்கிறார்கள். அந்த வகையில் பெற்றோர் நிலை அதை விடப் பரிதாபம். இன்றைய காலச் சூழலில் தவறான பாதையில் போய் விடாமல் குழந்தைகளைக் காக்க வேண்டியது நம் கடமை. குழந்தைகளில் ஆண் பெண் பேதமில்லாமல் எல்லோரையும்.