Bio Data !!

16 September, 2026

நம் வாழ்வில் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கும். ஒன்று நம்மால் அவருக்கோ அல்லது அவரால் நமக்கோ. அந்தப் பணி முடியும் வரை நம்மோடு பயணிப்பார்கள். அந்த உறவு நம்மைப் பல ஆக்க பூர்வமான காரியங்களைச் செய்ய வைக்கும். அந்தப் பணி முடிந்ததும் அந்த உறவும் விலகி விடும். சில நேரங்களில் நாமே ஒரு கணக்குப் போட்டு ஒருவரை நெருங்கும் போது பிரபஞ்சம் நம்மோடு விளையாடிப் பார்க்கும். அந்த உறவை நம்மை விட்டுப் பிரித்து வைக்கும். சேர நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் முறித்துப் போடும். பிரிவில் உருகித் தவிக்க வைக்கும். வெகு அபூர்வமாய் சிலருக்கு அந்த உறவை நிரந்தரமாய் பிரித்து விடும். வேறு சிலரை அவர்கள் பிரிவிற்கு மனதை தயார் செய்யும் நேரம் வரும் போது இணைத்து விடும். இதெல்லாம் பிரபஞ்சத்தின் கைங்கர்யம்.

13 September, 2026

நாவலின் பெயர் : ருத்ரா ஆசிரியர் : வான்மதி ஹரி விலை : ரூ 280 AVR publishing. "ருத்ரா" நாவலின் மூலம் வான்மதி ஹரி என்ற எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார். ருத்ராவைப் பற்றிய அட்டைப் பட அறிமுகமே வாசிக்கத் தூண்டியது. " அனலில் முக்குளித்த அக்னியவள். காரிகையின் கை கோர்த்து கயவர்களின் பிடியிலிருந்மு தப்பித்த கங்கையவள். ஆதவனின் அகம் சேர்ந்த ஆழியவள் தன் குருதி தெறிக்க அரக்கர்களை வதம் செய்ய அவதாரம் எடுத்த ருத்ர சக்தியவள்" இது தான் ருத்ரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்ட பவித்ரா பற்றிய அறிமுகம். தீரன் ஒரு விபத்தில் தாய் தந்தை இருவரையும் பறி கொடுத்த இளைஞன். காவல் துறை அதிகாரி. ருத்ராவைப் பார்த்ததும் அவள் பின்புலம் எதைப் பற்றியும் ஆராயாமல் இவள் தான் தனக்கு உற்ற வாழ்க்கைத் துணை என முடிவெடுத்து மணக்கிறான். தீரனின் உயிர் நண்பன் அருண். உயிர் நண்பன் என்றால் உயிரையும் கொடுக்கத் துணிந்த நண்பன். அவனும் காவல் துறையைச் சேர்ந்தவன் தான். கதையின் ஆரம்பம் தீரன் , ருத்ரா இருவரின் காதல் வாழ்க்கையை அழகுற உரைக்கிறது. திடீரென்று கதை திசை மாறி பவித்ரா ருத்ராவாக ஏன் மாறினாள். எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பி வந்திருக்கிறாள் உலக அளவில் பெண்ணுடல் வியாபார சந்தையை துவம்சம் பண்ண எவ்விதம் உதவுகிறாள் என்று பரபரப்பாக பயணிக்கிறது. புதிது புதிதாக புதுக் களங்களைக் கொண்டு கதை உருவாக்குபவர் பிறப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி தான். நான் ரொம்ப ரசித்த வாசித்த நாவல்.

10 September, 2026

OTT : Netflix படம் பெயர் : Newton's 3rd law இயக்குநர் : ராஜேஷ் கர்னா மொழி தெலுங்கு. தமிழிலும் டப்பிங் உண்டு. முக்கிய கதாபாத்திரங்கள்: சுமந்த், ஜெகதி பாபு, ட்ரிநாத் வர்மா, ரவி வர்மா, நேகா பத்தன் ஷெல்லி கிஷோர். கல்லூரியில நியூட்டனின் மூன்றாம் விதி படித்த ஞாபகம் இருக்குதா? Every action has an equal and opposite reaction. ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு. அது தான் கதையின் ஒரு வரி. கர்மா என்று சொல்கிறோம். அது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான வினையை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்துவது. ஒரு காலத்தில் தெய்வம் நின்று கொல்லும் என்றார்கள். இப்போ அப்படி இல்லை. நம் கண் எதிரே வினை புரிந்தவர்கள் அதன் பலனை அனுபவிப்பதை பார்க்கிறோம். இந்த கருத்துத் தான் படமெடுக்க வைத்திருக்கும். நன்றாக வாழ்ந்த குடும்பம் ஒன்று தங்கள் நகைக் கடை ஒன்று திருட்டுப் போனதால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறது. குடும்பத் தலைவன் இந்த துயரத்தில் குடியில் மூழ்கி விடுகிறார். தாய் குடும்பப் பாரம் தூக்கிச் சுமக்க செவிலியாகப் பணிக்குச் செல்கிறாள். தங்கள் ஒரே மகனை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் எனப் பாடுபட அவனோ தன் தாயையும் தந்தையையும் கடனில்லா சுபிட்ச வாழ்வு வாழ வைக்கத் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறான். காவல் துறை அதிகாரியாக வரும் சுமந்த் கட்டுடலுடன் கூட திருத்தமான முகத்துடன் அந்தக் கதாபாத்திரத்தின் குணநலன் பிரதிபலிக்க தோதாக வருகிறார். மகனாக கல்லூரி மாணவனாக வரும் ட்ரிநாத் வர்மா இள வயதின் துடிப்பை , வேகத்தை, அன்பும் அராஜகமும் கலந்த அந்த வயதின் வெளிப்பாட்டை சிறப்புறக் காட்டுகிறார். யதார்த்தம் உணர்ந்து நடிக்கிறாரே ஷெல்லி கிஷோர் என்று தேடிப் பார்த்தால் "தங்க மீன்கள்" படத்தில் நடித்திருக்கிறார். 2006 இல் கேரளா அரசு தொலைக்காட்சி விருது வாங்கி இருக்கிறார். மகன் தேர்ந்தெடுத்த தவறான வழியில் குடும்ப நிலை உயர்ந்ததா?? தன் தாய் தந்தையை சந்தோஷமாக வைத்திருக்க முடிந்ததா ? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். தவற விடக் கூடாத சிறந்த படம். த்ரில்லர் படங்கள் எடுப்பதில் மலையாளமும் தெலுங்கும் போட்டி போட்டு முன்னேறும் போது நாம் தமிழில் மட்டும் ஏன் இன்னும் பொட்டு வெடி வெடித்துக் கொண்டு இருக்கிறோம்.

08 September, 2026

நான் பொதுவாக அரசியல் பேசுவதில்லை. ஆனால் ஓரளவு அரசியல் தெரியும். என் தனிப்பட்ட கருத்தை நண்பர்களிடம் தனியாகப் பகிர்ந்து கொள்வேன். எந்தக் கட்சியின் கண் மூடித் தனமான தீவிர ஆதரவாளரும் இல்லை நான். கலைஞர் காலத்தில் அவர் பேசும் தமிழ் , வயதான காலத்திலும் அவருடையதான கடும் உழைப்பு பிடிக்கும். ஆனாலும் செல்வி ஜெ உடனான மோதலில் அவருடைய செயல்பாடு ரொம்ப அதிருப்தியைக் கொடுத்தது. எங்கள் வீட்டுக்குள்ளேயே எதிரெதிர் அணியாக நிறைய வாக்குவாதங்களைக் கொண்டு வந்தது. ஆனால் திரு ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியேற்ற பின் விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே குறியாக முன்னேறியது ரொம்பப் பிடித்திருந்தது . எவ்வளவோ நல்லது செய்தும் அவரது தொகுதியில் தோற்கடிக்கப் பட்டது மன உளைச்சலைத் தந்தது. தற்போதைய சூழல் எல்லார் மேலும் அதிருப்தியைத் தருகிறது. பாவப்பட்ட பொது ஜனங்களுக்கு நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையைப் போக்குகிறது் ஒரு சாரார் கூச்சலிடுவதும். அந்தச் சத்தத்தை மீறி பேசுபவர் பேசுவதும், தனது கை அசைவுகளாலேயே கூச்சலிடுபவர்களை மேலும் கூச்சலிட வைப்பதும் அயர்வைத் தருகிறது. ஒரு விதமான எதிர் மறை வைப்ரேஷன் பரவும். அது நல்லதில்லை. நாட்டுக்கும் தனிப்பட்ட மனிதர்களின் உடல் நலத்துக்கும். இது வரை நடந்ததைக் கூட அப்பாவி பொது ஜனம் அனுபவமின்மை என மறந்து போக வேண்டுமென்றால் ஒழுங்கைக் காக்க வேண்டியவர் கையறு நிலையில் அமர்ந்திருக்காமல் தலையிட வேண்டியது அத்தியாவசியம். வெளி நடப்பு என்பது நாகரீகமான முறையில் காட்டும் எதிர்ப்பு. பேசும் அத்தனை பேருமே கண்ணியம் காக்க வேண்டியது அத்தியாவசியம். அரசியல் மாற்றம் வேண்டும் என்று களமிறங்கிய 30+ 40+ காரர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடக் கூடாது. இது தவிர்க்க முடியாமல் வந்த அரசியல் பதிவு தான்.

07 September, 2026

#நாவல் அறிமுகம் #கருணைநதி

நாவலின் பெயர் : கருணை நதி ஆசிரியர் : மிதையா கானவி பதிப்பகம் : புக் வைப் விலை. : 180 ரூபாய் நூலாசிரியர் போர்க்களத்தில் கோரமான யுத்தத்தை நேரில் கண்டு , களத்தில் காயமடைந்து, உயிர் தப்பிய நேரடி சாட்சியம் . கதை இலங்கைப் போரின் போது மக்கள் பட்ட அவதிகளை சொல்கிறது. சொந்த வீடு விட்டு, நாடு விட்டு , தான் சேர்த்த அத்தனை செல்வங்களையும் இழந்து புலம்பெயர்வது பெரும் வலி. அதை விடக் கொடுமை போர் நடக்கும் இடங்களில் போராடிக் கொண்டே உயிர் வாழ்வது. ஆனால் அந்தத் தளத்திலும் அழகான ஒரு காதலை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். திவா 17 5 2009 வரை வன்னியிலிருந்து பின் இடம் பெயர்ந்து வவுனியா புனர்வாழ்வு மையத்தில் தஞ்சமடைந்தவன். மையத்தில் அவர்களை மாடுகள் போல் அடைத்து வைத்திருந்ததாகவும் நம் நாட்டில் மாடுகளுக்கு கூட அதைவிட அதிக சுதந்திரம் இருந்ததாகவும் எரிச்சல் அடைகிறான். போரில் தப்பி வந்து முகாமில் இருந்த சிலர் நோய்வாய்ப்பட்டும் இறக்கிறார்கள். படுத்துறங்கவோ உடைமாற்றவோ தனியிடம் எவருக்குமில்லை. ஒவ்வொரு வேளை உணவுக்கும் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது. கொஞ்சம் சமயம் தப்பிச் சென்றாலும் உணவு இல்லாமல் தவிக்க வேண்டி வந்தது. உணவு திண்டாட்டம் இப்படியானால் குடிப்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடான இடத்தில் குளிப்பது எப்படி . அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கே போராட்டம் . இதுதான் போரின் அவல நிலை. அங்கே ஒழுங்காக வாரப்படாத தலைமுடி, செருப்பில்லாத கால்கள் அழுக்கான ஆடையோடு தான் ஒரு காலத்தில், ஒருதலையாகக் காதலித்த மருத்துவர் சங்கவியை பார்க்கிறார் திவா. தன் நண்பன் கரன் மூலம் தன் உயிரோடு, பலரையும் காத்த அவள் இருப்பிடத்தை அறிந்து போரில் தான் தாக்கப்பட்டது, தனக்கு சங்கவி மருத்துவ உதவி செய்தது, காக்க முற்படும்போது அவளுடன் பணிபுரிந்த மருத்துவர் குண்டடிப்பட்டு இறந்தது எல்லாம் விளக்கமாக எழுதி கடிதம் போடுகிறான். போரின் வலிமிகு தருணங்களை வாசிக்க வாசிக்கப் பதை பதைத்து போகிறது நெஞ்சம் . ஆனால் அந்த கடிதம் சங்கவியின் மனநிலையை மாற்றி தன் அத்தியாவசிய கடமை என்ன என்று உணரச் செய்கிறது . கடிதம் எழுதியது யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே சங்கவியின் மருத்துவத் தொழிலுக்கு உதவி செய்கிறான் திவா. ஒரு முறை காதலைச் சொல்லத் தயங்கி இழந்த தன் காதலியை மறுபடியும் இழந்து விடக்கூடாது என்று பயத்தால் வந்த தயக்கம் அவன் காதலைச் சொல்ல தடை போட்டுக்கொண்டே இருக்கிறது. கடமையைக் காதலிக்கும் சங்கவியுடன் இடையில் வந்த தன் காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? முகாமிலேயே இருந்தார்களா? புலம் பெயர்ந்து வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்களா? எனப் பலப்பல கேள்விகள் எழலாம். "கருணை நதி " அதற்கான பதிலைத் தரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.