Bio Data !!

12 March, 2026

மாதவியின் கண்ணழகில் மயங்கிப் போன கோவலன் போல் வாயு அடுப்பில் கிறங்கிப் போய் கரியடுப்பை மறந்த நாங்கள் இன்று கண்ணகியிடம் திரும்பிய, திருந்திய கோவலனாய் விறகெரிக்க முடிவெடுத்துத் தேடினால் நிழல் தரும் நல்ல மரங்களை அல்லவா வெட்டிச் சாய்க்க வேண்டும் போல.

11 March, 2026

தமுஎச வி எம் சத்திரம் கிளை நடத்திய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை பாளை சரோஜ் நினைவகத்தில் பேராசிரியர் முத்துலட்சுமி அவர்கள் தலைமை ஏற்று நடத்தித் தந்தார். திரு வண்ணமுத்து அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.சி.த. இஷா & ச.ஜீவன் கவிதை வாசித்தார்கள். சாகித்ய அகடமி விருதாளர் முனைவர் விமலா " தமிழிலக்கியப் புலத்தில் பெண்ணியப் போக்குகள்" என்ற தலைப்பில் பேசினார். "பெண் சந்தித்த முதல் தோல்வி தான் முதன்மை இடத்திலிருந்து இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது தான் என்றார். உண்மை தானே . ஆதியிலே தாய் வழிச் சமூகமாக இருந்து ஒரு மூத்த தாய்க் கிழவியின் பேச்சு கேட்டு நடந்த சமூகம் பற்றி நாம் அறிந்தது தானே. பாரதியார் பெண் விடுதலை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் ஒருவர் " எவ்வளவு புரட்சி பேசினாலும் சாலையில் நடந்து வரும் போது உமக்கு பத்தடி தள்ளி பின்னால் தானே உங்க மனைவி மனைவி வர்ராங்க" என்று கேட்ட உடன் தன் மனைவியின் தோளில் கை போட்டு அக்ரஹாரத்தில் உடன் அழைத்துச் சென்றவர் பாரதியார் என்பதை நினைவுபடுத்தினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சத்யா ஒரு அருமையான கருத்தினைச் சொன்னார். பாலியல் பற்றி கொஞ்சமும் தெரியாத வயதில் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் அதுவே பெரியவர்களிடம் குழந்தைகளை தவறான இடங்களில் தொடாதே என அழுத்தி வலியிறுத்துவதில்லை என்றார். நம் பழக்கமே தவறு செய்யும் ஆண்களை விட்டு விட்டு பெண்களிடம் நீ சரியான உடை அணிந்து வா என சொல்வது தானே. பாப்பாக்குடி செல்வமணி அவர்கள் " உலகம் ரொம்ப மாறி விட்டது. என் மனைவி மகன்களிடம் நல்லா வீட்டு வேலை செய்யப் பழகிக்கோ. அப்போ தான் கல்யாணமாகிப் போற இடத்துல அடி வாங்காமத் தப்பலாம் " என்று சொல்லி வளர்ப்பதாகச் சொன்னார். அது நகைச்சுவைக்காக மட்டும் அல்ல உண்மையிலேயே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றத்தைத் தான் குறிப்பிடுகிறார். ஆனாலும் அந்த குழந்தைகளின் தாய் பாராட்டுக்குரியவர்களே! தமிழ்நாடு அரசு சிறந்த பெண் குழந்தை விருது பெற்ற சூடாமணிக்கு பொன்னாடை போற்றி பரிசளித்தார்கள். சமூகப் போராளி துளசியம்மாள் " பிணம் எரிப்பது உட்பட பெண்கள் பங்களிக்காத தொழில் என்று எதுவுமே இன்று இல்லை. " என்றார். அவர் சொன்ன இன்னொரு கருத்தை என்னை வெகுவாகக் கவர்ந்தது. "எட்டு மணி நேரம் உழைப்பு போராடிப் பெற்றுக் கொடுத்தார்கள். அது ஏன் எட்டு மணி நேரம் உழைப்பு என்றால். எட்டு மணி நேரம் உழைப்பு , எட்டு மணி நேரம் உறக்கம் , எட்டு மணி நேரம் ஓய்வு. ஓய்வு என்பது பெண்களுக்கான நேரம் என்றார். சரி தானே " மீ டைம் " என்று இன்றைய பெண்கள் குரல் எழுப்பும் அந்த ஓய்வுக்கான எட்டு மணி நேரத்தில் தான் பெண்கள் குடும்பத்தின் உயர்வுக்காக வெளியே சென்று உழைக்கக் கற்றுக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் போனது. எட்டு மணி நேரம் கூட வேண்டாம். நமக்கான விருப்பத்துக்காக சில மணி நேரங்களையாவது ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலையை ஐடி போன்ற துறைகளில் தம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆட்டோ ஓட்டும் பெண்களைக் கௌரவிப்பது, தோழர் நாறும்பூநாதன் வார்த்தெடுத்த தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை சூடாமணியை பாராட்டுவது, வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நடனம், கவிதை வாசித்தல் என வாய்ப்புக் கொடுப்பது என மகளிர் தின நிகழ்ச்சி களை கட்டியது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அமைத்துத் தந்த தோழர்களுக்கு பாராட்டுகள்.

09 March, 2026

மகளிர் தினம் 2026

பாளை சரோஜ் நினைவகத்தில் 7.3.2026 அன்று தமுஎச வி.எம் சத்திரம் கிளை முன்னெடுத்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. போன உடன் நான் கண்டது மொத்தமாக பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடையுடன் வட்டமாக அமர்ந்திருந்த காட்சி. நம்ம ஊர்ல இத்தனை பெண் ஆட்டோ ஓட்டுனர்களா? ஆச்சர்யப்பட்ட நான் உடனே போய் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். பேரா. முத்துலட்சுமி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனரான நெல்லையைச் சேர்ந்த காந்திமதி இருக்காங்களான்னு கேட்டு, திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுனர் பற்றிய என் பதிவு 1,70,000 வியூஸ் போனதைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் வரவில்லை. ஆனால் பெண் ஆட்டோ ஓட்டுனர்களை ஓரணியாக்கி பொறுப்பேற்று செயல் பட்டுக் கொண்டிருக்கும் தோழர் ஜெயஸ்ரீ அவர்கள் தான் அவரிடம் நான் விசாரித்ததை சொல்வதாகக் கூறினார்கள். அவர்களை மகளிர் தினத்தன்று மரியாதை செய்வதற்காக அழைத்திருந்தார்கள். துணிச்சலாக பெண்கள் எல்லா துறைகளிலும் இறங்குவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. பதிவு எழுதும் போது ஒரு விஷயத்தை வலியுறுத்தச் சொன்னார்கள். "நெல்லை புது பஸ் நிலையத்தில் பெண்களுக்கான தனி ஆட்டோ ஸ்டான்ட் கேட்டு ஆட்சியாளரிடம் மனு கொடித்திருக்கிறார்களாம். அதை செஞ்சு கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி எழுதுங்கம்மா" என்றார்கள். சாராள் டக்கர் கல்லூரி அருகில் உள்ள நிலையத்தில் ஐந்து பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் காத்து இருக்கிறார்களாம். சிறப்புல்ல !!!! பெண்கள் கல்லூரி அருகில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பது வெகு சிறப்பு. உரியவர்களின் கவனத்துக்கு இது எப்படியும் போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு் . செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையோடு வேண்டுகோள் வைப்போம். செய்து கொடுங்கள் ஐயா. வணங்குகிறோம். நிகழ்ச்சி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன். காத்திருங்கள்

02 March, 2026

நெல்லை சாரதா கல்லூரி. பல ஆண்டுகளுக்கு முன் தொலைபேசி அதிகாரியாகப் போய் கல்லூரி முதல்வரின் அறையில் ப்ராட் பேன்ட் சரி செய்து வந்திருக்கிறேன். அதன் பின் சமீபத்தில் என் தோழி உடனும் அவள் தோழியுடனும் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. தான் படித்த கல்லூரியை இருபதாண்டுகளுக்குப் பின் பார்க்க ஆசைப்பட்டாள். எங்க வீட்டிலிருந்து கிளம்பும் போது சுரிதார் வேண்டாம் , புடவைக்கு மாறிக் கொண்டு வா என அவள் தோழி சொன்னதும், நான் சுரிதாரில் இருக்கிறேனே பரவாயில்லையா எனக் கேட்டேன். நாங்க அந்த கல்லூரி மாணவர்கள். படிக்கும் போது புடவைக்கு மட்டுமே அனுமதி. அதிலும் அர்ஷா அங்கே உள்ள பல மாணவிகளுக்கு ரோல் மாடலாக இருந்தவள். அதனால் சொன்னேன் என்றாள். போகும் போது "அம்மா, பதினைந்து நிமிடம் தான். எனக்கு முக்கியமான இடங்களில் நின்று புகைப்படம் எடுக்கணும். எடுத்திட்டு கிளம்பிட வேண்டியது தான் " என்றாள். ஆனால் கல்லூரியில் நாங்கள் இருந்தது இரண்டு மணி நேரம். எனக்கு அந்த பிள்ளைகளின் சந்தோஷத்தை "நேரமாகுதுன்னு" சொல்லி கெடுக்க மனமே வரல. கல்லூரி முதல்வர் இவ்வளவு down to earth ஆ இருந்து ஒருவரை நான் பார்த்ததே இல்லை. பழைய மாணவிகளிடம் எவ்வளவு நினைவுப் பகிர்வு. என்னிடம்" நீங்கள் எத்த வருடம் இங்கே படித்தீர்கள் " என்று கேட்டார்கள். "நான் இந்த கல்லூரியில் படிக்கவில்லை. " என்று நான் படித்த கல்லூரியின் பெயரைச் சொல்லி என் வயதைச் சொன்னதும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. "இவ்வளவு வயதா? நம்பவே முடியல" என்று எனக்கு உற்சாக பானமளித்தார்கள். "இவ்வளவு கட்டுப்பாட்டில் வளரும் போது பெண் குழந்தைகள் திருமணத்துக்குப் பின் வாழ்க்கையை சுலபமாக எதிர் கொள்கிறார்களா" எனக் கேட்டேன். "நிச்சயமாக. விட்டுக் கொடுத்தலும் பணிந்து நடப்பதும் இயல்பாகவே வந்து விடும்" என்றார்கள். இவர்கள் கல்லூரிக்குள் ஆண்களுக்கு அனுமதி இல்லை. மாணவிகளை அழைத்துச் செல்ல வந்தவர்களும் கல்லூரிக்கு வெளியே தான் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காத்திருக்கிறார்கள். பெற்றவர்கள் பெண் குழந்தைகளை இந்த கல்லூரிக்கு அனுப்பி விட்டு நிம்மதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அந்த நேரம் வகுப்புகள் முடிந்ததற்கான மணி அடித்ததும் மாணவிகள் பட்டாம் பூச்சிகள் போலப் பறந்து வந்தார்கள். இவ்வளவு கட்டுப்பாட்டிற்கான எந்த நெருக்கடியும் அவர்கள் முகத்திலில்லை. ஒரு வகையில் குழந்தைகளுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுப்பதும் அவர்களுக்கு நாம் செய்யும் தீமையோ எனத் தோன்றுகிறது.

19 February, 2026

நாவல் : குட்டிமா. ஆசிரியர் : அராத்து Auto narrative Publishing விலை 500/- ரூபாய். முதல் பதிப்பு : ஜனவரி 2026 சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நாவலின் ஆசிரியரைப் பார்த்து ஒரு ஆணாதிக்கவாதி. பெண்களை மதிக்காதவர் என்ற கருத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் பார்க்க வேண்டும் என்று தான் புத்தகத்தை வாங்கினேன். பெண்கள் தாமே தம்மை அடிமைப்படுத்திக் கொண்டு கிடப்பதைப் பார்த்த ஆதங்கம் தான் எழுத்தில் வெளிப்படுகிறது. கொஞ்சம் "ரா" வாகத் தான் எழுத்து இருக்கிறது. ஆனால் நான் பதின்ம வயதிலிருந்தே ஆங்கில நாவல்கள் வாசித்துப் பழக்கப்பட்டவள் என்பதால் என்னைத் தயார்படுத்திக் கொண்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். , ஆரம்பமே பதை பதைக்க வைக்கிறது. கதை நாயகி சிந்துவின் ( இரண்டு கால்களையும் விபத்தில் இழந்த) தகப்பன் தன் மனைவியுடன் உடையின்றி இயங்கிக் கொண்டிருப்பதை சிந்து பார்த்து விடுகிறாள். ச்சீ!! இதையெல்லாம் எப்படி வாசிக்கிறது என்பவர்கள் இந்த இடத்தில் நகர்ந்து விடலாம். பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளோடு உறவு கொண்டு விடலாம். ஆணுக்குத் தான் அது சிரமம் என்று நினைத்திருந்த என் நம்பிக்கையை தவிடு பொடியாக்கியது இந்த நாவல். ஒரு பெண் ஆரோக்கியமான திருமண வாழ்வு நடத்த அவளுக்கு அதிர்ச்சி தராத நியாயமான பால்யமும், பதின்ம காலமும் அத்தியாவசியம் என்பதைப் புரிய வைக்கத் தான் அந்த முதல் காட்சி. "அழகுப் பெண்கள் அடங்கி இருந்தால் ஆண்களுக்குத் தேவி. அந்தப் பெண்கள் சுதந்திரமாக பேச ஆரம்பித்தாலே காளி" வஞ்சி என்ற மிகத் தைர்யமான கதா பாத்திரம். தன் எமோஷனல் ஃபீலிங்குக்கு ஆண்கள் தேவை இல்லை. செக்சுவல் ஃபீலிங்குக்கு மட்டுமே தேவை" என்று மாத்தி யோசிப்பவள். எமோஷனல் ஃபீலிங்குக்கு ஆண்களைச் சார்ந்த பெண்கள் தானே ஏமாந்து போய் மரண வேதனை அனுபவிக்கிறார்கள். தேவைக்கும் அதிகமாய் பண வசதி கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் நான்கைந்து ஆண்களை தன்னைச் சீராட்ட அமர்த்திக் கொள்கிறாள் வஞ்சி. இதைத் தான் மாத்தி யோசிப்பவள் என்றேன். ஆசிரியர் , ஒரு ஆண் தன் பண பலத்தாலேயே பல பெண்களோடு உல்லாசமாய் இருப்பதை ரசிக்கிறீர்களே அதை வஞ்சி வழியாக மாத்தி யோசித்தால் உங்களுக்கு எவ்வளவு ஏற்பற்றதாய் இருக்கிறது என்று "ரா" வாக உணர்த்துகிறார். வீணா என்றொரு கதாபாத்திரம். இவள் சிந்துவுக்கும் வஞ்சிக்கும் நடுவாந்தரமாக இருப்பாள். வீணாவை வைப் ஒரு தேவதையைப் போல் பார்த்துக் கொள்வான். ஆனால் அவளாக ஆசை வந்து அந்தரங்கமாக தொட்டால் வெறி வந்தவன் போல் கத்துவான். அவனுக்கு இருக்கும் உடல் குறை மாத்திரை போட்டு நிவர்த்தி செய்து கொள்வதால் அவன் முடிவு செய்யும் போது தான் வீணாவை ஆராதிப்பான். வீணா வஞ்சியிடம் "தன் தூய்மையான தெய்வீகமான காதல் கதை" யை விளக்கிச் சொலறப்போ அடப் போங்கப்பா "எல்லா காதல் கதையும் தெய்வீகமானது தான்" என்று தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது் ஆசிரியர் ஆணாதிக்கவாதியோன்னு நினைச்சு வாசிக்கத் தொடங்கின கதை முடிக்கும் போது பெண்ணியவாதியோன்னு ஆகிடுச்சு. ஏன் சார் ரெண்டுக்கும் நடுவுல வாழ வழியிருக்குதா? சுரேந்தர் சிந்துவிடமும், முரளி வீணாவிடமும் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது "இப்படித்தானே ஒரு சில ஆண்கள் கணிக்கப்பட்ட காய் நகர்த்துதலில் பெண்களை வீழ்த்துகிறார்கள் என்று தோன்றியது. ரசித்த வரிகளில் ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறேன். " நாவல் முழுவதும் வாக்கியங்களும் வார்த்தைகளும் நாக்குப் பூச்சிகள் போல நெளிந்து கொண்டே இருந்தன." " அழகு என்பது புற அழகு மட்டுமல்ல. உள்ளிருந்து பெருகும் அழகும் புறத் தோற்றத்தில் அழகுறக் கலந்து ஒட்டு மொத்த அழகும் ஒளிர்ந்து மிளிர வேண்டும்" "மேட்டர் மேட்டர் என மேட்டர் ஒரு மேட்டரே இல்லை என்று ஆன பின் தான் அனைத்து விஷயங்களிலும் கருத்து மோதல் வரும்" பெண் மென்மையாகத் தான் புணர வேண்டும் என்று ஆண்கள் நினைப்பதாக ஒரு இடத்தில் வருகிறது. பெண் என்று பொதுமைப்படுத்துவதை விட "தன்" மனைவி, "தன் " கதை நாயகி, "தன்" ஆதர்ஷ மனுஷி என ஒரு சிலரை மட்டுமே இந்த வரையறைக்குள் அடைக்கிறது ஆண் மனம். காமத்துக்காக பணம் கொடுத்து செல்லும் பெண் இந்த வரையறைக்குள் வருவாளா? இல்லையே? ஒரு வித்தியாசமான நாவல் வாசித்த திருப்தியோடு முடித்தேன்.