chella நாய்க்குட்டி
15 October, 2025
#மகள்
மகள்கள் என் தேவதைகள்
எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள்.
எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சி உண்டு.
[ ] காதல் திருமணம் செய்ததால் அந்த பெண் குழந்தைகளை வயிற்றில் சுமந்த போது சரியான போஷாக்கோ கவனிப்போ கொடுக்கவில்லை என்று.
[ ] பெரிய மகள் இன்று ஏதாவது உடல் பிரச்னை சொன்னால் எனக்கு கவலைப் புழு போல் குடைகிறது. அந்தத் தவறை செய்திருக்கக் கூடாதோ. இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்து வயிற்றில் பிள்ளையைத் தாங்கி இருக்கணுமோ. சரி செய்ய முடியாத தவறைச் செய்து விட்டேனே. அந்த மகள் வயிற்றில் இருக்கும் போதே , நான் கவலைப்படும் போது முட்டி முட்டி ஆறுதல் சொன்னவள். இன்றும் எங்களுக்கு ஒன்று என்றால் ஆண் பிள்ளை போல் எங்களைப் பற்றி சிந்திப்பவள். இவள் தேவதை அல்லாமல் வேறென்ன.
[ ]
இரண்டாவது மகள் நான்கு வருடம் கழித்து நாங்க கொஞ்சம் ஸ்டெடி ஆகிக்கிட்ட பின்னால தான் உண்டானாள். ஆனாலும் நெல்லையில் இருந்து நாகர்கோயிலுக்கு தினம் ரயில் பயணம். நிலையத்திலிருந்து அலுவலகத்துக்கு அரை மணி நேரம் நடைப் பயணம். குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது என்றாலும் அலைக்கழிப்பு.
ஒரு நாள் டிரெயின் புறப்பட்டு விடுமோ என்ற பதற் றத்தில் நிலையத்தில் கவுத்துப் போட்ட "ப" போல் கிடக்குமே சரளைக்கற்கள் அதன் மேல் வயிற்றுப் பிள்ளையோடு ஏறி , இறங்கி போன அனுபவம் இன்றும் நினைத்தால் அடி வயிறு கலங்கும்.
அதற்கு ஈடு செய்யும் விதமாய் என் மகள்கள் பிள்ளை உண்டான போது ஆகச் சிறந்த கவனிப்பு செய்து என் குற்ற உணர்ச்சியைக் கொஞ்சம் தணித்துக் கொண்டேன்.
பாசமும் பரிவும் என் பிள்ளைகள் எனக்கு வாரி வழங்குகிறார்கள். அதுவும் நான் பலவீனப்படும் நேரத்தில் பக்க பலமாய் நிற்கிறார்கள். அது தான் இன்னும் கொஞ்ச காலம் கூடுதலாய் வாழ்ந்து என் கடனைக் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.
11 October, 2025
படம் பெயர் : Hrithayapoorvam
OTT : Hotstar.
இயக்குநர் : சத்யன் அந்திகாடு.
முக்கிய கதாபாத்திரங்கள் : மோகன் லால், சங்கீதா, மாளவிகா மோஹனன், சித்திக் , லாலு அலெக்ஸ், சங்கீத் ப்ரதாப்.
மோகன்லால் பெயர் சந்தீப் பாலகிருஷ்ணன். அவருடைய இதயம் பழுதடைந்ததால் , இறந்த ஒருவருடைய இதயம் சந்தீப்புக்கு பொருத்தப்படுகிறது. "சென்னையில் ஒரு நாள்" படத்தில் அந்த இதயம் குறைந்த நேரத்துக்குள் எப்படி அடுத்தவருக்கு வைக்கப் பட்டது என்பதை தமிழில் படமாக்கி இருந்ததைப் பார்த்திருக்கிறோம்.
தன் தந்தையை அன்பு செய்யும் மகள் அந்த இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் தன் தந்தையை சந்தீப்பிடம் கண்டால் என்ன நடக்கும் என்பதை மலையாளத்தில் படமாக்கி இருக்கிறார்கள். மனித மனத்தின் மெல்லிய உணர்வுகள் , தான் அன்பு செய்த ஒருவரின் இதயத்தை சுமந்து இருப்பதே அடுத்தவரையும் அன்பு செய்ய போதுமானது என்பதைக் காட்டும் காட்சிகள் படத்துக்கு இனிமை சேர்க்கின்றன.
இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவர் படத்தின் ஹீரோவாக இருக்கிற காரணத்தாலேயே எல்லோரையும் அடித்து துவம்சம் செய்வது, ரொம்ப இயல்பாக எடுக்கப்படும் மலையாளப் படங்களுக்கு முரணாகத் தெரிகிறது.
இறந்தவரின் மனைவியாக சங்கீதா நடித்திருக்கிறார். அட! நம்ம சங்கீதாங்க. நடிகர் விஜய்யின் ஆரம்ப காலப் படங்களில் ஜோடியாக நடித்தாரே அவரே தான்.
சந்தீப் ஒரு cloud kitchen நடத்துகிறார். Cloud kitchen என்னும் கான்செப்ட் நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிறது.
தான் மிகவும் நேசித்த தந்தையின் இதயத்தை தாங்கி நிற்கும் சந்தீப் தன் நிச்சயதார்த்த நிகழ்வில் பங்கு கொள்ள வேண்டும் என விரும்புகிறாள் மகள். அவளின் வற்புறுத்தலால் செல்லும் இடத்தில் அடிபட்டு அங்கே அதிக நாள் இருக்க நேர்கிறது. சந்தீப்பை முழு நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு ஆண் அட்டன்டட்டும் கூடவே இருக்கிறார். அவர் கட்டுப்படுத்துவது ஆரம்பத்தில் சந்தீப்புக்கு கோபத்தை வரவழைத்தாலும் போகப் போக நண்பர்களாகிறார்கள்.
மெல்லிய நகைச்சுவை படம் முழுவதும் அலையாடுவது. நிச்சயதார்த்த நிகழ்வு கோலாகலமான ஆட்டம் பாட்டம்களுக்கு இடம் கொடுப்பது. எல்லாம் சேர்ந்து கதையின் கனத்தைக் கொஞ்சம் நிரவி இடுகிறது.
சுயநலம் நிறைந்த மனிதர்களுக்கு நடுவே , இரத்த தானம், உடல் தானம், உடல் உறுப்புகள் தானம் கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களும் இருக்கத் தான் செய்கின்றன. இறந்தவர்களை எரித்து , ஒரு பிடி சாம்பலாய் கரைத்து விடாமல் தானம் கொடுத்து இன்னொரு உயிரை வாழ வைக்க உதவலாம் என்ற நல்ல எண்ணத்தை விதைத்த வகையில் இந்த படத்துக்கு வாழ்த்துச் சொல்லலாம் பார்ப்பதன் மூலமாக.
10 October, 2025
செல்ஃபி எடுக்கும் தம்பி பெயர் மதார். கவிஞர் மதார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளியிட்ட பெருமை எனக்கு உண்டு. அதன் பின் கொஞ்ச காலம் இடைவெளி. இப்போ தொடர்ந்து எழுதுகிறார். "வெயில் பறந்தது" " மாயப் பாறை" என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
ஒரு வாட்ஸ் அப் குழு வைத்து மாதம் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசிகிறார்கள். கடைசி சனிக்கிழமை அன்று இந்த கூட்டம் கூடுகிறது. செப்டம்பர் மாதம் நடக்க வேண்டிய கூட்டம் வசதி இன்மையால் அக்டோபர் முதல் சனியன்று நடந்தது.
எனக்கு வாய்ப்பிருந்ததால் கலந்து கொண்டேன். சிறிய குழு தான். 100 சதம் வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள். இவர்களின் ஆழமான வாசிப்பு ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. தாம் சொல்வதற்கு தொடர்புடையவற்றை வேற நாவலில் இருந்து வரிகளைச் சொல்லி என்னை வியக்க வைத்தார்கள்.
அன்று வந்திருந்தவர்கள்.
சாமுவேல் - ரயில்வே பணி
தீவிர வாசிப்பாளர்
சுடலைமுத்து - வாசிப்பில் தீவிரமானவர். தமிழ் அயல் இலக்கியங்களைக் கரைத்துக் குடித்தவர். இவரது ஞாபக சக்தி பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனேன். பேசத் தான் தயக்கமாக உள்ளது என்றார். இந்த சிறிய குழுவில் பேசி பழகிக் கொள்ளுங்கள் என்று சொல்லி வந்தேன்.
இளங்காமணி - பேராசிரியர், ஆய்வில் ஈடுபாடுள்ளவர். மூன்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
மதார் - கவிஞர், 2 கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.
பேசப்பட்ட புத்தகம் அசோகமித்திரன் எழுதிய " மானசரோவர்" அங்கேயே நண்பர் சாமுவேல் அந்தப் புத்தகம் இரவல் தர நான் வீட்டுக்கு வந்து வாசிக்கத் தொடங்கி விட்டேன். நன்றி சாமுவேல்.
இந்த மாதத்தில் வாசிக்க வேண்டிய புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.
அங்கங்கே சிறியதும் பெரியதுமாய் தாமரைப் பூக்கள் மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன நெல்லை என்னும் பெருங்குளத்தில்.
08 October, 2025
#விழித்தெழு இளைஞனே!!
இளைஞனே!!
விழித்தெழு!!
உன் வயதில்
விவேகானந்தர்
என்னவெல்லாம்
செய்திருந்தார்
எண்ணிப் பார்.
கண் சிமிட்டும்
விளக்கின் ஒளியில்
நீ ரசிக்கும் முகம்
நாயகனாக
இருக்கும் வரை சரி.
தலைவனாக
இருக்கும் போதுமா?
ஆணானாலும்
பெண்ணானாலும்
அழகுக்கு ஏன்
இப்படி
அடிமைப் பட்டு
கிடக்கிறாய்.
உன் குருதியில்
உருப்பெற்று
கண்கள் ஒளிர
சிரிக்கும்
உன் மழலைகளை
விட அழகு
உலகில் எவருக்குண்டு.
கண்ணுக்குத்
தொலைவிலிருக்கும்
அழகில் மயங்காதே!!
அருகில் போனால் தான்
அந்த நிலவின்
மேடு பள்ளங்கள்
புலப்படும்.
அறிவை மயக்கும்
காந்தத்திலிருந்து
எட்டியே நில்.
புத்தியோடு
பிழைத்துக் கொள்.
01 October, 2025
#நேரம் தவறாமை
# நேரம் தவறாமை
ஒருவரிடமிருந்து பணத்தைக் கொள்ளை அடித்தால் எவ்வளவு பெரிய தவறோ அதை விடப் பெரிய தவறு பிறருடைய நேரத்தைக் கொள்ளை அடித்தல். ஆனால் முன்னதற்கு தண்டனை உண்டு. பின்னதற்கு இல்லை.
நாம் சாதாரணமாகவே பார்க்கிறோம். எந்த ஒரு கூட்டமும் சொன்ன நேரத்துக்கு தொடங்குவதில்லை. இன்னும் கொஞ்சம் ஆட்கள் வரட்டும்னு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து கூட தொடங்குவதுண்டு. நான் சொன்னது சாதாரணக் கூட்டங்கள். சிறப்புக் கூட்டங்கள் இன்னும் கூட நேரமாகலாம்.
அதிலும் சிறப்புப் பேச்சாளரை கடைசியாகத் தான் பேசச் சொல்வார்கள். அவர்களுக்காகத் தான் மக்கள் இருப்பார்களாம்.
புத்தக கண்காட்சிகளிலும் சில புத்தக வெளியீடுகளிலும் இதனாலேயே எனக்கு நல்ல பேச்சாளர்களின் பேச்சைக் கேட்க முடியாமல் போனதுண்டு. நான் நிகழ்ச்சி தொடங்குவதாகச் சொன்ன நேரத்துக்கு போயிருப்பேன். எனக்கு attoted time ஆன இரண்டு மணி நேரம் முடிந்திருக்கும். கிளம்பி விடுவேன். இதனால் உனக்குத் தானே பாதிப்பு என்றால் பரவாயில்லை அந்த பேச்சைக் கேட்க யூட்யூப் போல இப்போ எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
என்னிடம் ஒரு சிலர் கேட்பதுண்டு. உங்களால் எப்படி இவ்வளவு விஷயங்களில் செயல்பட முடிகிறது என. அதற்கு முக்கிய காரணம் நேரப் பங்கீடு தான். இதற்கு பழகி விட்டால் நம் உடலே ஒரு கடிகாரமாகி இந்த காரியத்துக்கான நேரம் முடிந்து விட்டது என சொல்லி விடும். நான் ஒரு புத்தகம் அரை மணி நேரம் படிக்க வேண்டும் என்றோ, ஒரு திரைப்படம் OTT இல் அரை மணி நேரம் பார்க்க வேண்டும் என்றோ நினைத்திருப்பேன். போதுமே முடிச்சிடுவோமான்னு தோணும் போது கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகி இருக்கும். இதற்கு Biological clock என்போம்.
எனவே இனி ஒரு முடிவெடுப்போம் . எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்தில் செல்வோம். அதை விட முக்கியம் நிகழ்வுகளை குறித்த நேரத்தில் தொடங்குவோம். ஒரு முறை ஒரே ஒரு முறை குறித்த நேரத்தில் தொடங்குங்கள் வந்தவர்கள் குறைவாக இருந்தாலும். அடுத்த கூட்டத்துக்கு அத்தனை பேரும் சரியான நேரத்தில் வந்து இருப்பார்கள். சரியான நேரத்தில் தொடங்கவில்லையா பங்கு கொள்ள வந்தவர்கள் கிளம்பி விடுங்கள். கொஞ்சம் வேணுமானால் க்ரேஸ் டைம் கொடுக்கலாம். அடுத்த கூட்டம் சரியான நேரத்தில் நடக்கும்.
நேரம் தவறாமைக்கு மிகச் சரியான உதாரணம் எங்க ஊரைச் சேர்ந்த "மேலும் " சிவசு ஐயா. இவர் ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியர். "மேலும்" என்ற அமைப்பு மூலம் இலக்கியக் கூட்டங்கள் நடத்துகிறார். சரியான நேரத்தில் தொடங்கி விடுவார். எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பது தொடங்கும் நேரத்தை பாதிப்பதில்லை.
இதை அத்தனை பேரும் கடைப்பிடிக்கலாமே. ஒரு காலத்தில் "நேரமே போக மாட்டேங்கிது" ன்னு சொல்லக் கேட்டிருப்போம். இப்போ யாராவது சொல்றாங்களா? அப்போ நேரம் என்பது எவ்வளவு முக்கியமானது் அதை அநாவசியமாக செலவிடலாமா? செலவிட வைக்கலாமா?
சிந்திப்போம்.
Subscribe to:
Comments (Atom)