Bio Data !!

19 December, 2025

காந்தா. டிஸ்னி ஹாட் ஸ்டாரில்

Disney Hotstar படத்தின் பெயர் காந்தா இயக்குநர் : செல்வமணி செல்வராஜ் முக்கிய கதாபாத்திரங்கள்: துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ தயாரிப்பாளர்கள் : ராணா டகுபதி, துல்கர் சல்மான் ( அட!!) மற்றும் இருவர். தமிழ் திரைப்பட உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் கதையின் லேசான சாயல் தெரிகிறது. தன் சூப்பர் ஸ்டார் பதவியை தன் கோபத்தால் இழந்து மிகவும் பரிதாப நிலைக்குச் சென்று மரித்தவர் தியாக ராஜ பாகவதர். உடையில், பேச்சில் சுற்றுச் சூழலில் அந்த காலத்தை மிக அழகாக்க் கொண்டு வந்திருக்கிறார்கள். துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ இருவர் முகமும் கதா பாத்திரத்துக்கு மிகவும் பொருந்திப் போகின்றது. நடிப்பில் சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ மூவருக்குமே சபாஷ் சரியான போட்டி. எப்போதுமே ஒருவர் உயிரை எடுக்குமளவு கோபம் இரண்டு ஆண்களுக்கு இடையில் வருவது பெண் சம்பந்தமாக அல்லது நிலம் சார்ந்ததாக இருக்கும். இங்கே பெண் சார்ந்து வருகிறது. ஆனால் பலியாவது ஓருயிரா?? இல்லை. இல்லை. துல்கரின் மாமனாராக வழும் நிழல்கள் ரவி ஒரு சாயலில் நாசர் போல, ஒரு சாயலில் சங்கிலி முருகன் போல ஒரு சாயலில் நிழல்கள் ரவி போல மாறி மாறித் தெரிகிறார்.் சமுத்திரக்கனி திரைப்பட இயக்குநர் . தன் அம்மாவின் கதையாக சாந்தா என்னும் படத்தை எடுக்க அந்த பெயரை சாந்தா என மாற்ற வேண்டும் என்பதில் தொடங்குகிறது இயக்குநர் கதாநாயகன் இருவருக்கும் இடையேயான ஈகோ. கதாநாயகிக்கு தன் மனைவி அந்தஸ்தை கொடுக்க துல்கரும் , தன்னை வளர்த்து முதல் படம் கொடுத்த சமுத்திரக் கனியின் விருப்பத்தை மீறி துல்கரை மணம்முடிக்கத் துணிந்த பாக்யஸ்ரீ யையும் நடந்து விடுகிறது அந்த அசம்பாவிதம். படம் ரொம்ப நல்லா எடுத்திருக்கிறாங்க. பாருங்க.

அப்பா இறந்த 50 ஆம் ஆண்டு

தேதிய பார்த்தீங்களா? இன்றிலிருந்து சரியாக ஐம்பதாண்டுகளுக்கு முன். ஆனா தேதி. அப்பாவோட இள வயதில் எடுத்தது. ஐம்பதாண்டுகள் என்பது எப்படி சடுதியில் ஓடிப் போய் விட்டது. அன்றிருந்த அப்பா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மாவை அழகாக எங்களை அலங்காரம் பண்ணி விடச் சொல்லி வித விதமாய் போட்டோ எடுத்துச் சேர்த்த அப்பா. அம்மாவோட சேர்ந்து ஆடைகளை டிஸைன் செய்து தயாரித்து எங்களுக்கு அணிவித்து அழகு பார்த்த அப்பா. இன்று என்னிடம் இருந்து விலக மறுக்கும் மேட்டிமை உருவாகக் காரணமாக இருந்த அப்பா. ஆனால் இப்போ தோணுது அவர் இன்னும் கொஞ்சம் காத்திரமாய் இருந்திருக்கலாமோ? மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்ற மனம் இவ்வளவு பூஞ்சையாய் வலி தாங்க முடியாததாய், இருந்து உருகி உருகி காதலித்த மனைவியையும் , உயிராய் நினைத்த பிள்ளைகளையும் இப்படி நட்டாற்றில் விட்டது போல் விட்டு போயிருக்கக் கூடாதோ! ஆனாலும் நீந்திக் கரை சேர்ந்து விட்டோம் அப்பா. உங்கள் பேரப் பிள்ளைகள் இன்று வெளிநாட்டிலும். அவர்களின் பிள்ளைகள் அங்கேயும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். என் கவலை எல்லாம் இதையெல்லாம் பார்க்க நீங்கள் இல்லாமல் போனீர்களே என்பது தான். இன்று வரை நீங்கள் இல்லாததால் நாங்கள் கடக்கும் வலிகள் அற்பமானவை அல்ல அப்பா. பொதுவாக பிள்ளைகளை விட பேரப் பிள்ளைகளை அதிகம் நேசிப்போம் என்கிறார்கள். நீங்கள் பிள்ளைகளிடமே பேரன்பைக் காட்டியவர். அந்த மகாப் ப்ரவாக அன்பை உங்கள் பேரப் பிள்ளைகளுக்கு காட்டாமல் மறைந்து போனீர்களே அப்பா. அதற்காகத் தான் சொல்கிறேன். அப்பாக்களே!! கொஞ்சம் காத்திரமாய் இருங்கள். பழகும் மனிதரிடமெல்லாம் உங்கள் அன்பின் சாயலைக் கண்டு பாசத்தில் பற்றிக் கொள்வதும், இடை வழியில் நீங்கள் விட்டுச் சென்றதைப் போலவே அவர்கள் விலகும் போது இளகித் தவிப்பதும் தொடர்கதையாகத் தான் அப்பா இருக்கிறது. எவ்வளவோ துணிவோடு காரியங்கள் செய்தாலும் அன்பு என்ற விஷயத்தில் மட்டும் பலவீனமாகிப் போகிறேன். அன்பைக் காட்டிய நீங்கள் அன்பற்று ஜடமாய் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லித் தந்திருக்கலாமே அப்பா. நீங்கள் இல்லாமல் ஐம்பதாண்டுகள் வாழ்ந்து விட்டோம் என்பதே நம்ப முடியாமலிருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளோ! இந்த ஒன்றை மட்டும் எப்படியும் படித்து விட வேண்டும். நல்ல மனம் படைத்தோர், நாணயமானோர், கனிவானவர், பண்பானவர், என்னை அரவணைக்க நெருங்கி வருவோர், என்னை வியந்து என் தன்னம்பிக்கையை அதிகரிப்போர் அத்தனை பேரிடமும் இருந்து எட்டி இருக்க பழக வேண்டும். மற்றவர்களின் பிரிவு என்னைப் படுத்துவதே இல்லை என்ற நிலை வர வேண்டும்.் விரைவில் வந்து சேர்ந்து விடுவேன். காத்திருங்க அப்பா.

13 December, 2025

வழக்கறிஞர் கருப்பையா நினைவஞ்சலி

அரிகேசவநல்லூர் என்னும் ஊரைச் சார்ந்த கருப்பையா வழக்கறிஞர் அவர்கள் தனது 76 ஆவது வயதில் இறந்த பிறகு அவர் மகன் ஆயிரம் K செல்வகுமார் என்பவர் ஆயிரம் பௌன்டேஷன் என்பதை நடத்தி வருகிறார். அவர் வழக்கறிஞர் கருப்பையா நினைவுச் சொற்பொழிவும் நடத்தி வருகிறார். 11 ஆம் ஆண்டு நினைவு சொற்பொழிவு இன்று நடந்தது. நண்பர் தீன் அவர்களால் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.என் அருகில் அமர்ந்திருந்த அவர் மகளிடம் அது என்ன "ஆயிரம்" என்று கேட்டேன். எங்க தாத்தா பெயர் என்று சொன்னார்கள். இன்றைய நிகழ்வில் கருப்பையா அவர்களைப் பற்றி நான் அறிந்து கொண்டது. இவர் நகைச்சுவையாக பேசக் கூடியவர். மிகச் சிறந்த வாசிப்பாளர். தமிழ் இலக்கியத்திலே ஆழ்ந்து நெறிப்பட்டவர். அவர் சொன்னதாக வழக்கறிஞர் மணி அவர்கள் சொன்னது " Irwing Wallace அவர்கள் எழுதிய The Second Lady வாசிக்கச் சொன்னார்" . நான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் வாசித்த அருமையான புத்தகம். ஆயிரம் நடராஜன் என்ற அவருடைய தம்பி Ernest Hemingway யின் நாவல்களைத் தமிழில் மொழி பெயர்த்திருப்பதாகச் சொன்னார்கள். மூத்த வழக்கறிஞர் தீன் அவர்கள் பேசும் போது மனிதர்களில் பொதுவாக இரண்டு வகை உண்டு அதுவாவது . Introvert, extravert. Bava அவர்கள் வெளிப்பார்வைக்கு introvert ஆகத் தெரிவார். ஆனால் அவருடைய தயக்கமற்ற செயல்களில் extrovert ஆக வெளிப்படுவார். மூன்றாவதாக உள்ள உளவியல் தத்துவமான omnivert ஆகவும் தெரிவார் என்றார். "இலக்கியம் என்பது பூரணம். ஒரு அகலைக் கொண்டு ஆயிரம் அகல்கள் ஏற்றலாம். வெளிச்சம் குறையாது. அதைப் போன்றது இலக்கியம் " என்று வழக்கறிஞர் கருப்பையா அவர்கள் சொல்வார்கள் என்றார். வழக்கறிஞர்கள் இறந்த பிறகு அவர்களைப் பற்றி பேசுபவர்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் ஆயிரம் K செல்வகுமார் தன் தந்தையைப் பற்றி பலரும் பேசும் விதமாக செயல் புரிந்திருக்கிறார் என்று பாராட்டினார். அடுத்து "மானுடம் வெல்லும் " என்னும் தலைப்பில் சிறப்பு உரை ஆற்ற வந்த பவா செல்லத்துரை தொடக்கத்திலேயே " நல்ல மேடைப் பேச்சாளர்கள் எவ்வளவு சத்தம் இருந்தாலும் பேசுவார்கள். நான் எழுத்தாளன். அமைதியான சூழலில் தான் என்னால் பேச முடியும் என்றார். கூட்டம் குண்டூசி விழுந்தாலும் கேட்குமளவு அமைதி காத்து அவர் உரையைக் கேட்டது. ஆசிரியத் தொழில் செய்த தன் தந்தையை நினைத்து தான் எதுவும் செய்ததில்லை என்று வருத்தமாகக் கூறினார். இவர் தந்தை தன் 21 ஆவது வயதில் தீபத்தன்று தற்கொலைக்கு முயன்று தப்பித்திருக்கிறார். தொங்கி விட வேண்டுமென கயிறு கட்டிய நிலையில் வானத்தில் வாண வேடிக்கைகளைக் கண்டதும் மனம் மாறி வீடு திரும்பி இருக்கிறார். நமக்கு இப்படி ஒரு அருமையான கதை சொல்லி அவர் வழியாக வர இருக்கும் போது மரணம் எப்படி அவரைத் தழுவும். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு தீபத்தன்றே அவர் இறந்தார் என்றார். நிறைய விழுமியங்களை தந்தையிடமிருந்து பெற்றேன் என றார். அப்பாவைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுதல் நம்மை நெறிப்படுத்தும் என்ற தல்ல ஒரு கருத்தையும் சொன்னார். நேர்மை அறத்துக்கு இன்னும் இடமிருக்கிறது என்று உணர்த்திய சுதந்திர தியாகி பற்றிய அருமையான "தியாகி" கதை சொன்னார். எத்தனை எத்தனை சிறு கதைகளை நினைவுகளின் அடுக்கில் சேமித்து வைத்திருக்கிறார். வாசிப்பு மட்டும் தான் நம்மை தினம் தினம் கழுவிச் சுத்தப்படுத்தும் என்றார். பல சிறுகதைகளைக் கேட்டு பலர் வாழ்வின் ஆகச் சிறந்த முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் என்றார். இன்றைய பொழுதை இந்த நிகழ்வு சின்ன நெருடலோடு கூடிய ஆகச் சிறந்த பொழுதாக்கியது.

11 December, 2025

சிற்றுளி

இவ்வாழ்வில் வேறு எதையும் விட அதிகமான ஒரு பிணைப்பு அவனுக்கு அவளிடம் இருக்கிறது. வாழ்வின் ஓட்டத்தில் அன்பை எப்போதும் நிரூபித்துக் கொண்டே இருக்க முடியாது. அது அவசியமும் அல்ல. புரிந்து கொண்டால் போதுமானது. இனி அவன் என்ன முயன்றாலும் அது போலியாக கவனக் குவிப்பை பெறும் பெரும் முயற்சியாகவே இருக்கும். அற்புதங்கள் நிகழக் காலமாகும். நிச்சயம் நேரம் எடுக்கும். காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயம் ஒரு நாள் நிகழ்ந்துவிடும். அவன் அற்புதங்களின் சமிஞ்சைகளுக்காக காத்திருக்கத் தொடங்கினான்" இது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் "சிற்றுளி" என்ற ஜூலை & செப்டம்பர் 2025 இதழில் "நித்யா ஹரி" அவர்கள் எழுதிய "கானமயில்" என்ற சிறு கதையிலிருந்து ஒரு பகுதி. ரொம்ப நல்லா இருந்தது. இந்த உணர்வோட நம்மை இணைத்துக்கொள்ள முடியுது. ஒரு சந்தர்ப்பத்தில் அன்பு கொண்ட இருவருக்கு இடையே பிரிவு வந்தபின் அதை சரி செய்ய ஓரளவு தான் முயல வேண்டும். அதற்கு மேல் முயலும் போது அது ஒரு போலித்தனம் காட்டுவது போல் ஆகிவிடும். அப்படிங்கறத ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க. நல்ல சிறுகதை. சிற்றுளியில் இதுபோல பல ரசிக்கத் தகுந்த அம்சங்கள் உள்ள. தனி இதழ் 130 ரூபாயும் ஓராண்டு சந்தா 500 ரூபாயும் செலுத்தலாம்.

07 December, 2025

எங்கள் நெல்லை ஆயர் மேதகு ஜூட் பால் ராஜ் அவர்கள் ஆயராகி இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்த விழாவும், கிறிஸ்மஸ் விழாவும் இணைந்து ST.Anne's நடத்தும் மன நலம் குன்றியோர் மறு வாழ்வு இல்லத்தில் வைத்து நற்செய்திக் குழுவினரால் நடத்தப்பட்டது. கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இங்கு பல முறை சென்றிருக்கிறேன். கைவிடப்பட்ட முதியோரும் இருப்பார்கள். முதியோர் எண்ணிக்கை குறைந்திருப்பது போல் தோன்றியது. மக்களின் பொருளாதார நிலை உயர்ந்திருப்பது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பல பிரச்னைகளுக்கும் அடிப்படை காரணம் பொருளாதாரமாகத் தானே இருக்கிறது. ஆட்டிஸத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி இங்கிருப்பதாகச் சொன்னார்கள். எவ்வளவு ஞாபகமா ஸ்டெப்ஸ் போடுறாங்க. ஆட்டிஸம் குழந்தைகள் முன்னால இவ்வளவு இருந்த மாதிரி இல்லையேன்னு தோணியது. அப்போ ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. முழுமையாக மன நலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை இப்போ குறைஞ்சிருக்குது. இரண்டிக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம் என்று. தெரியல. ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தைகளும் இணைந்து பாடினார்கள். அந்தப் பையன் பார்க்க பாதிக்கப்பட்டவன் போலயே தெரியவில்லை. நேராக என்னிடம் வந்து "நான் நல்லாப் பாடினேன்" என்றான். நாம "பாடினேனா" எனக் கேட்போம். அந்தக் கடைசி எழுத்து மாற்றத்தில் மட்டுமே தொக்கி நின்றது ஒருவரின் மன நலம். அங்குள்ள குழந்தைகளுக்கு புத்தாடையும் எல்லோருக்கும் உணவும் வழங்கப்பட்டன. ஆயர் அவர்கள் பேசியதில் எனக்கு ரொம்ப பிடித்தது " பிறப்பவரெல்லாம் மனிதரல்ல. பிறருக்காக வாழ்பவர் மட்டுமே மனிதர்" "தன்னைப் பற்றி மட்டுமே அக்கரைப் படுபவர்கள் இன்னும் வாழத் தொடங்கவே இல்லை என்பது தான் உண்மை" அருமையான கருத்துகள் தானே. சமுதாயத்தில் நிறைய மாற்றங்கள் பார்க்கிறோம். சேவை புரியும் இளைஞர்கள் அதிகரித்து விட்டார்கள். நம் மக்களை நாம் தானே தாங்கிப் பிடிப்போம். இணைத்திருக்கும் படங்களும் வீடியோக்களும் சான்று.