Bio Data !!

25 June, 2024

நான் சொல்ல வருவதை நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு சாதாரணர் கூட பிரபலமே. ஒரு அகால மரணம். கட்டடத்தில் தீப்பிடித்து கருகிப் போய் மரணித்த உடல் நாடு கடந்து வரும் போது அங்கு உறவுகளின் துயரம் எந்நிலையில் இருக்கும். அங்கே போய் ஆளாளுக்கு வீடியோ எடுக்கிறீர்களே!! அங்கு துயரத்தின் உச்சத்தில் முகம் கோணி அழுவது படமாகும். பெண் பிள்ளைகளின் உடைகள் விலகலாம். செய்திக்கு பசித்திருக்கும் பலர் ஆர்வக் கோளாறால் படம் எடுத்து வெளியிடுவது குடும்பத்தினரின் துயரை அதிகரிக்காதா? இதில் கண்டபடி விமர்சனம் வேறு. சிலரின் வழக்கப்படி இறந்தவரின் மனைவிக்கு பூ வைத்து கண்ணாடி வளையல் போட்டு அருகில் அமர்த்தி வைத்திருப்பார்கள். இதற்கொரு விமர்சனம். கணவனைப் பறி கொடுத்தவளின் அலங்காரத்தைப் பாருங்கள் என்று. பணம் சம்பாதிக்கத் தானே வெளிநாடு போனீர்களென்று ஒரு சிலரின் கேள்வி. ஏன் அவரவர் நாட்டிலேயே இருந்தால் விபத்து நடப்பதில்லையா?? "வாரேன் வாரேன்னு சொன்னியே இப்படி வந்திட்டியே" என்று இறந்த மகனின் உடலைப் பார்த்து ஒரு தாயின் கதறல். "அப்பா பார்சல் அனுப்பறேன்னு சொல்லிட்டு நீயே பார்சலா வந்து இருக்கியே" என்று ஒரு மகளின் அலறல். கிடைத்த இடைவெளியில் தன் கணவனின் முகத்தை அடையாளம் கண்டு " பார்த்திட்டேன். நான் பார்த்திட்டேன். அவர் தான்" என்றொரு மனைவியின் ஓலம். துயரமனைத்தையும் ஆழ அழுத்தி சத்தமில்லாமல் கண்ணீர் விட்டு ஆண் உறவுகளின், நட்புகளின் அடுத்த கட்ட நடவடிக்கை நோக்கி நகர்வு. இத்தனையும் கலங்க வைக்காமல் எதிர் மறை விமர்சனத்தை தூவி விட்டு அடுத்த பதிவை நோக்கி நகரும் அறிவிலிக் கூட்டம். மாறுங்க மக்களே!!

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!