Bio Data !!

30 August, 2024

vvஒரு வாரம் முன்ன, வீட்டின் பின்னாடி உட்கார்ந்து என் மகளுடன் போனில் பேசிக்கிட்டு இருக்கிறேன். கால்ல வழு வழுன்னு ஏதோ பட காலைச் சட்னு தூக்கிட்டேன். பார்த்தா நல்ல ஆரஞ்சு நிறம் வால் பக்கம் சிவப்பாக அரணை. ஒரு நிமிஷம் பயந்திட்டேன். அரணை பற்றி நான் அறிந்த விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வருது. நான் கல்லூரி படித்த காலத்தில் எங்கள் ப்ரௌஃபசரின் மகன் அரணை கடித்து இறந்த்து. எதையும் மறந்து போனால் எங்க அப்பா அரணை புத்தின்னு திட்டினது. கொஞ்ச நேரம் கழித்து அப்பாவிடமே போய் "அரணை புத்தின்னா என்னப்பா கேட்டது. " அது கடிக்க வருமாம். பக்கத்தில வர்ரதுக்குள்ள எதுக்கு வந்தோம்னு மறந்து வேற பக்கம் போயிடுமாம். அது தான் அரணை புத்தின்னு" சொன்னது. இன்னும் என்னவெல்லாமோ நினைவுக்கு வருது. பயந்து போய் என் வீட்டுக்காரரிடம் சொன்னால் அவர் வழக்கம் போல் " நல்லா பார்த்தியா. பல்லியா இருக்கப் போகுது" என்கிறார். நான் பக்கத்து வீட்டுக்குப் போனேன். அவங்க "அரணை கடிக்காது. நக்கத் தான் செய்யும். நக்குச்சா?" ங்கிறாங்க. அது எப்படித் தெரியும்னு நான் கேட்டதும் புழுப் போல் என்னைப் பார்த்து " காலில் எச்சில் மாதிரி பட்டுச்சா" ங்கிறாங்க. அப்படி பட்ட மாதிரி தெரியல. ஆனாலும் உள்ளூர சங்கு சத்தம் கேட்குது. எங்க வீட்டுக்காரர் டெட்டாலை தண்ணியில கலந்து கால்ல ஊத்துறார். அவருக்கு தெரிஞ்சதை செய்றார். பக்கத்து வீட்டு அம்மா வெத்தலையில இருபது மிளகு பக்கம் வைத்து மெல்லுங்கன்றாங்க. உறைப்பு தெரியுதான்னாங்க. எனக்குத் தெரியலையே ன்னு சொல்லி அவங்க சத்தமா " தெரியலயா" ன்னு கேட்கிறதுக்குள்ள தொண்டையில காரம் சுள்ளுனு இறங்குது. " உறைக்குது" ன்னு சொன்னதும் ஒண்ணும் இருக்காதுக்கான்னுட்டாங்க. ஒரு நிமிஷம் ஒண்ணும் ஆகாதுன்னு தோணுது. அடுத்த நிமிஷம் அப்படியே செத்துட்டாலும் என்ன நடந்ததுன்னு தெரியும் அதனால பரவாயில்லைன்னு தோணுது ( தெரிஞ்சு என்ன பிரயோஜனம்?) நல்ல வேளை அமெரிக்காவில இருக்கிற மகள்ட கடைசியா ஒரு தடவ வீடியோ கால்ல பேசிட்டோம் திருப்தி ஆகுது. "அடச்சீ! நீயெல்லாம் ஒரு மனுஷியா? ஒரு அரணை கால்ல பட்டதுக்கு இவ்வளவு யோசிக்கிற" அப்படியும் தோணுது. இரண்டு மணி நேரம் இதையெல்லாம் யோசிச்சுகிட்டே வீட்டு வேலை பார்த்ததுல அரணை மறந்து போச்சு. இப்போ வனநீலி பதிவை பார்த்ததும் ஞாமகம் வந்துட்டுது. நன்றி வனநீலி ஒரு பதிவு எழுத உதவியதற்கு

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!