02 September, 2026
நாவல் : பஃறுளி
ஆசிரியர் : நர்சிம்
மிளிர் பதிப்பகம் .
விலை ரூ 300
முதல் பதிப்பு : மே 2024
" குமரியில் இருந்து மதுரை நோக்கிப் பாய்ந்த நதி " னு சிலப்பதிகாரத்துல வரும் ஒரு நதியின் பெயர் தான் பஃறுளி. ஆம். அதாவது எல்லா நதிகளும் கடலை நோக்கிப் போகும் போது கடலிலிருந்து நகரத்தை நோக்கி ஒரு நதி ஓடி வந்தால் எத்தகைய விநோதமோ அதைப் போன்றது கதையின் கரு.
2007 இல் எழுதத் தொடங்கி இருக்கிறார் நர்சிம். சிறுகதை, நாவல் , கவிதை என மூன்று தளங்களிலும் எழுதக் கூடியவர்களுள் ஒருவர் இவர். மனித உறவுகளின் எழுத்தாளர் என்று எழுத்தாளர் பிரபஞ்சனால் பாராட்டப்பட்டவர் . இவர் எழுதிய "அய்யனார் கம்மா" என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு பெட்னா உட்பட பல விருதுகளை வென்று உள்ளது சிறுகதைகளிலேயே காதலை அழகுபடச் சொல்லும் ஆசிரியருக்கு பஃறுளி நாவல் ஒரு பெரும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது
ஆசிரியர் கோவலன் கண்ணகியை விட்டுச் சென்று மாதவியுடன் வாழ்ந்து பின் திரும்பி வந்தது போல கண்ணகி சென்றிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற சிந்தனையில் எழுந்தது இந்த கதை என்கிறார் ஆசிரியர் .
மாயக்கண்ணன், கோமதி இருவரும் புதிதாகத் திருமணமான இளம் தம்பதிகள். ஆசிரியர்கள். திருமணத்துக்கு பின் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்கள். அது மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளி. மதுரைக்காரரான நர்ஸிமுக்கு மதுரை தமிழில் கொஞ்சி விளையாட ஏற்ற தளம்.
காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மதுரை மக்கள் . நட்பும் அன்பும் விருந்தோம்பலும் அவர்கள் பேச்சிலேயே நடம் புரியும். மாயக்கண்ணனும் , அவர் தோழர்களும், முக்கிய உயிர்த்தோழனான தேவாவும் பேசும் இடங்கள் அவ்வளவு ரசிப்புக்குரியதாய் இருக்கும். கம்யூனிசத்தில் ஆர்வமுள்ள தோழர்களின் உரையாடலும் , கதை நடந்த காலத்தைக் குறிக்க தோழர் லீலாவதியின் மரணத்தை பேச்சின் நடுவில் கொண்டு வந்ததும் சிறப்பு.
அந்தப் பள்ளி வளர்ச்சியின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் எம் கே என்னும் மாயக்கண்ணன் தான் வரவேண்டிய உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கு மாதவன் என்பவர் வருகிறார் என்பதாலேயே எதிரியாக பாவிக்கிறார். மாதவன், தன் மனைவியிடம் முகம் மலர பேசும் பொழுது மாயக்கண்ணனுக்கு பெரும் வில்லனாகவே மாறிவிடுகிறார்.
கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவது ஒரு சில அனுகூலங்கள் இருந்தாலும் பல நேரங்களில் இடைஞ்சலாகத் தான் இருக்கும். பணி நேர செயல்பாடுகளின் தாக்கம் வீட்டிலும் தொடரும்.
நர்சிம்மின் கதைகளில் எப்பொழுதுமே நாம் தெரிந்து கொள்ள ஒரு புது விஷயம் இருக்கும். இரும்பு ஸ்டாண்டில் மாட்டை நிறுத்தி அசை விடாமல் வைத்து மருத்துவர் வைத்தியம் பார்க்கும் விஷயம் இந்த நாவலில் எனக்கு பதாய் இருந்தது.
" அடுத்து என்ன கேட்க போகிறாய் எனும் நோக்கில் நிமிர்ந்து நின்றது அவனை சலனமற்று இருக்கச் செய்தது." கோமதியை சந்தேக வார்த்தைகளால் கொல்லும் போது அவள் நேர் கொண்ட பார்வை அவனை மௌனமாக்குகிறது. பொதுவாக ஒருவர் மேல் சந்தேகம் வர பெரிதாக காரணம் ஒன்றும் இராது. அதை அலட்சியப்படுத்தினால் ஒன்றுமில்லாமல் போகக்கூடிய விஷயம் தான் நடந்திருக்கும். அதை பெரிதுபடுத்துவதாலேயே சில நேரங்களில் உண்மையாகி விடும் வாய்ப்புண்டு. மாதவனிடம் கோமதி இயல்பாக பேசுவது கூட மாயக்கண்ணனுக்கு விகல்பமாகத் தோன்றி அவன் மனதின் அமைதியை குறைக்கிறது . மொத்த வீட்டின் அமைதியையே அழிக்கிறது.
அன்பைக் காட்டுவது போல் அக்கரை இருப்பது போல் காட்டி பெண்ணைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் தந்திரம் தான் மாயக் கண்ணன் பயன்படுத்துவது.
"நம்மளப் பிடிக்காமப் போயிடுமோங்கிறத விட இன்னொருத்தர பிடிச்சிறக் கூடாதுன்ற பயம் தான மதி மருள வைக்கிது" // ஆண் மனதை பெண்களுக்கு புரிய வைக்கும் இது போன்ற வரிகள் பல உண்டு.
"நீயெல்லாம் ராஜா மாணிக்க இருந்தா மட்டும் போதாதுடா ராஜா மாணிக்க யோசனையும் பண்ணணும் . சிலத பத்தியெல்லாம் யோசனை கூட பண்ணக் கூடாது"
"தகரத்துல சேர் செஞ்சு பளபளன்னு இருக்கேன்னு சொல்லுறதா தேக்குல உட்கார்ந்தவன் போவியா"
அதே போல தன்னம்பிக்கை அற்ற ஆண்களுக்கு சரியான அறிவுரை சொல்லும் இது போன்ற வரிகளும் உண்டு.
"யாரும் யாரிடமும் தன்னை குற்றவாளியாகக் காட்டிக் கொள்ள தயாராக இல்லை எல்லோருக்கும் ஒரு நியாயம்" இன்றைய நடைமுறையில் மனித மனம் கொண்டுள்ள மாற்றத்தை எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளாத மன நிலையையும் நடுவே காட்டுகிறார்.
எம். கே ( மாயக் கண்ணன்) தன் நண்பனின் கல்யாண வேலையா சுத்தும் போது கோமதி அவளுக்குப் பிடிச்சதைச் செய்யலாம்னு சொல்ற லிஸ்ட்ல "நினைச்ச நேரம் கழிவறை போகலாம்' னு எப்படி சேர்த்தீங்க நர்சிம். காலை நேர அவசர வேளை(லை)யில் இந்தக் கழிவறைப் பிரச்னையால் உடல் நலம் குன்றிய பெண்கள் எத்தனை பேர் தெரியுமா. அதிகம் பேசப்படாத ஒரு பிரச்னையை மெல்லத் தொட்டு கடந்து விட்டீர்கள்.
யதார்த்தமான வாழ்க்கையைச் சொல்லி நகர்ந்து செல்லும் கதை. மதுரையின் கள்ளழகர் ஆற்றிலிறங்கும் வைபவத்தை நேரிலிருந்து பார்த்தது போல் உணர வைக்கும் கதை.
Subscribe to:
Posts (Atom)
