Bio Data !!

10 April, 2010

வாடிக்கையாளர் சேவை மையம்.

இன்று வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காலம். நான் சொல்வது பல ஆண்டுகளுக்கு முன்.

அப்போ எங்க department இல் கம்ப்யூட்டர் கொண்டு வந்த புதிது. நான் ஈரோடில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்க GM கணினியில் ஈடுபாடு கொண்டு வருவதற்காக ஒரு கணினி கிளப் ஏற்படுத்தி மாதம் இரு முறை கணினி பற்றி தானே சொல்லித் தருவார். நாங்கள் இருபது பேர். அதில் பத்தொன்பது பேர் ஆண்கள். நான் பொதுவாகவே எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளவள் ஆதலால் தனிப் பெண்ணாக இருந்தாலும் போய் வந்தேன். ஆனால் நெல்லை மாறுதல் கிடைத்து வந்ததும் அதன் பயனாக முதன் முதலாக தொடங்கப் போகும் 'வாடிக்கையாளர் சேவை மையத்தில்' பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.

அது அலுவலக பணியாளர்களின் மன நிலை மாறத் தொடங்கிய முதல் புள்ளி. அரசாங்க அலுவலகம் என்பது எப்படி இருக்கும் என்பதில் இருந்து மாறுபட்ட அலுவல் அறை. wall paper இல் ஓடை ஓடும். அந்த ஓடை நீரில் அடித்து வரும் மரக் கட்டை தத்ரூபமாக இருக்கும். AC செய்யப்பட்ட அறையும் இளையராஜாவின் மெல்லிய இசையும் அங்கு பணிபுரிவதே ஒரு கௌரவத்தைக் கொடுக்கும்.

எனது அதிகாரி என்னிடம் கேட்ட பொழுது, என்னுடன் பணி புரிபவர்கள் 'நீங்கள் ஒத்துக் கொண்டால் இதை உதாரணமாகக் காட்டி மற்ற பெண்களையும் பின்னாட்களில் அங்கு பணி புரியச் சொல்லக் கூடும் ' என்று தடுத்ததையும், நெல்லை நீங்கள் நினைப்பது போல் இல்லை ரொம்ப பிரச்சினைகள் வரக் கூடிய இடம் என்று அச்சுறுத்தியதையும் மீறி, நான் அப்போது படித்துக் கொண்டிருந்த MA (PSY) மேல் நம்பிக்கை வைத்து, ' அலுவலகக் கோப்புகளுடன் பணி புரிவதை விட ஜீவனுள்ள சந்தாதாரர்களுடன் பணி புரிய விரும்புகிறேன், I can manage, sir' என்று சொல்லி பணியில் அமர்ந்தேன்.

அது சுலபமான பணி என்று சொல்ல முடியாது. ஐந்து ஆண்டுகளாக கொடுக்கப் படாமல் இருந்த தொலைபேசி இணைப்புகள் கொடுக்கத் தொடங்கிய நேரம். ஒரு சின்ன விதி மீறல் களேபரத்தைக் கொண்டு வந்து விடும். தொடக்கத்தில் சின்ன சத்தம் எழும்பியதும் அடுத்த அறையில் இருக்கும் அலுவலக பணியாளர்கள் உதவிக்கு கூடி விடுவார்கள். ஆனால் அன்று செய்த பணியின் மன நிறைவு அதன் பின் வந்ததில்லை. இன்று தொழிலில் சிறந்து விளங்கும் பலர் அன்று வாலிபர்களாய் தொழில் தொடங்கிய புதிதில் தொலை பேசி விண்ணப்பிக்க வந்திருக்கிறார்கள். அன்று காட்டிய பணிவும், பண்பும் காரணமாக இன்று வரை நினைவில் வைத்திருக்கிறார்கள்.

வாடிக்கையாளர் சேவையில் நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள் யாருக்கேனும் பயன்படலாம். அதைப் பகிர்ந்து கொள்ளலாமேன்னு நினைத்தேன்.

'வாடிக்கையாளர் சேவை மையம்' என்பது மற்றுமோர் அலுவலக பகுதி அல்ல என்பதை உணர வேண்டும். வந்தவர்களை அமரச் சொன்னாலே பாதி வேலை முடிந்து விட்டது. அவர் தனது பிரச்சினையை சொல்ல தொடங்கிய உடனே நாம் பேசத் தொடங்கி விடாமல் அவர்கள் சொல்ல வந்ததைக் கேட்டு விட்டால் கால் பகுதி முடிந்து விட்டது. இன்னும் கால் பகுதி தான் அவர்கள் பிரச்சினைக்கு நாம் தரும் தீர்வு. ஆனால் தீர்வு தரும் பகுதி நல்ல படியாக முடிந்தால் தான் மீதமுள்ள முக்கால் பகுதி வொர்க் அவுட் ஆகும்.

எல்லா சந்தாதாரர்களுக்கும் ஒரே விதமான அப்ரோச் சரி இல்லை.

நமது செயலுக்கு ஒரே விதமான எதிர் வினை எதிர்பார்ப்பதும் சரி இல்லை.

நடந்த தவறு நமது இல்லையே என நினைக்காமல் மொத்த அலுவலக சார்பாக,
அலுவலகத்தின் தவறுக்கு நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கூடிய வரை சந்தாதாரர்களின் குறையைத் தீர்க்க நாமே தொடர்பு கொள்ள
வேண்டுமே ஒழிய அவர்களை அங்கும் இங்கும் அலைக்கழிப்பது சரி இல்லை.

சில உடனடியாக தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு அவர்களை அனுப்பி விட்டாலும் டைரியில் குறித்துக் கொண்டு, நாமே தொடர்பு கொண்டு சரியாகி விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும.

கூடிய வரை எல்லா அலுவலகப் பணியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் நல்ல rapport வைத்து இருப்பது நமது பணியை சுளுவாக்கும்.

குடும்பத்தின் குழப்பங்களை அறையின் வாசலில் கழற்றி விடும் செருப்போடு விட்டு விட வேண்டும்.

சந்தாதாரர்கள் தான் நமது மிகச் சிறந்த மார்க்கெட்டிங் ஏஜென்ட் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது பொருள் தரம் நிறைந்ததாய் இருந்தால் அவர்களே பலரிடம் சொல்லுவார்கள். பொருளின் தரமோ நமது பணியின் தரமோ குறைந்தால் அதையும் அவர்களே பலரிடம் சொல்லுவார்கள்.

பிறருக்கு உதவி செய்யும் இடத்தில் பணி கிடைப்பது அரிது. அதை முழுமையாக உபயோகிப்போம்.

நன்றி: கேபிள் சங்கர்ஜி

அவரது செல்போன் பற்றிய பதிவு தான் இதை எழுதத் தூண்டியது.



23 comments:

  1. //பிறருக்கு உதவி செய்யும் இடத்தில் பணி கிடைப்பது அரிது. அதை முழுமையாக உபயோகிப்போம். ///
    ஆழமான‌ க‌ருத்து....

    ReplyDelete
  2. நமது பொருள் தரம் நிறைந்ததாய் இருந்தால் அவர்களே பலரிடம் சொல்லுவார்கள். பொருளின் தரமோ நமது பணியின் தரமோ குறைந்தால் அதையும் அவர்களே பலரிடம் சொல்லுவார்கள்.


    உண்மைய சொல்லிட்டிங்க.
    அன்புடன் ராட் மாதவ் நடத்திய சிறுகதை போட்டி பரிசு அழகா இருக்கு.

    ReplyDelete
  3. " I can manage, sir' என்று சொல்லி பணியில் அமர்ந்தேன் "

    தங்கள் தன்னம்பிக்கையை, இதயம் நிறைய பாராட்டுகிறேன்

    வெகு உபயோகமான பதிவு... குறிப்பிட்ட துறை என்றில்லாமல் , எல்லோர்ருக்கும் பொருந்தும் வகையில் , உங்கள் அனுபவ வார்த்தைகள் உள்ளன ...

    தொடர்பு கொள்ளுதல் தானே வாழ்கை.. ( நன்றி : ஜே கே )

    மற்றபடி, ஒரு முக்கியாமான கால கட்டத்திழ்க் பணியாற்றிய அனுபவத்தை , உங்களுக்கே உரிய பாணியில், வார்த்தைகளால் ஓவியம் வரைந்து இருப்பது - உண்மையாக சொன்னால் - பொறாமை பட வைகிறது .. ( wall paper இல் ஓடை ஓடும். அந்த ஓடை நீரில் அடித்து வரும் மரக் கட்டை தத்ரூபமாக இருக்கும். AC செய்யப்பட்ட அறையும் இளையராஜாவின் மெல்லிய இசையும் அங்கு பணிபுரிவதே ஒரு கௌரவத்தைக் கொடுக்கும் )

    இருந்தாலும், இந்த பதிவு எனக்கு தனி பட்ட முறையில் உதவுவதால், என் பொறாமை , உங்களை பாதிக்காது என நம்புகிறேன் : - )

    ReplyDelete
  4. நன்றி நாடோடி, ஆறு வருடங்கள் அந்த இடத்தில் இருந்தேன். நண்பர்கள் கிண்டலடிப்பதுண்டு 'மேயர் தேர்தலில் நின்னா ஜெயிச்சுடுவேன்னு' அத்தனை பேர் அறிமுகம் ஆனார்கள்.

    ReplyDelete
  5. நன்றி தமிழ், 'சிறு கதை போட்டி பரிசு' நல்லா இருக்கு, அப்போ சிறு கதை?

    ReplyDelete
  6. விரிவான பின்னூட்டதிற்கு நன்றி பார்வையாளன்.
    சிலருக்காவது உதவும் என்ற நம்பிக்கை தான் இதை எழுத தூண்டியது.

    ReplyDelete
  7. Congratulations for winning the contest! Super!
    The blog post is very good.

    ReplyDelete
  8. தெள்ளிய நீரோட்டம் போல், வாடிக்கையாளர் சேவையை கையாளும் விதத்தை விவரித்திருக்கிறீர்கள். இதைப் படித்தாவது இயந்திரத்தனமா பேசுறதை நிறுத்திட்டு, வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்வார்களா இந்த செல்ஃபோன் 'கஸ்டமர் கேர்'வாசிகள்.

    -
    DREAMER

    ReplyDelete
  9. நன்றி ட்ரீமர், நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  10. நீங்கள் சொல்வது போல வாடிக்கையாளர்களின் மனநிலையை அறிந்து சேவை செய்வது குறைவே.

    இன்று ஏர்டெல் சேவை மையத்திற்கு போன் செய்தபோது, ஆட்டோமேடிக் வாய்ஸ் 5 நிமிடங்களை எடுத்துவிட்டது. பிறகு நான் இந்த காலுக்கு பணம் செலுத்தவேண்டுமா (நன்றி கேபிள்சங்கர்) என்று கேட்டதற்கு ஆம் என்றார்கள். ஆனால், அதற்கு முன்பே 5 நிமிடம் ஓடிவிட்டது.

    ReplyDelete
  11. வணக்கம்மா..... நலமா..?
    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  12. நன்றி பின்னோக்கி, IVRS பெரிய தொல்லை தான். ஆனால் கணினி மயம் ஆகிய பின் அதிகம் சேவை செய்யலாம். ஆனால் அதிக பட்சம் கணினியின் ஒரு சிறு பகுதி தான் பயன்படுத்தறோம். அந்த ஆதங்கம் எனக்கும் உண்டு.

    ReplyDelete
  13. வணக்கம் சிவா, ஊருக்கு போயிட்டு வந்தாச்சா? குட்டி பையன் எப்படி இருக்கிறான்
    உங்களுக்கும் வீட்டிலுள்ள அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். .

    ReplyDelete
  14. ரொம்பப் பொறுமை உங்களுக்கு. இப்ப உள்ள கஸ்டமர் கேர் அலுவலர்களும் ஃபோனில் பணிவாப் பதில் சொல்லுவாங்க, ஒரு காரணம் அந்த உரையாடல் பதிவு செய்யப்படுவதால்; ஆனால் தீர்வுதான் உடனேயும் கிடைப்பதில்ல; அட, ஒரு 4 நாளையில கிடைச்சாக் கூடப் போதும், அதுகூட நடக்கிறதில்லை; அதுக்கும் ஃபோன் மேல ஃபோன் செஞ்சு.. வெறுத்து... ஒருசமயம் அவங்களைப் பாத்தா நமக்கேப் பாவமா இருக்கும்.

    ReplyDelete
  15. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  16. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  17. நன்றி ஹுசைனம்மா, சில விஷயங்கள் நம்மாலும் செய்து கொடுக்க முடியாமல் போகலாம். செய்து கொடுக்க முடிந்ததை செய்து முடித்தாலே 75% குறைகள் தீர்க்கப்படும்.

    ReplyDelete
  18. நன்றி வருண்குமார் , தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. ரொம்ப சிம்பிள்'ளா வாடிக்கையாளர் சேவை பற்றி விளக்கியிருக்கீங்க..
    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  20. நன்றி மணிகண்டன் ,
    சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. சிம்பிள் அண்ட் க்யூட்.. பதிவு..

    ReplyDelete
  22. நன்றி கேபிள் சங்கர், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!