Bio Data !!

15 June, 2010

இப்படியும் சில மனிதர்கள் !!

நான் சந்தித்த, வித்தியாசமான மனிதர்களைப் பற்றி   அப்பப்போ  பகிர்ந்துக்கலாம்னு இருக்கிறேன்.
இதை எழுதலாம்னு நினைக்கிறப்போ எனக்கு முதல்ல நினைவு வந்தது சுபாஷினி. எனக்கு பிடித்த பத்து பெண்களிலேயே எழுதி இருக்கணும் ஆனா அதை அவங்க விரும்ப மாட்டாங்களோனு விட்டேன். ஒரே சண்டை. எப்படி என்னை விடலாம்னு.
எனக்கு ஹலோ எப் .எம் மில் பேசுற பழக்கம் உண்டு. "நிலா முற்றம்" எனக்கு பிடித்த நிகழ்ச்சி. (இப்போ ஏனோ இல்லை) பேசுவதற்கும் தோதான நேரம். பதிவுலகம் வரும் முன் என்  எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு வடிகால்.
ஒரு நாள் எப்.எம் மில் பேசிய சுபாஷினியின் குரல் என்னை ஈர்த்தது. ஒரு அழுத்தத்துடன் தன் எண்ணங்களை பதிய வைத்த குரல். ரசித்ததுடன் மறந்து விட்டேன்.
அன்று ஒரு நாள் எனது இல்ல தொலைபேசியில் அதே குரல். எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே என் ஒரு நொடி நினைத்து "சுபாஷினி" என்றேன்.
"நான் சுபாஷினி தான் பேசுறேன். நீங்க பேசுறதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் (அட!) நண்பர் ஒருவர் தான் உங்க எண்ணைக் கொடுத்தார். அதுவும் ரொம்ப கட்டாயத்துக்கு அப்பறம். ....."
அதன் பின் இருவரில் யார் நிலா முற்றத்தில் பேசினாலும் அடுத்தவர் பாராட்டுவதும், மாறு பட்ட கருத்துக்களை சொல்வதும் வழக்கமானது.அநேகமாக தினமும் பேசிக் கொள்வோம். எனக்கு கல்லூரி காலத்துக்குப் பின் எனக்கு கிடைத்த மிக நல்ல தோழி. 
ஒரு நாள் இதே போல் பேசிக் கொண்டு இருக்கும் போது மிகச் சாதாரணமாக " எனக்கு சில காலங்களுக்கு முன் கண் பார்வை போய் விட்டது" னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியில் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க ஆரம்பித்தது. 
"என்ன சொல்றீங்க" னு தயங்கி தயங்கி கேட்டேன்.
" ஆமாப்பா, என்னோட ரெண்டாவது பையன் பிறந்து கொஞ்ச காலத்துக்கு பிறகு திடீர்னு கண் பார்வை மங்க ஆரம்பித்தது. இப்போ முழுவதுமாய் போயிடுச்சு. " னாங்க.
எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. சுதாரித்துக் கொண்ட நான் பேச்சின் போக்கை சட்டென மாற்றி "இன்னைக்கு  எதுவும் ஸ்பெஷல் ப்ரோக்ராம் 'பார்த்தீங்களா'?" என்றேன்.
உபயோகமான பல தொலைக்காட்சி நிகழ்சிகளை "கேட்டு" என்னிடம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் உண்டு. 
எனது யோசனை பலித்தது. இறுக்கமான சூழல் மாறி இயல்பான நிலைக்கு இருவரும் வந்தோம். எப்படி பார்வை போனது, எப்படி சமாளிக்க கற்றுக் கொண்டார்கள் என்று மற்றொரு சாவதானமான பொழுதில் கேட்டுக் கொண்டேன். கண் பார்வை இன்மை என்பதே ஒரு சோகம் என்றால் அதை வளர்ந்த நிலையில் இழப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. ஆனால் அந்த சோகச் சொட்டு துளியும் இல்லாமல் உற்சாகமாக தன் சம்பந்தப் பட்ட காரியங்களை சுயமாக சமாளித்து, குடும்பத் தலைவியாய் ஒரு குறையும் இல்லாமல் திறம்படச் செய்யும் ஒரு பெண்மணி. 
வலைப்பூவில் நான் எழுதும் கதைகளுக்கு முதல் வாசகி. ஆம். எனது கதைகள் நிகழ்வுகளை கண் முன் கொண்டு நிறுத்துகிறது னு சிலர் பின்னூட்டம் இடுவது உண்டு. அதன் ரகசியம் இது தான். நான் எழுதியதும் சுபாஷினி இடம் தான் முதலில் வாசித்துக் காண்பிப்பேன். அவர்கள் புரியத் தயங்கும் சில இடங்களுக்கு இன்னும் கொஞ்சம் மெருகு கூட்டுவேன். அதில் அவர்களுக்கும் ஒரு சந்தோஷம்." உங்கள் வலைப்பூவில் என் பங்கும் இருக்கிறதே " என்று பூரிப்புடன் சொல்வார்கள். 
தான் சிந்தித்து வைத்த கவிதைகளை நாங்கள் பேசும் போது சுபாஷினி சொல்வது வழக்கம் உங்கள் கவிதைகளை நீங்களே உச்சரித்து ரெகார்ட் செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்வதுண்டு. 
தான் இழந்த சந்தோஷங்களை இன்று வரை பேச்சில் குறிப்பிட்டதில்லை. வருத்தமான தருணங்களை வருணித்ததே இல்லை. துன்பக் கடலில் இருந்து வெளியேற அவர்களுக்கு ஒரு சின்ன துரும்பு போதும். 
மொத்தத்தில் நான் அறிந்த ஜான்சி ராணி. இப்படியும் சில மனிதர்கள். 
ஒரு விஷயத்தை மறந்திட்டேனே. சிகரமும், இமயமும் சேர்ந்து நடித்த 'ரெட்டைச் சுழியின்' சில பகுதிகள் இவர்கள் வீட்டில் எடுக்கப் பட்டது தான். 

20 comments:

  1. //கண் பார்வை இன்மை என்பதே ஒரு சோகம் என்றால் அதை வளர்ந்த நிலையில் இழப்பது என்பது கொடுமையிலும் கொடுமை//
    மனதைத் தொடும் பதிவு .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான அறிமுகம். வாழ்த்துக்கள்!
    தொடர்ந்து இன்னும் நிறைய அன்பான மனிதர்களை அறிமுகப் படுத்துங்க.

    ReplyDelete
  3. நெஞ்சில் உறுதி உடையவராக இருக்கிறார் சுபாஷிணி. தன்னம்பிக்கை மலைக்க வைக்கிறது.

    ReplyDelete
  4. உங்களுக்கு ஒரு உதாரண பெண்மணி தான் சினேகிதியாக கிடைத்திருக்கிறார். சுபாஷினியின் சினேகத்திற்காக, நீங்கள் அவசியம் பெருமை பட வேண்டும்

    ReplyDelete
  5. த‌ன்ன‌ம்பிக்கையூட்டும் ப‌திவு... ந‌ல்ல‌ சிந்த‌னையாள‌ரை அறிமுக‌ ப‌டுத்தியுள்ளீர்க‌ள்.. அவ‌ருக்கு என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்.. தொட‌ர‌ட்டும் அறிமுக‌ங்க‌ள்..

    ReplyDelete
  6. M.Azard தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.
    வாழ்த்துக்கு நன்றி, தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

    ReplyDelete
  7. நன்றி சித்ரா. தொடர்ந்து அறிமுகம் தர முயல்கிறேன்.

    ReplyDelete
  8. நிச்சயமாக தமிழ், பள்ளி நட்புக்கு பின் வெள்ளந்தியான நட்பு கிடைப்பதில்லை. வெளியில் சிரித்தாலும் எரிமலை போல் உள்ளே பொருமல் இருக்கும். இது அபூர்வம் தான்

    ReplyDelete
  9. நன்றி நாடோடி. நிறைய செய்ய நினைக்கிறேன். ஒரு நாளைக்கு கூட அஞ்சாறு மணி நேரம் இருந்து இருக்கலாம்.

    ReplyDelete
  10. "எனது கதைகள் நிகழ்வுகளை கண் முன் கொண்டு நிறுத்துகிறது னு சிலர் பின்னூட்டம் இடுவது உண்டு"

    அந்த சிலரில் , நானும் ஒருவன்

    " அதன் ரகசியம் இது தான்"

    அட,..இதுதான் அதற்கு பின் இருக்கும் இனிய ரகசியமா? மிக்க மகிழ்ச்சி...

    அந்த சகோதரிக்கு என்னை போன்ற பலரும் நன்றி சொன்னதாக சொல்லி விடுங்கள்..

    மனதை மிகவும் சந்தோஷ படுத்திய பதிவு இது...

    நல்லோரை பார்த்தாலும் நன்றே,, அவர்களை பற்றி பேசுதலும் நன்றே

    ReplyDelete
  11. ”வாழ்க்கையில் நம்பிக்கை உண்டாவதற்கு ஏதாவது ‘காரியம்’ நிகழாதவரை நாம் பலவீனனாகவே இருக்கிறோம்.”-ராகுல்ஜி

    காரணத்தை அலசாமல் வேறு ‘காரியங்களில்’ ஈடுபடுத்திக் கொள்வதே பலவீனத்தை வெல்லும் வழியென்று உணர்த்துகிறது..உங்கள் பகிர்வு.

    ReplyDelete
  12. சுபாஷினிஅவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்..

    அவர்களை ரொம்ப விசாரித்ததாக சொல்லுங்கம்ம்மா

    ReplyDelete
  13. உன்னைப்பற்றி அவர்களிடம் பேசி இருக்கிறேன் சிவா, நன்றி

    ReplyDelete
  14. இப்படிப் பட்டவர்களைப் பார்த்து நான் இன்னும் பலம் பெற்றுக் கொள்கிறேன் கலாப்ரியா சார்,

    ReplyDelete
  15. நன்றி பார்வையாளன், அவர்களை கடந்த அட்சய த்ருதி அன்று முதன் முறையாக சந்தித்தேன்.
    அனைவரது பின்னூட்டங்களையும் படித்துக் காண்பித்தேன். அவர்களது சந்தோஷம் குரலிலேயே தெரிந்தது.
    அனைவருக்கும் அவர்களது வாழ்த்தும் நன்றிகளும்.

    ReplyDelete
  16. Thanks a lot. I feel very happy to hear such nice words about Suba, my cousin(sister). She really deserves it. These kind words will strengthen her further and make her more courageous.
    Meendum mikka nandri.

    S Elangovan

    ReplyDelete
  17. thank u sir
    her happiness that she too took part in the blog is unmeasurable.
    may god give her strength to go thro out her life
    thank u again

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!