11 September, 2025
நான் இந்த வாரம் வாசித்த மிக நல்ல ஒரு சிறுகதை. கந்தர்வன் கதைகளில் "தான்"
ஒரு சிற்றூரின் விடிகாலை நேரச் சந்தடி தொடங்குவதை விவரிப்பதோடு தொடங்குகிறது சிறுகதை. அதில் வந்த ஒரு வரி இது வித்தியாசமான கதை என்று சொல்லியது. " காதுகளைக் கழற்றிக் கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு நடக்கிறார்கள். கால்களின் ராச்சியம் கடை வீதியெங்கும்," பதின்ம வயதில ரொம்ப தூரம் நடந்து கால்கள் வலிச்சதுன்னா " இந்த கால்களைக் கழட்டி தோள் மேல போட்டு நடக்க முடிஞ்சா எவ்வளவு நல்லா இருக்கும்னு " சொல்வேன். அது ஞாபகம் வந்தது.
ரொம்ப சுய நலமாயும், பிறரைப் பற்றிய கதைகளை ஆர்வமாய் பகிர்ந்து கொண்டும் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள். அவர்களிலிருந்து வித்தியாசமானவன் நம் கதாநாயகன். அரசம்பட்டி கிராமத்திற்கு வாரத்தில் மூன்று நாள் போய் முதியோர் கல்வி எடுப்பான் முழுவதும் தன் சொந்தச் செலவில்.
ஒரு நாள் தெருவில் இவன் கண்ணுக்கு எதிரே ஒருவன் மாடியிலிருந்து தலை குப்புற கீழே விழுகிறான். அதிர்ஷ்டவசமாக விழுந்த இடத்தில் கிடந்த கல்லின் மேல் விழுந்து சிதறிப்போகாமல் குழி பறித்துக் கிடந்த மணலில் விழுந்து உயிர்பிழைக்கிறான்.
ஆனால் மருத்துவர் "ப்ளட் தலையில் க்ளாட் ஆகிடுச்சுன்னா பொழைக்கிறது சிரமம். உடனே தஞ்சாவூர் பெரியாசுபத்திரிக்கு கொண்டு போங்க " என்கிறார்.
இந்த சுயநலம் மிகுந்த உலகில் யாரென்றே தெரியாத ஒருவருக்காக பணம் செலவழித்து , ஓடி ஓடி உதவி கடைசியாக ரத்தமும் கொடுத்து காப்பாற்றும் நாயகன் தளர்ச்சியாய் இருக்கிறதென்று ஜூஸ் குடிக்க போக கடைக்காரர் " ரத்தம் கொடுத்தீங்களா? ரத்தம் கொடுத்தவரிடம் நான் ஜூஸுக்கு காசு வாங்குவதில்லை " என்று சொல்லி உலகில் சுய நலம் மிகுந்தவர்கள் மட்டுமல்ல சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று உணர்த்துகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!