18 April, 2026
#social awareness #Toxic relationship
சமீபத்திய " நீயா நானா" வில் காதல் தோல்வி உற்றுத் தவிக்கும் பெண்ணை அத்தனை பேரும் பாராட்டினார்கள். அந்தப் பெண்ணே நிகழ்ச்சியில் அதை ஒத்துக் கொள்ளவும் செய்தாள். அது தான் தனது முதல் காதல் அதனால் விட முடியவில்லை என்றாள். தான் மிகவும் டாக்ஸிக்காக நடந்து கொண்டதாக அவளே ஒத்துக் கொள்ளவும் செய்தாள்.
இருந்தும் வேறொரு பதிவு ஒரு குழுப் புகைப்படத்திலிருந்து அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்து பதிந்து "இந்தப் பொண்ணு ரொம்ப டாக்ஸிக்கான பொண்ணு " என எழுதி இருக்கிறார்கள். அதைத் தான் அவளே சொல்லிட்டாளே அப்புறம் என்ன புதுக் கண்டுபிடிப்பு.
அவங்க ரெண்டு பேரில் யார் செய்தது தப்பு என விவாதிக்க வேண்டாம். அதன் பின் உள்ள மனோ தத்துவத்தை மட்டும் நான் பேசுகிறேன்.
இருவர் காதலிக்கிறார்கள் வேண்டாம் இருவர் பழகுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.்அதில் ஒருவருக்கு அந்த அனுபவம் புதிது. அது தான் இத்தப் பெண் சொன்னது போல் முதல் காதல்.்இவள் மனதில் இருக்கும் அதே மகிழ்ச்சி அதே அனுபவம் அடுத்தவருக்கு இருக்காது. ஆனால் இருப்பதாக இவள் நம்பிக் கொள்வாள்/ன்.
குறுகிய காலப் பிரிவு வரும் போது தன்னைப் போலவே அடுத்தவரும் துயரப்படுவார்கள் எனக் கற்பனை செய்து கொள்வாள். அது இருக்கலாம் இல்லாமலும் போகலாம். அவரால் சரி செய்ய முடியாத பிரிவை தான் சரி செய்து விடலாம் என நம்புவாள். அதற்கு எடுக்கும் முயற்சியைத் தான் நாம் டாக்சிக் என்கிறோம்.
அனேக சமயங்களில் பிரிந்து செல்பவர் தான் பழகுவதற்கு முதல் அடியை எடுத்து வைத்திருப்பார்கள். ஏன் அழுத்தம் கூட கொடுத்திருப்பார்கள் அவர்களைப் பொறுத்தவரை தான் ஆசைப்பட்டதை அடைந்த உடன் அவர்கள் நிறைவடைந்திடுவார்கள். அதனால் தான் அடுத்து நகர முடிகிறது.
நகர முடியாத ஒருவர் முயற்சி செய்வதோ முடியாத போது தற்கொலை செய்வதோ நடக்கிறது. நான் இங்கே பெண்ணுக்காக வக்காலத்து வாங்கவில்லை. ஆண் பெண் இருவரிலுமே பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பழகத் தொடங்கிய உடன் அதை நண்பர்களிடம் பிரகடனப்படுத்திய ஒருவனுக்கு பிரிய நினைத்ததும் பகிர ஆட்கள் இருக்கிறார்கள். அதில் கிடைக்கும் சரியான/ தவறான உதவிப்படி அவன் வாழ்க்கை அமைகிறது.
ஆரம்பத்தைப் பகிராத பெண் பிரிய நேரும் போதும் பகிர ஆள் இல்லாமல் தன் காதலனின் நண்பர்கள் மூலம் முயற்சி செய்கிறாள். அதைத் தான் டாக்ஸிக் என்கிறோம். இது இன்று நேற்று அல்ல. அன்றே பாடி வைத்தான் கவிஞன் " நினைக்கத் தெரிந்த மனமே உனக்குப் பழகத் தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா" என்று.
பழகி விட்டதால் இறுதி வரை இருந்து தான் தீர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது ஒரு முறையான பிரிதலாக இருக்க வேண்டும். ஏனென்றால் இருவருக்கும் அந்தக் கடமை இருக்கிறது.
ஒருவரிடம் நெருங்க எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள் அதே முயற்சி விலகும் போதும் காயம் படாமல் / படுத்தாமல் விலக எடுக்க வேண்டும். முயற்சிப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!