Bio Data !!

07 September, 2026

#நாவல் அறிமுகம் #கருணைநதி

நாவலின் பெயர் : கருணை நதி ஆசிரியர் : மிதையா கானவி பதிப்பகம் : புக் வைப் விலை. : 180 ரூபாய் நூலாசிரியர் போர்க்களத்தில் கோரமான யுத்தத்தை நேரில் கண்டு , களத்தில் காயமடைந்து, உயிர் தப்பிய நேரடி சாட்சியம் . கதை இலங்கைப் போரின் போது மக்கள் பட்ட அவதிகளை சொல்கிறது. சொந்த வீடு விட்டு, நாடு விட்டு , தான் சேர்த்த அத்தனை செல்வங்களையும் இழந்து புலம்பெயர்வது பெரும் வலி. அதை விடக் கொடுமை போர் நடக்கும் இடங்களில் போராடிக் கொண்டே உயிர் வாழ்வது. ஆனால் அந்தத் தளத்திலும் அழகான ஒரு காதலை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். திவா 17 5 2009 வரை வன்னியிலிருந்து பின் இடம் பெயர்ந்து வவுனியா புனர்வாழ்வு மையத்தில் தஞ்சமடைந்தவன். மையத்தில் அவர்களை மாடுகள் போல் அடைத்து வைத்திருந்ததாகவும் நம் நாட்டில் மாடுகளுக்கு கூட அதைவிட அதிக சுதந்திரம் இருந்ததாகவும் எரிச்சல் அடைகிறான். போரில் தப்பி வந்து முகாமில் இருந்த சிலர் நோய்வாய்ப்பட்டும் இறக்கிறார்கள். படுத்துறங்கவோ உடைமாற்றவோ தனியிடம் எவருக்குமில்லை. ஒவ்வொரு வேளை உணவுக்கும் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது. கொஞ்சம் சமயம் தப்பிச் சென்றாலும் உணவு இல்லாமல் தவிக்க வேண்டி வந்தது. உணவு திண்டாட்டம் இப்படியானால் குடிப்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடான இடத்தில் குளிப்பது எப்படி . அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கே போராட்டம் . இதுதான் போரின் அவல நிலை. அங்கே ஒழுங்காக வாரப்படாத தலைமுடி, செருப்பில்லாத கால்கள் அழுக்கான ஆடையோடு தான் ஒரு காலத்தில், ஒருதலையாகக் காதலித்த மருத்துவர் சங்கவியை பார்க்கிறார் திவா. தன் நண்பன் கரன் மூலம் தன் உயிரோடு, பலரையும் காத்த அவள் இருப்பிடத்தை அறிந்து போரில் தான் தாக்கப்பட்டது, தனக்கு சங்கவி மருத்துவ உதவி செய்தது, காக்க முற்படும்போது அவளுடன் பணிபுரிந்த மருத்துவர் குண்டடிப்பட்டு இறந்தது எல்லாம் விளக்கமாக எழுதி கடிதம் போடுகிறான். போரின் வலிமிகு தருணங்களை வாசிக்க வாசிக்கப் பதை பதைத்து போகிறது நெஞ்சம் . ஆனால் அந்த கடிதம் சங்கவியின் மனநிலையை மாற்றி தன் அத்தியாவசிய கடமை என்ன என்று உணரச் செய்கிறது . கடிதம் எழுதியது யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே சங்கவியின் மருத்துவத் தொழிலுக்கு உதவி செய்கிறான் திவா. ஒரு முறை காதலைச் சொல்லத் தயங்கி இழந்த தன் காதலியை மறுபடியும் இழந்து விடக்கூடாது என்று பயத்தால் வந்த தயக்கம் அவன் காதலைச் சொல்ல தடை போட்டுக்கொண்டே இருக்கிறது. கடமையைக் காதலிக்கும் சங்கவியுடன் இடையில் வந்த தன் காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? முகாமிலேயே இருந்தார்களா? புலம் பெயர்ந்து வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்களா? எனப் பலப்பல கேள்விகள் எழலாம். "கருணை நதி " அதற்கான பதிலைத் தரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!